Loading

சுழலி-22

வனக்காட்டின் தொடக்க எல்லையில் தூக்கியெறியப்பட்ட ஏவல் நேராக கொங்கிளக்கேசரிடம் சென்றது. கல்வராயன் மலைக்கு அடியில் அமர்ந்து அகோரிகளிடம் மேலும் மந்திரம் கற்றுக் கொண்டிருந்தவன் முன்பு தோன்றிய ஏவலை புரியாது பார்த்தான் கொங்கிளக்கேசர்.

“இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்? இந்நேரம் நீ செந்தூரனை முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்க வேண்டும்.” கொங்கிளக்கேசர் அனலாகக் கொதித்தான்.

“காட்டின் எல்லைக்குள் என்னால் நுழைய முடியவில்லை. செந்தூரன் அவனது சூட்சம சக்தியின் வெப்பத்தால் என்னால் அவனின் உடலில் இருக்க முடியவில்லை. வனக்காளியால் தூக்கி வீசப்பட்ட நான் தற்போது இங்கு இருக்கிறேன். எனது சக்தி குறைந்தது போல் உணருகிறேன். உடனடியாக இரத்த பலி வேண்டும்”

“உன்னை அனுப்பி வைத்தவன் நான், எனக்கே நீ ஆணையிடுகிறாயா?” என்று ஏவலிடம் சினம்கொண்டு எகிறினான் கேசர்.

அப்போது அங்கிருந்த அகோரிகளில் மூத்த வயதுடைய அகோரி எழுந்தார். அவன்தான் அங்கிருக்கும் அனைவருக்கும் குரு.

“சினம் என்றும் ஒருவரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்பதை நீ மறவாதே கேசா. நடந்த அனைத்தையும் யாம் அறிந்தோம். இன்னும் சில நிமிடங்களில் செந்தூரன் உயிர் துறக்கப் போகின்றான். முதலில் தனது புண்ணியப் பலன்களை மக்களுக்காக கொடுத்தவன், தற்போது அவனின் ஆன்மபலனையும் வஞ்சனின் மறுபிறப்பிற்காக கொடுத்துவிட்டான். அனைவரும் புறப்படுங்கள். வனக்காட்டின் மற்றொரு எல்லையில் இருக்கும் குகைக்குன்றின் அருகில் தான் அவன் இருக்கின்றான். எல்லையை ஒட்டியபடி ஒரு வேடுவன் குகை ஒன்று உண்டு. அதனருகே செந்தூரனை செல்லவிடாமல் அவன் உயிர் பிரிந்த மறுநொடி அவனது உடலையும் ஆன்மாவையும் பிடித்து வாருங்கள். நம்மை விட பலம் பொருந்தியவன் செந்தூரன். தூய ஆன்மாவை நாம் கட்டுக்குள் வைத்து, அதனை சித்திரவதை செய்யும்போது நிச்சயம் அது பாதாளஅரக்கனை சரணடையும். அவன் ஏற்கனவே கற்றறிந்த அனைத்து மந்திர தந்திர வித்தைகளும் இன்னும் அவனுக்கு பலத்தை கொடுத்து அரக்க வழியில் செல்ல வழிவகுக்கும்.

தற்போது அவனின் கிரகப்பலன்கள் அனைத்தும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கின்றன. இதுதான் பாதாளஅரக்கனை உயிர்ப்பிக்க நமக்கு சரியான வழி. அனைவரும் விரைந்து வனக்காட்டின் எல்லைக்கு செல்லுங்கள்.

கொங்கிளக்கேசா! நீ அரியணை ஏறும் நாள் வெகுதொலைவில் இல்லை. நீ உடனே கொங்கு தேசத்திற்கு சென்று நடக்கும் வேள்வியை நிறுத்து. அவ்வாறு நிறுத்த முடியவில்லை என்றாலும் பாதகமில்லை. செம்பியன் உதவியோடு எப்படியாவது அந்த யட்சினியை உன்வசம் கொண்டுவர முயற்சி செய். நீ தற்போது மந்திர வித்தைகள் கற்றிருக்கும் சாதாரண மானுடன் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள். ஓதம் இருக்கும் நாட்களன்று எக்காரணத்திற்கொண்டும் ஆலயம் பக்கம் சென்றுவிடாதே.

நீ நாட்டிற்குள் இருந்து அகோர சக்திகளை வழிபட துவங்கு. எப்படியாவது செந்தூரனின் ஆன்மாவை நாம் அடக்கிவிட்டால் அவன் மாபெரும் அகோர சக்தியாக வெளிப்படுவான். இனி, இந்த உலகத்தில் அரக்க சக்திகளே மேலோங்கி இருக்கும்.” என்று தனது எண்ணங்களை வெளிப்படுத்த, மற்ற அகோரிகள் குருவின் சொல்லை செய்துமுடிக்க மாயமாய் மறைந்தனர்.

இரத்தத்திற்காக காத்திருந்த ஏவலுக்கு ஒரு சேவலின் தலையை திருகி போட்டவன், கேசரிடம் “சில நேரம் நம் செயல்களுக்காக உயிர்பலி அவசியமாகித்தான் போகிறது கேசா. முடிந்தால் தேவநாகவேடர் குலத்தின் குமரியை கவர்ந்து வா.” என்றான்.

….

கொங்கு நாடு.

வேள்வி முடியும்தருவாயில் இருந்தது. மஞ்சரி ஒரு இடத்தில் கண்களில் உக்கிரத்தோடு அமர்ந்திருந்தாள். அவளின் உடலில் இருந்து ஒரு வித வெப்பம் உருவாகிக் கொண்டிருந்தது. யட்சினி தான், இதனால் மஞ்சரிக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்தில் அருகில் செல்ல முடியாமல் நின்றிருக்க, நீலாவோ, ஏன் மஞ்சரி செந்தூரன்மீது இத்தனை ஆங்காரத்தோடு இருக்கிறாள் என்று புரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்.

அங்கு அரண்மனையில், செம்பியன் மயக்கத்தில் இருந்து தெளிந்து இருந்தார். அவருக்கு சற்று நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. மாரிவெண்கோ கல்வராயன் மலைக்கு படைகளை அனுப்பி விட்டிருக்க, தனது அறையில் யோசனையோடு நின்றிருந்தவரை தேடி வந்தார் செம்பியன்.

“அமைச்சரே! என்னவாயிற்று? படைகளை முடுக்கிவிட்டாயிற்றா? செந்தூரன் என்ன ஆனான்? வஞ்சனின் நிலை என்ன?” என்று பதட்டமாகக் கேட்டவருக்கு, பளாரென்று அறைதான் கிடைத்தது அமைச்சரின் கையால்.

கன்னத்தில் அறையை தாங்கிய செம்பியன் வதனம் சினத்தில் சிவந்தது. “அமைச்சரே!”

“வாயை மூடு செம்பியா. எத்தனை பெரிய திட்டம் வகுத்து இருந்தோம் என்று உனக்கு நினைவிருக்கிறதா? மலைவாசி பெண் வந்ததும் மதிமயங்கி மந்தி போல் அந்த பெண்ணின் பின்னே செல்கிறாய். நாடாள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது, தக்க சமயத்தில் மங்கி கிடக்கும் மூளையை சலவை செய்ய வேண்டும். உன்னை அழைத்து சென்றது பெண்ணே கிடையாது. அவள் செந்தூரனின் யட்சினி. நல்லவேளை உன்னை மயக்கமடைய செய்துவிட்டு மட்டும் சென்றாள். பசிக்கிறது என்று உதிரத்தை உறிஞ்சி எடுத்திருந்தால் இந்நேரம் உனக்கும் சேர்த்து இறுதி காரியம் நிகழ்த்த வேண்டியிருக்கும். ச்சே, அப்படி நடந்திருந்தால் கூட இந்த வேள்வி தடைப்பட்டு போயிருக்கும்.”

இறுதி வரிகளில் சற்று எள்ளல் எட்டித்தான் பார்த்தது. தான் செய்த காரியத்தை எண்ணி வெட்கம் கொண்டான் செம்பியன். இருந்தாலும் மாரிவெண்கோ அவனை அறைந்தது உள்ளுற கனன்று கொண்டுதான் இருந்தது.

“என்னவாயிற்று?” மெல்லியக் குரலில் கேட்டான்.

“வேள்வி முடியும் தருவாயில் இருக்கிறது. வஞ்சனை எங்கு தேடியும் காணவில்லை. கல்வராயன் மலை முழுவதும் நம் வீரர்களை முடுக்கிவிட்டு இருக்கிறேன். செந்தூரன் பற்றியும் இன்னும் தகவல் வந்து சேரவில்லை.” அப்பொழுது தான் ஒரு ஆந்தை ஓலையை எடுத்துக் கொண்டு வந்தது.

அதனை பார்த்த செம்பியன், “தந்தையிடமிருந்து செய்தி வந்திருக்கிறது” என்றான்.

ஆந்தையிடமிருந்து ஓலையை வாங்கிய மாரிவெண்கோ, அறையில் ஏற்றப்பட்ட விளக்கின் அருகே சென்று அதனை வாசித்தார்.

“சேவலும் மயிலும் காட்டில் வேடுவன் குகைக்கு அருகில் மடிந்துவிட்டன. தீக்கங்கை நெருப்பாக மாற்றும் நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தது.

அப்படியென்றால்…?

…..

கல்வராயன் மலை.

வஞ்சனின் உயிர் பிரிந்த நொடி, தனது ஆத்ம பலனை வஞ்சனின் ஆன்மாவிற்கு அளித்துவிட்டான். அதனை ஏற்றுக்கொண்ட வஞ்சனின் ஆன்மாவும் கலங்கிய விழிகளோடு செந்தூரனை பார்த்துக் கொண்டிருந்தது. எமதூதர்கள் வந்து வஞ்சனின் ஆன்மாவை அழைத்து சென்றுவிட்டனர்.

காலத்தின் கணக்குப்படி, வஞ்சனிற்கு அடுத்த பிறவி என்பது கிடையாது. முன்பிறவி பலனும், தற்போதைய பிறவியில் அறம் பிறழா மன்னனாக நல்லாட்சி புரிந்து புண்ணிய பலன்களை சேர்த்ததாலும், பாவக்கணக்கு மிகவும் குறைவு என்பதாலும் அடுத்த பிறவி அவனுக்கு இல்லை. ஆனால், மனிதனின் ஆசை என்பது எதனையும் மாற்றும் வல்லமை உடையது. அப்படித்தான் இறுதி நொடியில் தன்னவள் கருவுற்று இருக்கும் செய்தியும், தனது நண்பனை மீண்டும் காண அவன் கொண்ட ஆசையும் அவன் வாயாலேயே தெரிவிக்க, தனது ஆன்ம பலனை அவனுக்கு கொடுத்துவிட்டான் செந்தூரன். செந்தூரன் தனது புண்ணியக் கணக்கை ஏற்கனவே மக்களின் நலனுக்காக தாரைவார்த்ததால், தற்போது அவனின் பாவக் கணக்கு வஞ்சனையே சேரும். அதனைக் கழிக்க, வஞ்சன் மறுபிறவி எடுத்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.

செந்தூரனின் விதி விளையாட்டு இங்கு தொடங்கவில்லை.
என்று தான் கற்ற மந்திரங்களை மஞ்சரிக்கு கற்றுக் கொடுத்தானோ அன்றே தொடங்கியது. மந்திரக்கலை என்பது தமது ஆன்மபலத்தோடு ஒன்றிணைந்து இருப்பது. சித்தர்களும், குருவும் நமக்கு மனமுவந்து அளிக்கும்போது கூட அவர்களின் காலக்கணக்கின்படி, முறையான பயிற்சியில், கற்றுக்கொள்பவன் அதற்கு தகுந்தவனா என்று சோதித்த பிறகே கற்றுக் கொடுப்பார்கள். ஆனால், செந்தூரன், மஞ்சரி மீது அவன்கொண்ட அதீத காதலால், எந்தவித முறையான பயிற்சியும் முன்னெடுக்காது, அனைத்தையும் அவளுக்கு ஒரே மூச்சில் கற்றுக் கொடுத்துவிட்டான். இதனால், செந்தூரனின் ஆயுள் குறைந்து போனது.

அடுத்து, தேவநாகவேடர் குலத்தலைவர் அவனின் தயாள குணத்திற்காக கொடுத்த சிவன்காப்பை வஞ்சனிற்கு கொடுத்ததால் அரூபங்களை காணும் வல்லமையை இழந்தான். அது உடனிருந்திருந்தால் கொங்கிளக்கேசரை முன்னரே அடையாளம் கண்டிருப்பான். அதன் பிறகு நடந்த இன்னல்களும் தடுக்கப்பட்டிருக்கும்.

மந்திரங்கள் ஒருபக்கம் இருக்க, தனது தந்திரத்தையும் கிரகபலனால் இழந்தான். சித்தமுனி பல எச்சரிக்கையுடன்தான் அவனிடம் கமண்டல நீரைக் கொடுத்திருப்பார். ஆனால், அவனது தந்தை உருவில் இருந்த கொங்கிளக்கேசரின் சொற்களுக்கு மயங்கி, ஒரு நிமிடம் உண்மையை அவன் உணராது கமண்டல நீரை கொடுத்துவிட்டான். சொன்ன வாக்கை காப்பாற்ற இயலாததும் அவனது பாவக் கணக்கில் சேர்ந்தது.

சரியான நேரத்தில் நாகவசியக் காப்பை பயன்படுத்திய வரை சரிதான். ஆனால், வனக்காட்டில் எந்த மாயமந்திரமும் பயன்படாது என்று தான் அறிந்ததை மறந்தவன், காளிங்கனை அனுப்பினான். அவன் வஞ்சனை கொன்றான். ஆக, வஞ்சனின் மரணத்திற்கு காரணமானவன் காளிங்கனை அனுப்பிய செந்தூரன்தான். இதுவும் அவனது பாவக்கணக்கில் சேர்ந்தது.

ஏவல் தன்னை முழுமையாக ஆக்கிரமிக்கும் என்று அறிந்துதான் வைத்திருந்தான் செந்தூரன். ஆனால், தாம் அறிந்த அனைத்தும் அதன்படி நடந்துவிடாது என்பதற்கு சான்று, தன்னுடன் மஞ்சரி இணைய மறுக்கிறாள், தன்னுடைய வார்த்தைக்கு அவள் செவிசாய்க்கவில்லை என்ற ஒரு காரணத்திற்காக, அவன் வாயாலேயே, மஞ்சரிக்கு அளித்த சாபம்தான். தான் காதல் கொண்டு கந்தர்வ மணம் புரிந்த தனது துணையாளை சபித்து, அதனால் அவளின் கரு அழிந்தது கொலைக்கு சமம் என்பதனை உணராது போனவனிற்கு பின்னால் ஏவல் இருந்தாலும், அவன் மனிதஉருவில் இருப்பதால் பாவக்கணக்கை அவன்தான் சுமந்தான்.

இறுதியாக, அவனிடம் இருந்த ஒன்று அவனின் ஆன்மபலன். செந்தூரன் தனது ஆன்மாவை பிரித்து சில பொருட்களில் மறைத்து வைத்திருப்பதாய் சொன்னான் அல்லவா, அவையனைத்தும் ஆன்மபலனோடு ஒன்றிருக்கும். இனி, தன்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று தன்னுடைய ஆன்மபலனை வஞ்சனிற்கு கொடுத்தத் தருணம், மற்ற பொருட்களில் மறைந்து இருக்கும் ஆன்மசக்திகள் அனைத்தும் செந்தூரனின் பாவத்தை சுமந்தனவாக மாறியது.

இவையனைத்தும் விதிப்படி நடந்தாலும், அவனின் கவனம் ஒரு இடத்தில் சிறிது நிலைத்திருந்தால் கூட ஏற்பட்ட இன்னல்களை தடுத்திருக்கலாம். ஆனால், எது நடக்குமோ, அது நடந்தே தீரும் என்பதற்கு செந்தூரனே இங்கு சான்று.

அனைத்து புண்ணிய பலன்களை இழந்தவனின் ஆன்மா பாவங்கள் பீடித்து, அவனது தீய எண்ணங்கள் அனைத்தும் வெளிவந்தன. இதுவரை உள்ளே ஒரு மூலையில் அடங்கியிருந்த கொங்கு நாட்டின் அரியணை ஆசை, இப்போது முழுவதுமாக அவனுள் அடங்கா பேராசையாக கொளுந்துவிட்டது.

வஞ்சனின் உடலை தன் மடியிலிருந்து எடுத்தவன், அவனைப் பார்த்து எள்ளல் நகை ஒன்றை உதிர்த்து, “நீ இருந்தால், என்னால் அரசாள முடியாது. நீ இறந்தது தெரிந்தால் உனது வாரிசு தான் அரசாள தகுதியுடையவன் என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். இந்த தேசத்தை ஆளப் பிறந்தவன் நான் ஒருவன் மட்டும் தானடா வஞ்சா. காணாபிணமாக மறைந்து போ” என்று அப்படியே வஞ்சனின் உடலை மலைச்சரிவிலிருந்து உருட்டிவிட்டான். அவனோடு, அவன் அளித்த மரகத வாளும் மாயமாய் மறைந்ததை செந்தூரன் அறியவில்லை.

செந்தூரனின் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவனது உயிர் பிரிய இருக்கிறது. அந்த நேரம் தான் அவன்முன் வந்தனர் அகோரிக் கூட்டங்கள்.

மரணம் நெருங்கும் தருவாயில் செந்தூரனின் கண்களுக்கு அவர்கள் அனைவரும் தென்பட்டனர். அப்போது அவன்முன் தோன்றினான் அகோரிகளின் தலைவன், வயதான அகோரி, முதுகிழமகுடபதி.

“உனது வேதனையை நாங்கள் அனைவரும் அறிவோம் செந்தூரா. நல்வழியில் சென்றால் உன்னால் எதையும் அடையமுடியாது. இன்னும் சில நொடிகளில் நீ மரணித்துவிடுவாய். ஆனால், உனது கிரகப்பலன்கள்படி, நீ அசகாயசூரனாய் தீய சக்திகளின் தலைவனாய் வந்திருக்க வேண்டியவன். தற்போதும் ஒன்றும் பாதகமில்லை. நாங்கள் நினைத்தால் உன்னை மரணமே கண்டு அஞ்சும் சக்தியாளனாய் மாற்ற முடியும். இந்த கொங்கு தேசம் மட்டுமல்ல, இந்த உலகையே ஆளும் வல்லமை உன் ஒருவனுக்கு மட்டுமே இருக்கிறது. வா… எங்களோடு இணைந்துவிடு… தேசத்தோடு, உன் மஞ்சரியையும், உனது பிள்ளைகளையும் நான் உனக்கு திருப்பித் தருகிறேன் வா…” என்றவனின் வார்த்தைக்கு தற்போது பேராசை பெருக்கெடுத்து இருக்கும் செந்தூரன் ஒத்திசைத்தான். இப்படித்தான் அனைத்தும் நிகழும் என்றால், இவன் வாழ்வில் காதல் எதற்கு? நட்பு எதற்கு? விதி சிரிப்பாய்தான் சிரிக்கிறது.

மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று எண்ணிய இரு உயிர்களில் ஒன்று மடிந்திட, இன்னொருவனோ தனது ஆசையை முன்னிருத்தி செல்லக் கூடாத வழியினை தேர்ந்தெடுத்துவிட்டான். இனி, கொங்கு தேசத்தின் நிலை?

அந்த அரியணை யாருக்கு?

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்