
சலனம்-21
என்னதான் நான் மாற வேண்டுமென நினைத்தாலும், என்னால் முழுதாய் மாற முடியவில்லை.
அவ்வப்போது எனக்குள் குடி கொண்டிருக்கும் கோபமும், அகம்பாவமும் வெளியே வரத்தான் செய்தது. ஒரே நாளில் தலைகீழாய் மாறிவிட நான் ஒன்றும் ஞானி இல்லையே? நானும் சாதாரண மனிதன். நன்மை, தீமை என இரண்டு குணங்களும் எனக்குள்ளும் உண்டு. மனதின் ஆழத்தில் படிந்திருக்கும் கசடுகளைக் கழுவி எறிய, ஒரு ஆயுட்காலம் போதாது என்று அப்போது தோன்றியது.
என்னதான் பணிக்கு கிளம்பி வந்துவிட்டாலும் கூட, எனக்குள் இருந்தக் கோபம் குறைய மறுத்தது. காலை நடந்ததை மீண்டும் மீண்டும் மனம் அசைப்போட்டது. நன்றாக காபியுடன் துவங்கிய காலைப் பொழுதில், கடைசியில் கசப்பு மட்டுமே மிச்சமிருந்தது. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மை இருக்கிறது எனப் புரிந்தாலும், பாழாய்ப் போன மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.
எப்போதுமே நமது மனம் நமக்கு சாதகமாய் மட்டும் தானே சிந்திக்கும்? என் மனமும் அப்படித்தான் சிந்தித்தது. அதனால் வீட்டுக்குப் போக வேண்டுமா? என்ற எண்ணம் எனக்குள் உண்டானது. சுயகௌரவம் எனும் சிறைக்குள் சிக்கிக்கொண்டு, பாசத்தை ஒரு சுமையாகப் பார்க்கத் தொடங்கியது என் அறிவு.
அன்று இரவு சீக்கிரமாய் வீட்டுக்குப் போக மனமின்றி, சித்தார்த்துடன் அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டேன்.
“என்னடா! திடீர்ன்னு இந்தப் பக்கம்? ஒருவாரமாய் உன் கிட்டே மாற்றம் தெரியுதே.. ஸ்பாட்டுக்கு சரியா வர்ர. எல்லாமே ப்ளானிங்கோட பண்ணுற, நீ தானான்னு நம்ப முடியலையே?” எனக் கேட்டான் சித்தார்த்.
“சமுத்ரா குழந்தையைப் பார்த்துக்கிறாளே.. அதனால் தான் ஒருவாரமாய் எல்லாம் சரியா நடக்குது!” உண்மையையே சொன்னேன்.
“எத்தனை நாளைக்கு டா?” எனக் கேட்ட சித்தார்த்தின் கேள்வி எனக்கு நிஜமாகவே புரியவில்லை.
“என்னடா சொல்றே?”
“சமுத்ரா கல்யாணம் ஆகாத பொண்ணு, அவள் எத்தனை நாளைக்கு உன் குழாந்தையைப் பார்த்துப்பா? நாளைக்கே அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சுட்டா குழந்தையோட நிலை என்ன? குழந்தை பாசத்துக்கு ஏங்கிப் போய்டாதா? எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணு டா! இப்போதைக்கு உனக்கு ஈஸியா இருக்கலாம். உன் வேலை சரியா நடக்குதேன்னு நிம்மதியாவும் இருக்கலாம். ஆனால் ஃப்யூச்சரில் இந்த நிலை மாறினால் என்ன பண்ணுவ?!” எனச் சரியாகத்தான் கேட்டான் சித்தார்த்.
“அவள் அவநேதியோட கஸ்டடி கேட்கிறாள் டா. அவளே வளர்த்துக்கிறேன்னு சொல்றா! நானே என்ன செய்யன்னு தெரியாமல் குழப்பமாய் இருக்கேன்.!” என பதில் சொன்னேன்.
“என்னதான் அவள் கஸ்டடி கேட்டாலும், அவள் கல்யாணம் ஆகாத பொண்ணு! சமுத்ராவிற்கு கஸ்டடியைக் கொடுத்துட்டு, அவளுக்கு புருஷனா வர்ரவனால் அவந்திக்கு எதாவது பிரச்சனைன்னா என்ன பண்ணுவ?!”
என சித்தார்த் கேட்டது என்னை யோசிக்க வைத்தது.
நான் முழுதாய் அறியாத ஒருத்தியின் கரங்களில் என் மகளின் எதிர்காலத்தை ஒப்படைப்பதா? அந்த நினைப்பே என் நரம்புகளை முறுக்கேற்றியது. ஆதாரம் இல்லாத ஒரு உறவிடம் கிடைக்கும் அன்பை விட, அதனால் என்ன நிகழுமோ? என்ற அச்சம் பெரிதாகத் தெரிந்தது. ஆனால் என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல், கையிலிருந்த ஸ்க்கிரிப்ட் பேப்பரில் பார்வையைப் பதித்திருந்தேன்.
“என்னடா பதிலே சொல்ல மாட்டேங்குறே?” என சித்தார்த் மீண்டும் கேட்க,
“யோசிக்கிறேன் டா!” என பதில் சொல்லிவிட்டு,
“நாளைக்கு ஷூட்டிங் கோயிலில் தானே.? கோயிலில் மொத்தம் எத்தனை சீன் இருக்கு? எல்லாத்துக்கும் ஒன் லைன் எழுதியிருக்கு தானே? எல்லாத்தையும் இன்னொரு முறை செக் பண்ணிக்கோ!”
“ஆல்ரெடி செக் பண்ணிட்டேன் டா! கோவிலில் மட்டும் ரெண்டு சீன்.. அப்பறம் பீச்சில் ஒரு நாலு சீன் இருக்கு. எல்லாம் ஒரே நாளில் முடிக்க முடியுமான்னு தெரியலை. டூ ஆர் த்ரீ டேஸ் எடுக்கும்ன்னு நினைக்கிறேன்.!” என சித்தார்த் சொல்ல,
“ஹீரோகிட்டே டையலாக் பேப்பரைக் கொடுத்துவிட்டியா? ஒரே டையலாக்கை நூறு தடவை சொல்லிக் கொடுக்க வேண்டிருக்கு! கோயில் ஷூட்டுக்கு தேவையான ப்ராப்பர்டீஸ் எல்லாம் சரிபார்த்துக்கோ! நாளைக்கு எடுக்கிற சீனுக்கு ஆட்டோ ஒண்ணு தேவைப்படும், அதையும் பார்த்துக்கோ!” எனச் சொல்லிவிட்டு, விடைபெற்று வீட்டுக்குக் கிளம்பியிருந்தேன்.
சாலையின் இருபுறமும் கடந்து போகும் வெளிச்சங்கள், என் மனதின் இருளைக் குறைக்கவில்லை.
மனதில் சித்தார்த் சொன்னவைகளே திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. நான் காலையில் சமுத்ராவிடம் திருமணமாகிவிட்டதா? என்று தானே கேட்டேன். யாரையாவது காதலிக்கிறாளா? எனக் கேட்டிருக்க வேண்டுமோ? ஒருவேளை அவளுக்கு திருமணமாகிவிட்டால், அவந்தியின் நிலையை நினைத்து என் மனம் பதறியது.
சித்தார்த் சொன்னது போல் அவளிடம், அவந்தியை ஒப்படைத்துவிட்டு, அவள் வாழ்க்கையில் வரப்போகிற, அவளின் வருங்காலக் கணவனால், அவந்திக்கு பிரச்சனை வந்தால்? யோசனையோட வாகனத்தைச் செலுத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தேன்.
குழந்தையின் முகத்தைப் பார்க்கத் துடித்த என் மனதை பாடுபட்டு அடக்கி, குளித்து உடைமாற்றி விட்டு வந்து, மெத்திருக்கையில் விழுந்தேன். எப்போதும் போல் தூக்கம் வர மறுத்தது.
தொலைக்காட்சியை உயிர்ப்பித்து, இளையராஜாவின் பாடல்கள் வரிசையாய் ஒலிக்கும்படி செய்துவிட்டு, தொலைக்காட்சியின் சத்தத்தையும் குறைத்துவிட்டு, கண்மூடிப் படுத்துக் கொண்டேன். இசையின் அலைவரிசையும், இதயத்தின் படபடப்பும் நேர்க்கோட்டில் இணையவே இல்லை.
ஆனாலும் விழிகளுக்குள் ஏதேதோ காட்சிகள் ஓடிக் கொண்டிருந்ததே ஒழிய, தூக்கம் கண்களை எட்டவில்லை.
அதே நேரம், திடீரென குழந்தை அவந்திகாவின், அழுகுரல் என் செவியை எட்டியது. எதற்காக குழந்தை அழுகிறாள்? இப்படிச் சத்தமாய் அழுகிறாள்.? என்னவானது என் பிள்ளைக்கு? பதற்றம் என்னைச் சூழத் துவங்கியது.
“சமுத்ரா! சமுத்ரா!” அழைத்தபடியே இருமுறை கதவைத் தட்டினேன். எந்த பதிலும் உள்ளிருந்து வரவில்லை. வேறு வழியில்லாமல், என்னவோ ஏதோவெனப் பயந்து, கதவைத் திறந்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தேன்.
அறைக்குள் சமுத்ராவின் மடிக்கணிணி ஒருபுறம் திறந்து வைக்கப்பட்டிருக்க, சமுத்ரா குழந்தையைத் தோளில் போட்டு சமாதானம் செய்ய முயன்றுக் கொண்டிருந்தாள்.
“என்ன ஆச்சு?”
“தெரியலை.. குழந்தை அழுதுட்டே இருக்கா! அழுகையை நிறுத்தவே மாட்டேங்குறா!” பதற்றம் சூழ் முகத்துடன் சமுத்ரா சொல்ல,
“நீ தானே, இவ்வளவு நேரமாகக் குழந்தையைப் பார்த்துட்டு இருந்தே? அப்பறம் தெரியலைன்னு சொல்ற?”
என நான் கேட்ட அதே நேரம், குழந்தை மூச்சுவிடாது அழுதுக் கொண்டிருந்தாள்.
வேறு வழியின்றி, குழந்தையை என் கரத்தில் வாங்கி, தோளில் போட்டு தட்டி சமாதானப்படுத்த முயன்றேன். அப்போதும் குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. மூச்சு விடாமல் குழந்தை அழுதுக் கொண்டே இருக்க, என் மனதைப் பயம் ஆட்கொள்ளத் துவங்கியிருந்தது.
மரண பயத்தை விட, தன் குழந்தையின் அழுகை ஒரு தந்தையை அதிகம் வதைக்கும் என்பதை அன்று தான் உணர்ந்தேன்.
“குழந்தை அழுகையை நிறுத்தவே மாட்டேங்குறா! எனக்கு பயமா இருக்கு விக்ரம். ஹாஸ்பிட்டல் போய்டலாம் விக்ரம்!”
முதன்முறையாய் பதற்றமும், பயமும் அவளின் நீலநிற விழிகளுக்குள் குடியேறியிருந்தது.
“குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது! ஹாஸ்பிட்டல் போய்டலாம்! நீ பயப்படாதே!”
அவளுக்கு தைரியம் சொல்வதைப் போல், எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நிஜமாகவே குழந்தையின் அழுகையைப் பார்த்து எனக்கும் பயமாகத்தான் இருந்தது. மின் தூக்கியின் வழியே கீழிறங்கி, வாகனத்தைக் கிளப்பிய தருணம் குழந்தையின் அழுகை ஹை டெசிபலில் உயர்ந்தது.
“அவிம்மா! ஒண்ணும் இல்லை டா! அம்மா இருக்கேன். உனக்கு ஒண்ணும் ஆக விட மாட்டேன். அழாதே டா தங்கம்!”
குழந்தையை சமாதானப் படுத்த முயன்றுக் கொண்டிருந்தவளின் முகம் முழுக்க பயம்! பயம்! பயம் மட்டுமே.. அந்தப் பயத்தில் ஒரு தாயின் அக்கறை இருந்தது. தன்னை மறந்து, தன் வலி மறந்து, ஒரு ஜீவனுக்காகத் துடிக்கும் அந்தத் துடிப்பு, அவள் வெறும் வளர்ப்பு தாய் மட்டும் அல்ல அதைவிட மேலானவள்.. என்பதை உரக்கச் சொன்னது.
“கொஞ்சம் சீக்கிரம் போ விக்ரம்! ப்ளீஸ்..!”
“அவந்திக்கு ஒண்ணும் ஆகாதுல்ல?”
“எனக்கு பயமா இருக்கு விக்ரம்!”
“ஏதாவது ஒரு ஹாஸ்பிட்டலில் நிறுத்தேன்..!”
“குழந்தை ரொம்ப அழறா விக்ரம்! என்ன பண்ணுறதுன்னே தெரியலை! குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது தானே?” என்ற சமுத்ராவின் குரல், வாகனத்திற்குள் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டே இருந்தது. குழந்தையின் தலையை மென்மையாய் வருடியபடி, புலம்பிக் கொண்டே இருந்தாள். அவளின் நீலநிறக் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. நேராய் என்னைப் பார்த்து, நிமிர்வாய் பேசும் அந்தக் கண்களில் முதன்முறையாய் கண்ணீரைக் கண்டதும், எனக்குள் ஏதோ செய்தது. அலையாக ஆர்த்தெழுந்த அவளின் தைரியம், இன்று கண்ணீர் துளியாய் உறைந்து நின்றதைக் கண்டபோது, என் ஆணவம் அவள் காலடியில் தன்னையறியாமல் மெதுவாய் சரிந்தது.
ஒருவழியாய் மருத்துவமனை வந்து சேர்ந்ததும், படபடவெனக் கதவைத் திறந்து இறங்கி, மருத்துவமனைக்குள் ஓடினாள். குழந்தையை உள்ளே கொண்டு சென்றதிலிருந்து, குழந்தையைப் பரிசோதித்து முடிக்கும் வரையிலுமே, அவள் குழந்தையை யாரிடமும் தரவே இல்லை. அவளின் கைகள் குழந்தையை ஒரு பாதுகாப்பு அரண் போலச் சூழ்ந்திருந்தன.
“குழந்தைக்கு ஸ்லைட் ஃபீவர் இருக்கிற மாதிரி இருக்கு. ஒன் இயர் கம்ளீட் ஆகிடுச்சு தானே? குழந்தைக்கு பல் முளைக்க ஸ்டார்ட் ஆகியிருக்கு. அதனால் தான் அழுதிருக்கா! மருந்து எழுதித் தர்ரேன். மூணு நாளைக்கு தொடர்ந்து கொடுங்க! பல் முளைக்கும் போது, சில குழந்தைகளுக்கு இப்படி இருக்கலாம். பயப்பட வேண்டியதில்லை.!” எனச் சொன்ன பிறகே, அவள் முகத்தில் நிம்மதி வந்தது.
வீட்டிற்கு வந்ததும், குழந்தைக்கு மருந்துப் புகட்டி, மிகவும் சிரமப்பட்டுக் குழந்தையை உறங்க வைத்துவிட்டு, கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த சமுத்ராவின், கன்னத்தில், காய்ந்து படிந்திருந்த கண்ணீர் கறை, என் குழந்தை மீதானப் பாசத்தை எனக்கு உணர்த்தியது. அவள் கன்னத்தில் காய்ந்து படிந்திருந்த கண்ணீர் கறை, நிலவில் படிந்த வடுவைப் போல அழகாகவும், அதே சமயம் அழுத்தமாகவும் இருந்தது. அது வெறும் கண்ணீர் அல்ல; என் மகளுக்காக அவள் சிந்திய நிறமில்லா உதிரத்தின் ஒட்டுமொத்த சாட்சி.
இவளை விட, என் குழந்தையை யாராலும் பார்த்துக்கொள்ள முடியாதென்றே எனக்குத் தோன்றியது. இனி நான் அவளை விடுவதாக இல்லை. எனக்கு மனைவியாய் அவள் இருக்க வேண்டாம். ஆனால், என் குழந்தையின் தாயாய் அவள் நிரந்தரமாய் இந்த வீட்டில் இருக்க வேண்டும். உறவுகளுக்குப் பெயர் சூட்டுவதை விட, உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பது முக்கியமெனத் தோன்றியது.
அதற்கு திருமணம் ஒன்று மட்டுமே வழியென்றால், அதைச் செய்வதற்கும், நான் தயாராய் இருந்தேன். என் மனம் அப்படித்தான் யோசித்தது. சற்று முன் நான் அவள் கண்களில் கண்ட கண்ணீர் பொய் இல்லை.
இப்படிப்பட்ட உண்மையான நேசத்துடன், இருப்பவளிடம், பேச வேண்டுமென முடிவு செய்துக் கொண்டேன். நான் அவளிடம் பேச வேண்டும். பேசியே தீர வேண்டும்.. என் குழந்தைக்காக.. என முடிவு செய்திருந்த நான், மறுநாள் காலை எனக்குக் காத்திருந்த பேரதிர்ச்சியை அறிந்திருக்கவில்லை.
என் யோசனையைப் பார்த்து விதி சிரித்துக் கொண்டது. நான் கோடு போட நினைத்த இடத்தில், அது ஒரு முற்றுப்புள்ளியை வைக்கத் தயாராக இருந்தது. அது அப்போதைக்கு என் சிற்றறிவிற்கு எட்டவில்லை என்பதே உண்மை.
“சில விரல்கள் ஒன்று சேர்கின்றன..
சில விரல்கள்..
அழிக்க முடியாத ரேகைகளுடன்
பிரிகின்றன..!”
(நா.முத்துக்குமார்)

