Loading

மரம் தேடும் மழைத்துளி 24

ரவி, கோபத்தோடு தெருமுனையை நெருங்கும் வேலையில், கிருஷ்ணனோடு சரவணனும் எதிரில் வந்திருந்தார்கள்.

சரவணன், “ரவி நில்லுடா…”

ரவி, சரவணனை பார்த்து, “இனிமேல் நீ என் மூஞ்சியிலே முழிக்காதே” என்று சொன்னவன் விடுவிடு என்று நடந்து சென்று விட்டான்.

கிருஷ்ணன் “எதுக்குடா கத்திட்டு போறான்?” என்று கேட்க

சரவணன், “அதான் ப்பா எனக்கும் தெரியல”

கிருஷ்ணன், “உன்னை தேடி தான் வந்துட்டு போறான்னு நினைக்கிறேன். வாசல்ல அம்மாவும், சுந்தரியும் நிற்கிறாங்க. ஏதும் தகராறு பண்ணிட்டு போய்ட்டானா?”

சரவணன், “நானும் உங்க கூட தானே வரேன். எனக்கு என்ன தெரியும்? வாங்க வீட்ல போய் கேட்கலாம்.” என்றபடி இருவரும் நடந்தார்கள்.

வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த லட்சுமியை பார்த்து கிருஷ்ணன், “என்ன அம்மாவும் பொண்ணும் சண்டைக்கு வரிஞ்சு கட்டி நிக்கிற மாதிரி நிக்கிறீங்க.”

“போற பாதையிலேயே போட்டுகொடுத்துட்டு போயிட்டானா அந்த பொசகெட்ட பய?” என்றார் லட்சுமி.

“ஏய் என்ன நடந்துச்சு? அப்ப ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு தான் நிக்கிறீங்களா?” என்றார் கிருஷ்ணன்.

“நானும் அவனும் சண்டை போட்டது நிசந்தேன். என்ன சண்டைனு உன்கிட்ட சொல்லாமலா போனான்?”

“ஏய் முதல்ல உள்ள போங்க. தெருவுல நின்னுகிட்டு. நாய் கத்துற மாதிரி கத்துறது என்ன பழக்கம் பழகி இருக்கீங்க. என்று மனைவியையும் மகளையும் உள்ளே அழைத்துக் கொண்டு சென்ற கிருஷ்ணன், “இன்னமும் புரியாத மாதிரியே பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா… நான் மனுசனா இருக்க மாட்டேன். தெளிவா சொல்லுங்க. எதுக்கு அவன் இங்க வந்து வம்பு இழுத்துட்டு போறான்?”

சரவணனுக்கு, ரவி மீது பெருத்த கோபம். தன் வீட்டில் வந்து, தனியாக இருக்கும் பெண்களிடம் சண்டை பிடித்து விட்டு செல்லும் ரவியை, கையை காலை உடைக்க வேண்டும் என்று ஆத்திரம் கிளம்பியது.

சரவணன், “என்ன சொன்னான்னு முதல்ல சொல்லுங்கம்மா…”

லட்சுமியும் சுந்தரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு, எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.

கிருஷ்ணன், “என்னம்மா சொன்னான்?” என்று சுந்தரியை பார்த்து கேட்க.

சுந்தரி கம்மிய குரலில், “ருக்கு வீட்டுக்கு பக்கத்து வீட்டு கனக அக்கா… முந்தாநாள் அம்மாவைப் பார்த்து, அண்ணே அடிக்கடி ருக்மணியை பார்க்க அங்க போறதா சொல்லிட்டு போச்சு.” என்று நிறுத்திக் கொண்டாள்

அதை தொடர்ந்து லட்சுமி, “நான், உன் தங்கச்சியை கண்டிச்சா என்னன்னு ஒத்த வார்த்தைதாங்க கேட்டேன். அவன் என்னமோ யோக்கியமான குடும்பத்தில் இருந்து வந்தவன் மாதிரி, அசிங்கமா பேசுறீங்கன்னு என்னை பார்த்து கேட்டுட்டு போறான். நம்ம சுந்தரியை அடிக்க கை ஓங்கறான் ” என்று பொரிந்தார்.

சரவணனுக்கு காத்து போன பலூன் போல் சுருங்கிவிட்டது “இது ஒரு கேள்வின்னு அவனைப் பார்த்து கேட்டிருக்கே. அந்த பொம்பள வந்து உன்கிட்ட சொன்னதும், நீ முதல்ல என்கிட்ட இல்ல கேட்டு இருக்கணும். நான் அங்க போறது உனக்கு தப்பா தெரிஞ்சா… என்னைத்தானே முதலில் கண்டிஞ்ச்சு இருக்கணும். சும்மா வந்தவனை நீயாத்தான் வம்பு இழுத்து இருக்றேனு இப்பதானே தெரியுது.”

கிருஷ்ணனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும, ஆறுதலாகவும் இருந்தது. ருக்மணி, அவள் வீட்டுக்கு சென்று ஒரு வருட காலம் ஆகப்போகிறது. பிறந்த குழந்தையை கூட பார்க்க போகவில்லை. தன்னுடைய மகனாவது சென்று பார்த்து கவனித்துக் கொள்கிறான் என்ற நிம்மதியே அந்த ஆறுதலுக்கு காரணம். சரவணனை பற்றி கிருஷ்ணனுக்கு நன்றாக தெரியும். தவறான எண்ணத்தில் அங்கே சென்றிருக்க மாட்டான் என்ற நம்பிக்கை உண்டு. லட்சுமிக்கும் உண்மை என்ன என்று தெரிந்திருந்தாலும், இன்னொருவர் வந்து குறை சொல்லும் அளவுக்கு நடந்து விட்டதே என்பதற்காக வேண்டாத வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிருஷ்ணன், “நீ பெத்த புள்ளைய பத்தி உனக்கு தெரியாது? எவளோ வந்து ஏதோ சொன்னாங்கறதுக்காக பெத்த புள்ளையை ஊரை கூட்டி கேவலப்படுத்தி இருக்கே. அந்த புள்ள செவனேன்னு கிடக்கு. அதை எதுக்காக வம்புக்கு இழுத்தே” என்று கேட்க லட்சுமி மௌனமாய் நின்றார்.

சரவணன் லட்சுமியை முறைத்துப் பார்த்துவிட்டு வெளியேறி சென்றதும்.

கிருஷ்ணனிடம் லட்சுமி, “அவன் போகட்டும்னு அமைதியா இருந்தேன். இவன் அங்க போறதை நான் தப்பா நினைக்கல. அவன் மனசுலயும் தப்பான எண்ணம் இருக்காது. ஆனா அந்த கழிசடை குடும்பத்துல இருக்கிற கழுதைகள், வழிய வந்தவனை வளைச்சு போடணும்னு ஏதாவது செஞ்சு மசக்கி கைக்குள்ள போட்டுடுவாளுகளோனு பயமா இருக்கு. இவனை போகக்கூடாதுனு சொன்னால் வீம்புக்கு போவேன்னு போவான். அதான் அவனை(ரவி) கொடுக்குற கொடையிலே இவனை படிவாசல் ஏத்தாம விரட்டி அடிப்பானு நினைச்சு அப்படி செஞ்சுட்டேன்.”

கிருஷ்ணன், இந்த பேச்சை இத்தொட விட்டுடு. இனிமே யாரும் இத பத்தி பேசக்கூடாது.” என்ற கண்டிப்போடு முகம் கை கால் கழுவ சென்றார்.

வெளியேறி சென்ற சரவணன், எங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் நடந்து சென்றான். அவனது சிந்தனையும் இலக்கற்று சுற்றித்திரிந்தது.

“என்னைப் பெத்தவளுக்கு, என் மேல எம்புட்டு நம்பிக்கை இருந்திருக்கு பாரேன். நான் நிஜமாவே தப்பானவனா இருந்திருந்தாலும், என் பிள்ளை அப்படிப்பட்டவன் இல்லைன்னு சொல்ற தாயை தான் பார்த்திருக்கிறேன். ஆனால் எங்க அம்மா இப்படி விட்டுக் கொடுத்துட்டாளே… இத்தனை நாளும் கபடம் இல்லாமல் பழகுகிறேன்னு நினைச்சிருப்பாளே… இந்த பிரச்சனையால நான் ஏதோ உள்நோக்கத்தோட அவளை தேடி போனதா யோசிப்பாளே… இந்த பிரச்சனையால எங்க பெரியத்தாள் என்னை பத்தி என்ன நினைப்பா? அண்ணன் பொண்டாட்டிக்கு அலையிறேன்னு தப்பா நினைப்பாளே… அவ மூஞ்சில எப்படி முழிப்பேன்? எங்க அண்ணன் மகன், பிறந்ததுக்கு அப்புறம் எப்படியாவது, மாமியாளையும் மருமகளையும் ஒன்னு சேர்த்து வச்சுடலாம்னு நினைச்சேன். அவங்க ரெண்டு பேரும் நிரந்தரமா பிரியிறதுக்கு நான் தான் காரணமாய் இருப்பேன் போல இருக்கே… நான் குடியிருக்கிற தெருவுக்குள்ளயே என்னை பாக்குற ஆளுங்க, என்ன நினைப்பாங்கனு ஒரு நிமிஷம் கூட யோசிக்க மறந்துட்டாளே எங்க அம்மா. எனக்கு பொண்ணு கொடுக்கப் போற மாமனார் மாமியார் என்னை பத்தி என்ன நினைப்பாங்க? நான் கட்டிக்க போறே பொண்ணு என்னை பத்தி என்ன நினைப்பா? இதெல்லாம் எங்க அம்மா ஏன் யோசிக்காம நடந்துகிட்டாள்? அப்போ நான் அவளுக்கு முக்கியம் இல்லையா?” என்று ஒருவன் தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க.

இன்னொரு புறம் ரவி, தன்னுடைய வீட்டுக்கு வேகமாக சென்றவன், தன் அம்மா சுப்புவிடம், காட்டமான குரலில், “அந்த பொம்பள எப்படி எல்லாம் கேவலமாக பேசுறான்னு தெரியுமா?”

சுப்பு, “எந்த பொம்பள? எதுக்காக பேசுற?”

ரவி, “நம்ம ருக்குவோட சின்ன மாமியார், அவளோட மகனையும், ருக்குவையும் சேர்த்து வச்சு பேசுராம்மா”

சுப்பு, “அவங்க பேசுனது உனக்கு எப்படி தெரியும்?”

ரவி, “அந்த பொம்பள என்கிட்டதானே தப்பா பேசுறா… உன் தங்கச்சியை கண்டிக்கிறதுக்கு துப்பு இல்ல. இன்னொரு கல்யாணத்துக்கு அலையிறான்னு ரொம்ப அசிங்கப்படுத்திட்டா.”

“அவ மகன் கூட பழகக் கூடாதுன்னு சொன்னால் அது நியாயம். அவனோட பழக்க வழக்கம் வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போறோம். இன்னொரு கல்யாணம் பண்றதும், பண்ணாம இருக்கிறதும் நம்மளோட விருப்பமே, அதை குறை சொல்றதுக்கு அவ யாரு?”

“அப்போ அந்த பொம்பள சொன்ன மாதிரி இவள் இன்னொரு கல்யாணத்துக்கு அலையிறாளா?”

“விளக்கமாத்தை எடுத்தேன்… சும்மா பலுமாரி விட்டுட போறேன். அவள் கல்யாணத்துக்கு அலையிறானு உன்கிட்ட சொன்னேனாடா? அவளுக்கும் என்ன வயசாச்சு? பார்க்க கூடாத சந்தோசத்தை எல்லாம் பார்த்து களிச்சுட்டாள்? அப்படியே கல்யாணம் முடிச்சாலும் என்ன தப்பு? இன்னொருத்தன் விரும்பி கேட்டு வந்தால், கட்டி கொடுக்க வேண்டியதுதான்கிற அர்த்தத்துல சொன்னேன். அவ புருஷன் வரம் கேட்டு தவம் இருக்கல.”

ரவியின் ஆவேசம் சற்று குறைந்தது. ஒரு தெளிவான கண்ணோட்டத்தில், குழலை நோக்கினான். இதுவரை லட்சுமியை அந்த பொம்பள, இந்த பொம்பள என்று ஒருமையில் சொல்லிக் கொண்டிருந்தவன், தற்போது… “சரவணன் அம்மா சொல்றது ஒருவேளை நிஜமா இருந்தாலும் தப்பு இல்லைன்னு சொல்றியா அம்மா?”

சுப்பு, “அவ சொல்றதை நான் நேர்ல கேட்கல. ஆனா தாலி அறுத்த பொம்பளைங்க, இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்றது தப்புன்னு சொல்றேன்.”

ரவி, அமைதியாய் சில நொடிகள் நின்றவன், “சரவணன் வாழ்க்கை கொடுத்தால், ருக்குவோட வாழ்க்கை இன்னும் நல்லா இருக்கும். அவனை மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறதுக்கு நம்ம எல்லாம் புண்ணியம் பண்ணி இருக்கணும். நானும் இந்த விவரம் எல்லாம் புரியாமல் தான் அவ்வளவு ஆத்திரப்பட்டுட்டேன். சரவணன் மனசுல உண்மையிலேயே ருக்கு மேல பிரியம் இருந்தால் எப்படியாவது ஒன்னு சேர்த்து வச்சுரணும்மா…” என்றான்.

“அந்த பையன் மனசுல அப்படி ஆசை இருக்காது. உன் தங்கச்சி மனசுலயும் அப்படி ஒரு எண்ணம் இருக்காது. இது அந்த தெருக்கார சிறுக்கிகள் செஞ்ச சின்ன வேலையா இருக்கும். இதை கேட்ட அந்த பொம்பளைக்கு பேய் பிடிச்சு ஆடி இருப்பாள்.”

சாப்பாடு வைக்க சொல்லி அமர்ந்த கிருஷ்ணனுக்கு, சாப்பிடும் போது சாப்பாட்டில் எண்ணம் இல்லை. அவரது எண்ணம் முழுவதும் ருக்மணியை சுற்றிக் கொண்டிருந்தது. “பாவம் அந்த புள்ள. இந்த வீட்டுக்கு வந்து நல்லா ஒரு நாள் இருந்திருக்க மாட்டாள். வந்த நாளில் இருந்தே அந்த பாவி கூட போராடி, அவனை திருத்தி நல்லா இருந்திருவோம்னு நினைக்கிற நேரத்துல அவனையும் பறிகொடுத்துட்டாள். லட்சுமி சொன்ன மாதிரி, சரவணனே அந்த பிள்ளையை கட்டிக்கிட்டால், இனிமேலாவது நல்லா இருப்பாள் தாய்க்கும் பிள்ளைக்கும் வாழ்க்கை கொடுக்கிறதுக்கு, அடுத்தவகளுக்கு மனசு வராது. ஆனா சரவணன் நினைச்சா ரெண்டு பேத்துக்கும் வாழ்க்கை கொடுக்கலாம்.”

லட்சுமி, “இன்னும் கொஞ்சம் சோறு வைக்கவா? தட்டை பார்த்து சாப்பிடுங்க. தின்கிற சோத்துக்கு மரியாதை கொடுங்க.”

கிருஷ்ணன், “ஏன் லட்சுமி நீ சொன்ன மாதிரி சரவணன் மனசுல அந்த பிள்ளை நினைப்பு இருந்துச்சுன்னா… நான் அவளைத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிப்பானே!”

லட்சுமிக்கு திக்கென்று இருந்தது. “அடக் கடவுளே சும்மா கிடந்த சங்கை நானே ஊதி கெடுத்துவிட்டேனே… எந்த நினைப்பும் இல்லாமல் இருந்தவன் மனசுல, நானே விதை தூவி விட்டேனே”. என்று எண்ணியவர். பிரமை பிடித்தது போல் அமர்ந்து விட்டார்.

சுந்தரி கிருஷ்ணன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போய் அடுப்பங்கரையில் வைத்து விட்டு. “அண்ணன் பொண்டாட்டி அம்மாவுக்கு சமம்னு சொல்வாங்க. எந்த கேடுகெட்டவனாவது அம்மாவுக்கு தாலி கட்ட நினைப்பானா?” என்று அவளுக்கு தோன்றியதை சொன்னாள்.

கிருஷ்ணன் “நீ சொல்றதெல்லாம் சரிதாம்மா. ஆனா ருக்கு, வங்க அண்ணனை விட வயசு கூடுதல் கிடையாது. அவன் குழந்தையாக இருக்கும்போது தூக்கி வளர்த்தவளும் கிடையாது. அப்படி இருக்கிறவள்தான் ஆத்தாளுக்கு சமம்.”

சுந்தரி, “இப்ப நல்லா புரியுது ப்பா… அவன் மனசுல ஆசை இருக்குதோ இல்லையோ. உங்களுக்கு அந்த ஆசை இருக்குன்னு இப்ப நல்லாவே புரியுது.”

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்