
மரம் தேடும் மழைத்துளி 23
கணவன் இறந்த துயரத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் ருக்மணி.
அவளது நிலையை பார்த்த மாரியம்மாள், துயரத்தில் இருந்து அவளை மீட்டு வெளியே கொண்டு வர என்ன செய்வது என்று புரியாமல் இருந்த நேரத்தில்,
கட்டிட தொழிலாளர் நல சங்க கமிட்டி நண்பர்கள் நாலு பேர், ருக்மணியை சந்திக்க வந்தார்கள். கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்த முருகனுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகையை ருக்மணியின் கையில் கொடுத்துவிட்டு. “இப்படியே முடங்கி இருந்து விடக் கூடாது. உன்னுடைய குழந்தையை பாதுகாக்க நீ திடமாக, தைரியமாக நடை போட வேண்டும்.” என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார்கள்.
கணவனை இழந்த கைம்பெண்கள் 30 நாட்கள் வெளியில் தலை காட்டக் கூடாது என்ற சம்பிரதாயத்தை தள்ளிவிட்டு. 15ஆவது நாளில் இருந்து தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்து செய்ய கிளம்பி விட்டாள்.
அதேபோல பார்வதியும் தனியாக வீட்டில் கிடந்து மனம் புளுங்கி கொண்டிருந்தார். அவரை, அவரது மகள் கோமதி, “இப்படியே எத்தனை நாளைக்கு இருக்க போறே? தினம் தினம் அழுது புலம்பினாலும் செத்தவன் எந்திருச்சு வந்துருவானா? நீ உன்னோட புள்ள போன இடத்துக்கு போகணும்னு நினைக்கிறதை நான் தப்பு சொல்லல. ஆனா உனக்கு, அவன் மட்டும் பிள்ளை இல்லையே. நானும் இருக்கிறேன். நீ போன பிறகு நான் இந்த பூமியிலே அனாதையா ஆயிபோயிடுவேன். அப்படி என்னை தவிக்க விடணும்னு முடிவு பண்ணிட்டியா? நீ உனக்காக உயிர் வாழ வேண்டாம். ஆனால் எனக்காக நீ வாழ்ந்தே ஆகணும். என் பிள்ளைகளை நீ வளர்த்து ஆளாக்கணும். எனக்கு நீ வேணும்மா.” என்று அழுது அவர் மனதை மடைமாற்ற ஆவண செய்தாள்.
பார்வதியும் கோமதிக்காக வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து, தான் பார்த்துக் கொண்டிருந்த பழைய வேலைக்கு மீண்டும் சென்றார்.
மாமியாரும் மருமகளும் ஒரே இடத்தில் வேலை செய்தாலும், பார்த்துக் கொள்வதோ, பேசிக் கொள்வதோ இல்லை. என்றாலும். ஒருவரை ஒருவர் மனதால் ஏற்றுக் கொண்டுதான் வேலை செய்கிறார்கள்.
சுபத்ரா, சரவணன் திருமணத்தை பற்றி பேசிய நாளில் இருந்தே சரவணன் ஒருமுறை கூட சுபத்ராவிடம் பேச வேண்டும் என்று ஆர்வம் காட்டியது இல்லை. சுபத்ராவை பிடித்திருக்கிறது. விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்று இருந்தவன், இப்போது திருமணம் நடக்க ஒரு வருட காலம் இருக்கிறது என்றாகிவிட்டது. ஆனாலும் இப்போதும் சுபத்ராவை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று விருப்பம் கொள்ளவில்லை.
ஆனால் சுபத்ரா, சரவணன் எப்போது தன்னிடம் பேசுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள்.
அவளது ஆசை ஈடேறும்படியாக. சரவணன் தனது நண்பன் ரவியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வந்திருந்தான். அங்கே சுபத்ரா, சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள்.
சரவணனை பார்த்தது ஆர்வமாய் பேச வருவான் என்று காத்திருந்தாள்.
ரவி, சுபத்ராவை கண்டு கொண்டான். சரவணனிடம், “மாப்ள உனக்கு பேசி முடித்திருக்கிற பொண்ணு நிற்குது. போய் பேசிட்டு வாடா” என்று சொல்ல.
“இல்ல மாப்ள. கல்யாணத்துக்கு முன்னாடி கண்ட கண்ட இடத்துல பேசுறது தப்பு.” என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு வந்த காரணத்தை மறந்து விட்டு. வெளியேறி சென்றான் சரவணன்.
சுபத்ரா, முகம் சுண்டிப்போனாள் “ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான்?” என்று அவனிடம் நேரடியாகவே கேட்டு விட வேண்டும் என்று, அவளும் கோயிலுக்கு வெளியே வந்தாள்.
சாமி கும்பிட சென்ற ரவி, வருவதற்காக காத்துக் கொண்டிருந்த சரவணனிடம், வந்த சுபத்ரா, “என்னை பார்த்ததும் ஏன் ஓடுறீங்க?” என்று நேரடியாகவே கேட்டு விட்டாள்.
சரவணன், அவள் இப்படி எதிரில் வந்து நின்று கேள்வி கேட்பாள் என்று எண்ணவில்லை. அதனால் அதற்கு தகுந்த மாதிரி பதில் சொல்ல முடியவில்லை .
நான் உங்களை பார்த்து ஓடல. நான்… என்று யோசித்து, தயங்கி, ஒரு வழியாக எங்க அண்ணன் இறந்த ஒரு வருஷம் கழிச்சுதான் கோவிலுக்கு வரணும். அது எனக்கு ஞாபகம் வந்ததும் வெளியே வந்துட்டேன்.” என்று சொல்லி முடித்தான்.
சுபத்ரா, “சரி சரி. நானும் கோவிலுக்கு வெளியே வந்துட்டேனே இப்பவாவது ஏதாவது பேசுங்க.”
“நான் இதுக்கு முன்னாடி எந்த பொண்ணுங்க கிட்டயும் பேசினது இல்ல. எனக்கு பேசுவதற்கு ரொம்ப சங்கடமா இருக்கு. யாராவது பார்த்து வீட்டில சொல்லிடுவாங்கணு பயமா இருக்கு. ஒரு மாதிரி கூச்சமா இருக்கு.”
சுபத்ராவுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. ஏதாவது பேசு என்றால், அவன் பேசாததற்கு காரணத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறான் என்று தோன்றியது.
“உங்க மொபைல் நம்பராவது கொடுங்களேன் யாருக்கும் தெரியாம நான் எங்க வீட்டு போன்ல இருந்து கூப்பிடுறேன்.”
“அடிப்பாவி நீ விட மாட்ட போல இருக்கு.” என்று எண்ணியவன் “எனக்கு மொபைல் நம்பர் தெரியாது. நான் இதுவரைக்கும் பத்து முறை சிம்மை மாத்திட்டேன். அடுத்த ஆஃபர் எந்த சிம்க்கு இருக்குமோ அதை போடுவேன். அதனால எனக்கு நம்பர் சொல்ல தெரியாது.” என்று சொல்லி முடிக்க ரவியும் வந்து விட்டான். “சரிங்க. என்னோட பிரண்டு வந்துட்டான். நான் இன்னொரு முறை உங்ககிட்ட பேசுறேன்.” என்று நழுவி சென்றான் சரவணன்.
“இவனுக்கு உண்மையிலேயே என்னை பிடிச்சிருக்கா? இல்ல பிடிக்கலையா? ஏன் இப்படி நடந்துக்கிறான்.” என்ற சிந்தனையோடு, சுபத்ராவும் தன் வழியை பார்க்க நடந்தாள்.
ரவி, சரவணனை “ஏன் மாப்பிள்ளை? உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்குனுதானே கல்யாணம் பேசி இருக்காங்க. அப்புறம் எதுக்காக அந்த பிள்ளை கூட பேச மாட்டேன்னு ஓட்டம் காட்டுறே?”
“நீ கேட்கிற கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரியல. ஆனா அந்த பிள்ளையை பிடிக்கும். பேசுறதுக்கு ஒரு மாதிரி இருக்கு அவ்வளவுதான் வா…” என்று இருவரும் பேசிக் கொண்டு சென்றார்கள்.
ருக்மணி ஒன்பதாவது மாதம் வரை மில்லுக்கு வேலைக்கு வந்தாள். ஆதன் பிறகு பேறுகாலத்திற்காக இரண்டு மாதம் விடுமுறை எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டில் இருந்து கொண்டாள்.
மில்லில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த பார்வதியும் சரவணனும், ருக்மணி ஏன் வரவில்லை என்று தெரியாமல் தவித்தார்கள்.
ருக்மணியின் அண்ணனும் சரவணனின் நண்பனுமான ரவியை அழைத்த பார்வதி, “உங்க தங்கச்சி எதுக்காக வேலைக்கு வரல? ஏதும் பிரச்சனையா?” என்று கேட்டார்.
ரவி, “இல்லத்தே… அவ பேறு கால லீவு எடுத்திருக்கிறா. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு தான் மில்லுக்கு வருவாள்.”
“சரி சரி” என்ற பார்வதி அவரது வேலையை கவனிக்க தொடங்கினார்.
இரண்டு வாரங்களுக்கு பிறகே சரவணனுக்கு, ருக்மணி விடுமுறை எடுத்திருப்பது தெரிய வந்தது. ரவியிடம் ஒவ்வொரு நாளும் ருக்மணியின் நிலையை பற்றி விசாரித்துக் கொள்வான்.
திடீரென ஒரு நாள், ரவி, சரவணன் எண்ணை தொடர்பு கொண்டு, “ருக்மணிக்கு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்கிறது.” என்ற தகவலை தெரிவித்ததும்.
சரவணன் உற்சாகமானான். தன்னுடைய அண்ணனுக்கு குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை, வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிவித்தான். ஆனால் யாரும் அந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மற்றவர்களை விட, பெரியம்மா பார்வதியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தார்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள். அதனை அறிந்து கொண்ட சரவணன் எதுவும் பேசாமல், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை பார்த்து விட்டு. கை செலவுக்கு சிறிது பணம் கொடுத்து விட்டு வந்தான்.
அதேபோல் சரவணன், குழந்தையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சென்று பார்த்துவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மாரியம்மாளின் பக்கத்து வீட்டில் உள்ள சில தடுதலைகள் சரவணன் வருகையை பற்றி தவறாக பேச தொடங்கி இருந்தார்கள். குழந்தைக்கு 30 ஆவது நாளில் தினேஷ் என்ற பெயரை சரவணன் முன்னிருந்து வைத்தான்.
சரவணன் அடிக்கடி ருக்மணி வீட்டுக்கு வந்து செல்வதை, அக்கம் பக்கத்தினர் தவறாக பேச ஆரம்பித்து. சிறிது சிறிதாக சரவணன் வீட்டு வரை பரவிச் சென்றது.
எதார்த்தமாக ரவி ஒரு நாள் சரவணனை பார்க்க, அவனது வீட்டிற்கு சென்றிருந்தான்.
வீட்டில், லட்சுமி சுந்தரியும் இருந்தார்கள்.
ரவி வாசலில் இருந்தபடியே, “சரவணா…” என்று அழைக்க.
சுந்தரி, “சரவணன் இல்ல.” என்று உள்ளிருந்தபடியே பதில் கொடுத்தாள்.
லட்சுமி, ரவியின் சத்தத்தை கேட்டு சுந்தரியிடம், “இவன் முருகன் பொண்டாட்டியோட பெரியாத்தா மகன் தானே?” என்று கேட்டதும்.
சுந்தரி, ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
வேகமாக விரைந்து வெளியே வந்த லட்சுமி வாசலில் நின்ற ரவியை, “ஏப்பா… கொஞ்சம் நில்லு. நீ யாரை தேடி வந்தே?”
ரவிக்கு ஒன்றும் புரியாமல், “சரவணனை தேடி வந்தேன் த்தே…” என்றான்.
‘யாரு யாருக்கு அத்தை? உன் தங்கச்சி காரி, அப்பன் கூட பிறந்த அத்தையே… அவளை விரட்டி அடிச்சிட்டாள். நான் உனக்கு எந்த வகையில் அத்தைன்னு உறவு முறை சொல்லி கூப்பிடுவே?”
“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியல அத்தை. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.”
“உனக்கு எப்படி புரியும்? நீ இப்ப யாரை தேடி வந்தே”
“சரவணனை”
“அவனை எதுக்கு நீ தேடுவே?”
ஒன்றும் விளங்கவில்லை, “சும்மாதான்” என்று நெற்றியை சுருக்கியபடி லட்சுமியை பார்த்தான்.
“சும்மாவா? இத்தனை நாளும் நீ அவனை தேடி வந்தியா? உன் தங்கச்சிக்கு ஒரு புருஷன் காங்காதுன்னு. இன்னொருத்தனை சேர்த்து வைக்கிறதுக்கு, தேடி வந்தியா? அவளுக்குதான் வெக்கம் இல்ல.உனக்குமா இல்லை? அவளுக்கு தான் அறிவு வேண்டாம்? அண்ணனுக்கு தாலி கட்டிட்டு. தம்பியோட…ச்சி.” என்றதும் ரவிக்கு சுருக்கென்று இருந்தது.
“அத்தே வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. நீங்க பேசறது ரொம்ப அசிங்கமா இருக்கு.”
சுந்தரி வேகமாக, “எங்க அம்மா பேசுறதே உனக்கு அசிங்கமா இருக்கே… உன் தங்கச்சி செய்றது அழகாவா இருக்கு? அவளை எல்லாம் ஒரு நாளாவது நீ கண்டிச்சிருப்பியா?”
“அவளை பத்தி பேச நீ யாருடி?” என்ற ரவி, கையை ஓங்கிக்கொண்டு சுந்தரியை அடிக்கச் சென்றான். நடுவில் வந்து நின்ற லட்சுமி, ”இந்த வீரத்தை உன் தங்கச்சி கிட்ட போய் காட்டுடா. அவளை அடிச்சு ஒடுக்கி கட்டுப்படுத்த துப்பு இல்ல. என் பிள்ளையை ஓங்கிக்கிட்டு வாரே, விளக்கமாறு பிஞ்சிடும் நாயே. கண்ட நாய் எல்லாம் வந்து கை நீட்டுத அளவுக்கு ஆனாமத்தா புள்ள பெத்து போட்டு இருக்கேன்னு நெனச்சியா? செருப்பு பிஞ்சிடும்.” என்று ரவியை லட்சுமி கண்டபடி திட்டினார்.
ரவிக்கு முகமெல்லாம் வேர்த்து ஆத்திரம் எல்லை கடந்து சென்றது.
தெருவில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களில் சிலர், ரவியை நீ பாேப்பா நீ பாேப்பா என்று வழி அனுப்பி வைத்தார்கள்.
சிலர், லட்சுமிக்கு ஆதரவாக “நல்ல கேள்வியா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்டீங்க. நீங்க செஞ்சது தான் சரி.” என்று பேசினார்கள்.

