Loading

அத்தியாயம் 24

சஞ்சய் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. தாரணியின் உதவியோடு சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலை கிடைத்து சென்ற ஒரு தம்பதியரின் வீடு இவர்களுக்கு வாடகைக்கு கிடைத்தது. காணொளி அழைப்பில் பார்த்திருந்தவனுக்குத் திருப்திகரமாகவே இருந்தது. மனைவி மற்றும் பெற்றோரிடமும் காட்டி அவர்களுக்கும் வீடு பிடித்திருக்க. மேற்கொண்டு விஷயங்களை நேரில் சென்று பேசி முடிவு செய்வது கொள்வதாகத் தீர்மானித்தார்கள் ஒரு மனதாக.

பயணத்திற்கு இன்னுமே இரண்டு நாட்கள் இருக்க முறையாக வசுந்தராவின் பெற்றோர்களிடம் கூறிவிட்டு விடை பெற அன்று அவர்கள் இருவரும் மகனுடன் வசுந்தராவின் தந்தை வீட்டிற்கு சென்றார்கள். கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் கழித்து தன் வீட்டிற்கு வருகிறாள் வசுந்தரா. இத்தனை நாட்களில் ஒரு நாள் எனும் தன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வந்ததே இல்லை. தந்தை மட்டும் வந்து பார்த்துச் செல்வார் அவளையும் அவள் மகனையும். பேரனின் மீது அளவு கடந்த பாசம் அவருக்கு. தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று சீராட்ட முடியாத நிலையை நினைத்துச் சில நேரம் வருந்துபவரை வசுந்தராவே சமாதானம் செய்து அனுப்பி வைப்பாள். சில நேரம் கோகிலாவும் இவருடன் வந்து பேரனைப் பார்த்துச் செல்வார். அவருக்கும் அவன்மீது அளவு கடந்த பாசம் இருந்தது ஆனால் அதைச் சரியாக வெளி காட்டாமல் தனக்குள்ளாகவே வைத்துக் கொண்டார். இதற்கு முன் அவன் அன்னைக்கு செய்த செயல்களால்.

வீட்டுக்கு வந்தவர்களை இனிதாக வரவேற்றார் ரகுபதி. எப்பொழுதும் போல வசுமதி அங்குத் தான் இருந்தாள். ஆனால் அவளின் கணவன், சஞ்சயின் அழைப்பின் பேரில் வந்திருந்தான். இருவருக்கும் இடையே சுமுகமான பேச்சுவார்த்தை இருந்தது. வசந்தியும் படிப்பை முடித்துவிட்டு நல்லதொரு வேலையில் கை நிறைய சம்பாதிக்கிறாள். அவளின் திருமணத்திற்கு ஓரளவேனும் சேர்த்த பிறகு வரன் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ரகுபதி.

குண்டு கன்னங்களும் பளீரென்ற குங்குமப்பூ நிறத்தில் கோலி குண்டு கண்களுமாக இங்கும், அங்கும் விழிகளைச் சுழற்றி பார்த்தபடி தந்தையின் மடியில் அமர்ந்து இருந்த வருணனை பார்த்தவர்களுக்கு அவனை அள்ளி எடுத்துக் கொஞ்ச வேண்டும் போன்ற ஆவல் எழுந்தது. ஆவலை அடக்க முடியாமல் வசந்தி அவனைச் செய்கையால் அழைக்க. வர முடியாது எனத் தலையை ஆட்டித் தன் தந்தையின் மார்பில் முகத்தை மறைத்துக் கொண்டான்.

“தங்க புள்ள, தாத்தா கிட்ட வாங்க.” என ரகுபதி அழைக்கவும் தயக்கத்துடன் அவரிடம் சென்று அவரின் மடியில் அமர்ந்து கொண்டான் குழந்தை. அவர் அடிக்கடி இவனை வந்து பார்த்துக் கொஞ்சி சென்றதில் அவருடன் நன்றாகவே பழக்கம் இருந்தது இவனுக்கு.

இருவருக்கும் காபியை கொண்டு வந்து கொடுத்த கோகிலா நலம் விசாரிக்கப் பதில் கூறி காப்பியை அருந்தி முடித்தார்கள் இருவரும்.
பின், சஞ்சய் ரகுபதியை பார்த்து,

“மாமா அலுவலகத்தில் எனக்குப் பதவி உயர்வோடு இடமாற்றமும் கிடைச்சிருக்கு. அகமதாபாத்திற்கு. இன்னும் இரண்டு நாட்களில் கிளம்புறேன். அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்.”

“என்ன மாப்பிள்ளை திடீர்னு சொல்றீங்க.?”
“ஆமாம் மாமா. நானும் எதிர்பார்க்காதது இது. திடீர்னு தான் கிடைத்தது.சரி, எல்லாம் ஓரளவுக்கு முடிவான பிறகு சொல்லலாம்னு தான் நினைச்சிருந்தேன். ஆனா அதுக்குள்ள சீக்கிரம் வரச் சொல்லிட்டாங்க.” என்றவன் பதிலில்

“அப்போ வசுவும், பிள்ளையும்.?” எனச் சந்தேகமாகக் கேட்க
“வீடு எல்லாம் பாத்துட்டேன். நான் போய் முதல்ல எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிட்டு, பத்து நாள்ல ரெண்டு பேரையும் கூட்டிட்டு போய்டுவேன்.” என்றான் அவருக்கு விளக்கமாக.

கேட்டுக்கொண்டவருக்கு மகளும் மருமகனுடன் செல்வதில் திருப்தியே. ஆனாலும் சிறிய வேதனை அவர் வார்த்தையில் வெளிப்பட்டது.
“சந்தோஷம் மாப்ள, ஏதோ மாசத்துல ஒரு முறையாவது மகளையும் பேரனையும் வந்து பாத்துட்டு இருந்தேன் இப்போ அதுக்கும் கஷ்டம் வந்துருச்சு..”
“ஏன் மாமா..? அங்க வரலாமே..அங்கு வந்து உங்க மகளையும், பேரணையும் பாருங்க. புது ஊரு, உங்களுக்கும் சுற்றி பார்க்க நல்லா இருக்கும். எல்லாரும் தான் வாங்க..” என்றான் அனைவரையும் சுற்றி பார்த்து. அனைவரும் அமைதியாக இருக்க. வசுமதியின் கணவன் தான்,

“வாழ்த்துக்கள் சகல. ரொம்ப சந்தோஷம். கண்டிப்பா ஒரு நாள் எல்லாரையும் அழைச்சிட்டு நான் வரேன்..” என்றான் அவன் அழைப்புக்கு பதில் கூறும் விதமாக. ஆமோதிப்பாக அவனிடம் தலையசைத்தவன். பின், ரகுபதியை பார்த்து,

“சரி மாமா கிளம்புறோம்..” என்று எழுந்திருக்க. அவனோடு எழுந்த வசுந்தராவும் சுற்றி பார்வையை ஓட்டியபடி,

“போயிட்டு வரேன் எல்லோருக்கும் ..” என்றாள். ஏனோ குரலடைக்க.
அனைவருக்குமே நெஞ்சடைத்தது.
இதுவரை தெரியாத ஒன்று இப்போது தெரிவது போல் ஒருவிதமான அலைக்கழிப்பு மனதிற்குள்.
இனி தமக்கையையும் அவள் குழந்தையையும் பார்ப்பது கடினமே என உணர்ந்த வசந்தி இதுவரை இப்படி நினைத்திராதவள் மனதில் நொந்தவாறு வேகமாக தமக்கையின் அருகில் வந்தவள் அவளை இருக அணைத்து விடுவித்து அவள் கைகளை பிடித்து படி நின்றிருந்த சின்ன உருவத்தை அவன் திமிர திமிர இருக்கி அனைத்து தூக்கியவள் இரு கன்னங்களிலும் மாறி மாறி அழுந்த முத்தமிட்டு அவனை கீழே இறக்கியவள். தான் சாப்பிடுவதற்காக எப்போதும் வைத்திருக்கும் பெரிய சைஸ் டைரி மில்க் சில்க்கை எடுத்து வந்து அவன் கைகளில் கொடுத்தாள். அவள், அவனின் விருப்பமின்றி தூக்கி முத்தமிட்டதில் கன்னத்தை துடைத்துக் கொண்டு லேசான அழுகையுடன் முகத்தை சுருக்கி அவளை முறைத்துக் கொண்டிருந்தவன் அவள் கொடுத்த சாக்லேட்டை வாங்குவதா வேண்டாமா என யோசனை உடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க.

“வாங்கிக்கோ செல்லக்குட்டி..” என்றவள் திரும்பவும் அவன் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டு. அவன் கைகளில் சாக்லேட்டை திணித்தவள்.

“நான் சித்தி உனக்கு. இனி கண்டிப்பா உன்ன வந்து பார்ப்பேன். உன்கூட போன்ல பேசுவேன். நீ என்கிட்ட பேசுவியா..?” என கேட்க. நிமிர்ந்து
‘என்ன சொல்வது..’ என
அன்னையைப் பார்த்தவன், அவள் சரி என்பதாக தலையாட்ட கூற. இவனும் சரி என்றபடி தலையாட்டினான்.

“அழகு பொம்ம..”என்று மறுபடியும் அவனை முத்தமிட்டவள் எழுந்து தாயின் அருகில் நின்று கொண்டாள்.
அவளின் செயலையே வீட்டில் இருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்குமே தாங்கள் இதுவரை இழந்தது என்ன என்பது லேசாக புரிந்தது. அந்த வீட்டில் பிறந்த ஒரு மகளை தள்ளி வைத்ததையும் கோபமும் துவேஷமும் கொண்டதையும் நினைத்து வருந்தியவர்களாக இனி என்ன செய்ய முடியும் என்று நிலையில் அமைதியாகவே அனைவரும் நின்றிருந்தார்கள். வசுந்தராவின் குழந்தையை பார்த்ததும் அள்ளி அணைக்க ஆசை ஏற்பட்டது வசுமதிக்கு. இன்னும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை அவளுக்கு ஆனாலும் தான் இதற்கு முன் ஏற்படுத்திய அனர்த்தங்களால் குழந்தையை ஆசையுடன் தூக்க முடியாத நிராசையுடன் நின்றிருந்தாள் அவள்.

இப்பொழுது மாற ஆரம்பித்திருக்கும் இவர்கள் மனங்கள் போகப் போக நல்லபடியாக மாறி உறவில் சமூக நிலை ஏற்படும் என நம்புவோம்.

அவர்களின் நிலை நன்றாகவே சஞ்சைக்கும், ரகுபதிக்கும் புரிந்தது. ஆனால் இனி என்ன செய்ய என்று நினைத்துக் கொண்டார்கள் இருவருமே. இனியேனும் திருந்தி நல்லபடியாக ஒருவருக்கொருவர் ஒற்றுதலுடன் வாழ முடிவெடுத்தால் நன்றுதான் என நினைத்துக் கொண்டான் சஞ்சய். பின், அனைவரிடமும் விடை பெற்று சென்ற சஞ்சய்யிடம் அவன் கிளம்பும் தேதியையும், நேரத்தை கேட்டு தெரிந்து கொண்டே அனுப்பி வைத்தார்கள் ரகுபதியும் வசந்தியின் கணவனும்.

சஞ்சய் கிளம்பு வேண்டிய நாளும் வந்தது. அவனின் உடமைகள் அனைத்தும் இரண்டு பெரிய பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு தயாராக இருந்தது. தயார் நிலையில் இருக்கும் பெட்டிகளைப் பார்க்கும்போது ஒரு விதமான தவிப்பு ஏற்பட்டது வசுந்தராவிற்கு. கணவனைப் பிரிந்து இருக்க வேண்டும். இதுவரை, திருமணம் முடிந்த நாளிலிருந்து ஒரு நாள் கூட அவனைப் பிரிந்து இருந்ததில்லை.
முதல் முறையான பிரிவு, அவன் இல்லாத வீடும் அவர்களின் அறையும் எப்படி இருக்குமோ என்ற அலைக்கழிப்பு ஒரு புறம். இதில் மகனை வேறு சமாளிக்க வேண்டும்.
தந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க வில்லை என்றாலும் அவனுடன் சிறிது நேரமாவது விளையாடுவதும் உடன் இருப்பதும் அவனின் வழக்கம்.
இவர்களும் அவனோடு விரைவில் சென்று விடுவார்கள் என்றாலும் அவன் இல்லாத சிறிது நாட்களை எப்படி கழிப்பது என்பது பெரும் மலைப்பாக இருந்தது பெண் அவளுக்கு. அத்துடன் தன் பிரியத்துக்குரிய மாமியாரை விட்டுச் செல்வதும் பெரிய மனக்கவலை அவளுக்கு.

சனிக்கிழமை மாலை நான்கரை மணி அளவில் விமான பயணம் அவனுக்கு. வீட்டிலிருந்து இரண்டு மணிக்கு எல்லாம் கிளம்ப வேண்டும். மறுநாள் விடுமுறை நாளாக இருந்தால் அவனுக்கு வசதியாக இருக்கும் என்ற நோக்கில் சனிக்கிழமை பயணத்தை ஏற்பாடு செய்திருந்தான் அவன். அவர்களின் காரிலேயே கிளம்பினார்கள் அனைவரும். வரும்போது பிரபுக் காரை ஒட்டி வந்து விடுவார் என்று.

வருணனுக்கு எங்கோ வெளியில் செல்கிறோம் என்று குஷியாக இருந்தது.. வசுந்தராவிற்கு தான் வீட்டிலிருந்து கிளம்பும்போதே கண்களில் நீர் கட்டிக் கொண்டது யாரும் பார்ப்பதற்கு முன்பு நாசுக்காகத் துடைத்துக்கொண்டாள். ஆனால் அது அவளவனின் கண்களில் தப்பாமல் பட்டது. அனைவரும் கிளம்பி இருக்கும்போது தன்னரைக்குச் சென்றவன் வசுந்தரா என மேலிருந்தபடி அழைக்க,

“என்ன ங்க.?”என்று கேட்டபடி உள்ளே சென்றவள் அவனின் அணைப்பில் இருந்தாள். அவள் மனம் விரும்பிய இறுகிய அணைப்பு. அதிலிருந்து வெளிவரவே விரும்பவில்லை அவள்.

“பத்து நாள் தான் அதிகபட்சம். அதுக்குள்ளவே வந்துடுவேன். எனக்குமே உன்னையும் பையனையும் விட்டுட்டு எப்படி இருக்க போறேன்னு தெரியல.? அம்மா, அப்பாவை விட்டுப் போறதும் கஷ்டமா தான் இருக்கு. உங்களை எல்லாம் ரொம்ப தேடுவேன் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.” என்றவன் அவள் இதழில் ஆழ்ந்து முத்தமிட்டு விலகியவன்.

“எல்லாரையும் பாத்துக்கோ. என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் பேக் பண்ணி வச்சுடு. ஏதாவது வாங்கணும்னாலும் வாங்கிடு. நாளிலிருந்து பேக் பண்ண ஆரம்பிச்சிடு. பணம் இருக்கு இல்ல.?”என்றவனின் கேள்விக்கு
“நிறையவே இருக்கு.”
“அதான் தெரியுமே.” என்று விட்டு, அவளோடு கீழ் இறங்கி சென்றான். அவர்கள் வாகனமும் புறப்பட்டது விமான நிலையத்தை நோக்கி.

இவர்கள் சென்று சேரும்போது விமான நிலையத்தில் இவர்களுக்காக வசுந்தராவின் குடும்பமே காத்திருந்தது. அனைவருமே வந்ததில் ஆச்சரியம்தான் வசுந்தராவிற்கு. தந்தையையும் அக்காவின் கணவரை மட்டும் எதிர்பார்த்திருந்தவளுக்கு இது பெரும் அதிர்ச்சி தான்.

தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கொஞ்சமாக அவர்களும் வெளிப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். வசந்தியும் வந்திருந்தாள். வருணனை பார்த்ததும் ஆசையுடன் கைகளை நீட்ட ஏற்கனவே பார்த்து இருந்ததாலும் பெரிய சாக்லேட் பாரை கொடுத்து இருந்த சித்தியைச் சின்ன வாண்டுக்கும் சற்று பிடித்தே இருந்தது. ஆரம்பத்தில் சற்று தயங்கினாலும் பின் அவளோடு ஐக்கியமாகினான்.

சற்று நேரம் பொதுவாக அனைவரிடமும் பேசி இருந்த சஞ்சய் பின் நேரம் ஆவதை உணர்ந்து அனைவரிடமும் விடை பெற ஆரம்பித்தான். மகனைத் தூக்கி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு அவன் முகம் பார்க்க, தந்தை எங்கோ செல்வதை உணர்ந்தது போல அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் குழந்தை. அவனைப் பிரித்தெடுப்பது தான் மிகவும் சிரமமாக இருந்தது.
“வா நான் உனக்குப் பெரிய ட்ரெயின் காட்டுறேன்.” என்று வசந்தி அழைக்க. அதில் கவரப்பட்டவன் அவளிடம் சென்றான்.

சொல்லும் மகனைப் பார்த்த சஞ்சய், அன்னையையும் மனைவியையும் லேசாக அணைத்து விடுவித்தவன். தந்தையின் கைகளை அழுத்தமாகப் பிடித்து அழுத்திய பின், வேகமாக உள்நோக்கி சென்றான். யாரையும் திரும்பிப் பாராமல். அனைவரையும் பிரிந்த செல்வது அவனுக்குமே சிரமமாக இருந்தது.
ஆனாலும் வாழ்வின் வசதிக்காகச் சில தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்தது.

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்