Loading

சுழலி-21

யட்சினி ஏற்படுத்திய மாயை உண்மையென்று நம்பிய காவலர்கள், முதன்மையமைச்சரை அங்கு அழைத்து வர சென்றனர்.

நேரம் செல்லச் செல்ல, வேள்வியின் நெடியை யட்சினியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவளின் சக்திகள் குறைய ஆரம்பித்தது. கூட்டமாக இருந்த இடத்தில் இப்போது யட்சினி மட்டுமே தனித்து நின்றாள். அதே நேரம், நீலா செந்தூரனோடு கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

மாரிவெண்கோவும் செம்பியனும் வீரர்களோடு வர, அங்கு தனித்து நின்றிருந்த ஒரு பெண்ணை மட்டும் கண்டு குழம்பி நின்றனர்.

“வீரர்களே! மலைவாசி மக்களும், வனவாசி மக்களும் திரண்டு வந்துள்ளனர் என்றுதானே கூறினீர்கள்? ஆனால், தற்போது ஒரேயொரு பெண்மட்டும் தனித்து நிற்கிறாள். எம்மைக் கண்டால் வேலையற்றுத் திரிபவர்கள்போல் தெரிகிறதா?” படைகள் இன்னும் புறப்படாமல் இருப்பதைக் கண்டு இன்னும் கோபமடைந்தார் மாரிவெண்கோ.

ஆனால், செம்பியனோ யட்சினியின் அழகில் மெய்மறந்து சுற்றம் மறந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதன்மையமைச்சரின் கூற்றில் பதறிய தலைமைக்காவலன், “பொறுத்தருள வேண்டும் ஐயா! நாங்கள் அனைவரும் அத்தனை பேரையும் இங்குதான் காத்திருக்குமாறு சொன்னோம். ஆனால், அதற்குள் எப்படி மாயமானார்கள் என்று எனக்கு தெரியவில்லை.”

“ஆமாம், மாயமாகித்தான் போனார்கள். இந்த அழகிய பெண்ணின் எழில் அனைவரும் மாயமாகித்தான் போனார்கள்” தனியாகப் பேசினார் செம்பியன்.

செம்பியனின் தெளிவில்லாத கூற்றில் திரும்பிய அமைச்சர், “செம்பியா! செம்பியா! அங்கு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்? செம்பியா! நமக்கு தலைக்குமேல் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கிறது. உன்னைத்தான் அழைக்கிறேன், செவியில் விழவில்லையா?” வார்த்தைகளை கடித்து துப்பினார்.

“ஆயிரெத்தெட்டு வேலைகளில் ஆயிரத்தொன்பதாவது வேலையாக இந்த பெண்ணை என் மஞ்சம் சேர்க்கலாம் என்றுள்ளேன் அமைச்சரே!”

“என்ன? என்ன பிதற்றல் இது? அங்கு வேள்வி துவங்கியது. அதற்குள் வஞ்சனைத் தேடி வீரர்களை அனுப்ப வேண்டும். நீ என்ன பெண் பித்து பிடித்து திரிகிறாயா?”

மாரிவெண்கோ பேசுவது எதுவும் செம்பியனின் செவியில் விழத்தான் இல்லை. அவர்தான் எப்போதோ யட்சினியின் மாயப்பார்வையில் சுயமிழந்துவிட்டாரே.

“நீங்கள் வீரர்களை அனுப்பும் பணியில் ஈடுபடுங்கள். நான் இந்த பெண்ணிடம் சிறு விசாரணை நிகழ்த்திவிட்டு வருகிறேன்” என்றபடி யட்சினியை அழைத்துச்சென்றவரின் வாயெல்லாம் முத்துப்பற்கள் இளித்தவண்ணம் இருந்தது.

யட்சினி ஏதும் பேசாமல் அழகுப்பதுமையாக அவரோடு சென்றாள்.

தலையில் அடித்துக் கொண்ட அமைச்சர், “இவனை…. அனைவரும் அங்கு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். விரைந்து புறப்படுங்கள். கல்வராயன்மலையில் நம் மன்னர் தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவிக்கரம் நீட்ட உடனே புறப்படுங்கள். காணாததைக் கண்டதுபோல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அற்ப பதருகளே!” சுயம் மீண்ட காவலர்கள் புறப்பட தயாராகினர்.

வேள்வியின் தாக்கத்தால், யட்சினியின் மந்திரங்கள் ஏதும் முழுமையான பலனை அளிக்கவில்லை. ஆகவே, இன்னும் சற்று நேரத்தில் செந்தூரன் வந்ததும் அடுத்த திட்டத்தை மேம்படுத்தலாம் என்று எண்ணியே செம்பியனோடு சென்றாள் யட்சினி.

வீரர்கள் பயணத்தைத் துவங்க, மாரிவெண்கோ ஆலயத்திற்கு புறப்பட்டார். எப்படியாவது மஞ்சரியை தாமதப்படுத்தி, கோதையின் கருவை அழித்தாக வேண்டும் என்பதே அவரின் தற்போதைய எண்ணமாக இருந்தது.

….

செம்பியன் அறையில்.

“கண்ணே! நீ மலைவாசி பெண்ணா?”

“ம்ம்… என்னோடு வந்தவர்கள் எங்க போனாங்க ஐயா. அவங்கள காணோமுங்களே”

“பயம் கொள்ளாதே! அவர்களைத் தேடி அழைத்து வர வீரர்களை பணித்திருக்கிறேன். அருகே வா, இப்படி வந்து அமர்ந்துக் கொள்”

மெல்ல நடந்து வந்தவள், செம்பியனின் அருகில் அமர்ந்தாள். பொதுவாக, யட்சினியின் கண்களை கவனித்துவிட்டால், அதன்பின் குறைந்தபட்சம் ஒரு நாழிகையாவது அவளின் வசியத்தில் சிக்கித்தான் போவார்கள். இதில், செந்தூரன் மட்டுமே விதிவிலக்கு. ஆனால், செம்பியனோ தற்போது இந்த மோனநிலையில் சிக்கித்தான் போனார்.

“இதனை அருந்து பெண்ணே!”

“இல்லங்க ஐயா, வேண்டாம்”

“இது பழச்சாறுதான். வெகுதொலைவில் இருந்து வந்துள்ளாய், களைப்பாக இருக்கும். நீ பாதி அருந்து, நான் பாதி அருந்துகிறேன்” என்று கொஞ்சினார் அந்த கிழவன்.

சந்தர்ப்பத்தை நழுவவிடாதவள், தான் தயாராக வைத்திருந்த மயக்கப் பொடியை அதில் தூவி அதனை செம்பியனுக்கு கொடுத்தாள். மயங்கிவிட்டான் செம்பியன். அவனை அப்படியே படுக்கவைத்தவள், தூரத்தில் கேட்ட சத்தத்தில் காற்றாய் மாறி எல்லைக்கு விரைந்தாள்.

செந்தூரனும் நீலாவும் அரண்மனையின் எல்லையை வந்தடைந்தனர்.

“நீலா, நீ சென்று மஞ்சரியை அழைத்து வா.” என்றவன், “யட்சினி! செந்தூரன் அழைக்கிறேன். விரைந்து வா” என்று சப்தமிட்டான்.

அந்த சப்தத்தைக் கேட்டுத்தான் யட்சினி காற்றாய் விரைந்தாள்.

நீலா அந்தப்பக்கம் மறைந்ததும், இங்குத் தோன்றினாள் யட்சினி. தோன்றியகணம் கண்டுக்கொண்டாள். எது நடக்கக் கூடாது என்று அவள் எண்ணியிருந்தாளோ, அது நடந்துவிட்டது.

“செந்தூரா! என்னவாயிற்று?”

எல்லையில் வீற்றிருக்கும் காவல் தெய்வங்களின் சக்தியாலும் ஆலயத்தில் நடக்கும் வேள்வியாலும், செந்தூரனால் உள்ளே நுழைய முடியவில்லை. அவனின் உடலில் இருக்கும் ஏவல் அவனை நுழைய விடவில்லை.

“அனைத்தும் அறிந்த நீயே என்னவாயிற்று என்று கேட்கிறாயே யட்சினி. அனைத்தும் கைமீறி சென்றுவிட்டது. மஞ்சரி… மஞ்சரி எப்படி இருக்கிறாள்?”

“நலம்! கோதையும் கருவுற்று இருக்கிறார்கள். மஞ்சரி இரட்டைக் கருவைத் தாங்கியிருக்கிறாள்.”

அகலப் புன்னகை சிந்தினான் செந்தூரன். யட்சினியால் அவனின் அருகில் செல்ல முடியாது. அவள், கோட்டையைத் தாண்டினால் மீண்டும் உள்ளே வர இயலாது என்பதை அறிந்ததனால் எல்லைக்குள் நின்றே உரையாடிக் கொண்டிருந்தாள்.

“மகிழ்ச்சி. இந்த ஒற்றைச் சொல்லே என் அத்தனை பிறவிகளுக்கும் நான் முழுமைப்பெற்றிட போதும். இச்சமயம், நான் உன்னை விடுவிக்கிறேன். என்னுள் இருக்கும் இந்த ஏவல் எந்த நேரமும் முழுமையடையலாம். அதற்குள், நான் சொல்வதை செய்துவிடு.” என்றவன், சிறிது நேரம் கண்கள் மூடி அமர்ந்தான்.

யட்சினியின் உள்ளமோ பதைபதைத்தது. இனி நடக்கப் போகும் அனைத்தும் பெரும் போர்க்களமாய் வெடிக்கும். நடக்கும் நிகழ்வுகள் அவளின் கண்முன்னே காட்சியாய் விரிந்தது. முடிந்து மனதை திடப்படுத்திக்கொண்டாள்.

கண்ணைத் திறந்தான் செந்தூரன். “இன்னும் சற்று நேரத்தில் ஏவல் என் எண்ணவலைகளையும் மெய்யையும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிடும். அதற்குள் நான் சொல்வதை கவனத்தில் கொள். மீண்டுமொரு ஜனனம் எனக்கு கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஒருவேளை கிட்டினால் என் இறுதி மூச்சு வரை மஞ்சரிக்காக மட்டுமே. என்னை ஏவல் முழுவதுமாக ஆக்கிரமித்தவுடன் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. இந்நொடி என் உயிர் பிரிந்திடாதா என்றே நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை ஏவலின் ஆக்கிரமிப்பால் நான் என்ன செய்தாலும் அது என் பாவக்கணக்கில்தான் சேரும். அப்போது என்னை அழிக்க முடியா நிலை வந்தால் யோசியாமல் மஞ்சரியின் கைகளால் என்னை அடைத்து வையுங்கள்.

இதே முழுநிலவு நாள் அன்று, என்றாவது ஒரு நாள் நான் பிரேதாத்மாவாக மாறி வெளிவந்தால், என்னுடைய சக்திகளின் குறிப்புகளை கொண்டு என்னை அழிக்க முயற்சி செய்யுங்கள். அனைத்தும் ஓலைகளில் குறித்து செவ்வேலன் தந்தையிடம் கொடுத்திருக்கிறேன். அதனை எப்படியாவது பாதுகாத்து வையுங்கள். என் அழிவு என் மகளின் குருதியாலும் மகனின் பாதங்களாலும் நிகழ வேண்டும். நான் மஞ்சரிக்கு பூட்டிய மரகதமாலையே என் கழுத்தில் இறுதி மாலையாக விழ வேண்டும்.

வனக்காட்டிலிருந்து ஒரு கல் தொலைவில்  யாராலும் அடக்க இயலாத அகோர சக்தியாக நான் வெளிப்படுவேன். இதுவே என் விதி. அப்போது என் தீய எண்ணங்கள் மட்டுமே உயர்ந்து நிற்கும். என் ஓலைப்படி கிடைக்கும் அனைத்து பொருட்களையும் பத்திரமாக பாதுகாத்து என்மேல் பிரயோகியுங்கள். நான் அழிந்தால் மட்டுமே மஞ்சரிக்கு பூரண வாழ்வு கிட்டும். எந்நாளும் அவள்மேல் நான் கொண்ட காதல் என்றும் பொய்த்து போகாது. என் ஆத்மாவை புண்ணிய பலன்களோடு பதினைந்து பொருட்களில் மறைத்து வைத்துள்ளேன். அதற்கான குறிப்பும் சுவடியில் உள்ளது. வஞ்சனின் மகன் அந்த குறிப்பை அறிந்துக் கொள்வான். தந்தையை மிஞ்சிய தனயனாக வருவான். அவனுக்கு என் மகளை மணமுடித்து வையுங்கள். வஞ்சனும் கோதையும் மீண்டுமொரு பிறப்பில் இணைந்து வாழ்வாங்கு வாழ்வார்கள். அவர்களுக்குத் துணையாக என் மகனும் மகளும் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் அரணாக செவ்வேலனின் மகனும் மகளும் விளங்குவார்கள்.

மீண்டும் இதுபோன்ற ஒரு முழுநிலவு நாளில் நவமனிதர்கள் பிறப்பார்கள். அவர்கள் இணைந்தே என்னை அழிப்பார்கள். இது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் மரண சாசனம். நான் முழுவதுமாக மரணித்த அந்த நொடி மஞ்சரி அமைதியாவாள். அதன்பின், அவளுக்கு உண்மைகள் புலப்படும். எங்களின் காதல் உண்மையானால், எங்களின் பந்தம் புனிதமானால் இத்தனை இன்னல்களுக்குப் பிறகும் மீண்டும் நாங்கள் மண்ணில் மொட்டாகி பூவாக மலர்வோம்.

இத்தனை நாட்கள் என்னோடு துணையாக இருந்த யட்சிணியே இறுதியாக எனக்கொரு உதவியும் செய்ய வேண்டும். இந்த கமண்டல நீரை எப்படியாவது கோதையிடம் சேர்த்துவிடு. நிச்சயம் அவள் கருவானது நல்வளர்ச்சி பெற்று இந்த கொங்கு நாட்டிற்கு வாரிசாய் மாறட்டும். அனைத்தும் அவன் செயல்” என்று மயங்கிய நொடி அவனின் ஆத்மா அமுக்கப்பட்டு பாதியாக நுழைந்த ஏவல் தற்போது முழுவதுமாக உள்ளே புகுந்தது.

கண்களிரண்டும் இரத்தமென சிவக்க எழுந்து அமர்ந்தான் செந்தூரன். சட்டென அவன் கொடுத்த கமண்டல நீரோடு எல்லைக்குள் நுழைந்துவிட்டாள் யட்சினி. காவல் முழுக்க வீச்சறுவாளைத் தாங்கிக் கொண்டு கருப்பசாமியும் அய்யனாரும் நிற்க செந்தூரனால் உள்ளே நுழைய முடியவில்லை. இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட யட்சினி, கமண்டல நீரை சிறிது பருகினாள். அவளுக்கான வேள்வியும் இதில் இணைந்தே நடக்கிறது என்பதை அப்போதுதான் உணர்ந்தான் செந்தூரன்.

அதனைக் கண்டு ஆத்திரமுற்றான் செந்தூரன். “யட்சினி… நீயும் என்னை ஏமாற்றுவாய் என்று நான் என் கனவிலும் எண்ணவில்லை. கமண்டல நீரை என்னிடமிருந்து பறித்து உன் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது எத்தனை பெருங்குற்றம் என அறியாது போனாய். சுயநலம் என்னும் பேய் அனைவர் மனத்திலும் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. இப்போதே உனக்கு சாபமளிக்கிறேன், நீ விமோச்சனம் பெற்று விண்ணகம் அடைந்தாலும், மீண்டுமொரு பிறப்பெடுப்பாயாக. அப்பிறப்பில் நாடோடியாய் அலைந்து திரிந்து என் காலடியில் விழுந்து எனக்கு மரணத்தைக் கொடு என்று மடியேந்தி நிற்பாய். அப்போது நான் கேட்கும் நிபந்தனையை நீ நிறைவேற்றாவிட்டால் மரணம் தேடி ஓடும் நாடோடியாய் வாழ்வாய்.

அடியே சுழலி! என் காதல் சுழலி! வாடி வெளியே! எல்லைத் தெய்வங்களை நிறுவிவிட்டால் என்னால் உள்ளே வராது என்ற மிதப்பில் திரிகிறாயோ? இங்கிருந்தே உன் உதிர வாடையை நான் அறிவேன் மஞ்சரி. நாம் ஒன்றிணைந்து இந்த உலகத்தையே ஆளலாம் வா! நீ என் மடி சேர்ந்து மஞ்சம் பகிர்ந்து மாமனவன் மடியினில் அமர்ந்து காணும் ஒற்றைப் பார்வைக்கு இந்த அகிலத்தையும் உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன் வா! கருத்தாங்கி நிற்கும் என் மங்கையே! பிறக்கும் குழந்தைகள் நமக்கு வேண்டாம். அவைகளை அழித்து விடு. நம் சல்லாபத்திற்கு அவைகள் என்றும் தடையே. இன்னொரு நாளில் திகதி குறித்து உன் அண்டத்தில் என் விந்தணுவை செலுத்துகிறேன். அப்போது பிறக்கும் நம் மகன் என்னையும் மிஞ்சி அகோர சக்திகளின் தலைவனாய் அனைவருக்கும் சொப்பனமாய் திகழ்வான். அவனை பெற்றெடுத்து வம்சம் வளர்க்கலாம் வா! மஞ்சரி! விரைந்து வா! வெளியே வா!” இவனின் இத்தனைக் கத்தலுக்கும் நாட்டின் இலைகூட அசையவில்லை. பெரும் அமைதி, பேரமைதி. அந்த நள்ளிரவை இன்னும் அச்சம் கொள்ளும் மயான அமைதி.

பொறுமையிழந்தவன், இத்தனை நாட்கள் காதலில் திளைத்து, கந்தர்வ மணம் புரிந்த தன் மனத்திற்கினியாளுக்கு, எந்த வாயால் அவளை கண்ணே மணியே அன்பே அமுதே என்று கொஞ்சினானோ அதே வாயால் அவளுக்கு சாபமளிக்க முன்வந்தான். “எத்தனை பிறவி கொண்டாலும் அவள் ஒருவளைத் தவிர வேறுயாரையும் மனதிலும் நினையேன் என்று பிரமாணம் எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னை காணக் கூட அவள் மறுக்கிறாள். காதல் என்னும் சுழலில் என்னை சிக்கவைத்து சுழலியாகிப் போனவளை எத்தனை பிறப்பு எடுத்தேனும் பழிவாங்காமல் விடமாட்டேன். அவள் எடுக்கும் அனைத்து பிறவிகளிலும் சந்தேகம் என்னும் கண்கொண்டே மற்றவர்களால் மாண்டுபோவாள். அவளின் கருவில் தாங்கி நிற்கும் உயிர்கள் பிண்டங்களாக போகட்டும். என்று என்னை நீ முழு மனதாக ஏற்கிறாயோ அன்றே உனக்கு நிம்மதியான உறக்கம் கிட்டும்” என்றவன், சட்டென மறைந்து போனான். யட்சினித் தவிப்புடன் ஆலயம் நோக்கி சென்றாள்.
….

நீலா மஞ்சரியை நோக்கி விரைய, வேள்வியில் நின்றுக் கொண்டிருந்தவளின் உதரத்தில் இருந்த இரட்டைக் கரு, கரைந்து உதிரமாய் வெளியேறியது.

“அம்மாஆஆஆஆ” என்ற அலறலோடு மயங்கினாள் மஞ்சரி.

கல்வராயன் மலை.

நேரம் கடந்துக் கொண்டிருந்தது. வஞ்சன் தனது இறுதி நொடிக்காகக் காத்துக் கொண்டிருந்தான். கருநாகத்தின் நஞ்சு மெல்ல மெல்ல அவனது உயிரைக் குடித்துக் கொண்டிருந்தது. மாரிவெண்கோ அனுப்பிய படைகள் வந்துக் கொண்டிருக்க, மறுபக்கம் செந்தூரன் ஆங்காரம் கொண்டு வஞ்சனை தேடி அலைந்தான்.

“கொங்கு நாடு முழுக்க இனி எனக்கே சொந்தம். வஞ்சா என் கை உன் குருதியைக் குடிக்கப் போகிறது. காளிங்கா, நல்ல காரியம் செய்தாயடா! நல்ல காரியம் செய்தாய்.” என்று கொக்கரித்தான் செந்தூரன். அவன் முழுதாய் ஏவலின் கட்டிற்குள் வந்திருந்தான். அவனின் நல்லெண்ணங்கள் அனைத்தும் ஆழத்தில் அமிழ்ந்துபோனது. பேராசையும், அனைத்தும் தனக்கே, நானே சிறந்தவன் என்ற தலைக்கணம் மட்டுமே அவனுள் வியாபித்து இருந்தது.

ஆனால், வனக்காட்டிற்குள் செந்தூரனால் நுழைய முடியவில்லை. அவன் உடலில் வாசம் செய்துக் கொண்டிருந்த ஏவலால் செந்தூரன் திடீரென தூக்கியெறியப்பட, அழுத்தம் தாங்காது செந்தூரன் ஆன்மா வெளியேறியது. தன்முன்னே தன் உடல் அவதியுறுவதை செந்தூரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“கடவுளே! எந்த துன்பத்தையும் நான் தாங்கிக் கொள்வேன். ஆனால், நடக்கவிருக்கும் அனைத்து தீங்கிற்கும் நானே காரணமாகிப் போனேனே. ஒரு நிமிடம் யோசித்திருந்தால் அந்த கயவனை கண்டுக்கொண்டிருப்பேனே. நொடி நேரம் சித்தம் தப்பியதால் இத்தனை இன்னல்களா? ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் இதனை சரிசெய்ய நான் சித்தமாயிருக்கிறேன் ஆண்டவா” கதறிக் கொண்டிருந்தது செந்தூரனின் ஆன்மா.

ஏவல் வனக்காட்டிற்குள் செல்ல முயற்சி செய்துக் கொண்டிருக்க, அந்த நேரம் சித்தமுனி தோன்றினார்.

“மாபெரும் தவறு செய்தபின், இனி வருத்தம் கொள்வதில் ஏதும் பயனில்லை செந்தூரா. அந்த ஏவல் பல அகோரிகளின் மந்திர உருவால் உருவாக்கப்பட்டது. அதனை தற்சமயம் கட்டுப்படுத்தக்கூட என் கமண்டல நீர் தேவை. ஆனால் அதனையும் நீ என்னால் சாபம் பெற்றவர்களுக்கு கொடுத்துவிட்டாய். எப்படியாவது வனக்காட்டிற்குள் நுழைய முற்படு. அங்கு சென்றபின், அந்த ஏவலால் உன் உடலில் இருக்க முடியாது. ஆனால், கவனம்! வனதேவதை காளிங்கன் செய்த செயலால் உக்கிரத்தில் இருக்கிறாள். எக்காரணம் கொண்டும் அவளின் கோபத்திற்கு ஆளாகி விடாதே. வனக்காட்டைக் கடந்து, ஒரு குன்றின்மேல் வஞ்சன் உன் வரவுக்காகவே காத்துக் கொண்டிருக்கிறான். அவனின் கடைசி நிமிடங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைந்து செல்.!” என்றவர் அங்கிருந்து மறைந்தார். புரிந்தும் புரியாத நிலைதான் செந்தூரனின் ஆன்மாவிற்கு.

பல முயற்சிகள் செய்தும் ஏவலால் செந்தூரனின் உடலோடு வனக்காட்டிற்குள் நுழைய முடியவில்லை. அனைத்தையும் செந்தூரனின் ஆன்மா கண்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது. சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும் ஒற்றைக்கால் கொக்குபோல அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் செந்தூரன் ஆன்மாவாக.

காற்று வேகமாக வீசிக் கொண்டிருக்க, ஏவலால் நிலைக்கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தனது குரு சொன்ன சூட்சம சக்திகளின் நிலை அவனுக்கு புரிந்தது.

அதாவது, வனக்காட்டிற்குள் எந்த தீய சக்தியும் நுழைய முடியாது. மேலும், அங்கு பல காலமாக மந்திரஉருவேறிய முருகன் சிலை இருப்பதால் எந்த மந்திர சக்தியும் வனக்காட்டிற்குள் எடுபடாது.

ஒரு மனிதனின் உடலில் துயில் கொண்டிருக்கும் குண்டலினி சக்திதான் சூட்சம சக்தி. பாம்பாக உருக்கொண்டு நம் மூலதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும். அதனை சரியான பயிற்சி மூலம் ஆக்ஞா சக்தியாக கொண்டு வருகையில் புத்தி கூர்மையை அளிக்கும். பெரும்பால மனிதர்கள் ஆக்ஞா சக்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், சித்தர்களும் முனிவர்களும் குண்டலினியை இயக்கி சகஸ்ராரம் என்னும் உச்சநிலை அடைந்து ஞானநிலையை அடைகின்றனர். இதனை அடைவது ஒன்றும் சாதாரண விசயம் அல்லவே, பொறுமையும் சூட்சமும் அறிந்திருக்க வேண்டும் என்பதையும் செந்தூரன் அறிந்தே இருந்தான்.

இனி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தனக்குள் திட்டமிட்டவன், அங்குள்ள பாறையில் அமர்ந்து ஈசனை வழிபட துவங்கினான்.

“ஊனாவன் உயிரானவன்,

உடலானவன் நம் உலகானவன்

எண்ணானவன் எழுத்தானவன்,

என்னுள் எல்லாமும் அவனானவன்

புல்லானவன் பூடானவன்,

பூமிதனில் பெரும் புயலானவன்

அண்டமும் பேரண்டமும்

அனைத்தும் அவனுள் அடக்கம்

ஆதியே சிவசக்தியே

அருள் புரிவாய் எனக்கும்.

சிவாய நம! நமசிவாய!

ஆதியே சிவசக்தியே

அருள் புரிவாய் எனக்கும்.

ஓம்! ஓம்! ஓம்!”

மனமுருகி பாடியவன் தியான நிலையில் அமர்ந்துவிட்டான். அதன்பின் அவ்விடத்தையே பேரமைதி ஆட்கொண்டது.

தன் உதரத்தில் இருந்து உயிர்கள் குருதியாய் வழிந்ததை கண்டு கதறினாள் மஞ்சரி. எத்தனை எத்தனை ஆசையாய் காதல் செய்து மணி வயிற்றில் உதித்த தருணம் பேருவகை கொண்டாளோ, தற்போது காதல் கொண்ட கணவனின் வாயாலேயே இந்த உயிர்கள் அழிந்துவிட்டதை எண்ணி ஆங்காரம் கொண்டாள். நீலா அவளை அடக்கும் வழியறியாது தவிக்க, யட்சினி கமண்டல நீரோடு அங்கு வந்து சேர்ந்தாள். கோதைக்கு கமண்டல நீரை சிறிது அளித்தவள், மஞ்சரியை சமன்செய்ய முற்பட்டாள்.

“மஞ்சரி, நீ இருக்கும் நிலையும் படும் வேதனையும் என்னால் உணர முடிகிறது. ஆனால், இவையனைத்தும் செந்தூரனின் சுயநினைவால் உருவானது அல்ல என்பதை நீ உணர வேண்டும். நான் என்ன சொல்ல வருகிறேனென்றால்…”

“போதும் நிறுத்து! இனியொருமுறை அந்த நயவஞ்சகனின் பெயரை உச்சரித்தால் நான் என்ன செய்வேன் என்றே தெரியாது. காதல் கொண்டு களித்து, கந்தர்வ மணம் புரிந்து, ஈருடல் ஒன்றான பின் மாய மந்திரத்தால் என் பிள்ளைகளை கொன்றவனின் பெயர் இனியொருமுறை என் செவிதனில் விழக் கூடாது. வீரத்தை பயன்படுத்தாது மாயத்தை நம்பிய கோழையவன். எம் நாட்டிற்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற சாபமவன். சூல் கொண்ட என் கருவை உணர்ந்த சிறிது நொடிகளில் பிண்டங்களாய் மாற்றிய ராட்சசனவன். என் நெஞ்சம் இரணத்தில் கொதிக்கிறது.

பேராசை என்னும் பேய் பீடித்து, தலைக்கணம் என்னும் ஏவலால் ஆக்கிரமிக்கப்பட்ட அவன் கொடுத்த சாபம் பெரிதனில், இனி இறையும் இறைக்கான வேள்வியும் எதற்கு? எனது காதல் உண்மையென்றால், எனது பதிவிரதம் உண்மையென்றால் இழந்த சூல் மீண்டும் என் உதரம் வந்து சேரட்டும். நான் வணங்கும் ஈசனின் மீது ஆணை, அவனின் முடிவு என் கையில் மட்டுமே!” என்று ஆங்காரக் காளியாக கர்ஜித்தவள், மயங்கி சரிந்தாள்.

அவளின் மணிவயிற்றில் இருந்து வெளியேறிய உதிரம் மெல்ல மெல்ல அவளின் உடலுக்குள் சென்றுக் கொண்டிருந்தது. அங்கு நடப்பதை வெறும் பார்வையாளர்களாக அதிர்ச்சிக் கலந்து பார்த்துக் கொண்டிருந்தனர் யட்சினியும் நீலாவும் உடன் செவ்வேலனும்.

சித்தமுனி தோன்றினார். “யட்சினி, உடனே கமண்டல நீரை மஞ்சரிக்கு புகட்டு.” ஆணைக்கு மறுபேச்சின்றி நீரைப் புகட்டினாள் யட்சினி. மஞ்சரியின் உடலில் சூல் தங்கியது. யாரும் எதிர்பாராவண்ணம் இந்த நிகழ்வை எவராலும் நம்ப இயலவில்லை. ஆம், அவளின் காதல் உண்மையானது.

மயக்கத்தில் இருந்து எழுந்தவளின் முகத்தில் கிஞ்சித்தும் கோபக்கனல் மட்டும் குறையவேயில்லை. பெருமூச்சுகள் அவளிடம். அவளின் அருகே யாராலும் செல்ல முடியவில்லை. யட்சினி, மஞ்சரி, நீலா, செவ்வேலன், கோதை, செங்கொடி, மணிக்கொடி இவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரையும் வேள்வியின் புகை சூழ்ந்தது. யாருக்கும் தெரியாதவாறு ஒரு மாயவலையை உருவாக்கினார் சித்தமுனி.

“மஞ்சரி! வேள்வி எதற்கு என்று உனக்கு தெரியாதா? இனி யாராலும் விதியின் விளையாட்டை மாற்ற இயலாது. இனிவரும் காலங்கள் கடினமான முட்பாதைகளாக அமையும். நாடும் நாட்டு மக்களின் நலனுக்கும் இந்த வேள்வி மிக அவசியம். இங்கு பல ஊடுருவிகள் இருக்கின்றனர். அவர்களை இனம் கண்டு நாட்டை காக்கவே உன் உதரத்தில் மீண்டும் கருவுற்று இருக்கின்றனர் உனது குருத்துக்கள். உன் பிள்ளைகள் இம்மண்ணில் உதிக்கும் வரை எக்காரணத்திற்கொண்டும் நீ கல்வராயன் மலைக்கு செல்லக் கூடாது. அது பேராபத்தை நல்கும். கமண்டல நீரை கவனமாகக் காத்து வாருங்கள். தக்க சமயத்தில் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். ஓம் நமசிவாய!” என்றவர் காற்றோடு காற்றாகினார்.

….

செந்தூரனின் பாடல் கேட்டு வனக்காளி சற்று ஆசுவாசம் அடைந்தாள். ஆனால், அவனின் உடலில் இருந்து வெளிப்பட்ட ஒரு வித வெப்ப சக்தி ஏவலை நிலைக் கொள்ள இயலாமல் தவிக்க செய்தது. அது செந்தூரன் ஆன்மாவின் பிரதிபலிப்பு. ஒரு நொடி, ஒரே ஒரு நொடி ஏவல் பெருங்கூவலோடு செந்தூரனின் உடலை விட்டு வெளியே வர, சட்டென்று தனது உடலை அடைந்து வனக்காட்டிற்குள் நுழைந்தான் செந்தூரன்.

ஒரு பெருத்த பாறையின் அடியில் அமர்ந்தவன், தனது உடலை ஒருமுறை தொட்டுத்தடவிப் பார்த்தான். ஆன்மாவையும் ஏவலையும் ஒருசேர தாங்கியதால் உடல் பெரும் சோர்வடைந்தது. ஆனால், மனதோ தன்னவளுக்குத், தான் அளித்த சாபத்தை எண்ணிக் கலங்கியது. இந்நேரம் அவள் தன்னை எப்படி நினைத்து இருப்பாள் என்பதே பெரும் கலக்கமாய் இருந்தது செந்தூரனிற்கு.

அவனின் உடல்தளர்வாகிக் கொண்டே சென்றது. ஒருபுறம் தன் வரவிற்காக காத்துக்கிடக்கும் வஞ்சன். இன்னொருபுறம் தனது உடலுக்காக கொக்கரிக்கும் ஏவல் சக்தி. தற்போது அவனுக்கு இந்த வனக்காடு ஒன்றே உபாயம் என்று எண்ணியவன் சிறிது நேரம் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். காட்டில் கலைந்தாடிய காற்றும் சற்று நிதானத்திற்கு வந்தது.

சருகுகள் உரசும் சத்தம் கேட்டு மெல்லக் கண் விழித்தான் செந்தூரன். கிட்டத்தட்ட அரை மயக்க நிலைக்கு அவன் சென்றுவிட்டான். அரைக் கண் விழித்தவன் முன் தேவநாகவேடர் குலத்தின் தலைவர் படமெடுத்து நின்றிருந்தார்.

பதினைந்து அடிக்கும் மேல் அவரின் வால் நீண்டு சென்றது. அதனைப் பார்த்தவனிற்கு பயம் ஏதும் எழவில்லை. அதற்கு மாறாக குற்றவுணர்ச்சி தான் எழுந்தது. ஒரு நிமிடம் தனது கவனச்சிதறலால் நடக்கக் கூடாத காரியங்கள் நடந்து விட்டதை எண்ணி மனம் வெம்பி தவித்தது.

“என்னை மன்னித்துவிடுங்கள், உங்களின் சிவன் காப்பு தற்போது என்னிடம் இல்லை. என்னைவிட வஞ்சனுக்குத்தான் அது அதிகம் தேவைப்படும் என்று எண்ணி அவனிடம் கொடுத்துவிட்டேன்.” மூச்சு வாங்கியது செந்தூரனிற்கு. அவனின் இறுதி நொடி வெகு அருகில் இல்லை என்பதை உணர்ந்தான்.

“அனைத்தும் யான் அறிவேன் செந்தூரா. உனது உடலுக்கு அழிவு நெருங்கி விட்டது. உடனே நீ வஞ்சனிடம் செல்ல வேண்டும். உனது சுவடிகள் அனைத்தும் நான் காபந்து செய்துவிட்டேன் என்று சொல்லவே உன்னைத் தேடி வந்தேன். முடிந்தளவு நல்வழியில் செல்ல முயற்சி செய்” என்று சூசகமாக கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.

கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வர, மையிருட்டில் கால் போன பாதையில் செல்லத் தொடங்கினான் செந்தூரன். முழுநிலவின் வெளிச்சம் அவனுக்கு வழிகாட்டிட, நட்சத்திரத்தின் அமைப்பு அவனுக்கு ஒன்றை உணர்த்தியது. யாதெனில், கொங்கு நாடு அழிவை சந்திக்க இருக்கின்றது. தட்டுத்தடுமாறி வனக்காட்டின் மற்றொரு எல்லைக்கு வந்துவிட்டான் செந்தூரன்.

குன்றின்மேல் உடல் முழுக்க நீலம் பாய்ந்து மயக்க நிலையில் இருந்தான் வஞ்சன். நாட்டை ஆண்டு மக்களுக்கு மனமார நன்மை செய்த மாமன்னன், மலைக் குன்றின் மீது மண், புழுதி சேர மாய்ந்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தன்னால் தான் என்ற குற்றவுணர்வு செந்தூரனை மேலும் வாட்டியது. வஞ்சனின் காலில் காளிங்கனின் பற்தடம் பதிந்து இருந்தது. அதிலேயே உணர்ந்துக் கொண்டான், வனக்காட்டிற்கு வந்த பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை. தீராக் கோபம் கனன்றது அவனின் நெஞ்சத்தில்.

வஞ்சனின் தலையை தனது மடியினில் எடுத்து வைத்தான் செந்தூரன். கண்கள் இரண்டும் இரத்த சிவப்பாகக் கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தது. தனது நண்பனின் அருகாமை உணர்ந்தவுடன் மெல்ல கண் விழித்தான் வஞ்சன்.

“செந்தூரா… வந்துவிட்டாயா! யான் அறிவேனடா. எப்படியும் என்னைத் தேடி நீ வருவாயென. அ… அரண்மனை சென்றாயா? கோதை… கோதையிடம் நீர் கொடுத்தாயா?” திக்கித்திணறி வார்த்தைகள் வெளிவந்தன. ஒவ்வொரு நொடியும் உயிர் பிரியும் வலியை வஞ்சனோடு செந்தூரனும் அனுபவித்தான்.

“மகாராணியார் கரு சுமந்து இருக்கிறார் நண்பா.” அந்த ஒற்றை வார்த்தை வஞ்சனுக்கு ஓராயிரம் உணர்வை கொடுத்தது. ஆனால், அதனை வெளிப்படுத்த உடல்தான் ஒத்துழைக்கவில்லை.

“கோ… கோதை… நம் நாட்டிற்கு வாரிசு வரப்போகின்றதா?”

பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்தான் செந்தூரன்.

நெஞ்சம் முழுவதும் மகிழ்ச்சியில் ததும்பியது வஞ்சனிற்கு. தான் இல்லையென்றாலும் மாமன் ஸ்தானத்தில் இனி செந்தூரன் எனது பிள்ளையை வளர்ப்பான் என்ற பேருறுதி உதித்தது. அதனை வாய்மொழியாகவும் கூறிவிட்டான் வஞ்சன்.

“நான் பிழைக்க மாட்டேன் செந்தூரா. நான் இல்லையென்றாலும் தாய்மாமன் என்ற இடத்தில் நீதான் என் பிள்ளைக்கு தாயுமானவனாக இருக்க வேண்டும். உன் மடிதனில் நான் மடிவது எனக்கு எத்தனை பெரிய நிம்மதி தெரியுமா? மறுபிறப்பு ஒன்று உண்டென்றால் என்றும் மறவாத உன் நட்பே எனக்கு காலம் முழுவதும் வேண்டும் என வேண்டுவேன் செந்தூரா” வாயில் இருந்து நுரை தள்ளியது. கருநாகத்தின் நஞ்சால் இத்தனை நேரம் அவன் உயிரோடிருந்ததே பெரிய விடயம் என்பது செந்தூரனுக்கு தெரியும். தன் கண்முன்னே அனைத்தையும் இழப்பது எத்தனை வலி என்பதை நொடிக்கு நொடி உணர்ந்து மடிந்தான் செந்தூரன்.

தான் என்றும் உடன் வைத்திருக்கும் மரகதவாளை செந்தூரனிடம் கொடுத்தவன் அப்படியே தன் கண்களை மெதுவாக மூடத் தொடங்கினான்.

“வஞ்சா, என்னை மன்னித்துவிடு.” என்று கதறியவனின் கண்ணீர் துளி வஞ்சனின் நெற்றிப்பொட்டில் தெறித்து அவனுள் மறைந்தது உடன் வஞ்சனின் உயிரும் மடிந்தது.

“வஞ்சாஆஆஆஆ” காடே அதிரக் கத்தினான் செந்தூரன்.

“கண்முன்னே நான் நேசித்த அனைவரும் என்னை விட்டு பிரிகையில் இனி இழப்பதற்கென்று எனக்கு என்ன இருக்கிறது? இத்தனை நாட்கள் நகமும் சதையுமாய் இருந்துவிட்டு இப்போது நகத்தை மட்டும் வேரோடு பிய்த்து எறிந்ததைப் போல் என்னைவிட்டு போய்விட்டாயே வஞ்சாஆஆ… ஏவல் வசத்தால் மஞ்சரிக்கு சாபம் விடுத்தேன். என் வாயாலேயே என் வம்சம் கலைந்துபோகட்டும் என்றேன். இனி இந்த ஆத்மபலன் என்னிடம் இருந்து என்ன பலன்?

பஞ்சபூதங்கள் சாட்சியாக என்னுடைய ஆத்மபலன் முழுவதையும் வஞ்சனிற்கு அளிக்கிறேன். மீண்டும் ஒரு பிறப்பெடுத்து அவன் கையாலேயே எனது முடிவு தொடங்கட்டும்.”

மீண்டும் அவசரப்பட்டுவிட்டான் செந்தூரன்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்