Loading

சுழலி-20

பொதிய மலை.

கொங்கிளக்கேசர் செந்தூரனின் கட்டுக்குள் இருந்தார். அவரின் மனதில் எப்படியாவது தப்பித்து செல்ல வேண்டும் என்றுதான் இருந்தது. அப்போது அகோரிகள் சொன்னதுதான் நினைவிலாடியது.

‘கேசரே! சிறு பிழை நிகழ்ந்தாலும் செந்தூரன் கை ஓங்கிவிடும். ஆகவே, ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். சித்தமுனியின் கலசநீர் எங்கள் கைகளில் கிடைத்தால் அதன் மூலம் நீங்கள் கொங்கு நாட்டை மட்டுமல்ல, இந்த உலகையே ஆளலாம். அதனை எப்படியாவது கைப்பற்றிடுங்கள். இதில் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில், இன்னுமொரு உபாயத்தை சொல்கிறோம். செந்தூரனின் விதிக்கணக்கின்படி, முழுநிலவு தொடங்கி உச்சமடையும் சமயம் அவனின் புண்ணிய பலன்கள் அவனைவிட்டு சென்றிருக்கும். சிவன்காப்பும் உடனிருக்காது. எப்படியாது அவனை ஒரு நிமிடம் சுயமிழக்க செய்து நாங்கள் சொல்லும் இம்மந்திரத்தை ஓதிடுங்கள். பின், அவனின் உடல் ஏவலின் வசிப்பிடம். அதன்பிறகு யார் நினைத்தாலும் செந்தூரன் நமது கட்டுக்குள்தான். அவன் உடலும் உயிரும் நமக்கு அவசியம். அவனின் கட்டுக்குள் இருக்கும் யட்சிணியும் நம் கைவசம்’

‘அகோரிகள் கூற்றின்படி எப்படியாது அந்த கலசநீரை கைப்பற்றிட வேண்டும். அதற்குமுன் செந்தூரனை நிலைகுலைய செய்ய வேண்டும்’ என்று எண்ணிய கேசர் அதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தான்.

செந்தூரன் “நீலா, உடனடியாக அனைவரும் புறப்படுங்கள். இருட்டுவதற்குள் கோட்டைக்குள் சென்றிருக்க வேண்டும். பயணம் தயாராகட்டும். காளிங்கா, நீ கல்வராயன் மலைக்கு வஞ்சனுக்கு துணையாகச் செல். மன்னரை எந்த ஆபத்தும் நெருங்காமல் பார்த்துக் கொள்” என்று வேலைகளை முடுக்கிவிட்டவன், இதன்பின் சமாளித்துவிடலாம் என்றே எண்ணியிருந்தான்.

மனிதனின் மனக்கணக்கு அனைத்தும் நிறைவேறிவிடுமா என்ன?

அனைவரும் புறப்பட தயாராக, முழுநிலவு நேரம் துவங்க ஆரம்பித்தது. அந்நாள்படி மதியத்திலிருந்து முழுநிலவு நேரம் என்று முன்னரே அகோரிகள் கேசருக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அந்த சமயம் வந்ததும்தான் செந்தூரன் பலமிழப்பான். விதியின் விளையாட்டு ஆரம்பம் ஆகியது. நீலாவால் ஏவல் சக்திகளை இனம்காண இயலவில்லை. அவள் ஒரு கட்டுக்குள் இருந்தாள். ஆகவே, கமண்டல நீரை வைத்திருக்கும் செந்தூரனை பல அருவங்கள் சுற்றி வந்தன. சிவன் காப்பு இல்லாததும், தன்னுடைய புண்ணிய பலன்களை அவன் மக்களுக்காக தாரை வார்த்ததும் அருவங்களை அவன் காண இயலா சூழ்நிலையை உருவாக்கியிருந்தன. இதில், சித்தமுனியின் பேச்சைமீறி நீரை கேசருக்கு கொடுத்தது பெரிய இன்னல்களுக்கு வழிவகுத்து இருக்கிறது. அதற்கு நாமே காரணகர்த்தாவாக இருக்கப் போகிறோம் என்று அறியாது பயணத்தை தொடர்ந்தான் செந்தூரன்.

முழுநிலவு தொடங்கியது. “செந்தூரா! என்னை அடைத்துவிட்டால் எல்லாம் நின்றுவிடும் என்று நினைத்தாயா? உன்னைப்போல் திட்டமிடாமல் நான் காரியத்தில் இறங்கமாட்டேனடா. சிறுபிள்ளைப்போல் இருக்கும் ஒரு நாகவசியக்காப்பை வைத்துக்கொண்டு ஆட்டம் ஆடாதே. நீ கோட்டைக்குள் செல்லும்முன் அங்கு செம்பியன் அரியணை ஏறியிருப்பான் செந்தூரா” என்று இடிஇடியென நகைத்தான் கடுங்கோ கொங்கிளக்கேசர்.

இதனைக் கேட்டதும் ஒரு நிமிடம் செந்தூரன் சுயமிழந்துதான் போனான். அதற்குள் கேசர் மந்திரத்தை மனத்திற்குள் சொல்ல, ஒரு ஏவல் செந்தூரனின் தலைமேல் சுற்றியது. செந்தூரனின் கண் மட்டும் ஒருநொடி மேலே பார்த்துவிட்டால் அந்த ஏவல் அவனின் உடலுக்குள் புகுந்துவிடும்.

ஒரு நிமிடம் தடுமாறிய செந்தூரன் சட்டென்று சுதாரித்துக்கொண்டவன், கேசரின் கழுத்தை பிடித்து, “அடேய், கிழட்டு நரியே! அரியணை என்பது அவ்வளவு எளிதான இருக்கையென்று நினைத்தாயோ! என் தந்தையை சூழ்ச்சியால் கொன்ற குள்ளநரிக் கூட்டமே. என் கண்முன்னே களிற்றிற்கு நெடியேற்படுத்தும் மூலிகையைக் கொடுத்து என் தாய் மிதிப்பட்டு இறப்பதை காண வைத்த நயவஞ்சக நாய்களே, எப்போதடா இவன் மாய்வான், நாட்டை ஆளலாம் என்று கள்ளர் கூட்டத்தை ஏவிவிட்டு மக்களின் வயிற்றில் அடித்த மாபாவிகளே! நீங்கள் என்ன செய்திருந்தாலும் அங்கு என்னவள் அதை முறியடித்திருப்பாள். தீதும் நன்றும் பிறரால் வராது. அவரவர் செயலுக்கு அவரவர் கூலி பெறுவார். இனி நீ செய்த செயலுக்கு என் மகனின் காலால் மிதிப்பட்டு மீளாமரணம் எய்துவாயடா.” என்று ஆடித்தீர்த்தான்.

அவனின் பிடியால் கழுத்து நரம்புகள் இறுக, மந்திரம் முழுமையடையாமல் நிற்கிறது. ஏவலாலும் செந்தூரனின் உடலுக்குள் இறங்க முடியவில்லை. அது மேலேயே அவனை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அதனோடு இன்னும் பல அருவங்கள் கமண்டல நீரை களவாட கண்ணி வைத்து காத்துக்கிடக்கின்றன.

நாம் சற்று கொங்கு நாட்டு நிலவரத்தைப் பார்த்துவிட்டு வரலாம்.

….

அரண்மனை

நள்ளிரவு நேரத்தில் கூட கொங்கு நாடு ஒளிவீசிக் கொண்டிருந்தது. எங்கும் மந்திர உச்சாடானங்கள். வேள்விகள் துவங்க இருக்கின்றன. மஞ்சரி ஆலயப்பணிகளில் இருக்க, யட்சிணியோ செவ்வேலன் சொன்னதை மனத்தில் உருப்போட்டுக் கொண்டிருந்தாள்.

‘சித்தமுனியின் கமண்டல நீரை வேள்வி முடித்து பருகினால், அவரால் பெற்ற சாபத்திற்கு விமோச்சனம் கிடைக்கும்’ இது ஒன்றே அவளின் மனத்தில் தற்போது ஓடிக்கொண்டிருந்தது.

‘நிச்சயமாக, கமண்டல நீர் செந்தூரன்தான் அவன்வசம் வைத்திருப்பான். அங்கு என்ன நிலவரம் என்று தெரியவில்லை. நீலாவும் அந்த நீருக்காகத்தான் சென்றிருக்க வேண்டும். கேசர் உயிரோடு இருக்கிறார் என்றால், காளிங்கனும் உடனிணைந்து ஏதோ சதி செய்கிறான். வேள்வி நேரம் என்னால் ஆலயத்திற்குள் செல்ல இயலாது. இந்நேரம் செவ்வேலன் அவனின் மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருப்பான். அனைத்தும் நல்விதமாக முடிந்ததும், செந்தூரனிடமிருந்து கமண்டல நீரை பெற வேண்டும். என்னப்பனே! உன் விளையாட்டில் என்னையும் ஒரு பாவையாக மாற்றிவிட்டாய். பொதியில் நடப்பதை தற்போது என்னால் உணரவும் இயலவில்லை. எதுவானாலும் செந்தூரனுக்கு துணையாக இருங்கள்’ அவனுக்காக வேண்டியவள், அரண்மனையை கண்காணிக்க பறந்தாள்.

அரண்மனைக்கு வெளியே காற்றோடு காற்றாக மிதந்து ஒவ்வொரு அறையாக நோட்டமிட்டவாறு சென்றுக் கொண்டிருந்தாள் யட்சினி. பெரும்பாலான அறைகளில் யாரும் இல்லை. காவல் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

முதன்மையமைச்சர் அறையில் விளக்கின் வெளிச்சம் அதிகமாக இருந்ததைக் கவனித்தவள் அவ்விடம் சென்றாள். ‘இவர் வேள்விக்கு செல்லாமல் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறார்?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.

காற்றாக அந்த அறைக்குள் நுழைந்தவள், மறைவிடத்தில் தன்னை மறைத்துக் கொண்டாள்.

முதன்மையமைச்சர் கோபமாக உள்ளே வர, செம்பியனும் இன்னும் சில சிற்றரசர்களும் பின்னோடே வந்தனர்.

“அமைச்சரே!” செம்பியன் ஆரம்பிக்கும் முன்னரே, முதன்மையமைச்சர் மாரிவெண்கோ வார்த்தைகளை கடித்துத் துப்பினார்.

“ஏதும் பேசாதே செம்பியா? செய்யும் ஒரு காரியமாவது சரியாக செய்கிறாயா? உன்னிடம் கொடுத்த வேலை என்ன? எப்படி மஞ்சரியின் செவிக்கு திட்டம் தெரியவந்தது. கேசராவது செந்தூரனை கைது செய்து அழைத்து வருவாரா? அல்ல?” கேள்வியாய் செம்பியனை நோக்கினார்.

“நிச்சயம் தந்தை செந்தூரனை கைது செய்து அழைத்து வருவார் அமைச்சரே! வஞ்சன்?”

“வஞ்சனைக் கொல்ல கல்வராயன் மலைக்கு ஆட்களை அனுப்பியுள்ளேன். நாளை அவனின் உடல்தான் கொங்கு நாட்டை வந்தடையும். ஆள ஆளில்லாத இந்த சேர நாடு முழுவதும் இனி நம் கைவசம்.” இடிஇடியென சிரித்தான் மாரிவெண்கோ.

‘ஆக, கள்ளர்கள் துணையாடு பொருட்கள் சூறையாடப்படவில்லை, இந்த துரோகிகள்தான் அதனை நிகழ்த்தியுள்ளனர். பிறந்த பொன்னாட்டை சூறையாடுவது, தாயின் கருவறையை கலைப்பதற்கு சமானாம் என்பதை மறந்து துரோகம் இழைத்துள்ளனர். நிச்சயம் இது செந்தூரனிற்கு தெரிந்திருக்கும். இப்போது நான் என்ன செய்வது? வேள்வி நிகழ்வதால் என்னால் அரண்மனையை விட்டு எங்கும் செல்ல இயலாது. என் மந்திரங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நீடிக்காது. வேறு எந்த உருவத்தையும் என்னால் தற்சமயம் எடுக்க இயலாது. இவர்களின் முகத்திரையை கிழித்தால்தான் மஞ்சரிக்கு உண்மை புரிபடும். கடவுளே, ஏதேனும் வழியைக் காட்டு’ மனத்திற்குள் மருகிக்கொண்டிருந்தாள் யட்சினி.

யட்சினி என்ன செய்து நடக்கவிருக்கும் விபரீதத்தை தடுக்கப் போகிறாள்?

….

கல்வராயன் மலை.

வஞ்சன் இன்னும் சிறிது நேரத்தில் கல்வராயன் மலை உச்சியை அடைந்து விடுவான். அங்கிருந்து நிமிட தூரத்தில் வனக்காடு வந்துவிடும். வனக்காட்டில் தான் சித்தமுனி சொன்ன இடம் இருக்கிறது.

‘இறைவா! எப்படியோ கல்வராயன் மலைக்கு வந்துவிட்டேன். இன்னும் சற்று நேரத்தில் வனக்காட்டை அடைந்து விடலாம். இந்நேரம் செந்தூரன் அரண்மனைக்கு சென்றிருப்பானா? இல்லை, வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்குமா? காளிங்கன் படைகள் எதற்கு நம்மை சுற்றி வளைக்க வேண்டும்? விரைந்து சித்தர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து எப்படியாவது மக்களை நாடி அரண்மனைக்கு சேதி அனுப்பிட வேண்டும்’ என்று எண்ணியவன் பரிதியை விரைவாக செலுத்தினான்.

அப்போது வஞ்சன் அணிந்திருந்த சிவன்காப்பு பிரகாசமாக ஒளிர்ந்தது. ஒளியின் திசையை கவனிக்க, பெரிய கருநாகம் ஒன்று அவனை பின்தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பதை கண்டான்.

“செந்தூரன் சொன்னதுபோல் ஆபத்தை இது நமக்கு உணர்த்தி விட்டது. சிவப்பா! விரைந்து செல். ம்ம்” என்று குதிரையின் பிடியில் அழுத்தம் கொடுத்திட, சீறிப்பாய்ந்தது அவனின் சிவப்பன்.

அதனின் வேகத்திற்கு ஈடுகொடுத்தது போல் காளிங்கனும் வேகமாக ஊர்ந்து சென்றான். சிவனின் காப்பு மீண்டும் ஒளிர்ந்திட, வஞ்சனின் கண்களுக்கு காளிங்கனின் உருவம் தெளிவாக தெரிந்தது.

‘காளிங்கனா? அவன் எப்படி கருநாகமாக? இவனால் செந்தூரனிற்கு ஏதேனும் நிகழ்ந்து இருக்குமோ? கடவுளே! ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது. செந்தூரனிற்கு பதில் என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் என் தங்கையோடு வாழ வேண்டும்.’ எந்த நேரம் வஞ்சன் வேண்டினானோ, உண்மையில் அவன் உயிர்தான் போகப்போகிறது என்பதை அறிய மறந்து போனான்.

இன்னும் சற்றுத் தொலைவில் வனக்காடு வந்துவிடும். குதிரை விரைந்து செல்ல, நடுவில் தடுக்கிய பெரிய கல்லால் குதிரை தடுமாறி விழுந்தது. வஞ்சன் தவறி விழுந்து வனக்காட்டிற்குள் புகுந்தான்.

வனக்காடு, வனதேவதை ஆட்சி செய்யும் இந்த வனத்தில் எந்த மாயமந்திர சக்திகளுக்கும் இடமில்லை. இயற்கை ஒன்றே தெய்வம். இறையே இயற்கை. இதுவரை இங்கு ஒரு துளி இரத்தம்கூட சிந்தாது இந்த வனத்தை காத்து வருகிறாள் வனதேவதை. அங்குள்ள மக்களும் வேடுவத்தலைவன் முருகனை வணங்கி உயிர்வதை செய்யாது வாழ்ந்து வருகின்றனர். முக்கிய குறிப்பு, தேவநாகவேடர் குலமும் இங்குதான் வசித்து வருகிறார்கள்.

‘அந்தோ, வஞ்சனிற்கு என்னவாயிற்று?’ என்று எண்ணியபடியே காளிங்கன் வனக்காட்டிற்குள் நுழைகிறான். இதுவரை செந்தூரனின் நாகவசியக் காப்பிற்கு கட்டுப்பட்டு இருந்தவனின் எண்ணங்கள் சிதறியது. மனித உருவும் அவனால் எடுக்க இயலாது. நாகமாக இருந்தாலும், காளிங்கனின் எண்ணவலைகள் தற்போது சரியாக அவனின் எண்ணங்களை பிரதிபலித்தன.

‘நான், எப்படி இங்கே?’ என்று ஒருநிமிடம் தடுமாறியவன், “அடேய் வஞ்சா! சிக்கினாயா? உன் முடிவு என் கையில் என்பதுதான் விதி. இனி நீ நாடு திரும்பிட இயலாது. ஆட்சியும் அரசும் இனி எங்கள் கையில்.” என்று கொக்கரித்தவன், விரைந்து சென்று வஞ்சனை தீண்டினான். வஞ்சனின் ஒரு துளி இரத்தம் வனக்காட்டில் சிந்தி சிதறியது.

….

வஞ்சனின் ஒரு துளி இரத்தம் வனக்காட்டில் சிதறிட, கொதித்தெழுந்தாள் வனதேவதை.

மரங்கள் வேரோடு பெயர்ந்து விழும் அளவிற்கு காற்று ஆங்காரமாக வீசியது.

அமைதியின் சொரூபமாய் திகழ்ந்த வனதேவதை உக்கிரகாளியாக காட்டையே உலுக்கி எடுத்தாள். மண்துகளும் சூறாவளியாய் மாறிட, கருவிழிகள் முழுதும் ஆக்கிரமித்து தோன்றினாள் வனக்காளியானவள்.

வஞ்சன் தனது இறுதி நொடிகளில் இருக்க, காளிங்கனோ அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றான்.

அவனின் அருகில் சூடான மூச்சுக்காற்று வீசிட, அதன் வெப்பம் தாளாது சுருண்டான் காளிங்கன் என்னும் கருநாகம்.

“இயற்கையே இறை என்றுக் கொண்டு, இயற்கையோடு இணைந்து இயைந்து வாழ்ந்துவரும் இந்த வனக்காட்டில் வேட்டைக்கு என்று கூட இதுவரை எந்த உயிர்களின் உதிரமும் சிந்தியது இல்லை. ஆனால், இப்போது ம்ம்ம்ம்…. ஆர்ர்ர்… மக்களின் நலன்கருதி அவர்களின் நலம் காக்க வந்த மாசற்ற மனிதனின் செங்குருதியை, தீய எண்ணம் கொண்ட நீ, தீண்டி மாபெரும் தவறிழைத்துவிட்டாய். ம்ம்ம்… காளிங்கா, இந்த வனத்தின் புனிதத்தை குழைத்துவிட்டாய். ஆஆஆஆ….”

“எந்த சாபத்திலிருந்து விமோச்சனம் பெற்று, உன் துணையோடு கூட நினைத்தாயோ, அது இனி வெறும் நினைவாகவே போகட்டும். காளிங்கா! இனி உன்னால் மனித உருவே எடுக்கவியலாது என்று சாபமளிக்கிறேன். இந்த நிமிடம் முதல், வனக்காட்டின் எல்லைக்குள் தீய எண்ணங்களோடு எவரும் நுழைய முடியாது. பின்வரும் காலத்தில் நின் காரியத்தை சாதித்திட என் எல்லைக்குள் வர நேரிடும். அந்த நொடி என் எல்லையில் கால் வைக்கும் அந்நொடி உன் தலை வெடித்து சிதறிடும் என்றும் சாபமளிக்கிறேன்.” சாபம் பெற்ற நொடி காளிங்கனால் வனக்காட்டில் இருக்க முடியவில்லை.

வனக்காளியின் சக்தியால் வனக்காட்டிலிருந்து தூக்கியெறியப்பட்டான்.

இன்னும் காற்றின் ஆங்காரம் குறையவில்லை. வஞ்சன் தன்னுடைய கடைசி நிமிடங்களில் இருந்தான்.

காளிங்கன் என்னதான் மனிதனாய் பிறந்து நாகமாய் மாறியவனானாலும் அவன் மாறிய நொடி தேவநாகவேடர் குலத்தின் சக்திகளையும் நாகத்திற்கே உரிய நஞ்சையும் பெற்றேயிருந்தான். ஆகவே, அவன் தீண்டிய கணமே கருநாகத்தின் நஞ்சு வஞ்சனின் உதிரத்தில் கலந்துவிட்டது.

உடல் நீலமாய் மாறிக்கொண்டிருந்தது.

அவனின் நிலைக்கண்ட காளியும் தன் உக்கிரத்தைக் குறைத்தாள். காளியே ஆனாலும் தாய்மை நெஞ்சம் கொண்ட அன்னைத் தெய்வமவள். வனத்தில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும் தாயாய் விளங்கும் சக்தி ரூபணி, வஞ்சனை சேயாய் தாங்கினாள்.

“கவலைக்கொள்ளாதே வஞ்சா! உன் புண்ணிய பலனால் இப்போது உன் உயிர் பிரியும் நேரம் இதுவல்ல.” என்றவள் அவனின் தலையைக் கோதிவிட, இத்தனை நேரம் ஆர்ப்பாட்டமாய் துடித்த அவனின் இதயம் அமைதியடைந்தது. அலைபாய்ந்த அவனின் கருவிழிகள் மெதுவாய் மூடின.

பிறந்து ஐந்தே நாளான ஒரு சிம்ம யாளி நஞ்சு முறிவு மூலிகையை எடுத்துக் கொண்டு வந்தது. கருவுற்றிருந்த மலைப்பாம்பு வனதேவதையின் தூதிற்காக வரவைக்கப்பட்டது.

“உன் விதி முடிய இன்னும் நேரமிருக்கிறது மகனே! கரம் பிடித்தும் சுகம் காணாது நாட்டு மக்களின் நிலையே முக்கியம் என்று இத்தனை தூரம் நீ துடித்துக் கொண்டிருக்கிறாய். கவலைக் கொள்ளாதே! உன் பணிகளை தன் பணிகளாய் மாற்றிட வருவான் உன் ஆருயிர் தோழன். அவனே உன் இறுதி நொடிக்கும் வழியாய் அமைவான். உன் மனைவி கருவுற்று இருக்கிறாள். உன் மகனே பிற்காலத்தில் உன்னை வழிநடத்தி இங்கு அழைத்து வருவான்.” என்று பேசிக்கொண்டே சிம்ம யாளி கொணர்ந்து வந்த நஞ்சு முறிவை வஞ்சனுக்கு உட்செலுத்தினான். ஆனாலும், நேரம் கடந்தமையால் முறிவு வேலை செய்யவில்லை. அதனை அறிந்த வனதேவதையோ துடித்துப் போனாள்.

“மலைவாணியே! உடனே தேவனாகவேடர் குலத்தலைவனிடம் நிகழ்ந்தவைகளை கூறி அழைத்து வா… என்றவள், அந்தோ, வேலவா! என் பூமிதனில் இதுவரை எந்த உயிரையும் நான் மடிய விட்டது இல்லையே! புண்ணியபலன்கள் இருந்தும் இவனின் உயிரை காப்பாற்ற முடியா பாவியாகி போனேனே. இன்னும் இவனின் விதி முடியவில்லை. பிறகு ஏன், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பதில் கூறுங்கள் இறைவா!” வனதேவதையின் ஆங்காரக் கதறல் காட்டையே அதிர வைத்தது.

பஞ்சபூதங்களின் வசத்தையும் தன்னுள்ளே கொண்டிருந்தாலும் தவமிருக்க இவ்வனக்காட்டிற்கு வந்த சாதாரண மனிதிதான் இந்த வனதேவதை. இயற்கையின் அருளால் இங்கேயே ஜீவசமாதி அடைந்தவள், இதுவரை எந்த உயிரையும் அவளிருப்பிடத்தில் நீங்கவிட்டதில்லை. ஆனால், தற்போது அவளின் கையறுநிலையை என்னவென்று உரைப்பாள் பாவையவள்.

அப்போதுதான் ஒரு அசீரிரி ஒலித்தது. “உயிருள்ள ஒவ்வொரு பிறப்பும், மரணம் எய்தும் நிலை வரத்தான் செய்யும். அனைத்து உயிர்களின்மீதும் அன்பை கருணையின் தாயாய் அரவணைக்கும் நீ அறியாதது ஒன்றுமில்லை. வஞ்சன் உயிர் இங்கு பிரியாது. அவனை வனக்காட்டின் எல்லையை ஒட்டிய குன்றிற்கு அருகில் அழைத்து செல். செல்வங்கள் மக்களிடம் சேர்ப்பிக்கவும், இவனின் கடைசி நிமிடத்தை சாந்தமாக்கவும் அவன் வருவான். அதுவரை இவனின் உயிர் பிரியாது. என்னிடம் நீ பெற்ற வரத்தின்படி இனி எந்த உதிரமும் வனக்காட்டில் உதிராது. தூய்மையின் மறு இடமாய் இந்த வனக்காடு விளங்கட்டும்” என்றது.

கண்ணீர்மல்க கைதொழுதவள், வனக்காட்டின் எல்லை குன்றில் படுக்க வைத்தாள் வஞ்சனை. அப்போது அவன்வசம் இருந்த சிவன்காப்பு கழன்று அங்கிருந்த ஓடைநீரோடு மறைந்தும் போனது.

….

மாரிவெண்கோ ஏவிய படைகள் பொதிய மலைக்கும் கல்வராயன் மலைக்கும் செல்ல ஆயுத்தமாகிக் கொண்டிருந்தது. அவர்களின் பயணத்தை தாமதம் செய்ய, யட்சினி மலைவாசி மற்றும் வனவாசி மக்கள்களின் பிம்பத்தை உண்டாக்கினாள். ஒரு ஐநூறு சனங்கள் ஒட்டுமொத்தமாய் அரண்மனை வாயிலை மறைத்தபடி நின்றனர்.

அவர்களை வழிமறித்த வாயிற்காவலர்கள், “யாரப்பா நீங்கள்? இந்த நேரத்தில் இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்.?”

“இன்னும் சிறிது நேரத்தில் முழுநிலவு உச்சம் அடைந்துவிடும். அதற்குள் விரைந்து வீரர்கள் பயணம் செய்ய வேண்டும் என்பது முதன்மையமைச்சரின் உத்தரவு. இப்போது இத்தனை மக்கள் வந்திருப்பதன் நோக்கம் என்னவோ?” இரு வீரர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, ஒயிலாய், நளினமாய் அந்த கூட்டத்தை விலக்கி தன் மேனி பளபளப்பில் பார்ப்பவர்களை மயக்கியவண்ணம் வந்து நின்றாள் யட்சினி.

“கும்புடுறேனுங்க ஐயா! மஞ்சரியம்மா சேதி அனுப்பியிருந்தாங்க. ஊரு எல்ல முழுக்க காவச்சாமிங்கள ஆவகானம் செஞ்சிப்புட்டோமுங்க. அத சொல்லிப்போட்டு ராவுக்கு ஆரம்பிக்குற ஆலய பூசைல கலந்துக்குலாமுன்னு மலவாசி சனங்களும் வனவாசி சனங்களும் வந்துருக்கோமுங்க ஐயா! என்னங்க ஐயா சரிதானுங்களே” என்று அவளின் கொஞ்சும் கொங்கு தமிழை வீரர்கள் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருக்க, மலைவாசி மற்றும் வனவாசி மக்களின் தலைவர்கள் இருவரும் முன்னே வந்து நின்று தலையை அசைத்தனர்.

அவளின் அழகில் மயங்கியவர்கள், ஏதும் பேசாது உள்ளே செல்ல அனுமதியளிக்க, மண்டபத்து வீரர்கள் அவர்களை அங்கே தங்க வைத்தனர். அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள் யட்சினி. இன்னும் சிறிது நேரம் அனைவரையும் சமாளிக்கலாம். முழுநிலவு உச்சம் அடையும்வேளை வேள்வியின் தாக்கம் அதிகரிக்கும். அப்போது மந்திரங்களின் எதிரொலி அவளை நிலையாக இருக்கவிடாது. அதற்குள் செந்தூரன் இங்கு வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

….

ஆலயத்தில், வேள்விக்கான ஏற்பாடுகள் துவங்கிட செவ்வேலன் அவனின் மனைவிகளோடு அங்கு வந்தான்.

மஞ்சரியை வணங்கியவன், “பணிவான வணக்கங்கள் தேவி. இவர்கள் இருவரும் என் மனைவிகள். இவள் செங்கொடி, இவள் மணிக்கொடி. செங்கொடி தற்போது கருவைத்தாங்கி இருக்கிறாள் தேவி.”

“அடடே! நல்ல சேதி செவ்வேலன் அவர்களே! மூவருமாய் வேள்வியில் அமர்ந்து வேள்வியை துவக்கி வையுங்கள்” என்றாள்.

ஒருகணம் சிலையாகிப் போனான் செவ்வேலன். “தேவி, நான் எப்படி?” அவன் தடுமாற,

“செவ்வேலன் அவர்களே! எது நடந்தாலும் நீலா என் தோழியல்லவா! அவளின் சகோதரன் எனக்கும் சகோதரன் அல்லவா? இச்சமயத்தில் என்னாலும் அரசியாராலும் எங்களின் துணைவர்கள் இல்லாமல் வேள்வியில் அமர இயலாது. என்னைப் பொறுத்தவரை நம் நாட்டின் நலனை கருத்தில்கொண்டு நம்பும் மனிதராய் என் கண்முன்னே இருக்கும் ஒரே நபர் நீங்கள் ஒருவரே. சகோதரியாய் தங்களிடம் வேண்டுகிறேன், நாட்டின் நிலைக்காகவும் நலனிற்காகவும் மூவரும் இணைந்து வேள்வியைத் துவக்கி வையுங்கள்” என்றாள் மஞ்சரிதேவி.

செவ்வேலனையும் சேர்த்து, மற்ற அனைவரின் முகத்திலும் பெரும் அதிர்ச்சி. பல சிற்றரசர்கள் இருக்கையில், ஒரு வீரனை, சேடிப்பெண்ணின் சகோதரனை எப்படி தம்பதிசமேதராய் வேள்வியில் நிறுத்தலாம்? என்ற கேள்வி எழாமல் இல்லை.

“இந்த வேள்வி மற்றும் குடமுழுக்கிற்கான பணியின் பொறுப்பை மன்னர் என்னிடம் ஒப்படைத்துள்ளார். ஆகவே, முடிவெடுக்கும் உரிமையும் என்னிடம் உள்ளது என்று எண்ணுகிறேன். செவ்வேலன் அவர்கள் சாதாரண வீரர் மட்டுமல்ல, என் மெய்க்காப்பளரும் கூட. எனவே, இந்த வேள்வியை அவரே துவக்கி வைக்க வேண்டும் என்பதில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து உண்டோ?” மங்கையவளின் கேள்விக்கு யாருக்கும் பதில் கூற துணிவு எழவில்லை.

செவ்வேலன் தன் இரு மனைவிகளோடு அமர்ந்து வேள்வியை தொடங்கினான்.

தன்னிடம் பெரிய பொறுப்பு ஒப்படைத்துள்ளதாக அவனின் மனம் புளாங்காகிதம் கொண்டது.

வேள்விகள் துவங்க, மங்கல வாத்தியங்களின் சப்தங்கள் விண்ணைப் பிளந்தது.

ஒவ்வொரு முறை ஒலிக்கும் பறைச்சத்தம் காதை கிழிக்க, எல்லைக் காவல் தெய்வங்கள் உக்கிரமெடுத்து சிலிர்த்து நின்றன.

பெரிய மீசையும், கையில் வீற்றிருக்கும் வானுயர்ந்த வீச்சருவாளும் எதிரிகளை காவு வாங்க காத்திருப்பது போல்தான் தோன்றியது.

இனி எல்லாம் அவனின் செயல் என ஈசனை நோக்கி வணங்கினாள் செந்தூரனின் மஞ்சரி தேவி.

….

பொதிய மலைச்சரிவிலிருந்து வந்துக் கொண்டிருந்தனர் செந்தூரனும் நீலாவும் உடன் சிறையிலடைப்பட்ட கேசரும். மிச்சமிருந்த வீரர்கள் என்னவானார்கள் என்பது பற்றி செந்தூரனிற்கு கவலை இல்லை. கமண்டல நீரோடு எப்படியாவது அரண்மனைக்கு சென்றிட வேண்டும் என்பது மட்டுமே அவனின் எண்ணமாக இருந்தது.

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. இன்னும் சற்று நேரத்தில் மழை வரவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த நீலா அதனை செந்தூரனிடம் சொன்னாள்.

“இன்னும் சற்று நேரத்தில் மாரி பெய்யும். விரைந்து அரண்மனை செல்ல வேண்டும்”

அவனும் அதை அறிந்தே இருந்தான். வானம் இருட்டும் சமயம் மனத்தின் உந்துலால் தாமாகவே தலை வானை நோக்கும். நோக்கிவிட்டான் செந்தூரன்.

காத்திருந்த ஏவல், சமயத்தை பயன்படுத்திக்கொண்டு அவனின் விழி வழியாக வலியோடு மெய்யை அடைந்தது.

செந்தூரனின் ஆன்மா ஆட்டம் கண்டது இங்கே!

கேசரின் கண்களில் வெறியே மிஞ்சியிருந்தது. “செந்தூரா! இனி நீ உன் கட்டுப்பாட்டை இழப்பாய். கமண்டல நீரை என்னிடம் கொடு” ஒரு செவி அவனின் சொல்லை ஏற்க, மறு செவியோ அதனை மறுத்தது. ஒரு கை நீரை கொடுக்க முனைய, மறுகை அவனை தடுத்தது. தன் கையே தன் கண்ணை குத்தும் என்பதற்கு ஏற்ப அவனின் புலன்கள் அடங்கியும் அடங்க மறுத்தும் போராடிக் கொண்டிருந்தது.

இதனையெல்லாம் கண்ணுற பார்த்த நீலா, பாய்ந்து சென்று செந்தூரனின் உடலை இறுக்கினாள். அவளின் இறுக்கத்தால் செந்தூரனின் ஆன்மாவும் ஏவலும் மாறி மாறி கூவலுற்று வலியல் தவித்தன. கிடைத்த சந்தர்ப்பத்தை வீணாக்க தவறவில்லை செந்தூரன்.

“நீலா! அரண்மனை செல்லும் வரை, என் உடலிலும் மனத்திலும் எந்த மாற்றமும் நிகழக் கூடாது. ஏவல் என்னை ஆக்கிரமித்திட விடாதே. உடனே கேசரை கொன்றுவிடு. விரைந்து என்னை அரண்மனைக்கு அழைத்து செல்” என்று உத்தரவிட்டான்.

செந்தூரனின் உடல் இரு சக்திகளை தாங்க முடியாமல் அவதியுற்றது. அவனின் சொல்லுக்கேற்ப, கேசரை தீண்டிக் கொன்றாள் நீலா. மனித உருவெடுத்து புரவியில் அமர்ந்தவள், வேகம் கொண்டு அரண்மனை நோக்கி விரைந்தாள் புயலாக.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்