
அத்தியாயம் – 6
நித்யா தான் கூற வேண்டியதை கூறிவிட்டு, ரிஷியை நிமிர்ந்து பார்த்தாள் தயக்கமாக, அவனோ மிகவும் சாதாரணமாக நின்றான், அதிர்வான், கோபப்படுவான், சண்டையிடுவான் என்று எதிர்பார்த்தவளுக்கு அவனது இந்த சாதாரணமான தோற்றம் எதுவும் பெரிதாக பண்ண போகிறானா என்று வயிற்றில் புளியை கரைத்தது,…
அதுவும் சில கணம் தான்,… “அவ்வளவு தானா? சொல்லி முடிச்சிட்டியா” என்கவும் அவனை மேலும் கீழும் பார்த்தவள்,… ‘நான் சரியா தான் சொன்னேனா? இல்ல இவருக்கு தான் தவறா எதுவும் விழுந்து விட்டதா’ என்ற சந்தேகத்தில்,… “நான் சொன்னது” என்று தயங்கியவள்,…. “நீ சொன்னது தெளிவாகவே கேட்டது நித்யா” அவளது சந்தேகத்தை தீர்த்து வைத்தவன்,… “ஸோ நீ ஒருத்தனை லவ் பண்ணுற, அதுக்கு இப்போ என்ன பண்ணலாங்கிற” என்றான் வெகு இயல்பாக….
இப்படி கேட்டால் அவள் எப்படி என்ன சொல்லுவாள், விழி பிதுங்கி போய் கரங்களை பிசைந்தபடி நின்றாள், பயத்தில் இருதயம் லப்டப் லப்டப் என்று துடிக்கும் சத்தம் வெளிவரை கேட்டது,…
“இப்படி நின்னா என்ன அர்த்தம், நாம வேணும்னா இதை பத்தி நாளைக்கு பேசிக்கலாமா? ஏன்னா இன்னைக்கு நம்ம ஃபர்ஸ்ட் நைட் இல்லயா” என்றவனை அதிர்ச்சியுடன் நோக்கியவள்,… “என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க நீங்க, நான் வேற ஒருத்தரை லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு இருக்கேன், நீங்க ஃபர்ஸ்ட் நைட்டை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க” சற்று காட்டமான குரலிலே வினவினாள்…
“அட கோபம்லாம் வருமா நித்து உனக்கு” என்று உதட்டை சுழித்தவன், அவளை ஆழ்ந்து நோக்க, அவளோ தலை குனிந்து கொண்டு,… “வேறு வழி தெரியாம என் அம்மா அண்ணாவோட கட்டாயத்தால தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், எவ்வளவோ கெஞ்சினேன் கதறுனேன் ஆனா அவங்க என் சொல்லை கேட்கல, உங்க கிட்ட பேசவும் முயற்சி பண்ணேன், ஆனா சந்தர்ப்பம் அமையல, தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுங்க, நான் கருணாக்கு வாக்கு கொடுத்திட்டேன், அவன் கூட வாழ்க்கை முழுக்க இருப்பேன்னு, எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிட மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுத்துட்டேன், அவனுக்கு அம்மா அப்பா சொந்தம் பந்தம்னு யாரும் இல்லை, அன்புக்காக ஏங்குறவனுக்கு துரோகம் பண்ண நான் விரும்பல, நீங்க… நீங்க தான் எனக்கு உதவி பண்ணனும்” என்று அழுகையுடன் அவனது காலில் விழுந்துவிட்டாள்,…
சில நொடிகள் தன் காலில் விழுந்து அழுபவளை நெற்றி சுருங்க பார்த்தவன், அவளது தோள்களை பற்றி நிற்க வைத்து, அவளுக்கு தண்ணீர் குடிக்க கொடுத்து, அவளது அழுகையை நிறுத்த சொன்னவன், அவள் அழுகை சிறிது மட்டுப்பட்டதும் அவளை நேர்கொண்டு பார்த்தான்,…
“நான் உன்னை உன் லவ்வர் கிட்ட போக விடுறேன்” அவனது வார்த்தையில் கொஞ்சம் நிம்மதி கொண்டவள், அடுத்து அவன் கேட்ட கேள்வியில் அவனை பரிதாபாமான பார்வையில் பார்த்தாள்…
“சொல்லு நித்யா, நீ உன்னை காதலிச்சவன் கூட போயிடுவ? அப்போ என் லைஃப்? ஊர் அறிய உன் கழுத்துல தாலி கட்டி உன்னை என் மனைவியாக்கிருகேன், நீ உன் காதலனோட போயிடன்னா என் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கணுமா? என் பாட்டி தாத்தாவோட நிலைமை என்னாகும்?” அவன் கேட்கும் கேள்விகள் அனைத்தும் நியாயமானது தானே! தன்னால் இப்போது இவன் வாழ்க்கை அல்லவா கேள்விக்குறியாகி நிற்கிறது? என் ஒருவளால் இரு ஆடவர்களின் மனதும் காயப்படுகிறதே! கருணாவிற்கு தன் கல்யாணம் விஷயம் தெரியாது? தெரிந்தால் அவன் துடித்து போவான் அல்லவா! இப்போது இவனையும் கல்யாணம் செய்து கொண்டு விலகி போய் துடிக்க வைக்க போகிறோம், மனைவி கல்யாணமான ஓரிரு நாட்களில் அவனுடன் வாழாமல் சென்றுவிட்டாள் ஊர்ஜனங்கள் அவனை தானே குற்றம் சாட்டும், ஏதோ குறை இருக்க போய் தான் மனைவி போய்விட்டாள் என்று பழி சுமத்துமே, அந்த வயதானவர்கள் நிலமையை நினைத்து பார்த்தாலுமே மனம் பதறியது, தலையை தாங்கியபடி கண்ணீர் வழிந்தோட அமர்ந்து விட்டாள்,….
“என்ன நித்து,…. முடிவெடுக்க தெரியாம சோர்ந்து போயிட்டியா? நான் வேணும்னா ஐடியா கொடுக்கட்டுமா?” ஒய்யாரமாய் அவளருகில் வந்தமர்ந்தான் ரிஷி,…
‘என்ன? ஐடியாவா?’ இவன் தனக்கு ஐடியா கொடுக்க போகிறனா? என்ன ரகம் இவன்? பொண்டாட்டி ஒருவனை காதலிக்கிறேன் என்று சொல்கிறாள்? சின்னதாக கூட கோபம் கொள்ளாமல் இவ்வளவு இயல்பாக இருக்கிறானே? இவனை நான் எந்த வகையில் சேர்த்துக் கொள்வது? என்று விழித்தாள் அவள்,….
“ஐடியா சொல்லவா? வேணாமா?” தன்னையே மலங்க மலங்க பார்த்து விழித்திக் கொண்டிருந்தவளிடம் கண்சிமிட்டி அவன் கேட்க, அவன் செய்கையில் கொஞ்சம் தடுமாறியவள், மனதை ஒரு நிலை படுத்திக் கொண்டு,… “ம்ம்ம்ம்” என்றாள், அப்படி என்ன தான் ஐடியா சொல்கிறான் என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில்,….
“நான் உன்னை உன் காதலன் கிட்ட போக விடுறேன்” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் நித்யா, கண்டிப்பா அந்நொடி அவளால் நிம்மதி கொள்ள இயலவில்லை, அவன் வாழ்க்கையை கேள்விக்குறியாகி விட்டு போக அவளுக்கு மனம் வரவில்லை, அதே சமயம் காதலனையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை, இருதலைகொல்லி பாம்பாய் தவித்தவள்,… “இல்ல” என்று ஏதோ சொல்ல வந்த போது,… “இரு நித்து, நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல” என்றவன் மீண்டும் தொடர்ந்தான்,…
“உன்னை நான் போக விடுறேன் ஆனா இப்போ இல்ல, என்ன இருந்தாலும் நீ எனக்கு மனைவியாகிட்ட, என் தாத்தாவும் பாட்டியும் ஆசை ஆசையா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க, ஏன் நானும் கூட நிறைய ஆசை கனவுகளோடு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், உன்னோட காதலுக்காக என்னோட ஆசை கனவு இதை எல்லாத்தையும் அழிச்சிக்க நான் விரும்பல, நான் ஆசை பட்ட வாழ்க்கையை நான் வாழனும் என் மனைவியான உன் கூட” என்று நிறுத்தியவனை அவள் கொஞ்சம் மிரண்ட விழிகளுடன் பார்த்தாலும் அவன் ஆசை படுறதில் தவறெதுவும் இருப்பதாய் தெரியவில்லை, அதே சமயம் அவளால் அவனுடன் வாழ முடியும் என்றும் தோன்றவில்லை,….
“சரி எங்க இருக்கான் உன் லவ்வர்,” லவ்வர் என்பதை அழுத்தி சொன்னவன், மேலும் “உன்னை பார்க்க வரலையா? உனக்கு கல்யாணமாகிடுச்சுனு தெரியுமா அவனுக்கு” அவளிடம் விடை எதிர்பார்த்து நின்றான்….
அவளால் பதில் சொல்ல இயலவில்லை, தொண்டையில் ஏதோ வந்து அடைத்து பேச விடாமல் தடுத்தது,… “நீ ஆன்சர் பண்ணா தானே என்னால ஏதாவது செய்ய முடியும்” என்றவனை அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை, “அது அது” என்று இழுத்து கொண்டிருந்தவள்,… “ஹாஸ்ப்பிடல்ல இருப்பான்னு நினைக்கிறேன்” என்றாள்,…
“ஓஹ்…. உன் லவ்வர் டாக்டரா?” அவன் ஆச்சரியமாய் கேட்கவும்…. “இல்ல இல்ல” என்று வேகமாக மறுத்தவளை, விழிகள் சுருங்க பார்த்தவன்,… “இல்லயா, அப்போ ஹாஸ்ப்பிடல்ல இருக்கான்னு சொல்ற, டாக்டர் இல்லனா அட்மினா?, வார்ட்பாயா? செவிலியனா? ” என்று அவன் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மறுப்பாய் தலையசைத்து கொண்டு வந்தவளை முறைத்தவன்,… “எல்லாத்துக்கும் இப்படி தலையாட்டிக்கிட்டு இருக்காம, வாயை திறந்து சொல்லுடி” என்று அதட்டினான்,…
“அது… அவன் ரவுடி” அவள் மெல்லிய குரலில் கூறவும், அவன் அதிரவெல்லாம் இல்லை,… “வாவ் இண்ட்ரஸ்டிங்” என்றான் உதடுகள் விரிய….
“ரவுடியை லவ் பண்ணுறியா? உன்னோட லவ்ஸ்டோரி அட்வன்ச்சரா இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் போலயே, சரி எடுத்து விடு கேட்போம்” என்றவனை இவன் சுயநினைவோடு தான் பேசுகிறானா என்ற சந்தேகத்தோடு பார்த்தாள் அவள்,…
“ஏன்டி அப்படி பார்க்கிற” அவன் அதட்டி கேட்க,… “இல்ல,… சும்மா தான்” என்றவளிடம்.. “சரி இப்போ எங்கிருக்கான் அந்த ரவுடிபைய, காதலிக்கு கல்யாணமானது தெரிஞ்சு இன்னும் பார்க்க வரலையா? நானா இருந்தா கல்யாணத்தை நடத்தவே விட்டிருக்க மாட்டேன், என்ன ரவுடி அவன், மட்டமான ரவுடியா இருக்கான்” என்றான்,…
“இல்லங்க,.. அவன் எனக்கு தெரிஞ்சு ஹாஸ்டபிட்டல்ல இருப்பான், அவன் தலையில ரொம்ப பெரிய காயம் ஏற்பட்டிருக்கு, கடைசியா ரத்த வெள்ளத்தோட தான் அவனை பார்த்தேன், அவனை ஹாஸ்ப்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கிறதா என் அண்ணன் வாயிலிருந்து கஷ்டப்பட்டு கரந்து வாங்குகிட்டேன்” என்றாள் கவலையோடு,…
“ஆக,… உன் லவ்வர் ஹாஸ்ப்பிடல்ல ட்ரீட்மெண்ட்ல இருக்கான், அதனால தான் உன்னை பார்க்க வரல, ம்ம்ம்” அவன் கேட்க, அவள் ஆமா என்பதாய் தலையசைத்தாள்,…
“அதுவும் நல்லத்துக்கு தான்” என்றவனை, அவள் விழிகள் சுருங்க பார்க்க,…. அவனோ… “ஆக்சுவல்லா நான் என்ன சொல்ல வந்தேனமா, உன் லவ்வர் ஹாஸ்ப்பிடல்ல ட்ரீட்மெண்ட்ல இருக்கான், அவன் எப்போ வருவானோ நமக்கு தெரியாது, ஸோ அதுவரைக்கும் தாலி கட்டுன கடமைக்காக எனக்கு மனைவியா இருந்துட்டு போயேன்” என்றதும் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது,…
“இப்போ ஏன்டி டேமை திறந்து விடுற, சட்டப்படி பார்த்தா நீ எனக்கு மனைவியாகிட்ட, நான் நினைச்சிருந்தா நீ இன்னொருத்தனை காதலிக்கிறேன்னு சொன்னதுக்கு கன்னத்தை பழுக்க வச்சு, நீ கதற கதற உன்னை மொத்தமா எனக்கு சொந்தமாக்கிருக்க முடியும், ஆனா நான் அப்படி பட்டவன் இல்ல, அப்படி பண்ணவும் விரும்பல, உன் காதலன் எப்போ வந்து கூப்பிட்டாலும் தாராளமா நீ போகலாம், நான் உன்னை தடுக்க மாட்டேன், ஏன் அவன் இப்போ வந்தா கூட மறுபேச்சு பேசாம உன்னை அனுப்பி வைக்க நான் ரெடி, அவன் வரும் வரைக்கும் நீ எனக்கு மனைவியா இருக்கணும் அதுவும் உன் முழு சம்மதத்தோட” அவன் நிறுத்தவும், அவள் இதை சட்டென்று ஏற்று கொள்ள முடியாமல் திணறி போய் நின்றாள்,….
தாலி கட்டிக்கிட்டதற்காக என்னுடன் வாழ்ந்து விட்டு, காதலன் வந்ததும் அவனுடன் போய் வாழு என்கிறானே! ஒரு பெண்ணாய் இது தனக்கு எத்தனை பெரிய அசிங்கம் என்று அவனுக்கு யார் சொல்லி புரியவைப்பது, அவனுக்கு புரியவைக்கும் நிலையிலும் தான் இல்லையே என மனதால் கதறினாள்….
தன்னை இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்திய தாயின் மீதும் தமையனின் மீதும் ஆத்திரமாக வந்தது, கருணாவின் முகம் கண்முன்பு வந்து நின்றது, ‘எனக்கு உன்கிட்டருந்து பாசமும் அன்பும் கிடைத்தாலே போதும் ஸ்ரீ, நீ எனக்கு மனைவியா நடந்துக்கணும்னு கூட நான் எதிர்பார்க்க மாட்டேன், உடல் சுகம் எனக்கு முக்கியமில்லை, உன்னோட பாசம் தான் முக்கியம், என்னை தாயா அரவணைத்து பாசம் காட்ட நீ எனக்கு இருந்தா போதும், உன்கிட்டருந்து நான் வேறு எதையும் எதிர்பார்க்க மாட்டேன்’ என்று கருணா அன்று கூறியது செவியில் எதிரொலித்தது,….
விழிகளை மூடி கண்ணீர் உகுக்க அமர்ந்திருந்தவளின் கண்ணீரை தன் விரல்களால் அழுத்தமாக துடைத்து விட்ட ரிஷி மித்ரன்,… “நித்து ஆர் யூ ரெடி” விளையாட்டுக்கு அழைப்பது போல் ரெடியா என்கிறானே இவனுக்கு நான் எப்படி புரிய வைப்பேன் என் நிலைமையை என்று எண்ணி கலங்கியவள்,… “நாம கொஞ்சம் டைம் எடுத்து அப்புறம்” என்று கூற வந்தவளின் இதழில் விரல் வைத்து தடுத்தவன்,…. “என்னோட ஃபீலிங்ஸ் உனக்கு புரியலையா நித்து, உன் காதலனை பத்தி மட்டும் யோசிக்கிறியே, உனக்கு தாலி கட்டிய புருஷனை பத்தியும் கொஞ்சம் யோசியேன், எனக்கும் மனசிருக்கு, வலி இருக்கு, வேதனை இருக்கு, எந்த கணவனும் கேட்க கூடாத வார்த்தையை மனைவிக்கிட்டருந்து நான் கேட்டிருக்கேன், என் நிலமை உனக்கு புரியலயா நித்து” கரகரத்த குரலில் கூறியவன், அவளை அடிபட்ட பார்வை பார்க்க, மொத்தமாக உடைந்து விட்டாள் அவனது பார்வையில்….
காலையில் பாட்டி கூறிய அனைத்தும் இப்போது நினைவிற்கு வந்தது, “என் பேரனுக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும்மா, பிறந்த உடனே தாயை இழந்திருந்தாலும் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சதும் ‘ஏன் பாட்டி அம்மா என்னை விட்டு போயிட்டாங்க’னு கண்கலங்கி கேட்டான், பள்ளிக்கூடத்துல அவன்கூட படிச்ச பிள்ளைங்க ‘என் அம்மா எனக்கு பிடிச்ச சாப்பாடு செஞ்சி தருவாங்க, என் அம்மா தான் எனக்கு ட்ரஸ் பண்ணி விடுவாங்க, குளிக்க வைப்பாங்க, சாப்பாடு ஊட்டுவாங்க, பள்ளிக்கு அழைச்சிட்டு வருவாங்க’னு சொல்றப்போலாம் எனக்கு அழுகையா வருது பாட்டி, எனக்கு என் அம்மா வேணும் பாட்டி’னு அவன் அன்னைக்கு அழுத அழுகை இப்போவும் என் கண்ணுக்குள்ள நிற்குதுடா, என் பேரனோட அழுகையை பார்த்து நானும் அழ ஆரம்பிச்சதும் அவன் அதை பத்தி பேசுரதையே நிறுத்திட்டான், ஆனா அவன் மனசில இருக்க ஏக்கம் இப்போ வரைக்கும் குறையல, பல முறை ஏன் இப்போ ஒரு வாரத்துக்கு முன்ன கூட அவன் அம்மா போட்டோ முன்னாடி நின்னு கண்ணீர் விட்டுட்டு இருந்தான், என்னால அவன் ஏக்கத்தை போக்க முடியலடாமா? என்னால முடியாதது உன்னால முடியும்னு நான் நம்புறேன், மனைவியால முடியாதது எதுவும் இல்லை, மனைவி கணவனை தாயாக அரவணைக்கலாம், தந்தையாக கண்டிக்கலாம், தோழியாக இருந்து தோள் கொடுக்கலாம், தங்கையாக இருந்து கூட சண்டை போட்டுக்கலாம், அனைத்து உறவும் சேர்ந்த ஒரே உறவு தான் மனைவி, என் பேரனை பார்த்துக்கடா, இனி அவன் உன் பொறுப்பு” என்று கூறியது செவியில் ரீங்காரமிட்டது,… அந்த நிமிடம் அவள் யாரை பற்றியும் எதை பற்றியும் யோசிக்கவில்லை, தன் கணவனான ரிஷியை பற்றி மட்டும் தான் யோசித்தாள், நடப்பது நடக்க போவது எதுவாகினும் தற்போது அவன் உன் கணவன், அடிபட்டு போய் இருக்கிறவனை நீயும் சேர்த்து அடித்து துன்புறுத்திவிடாதே என்று மனசாட்சி கூச்சலிட, அவனை தாவி அணைத்துக் கொண்டாள், அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள் குழந்தைக்கு முத்தமிடுவது போல், உனக்கு நான் எப்போதும் இருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொன்னவள், கணவனின் கரங்களில் உருகி போனாள், தன் அன்பு, பாசம், உடல் அனைத்தும் உனக்கே சொந்தம் என்று முழு சம்மதோடு தன்னை முழுதாக அவனிடம் ஒப்படைத்தவள், அவளுக்காக மட்டுமே தன் உயிரை கட்டி காப்பாற்றி கொண்டிருக்கும் கருணாவை மறந்து போயிருந்தாள்,….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்னடா நடக்குது இங்க??🤔🤔 அவன் காதலன் கூட போற வரை மனைவியா இருன்னு சொல்றான், இவளும் திடீர் பாசத்துல மனைவியா வாழ்கிறாள்..கருணா என்ன செய்ய போறானோ??