Loading

மரம் தேடும் மழைத்துளி 25

 

முருகன் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு பார்வதியின் வீட்டுக்கு ருக்மணி வரவழைக்கப்பட்டிருந்தாள். அவளோடு அவளது தாயார் மாரியம்மாள், பெரியம்மா சுப்பு, சுப்புவின் மகன் ரவியும் உடன் வந்து இருந்தார்கள்.

 

முதலாம் ஆண்டு திதி கொடுக்கும் நிகழ்வுக்கு வெளியில் இருந்து எந்த சொந்தங்களையும் அழைக்கவில்லை. சுந்தரியின் வீட்டில், சொன்னதற்காக சுந்தரியும், சுந்தரியின் மாமியாரும் வந்திருந்தார்கள். அதேபோல கோமதியின் வீட்டில் சொன்னதற்காக கோமதியும், அவளது கணவனும் வந்திருந்தார்கள். பங்காளி கிருஷ்ணன் வீட்டில், அனைவரும் வந்து கலந்து கொண்டார்கள். திதி காரியம் கொடுக்க பக்கத்து தெருவில் இருந்து பிராமணர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

 

முருகனுக்கு கொல்லி வைத்த கிருஷ்ணனே, திதி கொடுக்க பிராமணர் முன் அமர்ந்திருந்தார். கணபதி பூஜையோடு சிரார்த்த பூஜை ஆரம்பமானது.

 

பார்வதி தன்னுடைய பேரனை முதல் முறையாக கையில் வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு. வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார்.

 

அவரோடு சேர்ந்து ருக்மணியும், மாரியம்மாள், சுப்புவும் அமர்ந்து கொண்டார்கள்.

 

அவர்களுக்கு எதிர் திசையில் லட்சுமி, சுந்தரி, கோமதி, சுந்தரியின் மாமியார், ஆகிய நான்கு பெண்களும் அமர்ந்திருந்தார்கள். ரவி வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தான். கோமதியின் கணவன் சங்கர் அவனோடு சேர்ந்து அமர்ந்திருந்தான். சரவணன் முகம் எல்லாம் வேர்க்க வாசலில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான்.

 

லட்சுமியின் மனநிலையில் ஏதோ ஒரு புரியாத தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.

 

ருக்மணிக்கு, “தான் திருமணம் செய்து வந்திருந்த வீடு… தற்போது தனக்கு அந்நியமாய் தெரிந்தது. வந்திருக்கும் விருந்தினர்களைப் போல தானும் அங்கே அமர்ந்திருப்பது வருத்தமாய் இருந்தது. இதே பார்வதியை வெளியில் தள்ளி கதவடைத்தும், தனக்கு கட்டுப்பட்டு வாய்பேசாமல் இருந்தவர், தன்னை துரத்தி விட்டு அவரது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார். இப்போதும் மற்றவர்களுக்காக குழந்தையை கையில் வாங்கி வைத்திருக்கிறாரோ அல்லது நிஜமான அன்போடு வைத்திருக்கிறாரோ… அதுவும் அந்த கடவுளுக்கே வெளிச்சம். எல்லா பெண்களைப் போலவும் தன்னுடைய வீடு, தன்னுடைய குடும்பம் என்று தனக்கான உரிமையை ஒரு நாளும் கொண்டாடியது இல்லை. இந்த குழந்தையைத் தவிர தனக்கென்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஒரு முழம் மஞ்சள் கயிறு, அது இல்லாததால் எத்தனை எத்தனை இழப்பு? எதிர் வரும் காலத்தில் தன் குழந்தையாவது இந்த வீட்டின் வாரிசாக வலம் வருமா? அல்லது ருக்மணியின் தனிப்பட்ட வாரிசாக இருந்து விடுமா?” என்ற பல்வேறு கேள்விகளோடு கண்களில் நீர் கோர்க்க அமர்ந்திருந்தாள் ருக்மணி.

 

கலங்கிக் கொண்டிருந்த ருக்மணி, சுதாரிக்கும் முன்பே, அவளது பின்புறத்தில் இருந்தபடி, சரவணன், ருக்மணிக்கு தாலி கட்டி விட்டான்.

 

சரவணன், ருக்மணியின் அருகில் வரும் வரை குழந்தையை வாங்க செல்கிறான். என்று தான் எண்ணிக் கொண்டிருந்தார்கள் அங்கிருந்த அனைவரும். யாரும் எதிர்பார்த்து இருக்கவில்லை இப்படி சொல்லிக் கொள்ளாமல் தாலி கட்டுவான் என்று.

 

ஓரமாய் அமர்ந்திருந்த லட்சுமி எழுந்து ஓடி வந்தார், அவன் அருகில்., சுய சிந்தனையில் இல்லாமல் இருந்த ருக்மணி, கழுத்தில் கிடக்கும் தாலியை பார்த்து சுயம் பெற்றவளாய் எழுந்து திரும்பினாள்.

 

லட்சுமியும், ருக்மணியும், ஒரு சேர, “என்ன காரியம்டா பண்ணி வச்சிருக்கே?” என்று ஒரே வசனத்தை ஒன்றாய் சொன்னார்கள்.

 

திதி காரியம் நிறைவுறும் நேரத்தில், சரவணன் தாலி கட்டியதால்… அமைதியாய் இருந்த வீட்டில், பிரளயத்தை உண்டாக்கி விட்டான்.

 

காரியம் செய்ய வந்த பிராமணர், “எப்படி ஒரு காரியம் நடக்கயில், இப்படிபட்ட ஒரு காரியத்தை செஞ்சுட்டாங்களே! நான் புறப்படுறேன்.” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.

 

ருக்மணி, கனன்று கொண்டிருந்த நெஞ்சத்தில், கயிற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும் தாலியை கழற்றி, அவன் மூஞ்சியில் எறிந்து விட வேண்டும். என்ற எண்ணத்தோடு கழற்ற முற்பட்டாள்.

 

மாரியம்மாளும் சுப்புவும், அவளது இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு. “அந்த பாவத்தை செய்யக்கூடாது தாயி” என்று பதறினார்கள்.

 

ஆவேசத்தோடு வந்த லட்சுமி, சரவணன் கன்னத்தில் இரண்டு கைகளால் மாறி மாறி கொடுத்துக் கொண்டிருந்தார். “என் வயித்துல ஏன் பிறந்ததே? என்னை கேவலப்படுத்த பிறந்துட்டியே! வந்து என் தலைல மண்ணள்ளி போட்டுட்டேயே.” என்று சொல்லிக் கொண்டே அடித்தார்.

 

திதி கொடுக்க அமர்ந்திருந்த கிருஷ்ணன் எழுந்து வந்து லட்சுமியை தாங்கிப் பிடித்து, “அமைதியாக இரு லச்சு. அமைதியா இருடி, “ என்று அமைதிப்படுத்த முயற்சித்தார்.

 

லட்சுமி, “இந்த பாவியை நல்லாத்தானே வளர்த்தேன். எப்ப இருந்து இவனுக்கு இப்படி ஒரு கேவலமான புத்தி வந்துச்சு?” என்று கிருஷ்ணனிடம் சொல்லி அழுதார்.

 

ருக்மணி சரவணனை, “உனக்கு என்னடா பாவம் பண்ணுனேன். என்னிய கேவலப்படுத்தணும்னு எத்தனை நாளு கங்கணம் கட்டி காத்திருந்தடா?” என்று சொன்னவள், தன்னுடைய அம்மா பெரியம்மாவை “கைய விடுங்க. இந்த அவமானத்தை கழுத்துல சுமந்துகிட்டு இருக்கதுக்கு. கயத்தை போட்டு தொங்கிடலாம்.” என்று கதறியவள் தன் தாலியை அறுத்து எறிவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

 

குழந்தையை வைத்திருந்த பார்வதி ஓடிச்சென்று ரவியின் கைகளில் கொடுத்துவிட்டு. ருக்மணியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். “என்னடி தலைபிரட்டு புடிச்சு போய் பேசுற. அவனை (முருகனை) சங்கராம் பண்ணிட்டு போவேன்னு சபதம் பண்ணியே… கொன்னு தூக்கி அனுப்பிட்டே. இப்ப தாலியை அறுத்து இவனையும் (சரவணனையும்) முடமாக்க நினைக்கிறாயா? அப்படி என்ன பொட்ட கழுதைக்கு ஆவேசம் வருது? அது (தாலி) பிடிச்சிருக்கோ, பிடிக்கலையாே, தெரியாம கட்டுனானோ, ஊரை கூட்டி கட்டினானோ கழுத்துல ஏறிட்டா கட்டையில் போகுற வரைக்கும் கழட்டக்கூடாது. அதுதானடி இந்த மண்ணுல பொறந்த ஒவ்வொருத்தரும் செய்ற பழக்கம். நீ பெரிய புரட்சிபன்ன வந்துட்டியாக்கும்”. என்று கோபம் கொப்பளிக்க சொன்னார். அதை கேட்ட லட்சுமி திகிலிட்டு போனார்.

 

லட்சுமி பார்வதியை “அப்ப எல்லாரும் ஒன்னு கூடி பேசி முடிவு எடுத்து, அவனை தாலி கட்ட வச்சிருக்கீங்களா?”

 

பார்வதி, “நான் அப்படி சொல்லலத்தா லட்சுமி. நான் எந்த திட்டமும் தீட்டல. நான் தப்பா சொன்னா என்னை மன்னிச்சிரு. என்னோட புருஷன் உயிரோட இருக்கானா இல்லையான்னு தெரியல. ஆனாலும் நான் இந்த தாலியை, விளையாட்டு சாமான் மாதிரி கழட்ட மாட்டக்கூடாதுனு சொல்ல வந்தேனே தவிர, எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை லட்சுமி.” என்று லட்சுமி இடம் கையெடுத்து கும்பிட்டு தன் நிலையை விவரித்தார்.

 

அதே நேரத்தில் ருக்மணி அங்கு இருந்தால் விபரீதம் இன்னும் அதிகமாகி போகும் என்று எண்ணிய பார்வதி, “இந்த பாவி மகளை முதல்ல இங்கிருந்து கூட்டிட்டு போயிருங்க.” என்று மாரியம்மாள் சுப்புவிடம் கத்தினார்.

 

பார்வதி சொல்ல வந்த வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் யாருக்கு புரிந்ததோ இல்லையோ, கிருஷ்ணனுக்கு நன்றாக புரிந்தது. அந்த கணத்தில் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு, “நெஞ்சு வலிக்குது” என்று தரையில் சரிந்து விழுந்தார்.

 

சரவணனை சுற்றி இருந்த கூட்டம் மொத்தமும், தற்போது கிருஷ்ணனை பார்க்க சூழ்ந்தது.

 

சரவணன், “அப்பா உங்களுக்கு ஒன்னும் ஆகாதுப்பா…” என்று அழுதபடி அவரை தொட சென்றான்.

 

கோமதியும், சுந்தரியும் ஒன்றாக “எங்க அப்பாவை அவன் தொடக்கூடாது. மரியாதையா வெளியில போடா…” என்று கத்தி கூச்சலிட்டார்கள்.

 

கோமதியின் கணவன் “கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க காத்து வரட்டும்.” என்று கூட்டத்தை விலக்கி விட்டு. “நான் இப்ப வந்துடுறேன்” என்று ஓடிச்சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ பிடித்து வர சென்றான். சென்ற சிறிது நேரத்தில் ஆட்டோவோடு வந்தான்.

 

சங்கர், கிருஷ்ணனை அந்த ஆட்டோவில் ஏற்றி அமர்த்தினான். லட்சுமி, சுந்தரி, கோமதி, என்று அனைவரும் உள்ளே இடுக்கி பிடித்து அமர்ந்து கொண்டு. மருத்துவமனை நோக்கிச் சென்றார்கள்.

 

சங்கர் தனது பைக்கில் அவர்களை பின் தொடர்ந்து சென்றான்.

 

பார்வதி, மாரியம்மாள், சுப்புவை பார்த்து “இனிமே இவள் இந்த திசைப்பக்கம் வந்துரக்கூடாது. கூட்டிட்டு போயிருங்க.” என்று விரட்டி அடிப்பது போல் ருக்மணியை அனுப்பி வைத்தார்.

 

மாரியம்மாளும் சுப்புவும் ருக்மணியை அழைத்துக் கொண்டு நடந்து செல்ல.

 

தான் இருப்பதா, இல்லை ருக்மணி யோடு சேர்ந்து செல்வதா? என்று புரியாமல் நின்று கொண்டிருந்த சரவணனை, ரவி கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ருக்மணியின் பின்னால் நடந்தான்.

 

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணனை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருந்தார்கள். அவருக்கு வாய்வு பிடிப்புக்கான ஊசி போடும்படி அவரே கேட்டுக் கொண்டார். அதன்படி ஊசி செலுத்தப்பட்டது. கிருஷ்ணன் இப்போ கொஞ்சம் பரவாயில்லை என்று மருத்துவர்களிடம் சொல்லிவிட்டு. வீட்டுக்கு போகலாம் என்று தன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு அதே ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வரும் வழியில்…

 

கோபமாக சென்ற சரவணனை, சமாதானம் செய்து அழைத்து வருவதாக புறப்பட்டுச் சென்ற கிருஷ்ணன். சரவணனை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பேசிக்கொண்டு இருந்த உரையாடல்களை மனதில் ஓட விட்டுக்கொண்டு கண்களை மூடி சாய்ந்திருந்தார்.

 

சரவணன், “அப்பா நீங்களும் என்னை தப்பா நினைக்கிறீர்களா?”

 

“நான் உன்னை தப்பா நினைச்சேன்னால், என்னை நானே தப்பா நினைச்சதுக்கு சமம். நீ உனக்கு பிடிக்காதவங்களா இருந்தாலும் அவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற உயர்ந்த குணம் உள்ளவன். உங்க அம்மாவுக்கு வயசு கூடிடுச்சே தவிர அதற்கான பக்குவம் கொஞ்சமும் வரல. நான் அதுக்காக உன்னை தனியா கூப்பிட்டு வரல. உங்க அம்மா சொன்னது ஒரு வகையில நல்ல விஷயம்னு எனக்கு தோணுச்சு. அதனால உன்னை கூட்டிட்டு வந்தேன்.

 

“அப்பா எனக்கு புரியல.”

 

“ஆமா சரவணா பேசாம நீ ருக்குவையே கல்யாணம் பண்ணிக்கோயேன்.”

 

அதிர்ந்த சரவணன், “அப்பா என்ன சொல்றீங்க?”

 

“நல்லா யோசிச்சு சொல்றேன் சரவணா. அந்த பிள்ளைக்கு இந்த சின்ன வயசிலேயே எல்லாம் முடிஞ்சு போச்சா? பாவம் இல்லையா? நம்ம குடும்பத்துக்கு தெரிஞ்சோ தெரியாமலோ வந்துருச்சு. அதை கடைசி வரைக்கும் நம்ம நல்லபடியா கொண்டு செலுத்தனும் இல்லையா?”

 

“மத்தவங்க தப்பா பேசுவாங்களே,“

 

“உனக்கு மனசு இருந்தா சம்மதம் சொல்லு. மனசு இல்லாட்டி வேண்டாம். மத்தவங்களை காரணம் சொல்லாத ப்பா……”

 

“சுபத்ரா வீட்ல என்ன சொல்லுவீங்க?”

 

“சுபத்ராவுக்கு சரவணன் இல்லாட்டிலும் வேற ஒரு மாப்பிள்ளை கிடைச்சிடுவான். ஆனா ருக்மணிக்கு அப்படி கிடைக்க மாட்டான். கிடைச்சாலும் அவன் நல்லா வச்சிக்குவான்னு எந்த உத்தரவாதமும் இல்லை. உன் மனசுல சுபத்ராதான் இருக்கிறாளான்னு சொல்லு. அவளை மறக்க முடியும் முடியாதுன்னு அதையும் தெளிவாக சொல்லிடு”.

 

சரவணன் சற்று நேரம் அமைதியாய் நின்று இருந்தான். இறுதியில் “நீங்க சொல்றபடியே கேட்கிறேன் ப்பா. நான் என்ன செய்யணும்? எப்படி செய்யணும்?” என்று கேட்க

 

கிருஷ்ணன் போட்டு கொடுத்த திட்டத்தை, தற்போது நிறைவேற்றி விட்டான் சரவணன்.

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்