
இதயம்-25
அதீத கோபத்தில் கண்கள் இரத்தமெனச் சிவந்திருக்க, ஆத்திரத்தில் கையில் கிடைத்தப் பொருட்களையெல்லாம் தூக்கிப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தார் சதாசிவம்.
கண்கள் முழுதும் கோபமே பிரதானமாய் இருந்தது. இப்படி ஏமாற்றப்பட்டு விட்டோமே என்ற ஆத்திரமும் அதிகமாய் இருந்தது.
“எப்படி? இதெல்லாம் எப்படி அவனுக்கு தெரிஞ்சது? என்னை மாட்டிவிட்டு நீ தப்பிச்சுக்கிட்டே தானே பரமேஷ்வர். இந்த ஊரைப் பொருத்தவரை, நீ என்னோட பினாமியாய் இருக்கலாம். ஆனால் உனக்கு தெரியும் தானே நாம ரெண்டு பேரும் யாரு, நமக்குள்ளே என்ன உறவுன்னு உனக்குத் தெரியாதா?”
“இங்கே பாரு சதாசிவம் எனக்கு என் பையன் ரொம்ப முக்கியம். அவனை வெளியே கொண்டு வர்ரது ரொம்ப ரொம்ப முக்கியம். உனக்காக என் பையன் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க முடியாது. நீ என் நண்பனாய் இருக்கலாம், ஆனால் என் குடும்பம் தான் எனக்கு முக்கியம். அப்பறம் பினாமி கினாமின்னு வெளியே போய் சொல்லி வைக்காதே! நமக்குள்ளே எந்த உறவும் கிடையாது.” அழுத்தம் திருத்தமாய் சொன்னார் பரமேஷ்வர்.
“ஓ! அப்போ உனக்கு உன் குடும்பம் தான் முக்கியம். சரி, நீ என்னவோ பண்ணிட்டு போ! என் பணம் எனக்கு வேணும். அதைக் கொடுத்துட்டு நீ எப்படியோ போ! எனக்கு என் பணம் வேணும்.!”
“உன் பணமெல்லாம் எதுவும் இல்லை. உன் பணத்தை உன் பையன் கிட்டே போய் கேளு!”
“நான் குடுத்தது உன்கிட்டே தானே? அப்போ உன்கிட்டே தானே கேட்க முடியும்!”
“இங்கே பாரு சதாசிவம், இதோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம். உன் பையனை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. உன் பையன் கேட்டான் நான் எடுத்துக் கொடுத்தேன் அவ்வளவு தான். அங்கேயும் இங்கேயும் ஆளைப் பிடிச்சு சுவிஸ் பேங்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறதுக்குள்ளே நான் பட்ட பாடு, எனக்கு மட்டும் தான் தெரியும்.!”
“என் பணத்தை எனக்குத் தெரியாமல் எடுத்துக் கொடுத்துட்டு, என்கிட்டேயே நியாயம் பேசறியா? இதென்ன பத்து பைசா கணக்கா, போனா போகுதுன்னு விடுறதுக்கு. முழுசா ஐநூறு கோடி. உன்னை நம்பி உன் அக்கௌண்ட்டில் வச்சது தான் நான் செஞ்ச பெரிய தப்பு. என் பணத்தை என்னைக் கேட்காமல் எடுத்துக் கொடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கு? என் புள்ளையாவே இருந்தாலும், கொடுத்த நீயே அவன் கிட்டே பைசல் பண்ணிக்கோ! என் பணத்தை எனக்குக் கொடு. இல்லைன்னா நான் உன்னை சும்மா விடமாட்டேன். என்னைப் பத்தி உனக்குத் தெரியாது..!” மிரட்டல் தொனியில் பேசினாலும் கூட, சதாசிவத்தின் கரங்கள் நடுங்கியது.
‘என் பணம்! என் பணம் போச்சு. நான் சேர்த்து வச்ச பணம்! போச்சு எல்லாம் போச்சு. இனி நான் என்ன பண்ணப் போறேன்? நான் பெத்தப் பிள்ளைக்கிட்டே நான் தோற்கப் போறேனா? என் நிழலில் முளைச்ச செடி அவன், அவன்ன கிட்டே தோற்கப் போறேனா? எல்லாத்துக்கும் காரணம் இந்த பரமேஷ்வர் தான். இவனால் தான் எல்லாமும்..’ என மனதில் பைத்தியக்காரனைப் போல், புலம்பியவரின் ஒட்டுமொத்தக் கோபமும் பரமேஷ்வரின் மீதே திரும்பியது.
கரங்கள் நடுங்கியது. கண்களுக்குள் ஆத்திரமும் வெறியும் மட்டுமே குடியேறியிருந்தது. பதவியும் போனது பணமும் போனது. என்பதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. மனிதர்களை விட, அவர் வாழ்க்கையில் பணத்திற்கு மட்டுமே மதிப்பு அதிகமாக இருந்தது. பணம், பதவி, புகழ் என போதையில் மூழ்கிப் போய்க் கிடந்தவருக்கு, நிதர்சனம் புரிய மறுத்தது.
பணம் தான் எல்லாம் பதவி தான் எல்லாம் என அவர் மனம் பைத்தியக்காரத்தனமாய் நம்பியது. அந்தப் பணத்தை இழக்கக் காரணமாய் இருந்த பரமேஷ்வர் மீது கொலை வெறியே வந்தது.
கரம் மெதுவாய் நீண்டு, இத்தனை நேரமாய் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தது. பரமேஷ்வரின் முகத்திலோ, பயம் பசை போட்டு ஒட்டிக் கொண்டிருந்தது.
“சதாசிவம் என்ன பண்ணுறே? வேண்டாம் எதுவும் தப்பான முடிவு எடுத்துடாதே! அவசரத்தில் எடுக்கிற முடிவு எப்போவுமே சரியாய் இருக்காது. சொல்றதைப் புரிஞ்சுக்கோ! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.”
“எனக்கு பேசறதுக்கெல்லாம் நேரமில்லை. உன் பணத்தை மட்டும் பத்திரமா வச்சீக்கிட்டேல்ல? நீ செத்துடு உன் பணத்தை யார் அனுபவிக்கிறான்னு பார்க்கிறேன். எனக்கு கிடைக்காததை நீயும் அனுபவிக்கக் கூடாது. பேசாமல் செத்துடு. எனக்கு நிம்மதியாய் இருக்கும். எப்படியும் ஜெயிலுக்குப் போகப் போறேன், உன்னைக் கொன்னுட்டு போய்டுறேன்னே?” அவர் குரலில் என்ன இருந்தது என்பதை பரமேஷ்வரால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
“நான் உன் நண்பன் சதாசிவம். நான் இல்லாமல் நீ அரசியலுக்கே வந்திருக்க மாட்டே! அதோட கற்பகத்தைக் கொல்லணும்ன்னு ஐடியா கொடுத்ததும் நான் தான். அந்த ஐடியா தான் உன்னை அமைச்சராய் மாத்திச்சு. வெளி உலகத்திற்கு நான் வேற நீ வேறயா இருந்தாலும், படிப்பறிவே இல்லாத, வெறும் மூணாங்கிளாஸ் படிச்ச முட்டாள் நீ, சட்த்துறைக்கு அமைச்சராய் இத்தனை நாள் இருந்திருக்கிறேன்னா அதுக்கு முழுக் காரணமும் நான் தான். உனக்கு பின்னால் இருந்து நான் எவ்வளவு வேலை பார்த்திருக்கிறேன் தெரியுமா? உன்னை உச்சாணிக் கொம்பில் உட்கார வச்சது நான். நம்ம பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி உறவாய் மாறிடலாம்ன்னு சொன்னதும் நான். பணத்தை சம்பாதிக்கிறதோட, பதுக்கவும் சொல்லிக் கொடுத்தவன் நான் தான். அப்படி இருக்கும் போது, என்னை நோக்கியே நீ துப்பாக்கியை நீட்டுறது துரோகம். பச்சை துரோகம்.!”
“துரோகம் தான் நான் இல்லைன்னு சொல்லலியே, இந்தக் காலத்தில் நட்பே சுயநலத்திற்காகத்தான். நீ உன் சுயநலத்திற்காக என்னை அமைச்சராக்கினே, நான் என் சுய நலத்திற்காக உன்னைப் பயன்படுத்திக்கிட்டேன். ஆதன் நிஷா கல்யாணம் மட்டும் நடந்திருந்தால், உன் பொண்ணை வச்சே உன் சாம்ராஜ்ஜியத்தை என் வசப்படுத்தியிருப்பேன். நான் படிக்காதவனாய் இருக்கலாம். ஆனால், வாழ்க்கையையும் மனுஷங்களையும் நிறையவே படிச்சவன். நான் படிக்கத் தவறின ஒரே ஆள் என் பையன் ஆதன் மட்டும் தான். அவனால் தான் நான் இந்த நிலமையில் நிற்கிறேன். ஆனால், இனிமேல் நான் யாரையும் ஜெய்க்க விடமாட்டேன். என் வாழ்க்கையை யாரையும் முடிவு செய்யவும் விட மாட்டேன். இங்கே நான் மட்டும் தான் ராஜா! நான் மட்டும் தான் மந்திரி..! எல்லா சந்தேகமும் தீர்ந்துடுச்சா, இப்போ சந்தோஷமா சாவு!” துப்பாக்கியை பரமேஷ்வரை நோக்கி சதாசிவம் நீட்டிய நொடி,
“என்னைக் கொன்னுட்டு உயிரோட போய்ட முடியுமா உன்னாலே? இல்லை நான் தான் சும்மா விட்டுடுவேனா? நான் வளர்த்துவிட்ட உனக்கே இவ்வளவு இருக்கும் போது, எனக்கு எவ்வளவு இருக்கும்? துரோகத்திற்கு பதில் துரோகம் மட்டும் தான் சதாசிவம். ஜெயில் போய் உட்கார்ந்து இதற்கும் சேர்த்து வருத்தப்படு!” எனச் சொன்ன பரமேஷ்வர்,
அருகிலிருந்த பொத்தானை அழுத்த, அந்தக் கண்ணாடிக் கதவு தன்னால் திறக்க, காவல் துறையினர் பரமேஷ்வரின் அலுவலக அறைக்குள் நுழைந்திருந்தனர்.
“நான் ஏற்கனவே உங்கக் கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கேன், சதாசிவம் என்னைக் கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுறாருன்னு. ஆனால் நீங்க தான் முன்னாள் மந்திரியாய் இருந்தாலும் அவருக்கு எதிரா துரும்பைக் கூட அசைக்க மாட்டேன்னு சொன்னீங்க! இப்போ நேரிலேயே பார்த்தாச்சு தானே, அரெஸ்ட் பண்ணுங்க!” ஏளனப் புன்னகையுடன் சொன்ன பரமேஷ்வர், சதாசிவத்திடம் திரும்பி,
“முன்ன மாதிரி ஜெயில் ஒண்ணும் மோசம் இல்லை. வாரம் ரெண்டு நாளு அசைவமெல்லாம் கொடுக்குறாங்களாம். நான் வேணும்ன்னா உன்னை கொஞ்சம் ஸ்பெஷலா கவனிச்சுக்க சொல்லவா? உன்னை இந்த ஜெயில் வாழ்க்கை மாத்தும்ன்னு நான் நம்பறேன் சதாசிவம். புது இடம் புது வாழ்க்கை, என்ஜாய் நண்பா!” நக்கலாய் பரமேஷ்வர் சொன்னது சதாசிவத்திடம் எரிச்சலைக் கிளப்பியது.
“என்னை என்ன நினைச்ச பரமேஷ்வர், ஜெயிலில் போய் கையேந்தி சோறு தின்பேன்னு நினைச்சியா? நான் சதாசிவம் என்னை சாதாரணமா நினைச்சிடாதே! நீ சொன்னதையே இப்போ நான் உனக்கு சொல்றேன், துரோகத்திற்கு பதில் துரோகம் மட்டும் தான்.” எனச் சொன்னவர், யாரும் எதிர்பாராவிதமாய், பரமேஷ்வரை துப்பாக்கியால் சுட்டிருந்தார்.
பரமேஷ்வரின் தலைவழியே பயணித்த தோட்டா அவர் பின்னாலிருந்த கண்ணாடி சுவற்றில் இரத்தச் சிதறல்களைப், படரவிட்டிருக்க, வேரற்ற மரமாய் தொய்ந்து கீழே விழுந்தார் பரமேஷ்வர். கண்கள் துளி அசைவின்றி விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தது.
*****
அலைபேசி வழியே வந்த செய்தியைக் கேட்டு, ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்தான் ஆதன் ரித்விக். அப்போது தான் காயத்ரியை மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அழைத்து தன் வீடு வந்து சேர்ந்திருந்தான்.
ஆனால் இப்படியொன்றை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் நினைத்தது இது அல்ல. நடந்ததும் அவன் நினைத்தது அல்ல! ஏனோ மனம் பதைபதைப்பைச் சுமந்தது. அவரிடமிருந்த பணத்தையெல்லாம் பறித்துவிட்டால், திருந்திவிடுவார் என அவன் நினைத்திருந்ததெல்லாம், நொடியில் தவிடு பொடியாகியிருந்தது. ஓர் உயிர் என்பது ஒன்றும் அத்தனை சாதரணமான விஷயம் இல்லையே?
“போதுமா? உனக்கு இப்போ நிம்மதியா? உன் அப்பா பதுக்கி வச்சிருக்கிற பணத்தைக் கேட்டே, என் அப்பாவுக்கும், உன் அப்பாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. யாரும் யாருக்கும் பினாமி இல்லைன்னு சொல்ல சொன்னே, எல்லாம் பண்ணியாச்சு. இப்போ என் அப்பா உயிரோடவே இல்லை! இப்போ என்ன பண்ண போறே ஆதன்? எல்லாத்துக்கும் நீ தான் காரணம்.! உன் திட்டத்துக்கு எங்களை யூஸ் பண்ணிக்கிட்டே தானே? உனக்குன்னு இருந்து ஒரு எதிரியும் இப்போ இல்லை. நீ நினைச்சபடி எல்லாம் நடந்துடுச்சு தானே? நீ ஜெய்ச்சுட்டே இல்லையா? உன்னை நம்பின நாங்க தான் தோற்றுப் போய்ட்டோம்.!” எனக் கத்திக் கொண்டிருந்தாள் நிஷா.
“நிஷா! உன் அப்பா மட்டுமில்லை. ஆதனோட அப்பாவும் இப்போ உயிரோட இல்லை. ஆதன் இதை நினைச்சு எதுவுமே பண்ணலை. ஆதன் மனுஷங்களை ஜெய்க்க நினைச்சான். அவங்க மனசை ஜெய்க்க நினைச்சான். ஆனால் கடைசியில் பணம் ஜெய்ச்சுடுச்சு. வெறும் மூணெழுத்து வெற்றுக் காகிதம் ஜெய்ச்சுடுச்சு.!” வாஹினியின் குரலில் வேதனை எட்டிப் பார்த்தது.
ஆம் பரமேஷ்வரைச் சுட்ட அதிர்விலிருந்து அங்கிருந்தோர் மீளும் முன்னரே, தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார் சதாசிவம். பணம் எல்லாவற்றையும் விடப் பெரிதாய்ப் போயிருந்தது.
அவரைப் பொருத்தவரை பணம் அவரது மூச்சுக்காற்று. காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது எனச் சொல்லும் காலம் போய், காசில்லாமல் வாழ முடியாது எனும் காலம் வந்துவிட்டது. ஏனென்றால் இனிவரும் காலங்களில் காற்றையும் விலைக்கு வாங்கும் நிலை வரலாம். தண்ணீரை விலைக்கு வாங்குவதைப் போல்..
இந்த உலகம் உன்னைத் தூக்கி வைத்து ஆடுவதையும், தூக்கி வீசுவதையும் நிர்ணயிப்பதற்குக் காரணம், உன் குணம் அல்ல. உன்னிடமிருக்கும் பணம் மட்டும் தான். ஆனால், பணத்தை விடப் பெரிதானது தந்தை மகன் உறவு. பணத்திற்காக எல்லாம் செய்தவர் கடைசிவரை மகனின் மனதைப் புரிந்துக் கொள்ளாமலே போய்விட்டார்.
தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவோ, மனைவிக்கு நல்ல கணவனாகவோ, ஓர் நொடிக் கூட அவர் இருந்ததில்லை. இவ்வளவு ஏன், தான் செய்யும் தொழிலுக்குக் கூட, தன் பதவிக்குக் கூட அவர் உண்மையாய் இருந்ததில்லை.
பணமெல்லாம் போய்விட்டது, ஒருவேளைச் சோற்றுக்குக் கையேந்து வாழும் நிலை வேண்டாமென முடிவு செய்தே தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். இதில் ஆதன் மீது எந்தத் தப்பும் இல்லாவிட்டாலும் கூட, அவனுக்கு கொஞ்சம் குற்றவுணர்வாகத்தான் இருந்தது.
யாரையும் பலியிட வேண்டுமென அவன் நினைக்கவில்லை. யாரையும் வெல்ல வேண்டுமென்றும் அவன் நினைக்கவில்லை. மாறாக, தந்தைக்கு அவர் செய்த தவறை உணர்த்த வேண்டுமென்று நினைத்தான். பணம் தான் அவர் செய்யும் தவறுகளை அவரை உணர்ந்துக்கொள்ள விடாமல் தடுக்கிறதென நினைத்து தான், அவர் சேர்த்து வைத்திருந்த பாவ மூட்டைகளைக் கரைக்க முயன்றான். அவர் செய்த பாவங்களைக் கரைக்க முயன்றவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரே காற்றோடு காற்றாய் கரைந்து போவாரென்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆனால், இந்த மனித வாழ்க்கையில், எதிர்பாராதவற்றை எதிர்பார்க்கத்தான் வேண்டும். வருடக்கணக்கில் நண்பராய் இருந்தவர்கள், நொடியில் எதிரியாய் மாறும் போது, இன்று கண் முன்னே இருப்பவர்கள் இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் தானே? எது எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றம் ஒன்று தானே என்றும் மாறாதது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றால், மனிதன் இன்றும் குரங்காகத்தான் இருந்திருக்க வேண்டும். மாற்றம் தானே பரிணாம வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது. அதே மாற்றம் தான், தொலை தூரத்தில் இருந்துக் கொண்டு, பக்கத்தில் இருப்பது போல் அலைபேசியில் பேச வைத்திருக்கிறது. அப்படியென்றால் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.
நிஷாவின் பேச்சு, அந்த அறையில் இருந்த யாருக்குமே இனிக்கவுமில்லை. ரசிக்கவுமில்லை.
“இங்கே பாரு நிஷா! இது எதுக்குமே ஆது காரணமில்லை! உன் அப்பாவும், என் அப்பாவும் சேர்ந்து செஞ்ச தப்புக்கு சேர்ந்தே தண்டனை கிடைச்சுடுச்சு. ரெண்டு உயிர் போய்டுச்சேன்னு வருத்தம் இல்லாமல் இல்லை. ஆனாலும், சூழ்நிலையை எதிர் கொள்ள முடியாமல், தற்கொலை பண்ணிக்கிட்டவரெல்லாம் என் அப்பான்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு. உங்க அப்பா, தான் தப்பிச்சால் போதும்ன்னு தானே எல்லாம் செஞ்சார். அவர் செஞ்சதுக்கு அவருக்கு கிடைச்ச தண்டனை கம்மி தான்.! நீயும் உன் அண்ணனும் செஞ்ச தப்புக்கெல்லாம் யார் தண்டனை கொடுக்கிறது? ரொம்ப நல்லவ மாதிரி ட்ராமாவெல்லாம் இங்கே போடாதே!” சம்யுக்தாவின் குரல் சட்டென உயர்ந்தது.
“சம்யூ! வேணாம் விடு!”
“நிஷா! உன் அண்ணனை வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்றேன். இனிமே இது எதிலுமே தலையிடாமல் உன் வேலையைப் பாரு. இது கூட, அப்பா இல்லாமல் இருக்கிற உனக்கு சப்போர்ட்டா யாராவது இருக்கனுமேன்னு தான். உன் அண்ணனை நிரந்தரமாய் உள்ளே தள்ளுறது ஒண்ணும் எனக்கு பெரிய விஷயமில்லை. இன்னொரு உயிர் போய்டக் கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன். ஒரு உயிரோட மதிப்பு எனக்கு தெரியும். அது பணத்தினால் அளவிட முடியாததுன்னு எனக்குத் தெரியும். ஒருத்தரை எரிச்சு, அந்த வெப்பத்தில் குளிர் காயற ஈனப்பிறவி நான் இல்லை. நீ கிளம்பலாம் நிஷா.!” சம்யூவை இடைநிறுத்தி, நிஷாவிடம் பேசினான் ஆதன்.
“ஆதன்! நான் இத்தனை வருஷத்தில் உன்கிட்டே நல்லபடியா பேசினதே இல்லை. அந்த ஆளோட முதல் பொண்டாட்டியோட பையன்ங்கிற நினைப்பு மட்டும் தான் என் மனசில் இருந்துச்சு. உன்னை பக்கத்தில் வச்சுட்டு அவர் கூட என்னால் வாழ முடியல. நான் தான் உன்னை ஹாஸ்டலுக்கு அனுப்பச் சொன்னேன். ஆனால் அந்த ஆளு தான் உன் அம்மாவைக் கொன்னான்னு எனக்குத் தெரியாது. இப்போ இந்த நிமிஷம் வரை, நான் உன்னை என் பையனா பார்த்ததோ, நினைச்சதோ இல்லை. ஆனால் இப்போ ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன், நீ வருத்தப்படுறதுக்கு கூட ,தகுதியான ஆள் அவர் கிடையாது. எந்த ஜென்மத்தில் அவர் புண்ணியம் பண்ணினாரோ, நீ அவருக்கு புள்ளையா கிடைச்சிருக்கே! நீ கொள்ளி போடுறதுக்குக் கூட, அவர் கொடுத்து வச்சிருக்கணும்!” சற்றுமுன் தான் மருத்துவமனையிலிருந்து வந்திருந்த காயத்ரியின், பேச்சும் துளி வருத்தமில்லாத அவர் முகமும் நிஜமாகவே ஆதனுக்கு ஆச்சர்யமாகவே இருந்தது.
“புருஷன் செத்த வருத்தம் கொஞ்சமும் இல்லையேன்னு பார்க்கிறியா? உன் அம்மாவோட இறப்பில் தான் வாழ்க்கை நடத்திருக்கேன்னு எப்போ தெரிஞ்சதோ, அப்போவே என்னைப் பொருத்தவரை அந்த ஆள் செத்துட்டார். எனக்கு என்ன ஒரேயொரு வருத்தம்ன்னா, இன்னும் கொஞ்சம் அவர் கஷ்டப்பட்டு செத்துருக்கலாம். நிமிஷத்தில் உயிர் போய்டுச்சேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு.!” என காயத்ரி சொல்லவும் விலுக்கென நிமிர்ந்து அவரைப் பார்த்தான் ஆதன்.
“இந்த உலகத்தில், எவ்வளவு பெரிய அயோக்கியனாய் இருந்தாலும் செத்த பின்னாடி, அவனை நல்லவன்னு தான் இந்த ஊரு உலகம் சொல்லும். ஆனால், பேருக்கு கூட, அவரை நல்லவர்ன்னு சொல்ல எனக்கு மனசு வர மாட்டேங்குது!” என அவர் சொல்ல,
“ம்மா! சும்மா இரு. அவர் தான் செத்துட்டாரே திரும்ப திரும்ப அதையே பேசி என்ன ஆகப் போகுது. இனி ஆக வேண்டியதைப் பார்ப்போம். இறந்து போன அவரோட ஆத்மாவுக்கு செய்ய வேண்டிய கடமையை நாம செய்யணும். அதோட அலருக்கும் நமக்குமான தொடர்பு மொத்தமா முடிஞ்சு போச்சு. இனி நம்ம வாழ்க்கையை நாம வாழணும்.!” சம்யுக்தா சொல்ல,
“சம்யூ! அவர் உங்க அப்பா! அவர் இல்லைன்னா நீங்க இங்கே இல்லை!” இடையிட்டது வாஹினியின் குரல்.
“இருக்கட்டுமே வாஹினி! அப்பாவா இருக்கட்டும். அதுக்காக, அவர் செஞ்சதையெல்லாம் மறந்துட்டு, காலம் முழுக்க நினைவுநாள் கொண்டாடிட்டு இருக்க முடியாது. எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களுக்கெல்லாம் அவர் தானே காரணம். பொறுக்கின்னு தெரிஞ்சும் அவனைப் போய் தான் பெத்தப் பொண்ணுக்குக் கட்டி வைக்கணும்ன்னு எந்த அப்பாவாவது நினைப்பாங்களா? அவர் நினைச்சார். அதுக்குக் காரணம் பணம். இந்தக் காலத்தில் நட்பு, உறவு, சொந்தம் பந்தம் எல்லாமே சுயநலத்தோட தான் இருக்கு. நாம நிஜமாவே நல்லா இருக்குன்னு நினைக்கிற உறவுகளை நாம உதாசீனப் படுத்திடுறோம். இனிக்க இனிக்க பேசி நம்மை ஏமாற்றும் பொய்யான உறவுகளை நம்பி ஏமாந்து போறோம். அப்படி ஏமாந்து போறது எவ்வளவு பெரிய வலின்னு உங்களுக்குத் தெரியுமா? இந்த நெகட்வ் ஷேட் ஹீரோஸ் எல்லாம் கதையில் படிக்க சுவாரஸ்யமாய் இருக்கும். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படி அமையறது ரொம்ப கொடுமை தெரியுமா? நான் ஆகாஷை அப்படித்தான் நினைச்சேன். ஆனால்..!” வார்த்தைகள் தடுமாற கண்களில் நீர் தேங்கியது அவளுக்கு.
“ஹேய்! வேணாம் சம்யூ! கடந்து போனது, போனதாகவே இருக்கட்டும். இன்னுமும் அதையே பேசிட்டே இருக்க வேணாமே ப்ளீஸ்..!” தன் தோள் வளைவிற்குள் கொண்டுவந்து அவள் காதுக்குள் பேசினான் ஷியாம். அவள் முகத்தைப் பார்த்ததும், இவளிடம் புன்னகை மலர, அவன் தோளில் ஆதரவாய் சாய்ந்துக் கொண்டாள் சம்யுக்தா.
“ரொம்ப சந்தோஷமா இருக்குடா ஷியாம்! ஒரு பொண்ணோட மனசையும், அவளோட சூழ்நிலையையும் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிற ஆண்கள் ரொம்பவே கம்மி. அப்படிப்பட்ட ஆண்களில் நீயும் ஒருத்தன்னு நினைக்கும் போது, ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. சம்யூ எங்க வீட்டுப் பொண்ணு, அவ கண்ணில் கண்ணீர் வந்துச்சு நீ தொலைஞ்சே, நல்லா ஞாபகம் வச்சுக்கோ!” விரல் நீட்டி மிரட்டினாள் வாஹினி. இத்தனை நேர இறுக்கம் தளர்ந்து, லேசான மனநிலை அனைவரையும் ஆட்கொண்டிருந்தது ஆதனைத் தவிர..
****
அந்த அறையில் காற்றாடியின் சத்தத்தைத் தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவே இல்லை. அந்த அறையிலிருந்த ஏசி கூட, அவர்களின் மனநிலை புரிந்து, உயிர்ப்பிக்கப்படாமல் அமைதியாய் கிடந்ததோ என்னவோ? அறையிலிருந்த மெத்திருக்கையில் கணவனின் அருகே அமர்ந்திருந்த சிம்மவாஹினி, தன் கணவனை கவலையாய் பார்த்திருந்தாள்.
நடந்தவைகளுக்கு அவன் காரணமில்லை என எத்தனை முறை சொன்ன போதும் கூட, புரிந்துக்கொள்ள மறுக்கும், அவனின் செயலில் கொஞ்சம் கோபம் கூட வந்தது அவளுக்கு.
“இங்கே நடந்தது எதுக்கும் நீ காரணமில்லை ஆதன். நீ இப்படி நடக்கும்ன்னு நினைக்கலை! அப்படி இருக்கும் போது நீயே ஏன் உன் தலையில் எல்லாத்தையும் போட்டுக்கிறே?”
“நான் எதுவும் செய்யாமல் இருந்திருந்தால், இதெல்லாம் நடந்திருக்காதோன்னு தோணுது. நான் அவர் திருந்தணும்ன்னு நினைச்சேன். என்னைப் புரிஞ்சுக்கணும்ன்னு நினைச்சேன். பணம் பதவி இதெல்லாம் நிரந்தரமில்லைன்னு காட்ட நினைச்சேன். ஆனால் அவரே நிரந்தரமாய் என்னை விட்டுப் போய்ட்டார்.”
“நமக்கு மேலே கடவுள்ன்னு ஒருத்தர் இருக்கார், விதின்னு ஒண்ணு இருக்கே ஆதன். நம்ம திட்டமிடலைத் தாண்டியும் ஏதோ ஒண்ணு நடக்கத்தானே செய்யுது!”
“தன்னால் செய்யமுடியாத விஷயங்களையும், ஏத்துக்கவே முடியாத விஷயங்களையும் விதின்னு சொல்லி கடந்து போய்டறது தான் மனுஷனோட பழக்கம். ஆனால் நான் அப்படி இல்லை சிமி. நான் இதை எதிர்பார்த்திருக்கணும். பணத்தை அவர் உயிருக்கும் மேலாக நினைக்கும் போது, இப்படியொரு முடிவை எடுப்பார்ன்னு நான் எதிர்பார்த்திருக்கணும். என்னோட சின்ன கவனக் குறைவு தான் ரெண்டு உயிரைப் பறிச்சுடுச்சு!”
“லூசு மாதிரி பேசாதே ஆதன். சில நேரங்களில் நம்மையும் மீறி சில விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். ஏதோவொரு விபத்து நடக்குதுன்னு வையி, அவசரமா ஒருத்தரை ஹாஸ்பிட்டலில் கொண்டு போய் சேர்க்கிறாங்க. அஞ்சு நிமிஷத்துக்கு முன்னால் வந்திருந்தால் காப்பாத்தியிருக்கலாம்ன்னு டாக்டர் சொல்றார். என்னைப் பொருத்தவரை அந்த அஞ்சு நிமிஷத்தை முடிவு செய்யறது மனுஷன் இல்லை. மனுஷனையும் தாண்டின ஏதோவொரு சக்தி. நான் அதுக்கு விதின்னு பேர் வச்சுக்கிறேன் அவ்வளவு தான்.!”
“சுத்த முட்டாள்தனமாவும் மூட நம்பிக்கையாவும் இருக்கு நீ பேசறது.!”
“நான் பேசறது உனக்கு முட்டாள்தனமாய் தோணலாம் ஆதன். அந்த அஞ்சு நிமிஷத்தால் நான் எதையெல்லாம் இழந்தேன்னு உனக்கு தெரியுமா? என் அம்மாவை, என் அப்பாவை, என் குடும்பம், சொந்தபந்தம் எல்லாத்தோட சேர்த்து நான் பொறந்த என் மண்ணையும் இழந்திருக்கேன் ஆதன். ஏன்னா அஞ்சு நிமிஷம் முன்னால் தோணியைக், கிளப்பியிருந்தாலோ, அஞ்சு நிமிஷம் தாமதமா போலீஸ்காரங்க வந்திருந்தாலோ, எண்ட குடும்பமும் என்னோடு இருந்திருப்பார்கள். நானும் எண்ட குடும்பத்தோட இருந்திருப்பன். உணர்ச்சிவசப்பட்டாலே பேச்சும் மாறிப் போய் விடுகிறது.!” எனச் சொன்னவளின் கண்ணோரம் நீர் கசிந்து கன்னங்களில் வழிந்தது. அன்றைய நாளின் வேதனையை அவள் முகம் மிச்சமில்லாமல் பிரதிபலித்தது.
“கேண்டி! ஸாரி, நான் எதையோ சொல்லி எதையோ ஞாபகப்படுத்திட்டேன். நீ சொன்னது ஒருவகையில் சரிதான். நம்மை மீறின விஷயங்களும் சில இருக்கத்தான் செய்யும். என் அம்மாவின் இறுதி நிமிடங்களை நான் பார்த்திருக்காவிட்டால் என் அப்பாவுக்கு எதிரா நின்னுருக்க மாட்டேன் தான். அதுவும் விதியாகக் கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் கொலை குற்றவாளிக்கு, மரண தண்டனை தானே விதிக்கிறாங்க. அவருக்கான தண்டனையை அவரே கொடுத்துக்கிட்டார். இதுவும் விதி தான்னு ஏத்துக்கிட்டு கடக்கவும் பழகிக்கணும். தேங்க்ஸ் கேண்டி க்ரஷ்! உன்னால் தான் இப்போ கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுறேன். மனசே ரொப பாரமாய் எதோ அழுத்தினா மாதிரி இருந்துச்சு. தேங்க்ஸ் அ லாட்.!”
சொன்னபடியே தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளின் தோளில் சாய்ந்துக் கொண்டான் ஆதன்.
அவளின் பூவிரல்கள் நீண்டு அவனின் முன் நெற்றிக் கேசம் கோத, இடையோடு கையிட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டான் அவளவன். அவள் தோளோடு தலை சாய்த்திருந்தவனின் விழியோரம் சிதறிய ஒற்றைத் துளி நீர், அவன் தந்தையின் இறப்புக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தது. என்ன இருந்தாலும் தந்தையாயிற்றே..!
இசைக்கும் ❤

