Loading

தன் கை மீதிருந்த சிதாராவின் கையின் அழுத்தத்திலே அவள் எவ்வளவு உணர்ச்சிப் பிடியில் சிக்கித் தவிக்கிறாள் என ஆர்யானுக்குப் புரிந்தது.

அவள் கரத்தை மறு கையால் அழுத்தியவன்,

“கூல் மினி… கூல்… இப்போ நான் உன் பக்கத்துல இருக்கேனே… சோ நீ எதை பத்தியும் திங்க் பண்ணாதே… இப்போ உன் மனசுல எதுவும் இல்ல… எல்லாம் தூக்கிப் போட்டுட்டேன்னு நினை… புரியுதா…” என ஆர்யான் கூற சரி என்பதாய் தலையசைத்தாள் சிதாரா.

ஆர்யான், “நீ ரெஸ்ட் எடுத்துக்கோ மினி… லஞ்ச் முடிச்சிட்டு நான் உன்ன வீட்டுல ட்ராப் பண்றேன்…” என்று விட்டு அறையிலிருந்து வெளியேறினான்.

பகல் உணவை முடித்துக் கொண்டு இருவரும் புறப்பட்டனர்.

சிதாரா கிளம்பும் முன் ஆர்யானின் தாய் அகிலா அவள் கையில் அழகான வேலைப்பாட்டுடன் கூடிய பட்டு சேலை ஒன்றை வழங்க சிதாரா புரியாமல் முழித்தாள்.

சிதாரா, “எதுக்கு அத்த இந்த சாரி… ” என்க,

“முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக்காய்… உன்ன வெறும் கையோட அனுப்ப முடியுமா… அதான் இந்த அத்தயோட ஒரு சின்ன பரிசு…” என அகிலா கூற,

அதனை நன்றி கூறி புன்னகையுடன் பெற்றுக் கொண்டாள்.

அதன் பின் இருவருமே கிளம்பினர்.

சிதாராவின் வீட்டை அடையும் வரையுமே அப் பயணம் அமைதியாகக் கழிந்தது.

இருவரும் தத்தம் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தனர்.

சிதாராவின் வீட்டில் ஆர்யான் காரை நிறுத்தியது கூட அறியாமல் சிதாரா சிந்தனை வசப்பட்டிருக்க,

ஆர்யான் அவள் தோள் தொட்டு உலுக்கவும் தூக்கத்திலிருந்து விழித்தது போல், “ஆஹ்… ” என சிதாரா விளிக்க,

“வீடு வந்திருச்சி மினி…” என்றான் ஆர்யான்.

அப்போது தான் சுற்றும் பார்த்தவள் எதுவும் கூறாது காரிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள்.

ஆர்யான் காரில் அமர்ந்து கொண்டு அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்க சிதாராவின் நடை தடைப்பட்டது.

மீண்டும் திரும்பி வந்தவள் ஆர்யானிடம்,

“சாரி ஜிராஃபி… ஏதோ யோசனைல இருந்தேன்.. வீட்டுக்கு வந்துட்டு போ… அம்மா கிட்ட நீ வரதா சொல்லி இருந்தேன்…” என்க,

ஆர்யான், “இல்ல மினி… நீ போ… ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு… நீ வேற டயர்டா இருப்பாய்… போய் தூங்கு… நான் இங்க ஃப்ரென்ட் ஒருத்தன மீட் பண்ண வேண்டி இருக்கு… ஆன்ட்டி கிட்ட சொல்லு வேற ஒரு நாள் கண்டிப்பா வரேன்னு..” என்க சரி எனத் தலையசைத்தாள்.

சிதாரா செல்ல, “மினி…” என ஆர்யான் அழைக்கவும் அவள் திரும்பிப் பார்க்க,

“நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு தானே… ” என ஆர்யான் கேட்க,

அவனைப் பார்த்து புன்னகைத்த சிதாரா ஆம் எனத் தலையாட்டினாள்.

ஆர்யான் அவளைப் பார்த்து புன்னகையுடன், “ஓக்கே.. டேக் கேர்… பாய் மினி…” என்றவன் கிளம்பினான்.

ஆர்யானின் கார் மறையும் வரை அதனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சிதாரா.

வெய்யோனின் வருகையால் தண்மதி அவள் மேகக் கூட்டங்களிடையே ஒளிந்து கொள்ள,

வெய்யோன் தன் ஒளிக்கதிர்களால் பூமித்தாயை அணைத்துக் கொள்ள அந் நாள் அழகாய் விடிந்தது.

மணி காலை எட்டைக் கடந்திருந்தது.

காலை சமையலை முடித்தவர் வேகமாக மாடி ஏறிச் சென்று இரவு சாத்தியது போலவே இன்னும் சாத்திக் கிடந்த கதவைத் திறந்தவர்,

“மணி எட்டாகிடுச்சி…. ஆனா இவ இன்னும் எந்திரிக்கல… இன்னொரு வீட்டுல வாழப் போற பொண்ணு இப்படியா விடிய விடிய இழுத்துப் போத்திட்டு தூங்குறது… பாக்குறவங்க என்ன தான் கதை சொல்லுவாங்க… எவ்வளவு நேரமா நானும் கத்திட்டு இருக்கேன்… கண்ண தொறக்குறாளா பாரு…. எல்லாம் இவங்க அப்பாவ சொல்லனும்… ரொம்ப தான் இடம் கொடுக்குறாரு…” என காலையிலேயே மகளுடன் சேர்த்து கணவனையும் அர்ச்சித்தவர் சாக்ஷாத் சிதாராவின் தாய் தேவி தான்.

வீட்டினுள் நுழைந்ததிலிருந்து பெற்றோரின் பாச மழையை அனுபவித்தவள் ஏதோ மனதிலுள்ள பெரிய பாரம் இறங்கியது போல் பல நாட்கள் கழித்து நிம்மதியாக கண்ணயர்ந்தாள்.

எவ்வளவு வசதியான சொகுசான இடத்தில் உறங்கினாலும் தன் வீட்டில் உறங்குவது போல வருமா…

தேவியின் அர்ச்சனைகளை ஏதோ இசை கேட்பது போல் கேட்டுக் கொண்டு தன் பாட்டிற்கு தூங்கினாள் சிதாரா.

எட்டு முப்பது போல் எழுந்து கீழே வர அவள் தந்தை சங்கர் வேலைக்கு செல்ல தயாராகி இருந்தார்.

“மா… காஃபி…” எனக் கத்திக் கொண்டு வந்தவள் தந்தையைக் கண்டு,

“குட் மார்னிங்பா….” என்று அவரை அனைத்துக் கொண்டாள்.

“குட் மார்னிங் சித்துமா… நைட் நல்லா தூங்கினியாடா…” என சங்கர் கேட்கவும் அவரை விட்டு விலகியவள்,

“எங்க நல்லா தூங்க… அதான் உங்க தர்ம பத்தினி காலையிலேயே ஒடஞ்சி போன ரேடியோவ ஆன் பண்ணிட்டாங்களே…” என பொய்யாக அலுத்துக் கொண்டாள் சிதாரா.

கையில் தோசைக் கரண்டியைத் தூக்கிக் கொண்டு தேவி கோவமாக வர அவசரமாக தந்தையின் பின்னால் மறைந்து கொண்டாள் சிதாரா.

“ஆமா… விடிய விடிய தூங்கிட்டு பேச்ச பாரு… மத்த பொண்ணுங்கள பாரு… காலையிலையே நேர காலத்தோட எழுந்து தலைக்கு குளிச்சி வாசல் தெளிச்சி கோலம் போட்டுட்டு வீட்டு வேலைல எல்லாம் அவங்க அம்மாக்கு ஒத்தாசையா இருப்பாங்க… நீயும் இருக்காய் பாரு… பசங்க கூட இந்த நேரத்துக்கு எந்திரிச்சி இருப்பாங்க…. படிக்க போறேன்னு சொல்லிட்டு படிச்சிட்டு வந்தியோ இல்ல நல்லா தூங்க கத்துக்கிட்டு வந்தியோ தெரியல…” என சிதாராவைக் கடிந்தார் தேவி.

சிதாரா, “அப்பா…. பாருங்கப்பா அம்மாவ… சும்மா திட்டிக்கிட்டே இருக்காங்க… ” என சிணுங்கவும் தேவி மீண்டும் ஏதோ கூற வர அதற்குள் அவரைத் தடுத்த சங்கர்,

“என்ன தேவிமா நீ…. பொண்ணு எவ்வளவு நாள் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கா… அவளுக்கு பிடிச்சதா பாத்து சமச்சி போடாம அவள திட்டிட்டு இருக்காய்… என் பொண்ணு ஒன்னும் அவ்வளவு சோம்பேரி எல்லாம் இல்ல…  நியுயார்க்ல இருக்கும் போது எப்பவும் நேரத்தோட எந்திரிச்சி படிப்பாள்… ஏதோ வீட்டுக்கு வந்திருக்குற சந்தோஷத்துல கொஞ்சம் அசந்து தூங்கிட்டா… அதுக்கு எதுக்கு மத்த பொண்ணுங்க கூட ஒப்பிட்டு இவ்வளவு திட்டுற… என் சித்துக்குட்டி எப்போதுமே ஸ்பெஷல் தான்… யாரப் போலவும் இல்ல… ” என சிதாராவுக்கு ஆதரவாக சங்கர் பேச,

அவர் பின் நின்றிருந்த சிதாரா தேவியைப் பார்த்து பழிப்புக் காட்டினாள்.

தேவி சிதாராவை முறைத்து விட்டு,

“நீங்க இருக்கும் வர இவள திருத்த முடியாது… அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து ஏதோ பண்ணுங்க… நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு போற வீட்டுல இவ மாமியார் நல்லா வேலை வாங்குவாங்கல்ல… அப்போ இந்த அம்மாவோட அருமை புரியும்…” என்று விட்டு சென்றார்.

தேவி சென்றதும் சிதாரா உதட்டை சுழிக்க,

சங்கர், “அவ கெடக்குறா… நீ கண்டுக்காதே சித்தும்மா… என் பொண்ணுக்கு அவள தங்கத்தட்டுல வெச்சி தாங்குறது போல ஒரு சம்பந்தம் தான் நான் தேடி கொண்டு வருவேன்… அங்க அவ ராணி மாதிரி வாழ்வா…” என்று அவள் தலையை வருடினார்.

பின், “சரி சித்து… நான் வேலைக்கு கிளம்புறேன்… இன்னெக்கி சீக்கிரமாவே வீட்டுக்கு வந்துருவேன்… என் பொண்ணு கூட டைம் ஸ்பென்ட் பண்ணனுமே…” என்றவர் தேவி, சிதாரா இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.

சங்கர் சென்றதும் குளித்து தயாராகியவள் முதல் வேலையாக ஆர்யானுக்கு அழைத்தாள்.

பல தடவை முயற்சி செய்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

சிதாரா, “என்னாச்சி இந்த ஜிராஃபிக்கு… கால் பண்ணா எப்போதும் ஃபர்ஸ்ட் ரிங்லயே எடுத்துருவானே… ஆஹ்… ஒரு வேலை மயூ கிட்ட பேசிட்டு இருக்கானோ தெரியல… அன்னக்கி இருந்த டென்ஷன்ல மயூ என்ன சொன்னாள்னும் கேக்க முடியல…” என்றாள்.

பின் லாவண்யா, அக்ஷரா இருவருடனும் சிறிது நேரம் பேசி விட்டு வைத்தாள்.

சொன்னது போலவே அன்று சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தார் சங்கர்.

நீண்ட நாட்களின் பின் சிதாரா வீட்டுக்கு வந்துள்ளதால் சங்கர் மனைவி, மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு இரவுணவுக்காக அருகிலுள்ள ரெஸ்டூரன்ட் சென்றார்.

அன்று முழுவதுமே சிதாரா மகிழ்ச்சியாக இருந்தாள்.

தங்களது மகள் பழையபடி கிடைத்ததில் சங்கர், தேவிக்குமே அளவில்லா சந்தோஷம்.

மறுநாள் சிதாரா தோள் பையையும் மாட்டிக் கொண்டு எங்கோ வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அங்கு வந்த தேவி, “எங்க கிளம்பிட்ட சித்து…” என்க,

“வெளிய சின்ன வேலையொன்னு இருக்குமா… சீக்கிரம் முடிச்சிட்டு வரேன்…” என்றாள் சிதாரா.

தேவி, “கண்டிப்பா போய் தான் ஆகனுமா சித்து… இன்னெக்கி ஈவ்னிங் உன்ன பொண்ணு பாக்க வராங்க…” என்கவும் அதிர்ந்த சிதாரா,

“மா…. என்ன சொல்றீங்க… யாரக் கேட்டு இப்போ பொண்ணு பாக்க வர சொன்னீங்க… என் கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லல..” என கோவமாகக் கேட்டாள்.

“பெத்தவங்களுக்கு தெரியாதா தன் பொண்ணுக்கு எது நல்லது கெட்டதுன்னு… அதுவுமில்லாம இது நல்ல சம்பந்தம் ஒன்னு…” என்றார் தேவி.

சிதாரா, “ஐயோ ஏன்மா புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க… எனக்கு இப்போதே கல்யாணம் வேணாம்… நான் இன்னும் படிக்கனும்…” என்க,

தேவி, “யாரு இப்போ உனக்கு படிக்க வேணாம்னு சொன்னது… ஜஸ்ட் இப்போ பொண்ணு பார்க்க தானே வராங்க… நீ வந்து சும்மா நின்னா போதும்…” என்றார்.

“என்னால அப்படி யாரு முன்னாடியும் போய் பொம்மை மாதிரி நின்னுட்டு இருக்க முடியாது..” என சிதாராவும் பதிலுக்கு பேச,

அம்மா, மகள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் சத்தம் கேட்டு அங்கு வந்த சங்கர்,

“தேவி… நீ போ… நான் சித்து கிட்ட பேசுறேன்…” என்கவும் அங்கிருந்து அகன்றார் தேவி.

சிதாரா, “ஏன்பா இப்போ பொண்ணு பாக்க வர சொல்லி இருக்கீங்க… நான் உங்களுக்கு அவ்வளவு பாரமா இருக்கேனா…” என்கவும்,

“என்ன சித்துமா இப்படி எல்லாம் பேசுறாய்… நீ எங்களுக்கு எப்படிமா பாரமா இருப்பாய்… உனக்கு விருப்பம் இல்லன்னா வர வேணாம்னு சொல்றேன்… ஆனா தங்கமான பையன்மா.. குடும்பமும் ரொம்ப நல்ல மரியாதையான குடும்பம்… விசாரிச்சி பார்த்தப்போ எல்லாரும் நல்ல விதமா தான் சொன்னாங்க… எங்களுக்கும் பையன ரொம்ப பிடிச்சிருக்கு… நீயும் பையன் கூட பேசி பாரு… பிடிச்சிருந்தா பேசி முடிக்கலாம்… இப்பவே கல்யாணம் பண்ணனும்னு இல்ல… உனக்கு சம்மதம்னா மட்டும் தான் மேற்கொண்டு பேசுவோம்… இதுக்கு மேலயும் உனக்கு இஷ்டமில்லன்னா பரவாயில்லமா… எங்களுக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்…” என்றார் சங்கர்‌.

தனது பெற்றோர் தன்னிடம் இவ்வளவு கெஞ்சுவது பிடிக்காமல் விருப்பமே இல்லாமல் சம்மதித்தாள் சிதாரா.

சங்கர் சென்றதும் கோவமாக தோள்ப் பையை கழற்றி கட்டிலில் வீசியவள் இது பற்றி ஆர்யானுக்கு தெரிவிக்க அழைக்க இப்போதும் பிஸி என்றே காட்டியது.

கடுப்பாகிய சிதாரா, “உனக்கு காதல் வந்தா ஃப்ரென்ட கூட மறந்து போயிடுமே ஜிராஃபி… மினி மினினு வருவாய்ல… மவனே அப்போ இருக்கு உனக்கு….” என ஆர்யானைத் திட்டினாள்.

மாலை நேரத்தை நெருங்க சிதாராவின் வீட்டில் பெரிய கலவரமே நடந்தது.

வேறென்னவாக இருக்கும்… பெண் பார்க்கும் படலத்திற்காக சிதாரா என்ன அணிய வேண்டும் என்று தான் தாய் மகள் இருவரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர்.

தேவி ஒன்றைக் காட்டினால் சிதாரா அதற்கு ஏதாவது குறை கூறுவாள்.

சிதாரா ஒன்றைக் காட்டினால் தேவி அதை மறுப்பார்.

இப்படியே ஒவ்வொன்றாக மறுத்துக் கொண்டிருக்க தேவியின் கண்களில் பட்டது ஆர்யானின் தாய் அகிலா கொடுத்த சேலை.

தேவி, “இதென்ன புதுசா இருக்கு சித்து… இது ரொம்ப அழகா இருக்கு… நீ வேண்ணா இதையே போட்டுக்கோ..” என்க,

அவர் காட்டிய சேலையைக் கண்ட சிதாராவின் கண்கள் மலர்ந்தன.

“வாவ்மா… இது நல்லா இருக்கு… இது என் ஃப்ரென்டோட அம்மா எனக்கு கிப்ட் பண்ண சேரி… நான் இதையே போட்டுக்குறேன்…” என்ற சிதாரா அதை உடுத்தி சாதாரண ஒப்பனையுடன் எளிய ஆபரணங்கள் அணிந்து தயாராகினாள்.

அவள் தயாராகி முடிய சரியாக அங்கு வந்த தேவி,

“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க சித்து… நீ ரெடி ஆகிட்டேல்ல…” என்றவர் சிதாராவைக் கண்டதும் தன்னையறியாமல் அவர் கண்கள் கலங்கின.

சிதாராவை நெருங்கியவர் அவள் நெற்றி வழித்து முத்தமிட்டு,

“ரொம்ப அழகா இருக்காய் சித்து… என் கண்ணே பட்டுடும்… என் பொண்ணுக்கும் இப்போ கல்யாண வயசாகிடுச்சுன்னு என்னால நம்பவே முடியல…” என்றார்.

தாயின் வார்த்தையில் மகிழ்ந்த சிதாரா பின் அவரை சீண்டும் விதமாக,

“எனக்கொன்னும் இன்னும் கல்யாண வயசு ஆகல… இது ஜஸ்ட் உங்க ரெண்டு பேருக்காகவும் வந்து நிக்க போறேன்… எப்படியும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட பிடிக்கலன்னு தானே சொல்ல போறேன்…” எனத் துடுக்காக பேச,

அவள் தலையில் தட்டிய தேவி,

“இப்பவாச்சும் பொண்ணு மாதிரி நடந்துக்குரியா பாரு… வாய்க்கு வாய் பேசிக்கிட்டு… கொஞ்சம் வெட்கப்பட்டு தலை குனிஞ்சி நடக்குறது போல நடிக்கவாவது செய்…” என்றவர் அவளை கீழே அழைத்துக் கொண்டு சென்றார்.

சிதாராவின் கையில் காஃபி ட்ரேயை ஒப்படைக்க,

அவள் தேவி சொன்னது போல் தலை குனிந்த படி ஒவ்வொருவருக்கும் கொடுக்க,

இறுதியில் மாப்பிள்ளையாக வந்திருந்தவனுக்கு காஃபியை நீட்டும் போது அவன் முகம் பார்த்தவள் அதிர்ந்தாள்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.