Loading

அத்தியாயம் 2 ❤

” உன் கண்களின் வழியே
பெருகி வழியும் காதலால்
என்னை மெய் சிலிர்க்கச்
செய்தாயே “

கார்க்காரனிடம் சண்டை போட்டு விட்டு தமிழும், கார்த்திக்கும்  அதே வேகத்தில் கோபமாக சீறி பாய்ந்து வண்டியில் சென்று கொண்டிருக்க கார்த்திக்கின் முதுகில் சுரண்டி அழைத்தான் தமிழ்.

கார்த்திக்  “என்னடா ?”

தமிழ் “என்ன மச்சி  ! என் காலரைப் பிடிச்சதுக்கே அவனை மரண அடி அடிச்சுட்ட.என் மேல உனக்கு அவ்ளோ பாசமா ?”

கார்த்திக் “அதெல்லாம் ஒன்னும்  இல்ல.உன்னை நான் மட்டும் தான் அடிக்கனும்.அவன் எப்படி அடிக்க ட்ரை பண்ணலாம்ன்னு கோபத்துல குத்திட்டேன்.”

தமிழ்  “அடப்பாவி ! நான் கூட உனக்கு திடிர்னு பாசம் வந்துருச்சோனு ஒரு நிமிஷத்துல சந்தோஷப்பட்டுட்டேன்”
என்று வராத கண்ணீரைத் துடைத்தான்.

அதை மிரரில் பார்த்துப்  புன்னகைத்தான்
கார்த்திக்.

கார்த்திக் சொந்த ஊரில் நிலைபுலன்களுடன் வசதியாகவே வாழும் குடும்பத்தில் பிறந்த செல்லப் பிள்ளை.
தந்தை கண்டிப்பு பேர்வழியாதலால் , மகனை நல்ல குணாதிசயங்களுடனேயே வளர்த்தார் மணிவாசகம்.
தன் சொந்த ஊரிலேயே பிபிஏ முடித்து விட்டு  எம்.பி.ஏ அட்மிஷனிற்காகப் பட்டணத்தில் உள்ள பிரபலமான  கல்லூரியில் நுழைவுத்தேர்வு எழுதி காத்திருக்கும் கார்த்திக் அவனுடைய அம்மா காஞ்சனாவுக்கு   எப்போதுமே சின்னப் பையன் தான்.

ஆனாலும் கார்த்திக்கை விட வயதில் சிறியவளும் குடும்ப உறுப்பினராக இருக்கிறாள்.கார்த்திக்கின் தங்கை தாமரை.கார்த்திக்கை விட மூன்று வயது குறைவு.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து பி.ஏ ஆங்கிலம் படிக்க விண்ணப்பித்திருக்கிறாள்.

தாமரையின் தினசரி  வேலைகளில் முக்கியமானது கார்த்திக்கை வம்பிழுப்பது தான்.

கார்த்திக்கை சீண்டுவதற்காகவே அவனுக்கு பிடிக்காதது எல்லாம் வேண்டுமென்றே செய்வாள்.

அவன் தாமரையின் தலையில் நங்கு நங்கு என்று கொட்டி விட அது அப்பாவிடம் பெரிய பஞ்சாயத்தாக போய் முடியும்.

அப்பாவும் கார்த்திக்கை வசவு பாடி விட்டு சென்று விடுவார்.இப்படியாக இவர்கள் குறும்புத்தனங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்க அப்போது தான் அவனுக்கு எம்.பி.ஏ
படிக்க அட்மிஷன் கிடைத்த செய்தி வந்தது.அதை தந்தையிடமும் , தாயிடமும் கூறி விட்டு
பயணத்திற்கு தயாரானான்.

கார்த்திக் ஊருக்குக் கிளம்பும் போது
மணிவாசகம் ” ம்ம். கிளம்பிட்டியா ? அங்க போய் எந்த வம்புக்கும் போகாமல் படிக்குற வேலையை மட்டும் பாக்கனும்.”

என்று பாக்கெட்டில் இருந்து கத்தையாகப் பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

” இப்போ இதை வச்சு செலவு பண்ணு. ஊருக்குப் போனதும் அக்கௌண்ட்ல மாசா மாசம் பணம் போட்டு விட்றேன். ஊதாரித்தனயா செலவு பண்ணக் கூடாது”என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

எப்பொழுதும் ஒவ்வொரு தந்தையும் தங்களது குழந்தைகளிடம்  கண்டிப்பு கலந்த அன்பை செலுத்துவர்.

தாயின் அளவில்லாத அன்பினால் எங்கு வழி மாறி போய் விடுவார்களோ என்ற நினைப்பு.

காஞ்சனா கார்த்திக்கின் நெற்றியில் திருநீறு பூசி விட்டு அவர் பங்குக்கு பணம் கொடுத்தார்.

காஞ்சனா “பத்திரமா போய்ட்டு வாப்பா. அங்க ஹோட்டல்ல – லாம் சாப்பிட்டு உடம்புக்கு ஒத்துக்காது.எவ்ளோ டயர்டா , பசியா  இருந்தாலும் நீயே சமைச்சு சாப்பிடு “
அவன் ஊருக்கு செல்லும் வழியில் உண்ணுவதற்காக சாப்பாட்டு பொட்டலங்களைக் கொடுத்தார்.

தாமரை அவனருகில் கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தாள்.

கார்த்திக் ” ஏய் வாலு ! என்ன கண்ணுல தூசி விழுந்துருச்சா ?”

தாமரை அதைக் கேட்டு கடுப்பாகி,
” நல்லா பேசுடா.இதுவும் பேசுவ  ! இன்னும் பேசுவ.  நானே நீ ஊருக்கு கிளம்பறதை நினைச்சு அழறேன்.”  கண்ணீர் சொரிய ,

கார்த்திக் அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டு ,” செல்லக்குட்டி தங்கச்சி  எதுக்கும் அழவே கூடாது ” அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான்.

கார்த்திக் “அண்ணா லீவுக்கு உன்னைப் பாக்க கையில கிஃப்ட்டோட வந்துருவேனாம். அது வரைக்கும் தங்கச்சி நல்லாப் படிக்கனும் சரியா. அப்பப்போ அண்ணா கூட போன்ல பேசனும்.ஓக்கேங்களா ?”

தங்கையின் தலையைத் தடவி விட்டு அவளின் கண்ணீர் நிறைந்த கையசைவையும், பெற்றவர்களின் ஆசியையும் சுமந்து கொண்டு கல்லூரியில் சேர வந்தான்.

கார்த்திக் புது ஊருக்கு வந்து முதலில் சிரமப்பட்டாலும் போகப்போக பழகிக் கொண்டான்.

கல்லூரியில் அட்மிஷன் போடும் போது தான் தமிழ்க்குமரனின் அறிமுகம் கிடைத்தது.

தமிழும் படிப்பதற்காக வேறு ஊரில் இருந்து வந்தான்.

ஆனால் அவன் கார்த்திக் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வந்து விட்டதால் அந்த ஊரையே அலசி ஆராய்ந்து விட்டான்.

அவன் கார்த்திக்கின் தோளில் கைப்போட்டு உரிமையுடன் பேசுவதும், அந்த ஊரின் மூலை முடுக்கெல்லாம் சொல்லிக் கொடுப்பதும் பிடித்திருந்ததால் கார்த்திக்கின் நண்பன் என்ற சலுகை கிடைத்தது தமிழுக்கு.

“ஹாஸ்டல் நமக்கு  கம்ஃப்ர்டபிளா இருக்காது கார்த்திக் நாம வெளில ரூம் எடுத்து தங்கிக்கலாம் ”  அவனது யோசனையும் நன்றாக இருக்க, இருவரும் ஒரு வாடகை வீட்டைப் பிடித்தனர்.

அந்த வீட்டுக்காரர்  ” தண்ணி, தம் இப்படி எந்த கெட்டப் பழக்கமும் உங்களுக்கு இல்லையே ?”

தமிழ்  ” ஆமா – ன்னு சொன்னா என்ன பண்ணப் போறீங்க  ?

வீட்டுக்காரர் “ம்ம் ! உன் பேச்சே சரியில்லையே  !

கார்த்திக் “குமரா  ! வாய வச்சுட்டு சும்மா இருடா ”  வீட்டுக்காரரிடம் மன்றாடி தங்க சம்மதம் வாங்கினான்.

எம்.பி.ஏ  முதலாம் ஆண்டு படிக்கிறார்கள்.
தமிழ் ஒரு  பெண்ணை நான்கு மாதங்களாக காதலிக்குறான். அவளிடம் காதலை சொல்ல தான் இத்தனை வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் கல்லூரியில் சேர்ந்தே நான்கு மாதங்கள் தான் ஆகின்றன.கண்டதும் காதல் வந்து விட்டது.கார்த்திக்  வர மாட்டேன் என்று தான் கூறினான்.ஆனால் தமிழோ  ஏற்கனவே தண்ணீர்  வர தாமதம் ஆகி குளித்தும்,குளிக்காமல் ரெடி ஆகி இருந்ததனால் பதட்டமாக இருக்கிறது என அவனை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு வந்து விட்டான்.கார்த்திக்கும் வேறு வழி இல்லாமல்உடன் வருதிறான்.

அந்த பிரபலமான கா ஃபி ஷாப்பின் பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.அங்கு  எப்போதும் கூட்டம் வழிந்த மயமாகவே இருக்கும்.எல்லா டேபிள்களிலும் காதலர்கள் நிரம்பி இருக்கினர்.

தமிழ்  ” மச்சி  ! ஒரு ஆல் த பெஸ்ட் சொல்லுடா ?”

கார்த்திக்  ” ஆமா இவரு அப்படியே பப்ளிக் எக்ஸாம் எழுதப் போறாரு மாலை போட்டு வழி அனுப்ப . அட  ச்சீப் போடா ”  இனிய  மொழிகளால் வாழ்த்தி அனுப்பினான்.

தமிழ் அவனைத் திட்டிக் கொண்டே ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து தோழிகளிடம் கதை பேசிக் கொண்டிருந்த தியாவை நோக்கி பதட்டத்துடனும், அதே சமயத்தில் பயத்துடனும்  அவளருகில் சென்றான்.

இதை எல்லாம் தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்த

கார்த்திக் ”  பாவம் யாரு பெத்த புள்ளையோ  ! இப்படி நடுங்கிட்டுப் போகுது.நல்லவேளை நமக்கு இப்படி எதுவும் பிரச்சினை இல்லை.நாம எப்பவும் ஹேப்பியா தான் இருப்போம்”

கண்களில் கூலிங் கிளாசை மாற்றிக் கொண்டு ஸ்டைலாக நின்று விதவிதமான போஸ்களில் செல்பி எடுக்க ஆரம்பித்தான்.

ஆனால் அவனுடைய அந்த ஆனந்தமோ ! அல்லது ஆணவமோ ! எத்தனை நாட்கள் அவனுடன் இருக்கும் ? என்பதை பின்வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.

  – தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்