Loading

எனதழகா  – 45 ❤️

அலைபேசி நொறுங்கியதில் கேசவர் அதிர்ந்து திரும்பி பார்க்க, மீரா ஒரு அடி பின்னே நகர்ந்து விட்டார்.

” ஏன்ப்பா உனக்காக தானே அப்பா பேசுறாங்க? ஏன் இந்த கோபம்? ” என்று மீரா மெதுவாக கேட்டார்.

“என் அம்மாவை அதிகாரம் பண்ணுற உரிமை உங்களுக்கு யாரு கொடுத்தா? உங்களோட அதிகாரத்தை உங்க புருஷன், பிள்ளை, அப்பா, அம்மா, உங்க அண்ணன் இவங்கக்கிட்ட மட்டும் காமிங்க! அதை விட்டுட்டு எதுக்கு என் அம்மாகிட்ட காண்பிக்கிறீங்க ? ” என்று முதல் முறையாக தனது அன்னைக்காக அத்தையிடம் ஆதரவாக பேசினான்.

“டேய், அத்தை உனக்கு தான் ஏதோ குடைச்சல் கொடுத்துடானு உனக்கு ஆதரவா பேசுறா ? நீ என்னடானா அவளத் திட்டுற? ” கேசவர் மெதுவாகத் தான் கேட்டார்.

“வேலைக்கு போறதும்  வர்றதும் , வேலையைப் பத்தி மட்டுமே நினைக்கக் கூடாது. வீட்லையும் என்ன நடக்குதுனு தெரியணும்? ” என்று  எகிறினான் அர்ஜுன்.

” இப்போ இங்க யாரு வீட்டைப் பத்தி கவனிக்காம இருக்கா? ” என்று கோவிலுக்கு சென்ற லஷ்மி மற்றும் வசுதேவர்  கேட்டுக் கொண்டே உள்ளே வந்தனர்.

“உங்க மனைவிக்கு மட்டும் சகல மரியாதையையும் கொடுக்கிறீங்க ? ” என்று அர்ஜூன் அடுத்து பேசுவதற்குள், “அர்ஜுன் ” என்று பாமா, கேசவர் மற்றும் மீரா கத்தினர்.

கேசவரையும் , மீராவையும் விடுத்து தன் அன்னையைப் பார்த்து முறைத்து விட்டு “இப்போ கொடுக்கிற குரலை வேற இடத்தில் உபயோகப்படுத்தி இருந்தால் இன்னைக்கு இந்த நிலைமையில் நான் இப்படி நின்னுருக்க மாட்டேன் “

” இப்போ என்ன உனக்கு நடந்தது? எதுக்கு உனக்கு இவ்ளோ கோபம் ? ” கேசவர் அர்ஜுனின் வார்தைகளில் ஏதோ நெருடலாக இருந்தது. அதனால் பொறுமையாகவே கேட்டார்.

” அதைப் போய் உங்க மனைவிக்கிட்ட கேளுங்க. அம்மாவாக அவங்க எனக்கு எல்லாமே செஞ்சாங்க. ஆனால், எனக்கு ஆதரவா , துணையா இல்லை. அப்புறம் தாத்தா உங்களுக்குள்ளையும் ஒரு அந்நியன் இருக்காரு . நல்லா தெரிஞ்சுக்கிட்டேன்.” என்று கூறி தலையை அழுந்த கோதிவிட்டு ,

“நான் லவ் பண்ணும் போது அவ என் வாழ்க்கைக்கு ஏற்றவளானுத் தான் நான் பார்ப்பேன். என் வசதிக்கு தகுந்தவளானு பார்க்க தோணல. ஏன்னா, என்னை அப்படி நீங்க வளர்க்கலை. ஆனால், ஒன்னு புரியலை தாத்தா. உங்க பசங்களுக்கு பாக்காதவங்க எதுக்கு எனக்கு மட்டும் ? ” என்று  கை முஷ்டியை இறுக்கிக் கொண்டு கேட்டாலும் வசுதேவரின் காரணம் இதுவாக இருக்காது என்று மனதின் ஒரு ஓரத்தில் அரித்துக் கொண்டே இருந்தது.

உள்ளே வந்த ஆருஷி, இதைக் கண்டும் காணாதது போல் சென்றுவிட்டார். பின்னால், வெங்கடேஷனும் ஒன்றும் கூறாமல் சென்று விட்டார்.

இதைக் கேட்ட மீராவிற்கு தான் சந்தோஷம் தாளவில்லை. “நாம் எதுவும் செய்யாமலேயே இவர்கள் காதல் விவகாரம் முடிந்த விட்டது. ஆனால், அவளின் புகைப்படம், விலாசம், குடும்பம் பற்றி எதுவும் தெரியவில்லையே ” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே தன் மகள், கணவரின் பின் சென்று விட்டார். ஆனால், அர்ஜுன் அன்னைக்காக தன்னை திட்டியதை  மறந்து விட்டார்.

வேகமாக தனது மகளிடம் அர்ஜுனின் காதலைப் பற்றிக் கூறினார். ஆனால், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மேலே சாப்பாடு கொண்டு வருமாறு தொலைபேசியில் வேலையாட்களிடம் கூறி விட்டு, அன்னையிடம் திரும்பி ” ஐ ஆம் டோட்டலி டையர்டு. எனக்கு தேவை ரெஸ்ட். இதைப்பத்தி அப்புறம் பேசுவோம் ” என்று கூறிவிட்டு, தனது தகப்பனிடம் ” அப்பா, ஒரு டிஸ்கஸ்சன் இருக்கு. இப்போ நீங்க ஃபிரியா ? ” என்று கேட்டாள்.

“உனக்கு டையர்டா இருக்குனா , சாப்பிட்டு ரெஸ்டு எடுடா. நாளைக்கு பாத்துக்கலாம்” என்று வெங்கடேஷன் பாசமுடன் கூற, “ஏண்டி, நான் சொல்ல வர்றதை காதுக் கொடுத்து கேட்க மாட்டேங்கிற . இப்போ உங்க அப்பாகிட்ட மட்டும் பேசணும்னு சொல்லுற ? என்னடி இது? எனக்கு என்ன மரியாதை அப்போ? ” என்று எகிறிக் கொண்டு பேசினார் மீரா.

” அம்மா” சலிப்புடன் ஆருஷி பேசத் தொடங்க,  “ஆருஷி, முதல ஃபிரஷ் ஆகிட்டு சாப்பிட வா, அப்புறம் பேசலாம்” என்று  கூறி மகளை அனுப்பி விட்டு மீராவைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு எதுவும் கூறாமல் குளியலறைக்குள் நுழைய, “என்ன பாத்தா பைத்தியம் மாதிரி இருக்கா? “மீரா ஆக்ரோசமாக கத்தினார்.

“கீழே நடக்கிற விஷயம் என் பொண்ணுக்கு தேவையில்லாதது. அதனால, இனிமே அதைப்பத்தி பேச வேண்டாம். அப்புறம், உனக்கு தெரியாத விஷயத்தில தலையிடாத !” என்று கூறிவிட்டு வெங்கடேஷன் குளியலறைக்கு சென்று விட்டார் .

மீரா அடுத்து பேச வருவதற்குள் வெங்கடேஷனும் சென்றுவிட்டார். அவர் வரும் வரை காத்திருக்க காத்திருக்க கோபம் கொப்பளித்தது. அது இன்னும் அதிகமாகும் விதமாக வெங்கடேஷன் வெளியில் வந்தவுடன் ஆருஷியின் அறைக்கு சென்றதோடு அறைக்கதவை அறைந்து சாத்தி கதவை அடைத்துக் கொண்டார். எவ்வளவு தட்டியும் இருவரும் திறக்கவில்லை.

முதல் முறையாக தன்னை தனித்து விட்டது போல் உணர்ந்தவர் அமைதியாக கண்ணீர் வடித்து கொண்டே படுத்துக் கொண்டார். எப்பொழுது கண் அயர்ந்தார் என்று தெரியவில்லை. திடீரென்று அவரின் மேல் கை விழுந்ததில் திரும்பி பார்க்கையில் ஆருஷி தான் உறங்கி கொண்டிருந்தாள்.

எழுந்து கணவரைத் தேட , சோபாவில் படுத்திருந்தவரை கண்டு மூச்சு மட்டுமே விட முடிந்தது. அவரை எவ்வளவு நேரம் பார்த்தார் என்று தெரியவில்லை ஆருஷி திரும்பும் அரவம் கேட்டு படுத்துக் கொண்டார்.

இங்கு  அர்ஜுன் கேட்ட கேள்விக்கு வசுதேவர் எதுவும் கூறாமல் சென்று விட்டார். கூடவே லஷ்மியும் செல்ல, பாமா மகனையும் , கணவரையும் பார்த்து விட்டு சமையலறைக்கு செல்ல, அர்ஜுனுக்கு தலையில் சூடேறியது. தரையில் உள்ள பொருள்களை எட்டி உதறி விட்டுவிட்டு வெளியில் சென்று விட்டான்.

கேசவர்  பாமாவைக் காண சமையலறைக்கு செல்ல, வெளியில் வந்த பாமா , அவரை பார்த்த பாமா முதன்முறைக “என்னை ஏன் கல்யாணம் செஞ்சிங்க ? என் பிள்ளைகள் பாவம் .”என்று கூறிவிட்டு அவரின் அறைக்கு சென்று விட்டார்.

பாமா கேட்ட கேள்வியில் அதிர்ந்து அந்நிலையில் இருந்தவருக்கு முதல் முறையாக “நாம் குடும்பத்தை கவனிக்க  தவற விட்டு விட்டோமோ? ” என்று பயம் மனதில்  தோன்றி  பாரமாகியது.

வெளியில் சென்ற அர்ஜூன், ஆகாஷை அழைத்துக் கொண்டு சென்ற இடம் மது அருந்தும் இடத்திற்கு. அன்றிலிருந்து இன்று வரை மாதுவை மறப்பதற்கு மதுவை நாடினான். ஆனால், எப்பொழுதும் ஆகாஷின் துணையோடு தான் இருப்பான். அன்று ரியாவையும் அழைத்து வந்து விட்டான்.

போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும்
என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி

 

எனதழகா – 46 ❤️

அன்று நடந்ததை அவரவரின் எண்ணத்தில் நினைத்துக் கொண்டே பயணம் மேற்கொண்டனர். அன்றிலிருந்து பாமாவிடம் அர்ஜுன் பேசுவதில்லை.  அது போல் கேசவருக்கும், பாமாவிற்கும்  இடையில் பனிப்போர் நடந்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அனைவரும் ஊட்டியை நோக்கி பயணம் மேற்கொண்டனர். உதகமண்டலம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற பலகையின் அருகில்  காவல் துறை அதிகாரிகள் வண்டியை நிறுத்திய பின்னரே அனைவரும் சுயநினைவிற்கு வந்தனர்.

வெளியில் இறங்கிய பின்னரே சில்லென்ற ஊசி உயிர் வரை ஊடுருவதை உணர முடிந்தது. சுற்றி பார்த்த பொழுது எங்கும் பச்சை பசேலென்று இருந்தது. மலைகளை போர்வை போல் தேயிலை படர்ந்திருக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்திழுத்தது.  பெண்களுக்கு அவர்களின் அழகை இன்னும் அழகாகக் காட்டுவதற்கு ஒப்பனைகள் செய்வது போல் , தேயிலை தோட்டத்தை அழகாக சீர் செய்திருந்தனர்.

எங்கும் மக்கள் ஸ்வெட்டரை அணிந்து கொண்டு ஊர்ந்து கொண்டிருந்தனர். ஆனால், அதை ரசிக்கும் மனநிலையில் தான் அர்ஜுன் இல்லை. அவன் சுற்றி பார்த்துக் கொண்டிருக்க, ஆனால் அவன் மனம் அதில் லயிக்கவில்லை என்பதை உணர்ந்து ஆதிராவே அவனை அழைத்து காரில் ஏறச் சொன்னாள்.

அரை மணி நேரப் பயணத்தில் அனைவரும் மருத்துவமனையை வந்தடைந்தனர். மீராவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டு. அவருடன் யாரும் தங்க தேவையில்லை. தேவையின் பொழுது வந்தால் போதும் என்பதால், கிளம்பும்  வரை வெங்கடேஷனை துணைக்கு வைத்தனர்.

பின்பு, ஆருஷிக்கான அனைத்து டெஸ்டுகளும் எடுக்க அனுப்பி விட்டனர் ஆதிராவின் துணையோடு. வா தேவரை பரிசோதித்து விட்டு சில மருந்துகளை உட்கொள்ளுமாறு கூறிவிட்டனர். வீட்டிற்கும் செல்லலாம் என்பதால் அவரை கேசவர் அழைத்துச் சென்று விட்டார்.

அவ்வப்பொழுது பரபரவென இருந்ததால் எங்கு தங்கப் போகிறோம் என்பதை கேசவரிடம் யாரும் கேட்கவில்லை என்று இல்லை யாருக்கும் தோணவில்லை.

லஷ்மி அம்மாவிற்கு கட்டுகள் மட்டும் பிரித்து டிரெஸ்ஸிங் செய்து வேறு புதிய கட்டுகளை போட்டு விட்டு அவரையும் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறி விட்டனர்.

ஆருஷியின் ரிப்போர்ட் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் அவளையும் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறி விட்டனர்.

அதன் பின்னரே அனைவருக்கும் பசி வயிற்றை கிள்ளியது. அனைவரின் வயோதிகத்தோடு , உடல் நிலையையும் கருத்தில் கொண்டு வீட்டிற்கே செல்லலாம் என்று  நினைத்து கேசவரை அழைத்தான் அர்ஜீன்.

கேசவர் ஆதிராவிற்கு தெரியும் இவ்வீடு என்று கூறியதால், அவன் தாத்தாவின் நண்பனான RA2 டெக்னாலஜி ஒனர் மிஸ்டர் துருவின் வீட்டினரின் உதவியில் தான் சென்றிருப்பார் என்று முன்பே யூகித்திருந்தான்.

ஆதிரா ஒரு காரில் டிரைவராக இருக்க, அதில் அர்ஜூன், லஷ்மி அம்மா, பாமா அமர்ந்திருந்தனர். மறுகாரில் ஆகாஷ் வண்டியோட்ட, வசுதேவர், வெங்கடேஷன் மற்றும் ஆருஷி பயணித்தனர்.

ஆதிராவை பின்தொடர்ந்து ஆகாஷின் வண்டியும் பதினைந்து நிமிட பயணத்தில் வந்தடைந்தது கோதை மாளிகை .அவ்விடமே மேகத்தில் மூழ்கி அங்கங்கே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

பரந்த குளத்தில் உள்ள ஒற்றை சிவந்த தாமரை போல், சிறு சிறு குன்றுகளுக்கு இடையில்  வீற்றிருந்தது இவ்வழகிய துவாரகா மாளிகை. இம்மாளிகை  ஹைதராபாத்தை சேர்ந்த பைகா குடும்பத்தினருக்கு சொந்தமாக  இருக்க ஃபாலாக்ணுமா அரண்மனையை போன்று வடிவமைத்திருந்தனர்.

உள்ளே நுழையும் பொழுது ஆதிராவே இறங்கி தனது கைரேகையை வைத்து திறந்தாள். அதில் அவளை ஆச்சர்யமாக பார்க்க , “ராகுல் வீடும் இது தான்  ” என்று அர்ஜுனிற்கு பதலளித்தாள்.

அப்பொழுதும் அவளையேப் பார்க்க ” இங்க எல்லாரும் அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க தான் செய்யனும் ” என்று ஒரு மாதிரி பதட்டத்தில் கூற, “எங்களை மாதிரி தெரியாதவங்க வந்தால் ? ” என்று பாமா கேட்க, ஆதிரா பதிலுரைக்கும் முன் ” கேமரா வச்சிருப்பாங்க, அதில் புதுசாக யாரேனும் வந்தால் சத்தம் வரும். அதை வைத்து கதவை திறப்பார்கள் ” என்று  அர்ஜூன் கூறி ஆதிராவை பார்க்க , ” அதே அதே!” என்று கூறி கதவு திறப்பதற்கு காத்துக் கொண்டிருந்தாள்.

இத்தகைய குளிரிலும் அவளின் வதனத்தில் வேர்வை வடிவது ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணியது. அதற்கு மேல் அவளின் இன்னல்களை பொறுக்காமல் கதவு திறந்தது.

அதனுள் சென்றவுடன் ஏதோ சொர்க்க லோகத்திற்கு சென்றது போல் ஒரு பிரம்மை. உள்ளே நுழைந்தவுடன் மேகங்கள் அனைத்தும் கீழ் இறங்கி வரவேற்பது போல் இருந்தது. அதைக் கண்ட நொடி அர்ஜுன் கார் கண்ணாடியை திறந்து விட்டான்.

ஜம்புலன்களின் பசியும் அடங்கியது போன்ற ஒரு உணர்வு. கண்குளிர எங்கும் பூக்களும், சீராக வெட்டிய புல்களும், பல வகையான மரங்களும் இருந்தது.

நாசியில் பூக்களின் நறுமணம் கவர்ந்தது. தொடு உணர்வில் காற்று தன்னை தீண்டுவது ஒரு வகையான வெட்கத்தை உண்டாகியது போன்று இருந்தது.

பசியினோடு இத்தகைய அழகான இயற்கையோடு ஒரு ஏலக்காய் டீயுடன்,  தூள் பஜ்ஜி சாப்பிடால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

காதிற்கு பறவைகளின் ஒலியோடு கேட்ட குரல் ஒன்று எங்கோ ஒரு குகையில் இருந்து ஒலிப்பது போல் இருந்தது. மாளிகையின் அருகில் செல்ல செல்லவே அவ்வோசை நன்றாக கேட்டது. அக்குரல் கேட்டக் குரல் போல் உள்ளதே என்று யோசித்துக் கொண்டிருக்கையில் “அத்தை ” , “பாமா ” என்று ஒரு சேர இருவரும் கத்திக் கொண்டே ஒருவரின் கையை இன்னொருவர் பிடித்துக் கொண்டனர்.

அச்சத்தத்தில் அதிர்ந்து ஆதிரா வண்டியை நிறுத்த, அர்ஜுனும் ஆதிராவும் திரும்பி பார்த்த நொடி, வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த ஆகாஷ்  கவனிக்காமல் அர்ஜுனின் வண்டியில் மோதி விட்டான்.

கண் கலங்கி ஆனந்ததில் திளைத்திருந்த பாமா மற்றும் லஷ்மி அம்மாவை சந்தேகத்துடன் பார்த்து கொண்டிருந்தவன் ஆகாஷ் செய்த செயலில் இறங்கி சென்று விட்டான்.

அவன் சென்றதை உறுதி செய்த ஆதிரா லஷ்மி மற்றும் பாமாவிற்கு  ஆம் என்று தலையாட்டி விட்டு, குடுகுடுவென கீழே இறங்கி ஓடிவிட்டாள்.

பாமா மற்றும் லஷ்மிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. கையைப் பிடித்துக் கொண்டு சந்தோசத்தை பகிர்ந்தனர். அதே நேரம் வெங்கடேஷன் அபி மற்றும் நிவானுடன் இருக்கும் வாட்ஸ் அப் குழுவில் ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டிருந்தார்.

ஆனால், ஆகாஷோ அடி  பலமாக வாங்கி கொண்டிருந்தான். அர்ஜுனின் சம்பாத்தியத்தில் வாங்கிய வண்டி என்பதால் அர்ஜுனிற்கு  பன்மடங்கு எகிறியது.

வேறு சிந்தனையில் இருந்த ஆதிரா வேடிக்கை மற்றுமே பார்த்துக் கொண்டிருக்க, ஆகாஷ் தான் அருகில் உள்ள செடியை பறித்து அவள் மேல் எறிந்து சுயத்திற்கு கொண்டு வந்தான்.

அதன் பின்னே , அர்ஜுனைப் பிரித்து அவனை காருக்கு அனுப்பி வைத்து விட்டு , ஆகாஷிடம் மெதுவாக “தெரியாமல் தான்டா நீ நிறையா நல்ல காரியம் பண்ணுற ” என்று கூறி கட்டியணைத்து விட்டு வண்டியை எடுத்தாள்.

இங்கு ஆகாஷோ கேலி செய்கிறாள் என்ற கோபத்திலும், அடித்து விட்டான் என்ற கடுப்பிலும் வண்டிக்குள் செல்ல, ரியா அழைத்தாள்.

அனைத்து கோபத்தையும் திரட்டி அவளது அழைப்பை எடுக்க “என்னடா பாண்டா ! போய் சேர்ந்தாச்சா ? ” .

“நான் போகலைனா நீ வந்து காரை தள்ளி விட வா போற? மூடிட்டு வைடி போனை !” என்று கத்தியப் பின் தான் நிம்மதியாக உணர்ந்தான்.

அதே நேரம் , ரியா கட்டாகிய போனை பார்த்துக் கொண்டிருக்கும் நொடி “மே ஐ கம் இன் ” என்று கூறி உள்ளே நுழைந்தான் அபி.

கீர்த்தி ☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்