பேரன்பின் பெருஞ்சலனமே-22

Loading

சலனம்-22

எப்போதும் இரவு முழுதும் உறக்கம் தொலைத்துவிட்டு, விடியல் தாண்டி உறங்கிப் பழகிய எனக்கு, அன்று காலையே விழிப்பு வந்துவிட்டது.

 

 

முதன்முறையாய் மனதில் ஒருவித பதற்றமும், பயமும் குடியிருந்தது. அவளிடம் திருமணத்தைப் பற்றி பேச வேண்டும். எப்படி பேசுவது? அவள் எப்படி எடுத்துக் கொள்வாள்? நான் அவளிடம் கேட்பது சரியாக இருக்குமா? எனக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டிருந்தன.

 

ஆனால், அவளிடம் திருமணத்திற்குக் கேட்பதைத் தவிர, வேறேதும் வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 

 

அவந்திகா அன்னையாய் நினைத்துக் கொண்டிருப்பது, சம்யூவின் உருவத்தைக் கொண்டு நடமாடும் சமுத்ராவைத்தான். இப்போது என் குழந்தைக்காக நான் யோசிக்க வேண்டுமானால், சமுத்ராவிடம் பேசித்தான் தீர வேண்டும். ஆனால் கொஞ்சம் தடுமாற்றமும், தயக்கமும் எனக்குள் இருந்தது. சம்யூவிடம் பேசுவதெற்கெல்லாம் நான் இவ்வளவு தூரம் யோசித்ததில்லை. ஆனால் அவள் உருவத்தையே கொண்டிருந்தாலும், இவளிடம் பேசுவதற்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

 

 

இவளிடம் பேசுவதற்கு குறைந்தது ஆயிரம் முறைகளாவது யோசிக்கத்தான் செய்கிறேன்.
பணிப்பெண் வைத்து விட்டுப் போன தேநீரை ருசித்தபடி, சமுத்ராவிடம் பேசுவதற்கான வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு இயக்குநராக, ஒரு கதை சொல்லியாக, பூ, செடி, மரம், கொடி, கட்டிடம், கணிணி, வானம், பூமி என அனைத்துடனும் பேசத் தெரிந்த எனக்கு, இவளிடம் பேச வேண்டும் என நினைத்தாலே பதறியது. கையிலிருந்த கோப்பையில் தேநீர் காலியான பிறகும் கூட, யோசித்தபடியே நான் அமர்ந்திருக்க, அழைப்புமணியின் ஓசை கேட்டது.

 

 

‘சித்தார்த் தான் வந்திருப்பான்!’ என நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பணிப்பெண் கதவைத் திறக்கும் சத்தமும், யாரோ மேலே ஏறி வரும் சத்தமும் கேட்டது.

 

“யாரு?!”

 

 

என் முன்னால் வந்து நின்ற பணிப்பெண்ணிடம் நான் கேட்க,

 

“சமுத்ரா மேடத்தைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க சார். மேடம் தான் வரச் சொன்னாங்களாம்!” எனச் சொல்லிவிட்டு பணிப்பெண் சென்றுவிட,

 

 

‘மேடம் தான் வரச் சொன்னாங்களாம்!’ என்ற வார்த்தையில் என் மனம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. நான் இப்படியொன்றை எதிர்பார்க்கவே இல்லை.

 

 

‘யார் அவன்?’ என் செவி உணர்ந்த ஆண் குரலை வைத்து, என் கண்கள் எதிர்பார்ப்பாய் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தது. ‘புதிதாய் இவன் யார்?’ என்ற கேள்வியுடன், என் இதயம் சத்தமில்லாமல் அதிர்ந்துக் கொண்டிருந்தது.

 

 

நான் வரவேற்பில் கிடந்த மெத்திருக்கையில் அமர்ந்திருக்க,

 

“விக்ரம்! குழந்தையைப் பிடி!” எனக் குழந்தையை என் கரத்தில் தந்துவிட்டு, அவசரமாய் வாயிலை நோக்கி ஓடினாள் சமுத்ரா.

 

 

“யாரைப் பார்க்க இவள் இவ்வளவு ஆர்வமாய் ஓடுகிறாள்?” எனப் புலம்பியபடி அவள் மீதே கண்களைப் பதித்திருந்தேன்.

 

 

“ஹேய் கார்த்திக்! எப்படி டா இருக்கே? ஒரு ஃபோன் கூடபண்ணுறது இல்லையே.. எருமை! என்னை மறந்துட்டே தானே?” எனக் கேட்டபடியே அந்தக் கார்த்திக்கை அவள் அணைத்து விடுவிக்க, எனக்குள் கோபம் கிளர்ந்தெழுந்தது.

 

“வேலையில் பிஸி டி பக்கி!” என அவனும் பதில் சொல்ல, நான் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

 

“அப்படி என்னடா வேலை உனக்கு? பூமியை சுத்தி விடற வேலை பார்க்கிறியா? உள்ளே வந்து தொலை!”

 

“ஆமா டி! பூமியே என்னால் தான் சுத்துது! என்னை இவ்வளவு கேட்கிறியே.. மேடம் எங்கே போனீங்க? ஒரு மாசமா அப்டேட் எதுவுமே இல்லை. நீ வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டு வாங்கிட்டதா சொல்றாங்க.. என்ன தான் ஆச்சு?” எனக் கேட்டபடியே, அவனை உள்ளே அழைத்து வந்து என் எதிரே கிடந்த மெத்திருக்கையில் அமர வைத்தாள் சமுத்ரா.

 

 

“சூழ்நிலை அப்படி ஆகிப் போச்சுடா! என்ன சாப்பிடுற?!”

 

“எனக்கு எதுவும் வேணாம் ப்ளூ! நான் கேட்டதுக்கு நீ முதலில் பதில் சொல்லு.!” எனக் கேட்டான் அவன். அந்தக் கார்த்திக் அவளை ப்ளூ என அழைத்தது எனக்கு எரிச்சலாய் இருந்தது.

 

 

“என்ன சொல்லட்டும்? அதான் சொன்னேனே டா, என் சூழ்நிலை அப்படின்னு.!” என அவள் சொல்லும் போதே, அவளுக்கு தொண்டை அடைத்ததை என்னால் உணர முடிந்தது.

 

 

ஒற்றைக் கரத்தில், குழந்தையைத் தூக்கியபடியே தண்ணீர் குவளையை மறு கரத்தில் எடுத்து, அவள் முன்னால் வைத்தேன்.

 

“ஆமா! இது யாரு? புதுசா இருக்கு?” என என்னைப் பார்த்துக் கேள்வி கேட்டான் கார்த்திக்.

 

 

“கார்த்திக்! திஸ் இஸ் விக்ரம்! அப்பறம் இந்தக் குட்டி பேரு, அவந்திகா! இவளுக்காக தான் வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டேன். இப்போ குழந்தையை நான் தான் பார்த்துக்கிறேன்.!” என அவள் சொல்லும் போதே, அவள் விழிகளில் நீர் தேங்கி நின்றது.

 

“ஓ! அந்த டாக்ஸிக் ஹஸ்பண்ட் இவர் தானா? எங்கே உன் ட்வின் சிஸ்டர்? இப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் ஏன் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழணும்? யாரும் யாருக்கும் அடிமை இல்லை. முதலில் உன் சிஸ்டரை இந்த ரிலேஷன்ஷிப்பிலிருந்து வெளியே வரச் சொல்லு! அது மட்டும் தான் ஒரே தீர்வு!” அவன்பாட்டுக்கு பேசிக் கொண்டே போனான்.

 

குழந்தையைக் கரத்தில் வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமையை இழந்துக் கொண்டிருந்தேன் நான்.

 

“சம்யூ இப்போ இல்லை கார்த்திக்! ஷீ இஸ் நோ மோர்! ஒன் மன்ந்த் ஆகிடுச்சு. நீ நியூஸ் பார்க்கலையா? இப்போதைக்கு குழந்தைக்கு நான் தான் அம்மா! ஸோ, டெய்லி ஆஃபீஸ் வந்து வொர்க் செய்யறதெல்லாம் கஷ்டம் டா!”

 

 

“ஹேய்! என்னடி சொல்ற? இந்த முடிவை நீ யோசிச்சு தான் எடுத்தியா? குழந்தை உன்னை அம்மாவா நினைக்குதுன்னா உன்னோட, லைஃப் என்ன ஆகும்? இப்படியே கடைசி வரை இருக்க முடியாது டி! சமுத்ரா! நான் சொல்றது புரியுதா? இல்லையா?! இங்கே பாரு ப்ளூ.. இட்ஸ் நாட் ரைட்! நீ ஒண்ணும் தியாகி இல்லை புரியுதா? உன் வாழ்க்கையே கேள்விக் குறியாகிடும்! எப்படி நீ இப்படியொரு முடிவை எடுத்த? குழந்தைக்கு அப்பான்னு இதோ, இவர் இருக்கிறாரே.. அப்பறம் ஏன் உனக்கு இந்த தேவையில்லாத வேலை? அவங்க குழந்தையை அவங்க பார்த்துப்பாங்க! நீ இங்கே இருக்கிறது சுத்தமா சரியில்லை. நீ முதலில் கிளம்பு. நானே உன்னை வீட்டில் விடறேன்.!”

 

 

என சமுத்ராவின் கரம் பிடித்து அவன் இழுக்க, சமுத்ரா அசையாமல் நின்றாள்.

 

“அப்போ, நீ உறுதியாய் முடிவு எடுத்துட்ட, அப்படித்தானே? அங்கிள், ஆன்ட்டிக்கு இந்த விஷயம் தெரியுமா?” எனக் கேட்டான் கார்த்திக்.
சமுத்ராவோ என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

 

 

“தெரியும்! அவங்களும் வேண்டாம்ன்னு தான் சொன்னாங்க! பட், கஸ்டடி வாங்கிட்டு குழந்தையைக் கூட்டிட்டு வர்ரேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். என் சம்யூவோட குழந்தையை இந்த மாதிரி ஸேடிஸ்ட் கிட்டே வளர விடறதில் எனக்கு விருப்பம் இல்லை டா! குழந்தை இங்கே வளரக் கூடாதுங்கிறதில் நான் ரொம்ப உறுதியாய் இருக்கேன். குழந்தைக்காக மட்டும் தான் இங்கே இருக்கேன். வேற யாருக்காகவும் இல்லை!”

 

 

இப்போதும் சமுத்ராவின் பார்வை என் மீதே நிலைத்தது. அவள் கார்த்திக்கிற்கு பதில் சொல்வதைப் போல் எனக்குச் சொன்னதாகத் தோன்றியது.

 

“ம்ப்ச்! எல்லாம் சரி தான்! பட் உன் வாழ்க்கை? உனக்கு லைஃப் பார்டனர்ன்னு ஒருத்தர் வரும் போது, உன்னைக் குழந்தையோட ஏத்துப்பாங்களா? குழந்தை உன்னை அம்மான்னு கூப்பிடுறதே உன் வாழ்க்கையைப் பிரச்சனையாக்கும் டி! என்னைப் பொருத்தவரை நீ குழந்தையை இங்கேயே விட்டுட்டு உன் வேலையைப் பார்க்கிறது தான் சரி.!” அவன் உறுதியாய் சொல்ல, சமுத்ரா எதுவும் பேசாது அழுத்தமாய் நின்றாள்.

 

“ஹலோ மிஸ்டர்! நானும் வந்ததிலிருந்து பார்த்துட்டே இருக்கேன்! நீங்க உங்க வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிட்டே இருக்கீங்க? இது எங்களோட ஃபேமிலி மேட்டர், தயவு செய்து வெளியே போங்க!” கோபமாய்ச் சொல்லிவிட்டு வாயிலை நோக்கிக் கரம் நீட்டினேன் நான்.

 

“ஹலோ.. நானும் உங்கக் கிட்டே பேசலை! நான் இவகிட்டே பேசிட்டு இருக்கேன். இவள் ஒண்ணும் உங்க ஃபேமிலி இல்லை. உங்கக் குழந்தையைப் பார்க்கிறதால், இவள் உங்க ஃபேமிலி ஆகிடுவாளா? எங்களுக்கு நடுவில் வராமல், கொஞ்சம் போங்க ப்ளீஸ்..!” என அவன் சொல்ல, மிகவும் அவமானமாய் உணர்ந்தேன் நான்.

 

 

“இது என் வீடு! நான் போகணுமா? வேணாமான்னு நான் தான் முடிவு பண்ணணும்! நீ இல்லை!” கோபத்தோடு கார்த்திக்கைப் பார்த்துச் சொன்னேன்.

 

“ஹலோ! நீங்க எவ்வளவு பெரிய ஆளாய் வேணும்ன்னாலும் இருந்துட்டு போங்க! அதுக்காக மரியாதை இல்லாமல், நீ, வா, போன்னு பேசுறதெல்லாம் வேணாம். இது உங்க வீடாக இருக்கலாம்! அதுக்காக பெட்ரூமிலும் எட்டிப் பார்ப்பீங்களா? உங்களோட, சுயநலத்திற்காக, உங்க குழந்தையைப் பார்க்கிறதுக்காக இவளை யூஸ் பண்ணிக்கிற நீங்க, என்ன வேணும்னாலும் செய்வீங்க! இப்படியொரு பைத்தியக்காரன் கூட, உன் சிஸ்டர் எப்படி வாழ்ந்தாங்க?” என சமுத்ராவைப் பார்த்து, அவன் கேட்ட அதே நேரம்,

 

 

“யார் வீட்டுக்குள்ளே வந்து என்ன பேச்சு பேசுற? வார்த்தையைப் பார்த்து பேசு!” என ஒற்றைக் கையால் அவன் சட்டைக் காலரைப் பற்றியிருந்தேன். அவனும் நொடி தாமதிக்காமல் என் சட்டையைப் பற்றியிருந்தான்.

 

“விக்ரம்! அவனை விடு! விடுன்னு சொல்றேன்ல்ல?!”

 

“விக்ரம்!”

 

“கார்த்திக்! நீயாவது விடேன் டா! ப்ளீஸ்!”

 

“கார்த்திக்! சொல்றேன்ல்ல.. எனக்காக டா!”

 

என சமுத்ரா சொன்னதும், கார்த்திக், என்னைப் பற்றிய கரத்தை விட்டுவிட, குழந்தையை என்னிடமிருந்து அவசரமாய் வாங்கிக் கொண்டு, கார்த்திக்கின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு, கதவை நோக்கிப் போனாள் சமுத்ரா.

 

“ஏன்டா இப்படியெல்லாம் பண்ணுற? உன் கோபத்தை தான் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணேன்டா!”

 

“இங்கே பாரு டி! நான் கோபப்படுறதில் நியாயம் இருக்கா? இல்லையா? குழந்தை உன்னை அம்மான்னு கூப்பிடுற ஒரே காரணத்திற்காக, உன்னை இங்கேயே இருக்க வைக்க நினைக்கிறது தப்பு இல்லையா.? உண்மையிலேயே நல்ல மனுஷனாக இருந்திருந்தால், என் புள்ளையை எனக்குப் பார்த்துக்கத் தெரியும் நீ போம்மான்னு சொல்லியிருக்கணும். அதை விட்டுட்டு ஃபேமிலி மேட்டர்ன்னு பூசி மொழுகறதெல்லாம் என்ன மெண்டாலிட்டி?!” என இருவரும் பேசிக் கொள்வது எனக்குக் கேட்டது. சமுத்ரா என்ன பதில் சொல்கிறாள் என்பதை என் மனம் ரொம்பவே ஆவலாய் எதிர்பார்த்தது.

 

 

“விக்ரம்காக இல்லை கார்த்திக்! இந்தக் குழந்தையோட முகத்தைப் பாரு! அம்மா இல்லாமல் வளரும் வயசா இவளுக்கு? அதோட விக்ரம் குழந்தையை நல்லா பார்த்துப்பான்ங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. எல்லாத்துக்கும் மேலே இவள் சம்யூவோட குழந்தை! அந்த ஒரேயொரு காரணம் போதும் டா! உனக்கு ஒண்ணு தெரியுமா? சம்யூ வயிற்றில் அவந்தி இருக்கும் போதே, அவள்கிட்டே நான் சொல்லியிருக்கேன். உன் வயிற்றில் வளர்ந்தாலும், இது எனக்கும் குழந்தை தான். நான் தான் வளர்ப்பேன்னு விளையாட்டாய் சொல்லியிருக்கேன். ஒருவேளை நான் குழந்தையை விட்டுட மாட்டேன்ங்கிற நம்பிக்கையில் கூட, சம்யூ இவளை விட்டுட்டு போயிருக்கலாம். ஒருவேளை சம்யூ அப்படி நினைச்சு, குழந்தையை நான் விட்டுட்டா, அவள் நம்பிக்கையை உடைச்ச மாதிரி ஆகிடும் கார்த்திக்!” என அவள் சொன்னதைக் கேட்டு, எனக்குள் நிம்மதி பெருமூச்சு.

 

“முட்டாளா நீ? நீ படிச்ச பொண்ணு தானே ப்ளூ? உன் சிஸ்டர் இப்படித்தான் நினைச்சாங்கன்னு உன்கிட்டே எதாவது ஆதாரம் இருக்கா டி? அஸ் அ ஃப்ரெண்டா நான் சொல்றதைக் கேளு! எனக்கு என்னவோ இது தேவையில்லாத ஆணின்னு தோணுது.!”

 

“இது வாழ்க்கை டா! இது ஒண்ணும் க்ரைம் கேஸ் இல்லை. எல்லாத்துக்கும் ஆதாரம் தேடிட்டு இருக்க.. சம்யூவோட மனசு எனக்குப் புரியும். கண்டிப்பா அவள் விக்ரமை நம்பி இந்தக் குழந்தையை விட்டுட்டு போயிருக்க மாட்டா! அது எவ்வளவு பெரிய ஆக்ஸிடெண்ட் ஆக இருந்தாலும், குழந்தைக்காக அவள் மீண்டு வந்திருப்பா! ஏன்னா அவந்தி மேலே அவள் அவ்வளவு பாசம் வச்சிருந்தா. போதும் கார்த்திக்! இதுக்கு மேலே இதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்! நீ கிளம்பு!”

 

“சரி! நீ முடிவு எடுத்துட்ட.. உன் முடிவை மாத்த முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனாலும், கொஞ்சம் கவனமா இரு.சீக்கிரம் கஸ்டடி வாங்கிட்டு இங்கிருந்து கிளம்பும் வழியைப் பாரு! எந்த ஹெல்ப்பாக இருந்தாலும், தயங்காமல் என்னைக் கேளு டி! நான் ஒருத்தன் இருக்கேன்ங்கிறதை மறந்துடாதே!” என அவன் விடைபெற்றுக் கிளம்ப, அவன் கிளம்பியதும், படியில் நின்றிருந்த நான், அவசரமாய் எதுவுமே தெரியாதவனைப் போல் மெத்திருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டேன்.

 

சமுத்ரா குழந்தையைக் கரத்தில் தூக்கிக் கொண்டு நிதானமாய் நடந்து வந்தாள். அவள் அணிந்திருந்த அழகான பிங்க் நிற டீ ஷர்ட்டில் பட்டாம் பூச்சிகள் சிறகை விரித்துப் பறந்துக் கொண்டிருந்தது.

 

“Don’t judge me, you know my name, but not my story”

 

என ஆங்கிலத்தில் அவள் டீ ஷர்ட்டில் எழுதியிருந்தது. பிங்க் நிற மேற்சட்டைக்கு தோதாய், கறுப்பு நிறத்தில் லாங் ஸ்கட்ர் அணிந்திருந்தாள். அவள் தூக்கிக் கொண்டையிட்டிருந்த கூந்தல், உச்சந்தலையில் க்ளிப்பில் அடங்கியிருந்தது. ஒப்பனையே இல்லாத அவள் முகத்தில், அவளின் நீல நிற நயனங்கள் மட்டும் தனியாய் தெரிந்தது. அவள் கோபமாய் என்னைப் பார்த்தபடி, என்னை நோக்கி நடந்து வர, அவள் மீதிருந்த பார்வையை வலுக்கட்டாயமாய் சுவற்றை நோக்கித் திருப்பினேன்.

 

“விக்ரம்! ஏன் இப்படி செஞ்சே? அவனை நான் வரச் சொன்னேன். அவன் சட்டையைப் பிடிக்கிறதுக்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?!” கோபமாய் வினவினாள் சமுத்ரா.

 

“அவன் என்னைப் பத்தி பேசினான். என்னைப் பற்றி பேசற ரைட்ஸ் அவனுக்கு யார் கொடுத்தது? பெட்ரூம்குள்ளே எட்டிப் பார்ப்பீங்களான்னு கேட்கிறான். அவன் சொன்னது பத்தாதுன்னு நீயும் ஸேடிஸ்ட்ன்னு சொல்ற? ஏன் அவன் கேட்டதெல்லாம் உனக்குத் தெரியாதா சமுத்ரா? நான் கேட்டது மட்டும் தான் உனக்கு தப்பா தோணுதா? என் வீட்டிலேயே வந்து நின்னுட்டு, என்னையே பேசினால், எனக்கு கோபம் வருமா? வராதா?” பதிலுக்கு அவளிடம் நானும் கேள்வி கேட்டேன்.

 

“நானும் பொய் சொல்லலை! அவனும் பொய் சொல்லலை! நீ ஸேடிஸ்ட் தான் விக்ரம். எல்லாத்துக்கும் மேல, நீ ரொம்பவே ஆதிக்கம் பிடிச்சவன். அடுத்தவங்க பேசுறதை ஒட்டுக் கேட்கிற வேலையெல்லாம் நல்லவன் பண்ணமாட்டான் விக்ரம்!” என அவள் சொன்னதும், திடுக்கிட்டு நிமிர்ந்தேன் நான்.

 

ஆனால் அவளோ, என்னைக் கேவலமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

 

“நான் ஒண்ணும் அதெல்லாம் பண்ணலை! நீயா கற்பனை பண்ணிட்டு பேசாதே!” அவள் கண்டுபிடித்துவிட்டாளே, என்ற திடுக்கிடலுடன் சமாளிக்க முயன்றேன்.

 

 

“நீ பொய் பேசுற விக்ரம்! அது உனக்கே நல்லா தெரியும். ஆனால், நீ இவ்வளவு கேவலமான பிறவியா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லை. எப்படித்தான் இந்த சம்யூ உன்னை சகிச்சுக்கிட்டாளோ? அவளையும் இப்படித்தானே பண்ணின? உன்னோட ஈகோவை ஸேட்டிஸ்ஃபை பண்ணுறதுக்காக தானே, அவளுக்கு பட வாய்ப்பெல்லாம் கிடைக்காமல் பண்ணின? கல்யாணம்ன்னு ஒண்ணு ஆகிட்டால், பொண்ணு சுயமா முடிவெடுக்கக் கூடாதா? உன்னை மாதிரி ஆம்பிள்ளைங்க எல்லாம் ஏன் இப்படி இருக்கீங்க? பிறந்ததிலிருந்து சாகும் வரை பொண்ணு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணி, அந்தக் கல்யாண வாழ்க்கையைக் காப்பாத்தணும். ஆனால் நீங்க ஜாலியாய் இருப்பீங்க! நீயும் சம்யூ கிட்டே அதைத் தானே எதிர் பார்த்தே? அவள் உன்கிட்டே கேட்டாள் தானே? பிரிஞ்சுடலாம்ன்னு அவள் கேட்டப்போ நீ விட்டிருந்தால், அவள் இன்னைக்கு இருந்திருப்பா.!” என அவள் என்னைக் குற்றவாளியாய் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினாள்.

 

“ஆமா! நான் தான் அவளைக் கொன்னுட்டேன் போதுமா? என்னமோ எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசிட்டே போற? என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்னதான் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும், நான் விரும்பித்தான் சம்யூவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளை இராணி மாதிரி வச்சு தாங்கணும்ன்னு நினைச்சேன். ஆனால் அவள் தான் புரிஞ்சுக்கவே இல்லை. உள்ளங்கையில் வச்சு தாங்கறேன்னு சொன்ன என்னை விட்டுட்டு, புதுப்படம் நடிக்க சைன் பண்ணினால், எனக்கு கோபம் வராதா?” எனக் கோபமாய் அவளை நோக்கி கேள்வி கேட்டேன் நான். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள்? என்ற எதிர்பார்ப்புடன் அவளையே பார்த்திருந்தேன்.

 

“சொல்லி முடிச்சுட்டியா? இல்லை வேற எதாவது சொல்றதுக்கு இருக்கா?!” என நக்கலாய் கேட்டவள்,

 

“உன்னை மாதிரி திமிர்ப்பிடிச்ச ஒவ்வொரு ஆம்பிள்ளையும் சொல்றதைத் தான் நீயும் சொல்ற. தங்கத் தட்டில் தாங்கறேன். உள்ளங்கையில் தாங்கறேன்னு சொல்லி பொண்ணை வீட்டுக்குள்ளேயே வச்சுக்கணும் அப்படித்தானே? இந்த மாதிரி ஜிகினா வார்த்தைகளைச் சொல்லி, பொண்ணுங்களை ஏமாத்தினதெல்லாம் போதும். நீ சம்யூவை உள்ளங்கையில் வச்சு தாங்கியிருக்க வேண்டாம். அவளை அவளாக இருக்கவிட்டிருந்தாலே போதும். அவள் உயிரோடு இருக்கிற வரை, அவளை உன் விருப்பத்திற்கு தானே ஆட்டி வச்சே? என்னையும் அப்படி ஆட்டி வைக்கலாம்ன்னு மட்டும் நினைக்காதே! கொன்னுடுவேன்!” விரல் நீட்டி மிரட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

 

‘இப்போது என்ன செய்வது? இவளிடம் கேட்க நினைத்ததை கேட்கவே இல்லையே? இந்த கார்த்திக் வந்து அனைத்தையும் கெடுத்துவிட்டான். அவன் வெறும் நண்பனா? இல்லை அதற்கும் மேலா? எனக்குப் புரியவில்லை. அவள் மூச்சுக்கு முந்நூறு முறை கஸ்டடி, கஸ்டடி எனச் சொல்லும் போது, எனக்கு திக் திக் என்று இருந்தது. ஒருவேளை குழந்தை மீதான உரிமை அவளுக்குக் கிடைத்துவிட்டால், என் குழந்தையைப் பார்க்காமல், என்னால் இருக்க முடியுமா? குழந்தையை விட்டுக் கொடுத்துவிட்டு, தனியாக நின்று, நான் என்ன செய்யப் போகிறேன்? யோசனையோடு நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் போதே, அவந்திகாவை உறங்க வைத்துவிட்டு வெளியே வந்தாள் சமுத்ரா.

 

 

“அந்தக் கார்த்திக் யாரு?” என்னைத் தாண்டிப் போனவளைத் தடுத்து நிறுத்தியது என் கேள்வி.

 

 

“அது உனக்கெதுக்கு? லவ்வரா கூட இருக்கலாம்! தட்ஸ் மை பர்ஸ்னல், அதை உன்கிட்டே சொல்லணும்னு எந்த அவசியமும் எனக்கு இல்லை.!”

 

நறுக்குத் தெறித்தார் போல் சொன்னாள் சமுத்ரா.

 

“கல்யாணமே பண்ணுற ஐடியா இல்லைன்னு சொன்னே? இப்போ லவ்ன்னு சொல்ற?”

 

“லவ் பண்ணினால், கல்யாணம் பண்ணணும்ன்னு எதாவது கட்டாயம் இருக்கா? எனக்கு கல்யாணம் பண்ண பிடிக்கலைன்னு சொன்னேன் தான். ஆனால் லவ்வே பண்ண மாட்டேன்னு சொல்லலையே?” என்னைக் குழப்பிக் குழப்பி பதில் தந்தாள்.

 

 

“அப்போ நீ அவனை லவ் பண்ணுறியா?” எனது அடுத்தக் கேள்வி எந்த மேல்பூச்சுகளும் இல்லாமல் நேரடியாய் வந்தது.

 

“நான் ஏற்கனவே சொல்லிட்டேன் விக்ரம்! அது என்னோட தனிப்பட்ட விஷயம். அதில் உனக்கு எந்த அக்கறையும் தேவையில்லைன்னு சொல்லிட்டேன். எது கேட்கிறதாய் இருந்தாலும் நேரடியாய் கேளு! சுத்தி வளைச்சு மூக்கைத் தொடற வேலையெல்லாம் என்கிட்டே வேணாம்.!”

 

 

நான் ஏதோ சொல்ல வருகிறேன் என்பது அவளுக்குப் புரிந்தது. எது எப்படியோ, நான் எதையோ சொல்ல வருகிறேன் என்பதை அவளே புரிந்துக் கொண்டாள் என்பதில் எனக்குக் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

 

 

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா சமுத்ரா!” ஒரு வழியாய், நேற்று இரவிலிருந்தே, தொண்டைக்குள் சிறைபட்டுக் கிடந்த கேள்வியைக் கேட்டுவிட்டேன்.

 

 

கேள்வியைக் கேட்ட மறுநிமிடமே கொஞ்சம் ஆசுவாசமாய் உணர்ந்தேன் நான். ஆனால், அவளோ எந்தப் பதிலும் பேசாமல், அமைதியாய் நின்றாள். அவள் முகத்தில் குடிக்கொண்டிருக்கும் அமைதி, புயலுக்கு முன்னான அமைதியாகத்தான் எனக்குத் தெரிந்தது.

 

“நீ எனக்கு மனைவியாய் இருக்க வேண்டாம்! அவந்திக்கு அம்மாவாய் இருந்தால் மட்டும் போதும்! நான் வேற எதையுமே எதிர்பார்க்க மாட்டேன்! ப்ளீஸ் சமுத்ரா! கொஞ்சம் யோசிச்சு பாரு!” நான் மீண்டும் கேட்ட போதும், அவளிடம் எந்தப் பதிலும் இல்லை.

 

 

“நான் நல்லா யோசிச்சுப் பார்த்துட்டேன். என்னோட பத்தில் நோ! போதுமா? இல்லை வேற ஏதாவது சொல்லணுமா? நீ என்ன நினைச்சுட்டு இருக்கே? சம்யூ மாதிரி கல்யாணம் பண்ணி, என்னையும் இந்த சிறைக்குள்ளே அடைக்கலாம்ன்னு பார்க்கிறியா? நான் கார்த்திக் கிட்டே என்ன பேசுறேன்னு நீ கேட்கும் போதே, நான் தெரிஞ்சுக்கிட்டேன். நான் குழந்தையை விட்டுட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிடுவேனோன்னு உனக்கு பயம். ஏன்னா உன்னோட கம்ஃபோர்ட் ஸோன் (comfort zone)போய்டுமே.. நான் இருக்கற வரை நான் குழந்தையைப் பார்த்துப்பேன். நீ நிம்மதியாய் உன் வேலையைப் பார்க்கலாம். ஆனால் ஒருவேளை கார்த்திக் சொல்றதைக் கேட்டு நான் அவன் கூடப் போயிருந்தால், குழந்தையோட பொறுப்பு உன் தலையில் விழுந்துடும். அந்தப் பொறுப்பை நிரந்தரமா என் கிட்டே கொடுக்கத் தானே இந்தக் கல்யாணம்ங்கிற ஆயுதத்தை கையில் எடுக்கிறே?! உன்னை மாதிரி ஆண்கள் அவங்களோட கம்ஃபோர்ட் ஸோனை விட்டு வெளியே வர மாட்டீங்களே? ” என நீளமாய்ப் பேசி நிறுத்திவிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

 

“அப்படி இல்லை சமுத்ரா! உனக்கும் குழந்தை ரொம்ப முக்கியம். எனக்கும் குழந்தை ரொம்ப முக்கியம். அதனால், நாம ரெண்டு பேரும் குழந்தையைச் சேர்ந்து பார்த்துக்கிட்டால் என்ன? குழந்தைக்கு அம்மாவும் வேணும்! அப்பாவும் வேணும்ன்னு நான் நினைக்கிறேன். நீ டைம் எடுத்து யோசிச்சுட்டு நிதானமாய் பதில் சொல்லு. சத்தியமாய் நான் சொல்றேன், இது முழுக்க முழுக்க அவந்திக்காக மட்டும் தான்.!”
என நான் சொல்ல, என்னை சில நொடிகள் பார்த்தபடியே நின்றவள் என்னைத் தாண்டி சென்றுவிட்டாள்.

 

 

பதில் சொல்லாமல் போய் விட்டாளே? என்ற வருத்தத்தோடு அவளையே பார்த்தபடி நின்றிருந்தேன் நான். இப்படி சம்யூ போலவே இருக்கும், இவளிடம் கெஞ்சுவதற்கு பதில் சம்யூ உயிரோடு இருந்திருக்கலாம். அவள் இருந்திருந்தால், என் பிள்ளையின் தாய்க்காக நான் யாரிடம் கெஞ்சியிருக்க வேண்டிய அவசியமில்லை தான். சம்யூ இனி என் வாழ்க்கையிலேயே இல்லாத போது, என் குழந்தைக்காக நான் கெஞ்சி தான் தீர வேண்டும். இன்னும் எத்தனை நாளைக்குக் கெஞ்சப் போகிறேனோ? அவள் என்ன பதில் சொல்லப் போகிறாளோ? கேள்விகள் மட்டுமே எனக்குள் மிச்சமிருந்தது பதிலை அவள் தர மறுத்ததால்..

 

ஆனால், அவள் பதிலுக்காய் காத்திருப்பதைத் தவிர எனக்கும் வேறு வழியிருக்கவில்லை..

 

“முதலில்
உன்னை
நினைத்துக் கொண்டேன்..
பிறகு
உன்னையே
நினைத்துக் கொண்டிருந்தேன்..
இப்போது
உன்னையும்
நினைத்துக் கொள்கிறேன்..
ஞாபகங்களுக்கு
எப்போதும் மூன்று பருவங்கள்..
(மனுஷ்யபுத்திரன்)

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்