Loading

தனது அன்னையின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளைப் பற்றித் தனது மனைவித் தன்னிடம் கூறிய அனைத்தையும் அவளிடமிருந்து பொறுமையாக கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு, 

 

“அம்மா மனசார எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டுத் தான் வந்து இருக்காங்க ஆரா. நாம அதை மதிக்கனும் தான்! ஆனாலும் நாம உடனே அங்கே கிளம்பிப் போக வேண்டாம். கொஞ்ச நாளைக்கு இங்கே இருந்துட்டுப் போகலாம்” என்று அபூர்வனிடம் இருந்து தெளிவாய் வந்தது பதில். 

 

“ஆனால் அபூ, அவங்க ரொம்ப வருத்தப்பட்டுப் பேசிட்டு இருக்காங்க. ஆனால் நீங்கள் ஏன் இப்படி சொல்றீங்க? நாம உடனே அங்கேப் போறதால என்ன ஆகிடப் போகுது?”என்ற ஆராவிற்குக் கணவன் எதனால் இவ்வாறு கூறுகிறான்? என்பது புரியவில்லை.

 

தன் தாயின் மனம் குளிரச் செய்யும் வகையில் விரைவில் தாங்கள் இருவரும் வீட்டிற்கு வருகிறோம் என்று சொல்வான் என நினைத்தால் இப்போது அங்கே போக வேண்டாம் என்கிறானே! 

 

“இல்ல ஆரா. வார்த்தைப் பிரயோகம் ரொம்ப முக்கியம். அதுவும் நாம நம்மளோட முக்கியமானவங்க கிட்ட பேசும் பொழுது பார்த்து தான் பேசனும்! குழந்தை இல்லைன்றதால் உன்னை என்னவெல்லாம் பேசினாங்கன்னு எனக்கும் தெரியும் தானே? அம்மா ஆதங்கத்துலப் பேசிட்டாலும் அந்த வலி உனக்கு இன்னும் இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்! இப்போ அவங்க உணர்ந்து வந்தாலும் நாம உடனே அங்கே போனால் உனக்கு அவங்கப் பேசினது கண்டிப்பாக ஞாபகத்துக்கு வரும்! அதனால் உனக்கு மனதளவில் எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னுத் தான் இப்படி சொல்றேன். இதை நான் அம்மாகிட்டயும் சொல்லிடறேன்”என அவளிடம் தீர்க்கமாக உரைத்தான் அபூர்வன்.

 

“அதெல்லாம் வேண்டாம்ங்க. அத்தையும், மாமாவும் ரொம்ப வருத்தப்படுவாங்க”என்று அவர்களுக்காகப் பரிந்து பேசினாள் மனைவி. 

 

ஆராவிற்குத் தான் மகனைப் பிரிந்திருந்த அந்தப் பெற்றோரின் வலி நன்றாகப் புரியுமே? அதனாலேயே அவர்களுக்காக ஏற்றுப் பேசினாள்.

 

“இல்லம்மா! என்னோட இந்த முடிவு கரெக்ட் தான்! இந்த விஷயத்தில் மட்டும் நீ எதுவும் பேசாதே. ப்ளீஸ்!”என்று தன் கணவனின் தன்னிடம் இவ்வாறு கேட்டுக் கொண்டதால் வேறு வழியின்றித் தானும் அதற்குச் சரி என்று கூறி விட்டாள்.

 

அந்தச் சமயத்தில், தன் இரு கைகளிலும் தேநீர்க் கோப்பைகள் மற்றும் தட்டில் பஜ்ஜிகள் சகிதமாக வந்து சேர்ந்தார் நீலவேணி.

 

அவரது முகத்தில் புன்னகை நிறைந்து இருந்தது.

 

அதைக் கலைக்க வேண்டாமே என்ற எண்ணத்தில்,’அவரிடம் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்பதைப் போல் அபூர்வனைப் பார்த்தாள் ஆரா.

 

ஆனால் தனது முகத்திலிருக்கும் உறுதியான பாவனை மாறாமல், தாயைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான். 

 

அவரது கைகளில் இருந்தவற்றைத், தான் வாங்கிக் கொண்டாள் ஆரா.

 

“அம்மா! நாங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்கோம். ஒரு மாசத்துக்கு அப்பறம் அங்கே வர்றோம். இதை அப்பாகிட்டயும் சொல்லிடுங்க”என இடையில் நிறுத்தாமல் கூற வந்ததைக் கோர்வையாய்ச் சொல்லி முடித்திருந்தான் அபூர்வன்.

 

அவன் பேச்சில் இருந்த உணர்ச்சி துடைத்தத் தன்மையே அவன் மனம் இப்போதும் மிகவும் வருத்தத்தில் இருப்பதை நன்றாகவே புரிந்து கொண்டாலும்,”ஏன் அபூர்வா?” உனக்கு இந்த அம்மா மேல் நம்பிக்கை இல்லையா?”என்று கலக்கத்துடன் வினவி விட்டுத் தன் மருமகளையும் பரிதாபமாகப் பார்த்தார் நீலவேணி.

 

அவள் தனக்குத் துணைக்கு வருவாளா? என்பதைப் போல் தான் இருந்தது அவரது பார்வை.

 

அதைப் புரிந்து கொண்டு,”அபூ”என்று தன்னவனைக் கெஞ்சும் குரலில் அழைத்துப் பார்த்தாள் ஆரா.

 

“ஆரா இரும்மா! நான் பேசிட்டு இருக்கேன்ல?”என அந்த நேரத்திலும் மனையாளைக் கடிந்து கொள்ளவில்லை அவன்.

 

“அம்மா! எங்களுக்கு இப்போதைக்கு ஒரு மாற்றம் வேணும்னு தான் சொல்றேன். ஆரா மனதளவில் கலங்கிப் போய் இருக்காள்! அதனால் தான், ஒரு மாசம் கழிச்சு வர்றோம்னு சொல்றேன். உங்களுக்கும் அவளை எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வீட்டில் ஏத்துக்குறதுக்குப் பழகிடுவீங்க. அதுக்கு அப்பறம் நாம எல்லாரும் அங்கே சந்தோஷமாக இருப்போம்”என்று தாயிடமும் பொறுமையாக எடுத்துச் சொல்லிப் புரிய வைத்தான் அபூர்வன்.

 

அதைக் கேட்டு முடித்ததும் ‘அப்படியே அத்தை மாதிரியே பேசறாரே!’ என ஆச்சரியமாக விரிந்தன ஆராவின் விழிகள்.

 

நீலவேணியின் விழிகளில் விரக்தியின் சுவடுகள் தெரிந்தாலும் நிதர்சனத்தைப் புரிய வைக்க முனைந்தான் அபூர்வன்.

 

என்னதான், இப்போது அவர் ஆராவை ஏற்றுக் கொள்ள நினைத்தாலும் இவர்கள் இருவருமே ஒரு வகையில் காயப்பட்டு இருக்கிறார்கள். இவர்களது மனக் காயங்கள் காலப்போக்கில் மாறியதும் ஒன்றாக ஒரே வீட்டில் வசிப்போம் என்று கணக்குப் போட்டிருக்கிறான் அபூர்வன்.

 

மகனின் வார்த்தைகளில் இருந்த உறுதி நீலவேணியை அதற்கு மேல் பேச விடவில்லை. எனவே தானும் அதை ஏற்றுக் கொண்டு, 

 

“சரிப்பா. நீ சொல்றதும் கரெக்ட் தான்”என இதைப் பற்றி இதற்கு மேல் பேச வேண்டாம் என்ற வகையில் தேநீரைப் பருகி விட்டுப் பஜ்ஜியைச் சாப்பிட்டனர் ஆராவும், அபூர்வனும்.

 

“ரொம்ப நாள் கழிச்சு உங்க கையால் டீ அண்ட் பஜ்ஜி சாப்பிட்றேன் அத்தை. டேஸ்ட் சூப்பராக இருக்கு”என நிலைமையை அவர்களை இலகுவாக்கும் விதமாக அத்தையைப் பாராட்டினாள் ஆரா.

 

அதற்கு அவரோ பதிலுக்குப் புன்னகை புரிந்தார் அவ்வளவே!

 

ஆனாலும் அவரது மனதில் மகன் கூறியது வருத்தம் கொள்ளச் செய்தது உண்மையே!

 

ஆனாலும் தான் செய்ததும் தவறு தானே? அதற்காகவேனும் பொறுத்திருந்து தான் ஆக வேண்டும் என்றும், தன் மகனும், மருமகளும் நிச்சயமாகத் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று அந்தத் தாய் தன் மனதில் நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டார்.

 

மாலை ஆறு மணிக்கு மேல் ஆனதும் அபூர்வன் மற்றும் ஆராவிடம் விடைபெற்றுக் கொண்டு, 

 

அங்கேயிருந்து கிளம்பும் நேரத்திலும் கூட அவர்கள் இருவரும் தங்களது வீட்டிற்கு வரும் நாளை எதிர்பார்த்துக் கொண்டுக் காத்து இருப்பதாக கூறி விட்டே புறப்பட்டுப் போயிருந்தார் நீலவேணி.

 

அவர் சென்றதும் ஆராவிற்கு மனதில் என்னவோ செய்யவும்,”அபூ! இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு? அத்தை தான் அவ்வளவு ஃபீல் பண்றாங்களே? அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்குப் புரிஞ்சு இருக்குமே? ஏன் இவ்வளவு கடுமையாக ஆக, அவங்க மனசுக் கஷ்டப்படுத்துறா மாதிரி பேசினீங்க?”என அவனிடம் மனத் தாங்கலுடன் வினவினாள். 

 

ஆனால்,”நான் சொன்னது சரி தான் ஆரா! அம்மாவும், அப்பாவும் சீக்கிரம் புரிஞ்சுப்பாங்க. நீ அதை நினைச்சு மன அழுத்தத்துக்கு ஆளாகாதே”என்று அவளிடம் விடாப்பிடியாக உரைத்து விட்டிருந்தான் அபூர்வன். 

 

“போங்க அபூ”என்று அவனிடம் கோபித்துக் கொண்டு ஏழு மணி ஆனதால் இரவு உணவைத் தயாரிக்கச் சென்றாள் ஆரா.

 

இங்குத், தான் பேசியது சரி தானா? என்பதை மறுமுறை நினைத்துப் பார்த்துக் கொண்டான் அவளது மணாளன். 

 

அதற்குப் பிறகு, இரவு உணவு முடிந்த வேளையில், ஆராவிடம் அவளது தோழி காரிகாவைப் பற்றிய கதையைக் கேட்க ஆயத்தம் ஆனான்.

 

அபூர்வன் தன் மனையாளை எப்பொழுதும் போல் மடியில் படுக்க வைத்துக்கொண்டு, அவள் கூறப்போகும் கதையின் அடுத்த நிகழ்வைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான்.

 

“சொல்லு ஆரா. அடுத்து என்ன ஆச்சு?”

 

“இருங்க சொல்றேன். அதுக்குள்ள உங்களுக்கு ரொம்ப அவசரம்!”எனச் சலித்துக் கொண்டாள் மனைவி. 

 

அபூர்வனின் மடியிலிருந்தவாறே தன் மனதில் இருந்த தோழி காரிகாவைப் பற்றிய விஷயங்களை ஒரு தடவை நினைத்துப் பார்த்து விட்டு, அவனிடம் கூற ஆரம்பித்தாள்.

 

“ஒரு தடவை எங்க காலேஜில் டூருக்குப் போயிருந்தோம். அங்கே காரிகாவும், நானும் ஒரே ரூம் தான். அவளோட சுடிதாரில் பின்னாடி முதுகுல ஆணியில் மாட்டித் தெரியாமல் கிழிஞ்சுருச்சு. அப்போ தான் அவளோட முதுகுல ஆழமாக சூடு வச்சத் தழும்பு இருந்தது எனக்குத் தெரிஞ்சுது. அவ ரொம்ப பாவம்ங்க! அவங்க வீட்டில் சொந்தக்காரவங்க எல்லாம் சேர்ந்துட்டு அவளைத் துரதிர்ஷ்டம் பிடிச்சப் பொண்ணுன்னுச் சூடு வச்சுட்டாங்களாம்” 

 

அதைக் கேட்டுச் சில நிமிடங்கள் அப்படியே திகைத்துப் போய் மனைவியைப் பார்த்து,”அவங்க இவ்வளவு கொடுமைக்காரவங்களா இருக்காங்களே?”எனக் கேட்டான் அபூர்வன். 

 

ஏனோ அந்தப் பெண்ணின் மீது இரக்கம் தோன்றிற்று அவனுக்கு.

 

“நான் தான் அவளைப் பத்தின அறிமுகத்தைக் கொடுக்கும் போதே சொன்னேனேங்க!” 

 

தனது தோழி பெற்றத் துன்பங்களை எல்லாம் கணவனிடம் முழுமையாகத் தெரிவிக்க எண்ணினாள் ஆரா.

 

ஆகவே,”அது மட்டும் இல்லங்க. அவ காலேஜில் யார் என்ன சொன்னாலும் மறு பேச்சுப் பேசாமல் செஞ்சிடுவா. யார்கிட்டயும் மாட்டேன்னு வம்பு செய்ய மாட்டா. இது எனக்குக் கடுப்பாக இருக்கும். ஏன் இப்படி இருக்கன்னு நான் அவளைத் திட்டி விட்ருவேன். ஆனாலும் அவ அந்தக் குணத்தை மாத்திக்கவே இல்லை”என்றவளோ, 

 

சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து,”நீங்களே சொல்லுங்கள்! அவ என்ன அடிமையா? எல்லாரும் சொல்ற வேலையை எல்லாம் செய்யனும்னு தலையெழுத்தா அவளுக்கு?”என்று பொருமினாள். 

 

அதற்கு அபூர்வனும் இல்லவே இல்லை என்பதைப் போல் இடவலமாகத் தலையை ஆட்டினான்.

 

“அப்பறம்ங்க”என அவள் மறுபடியும் கதையைத் தொடரும் பொழுது அவனது செல்பேசி சத்தமிட்டது.

 

“இரும்மா. கால் பேசிட்டு பண்ணிப் பேசிட்டு வர்றேன்”என்னு கூறி விட்டு வரவேற்பறைக்குச் சென்று அங்கு இருந்த தன் செல்பேசிக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசினான் அபூர்வன்.

 

“இல்லம்மா. ஆரா இங்கயே இருக்கட்டும். அவளோட ஃப்ரண்ட் -டை நினைச்சு ரொம்பக் கவலைப்பட்டுட்டு இருக்கா. நாங்க ஒரு மாசம் கழிச்சு அங்க வர்றோம். நீங்களும், அப்பாவும் பத்திரமா இருங்க”என மறுமுனையில் பேசிய தாயைச் சமாதானம் செய்து தந்தையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டு இருந்தான்.

 

அப்போது,”அபூ! இன்னும் ஃபோன் பேசிட்டு இருக்கீங்களா?”என்ற மனைவியின் குரலைக் கேட்டதும், 

 

“அம்மா! ஆரா கூப்பிட்றா. நான் போய் என்னன்னுக் கேட்குறேன்”என்று மனையாளைக் காண அறைக்குச் சென்றான் அபூர்வன்.

 

அவன் தாயாரின் செல்பேசி அந்த அழைப்பின் சாரம்சம் என்னவென்றால், தனக்கு இருப்புக் கொள்ளாமல் மகனுக்கு அழைத்து இங்கு வந்து விடுங்கள் என்று அழைத்தார் நீலவேணி.

 

அதற்கு அபூர்வனோ, தாங்கள் இருவரும்,’ஒரு மாதம் கழித்து தான் வருவோம், அதுவரை எதுவும் கூறாதீர்கள்!’என்று தெளிவாக உரைத்து விட்டான்.

 

தனது மனைவியிடம் வந்து, தன் அன்னை தான் பேசினார் என்பதை தெரிவித்து விட்டு,”அம்மா தான் பேசினாங்க ஆரா. வீட்டுக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாங்க. நான் ஒரு மாசத்துக்கு அப்பறம் வரோம்ன்னுச் சொல்லிட்டேன். இனிமேல் உங்கிட்ட பேசினாலும் நீயும் அப்படியே சொல்லிடு”எனப் பகிர்ந்து கொண்டான். 

 

“பாவம்ங்க. எனக்கு அவங்கப் பேசினதை நினைச்சு எந்தக் கவலையும் இல்லை. அப்பறம் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறீங்க?” 

 

தன் தாய்க்காகப் பரிந்து பேசிய மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான் அபூர்வன். 

 

அவளது நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

 

“இருக்கட்டும் ஆரா. இது என்னோட பிடிவாதமாகவே இருக்கட்டும். ஆனால் இதில் எந்த மாற்றமும் இல்லை” 

 

“அப்போ போங்க. காரிகாவோட கதையைச் சொல்லவே மாட்டேன். நீங்க எவ்வளவு கேட்டாலும் சொல்ல மாட்டேன்”எனக் கோபித்துக் கொண்டே அவனது மடியில் தலையைச் சாய்த்தாள் ஆரா.

 

“ஓஹோ! அப்போ நீங்க கதையை சொல்ல மாட்டிங்க? அப்படித் தானே?” 

 

“ஆமாம். சொல்லவே மாட்டேன்” 

 

“இதெல்லாம் ரொம்ப ஓவர்டி! அதுக்கும், இதுக்கும் என்னச் சம்பந்தம்?”என்ற அபூர்வனின் முகத்தில் டன் கணக்கில் சோகம் வழிந்தது.

 

“இருக்கட்டும் அபூ. ஆனால் இதில் எந்த மாற்றமும் இல்லை”என்று அவன் தன்னிடம் சொன்னதையே திருப்பிக் கூறினாள் ஆரா.

 

“சரி. அப்போ கதை வேண்டாம். ஒரே ஒரு முத்தம் போதும். நானே எடுத்துக்குறேன்”

என்றவனோ, தன் நெற்றியில் இதழைக் கொண்டு முத்திரைப் பதிக்க வருகிறான் என்று நினைத்தவளது எண்ணத்தைப் பொய்யாக்கும் வகையில் அவளது இதழைச் சிறை பிடித்தான் ஆராவின் அந்த அபூர்வமானவன்.

 

– தொடரும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்