
மாயோன் 18
பார்த்த முதல் நொடியே அவள் மீது காதல் வந்ததா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
ஆனால் ஏதோ ஒரு நிறைவான உணர்வு அவன் நயணங்களின் வழியே ஊடுருவி நெஞ்சம் நிறைத்தது.
இமைக்காமல் பெண்ணவளை பார்த்தவனின் செவிகளில் மீண்டும் அவள் குரல் கேட்டது!
” வண்டி எப்போ ரெடி ஆகும்? ” என்று அவள் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.. அதியனை திரும்பியும் பார்க்கவில்லை!
திரும்பி வந்து தனதருகில் காரை நிறுத்தியவனை பொருட்படுத்தாமல் நின்றவளை மீண்டும் ஒருமுறை விழிகளில் நிறப்பியவன், மேற்கொண்டு எதுவும் பேசாமல், இதழ்களில் சிறுநகை உதிக்க துவங்கும் முன், அவ்விடம் விட்டு சென்றான்.
அதன் பிறகு தான் வர்ஷாவுக்கு நிம்மதி பிறந்தது, எங்கு காரை திருப்பி வந்தவன், தான் பேசியதற்கு சண்டை போடுவானோ? என்று எதிர்பார்த்தவள், பிரச்சனையை தவிர்க்கும் பொருட்டு அவனை கண்டுகொள்ளாமல் நின்றுவிட்டாள்.
” அண்ணா இன்னுமா வண்டி ரெடி ஆகல ? ” வண்டியை பழுது பார்த்து கொண்டிருக்கும் டிரைவரிடம் மீண்டும் கேட்டாள்.
” இதோ… ரெடி ஆகிடுச்சுமா கிளம்பலாம் ” என்றவர் காரை எடுக்க, அவளும் அவனை தொடர்ந்து காரில் ஏறிக் கொண்டாள். வண்டி நேராக விக்ரமனது இல்லம் நோக்கி பயணித்தது.
வர்ஷா தஞ்சாவூரில் தனது பாட்டியுடன் வசித்து வந்தாள்..
அவள், கல்லூரியில் தனது முதலாம் ஆண்டு படிப்பை படித்துக்கொண்டிருக்கும் போது, அவளது பாட்டி உடல்நல குறைவு காரணமாக இறைவனடி சேர்ந்தார்..
அதன் பிறகு அர்ஜுன் வர்ஷாவை தங்களோடு மும்பைக்கு வரும் படி அழைக்க… வர்ஷா தன்னுடைய செமஸ்டர் எக்ஸாம் வரப்போவதை பற்றி கூறினாள்.. ‘ நான் இங்கயே என் படிப்பை முடிச்சிட்டு உங்க கூட வரேன் அர்ஜுன் ப்பா… விக்ரமா நீயே சொல்லேன் ‘ என்று கெஞ்சுதலாக கேட்க… வேறுவழியின்றி அவளுக்கு துணையாக அர்ஜுன், பரதனையும் அங்கேயே தங்கி படிப்பை தொடர சொன்னார்…
அவரது சொல்லுக்கு மறு சொல் கூறாமல் அங்கேயே தங்கி தனது முதுகலை பட்ட படிப்பை தொடர முடிவு செய்தான் பரதன்.
அவனது படிப்பையும், வர்ஷாவின் படிப்பையும் கருத்தில் கொண்டு அவர்களை அங்கு விட்டுவிட்டு வந்தனர் அர்ஜுனும், விக்ரமனும்.
வர்ஷாவின் கல்லூரியிலேயே பரதனும் சேர்ந்தான்… வர்ஷா மற்றும் பரதன் ஒரே வீட்டில் தான் தங்கி இருந்தார்கள்.. அந்த வீடும் அர்ஜுனுடையது தான்.. அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அவரே பார்த்து , பார்த்து செய்தார். விக்ரமனும் இரு மாதத்திற்கு ஒரு முறை அர்ஜுனுடன் வந்து அவர்களை பார்த்து விட்டு தான் செல்வான்.
அந்த கல்லூரியில் தான் பரதனுடன் வந்து சேர்ந்தான் நிதின்… அந்த கல்லூரியில் அவனுக்கு கிடைத்த ஒரே நண்பன் என்றும் கூறலாம்.
நிதினுக்கு தாய் இல்லை, தந்தை மட்டுமே, அவரும் வெளிநாட்டில் இருக்க, இங்கு கேட்க ஆள் இல்லாமல்… மது , மாது என்று சுதந்திரமாக சுற்றி திரியும் வாலிபன்.
பரதனுக்கு எந்த வித தீய பழக்கவழக்கமும் இல்லை.. அதற்கு விக்ரமன் மீது கொண்ட பயமும், அர்ஜுனனின் மீது கொண்ட மரியாதையும் ஒரு காரணம்.
நிதின் ஒன்றும் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் தவறான எண்ணத்தில் பழகுபன் அல்ல… தன்னை தேடி வருபவர்களை விலக்கி வைக்கவும் மாட்டான், விலகி செல்பவர்களை தேடி செல்லவும் மாட்டான்.. நல்லவன் தான் அதற்காக மது, மாது அனைத்தும் தவறு என்று விலகி செல்லும் குணம் கொண்டவன் அல்ல, மனிதனுக்கே உரிய சில குறைகளும், நிறைகளும் கொண்டவன் தான் அவன்.
பரதன்,நிதினுடைய இந்த பழக்கத்தை மாற்ற சொல்லி எத்தனை முறை கூறினாலும் ‘ என் வாழ்க்கையை நான் எனக்கு புடிச்ச மாதிரி வாழுறேன், அவ்ளோ தான் விடு மேன் ‘ என்று சொல்லி கடந்து சென்று விடுவான்…
‘ ஏன்டா இப்படி குடிச்சி உடம்பை கெடுத்துக்குற? இப்படி குடிச்சு குடிச்சு சீக்கிரம் சாக போற பாரு ‘ என்று பரதன் கூறினால்,
‘ அப்போ!! நான் குடிக்காம இருந்தால் மட்டும் நூறு வருஷம் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்திடவா போறேன்… போடா சும்மா அறிவுரை சொல்லுறேன்னு, ரம்பம் போட்டுட்டு இருக்க ‘ என்று கூறி பதிலுக்கு ரம்பம் போடுவான்.
பரதனுக்கு, நிதினது இந்த குணம் பிடிக்காமல் இருந்த போதும் ஏனோ, பரதனுக்கு நண்பன் என்றால் அது நிதின் மட்டுமே… அவனிடம் பெண்கள் சகவாசம் தவிர்த்து அதையும் மீறி சில நல்ல குணங்களும் உண்டு, அது பரதனது கண்களுக்கு தெரிய வந்த பிறகு தான், முதல் முறை நிதினை தனது வீட்டிற்கு அழைத்து வந்தான்.
அங்கு தான் நிதின், வர்ஷாவை முதல் முறையாக சந்தித்தான்.. வர்ஷாவை பார்க்கும் பொழுது எல்லாம் நிதினுக்கு, அவனது அம்மாவுடைய நியாபம் வரும், அதனால் அவனையும் அறியாமல் அவள் மீது ஒரு ஈர்ப்பு உருவானது.
அந்த பெயர் சொல்ல முடியாத உணர்வு அவன் மனதில் ஒரு புது வித நெருடலை உருவாக்கியது..
அது அன்பா? காதலா? என்று அவனுக்கும் தெரியவில்லை.. தனது மன எண்ணத்தை வெளியே கூறி , பரதனும், வர்ஷாவும் எங்கு தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ! என்ற எண்ணத்தில் அந்த உணர்வுகளை தனக்குள்ளேயே வைத்து புதைத்து கொண்டான்..
பரதன், வர்ஷா மற்றும் நிதின் ஆகிய மூவரும் சேர்த்து வெளியே செல்வதும், ஒன்றாக உண்பதும் என்று மகிழ்ச்சியா இருந்த தருணம் அது…
இரு மாதத்திற்கு ஒரு முறை இப்போது எல்லாம் அர்ஜுனுக்கு பதில் விக்ரமன் தான் வந்து இவர்களை பார்த்துவிட்டு செல்வான்… அப்படி விக்ரமன் வரும் போது அவனும் இந்த மூவருடன் சந்தோஷமாக தனது நேரத்தை செலவிடுவான்…
அப்படி இருந்த நாட்களில் தான் நிதினுக்கும், பரதனுக்கும் படிப்பு முடிந்தது… நிதினை, அவனது தந்தை தன்னுடன் வெளிநாட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.
இருந்தும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்தியா வந்து வர்ஷாவையும், பரதனையும் பார்த்து விட்டு செல்வான்.. அப்படி அவன் வரும் போது விக்ரமனும் அங்கு இருப்பான்.
வர்ஷாவுக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை என்பதால், அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர் அர்ஜுன் குடும்பத்தினர், அதற்காக மாப்பிளை தேடி அலைந்து கொண்டிருந்தனர்…
இந்த செய்தி அப்போது பரதனையும், வர்ஷாவையும் காண வந்த நிதினுக்கு தெரியவரவே… முதல் முறையாக ஏதோ ஒரு அச்சம் அவன் மனதில் உதிக்க தொடங்கியது.
நிலையில்லாமல் தவித்த மனதை ஒரு நிலை படுத்தி கொண்டு, விக்ரமணிடம் இதனை பற்றி பேச முடிவு செய்தான்.
” விக்ரமன் சார் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ? ”
” இதுக்கு எதுக்கு பெர்மிஷன் எல்லாம் கேக்குற? சொல்லு ” என்ற விக்ரமன் அவனை பார்த்து திரும்பி அமர… மெதுவாக பேசத்தொடங்கினான் அவன்..
” வர்ஷாவுக்கு மாப்பிளை பார்க்குறீங்க போல ? ”
” ஆமாடா… உனக்கு தெரிஞ்ச நல்ல பையன் யாராவது இருந்தா சொல்லு ” என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்க அங்கு வந்தனர் பரதனும், வர்ஷினியும்…
” என்ன அண்ணா நீ இவன் கிட்ட போய் நல்ல பையன பத்தி கேக்குற ? இவன் மட்டும் இல்லை இவனுக்கு தெரிஞ்சவனும் ஊர் அறிஞ்ச பொறுக்கியா தான் இருப்பான்.. ” என்று பரதன் கிண்டலாக கூற… அவனை ஒரு பார்வை பார்த்த விக்ரமன்.
” அப்போ நீயும் பொறுக்கியா என்ன? ” என்று பரதனை நோக்கி கேட்டான்.. அவனது கேள்விக்கு பதில் கொடுக்க முடியாமல் பரதன் அங்கிருந்து எழுந்து செல்ல…
” டேய் பரதா ” என்ற வர்ஷா அவன் பின்னே செல்ல பார்க்க.. அவளது கரம் பற்றி தனதருகே அமர வைத்தான் விக்ரமன்…
” என்ன விக்ரமா? ” என்று வர்ஷா கேட்க…
” உன்னை பத்தி தான் பேசிட்டு இருக்கோம்.. உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் சொல்லு அப்படியே பார்த்திடலாம் ” என்றவன் அருகில் இருந்த நிதினின் தோளில் கைபோட்டு கொண்டான்…
” எப்படினா!!! உன்னை மாதிரி ரொம்ப கேரிங்கா இருக்கணும், பரத் மாதிரி ரொம்ப ப்ரெண்ட்லியா இருக்கணும்… அவ்ளோ தான், ஆனால் ஒன்னு விக்ரமா மாப்பிளை இவனை மாதிரி பிளே பாயா மட்டும் இருக்கக்கூடாது ” என்று கூறியவள் சிரித்த படியே பரதனை நோக்கி சொன்றாள்.
அதனை கேட்ட நிதினின் முகம் வலிநிறைந்த புன்னகையை உதிர்த்தது… அதனை கண்டுகொண்ட விக்ரமன் ” ஓகேடா என்கிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னியே சொல்லு ” என்று அவன் பேச்சை மாற்றினான்…
” நீங்க சொல்லுற எல்லா தகுதியும் எனக்கு இருந்து வர்ஷாவை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு கேட்டால்… உங்க பதில் என்ன ? ” என்றவனது முகத்தில் எதிர்பார்ப்பும் ஏக்கமும் வெளிப்படையாக தெரிந்தது…
” ஆனால் இனி நீ இந்த கேள்வி கேட்க, அவசியம் இருக்காதுன்னு நெனைக்கிறேன்… ” என்ற விக்ரமனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன்,
” இது தான் தகுதின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் இந்த கேள்வியை கேட்டு உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன் ” என்றவன் எழுந்துகொண்டான்.
” உனக்கு அவள் மேல அப்படி எந்த விருப்பமும் இல்லை தானே ? ” என்று விக்ரமன் அழுத்தி கேட்க…
” இருக்ககூடாதுன்னு எதிர்பார்த்து நீங்க இந்த கேள்வியை கேட்டால், என் பதில் இல்லைங்குறதா தான் சார் இருக்கும் ”
” நான் எந்த பதிலையும் எதிர்பார்த்து கேட்கல… உண்மையை மட்டும் சொல்லு ” என்ற விக்ரமனை பார்த்து வலியுடன் புன்னகைத்தவன் ‘ இல்லை ‘ என்று தலையசைத்து விட்டு திரும்பி நின்றான்…
ஆழ்ந்த மூச்செடுத்து அவன் அருகில் வந்து அவனது தோள்களில் கைபோட்ட விக்ரமன் ” நாலு பேருக்கு ஒரு பொம்மையை பிடிச்சியிருக்கு அப்படிங்குறதால நாலு பேருக்கும் அதை பிச்சி கொடுக்க முடியாது இல்லையா? உயிர் இல்லாதா பொம்மைக்கே அப்படின்னா… அவள் உயிர் உள்ள மனுஷிடா நான் சொல்ல வருவது உனக்கு புரியும் நெனைக்கிறேன் ”
” புரியுது சார் ”
” உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே டா ”
” தெரியல சார்.. ஆனால் அவள் நல்லா இருந்தா போதும் , என்னால அவள் வாழ்க்கைக்கு எந்த பிரச்சனையும் வராது.. அவளை நல்லா பார்த்துக்கோங்க, அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா கண்டிப்பா நான் வருவேன்.. அதுக்கு எந்த உறவுமுறையும் அவசியம் இல்லைன்னு நினைக்குறேன் ” என்றவனது பதிலில் மனம் நெகிழ்ந்தான் விக்ரமன்…
விக்ரமனுக்கு, நிதினுடைய இந்த இயல்பான குணம் மிகவும் பிடித்தது..
” இது தான் ஒரு நல்ல ஆண்மகனுக்கு அழகு, பெருமையா இருக்குடா ” என்று கூறிய விக்ரமனை பார்த்து மென்மையாக புன்னகைத்தான் நிதின்… ‘ நிதின் சத்யன் ‘, நந்தினியின் “சத்யன்”
அன்று இரவே வெளிநாட்டிற்கு கிளம்பி சென்ற நிதின், இன்று வரை எட்டு மாதம் ஆகியும் திரும்பி வரவில்லை. அவன் மனதிற்கு அந்த இடைவெளி தேவைப்பட்டது.
இந்நிலையில் தான் பரதனும் போலீஸ் ட்ரைனிங்க்கு சென்று இருந்தான்.. வர்ஷா தனது படிப்பை முடித்து விட்டு, சர்டிபிகேட் தொடக்கம் அனைத்தையும் பெற்றுக்கொண்டு, இன்று தான் மும்பைக்கு வந்திறங்கினாள்… வரும் வழியில் மழையின் காரணமாக அவள் வந்த விக்ரமன் வீட்டு கார் கோளாறு செய்ய… அதனை கவனித்து கொண்டு வெளியே நின்றிருந்த வர்ஷாவின் மீது தான், அப்போது அங்கு வந்த அதியனது கார் தண்ணீரை வாரி அடித்து சென்றது..
*****
ஒருவழியாக விக்ரமனது வீட்டை வந்தடைந்தாள் வர்ஷா… அவளை கண்டதும் விக்ரமனது தாய் ஜோதி அவளை வாரி அணைத்து கொண்டாள்..
அர்ஜுனும் அவளிடம் நலம் விசாரித்து கொண்டிருக்க.. அப்போது வீட்டிற்குள் நுழைந்தனர் விக்ரமனும், அவனது நண்பன் அசிஸ்டன் கமிஷ்னர் விஜயும்…
” ஹே தேவா வந்துட்டியா? சாரிடா ஒரு முக்கியமான ஆப்ரேஷன் அது தான் உன்னை அழைச்சிட்டு போக.. வர முடியல ” என்ற விக்ரமன் அவள் அருகில் செல்ல… அவனது கரத்தை பற்றி கொண்டு தோள்களில் சாய்ந்து கொண்ட வர்ஷா,
” எனக்கு தெரியும் விக்ரமா அது எல்லாம் ஒன்னும் இல்லை. ” என்றவளது பார்வை அங்கு நின்றுகொண்டிருந்த விஜயின் மீது படிந்தது. விஜயின் கண்களும் அவளை தான் பார்வையிட்டது.
” தேவா, இது விஜய்.. என் பிரென்டு, அசிஸ்டன் கமிஷ்னரா இருக்கான். கொஞ்ச நாள் முன்னாடி தான் இங்கே ட்ரேன்ஸ்பர் ஆகி வந்தான், நம்ம வீட்டுல தான் தங்கி இருக்கான் ” என்று அவனை அறிமுக படுத்தினான்.
” ஹாய் ” என்று கூறி வர்ஷா புன்னகைக்க… விஜயும் அவளை பார்த்து மென்மையாக புன்னகைத்து கொண்டான்.
வர்ஷா ஒரு தனிமை விரும்பி, எதற்காகவும் பிறர் துணையை எதிர்பார்க்காதவள், ஒருநாள் அவள் ஹோட்டலில் தனியே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க… அப்போது அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர் அதியனும், சரத்தும்…
வர்ஷா தான் உண்டு தன் பிரைட் ரைஸ் உண்டு என்று சாப்பிட்டு கொண்டிருக்க… உள்ள நுழைந்த சரத்தின் கண்கள் தான் முதலில் அவள் மீது விழுந்தது.
” டேய் அதி அந்த பொண்ணு பாரேன், செம்மையா இருக்கா ” என்று சரத் கூறவும், அவன் பார்வை காட்டும் திசையில் கண்களை திருப்பினான் அதியன்.
அங்கு வர்ஷாவை கண்டதும் ஒரு கணம் அவன் கால்கள் நகர மறுத்து நின்றது… சரத் தான் அவனை பிடித்து இழுத்து வந்து வர்ஷா அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பின்னால் அமர வைத்தான்.
அங்கு அவளை கண்ட அதியன் மௌனமாக ஏதோ யோசனையில் திளைத்திருக்க, சரத்தோ மீண்டும் மீண்டும் வர்ஷாவை பற்றி பேசினான்.. ஒருகட்டத்தில் சரத் அவளது அங்கங்களை வர்ணித்து அதியனிடம் பேச தொடங்க, தன்னையும் மீறி அதியனது கண்கள் எதிரில் இருந்தவனை அனலாக எரிக்க தொடங்கியது.
” என்னடா முறைக்குற? அவளுக்கு செம்ம ஸ்ட்ராச்ச…” என்று சரத் கூற வாயெடுக்கவும்,
” ஸ்டாப் இட் சரத் ” என்று அடக்கப்பட்ட கோவத்துடன் கூறிய அதியனை புரியாமல் பார்த்தான் சரத்.
அதியனுக்கே தனது கோவத்திற்க்கான காரணம் புரியவில்லை… இருந்தும் அவளை தவறான எண்ணத்தில் சரத் பேசுவதை அவனால் ஏற்க முடியவில்லை…
சரத் இது போல பல பெண்களை பற்றி கமெண்ட் செய்திருக்கிறான், அப்போது எல்லாம், அதியன் அதனை காது கொடுத்து கேட்கிறானோ இல்லையோ? மறுத்து ஒரு வார்த்தை பேசியதில்லை ஆனால் இன்று அவனால் அப்படி அமைதியாக இருக்க முடியவில்லை… ஏன் என்று அவனுக்கும் புரியவில்லை,
” என்ன ஆச்சுடா வழக்கமா பேசுறது தானே? ”
” இப்போ பிடிக்கல சரத்.. கொஞ்சம் அமைதியா இருக்கியா ப்ளீஸ் தலை வலிக்குது ” என்றவனை வினோதமாக பார்த்த சரத்…
” டேய் ! இப்படி திடீர்ன்னு எல்லாம் நல்லவனா மாறாதிங்கடா.. நெஞ்சு வெடிச்சி செத்துடுவேன்.. ஒருவேளை அந்த பொண்ணை பார்த்த உடனே உனக்கு லவ் வந்துடுச்சோ ? அதுக்கு தான் இப்படி பீல் ஆகுறியோ ? ” என்று கிண்டலாக சரத் கூற… அவனை முறைத்து பார்த்த அதியன்
” காதலிச்சு வாழ்க்கையை கெடுத்துக்குற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை ” என்ற அதியனது தோளில் வர்ஷாவின் கரம் பதிந்தது…
வர்ஷா அணிந்திருந்த புடவை நாற்காலியில் சிக்கிகொண்டிருக்கவும், அதனை கவனிக்காத பெண்ணவள் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள்..
அதனால் கால் தடுமாறி கீழே விழ போனவள் தனக்கு பின்னே அமர்ந்திருந்த அதியனது தோளை பற்றி கொண்டு தன்னை நிலைப்படுத்தி நின்று கொண்டாள்…
நாற்காலியில் மாட்டியிருந்த புடவையை ஒரு கையால் எடுக்க போராடியவள், எங்கு கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இன்னொரு கரத்தால் அவனது கழுத்து வளைவில் அழுத்தம் கொடுத்தாள்.
அவளது தொடுகை அதியனுக்கு
ஏதோ ஒரு புது வித உணர்வை கொடுக்க, அந்த உணர்வு அவனது இதயத்தை அழுத்த தொடங்கியது..
ஓராயிரம் அழகிகள் தீண்டிய போதும்…
தடுமாறாதா என் நெஞ்சம் உன் ஒற்றை விரல் தீண்டலில்… தடம்மாறும் மாயம் என்னவோ???
புடவையை நாற்காலியில் இருந்து விடுவித்து கொண்டு பெரு மூச்சு விட்டவள், அப்போது தான் திரும்பி பார்த்தாள்.. அங்கிருந்த அனைவரும் அவர்களையே காட்சி பொருளாக பார்த்துக்கொண்டிருந்ததை,
உடனே திரும்பி அதியனது முகத்தை பார்த்தவளுக்கு அன்று இரவு நடந்த நிகழ்வுகள் கண்முன் வந்து போனது…
அவளது பார்வையும், அவனது பார்வையும் ஒருவர் மீது ஒருவர் பதிந்திருக்க.. சட்டென தன்னிலை உணர்ந்தவள், அவனது கழுத்தில் பதிந்திருந்த தனது கையை வேகமாக எடுத்து கொண்டாள்..
” சாரி .. ஏதோ தெரியாமல் ” என்று எப்படி கூறுவது என்று தடுமாறியவளின் தடுமாற்றத்தை உணர்ந்தவன்..
” இட்ஸ் ஓகே ” என்று அவளை பார்த்தவாறே அதியன் கூறி கொண்டிருக்க அப்போது அங்கு வந்து சேர்ந்தாள் நந்தினி…
“ஏஹ் நந்தினி ” என்று சரத் அழைக்க.. அவளை நிமிர்ந்து பார்த்த அதியன் ” நந்த் ” என்று இதமாக புன்னகைத்தான்…
அவர்கள் யாரை அழைக்கிறார்கள் என்று திரும்பி பார்த்த வர்ஷா அங்கு நந்தினியை கண்டதும் ஒரு கணம் அதிர்ந்து நின்றாள்.

