விழியால் தொட்ட அழகே – 17

Loading

அத்தியாயம் – 17

 

“ஏய் உன்னை தான் உன் பேரென்ன?” அவன் மீண்டும் அதட்டி வினவவும், அதே திருத்திருத்தென்ற விழிகளுடன் எச்சிலை விழுங்கி கொண்டவள்,… “நித்யா, நித்யஸ்ரீ” என்றாள் உள்ளே போன குரலில்,… அவள் பெயரை கேட்டதும் அவன் முகத்தில் ஏமாற்றம், “ஓஹ்… ஷிட்” என்றவன், தன் காலை தரையில் ஓங்கி உதைத்தான் கோபமாக,…

அவன் செயலில் பயந்து போனவள், அரண்ட விழிகளுடன் இன்னும் இன்னும் ஒன்றி போனாள் பின்னாலிருந்த சுவருடன், அந்த நேரம் அவனது போன் ஒலித்தது,… இறுகிய முகத்துடன் அழைப்பை ஏற்றவன்,… “எப்படி எப்படிடா தப்பு நடந்தது” கத்தினான் ஆக்ரோஷமாக,…

______________

“*** துணி கலரை வச்சு அடையாளம் காட்டுனது நீ தானே, என் கைல நீ கிடைச்ச கைமாவாக்கிடுவேன் ****” கெட்ட வார்த்தையில் ஆரம்பித்து கெட்ட வார்த்தையில் முடித்து உறுமினான் இணைப்பில் இருந்தவனிடம்,…

______________

“எனக்கு தெரியாது, நாம கடத்த வேண்டிய பொண்ணை இன்னைக்கே நம்ம இடத்துக்கு கொண்டு வரணும்” என்றான் கர்ஜனையாக, அவனது இவ்வாக்கியத்தில் மேலும் பயந்து போனாள் நித்யா,….

______________

“அதை நான் பார்த்துகிறேன்” நித்யாவை அளவிட்டவாறே கூறியவன், அவளை பார்த்தவாறே இணைப்பை துண்டித்துவிட்டு போனை பாக்கெட்டில் போட்டவன்
அவளருகில் வந்தான், மேலும் பின்னால் நகர முடியாது என்பது தெரிந்தும் அவள் நகர முயன்றாள், முடியவில்லை, பயத்தில் அவளுக்கு கண்ணீர் வெளியேற,… “எதுக்கு அழற” அவனது கடுமையான குரலில், திடுக்கிட்டு போனவளுக்கு, அழுகை மேலும் கூடியது,…

“இப்போ அழறதை நிறுத்தல” என கேட்டபடி அவன் தன் துப்பாக்கியை கையில் எடுக்க, வாயை கரங்களால் மூடிக் கொண்டவள், அழுகையை கட்டுப்படுத்த முயன்றாள்,….

“எங்க இருந்து வர” இப்படி கேட்டால் அவள் என்ன பதில் சொல்லுவாள், ரோட்டில் நின்று கொண்டிருந்தவளை இவன் தானே கடத்தி கொண்டு வந்தான், இதை அவனிடம் கேட்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு, ஆனால் வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளிவரவில்லை,…

“உன்கிட்ட தான் கேட்டேன்” அவன் குரலில் இருந்த அழுத்தம் அவளை பேச வைத்தது….”வீட்லருந்து” அவன் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை தான் சொன்னாள், ரோட்டிலிருந்து என்று சொன்னால் அசிங்கமாக இருக்குமே என்று வீட்டையே பதிலாக்கி விட்டாள்..

அதற்கும் அவன் “நாங்கல்லாம் என்ன காட்டுலருந்தா வறோம்” கேலியையும் மிரட்டலான குரலிலேயே கூறியவன்,… “உன் வீடு எங்க இருக்கு, வீட்ல யார்லாம் இருக்கீங்க” என்றான்,…

” ***** தெரு, நான், அம்மா அண்ணா மூணு பேரும் இருக்கோம்” என்றாள் சிறு குரலில் மூக்கை உறிந்துக் கொண்டே,…

“உன் அண்ணன் பேர் என்ன? என்ன பண்ணுறான்”அவனது கேள்வியில் தயக்கமாய் அவனை பார்த்தவள்,… “சொன்னா என்னை விட்டுடுவீங்களா?” என்றாள்

“சொன்னாலும் விட மாட்டேன், சொல்லலனாலும் விட மாட்டேன், கேட்ட கேள்விக்கு பதில்” அவன் உரும,… “நான் என்ன தப்பு பண்ணேன், என்னை எதுக்காக கடத்திட்டு வந்திருக்கீங்க, தயவு செஞ்சு விட்டுடுங்க” என்று அழுதாள்,…

“நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல” அவன் கையிலிருந்த துப்பாக்கியால் தாடையை வருடியபடி கூற, பயந்தவள்,… “அண்ணா பேர் வருணேஷ், ஐடி கம்பெனியில வேலை பார்க்கிறாரு” என்றாள்,…

“கம்பெனி நேம்” என்றவனுக்கு அதற்கான பதிலையும் கொடுத்தாள், அனைத்தையும் உள்வாங்கி கொண்டவன்,..  “சரி கொஞ்ச நாள் நீ இங்க தான் இருக்க வேண்டியது வரும், அமைதியா இருந்தன்னா நான் உன்னை எப்படி கடத்தி கொண்டு வந்தேனோ அப்படியே போய் விட்டுடுவேன், வேறு ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்த்தன்னு தெரிஞ்சது பொட்டுனு சாகடிச்சு போட்டுட்டு போயிடுவேன்” என்று மிரட்டல் குரலில் கூறியதும் மிரண்டு விட்டாள்,…

“ஏன்? என்னை கடத்திட்டு வந்தீங்க, உங்களுக்கு எனக்கும் என்ன சம்மந்தம், அம்மா என்னை நினைச்சு கவலை படுவாங்க, தயவு செஞ்சு என்னை போக விடுங்க” கெஞ்சினாலாவது போக விட மாட்டானா என்ற நப்பாசையில் பயத்தை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு மன்றாடினாள்,…

“உன்னை பார்த்தா பாவமா தான் இருக்கு, சரி உன் நிம்மதிக்காக நான் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்றேன், ஆக்சுவல்லா ஆள் மாத்தி உன்னை தூக்கிட்டோம்” என்றதும் அவள் விழிகள் இரண்டும் சாசர் போல் விரிந்தது,….

“ஆமா யாரை கேட்டு மஞ்சள் கலர் துணி போட்டுட்டு வந்த, வேற கலர் துணி போட்டு வந்திருந்தா நீ எங்க கிட்ட மாட்டிருந்திருக்க மாட்டல்ல” என்றதும், இதென்னடா எனக்கு வந்த சோதனை என்று தனக்கு பிடித்த மஞ்சள் கலர் சுடிதாரை குனிந்து பார்த்தாள், இப்போது வெறுப்பு வந்தது அவ்வுடையின் மீது,…..

“துணி கலரை வச்சு வேற பொண்ணை தூக்குறதுக்கு பதிலா உன்னை தவறுதலா தூக்கிட்டோம், பயப்பட வேணாம், நீ எங்களுக்கு தேவை இல்லை, தூக்க வேண்டிய ஆளை தூக்கினதும் உன்னை விட்டுடுறேன்” என்று கொஞ்சம் ஆறுதலாக பேசியவன், நகர்ந்து வந்து விட்டான்,…..

‘கடவுளே பொண்ணுங்களை கடத்துற கூட்டத்துல வந்து மாட்டிக்கிட்டேனா? பெரிய மனசு பண்ணி என்னை விட்டுடுறேன்னு வேற சொல்றான், அப்படினா அவனுங்களுக்கு தேவையான பொண்ணுங்களை தான் ஸ்கெட்ச் போட்டு கடத்துவானுங்க போல, முதல்ல இங்கிருந்து போகணும், அப்புறம் அண்ணன் கிட்ட சொல்லி இவனை ஜெயில்ல பிடிச்சு போடணும்’ என தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தவள், என்ன செய்வதென்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்தாள்,…

நேரங்கள் கடந்தது, உட்கார்ந்து போனை பார்த்து கொண்டிருந்தவன் எங்கோ கிளம்பினான், வெளிகதவை நெருங்கியவன்,…ஒரு முறை நித்தியாவின் புறம் திரும்பி,…”அரை மணி நேரத்துல வந்துடுவேன், அது வரைக்கும் அமைதியா இருந்த இடத்தை விட்டு எழுந்துக்காம இருக்கணும்” கிட்டத்தட்ட மிரட்டிவிட்டே, வெளிபக்கமாக கதவை பூட்டிவிட்டு வேகமாக வெளியேறினான்,…..

அவன் போய்விட்டதை உறுதி படுத்திக் கொண்டவள் ஒரு வேகத்துடன் எழுந்தாள், வீட்டை அலசி ஆராய்ந்தாள், அறையில் ஜன்னல் இருந்தது, ஆனால் திறக்க முடியாத அளவிற்கு கட்டை வைத்து அடைத்து வைக்கப்பட்டிருந்தது, வெளிகதவின் பக்கம் வந்தாள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தள்ளி திறக்க முயன்றாள், முடியவில்லை சாவி போடும் துவாரம் வழியாக எட்டி பார்த்தாள், இருட்டி விட்டிருந்தது, ஒரு குண்டு பல்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்தது, மரங்களை மட்டுமே பார்க்க முடிந்தது, அடுத்து என்ன செய்வதென்று யோசித்தாள், ஒன்றும் புலப்படவில்லை, அவ்வீட்டில் ஒரு பொருட்கள் கூட கிடைக்கவில்லை, தன் பாதுகாப்பிற்காக ஏதாவது ஆயுதமாவது கிடைக்காதா என்றும் தேடி பார்த்தாள், ஒன்றும் கிடக்கவில்லை, சோர்ந்து போய் தனதிடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள், அவனும் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டிருந்தான்….

அவளுக்கு மீண்டுமொரு உணவு பொட்டலத்தை கொடுத்தான்,,… “சாப்பிடாம இருந்து என்னை டென்ஷன் படுத்துனனா விளைவு உனக்கு தான்” என மிரட்டி விட்டே கொடுத்தான், அவளுக்கும் பசி எடுக்க தான் செய்தது, ஏற்கனவே சாப்பிட்ட சாப்பாடு வாந்தி வழியாக வெளியே வந்து விட்டது, வயிறு கத்திக் கொண்டிருந்ததால் அவளும் அந்த பொட்டலத்தை பிரித்து சாப்பிட்டாள், தோசையும் உளுந்த வடையும் இருந்தது சூடாக, வயிறு நிரம்ப சாப்பிட்டாள், உடலில் புதுதெம்பு வந்தது போல் இருந்தது, அவனை தள்ளிவிட்டு ஓடிவிடலாமா என்று யோசித்தாள், அவனை தன்னால் தள்ளி விட முடியுமா? கண்டிப்பாக முடியாது அந்த முடிவை கைவிட்டாள்,…

கடத்த வேண்டிய பெண்ணை எப்போது கடத்துவார்கள் என்று சுயநலமாக யோசித்து விட்டு, அதற்காக வருத்தப்பட வேறு செய்தாள், மணிகள் மௌனமாகவே கடந்தது, இடையில் மறுபடியும் ஒரு தூக்கம், அவள் எழுந்த போது நன்றாக வெளிச்சம் எட்டி பார்த்திருந்தது, விடிந்து விட்டது போல என நினைத்து கொண்டாள் வெளியே கேட்ட பறவைகளின் சத்தத்தின் மூலம்,…

தூங்கி விழித்ததிலிருந்தே அவனை காணவில்லை, மறுபடியும் வெளியே போய்விட்டானா? மீண்டும் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடலாம் என்று எழுந்து மீண்டும் அலசினாள், கதவை எப்படியாவது உடைத்து வெளியே போய்விடலாம் என்று தன் பலம் கொண்டு கதவை உடைக்க முயன்றாள், கதவு அசைய கூட இல்லை, ஆனாலும் அவள் தன் முயற்சியை கைவிடவில்லை, தன் தோளால் ஹீரோவை போல் தள்ளி உடைக்க முயன்று கை வலி வந்தது தான் மிச்சம்,…. அந்த கணம் “என்ன பண்ணுற” தன் பின்னால் கேட்ட அவனது குரலில் விழுந்து அடித்துக் கொண்டு திரும்பினாள்,…

அவன் தான், உள்ளே தான் இருந்திருக்கிறான், தான் தப்பிக்க நினைத்தது தெரிந்தால் கொலை செய்து விடுவானே, பயத்தில் எச்சிலை விழுங்கினாள்,… அவனோ.. “என்ன தப்பிக்க பார்க்கிறியா” சரியாக கண்டுபிடித்து கேட்டான், பயத்தில் வியர்வை கொட்டியது, கைகால்கள் ஆட்டம் கண்டது,…

“சரி நகரு, நானே கதவை திறந்து விடுறேன்” அவளை தாண்டி வந்து கதவை திறந்து விட்டவன்…”போ” என்றான்,…

தன்னை விட்டுவிட போகிறானா சந்தோசம் தாங்க இயலவில்லை, ஆர்வக்கோளாரில்…. “ரொம்ப நன்றி” என்றாள் முகத்தில் நிம்மதி தெரிய கையெடுத்து கும்மிட்டு ,…
“எதுக்கு” புருவத்தை ஏற்றி இறக்கி அவன் வினவ…. “என்னை போக விடுறதுக்கு” என்றாள் சந்தோஷத்துடன்….

“உன் நன்றியை நீயே வச்சுக்கோ, ஆனா ஒரு வாக்கு மட்டும் கொடுத்துட்டு போ” என்றான்…

“என்ன” அவள் புரியாமல் வினவ,… “இப்போ போற நீ மறுபடியும் இந்த பக்கம் வர கூடாது” அவளுக்கு புரியவில்லை ஏன் இவ்வாறு கூறுகிறான் என்று,… “நான் ஏன் மறுபடியும் இங்க வர போறேன், கண்டிப்பா வர மாட்டேன்” என்றாள்,…

“சரி போ” அவன் சாதாரணமாய் கூறிவிட, விட்டால் போதுமென்று அவள் ஓடினாள், வாசல் படியிலேயே அவன் அமர்ந்துவிட்டான், பத்து நிமிடங்கள் இருக்கும், போனவள் மீண்டும் ஓடிவந்தாள் இவ்வீட்டை நோக்கி, அவன் இதழ்களில் வெற்றிப்புன்னகை,….

வியர்த்து விறுவிறுக்க, மூச்சு வாங்க அவனது முன்னிலையில் வந்து நின்றாள், புருவம் உயர அவளை பார்த்தவன்.. “போகல?” என்றான் விஷம புன்னகையுடன்…

“இல்ல நான் இங்கேயே இருக்கேன், நீங்களே என்னை கொண்டு போய் விடும் வரை, நான் தப்பிக்க நினைக்க மாட்டேன்” என்றவள், மீண்டும் வீட்டினுள் ஓடிவிட்டாள், மிகப்பெரிய உருமலுடன் காட்டு யானையின் சத்தம் கேட்க, காது இரண்டையும் கரத்தினால் பொத்திக் கொண்டு அமர்ந்துவிட்டாள், அதை பார்த்து பயந்து ஓடி வந்தவள் தான் அப்படியொரு முடிவை எடுத்திருந்தாள்…

அவர்கள் இருப்பது காட்டு விலங்குகள் நடமாடும் ஒரு காட்டு பகுதி, எந்த பக்கத்திலிருந்து எந்த மிருகம் வரும் என்று தெரியாது, காலை நேரத்தில் யானைகள் உலாவிக் கொண்டிருக்கும், இரவு நேரத்தில் மோசமான மிருகங்கள் வேட்டையாட காத்திருக்கும், அவன் வெளியே சென்றால் ஆயுதத்தோடு தான் செல்வான், தன்னை தாக்க வரும் மிருகங்களிடமிருந்து தன்னை காத்து கொள்ளவும் அவனுக்கு தெரியும், அதனால் அவனுக்கு அது பெரிய பிரட்சனை இல்லை, நித்யா மீண்டும் தப்பிக்க முயற்சி செய்ய கூடாதே என்று தான் காலை நேரத்தில் அவளை போக விட்டு வேடிக்கை பார்த்தான், இனி அவள் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்க மாட்டாள் என்பது புரிந்தது, அந்த நிம்மதியுடன் அவனும் வெளியே எங்கேயோ கிளம்பினான்….

*****

“நீங்க கடத்த வேண்டிய பொண்ணை இன்னும் கடத்தலயா?” இரண்டு நாட்கள் முழுதாக முடிந்து, மூன்றாவது நாளில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டாள் நித்யா,….

“இல்ல,…. அந்த பொண்ணு வீட்டுக்கு அவளை கடத்த போற விஷயம் எப்படியோ தெரிஞ்சு போச்சு, போலீஸ் பாதுகாப்புல பத்திரமா அவ வீட்ல இருக்கா, அதனால எங்களால அவளை நெருங்க முடியல” வெகு இயல்பாய் பதில் உரைத்தான் அவள் கேட்ட கேள்விக்கு…

அவளுக்கு தான் ‘ஐயோ’ என்றானது, எப்போது அவளை கடத்தி என்னை விடுவது, அதையும் கேட்டாள்,… “அப்போ என்னை எப்போ தான் விடுவீங்க?”

“அந்த பொண்ணு எங்க கஸ்ட்டடில வர ஒரு மாதம் ஆனாலும், அந்த ஒரு மாதமும் நீ இங்க தான் இருந்தாகனும்” என்றதும் அவளுக்கு அழுகை வந்துவிட்டது,…..

“நான் எந்த தவறும் பண்ணலேயே, என்னை எதுக்காக இப்படி கொடுமை பண்ணறீங்க, என்னை விட்டுடுங்களே” என்றாள் கண்ணீர் வழிந்தோட,…

“உன்னை எப்போ நான் கொடுமை பண்ணேன், மூன்று வேலையும் நல்லா சாப்பிட்டு தூங்கி எழற, அப்புறம் என்ன உனக்கு பிரட்சனை” என்றான்,…

“நான்… நான் என் வீட்டுக்கு போகணும், என் அம்மாவையும் அண்ணாவையும் பார்க்கணும், உங்களை பார்த்தா நல்லவர் மாதிரி தெரியுது, நீங்க சொன்ன மாதிரி என்னை கொடுமை படுத்தலாம் இல்ல, நல்லா சாப்பாட்டுலாம் போடுறீங்க, இதுக்காகவே நான் உங்களை பத்தி வெளியே யார்கிட்டயும் சொல்ல மாட்டேன், என்னை விட்டுடுறீங்களா” அவள் நீட்டி முழக்கி அவன் தலையில் ஐஸ்கிரீமை தூக்கி வைக்க, அவனோ சட்டென்று “முடியாது” என்றான்,…

“ஏன் ஏன் முடியாதுன்னு சொல்லிடீங்க, நீங்க ரொம்ப நல்லவரு, எனக்கு தெரியும், என்னை விட்டுடுவீங்கன்னும் எனக்கு தெரியும்” மீண்டும் பெரிய ஐஸ்கட்டியை அவன் மண்டையில் தூக்கி வைக்க,… “நான் நல்லவனா?” அதிசயமாக கேட்டான், அவள் கூறும் போது கேட்க நன்றாகவும் இருந்தது,…

“ஆமா ஆமா,… நீங்க நல்லவரு, கடத்திட்டு வந்த பொண்ணுக்கு யார் நேரா நேரத்துக்கு சுட சுட சாப்பாடு வாங்கி தருவா, மாற்று உடை வாங்கி தருவா” அவள் கண்கள் நாட்டியம் ஆடி ஆடி பேசியது, அவனுக்கு பிடித்தது, அவளது நயமிக்க பேச்சில் ஈர்க்கப்பட்டான்,….

“என்ன அப்படி பார்க்கிறீங்க, நான் சொல்றதை நம்பலயா” நம் நடிப்பை கண்டுபிடித்து விட்டானா என்ற கலவரத்தில் அலை பாய்ந்த விழிகளுடன் கேட்டாள்,…

“நம்புறேன், ஏனோ தெரியல நீ சொல்றதை நம்பாம இருக்க முடியல, அப்படினா நான் நல்லவன்?” அவன் ஆச்சரியமாய் கேட்க,… அவன் நம்புகிறான் என்றதே அவள் மனதில் பெரும் நிம்மதியை தர,.. “ஆமா நீங்க நல்லவரு, சரி நீங்க ஏன் இந்த கடத்தல் வேலையெல்லாம் பார்க்கிறீங்க, ஏதாச்சும் நல்ல வேலை பார்த்தா கை நிறைய சம்பாரிக்கலாம், நல்ல தொழில் மூலம் வர பணத்துல வர சாப்பாடு தான் வயித்துல நல்லா ஒட்டும், நீங்களும் மனைவி குழந்தை குடும்பம்னு நிம்மதியான வாழ்க்கையில செட்டில் ஆகிடலாம்” என்றாள்…..

“நிம்மதியான வாழ்க்கை ” என அழுத்தமாக கூறி விரக்தியாய் சிரித்தவன்,…. “எனக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் வெகுதூரம்” என்றான்…

“ஏன் அப்படி சொல்றீங்க, இப்போ நீங்க பண்ணுற வேலையையெல்லாம் மொத்தமா விட்டுட்டு வெளில வாங்க, ஏதாச்சும் வேலையில சேருங்க, யாரும் வேலை தரமாட்டாங்கனு நினைக்காதீங்க, கண்டிப்பா கிடைக்கும், நான் என் அண்ணா கிட்ட கூட சொல்லி வேலை வாங்கி தர சொல்றேன், அப்புறம் உங்களுக்கு ஏத்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க, அப்புறம் உங்க வாழ்க்கை சொர்க்கம் தான், என்ன நான் சொல்றது சரி தானே” என்றாள்,…..

“ஹ்ம்ம் சரி தான், ஆனா என்னை எந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கும்,” அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டு வினவினான்,…

“இந்த உலகத்துல பொண்ணுக்கா பஞ்சம், அதெல்லாம் கிடைக்கும், நீங்க முதல்ல இந்த கடத்தல் வேலையை விடுங்க, நல்ல வேலையில சேருங்க, அப்புறம் பாருங்க, பொண்ணுங்க எல்லாரும் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க” என்றாள், அவன் இதழில் ஒருவித பிரகாச புன்னகை தோன்றியது பல வருடங்களுக்கு பிறகு,….

‘என்ன சிரிக்கிறான், நாம சொன்னதை நம்பலயோ’ அவள் துறுத்துறுவென்ற விழிகளுடன், விழிகளை உருட்டி யோசிக்க,… கொஞ்ச நேரம் அமர்ந்து எதையோ பற்றி யோசித்து சிரித்தவன், போன் ஒலிக்கவுமே அதில் கவனத்தை திருப்பினான்……

அடுத்து வந்த இரண்டு நாட்களும் சாப்பாடு தூக்கம் என்றே கடந்தது நித்யாவிற்கு, அவன் ஏதோ வேலையாக பாதி நேரம் வெளியே தான் போயிருந்தான், தப்பிக்கும் எண்ணம் இருந்தாளாவது அவள் ஏதாவது முயற்சி செய்வாள், ஆனால் வெளியே  இருக்கும் காட்டு பகுதியை போய் பார்த்துவிட்டு வந்த பிறகு அவள் தப்பிக்கும் முயற்சியையும் கைவிட்டிருந்தாள், அவளை கடத்தியவனும் தன்னை எந்தவித தொந்திரவும் செய்யாமல் நலமாக பார்த்துக் கொண்டதிலேயே அவன் தன்னை பத்திரமாக தன் வீட்டில் ஒப்படைத்து விடுவான் என்ற சிறு நமபிக்கையுடன் தான் திரிந்தாள், உன்னை கடத்தி வந்தவனின் மீது நம்பிக்கையா? என்று அவள் உள் மனம் கூச்சலிட்டு கேட்டாலும், இப்போது அவள் இருக்கும் நிலைமைக்கு அவனை நம்புவதை தவிர வேறு வழி இல்லை என்பதே உண்மை,…

மதியம் சென்றவன், இரவு அவளுக்காக உணவை மட்டும் கொடுத்து விட்டு மீண்டும் வெளியே சென்று விட்டான், அந்த இரவு நேரத்தில் காட்டு பகுதியிலுள்ள வீட்டில் அவள் மட்டுமே தனியாளாய் இருந்தாள், வெளியே கேட்ட பூச்சிகளின் சத்தம் கூட கொலை நடுங்க வைத்தது, அன்றைய இரவு பயத்தில் அவளுக்கு தூக்கமே இல்லை, விடிந்த பிறகு தான் உறங்கினாள், அவள் விழித்த போது அவன் அங்கு தான் இருந்தான்,… முகத்தில் ஒரு வித இறுக்கம் தெரிந்தது, கோபத்தில் இருக்கிறான் போல என்று அவள் கொடுக்கும் சின்ன சின்ன பேச்சுக்களையும் அன்று கொடுக்கவில்லை அவனுக்கு பயந்து,….

கொஞ்ச நேரம் கழித்து போனில் யாருடனோ கத்தி கத்தி பேசினான், “அவனை கொல்லுங்கடா, நான் வரும் போது அவன் பொணத்தை தான் பார்க்கணும்” என கட்டளையிட்டவன், மேஜையிலிருந்த கண்ணாடி டம்ளரை தன் உள்ளங்கையால் நொறுக்கி உடைத்தான் கோபத்தில்,..

கையில் வீதல்கள் குத்தி கிழித்து ரத்தம் வழிந்தது, நித்யாவிற்க்கு அவன் செயல்கள் பதட்டத்தை தந்தாலும், அவன் கையில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தையும் அவனையும் பரிதாபமாக பார்த்தாள், ஆனால் மறந்தும் அவன் பக்கம் செல்லவில்லை,…

சில நிமிடங்கள் அமைதியில் கடந்தது, அவன் ஏற்கனவே தன் பக்கத்தில் வைத்திருந்த காலை உணவு பொட்டலத்தை பசிக்கு சாப்பிட்டு முடித்தாள், நிமிடத்திற்கு ஒருமுறை அவளையும் அறியாமல் அவன் கையின் காயத்தில் வந்து நின்றது அவளது பார்வை, ரத்தத்தை கட்டுப்படுத்த கைகுட்டையால் கட்டி வைத்திருந்தான், அவன் கட்டிருந்த கைக்குட்டை அவன் ரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறி இருந்தது, தற்போது ரத்தமும் நின்றிருந்தது,….

‘சரியான லூஸா இருப்பான் போலயே, கையில காயம் இருக்கு அதுவும் வீதல் குத்தி, வீதல் குத்திருந்தா அதை க்ளீன் பண்ணி சுத்தபடுத்தி மருந்து போட்டா தானே  செப்டிக் ஆகாம இருக்கும், கையவே இழக்க தான் போறான் இவன்’ என்று நினைத்தாலும், மனதின் சிறு ஓரத்தில் அவனை நினைத்து வருத்தமாகவும் இருந்தது, எதனால் இந்த வருத்தம், கடத்தி வந்தும் பத்திரமாக வைத்து பார்த்து கொண்டிருப்பதாளா? சாப்பாடு உடை எல்லாம் வாங்கி தருகிறதாளா? புரியவில்லை அவளுக்கு,…

“ஏய் என்ன” நிமிடத்திற்கு ஒரு முறை அவள் தன்னை நோட்டமிடுவதை கண்டுகொண்டவன், எதுவும் பிளான் பண்ணுகிறாளா என்ற உறுத்தலுடன் அதட்டினான்,….

“ஒன்னுமில்ல, ஒன்னுமில்லயே” அவள் கூறிவிட்டு பார்வையை திருப்பிக் கொள்ள,…. “என்ன பயம் விட்டு போச்சா? அடுத்து தப்பிக்க பிளான் போடுறியா?” என்றான் உருமலாய்,…

“ஐயோ கடவுளே இல்லவே இல்லை,  இங்க இந்த வீட்டுக்குள்ள நான் பத்திரமா பாதுகாப்பா இருக்கேன், இப்போதைக்கு இது போதும், நீங்களா விடுற வரைக்கும் நான் சத்தியமா வெளியே போகவே மாட்டேன், யானை கிட்ட மிதி வாங்கி சாக எனக்கு விருப்பமில்லை, நான் வெயிட் பண்ணுறேன் நீங்க என்னை விடற வரைக்கும்” என்றாள்,..

“பின்ன எதுக்கு என்னை சைடுல நோட்டம் விடுற” அவன் வெளிப்படையாய் கேட்டு விட,… “நான் நோட்டமெல்லாம் விடல, உங்க கைல இருக்க காயத்தை தான் பார்த்தேன், நீங்க இந்த காயத்தை இப்படியே விட்டுட்டா அப்புறம் பெரிய பிரட்சனையாகிடும், எங்க வீட்டு பக்கம் ஒரு பையனுக்கு கால்ல வீதல் குத்தி அதை சரியா கவனிக்காததால பின்னாடி ரொம்ப கஷ்டப்பான், அதனால தான் சொல்றேன்” என்றாள் மனிதான்பிமானத்தோடு,…

தனக்கான அவளது அக்கறையை அதிசயமாய் பார்த்தான், ஒரு மாதிரி பிடித்தது, இதழ் புன்னகைத்தது,… “இங்க வா” என்றான் அவளை, ‘எதுக்கு கூப்பிடுறான்’ என்று நினைத்துக் கொண்டு, அவனுக்கு சில அடி இடைவெளிவிட்டு போய் நின்றாள் உருட்டிய விழிகளுடன்,…

“ஹ்ம்ம்… க்ளீன் பண்ணி, மருந்து போட்டு கட்டிவிடு” என்றான் தன் கரத்தை அவளது முன்னிலையில் நீட்டி,..

அவன் சொல்லில் விழித்தவள்,… “நான் ஏன் பண்ணனும்” நேரடியாக கேட்டுவிட்டாள்,… “எனக்கு பண்ண தெரியாது, ஒரு கையை வச்சு பண்ணவும் முடியாது, உனக்காக சாப்பாடு போடுறேன், பத்திரமா பார்த்துகிறேன், எனக்காக இது கூட பண்ண மாட்டியா? இப்படியே விட்டா பின்னாளில் கஷ்டப்படுவேன்னு வேற சொல்ற, ம்ம் பண்ணு” என்றான்….

‘சாப்பாடு போடுறது பத்திரமா பார்த்துகிறது அவனோட வேலை தானே, கடத்தி வந்தவன் செய்து தான் ஆகணும், அதுக்காக நான் அவனுக்கு உதவி பண்ணனுமா என்ன’ என யோசித்தவள்,… ‘இந்த உதவி பண்ணா கொஞ்சம் மனசு இறங்கலாம், என்னை வீட்ல விட்டுடவும் வாய்ப்பிருக்கு, நமக்கு கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ண வேணாம்’ என எண்ணியவள், அவன் கொடுத்த முதலுதவி பெட்டியை திறந்து அதிலிருக்கும் பொருட்களை வைத்து அவன் காயத்தை சுத்தப்படுத்தினாள், ஒட்டிருந்த சிறு சிறு வீதல்களை நீக்கி மருந்திட்டு கட்டு போட்டாள், இதெல்லாம் செய்து பழக்கமில்லை என்றாலும் தனக்கு தெரிந்ததை வைத்து செய்து முடித்தவள், அவன் முகத்தை பார்த்தாள், அதில் என்ன தெரிந்தது, அவனது பார்வைக்கான அர்த்தம் அவளுக்கு புரியவில்லை, தவறாக பார்க்கும் பார்வையும் இல்லை, இல்லையென்றால் பயத்தையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு சப்பென்று அறைந்திருப்பாள், விழிகளில் ஒருவித வலி தெரிந்தது, ஆனால் ஏன் என்று புரியவில்லை, வாய்விட்டு கேட்டாள் “என்ன” என்று,….

“நன்றி” என்றான் நளிந்த குரலில்,…”பரவால்ல” என்றவள்,… “என்னை எப்போ போக விடுவீங்க” என்றாள்,….

சின்னதாய் சிரித்தவன்,…”ஓஹ்… அதுக்காக தான் இதை பண்ணியா” என்றான் கட்டு போட்டிருந்த தன் கையை ஆட்டி காட்டி,.. “ச்சே ச்சே இல்ல” என்றாள் கொஞ்சம் நெருடலான மனதுடன்,…

“நான் யோசிச்சேன்,  நான் கடத்தல் வேலையை விட்டுடுறேன், நல்ல வேலைக்கு போறேன்” என்றவனை ஆச்சரியமாக பார்த்தவள்.. “நிஜமாவா” என்றாள் கண்கள் மின்ன,…

“ம்ம்…. நான் நல்ல வேலைக்கு போனா என்னை கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கனு சொன்னல்ல” அவன் கேட்க, அவள் ஆம் என்பதாய் வேகமாக தலையசைத்தாள்,…

“யாரும் வேணாம், நீ.. நீ என் கூடவே இருக்கியா? என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா” என்றான் விழிகளில் ஏக்கத்துடன், இதை எதிர்பார்க்காதவள் விழிகள் இரண்டும் விரிந்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்,…

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்