
அத்தியாயம் – 16
ஒரு வாரம் கடந்த நிலையில் ரிஷியின் காயம் நன்றாகவே குணமாகியிருந்தது, நித்யா தான் தன் பிள்ளையை கவனிப்பது போல் கூடவே இருந்து அவனது ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்திருந்தாள், வேலைக்கு போகாமல் வீட்டிலேயேயிருந்து மனைவியின் பணிவிடைகளை ரசித்து அனுபவிப்பது கூட ஜிவ்வென்று இருந்தது அவனுக்கு, இதில் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் என்றால் அவன் அவர்களின் தேன்நிலவிற்காக ஏற்பாடு செய்திருந்த பிளான் தோல்வியுற்றது மட்டுமே,…. ஏற்கனவே உடல் காயத்திற்காக விடுப்பு எடுத்தவன், மேலும் தேன்நிலவிற்காக மீண்டும் விடுப்பு எடுக்க மனம் ஒப்பவில்லை, பின் வரும் நாட்களில் பார்த்துக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டுவிட்டான்,..
ஒரு வாரத்திற்கு பிறகு அன்று தான் வேலைக்கு கிளம்பினான் ரிஷி, இரண்டு நாட்களிலேயே அவன் காயத்தின் வலி அறவே குறைந்திருந்தாலும் பாட்டி தாத்தாவின் கண்டிப்பில் தான் ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தான்,,… நித்யாவிற்கு அவனை அனுப்பவே மனதில்லை, மனம் ஒரு மாதிரி படபடப்பாகவே இருந்தது,…
தன் தயக்கத்தை எல்லாம் புறம் தள்ளி விட்டு,… “நீங்க போய் தான் ஆகனுமா?” என்று கேட்டே விட்டாள் மெல்லிய குரலில்,….
யூனிஃபார்மை டக்இன் செய்து கொண்டிருந்தவன் புருவத்தை உயர்த்தி அவளை கேள்வியாய் பார்க்க,.. “இல்ல,… அது” என இழுத்தவள்,…. “நீங்க ஏன் இந்த போலீஸ் வேலையை விட்டுட கூடாது” என்று சட்டென்று கேட்டவள், அவனது முறைப்பை வாங்கி கட்டிக் கொண்டாள்,…
“போலீஸா ஆகணுங்கிறது என்னோட பலநாள் கனவு, ரொம்ப கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன், ஆனா நீ எவ்ளோ அசால்டா வேலையை விட்டுட சொல்லி சொல்லுற” என்றான் கொஞ்சம் அதட்டலான குரலில், அவள் தன் நலன் கருதி தான் இப்படி கூறினால் என்று புரிந்தாலுமே, அவனால் தன் வேலையை அவ்வளவு சீக்கிரம் விட்டு கொடுத்து விட முடியாது, இதில் கடந்த ஒரு வாரமாக அவள் தன்னை நெஞ்சில் தாங்காத குறையாக கவனித்துக் கொண்டாலும், தான் தன்னை பிடித்திருக்கா என்று கேட்ட சிறு கேள்விக்கு கூட அவள் பதில் அளிக்காமல் போனது அவனை கோபத்தில் தள்ளி விட்டிருந்தது….
நேரடியாக அவளிடம் கோபம் கொள்ளவில்லையென்றாலும், உள்ளுக்குள் கோபத்தோடு சேர்த்து வருத்தமும் இருக்க தான் செய்தது, அதனால் தான் கொஞ்சம் முறைத்துக் கொண்டே பதில் கூறினான்….
“எனக்கு புரியுதுங்க, ஆனா ரிஸ்க்கான வேலை அவசியம் இல்லன்னு தோணுது, பாட்டி கூட இது தான் சொல்றாங்க, பேசாம விட்டுடுங்களேன் இந்த வேலையை” என்றாள் மீண்டும்,…
“என்ன நித்து, என் மேல உனக்கு அவ்வளவு அக்கறையா? பட் ஏன்?” அவன் புருவம் உயர்த்தி வினவ,… “உங்க மேல எனக்கு அக்கறை இல்லாம இருக்குமா? நீங்க என்னோட கணவனாச்சே, எப்படி கவலை படாம இருக்க முடியும்” என்றாள்,…
அவள் வார்த்தைகளால் அவன் மனது குளிர்ந்து போனது உண்மை, ஆனாலும்,… “இந்த அக்கறை, கவலை எல்லாம் எவ்வளவு நாளைக்கு நித்து, நாளைக்கே உன் லவ்வர் வந்து கூப்பிட்டா அவன் பின்னாடியே போயிடுவ, உன் பேச்சை கேட்டு நான் வேலையையும் இழந்துட்டு பைத்தியகாரனா சுத்த வேண்டியது தான்” என்றதும் அவள் முகம் சிறுத்து விட்டது,…
“நித்து நீ எனக்கு நிரந்தரம் இல்ல, அதை என் மைண்ட்ல ரொம்ப அழுத்தமாவே பதிய வச்சுகிட்டேன், ஸோ நீயும் இனி என் கரியர் லைஃப்ல மூக்கை நுழைக்காதே, உங்களை மாதிரி பொண்ணுங்களால தான் ஆண்கள் எங்க வாழ்க்கை நிம்மதியற்றதாகவே போயிட்டு இருக்கு,” என கடுமையான முகத்துடன் கூறியவன், வெளியே நடந்து விட்டான்,….
ரிஷியிடமிருந்து ஒரு நாளும் இது போல் இவ்வளவு பெரிய பெரிய வார்த்தைகளை கேட்டிடாத நித்யா, உருக்குலைந்து போனாள், கண்ணீர் அதுபாட்டிற்கு கட்டுப்பாட்டை மீறி ஓட, சமைந்து போய் அமர்ந்து விட்டாள், “ஏன்,… ஏன் கருணா? எதுக்காக என் வாழ்கைக்குள்ள வந்த நீ? உன்னை நான் பார்க்காமலேயே இருந்திருக்கலாம்னு தோணுது, உன்னால உனக்கு செஞ்சி கொடுத்த சத்தியத்துக்காக தான் என் மித்துகிட்ட ஆசையா ரெண்டு வார்த்தை கூட உட்கார்ந்து பேச முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கேன், ‘உங்களை பிடிச்சிருக்கு’ங்கிற சின்ன வார்த்தை அவருக்கு எவ்வளவு சந்தோசத்தை கொடுக்கும்னு எனக்கு தெரியும், தெரிஞ்சும் நான் அதை சொல்லல, என்னால சொல்ல முடியல, மனசு முழுக்க அவர் தான் நிறைஞ்சு போயிருக்காரு, ஆனா வாய்விட்டு அதை என்னால சொல்ல முடியல, காரணம் நீ.. நீ மட்டும் தான் கருணா,…
நான் உன்னை லவ் பண்ணலடா, என் மித்துவை தான் லவ் பண்ணுறேன், அதை நான் எப்போவோ புரிஞ்சிக்கிட்டேன், ஆனா என்னால உன் மனசை நோகடிக்க விரும்பல, உன் கிட்ட பேசணும், உனக்கு புரிய வைக்கணும், நீ புரிஞ்சிக்கிட்ட பிறகு தான் என் மித்து கிட்ட என் மனசுல உள்ளதை பத்தி சொல்லணும்னு உறுதியா இருக்கேன், எப்போ வருவ, சீக்கிரம் வா கருணா, என்னால என் மித்து கஷ்டப்படுறத்தை பார்க்க முடியல” எனறு மடிந்து போய் அழுது கரைந்தவளின் நினைவலைகள் கடந்த நாட்களை நோக்கி சென்றது,…
சரியாக ரிஷி நித்யாவின் திருமண நாள்க்கு மூன்று வாரத்திற்கு முன்பு,….
“அண்ணா,…. அண்ணா” என்று டீவியின் முன்பு காமெடி காட்சிகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த வருணேஷின் அருகில் அமர்ந்து அவனது மணிக்கட்டின் பகுதியினை சுரண்டி கொண்டிருந்தாள் நித்யா,…
“சொல்லு ஸ்ரீ” என்று தங்கையிடம் எதிர்வினையாக கூறினானே தவிர, அவனது மொத்த கண்ணும் டீவியில் தான் நிலைத்து நின்றது….
“அண்ணா… இன்னைக்கு மதியம் நீ சாப்பிட்ட இறால் குழம்பும், இறால் வருவலும் நான் சமைச்சது, அதுவும் உனக்காக பார்த்து பார்த்து ருசியா பண்ணேன்” அவள் எதற்கோ ரூட் போட்டு, அவன் தலையில் ஐஸ் கட்டியை தூக்கி வைக்க,… ஏற்கனவே மதியம் சாப்பிட்ட இறால் குழம்பின் ருசி இன்னமும் நாக்கை விட்டு அழியாமல் இருந்தவன்,… “நிஜமாவா ஸ்ரீ” என்றான் இப்போது தங்கையை ஆச்சரியமாக ஏறிட்டு,…
“நிஜமா தான் அண்ணா” அவள் சமத்து பிள்ளையாக இமைகள் படபடக்க கூறவும்,… “நல்லதுடா,… இனி நீயே சமையல் பண்ணு, அண்ணனுக்கு உன் கைப்பக்குவம் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான்,…
“கண்டிப்பா அண்ணா,… உனக்காக நான் இது கூட பண்ணமாட்டேனா” என்றவள்,… “அண்ணா…. நான் ஒன்னு கேட்கவா” என்றாள் தயங்கி கொண்டே,…
“கேளுடா” என்றவன் டீவியின் பக்கம் பார்வையை திருப்பிக் கொள்ள,… “அண்ணா,… எனக்கு உன் ஸ்கூட்டி வேணுமே” என்றாள்,….
சட்டென்று அவள் புறம் திரும்பி அவளை ஏற இறங்க பார்த்தவன்,… ‘ஒஹ்… இதுக்கு தான் இந்த உருட்டா’ என எண்ணியவன்,… “எதுக்கு” என்றான் பார்வையை கூர்மையாக்கி,…
“நாளைக்கு சவிதா ரோஜா வாசுகி இவளுங்கள்லாம் பக்கத்து ஊர்ல புதுசா தொறந்திருக்க சூப்பர் மார்கெட் போறாங்களாம், அதான் நானும் போயிட்டு வரலாம்னு” அவள் இழுக்க,… “எங்க வீட்டு மகாராணி ஸ்கூட்டில தான் போவீங்களோ, பஸ்ல போக வேண்டியது தானே” என்றான்
“அவளுங்க மூணு பேரும் ஸ்கூட்டியில தான் வராளுங்க, எனக்கு தான் ஸ்கூட்டி வாங்கி தரல, பரவால்ல, உன்கிட்ட இருக்கிறதயாச்சும் தரலாம்ல ஒரே ஒரு நாளைக்கு” என்றாள் சிறு கெஞ்சலுடன்….
“நீ இப்படியெல்லாம் கேட்பேன்னு தெரிஞ்சிருந்தா, ஸ்கூட்டிக்கு பதிலா முரட்டு பைக்கா வாங்கிருப்பேனே” அவன் புலம்ப,… “நீ எவ்வளவு பெரிய முரட்டு பைக்கா வாங்கினாலும் அதையும் நான் சுலபமா ஓட்ட பழகிப்பேன்” என்று கெத்தாக கூறியவளை,… “முதல்ல உனக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியுமா?” என்று சந்தேகத்தோடு பார்த்தான் வருணேஷ்,…
“அதெல்லாம் உன்னை விட சூப்பரா ஓட்டுவேன், ரோஜா எனக்கு பழகி கொடுத்திருக்கா” அவள் பெருமையாக கூற,… “லைசன்ஸ் இருக்கா?” என்றான் கூரிய விழிகளால்…
“பக்கத்துல இருக்க ஊருக்கு போக எதுக்கு லைசன்ஸ், போலீஸ்காரங்களாம் இருக்க மாட்டாங்கண்ணா, சும்மா கேள்வி மேல கேள்வி கேட்டு குடையாம இந்த ஒருவாட்டி மட்டும் தான்ண்ணா” என்றாள் இறைஞ்சும் குரலில்,…
சில நொடிகள் யோசித்தவன்,… “உனக்கு சூப்பர் மார்கெட் போகணும் அவ்வளவு தானே, சரி நானே உன்னை கூட்டிட்டு போறேன்” அவன் கூற,… “அதெல்லாம் வேணாம், நான் என் தோழிங்களோட தான் போவேன், உன்கூட எனக்கு போரடிக்கும், ப்ளீஸ் அண்ணா, என் செல்ல அண்ணால்ல, அம்மா கிட்ட கூட அனுமதி வாங்கிட்டேன், உன் அண்ணன் கிட்ட கேட்டுக்கோனு சொல்லிருச்சி, ப்ளீஸ் அண்ணா” அவள் கெஞ்சலை நீட்டிக் கொண்டே போக, ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க முடியாதவன்,… “சரி போயிட்டு வா அதுக்கு முன்னாடி நீ எப்படி ஸ்கூட்டி ஓட்டுறனு நான் பார்க்கணும்” என்றவுடன் அவளும் வேகமாக அவனை வாசலுக்கு அழைத்து சென்று, வெளியே நின்ற அண்ணனின் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து ஓட்டிக் காட்ட தொடங்கிவிட்டாள்….
அவள் நேர்த்தியாக ஸ்கூட்டி ஓட்டியத்தை கண்டு, நிம்மதியடைந்தவன், “போலீஸ்கிட்ட மாட்டிக்காம சீக்கிரமே வீட்டுக்கு வந்து சேரு, மாட்டிக்கிட்டா ஃபைன் கட்டுற பணத்தையும் என்கிட்ட தானே வந்து கறப்ப” என்றவன் அவளுக்கு மேலும் சில பல அறிவுரைகளை வழங்கிவிட்ட பிறகே முழு அனுமதி தந்தான், சந்தோசத்தில் துள்ளிகுதித்த நித்யா… “நான் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வந்திடுறேன்” என்று ஓடினாள் தன் தோழிகளை காண,…
நித்யாவிற்கு தோழிகள் என்றால் சவிதா, ரோஜா, வாசுகி இம்மூவரும் தான், சின்ன பிள்ளையிலிருந்தே நெருங்கிய தோழிகள், அவர்கள் வசிக்கும் ஒவ்வொருவரின் வீடும் இரண்டு மூன்று வீடு தள்ளி இருக்கும் என்பதால் நால்வரும் எந்நேரமும் ஒன்றாக தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள், நித்யா பெண்பிள்ளை என்பதால் அவள் அண்ணன் வருணேஷை போல் வெளியூர் சென்றல்லாம் அவள் படிக்கவில்லை, உள்ளூரிலேயே தான் தன் படிப்பை முடித்தாள், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள், அதற்கு மேல் படிக்க அவளுக்கும் விருப்பமில்லை, பெண்பிள்ளையை வெளியூர் அனுப்பி படிக்க வைக்க அவளின் தாய் தமையனுக்கும் விருப்பம் இல்லை என்பதால் அதோடு தன் படிப்பை நிறுத்தியிருந்தாள்…
அவள் தோழிகளுக்கும் படிப்பில் அவ்வளவு சூட்டிகை இல்லாததால் அவர்களும் படிப்பை தொடரவில்லை, வீட்டு வேலை செய்கிறேன் பேர்வழி என்று தாய்க்கு தொந்திரவு கொடுப்பது, ஊர் மேய்வது, யாரிடமாவது வேண்டுமென்றே போய் வம்புக்கு நிற்பது இப்படி தான் சென்று கொண்டிருந்ததது அத்தோழிகளின் வாழ்க்கை,……
இதனிடையே தான் “என் அப்பா எனக்கு ஸ்கூட்டி வாங்கி தந்திருக்கார்” என்று அலட்டிக் கொண்டு வந்து நின்றாள் வாசுகி, அவளை தொடர்ந்து தன் வீட்டினரையும் நச்சரித்து சவிதாவும் செகேண்டில் ஒரு ஸ்கூட்டி வாங்கி விட, ரோஜா தன் தமக்கையின் ஸ்கூட்டியை கைப்பற்றி மூவரும் ஸ்கூட்டி பழக ஆரம்பித்தனர்,…
நித்யாவிற்கு தன் வீட்டின் நபர்களை பற்றி தெரியும், அண்ணன் தற்போது கைநிறைய சம்பாத்தித்தாலும் தனக்கு ஸ்கூட்டி வாங்கி தர மாட்டான், தெருவை விட்டே தாண்ட விடாதவர்கள் தனக்கா ஸ்கூட்டி வாங்கி தர போகிறார்கள் என்று வாங்கி கேட்டு மூக்கை உடைத்துக் கொள்ள விரும்பாமல் தோழியின் வண்டியை வைத்தே அவளிடமே கற்றுக் கொண்டாள்,…
இப்படி போய் கொண்டிருந்த நாட்களில் தான், பக்கத்து ஊரில் புதியதாக சூப்பர் மார்கெட் ஒன்று திறந்திருப்பதாக விஷயம் வெளிவர, தோழிகள் அங்கு செல்வதற்காக பிளான் போட்டனர்,… வீட்டிற்கு தெரியாமல் கொஞ்சம் தொலைவான இடத்திற்கு போயிருக்கிறாள் தான், ஆனால் இந்த முறை அவளே ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை,… தோழிகளிடம் கேட்டால் தருவார்கள் தான், ஆனால் அவர்களை தொந்திரவு செய்யாமல், தன் வீட்டு வண்டியில் சென்று வரலாமே என்று அண்ணனிடம் ஐஸ் வைத்து, எப்படியோ சம்மதமும் வாங்கி விட்டாள், தோழிகளிடம் சந்தோஷமாக கூறி குதூகளித்தாள்,.. அடுத்த நாள் தோழிகளுடன் சேர்ந்து அந்த டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்க்கு கிளம்புவதற்காக ஆயத்தமானாள் விதி அன்றிலிருந்து அவள் வாழ்வில் விளையாட ஆரம்பித்து விட்டது தெரியாமல்,…
“ஏய் ஸ்ரீ…. ஏன்டி நின்னுட்ட” தோழிகள் நால்வருமாய் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் நோக்கி சென்று கொண்டிருந்த வழியில், நித்யா ரோட்டின் ஒரு பகுதியில் நின்றுவிட்டதை கண்டுகொண்ட, அவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த தோழி வாசுகி வண்டியை நிறுத்திவிட்டு வினவினாள்,……
“பஞ்சுமிட்டாய் வாசு” என பஞ்சுமிட்டாய் விற்பவறை கைகாட்டி கூறியவள்,… “நான் வாங்கிட்டு வந்திடுறேன், நீ போ” என கூற, அவள் பஞ்சுமிட்டாய் பைத்தியம் என்பதை அறிந்த வாசுகியும் தலையில் அடித்து விட்டு “சீக்கிரம் வந்துடு” என்ற சொல்லுடன் கிளம்பிவிட்டாள்,…
வண்டியை விட்டிறங்கியவள், இரண்டு பாக்கெட் பஞ்சு மிட்டாயை வாங்கி, அங்கேயே நின்று ரசித்து ருசித்து சாப்பிட தொடங்கிவிட்டாள், பஞ்சுமிட்டாயை ரசித்து திண்பவள், தன்னையே வெகுநேரமாய் ஒரு ஜோடி கழுகு கண்கள் நோட்டமிடுவதை பார்க்க தவறினாள்,…
இரண்டு பக்கெட்டையும் பிரித்து சாப்பிட்டு முடித்தவள், பிசுபிசுவென்ற கரத்தை, துப்பட்டாவில் துடைத்துக் கொண்டு, வண்டியில் ஏறி கிளம்ப போன சமயம் அவள் ஸ்கூட்டியின் அருகிலேயே ஒரு ஆம்னி வேன் வந்து நின்றது கிட்டதட்ட அவள் வண்டியை உரசிக்கொண்டு,…
“ஏய் யாரது” என அவள் சத்தமிடும் முன்னே, அந்த ஆம்னி வேனின் கதவு திறக்கப்பட்டு, சடாரென்று உள்ளே இழுக்கப்பட்டாள் அவள்,.. அவள் வந்த ஸ்கூட்டி நிராதரவாய் ரோட்டில் சாய, அவளை சுமந்து கொண்டு அந்த வேன் அவ்விடத்திலிருந்து வேகமாய் புறப்பட்டது,…….
சில மணி நேரத்திற்கு பிறகு,….
கை கால்கள் நாற்காலியோடு கட்டப்பட்ட நிலையில் ஆழ்ந்த மயக்கத்திலிருந்தாள் நித்யஸ்ரீ, அவளை சுற்றிலும் எங்கும் கருமை நிறைந்த இருட்டு, பக்கத்தில் போய் பார்த்தால் மட்டுமே அங்கு ஒருவள் கட்டப்பட்டநிலையில் இருக்கிறாள் என்பது பார்வைக்கு அகப்படும், மணிகள் கடந்தது, கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்தது, மெது மெதுவாக விழிகளும் திறந்தது, ஆனாலும் விழிகளின் பார்வைக்கு எதுவும் தெரியவில்லை, அந்த மை இருட்டில் என்னத்த காண முடியும் அவளால்,….
தலை கிருகிருவென்று சுற்றியது, கை இரண்டும் வலி எடுத்தது, கால்கள் அது இருக்கிறதா என்பதை கூட உணர முடியாத நிலையில் இருந்தாள், கரத்தை அசைக்க முயன்றால் முடியவில்லை, கால்கள் மரத்து போய்விட்டதா? இல்லை கால்களை இழந்து விட்டேனா? அவளுக்கு சந்தேகம் எழுந்தது,….
அது என்ன இடம் என்று அவளால் பார்க்க இயலவில்லை, எப்படி வந்தோம் என்பதும் தெரியவில்லை, யோசித்தாள், கொஞ்சம் கொஞ்சமாக நடந்த அனைத்தும் நினைவுக்கு வந்தது,…..
தன்னை யாரோ வண்டிக்குள் இழுத்தார்கள், அவள் கத்தும் முன்பே அவள் மூக்கில் துணி வைத்து அடைக்கப்பட்டது, அவ்வளவு தான் நியாபகம் இருந்தது, வேறெதுவும் நியாபகம் இல்லை, அவளை காருக்குள் இழுத்தவனை கூட அவள் கண்கள் பார்க்கவில்லை, புரிந்து கொண்டாள் தான் கடத்தப்பட்டிருகிறோம் என்பதை, ஆனால் ஏனென்று தெரியவில்லை, அழுகை முட்டிக் கொண்டு வந்தது, அழ கூட முடியாத ஜீவனற்ற நிலையில் இருப்பதை போல் உணர்ந்தாள், மூளையில் செய்தி சேன்னலில் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றாக ஓடத் தொடங்கியது,…
இளம் பெண் கழுத்தை அறுத்துக் கொலை,
இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அடையாளம் காண முடியாத நிலையில் இறந்து கிடந்தார்,…
இளம்பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் கொடுமையால் கொலைசெய்திருக்கிறார்,… என்று அவள் காதில் கேட்ட செய்திகள் அனைத்தும் இப்போது அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்ததது, திக் பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள், அதுவும் சில கணமே,….
அவள் அமர்ந்திருந்த நேர் திசைக்கு அப்பால் ஏதோ ஒரு சத்தம், அந்த சத்தத்தை தொடர்ந்து விழிகளை கூசசெய்யும் வெளிச்சம் வேறு, கேட்ட அந்த சத்தத்தில் நெஞ்சம் படபடக்க அமர்ந்திருந்தவள், அவ்வெளிச்சம் முகத்தில் படவும் முகத்தை திருப்பி விழிகளை மூடிக் கொண்டால் கூச்சம் தாங்க இயலாமல்,….
அதே நேரம் அழுத்தமான காலடி ஓசை அவளை நெருங்கியது, தன்னை நோக்கி யாரோ வருவதை அந்த ஓசையின் மூலம் புரிந்து கொண்டவளுக்கு பயம் எகிறியது, செய்திகள் அனைத்தும் மீண்டும் மீண்டும் காதில் எதிரொலித்தது, வியர்வை அவளை குளிக்க வைத்திருக்க, தன்னை இன்னும் இன்னும் நெருங்கி வந்தவனை, இதயம் தடதடக்க திரும்பி பார்த்தாள், முகம் தெளிவாக தெரியவில்லை, ஆனால் உயரம் ஆறடிக்கு மேல் இருந்தது, ‘இவ்வளவு ஹைட்டா’ நினைத்தபடியே மீண்டும் மயங்கி போனாள்,…
அடுத்த முறை முகத்தில் மழை துளிகள் விழவே, கண்விழித்தாள் நித்யா, மழைதுளிகள் விழுந்ததாக தான் எண்ணினாள் ஆனால் அது மழை துளிகள் அல்ல அவளை கடத்தி கொண்டு வந்தவன் தான் முகத்தில் மினரல் வாட்டரை தெளித்திருக்கிறான் என்று விழிகளை நன்றாக விழித்து பார்த்த போது தான் புரிந்தது, இந்த முறை அவள் கரங்களும் கால்களும் கட்டப்படவில்லை, அவ்விடம் வெளிச்சமாக இருந்தது, அவன் முகத்தை தெளிவாக பார்த்தாள்,….
உயரம் அதே ஆறடிக்கு மேல் தான், அகன்ற நெற்றி அதன் வலது பக்கம் ஆழமான தழும்பு, விறைப்பான நாசி, அவன் எந்நேரமும் விறைத்து கொண்டிருபத்தால் அப்படியே அமைந்து விட்டதா என்று தெரியவில்லை, அழுத்தமான உதடுகள், சிரித்தே பல நாட்கள் ஆகிருக்கும் போல, தாடையில் சிறு குழி, முறுக்கிய மீசை, சுருண்ட கேசம், மாநிறத்திற்கும் குறைவான நிறம் என்றாலும் முகம் கலையானதாக தான் இருந்தது,….
கடவுள் புண்ணியத்தில் தப்பித்து சென்றால் அடையாளம் கூற வேண்டுமல்லவா அதனால் தான் தன் பயந்த விழிகளால் அவனது முகத்தை அளந்து கொண்டவள், அவனது உரமேறிய உடலை கண்டு, அதற்கு மேலும் அளவிடமுடியாமல், பயந்து பார்வையை திருப்பிக் கொண்டாள்,…
அவனோ சற்று நிமிடங்களாய் அவளது அளவிட்ட பார்வையை கண்டும், எதுவும் பேசாமல் தான் நின்றான், அவள் வேறு பக்கம் பார்வையை திருப்பி கொள்ளவும்,… அவள் பக்கம் ஒரு உணவு பொட்டலத்தை வைத்து விட்டு,… “சாப்பிடு” என்றான்,… அந்த சாப்பிடு என்ற வார்த்தையில் ஒரு வித மிரட்டல் ஒளிந்திருப்பது தெரிந்தாலும், அவள் அதை தொட்டு கூட பார்க்கவில்லை, அவள் என்ன சாப்பிடும் நிலையிலா இருக்கிறாள்? அவளை எதற்காக இங்கு கொண்டு வந்திருக்கிறான் என்று முதலில் தெரிய வேண்டும், அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவளுக்கு துணிச்சலும் இல்லை, இதில் அவன் சாப்பாட்டில் எதை கலந்து கொடுத்திருக்கிறான் என்பதும் வேறு நெருட, அந்த பொட்டலத்தின் பக்கமே திரும்பவில்லை,
நிமிடங்கள் கடந்தது,… மீண்டும் கூறினான்… “சாப்பிடு” என்று…
அவனது கடினமான குரல் ஒரு மாதிரி நடுக்கத்தை ஏற்படுத்தினாலும், அவள் அதை சாப்பிடும் ஐடியாவில் இல்லை, அதனால் செவிடன் காதில் சங்கூதியது போல் அமர்ந்திருக்க,… அதே நேரம் அவளுக்கு சற்று இடது புற சுவரில் துப்பாக்கி குண்டு ஒன்று மிகப்பெரும் சத்தத்துடன் வந்து பாய, அரண்டு போனவள் பயத்தில் காதுகளை இரு கரங்களால் பொத்திக் கொண்டு, விழிகள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டாள்,…
இதயம் அதிவேகமாக துடிக்க, மெல்லமாக நிமிர்ந்து விழிகளை கொஞ்சமாக திறந்து பார்த்தாள், கையில் துப்பாக்கியுடன் சீறும் சிறுத்தையாக மாறி அவளது முன்னிலையில் நின்று கொண்டிருந்தான் அவன், மூச்சே ஒரு நிமிடம் நின்று விட்டது போல் உணர்வு அவளுக்கு, துப்பாக்கி இப்போது அவளை பார்த்து நீண்டு கொண்டிருந்தது, விழிகள் இரண்டும் தெறித்து வந்து விழுவது போல் விரிந்தது அவளுக்கு,….
“சாப்பிடு” இந்த முறை அகங்காரமாக கத்தினான்,,…. படபடவென்று உணவு பொட்டலத்தை பிரித்தவள், அதிலிருந்த இட்லியை பிட்டு வலுக்கட்டாயமாக வாய்க்குள் திணித்தாள், உள்ளே போகவில்லை, ஆனாலும் உள்ளே வைத்து குத்தினாள் தன் விரல்களால்,…
அவளை இரு நிமிடங்கள் நின்று பார்த்தவன்,… “நான் ஒன்னு சொன்னா அதை கேட்டு நடக்கணும், இல்லனா மூளை சிதறிடும்” எச்சரித்தவன், அவ்வறையை விட்டு வெளியேறினான், அவளுக்கு விழிகள் கண்ணீரை வெளியிட்டது, பசி எடுக்கிறதா இல்லையா என்பதை உணரும் நிலையில் கூட அவள் இல்லை, சாப்பிட முடியாமல் சாப்பிட்டாள், வாந்தி வருவது போல் இருந்தது, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் விக்கிக் கொண்டு பயத்தில் மீண்டும் மீண்டும் இட்லியை உள்ளே அனுப்பியவளின் முன்னால் ஒரு தண்ணீர் போத்தலை வந்து வைத்தவன், அவளை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றுவிட்டான்,….
தண்ணீரை குடித்த பிறகு தான் கொஞ்சம் நன்றாக இருந்தது போல் இருந்தது, தண்ணீரை குடித்து குடித்தே பொட்டத்திலிருந்த மூன்று இடலிகளையும் உள்ளே அனுப்பி விட்டாள், வலுக்கட்டாயமாக தின்றதினால் இறங்காமல் நெஞ்சிலேயே நின்ற உணவு வாந்தி வழியாக வெளியே வந்து விட்டது,….
அவளது வாந்தி எடுக்கும் சத்தத்தில் உள்ளே வந்தவன், அவள் செய்து வைத்திருக்கும் காரியத்தை விழிகள் இடுங்க பார்த்து விட்டு,…. “ஏய் எழுந்து வா” என்றான் அதிகாரத்துடன்…
மயக்கமருந்தின் வீரியம் இன்னமும் குறையாமல், தட்டு தடுமாறி எழுந்தவள், தளர்வான நடையுடன் அவன் பின்னே சென்றாள், அவன் ஓரறையை காட்ட, அது குளியலறை என்பதை வெளியிலிருந்து எட்டி பார்த்தே அறிந்து கொண்டவள், உள்ளே சென்று பூட்டிக் கொண்டாள்,… குழாயை திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட தண்ணீரை கரங்களில் அள்ளி முகத்தில் அடித்து கழுவினாள், உடையில் ஆங்காங்கே பட்டிருந்த வாந்தியை சுத்தம் செய்தாள்,… குளிர்ந்த தண்ணீர் முகத்தில் படவும் கொஞ்சம் நிதானத்திற்கு வந்ததை போல் உணர்ந்தாள்,….
கொஞ்சம் நேரம் உள்ளேயே இருந்தாள் அவனுக்கு பயந்து, அவன் படப்படவென்று கதவை தட்டவும் வேறு வழியின்றி வெளியே சென்றாள்,…. “இவ்வளவு நேரம் என்ன பண்ண? என்ன தப்பிக்க பிளானா?” அவள் சென்று முக்கால் மணி நேரத்திற்கு மேலானதால் தான் கதவை தட்டி வெளியே வந்தவளிடம் எகிறிக் கொண்டிருந்தான்,… ஆனால் அவள் தப்பிக்க பிளான் போடவில்லை பயத்தில் மட்டுமே உள்ளே இருந்தால் என்பது அவனுக்கு தெரியாதே,…
“இல்ல” வெளிவராத குரலில் பதில் கூறியவளை, நம்பாத பார்வை பார்த்தவன்,… “வா” என்று அழைத்து விட்டு முன்னே நடந்தான், அவள் அப்போது தான் அவ்விடத்தை அளவிட்டாள், வீடு போல தான் இருந்தது, ஒரு மூலையில் அவள் இவ்வளவு நேரம் இருந்துவிட்டு வெளியே வந்த குளியலறை, வலது பக்கம் அவள் வாந்தி எடுத்து வைத்துவிட்டு வந்த சிறிய அறை, இப்போது நடந்து கொண்டிருப்பது விசாலமான முற்றம் போல் இருக்க, அதன் ஓரத்தில் அவளை அமர சொன்னான், அவளுக்கும் வேறு வழி இல்லை அமர்ந்தாள்,….
அதே முற்றத்தின் சில அடி தொலைவில் போட்டிருந்த டேபிளுடன் கூடிய நாற்காலியில் அவன் அமர்ந்தான், நேரங்கள் கடந்தது, டேபிளின் மீது கால் போட்டபடி நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கொண்டிருந்தான் விழிகளை மூடிய நிலையில், அவளுக்கு அவனது எண்ணம் என்னவென்றே புரியவில்லை, மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்திருந்தாள், தப்பிக்கும் அளவிற்கு அவளுக்கு தைரியமில்லை, விஷயம் அறிந்து தான் இருக்கும் இடம் கண்டுபிடித்து தன் தமையன் வருவான் என நம்பினாள், மணிகள் கடந்ததே தவிர யாரும் வரவில்லை, அமர்ந்த வாக்கிலேயே தூங்கிவிட்டாள்,….
நன்றாக உறங்கி கொண்டிருந்தவள், ஏதோ உடையும் சத்தம் கேட்டு அரண்டு போய் விழித்தாள்,… அவன் தான் அங்கும் இங்கும் வேகமாக நடைபயின்றபடி அலைந்து கொண்டிருந்தான், அவனது செயல் அவளுக்கு பயத்தை தந்தது, அவன் முகத்தில் ஒருவித கோபம் ஆக்ரோஷம், தரையை பார்த்து நடை பயின்று கொண்டிருந்தவன் அவள் புறம் திரும்பினான், அவளுக்கு ஈரகொலையே நடுங்கியது, சுவரோடு சுவராக ஒன்றினாள், அவன் அவளை நெருங்கி வந்தான்,… பயத்தில் வெடவெடத்து போய் அமர்ந்திருந்தவள் “உன் பேரன்ன” அவன் கேட்ட கேள்வியில் திருத்திருவென்று விழித்தாள்,…

