Loading

மனதில் விழுந்த விண்மீனே-1

 “விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்..

சரணம் குறைகள் களைய இதுவே தருணம்..

விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்..

கணநாதனே மாங்கனியை உண்டாய்..

கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே..”

என தன் இனிய காந்த குரலில் கண் மூடி பக்தியில் லயித்து பூஜை அறையில் பாடிக் கொண்டிருந்த தன் இல்லாள் சாராவையே கண்ணி இமைக்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஜலால். தீபாராதனை காட்டிவிட்டு தன் கண்களில் அதை ஒட்டிக் கொண்டவள்,மணியை பார்க்க அது ஏழு என காட்ட,தன் காதல் கணவன் ஜலாலை எழுப்ப வேண்டுமே என்ற நினைவு வரவே,  “அச்சோ இன்னிக்கும் லேட் ஆய்டிச்சே”  என தன் தலையில் அடித்து கொண்டே திரும்ப,அங்கே அவளையே தன் கண்களாலே விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்  ஜலால்.

அவனை கண்டதும் சாராவின் கன்னங்கள் தக்காளி பழம் போல் சிவந்துவிட்டது.அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகளே பிறந்து, அக்குழந்தையே பள்ளி செல்லும் வயது வந்த பிறகும் அவனின் பார்வை அவளுள்  வெட்கத்தை வரவழைத்தது.சிவந்த கன்னங்களை மறைக்க முயற்ச்சித்துக் கொண்டே, “எப்போ எழுஞ்சிங்க? நானே வந்து எழுப்பலாம்னு நெனச்சேன். எழுஞ்சதும் குரல் கொடுத்து இருக்கலாம்ல?” என அவள் கேள்வி கேட்டுக் கொண்டே போக ஜலால் ஒன்றும் பேசாமல் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். “குளிச்சியாடா நீ?” எனச் அவனிடமிருந்து விலகி கேட்டவளிடம், “இன்னும் இல்லடி இப்ப தான் எழுஞ்சேன். என்ன எழுப்பி விட்டதே உன்னோட பாட்டு தான். உன் பாட்டு காந்தத்தில ஒட்டுன இரும்புத் துண்ட போல என்ன உன்கிட்ட அழைச்சிட்டு வந்துருச்சு” என ஜலால் காதலாக கூறினான்.

அவன் கூறியதை கேட்டு சாரா உள்ளம் மகிழ்ந்தாலும், வெளியில் முறைத்துக் கொண்டே , “காலையிலே டயலாக் பேசாம ஒழுங்கா போய் குளிச்சிட்டு ரெடியாகுடா” எனக் கூறி செல்லப் போனவளை கை பிடித்து நிறுத்தி ஜலால்  “ஹே உண்மையா தான்டி. உன்னோட குரல சாமி பாட்ட கேட்கிறதே இவ்ளோ இனிமையா இருக்கே. அப்போ லவ் சாங்லாம் கேட்டா நான் என்ன ஆவேன். எனக்காக ஒரே ஒரு சாங் மட்டும் பாடுடி” என விடாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்ன இது காலையிலியே? ஐரா இப்போ எழுஞ்சிப்பா.லவ் பண்ணி கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையே பொறந்திருச்சி,ஆசைய பாரு” எனக் கூறினாள் சாரா.

“என்னமோ கல்யணமாகி நூறு வருஷம் ஆன மாதிரி சலிச்சிக்கிறீயே” என ஜலால்  கோபித்து கொள்வதைப் போல் முகத்தை திருப்பிக் கொள்ள சாரா “சலிச்சிக்கலாம் இல்ல” என மென்புன்னகையுடன் ராகம் இழுக்க, “அப்புறம் என்ன பண்ணியாம்?” எனக் கேட்டான் ஜலால்.

சாராவிடமிருந்து பதில் வராததால் அவள் முகத்தை உயர்த்தி பார்த்தவன் அவளது கன்னங்களை உற்று நோக்கினான்.அவளது வாய் எப்படி பேசினாலும் அவளது கண்களும் கன்னங்களும் எப்போதும் அவனிடம் உண்மையை மட்டுமே உரைக்கும்.

அவளது கன்னங்கள் செம்மையாக இருப்பதை கண்டு அதற்கு மேலும் அவனால் கோபித்துக் கொள்வது போல நடிக்க முடியவில்லை. “அப்போ ஐராவுக்கு ஒரு  தங்கச்சி இல்லனா தம்பி பாப்பாவ ரெடி பண்ணலாமா?அவ மட்டும் எவ்வளவு நாளைக்கு தான் தனியா விளையாடுவா?”  என ஜலால் கேட்க சாரா அவனை நிமிர்ந்து நோக்கினாள்.அவர்கள் இருவரும் விழிகளால் பேசிக் கொள்ள, அவ்வீடே அமைதியாகியது.

ஜலால் சாராவை நெருங்கும் போது சரியாக அந்நேரம் ஐரா  “அம்மா பசிக்கு”  என தன் மழலை மொழியால் கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்து சாராவை அழைக்க, சாரா ஜலாலிடமிருந்து பிரிந்து ஐராவை தூக்கி கொண்டு சென்றாள். செல்லும் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த ஜலாலின் உதடுகளில் தானாகவே புன்னகையை அரும்பியது. ஐரா பார்ப்பதற்கு சாராவின் நகல் போலவே இருந்தாள். சாரா குழந்தைப் பருவத்தில் எவ்வாறு இருந்து இருப்பாரோ அப்படியே ஐராவும் இருந்தாள்.

ஆத்விக் அவனது வீட்டினுள் நுழைந்ததுமே  “டேய் ஆத்வி சீக்கிரம் போய் குளிச்சிட்டு ரெடியா ஆகிட்டு வா” என்றார் அவனின் தாயார் பானுமதி.

“மா எனக்கு தூக்கமா வருது. நான் இப்ப தான் நைட் டியூட்டி முடிச்சிட்டு வரேன். வீட்டுக்குள்ள வந்ததும் வராததுமா ரெடியாக சொல்லுறீயே? நான் எங்கயும் வரல. எங்க போனுமோ நீங்க மட்டும் போயிட்டு வாங்க” எனக் கூறிவிட்டு உள்ள செல்ல போனவனை தடுத்து “என்னடா ஆத்வி இப்படி பேசுற நீ வராம எப்படி உனக்கு பொண்ணு பாக்கப் போறது?” எனக் கேட்டார் பானுமதி.

   “அம்மா எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கறதுல இஷ்டம் இல்ல.நா சொன்ன நீங்க கேக்க மாட்றுகீங்க” என ஆத்விக் கூற, “உனக்கு இஷ்டம் வரும்போது வயசு போய்டும். இப்போ எல்லாம் நல்லா தான்டா இருக்கும்.அப்புறம் உன் பிரெண்ட்ஸ் எல்லாம் கல்யாணமாகி குழந்தை குட்டினு வரும் போது தான் அம்மா சொன்ன பேச்ச அப்பாவே கேட்டிருக்கலாமோனு தோணும்” என ஆத்விக்கை அறிவுரை மழையில் நனைத்தார் பானுமதி.

    “அம்மா தாயே! நீ அட்வைஸ் பண்ணியே கொல்லாத. நான் வரேன்”  எனக் கூறிவிட்டு படியேறினான் ஆத்விக்.

“என் புள்ளன்னா புள்ள தான். நான் சொன்னத தட்டாம கேட்கிறான்” என அவனுக்கு நெட்டி முடித்தவாறே பெருமையாக கூறினார் பானுமதி.

முதல் தளத்தில் இருக்கும் தனது அறைக்கு செல்லும் போது அவனை இடைமறித்த அவனது தங்கை தர்ஷினியை கண்டு எரிச்சலடைந்த ஆத்விக்  “இப்போ உனக்கு என்ன பிரச்சனை?  இந்த வீட்டிலே ஒருத்தரும் என்ன நிம்மதியா இருக்க விடுறது இல்ல. எனக்கு தூக்கமா வருது”  என தன் தாய் பானுமதியிடம் கத்த முடியாதெல்லாம் தன் தங்கையிடம் கத்திக் கொண்டிருந்தான் ஆத்விக்.

   “

டேய் என்ன ஏன் கத்துற? முடிஞ்சா அம்மாவை போய் கத்து”  என தர்சினியும் ஆத்விக்யிடம் விடாமல் எகிறினாள்.

     “

அது முடியாம தானே உன்கிட்ட கத்திட்டு இருக்கேன்”  என வாய்க்குள்ளே முணுமுணுத்தான் ஆத்விக்.

         “

போய் கத்தி தான் பாரேன். நீங்கதான் தைரியமான ஆளாச்சே போய் கத்து” என நக்கலாக கூறினாள் தர்ஷினி.

               “இப்போ உனக்கு எ

ன்ன வேணும் தர்ஷு?  அம்மா மாதிரி நீயும் பண்ணாத” என ஆத்விக் பாவமாக அப்பாவி பிள்ளையை போல் முகத்தை வைத்துக் கொண்டு கூற  “சரி சரி விஷயத்துக்கு வரேன்”  எனக் கூறி தான் கேட்க வந்ததை ஆரம்பித்தாள் தர்ஷினி.

         “

டேய் அண்ணா உனக்கு உண்மையிலேயே கல்யாணத்துக்கு ஓகேவா? எப்பவுமே இந்த விஷயத்தை எடுத்தா சண்டை போடுற நீ இன்னைக்கு என்ன பொசுக்குனு ஒத்துக்குன? அப்போ எனக்கு உண்மையாவே அண்ணிய கூட்டிட்டு வரப் போறியா?” என தர்ஷினி கேள்விகளை அடுக்கிக் கொண்டு சென்றாள்.

“ஆமா நான் லவ் பண்ணி திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணி ஒருத்திய கூட்டிட்டு வர போறேன் பாரு நீ வேற” என சலித்துக் கொண்டான் ஆத்விக்.

“கண்ணா ஆத்வி நீ அந்த அளவுக்குலாம் வொர்த் இல்ல. ரொம்ப கற்பனை பண்ணாதே. அப்படியே நீ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரனும்னாலும் உன்னோட ஸ்டேட்டஸ்கோப்ப தான் கூட்டிட்டு வரணும். எப்பப் பார்த்தாலும்  அது கூட தான அலஞ்சிட்டே இருக்க” என தன் தமையனை கலாய்த்தாள் தர்ஷினி.

“மொலச்சி நாலு இலைய விடல அதுக்குள்ள பேச்சப் பாரு.வயசுக்கு தகுந்த மாதிரி பேசு” என  தன் பாசமலரின் காதை திருகிக் கொண்டே ஆத்விக் கூற, “ஹே விடுடா.எரும மாடே.வலிக்குது” என அவள் கதற, “என்ன சொன்ன இப்போ கேக்கல”  என காதை அவள் புறம் திருப்பி ஆத்விக் நக்கலாக வினவினான்.

     “

அன்பு தமையனே, ஆசை அண்ணனே வலிக்குது. ப்ளீஸ் விடு”  என தர்ஷினி கெஞ்சியவுடன் தான் ஆத்விக் அவனின் கையை அவளின் காதுகளில் இருந்து எடுத்தான்.

“சரி சரி பொழைச்சு போ”  எனக் கூறிவிட்டு அவன் அறைக்குள் சென்று கதவை சாத்த முற்படும் போது  “டேய் அண்ணா, நிஜமாவே உனக்கு இந்த கல்யாணத்துக்கு ஒகேவா?” என அக்கறையாக தங்கையவள் வினவினாள்.

“இல்லை” என்றவாறு அசல்ட்டாக தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றவனின் பின்னாலே சென்ற அவனின் பாசமலர் தர்ஷினி அவனை அவள் புறம் திருப்பி,அவனை உற்று நோக்கினாள்.

“என்னனு தான் சொல்லி தொலையேன்டி. போகவும் விடாம சொல்லவும் சொல்லாம இப்படி படுத்துறியே” என சலித்துக் கொண்டான் ஆத்விக்.

            “ஒகேவாடா உனக்கு இந்த கல்யாணம்?” என கேட்ட கேள்வியை திருப்பி திருப்பி தர்ஷினி கேட்டுக் கொண்டு இருக்க,அவள் தோலில் கைப் போட்டு, “தர்ஷுமா,எப்படியும் இந்த மேரஜ் எப்படியும் நடக்காது.அம்மாவே நிறுத்திடுவாங்க” எனக் கூறினான்.

            தர்ஷினி  அவன் என்ன கூறுகிறான் என்பது புரியாமல் அவனை கண்டு முழிக்க, “ஹே வாண்டு,எப்படியோ நம்ம அம்மாவே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டங்க.பொண்ணுக்கு அது இல்ல,இது இல்லனு எதாச்சும் குறை  சொல்லி நிறுத்திடுவாங்க பாரேன்” என அசால்ட்டாக கூறினான்.

               தர்ஷினி ஆத்விக்கை வாயை பிளந்து பார்க்க,அவளின் வாயை மூடியவன் “ஒரு ஓனானே உள்ள போற அளவுக்கு வாய திறந்து வச்சி இருக்க.வாய மூடு” என ஆத்விக் கூறினான்.

                  ” நீ ஆல்ரெடி  அண்ணிய பாத்துத்தியா?” என பாசமலர் தங்கையவள் கேக்க, “அண்ணியா?” என ஆத்விக்கும் முறைத்துக் கொண்டே கேட்டான்.

                    “ஐ மீன் சப்போஸ் கல்யாணம் ஃபிக்ஸ்  ஆயிட்டா..”  எனக் கூறும் போதே, ஆத்விக் இடை மறித்து  “அவங்களாம் நான் பார்க்கல. நான் ஏன் அவங்கள பாக்கனும் ? கல்யாணம்லாம் ஃபிக்ஸ் ஆகாது.அம்மாவே வேணாம்னு சொல்லிடுவாங்க.நீயே பாரேன்” என கூறினான்.

                 “எனக்கென்னம்மோ இப்ப பாக்க போற பொண்ணு தான் என் அண்ணியா வருவாங்கன்னு தோணுது”  என தர்ஷினி கூற,  “கண்டயும் யோசிக்காம போய் படிக்கிற வேலையை பாரு நான் போய் ரெடி ஆகிறேன்” என  ஆத்விக் தனது கப்போர்டில் இருந்து துண்டு மற்றும் துணிகளை எடுத்து வைத்துக்கொண்டே கூறினான்.

                    “இப்ப எதுக்கு நீ ரெடி ஆகனும்?” என மறுபடியும் யோசிக்காமல் தர்ஷினி கேள்வி கேட்க,  “அப்போ தான் சீக்கிரம் போயிட்டு சீக்கிரமா வந்து தூங்க முடியும் அதான்”  எனக் கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான் ஆத்விக்.

               “சப்போஸ் நான் நினைக்கிற மாதிரி இந்த கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி அவங்களே என்னுடைய அண்ணியா வந்துட்டா.. என்ன பண்ணுவ?”  என தர்ஷினி குளியல் அறையின் வாசலில் நின்று கொண்டு கேட்க,  “ஆயிட்டா நீ ரொம்ப நாளா கேக்குறியே அந்த ஆப்பிள் ஐபோன உனக்கு வாங்கி தரேன். இப்ப கெளம்புறீயா?”  என தன் தாய் எப்படியும் இன்று பார்க்கப்போகும் பெண்ணை நிராகரித்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஆத்விக் வாக்களித்தான்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. kanmani raj

      காதலோடு வாழும் ஒரு இணை, கல்யாணம் வேண்டாமென பெண் பார்க்க செல்லும் ஒருவன், இணைக்கும் புள்ளி யாதோ…

    2. kanmani raj

      ஜலால் மேல சாராவுக்கு ஒரே லவ்வு, சாரா பாட்டை கேட்டாலே இவனுக்கு கிக்கு ஏறும் ஜிவ்வுனு..