Loading

எனதழகா – 23 ❤️

அபி கூறியதை  நினைத்து உள்ளம் மகிழ்ந்து போனார் அபியின் அப்பா. உடனடியாக யாருக்கோ தொடர்பு கொண்டு  “என் மகன் என் பேச்சை மீறவில்லை” என்று கர்வமாக சொன்னார். எங்கு அவன் தன் பேச்சை கேட்காமல் போய் விடுவானோ என்ற பயத்தில் இருந்தவருக்கு இவ்வார்த்தை அமிர்தமாகியது.

பின்பு, அவரும் அவர்கள் சந்திக்கும் ரகசிய பங்களாவில் இருந்து வெளியே வந்தவுடன் அவரை வீட்டில் இறக்கி விட்டு, மாதுவை மறப்பதற்கு மதுவை நாட சென்ற விட்டான்.

🏡 பிருந்தாவனம்

அபி மருத்துவமனையில் இருந்து தப்பி விட்டான் என்றவுடன் உடனே இவர்கள் லெனினை தான் நாடினர். லெனின் பொறுமையாக கேட்டு விட்டு ஒருவருக்கு கால் செய்து இங்கு வர சொன்னார்.

அவர் வரும் வரையில் வசுதேவரையும், கேசவரையும் வெளியில் எடுப்பதைப் பற்றி அர்ஜுன் கேட்டான்.

“அதுக்கு தான் உனக்கு அத்தனை தடவை கூப்பிட்டேன். நீ எடுக்கவேயில்லை. காலேஜில் போதைப் பொருள் இருந்ததுக்கு காலேஜுக்கு சம்மந்தம் இல்லை. யாரோ ஒருத்தன் தான் வச்சிருக்கான் அப்படினு ஆதாரம் திரட்டியாச்சு. ஃபூட்டேஜ் இருக்கு. அதைப் போய் ஒப்படைச்சு கேசவரை வெளியில எடுத்திடலாம்” என்று கூற,

ஈஸ்வரி “நான் கேட்டப்போ யாரோ  சிசிடிவியை ரிப்பேர் பண்ணிருக்காங்க. இரண்டு நாளா வேலை பார்க்கலைனு சொன்னாங்க ” என்று யோசனையோடு கேட்டார்.

லெனின்”கரெக்ட் தான். ரிப்பேர் தான்.பதிவாகலை தான். ஆனால், அது எல்லாம் காலேஜில் எல்லாருக்கும் தெரிஞ்ச கேமரா. இது மிஸ்டர் கேசவருக்கும் எனக்கு மட்டும் தெரிஞ்ச கேமரா ஃபூடேஜ். ரெகார்டிங்ஸ்லாம் இருக்கு .வாயா வெங்கடேஷா. வந்து உட்காரு “

வெங்கடேஷன்”என்னய்யா ? எதுக்கு கூப்பிடீங்க ?வாமா ஈஸ்வரி , நல்லா இருக்கியா? என்னப்பா அர்ஜுன் ?  மாமாவையும், மச்சானையும் வெளியில் எடுக்கிறதுக்கு எதுவும் வாய்ப்புகள்  கிடைச்சதா? “

லெனின்”அதெல்லாம் தேடிட்டு தான்யா இருக்கோம்? உன்ன கூப்பிட்டது வேறு விஷயத்துக்கு ? “

லெனின் விஷயத்தை மறைப்பதைக் கண்டு அர்ஜுனுக்கு ஆச்சர்யம் என்றால், ஈஸ்வரிக்கு ஏதோ புரிந்தது.

“என்ன விஷயம்? “என்று வெங்கடேஷன் கேட்ட நொடி அவருக்கு கால் வந்தது. அதை எடுத்துப் பார்த்தவர்  ஒரு நிமிடம் என்று கூறி வெளியில் சென்றார்.

அப்பொழுது லெனின் , “அர்ஜூன், கேசவ் உடைய சீக்ரெட் எனக்கு மட்டும் தான் தெரியும். ஏன் உங்க தாத்தாவுக்கே தெரியாது. உன் தாத்தாக்கிட்டையும்  இந்த மாதிரி செய்ய சொன்னேன். அவர் கேட்கலை. அவரை வெளிய எடுக்க கொஞ்சம் டைம் ஆகும். இந்த விஷயம் கேசவ் வெளியே வர வரைக்கும் தெரிய வேணாம். உன்கிட்ட சொன்னதே ஒரு காரணம் தான். புரியுதா? ” என்று தன் நீண்ட உரையை முடிக்க ,

அர்ஜுனுக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது. இருந்தும் இப்போதைக்கு அப்பாவையும், தாத்தாவையும் வெளியில் எடுப்பதே தன் முதல் கடமையாகும். அதனால் இதை பின்பு கவனிப்போம் என்று நினைத்து  விட்டான்.

அப்பொழுது வெங்கடேஷன் உள்ளே நுழைந்தார். “கிளைண்ட்கிட்ட இருந்து கால் வந்து கிட்டே இருக்கு. மாமாவை வெளியே எடுக்க ஏதாச்சும் வழி இருக்கா பாருங்க ” என்று தானாகவே விளக்கம் கொடுத்தார்.

லெனின்” நீயே ஏதாச்சும் வழி சொல்லுயா ? உனக்கு தான் தெரியுமே? “என்று சந்தேகத்தோடு கேட்டார்.

சிரித்து கொண்டே “என்னய்யா, என்னை சந்தேகப்படுறியா?நான் என்ன சொல்லனும் ? “என்று நிதானமாக கேட்டார்.

“அய்யோ, அவர் அப்படி சொல்லல மாமா!” என்று அர்ஜுன் பதறிக் கொண்டு கூறினாள்.

“யோவ், நான் ஏன்ய்யா உன்னை சந்தேகப்பட போறேன். நீ தான் மிஸ்டர் வசுதேவர் கம்பெனியில் வேலை பார்க்கிற . ரியா முடியலைனு இருக்கு . அப்போ உன்கிட்ட தான கேட்கணும்” என்று சிரித்துக் கொண்டே லெனின் சமாளித்தார்.

“பரவாயில்லை , சமாளிக்கிறீங்கனு தெரியுது. நான் கண்டுபிடிச்சது இது தான் “என்று ஒரு பென் டிரைவ் கொடுத்தார்.

அதை வாங்கியவர் அனைவர் முன்பும்   காட்டினார். அதில் ஒருவன் சரக்குகளை மாற்றியது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால், யாரும் எதுவும் கூறவில்லை. ஏனென்றால் இந்நேரம் அவன் தப்பித்து இருப்பான் என்று அனைவருக்கும் தெரியும்.

லெனின் “சரிய்யா, நான் இதை வச்சுக்கிறேன் . நான் என்னனு  பார்த்துக்கிறேன். “

” அது உன் வேலை. நான் முடிஞ்ச வரைக்கும் தேடி கொடுத்துட்டேன். அவ்வளவு தான் என் வேலை. நான் கிளம்புறேன்.” என்று கூறி எழ போனார் வெங்கடேஷன்

அர்ஜுன்”மாமா”, லெனின் “ஏய்யா, இருய்யா. காலுல வெந்நீ தண்ணீ ஊத்துன மாதிரி ஓடிக்கிட்டே இருக்க! அப்படி என்ன வேலை? நான் போன் போட்டு கூப்பிட்டேன்ல? “

” இதுக்கு தான் கூப்பிடனு நினைச்சேன். நான் தான் தேடிகிட்டு இருக்கேனு உனக்கு தெரியும்ல. இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி தான உன்கிட்ட சொன்னேன். அப்புறம் என்ன? ஒரே ஸ்கூல படிச்ச நண்பனோடு ஆஃபிசியல் காண்டெக்ட் வச்சாலே ஒரே ரோதனையா இருக்கு “என்று வெங்கடேஷன் புலம்பி தள்ளினார்.

லெனின்”சரிய்யா, சரிய்யா சளிச்சுக்காத! உன் ஊரு பக்கம்லாம் போனீயா? “

“என்ன புதுசா கேட்குற? அதான் அவங்களோட சண்டை ஆகி பேச்சு வார்த்தை இல்லாம இருக்கேனு தெரியும்ல ” என்று புருவ முடிச்சுக்களோடு கேட்டார் வெங்கடேஷன்.

“இல்லை மாமா, அபி தான் ஏதோ செய்யுறான். இவ்வளவு பிரச்சனை பண்ணது எல்லாம் அவன் தான் “என்று அர்ஜுன் பொறுமையாக கூறினான்.

” ஏப்பா, என் வீட்டில பேசிலைனு அவங்களை இப்படி தப்பா பேசுற. அவங்க அப்படி இப்படி தான் இருந்தாங்க. நான் நாசுக்கா அவங்களை விலக்கி வச்சுட்டேனே. அதுக்கு அப்புறமும் ஏன் அவங்களை இழுக்குற ? ” வெங்கடேஷன் பொறுமி கொண்டு கூறினார்.

லெனின்”யோவ், யாரும் வேணும்னு சொல்லல . உன் அருமை தம்பி மகனே தானா வந்து சொல்லிருக்கான் . சொல்லிட்டு தப்பிச்சு போய்ட்டான். அவன் எங்க ஏதுன்னு போன் பண்ணி விசாரிச்சு சொல்லு”

அர்ஜுனும் நடந்ததை கூற வெங்கடேஷன் அதிர்ச்சி ஆகி அர்ஜுனின் கையைப் பிடித்து , கண்கள் கலங்கி “அய்யோ, என் தம்பிகாகவும், அபிக்காகவும் நான் மன்னிப்பு கேட்கிறேன். அவன் எங்க இருந்தாலும் நான் பிடிச்சு கொடுக்கிறேன் ” என்று கூற,

அர்ஜுன் பதறி “நீங்க ஏன் மன்னிப்பு கேட்குறீங்க ? நீங்க உதவி மட்டும் பண்ணுங்க மாமா? “என்று கூறினான்.

“கண்டிப்பாக ” என்று கூறி அவர் கிளம்பினார். “உன் மனைவியும், மகளும் சரியாகிட்டாங்களா ? ” என்று லெனின் கேட்க ,  ஆம் என்று கூறி தலையை  அசைத்து விட்டு சென்று விட்டார்.

அவர் சென்றவுடன் அர்ஜுன் ஏதோ கூற வருவதை உணர்ந்து” அப்புறம் பேசலாம். முதல இரண்டு பேரையும் பார்த்து வெளியே எடுக்கிற வேலையைப் பார்ப்போம் ” என்று கூறி எழுந்து விட்டார்.

மூவரும் சென்றது போலிஸ் ஸ்டேசனுக்கு. இருவரையும் ஒரே ஸ்டேசனில் வைத்திருந்ததால் நேரடியாக அவர்களை முதலில் சந்தித்தனர். கேசவ் மகனின் முன்பு தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் குனிந்து கொண்டார். வசுதேவர் தான் அவரின் தோளைத் தொட்டு தைரியம் கொடுத்தார்.

அர்ஜுன் தாங்க மாட்டாமல் “அப்பா, எனக்கு உங்களை பத்தி தெரியும். எனக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. ஆனால், இந்த உலகத்துக்கு வேணும். அதை கண்டுபிடிச்சாச்சு . கோர்ட்டுக்கு தான் போறோம். போறதுக்கு முன்னாடி உங்களிடம் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் . கவலைப்படாதீங்க ” என்று ஆறுதல் கூறி விட்டு கேசவர் மறுமொழி கூறுவதற்கு முன் வெளியேறி விட்டான்.

பின்பு, கோர்ட்டில் ஆதாரம் நிருப்பித்து அந்த இரவே இருவரையும் வெளியில் எடுத்து விட்டார்கள் மூவரும்.

“அபியினால் தான் இன்று இவர்கள் வெளியில் வந்தார்கள். இல்லைனா , உள்ளேயே வச்சு இந்நேரம் போட்டுருந்தா  செத்திருப்பாங்க.ச்சை, இதுல உங்க அப்பா வேற ஆதாரத்தை கையில் கொடுத்துட்டு வந்துருக்காரு ” என்று ஒருவன் கொந்தளித்து கொண்டிருந்தான்.

அவனை சமாதானப்படுத்த முயன்றாள் ஆருஷி.

“சரி விடுடா , ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? நான் அபிகிட்ட பேசுறேன்!” என்று கூறி புதியவனின் தலையை தடவி கொடுத்தாள் ஆருஷி.

அவள் அடுத்த அறையிலிருக்கும் அபியிடம் பேசுவதற்காக இந்த அறையிலிருந்து வெளியில் வந்து அபியின் அறையை தட்டும் முன் நிவான் ஆருஷியின் கையைப் பிடித்து வெளியில் வந்து “நீ கிளம்பு ஆஷி லேட் ஆகிடுச்சு. நாளைக்கு நேரா வந்து பேசு இல்லைனா போன் பண்ணி பேசு. இப்போ கிளம்பு” என்று அவளை அனுப்ப முற்பட்டான்.

” அய்யோ நிவான், அப்பாக்கு அபிகிட்டயோ உன்கிட்டயோ பேசினேனு தெரிஞ்சது அவ்ளோதான் நான். அதனால, நாளைக்கே வந்து பேசுறேன். பாய் !”என்று கையைசைத்து அவள் கிளம்பும் முன், நிவானின் அப்பார்ட்மென்ட் வரண்டாவின் ஓரத்தில் இருக்கும் ஒரு வழி பாதைக்கு இழுத்து சென்றான்.

என்ன நடந்தது என்று புரியும் முன் ஆருஷி அவனின் கை வளைவில் இருந்தாள். ஏற்கனவே இருந்த  அதிர்ச்சியோடு , இப்பொழுது ஒருவர் மட்டுமே நிற்க கூடிய இடத்தில் இரண்டு பேரும் ஒரசிக் கொண்டு இருப்பது வெட்கத்தை தூண்டியது.

அவளின் ஒவ்வொரு செய்கையையும் ரசித்து கொண்டே இருந்தவன், அவளை கட்டியணைத்த இடையை இன்னும் இறுக்கி அவளை இன்னும் நெருக்கத்தில் கொண்டு வந்து அவளின் தாடையை நிமிர்த்தி தன்னை நிமிர்ந்து பார்க்க வைத்து , அவளின் கண்களில் ஆழ்ந்த முத்தத்தை பரிசளித்தான். அப்பொழுதும் அவளை கட்டியணைத்த கைகள் மூலம் அவளின் இடையை வருடிக் கொடுத்து கொண்டிருந்தது.

அதில் இன்னும் நெளிந்தாள். அதில் இன்னும் சுயம் இழந்து நிற்கும் பொழுது அவளின் சுவாசம் வேறு போதைத் தர அவளின் இதழ் நோக்கி கண்கள் பாய்ந்தது. தன்னுடைய இதழ்களும் சுயம் இழந்து அவளின் இதழ் நோக்கி பாயும் நேரம் “ம்ம்க்கும் ” என்று குரல் கேட்டது.

ஒரு நிமிடம் பதறி இடித்துக் கொண்டு வெளியில்  இருவரும் வர ஆருஷியின் பின்னந்தலையில் ஒரு அடி வைத்தான் அபி.

“ஆஆஆ “என்று ஆருஷி அலறியவுடன் நிவான் “டேய், என் முன்னாடி அவளை அடிக்காதனு எத்தனை தடவை சொல்லுறது ” என்று முகத்தை சுளித்து கொண்டு கூறினான்.

நெஞ்சில் கை வைத்து “என்னது, அடிக்கக் கூடாதா? மச்சான் , அவள் என் அக்கா. தம்பி முன்னாடி பண்ணுற வேலையா இது? “என்று கூறி திரும்பவும் அவளின் தலையில் அடித்து “ஏன்டி, உன்னை இங்க வராதனு எத்தனை தடவை சொல்லுறது ? ” என்று கேட்டான் அபி.

“நான் என்ன யாரோ ஒருத்தனையா லவ் பண்ணுறேன். என் அத்தை மகன் , என் மாமாவைத் தான லவ் பண்ணுறேன் ” என்று அவனைப் பார்த்து காதல் பொங்க கூறினாள்.

அவளைப் பார்த்து காதலோடு சிரித்துக் கொண்டே அபியின்  தோளில் சாய்ந்து அவளை பார்த்து கண்ணடித்தான்.

“டேய், நான் அவன் தம்பிடா. போடா முத உள்ளே. ” என்று கூறி  நிவானை உள்ளே தள்ளி விட்டு கதவை சாத்திய பின்னரே ஆருஷியிடம் திரும்பி “நீ ஏன் இன்னும் நிக்கிற? கிளம்பு! நாளைக்கு ஆபிஸுக்கு வந்து தான் என்னை பாக்கனும். ஓடு!” என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக தள்ளினான்.

“ரொம்ப தான்டா பண்ணுற ! நீயும் தான லவ் பண்ணுற ?” என்று கத்தி விட்டு கொணட்டி விட்டு சென்றாள்.

“ஆமாடி , நான் லவ் பண்ணுறதே அப்பாக்கு பிடிக்கல. இதுல நீங்க இரண்டு பேரும் லவ் பண்ணுறது தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா உனக்கு ? “என்று இவனும் பதிலுக்கு கத்தினான்.

“ஹாங், ஹாங்…. ஆம்பள பிள்ளைகளா பிறந்த பன்னி கூட்டத்துல சிங்கம் சிங்களா பிறந்திருக்கேன். அதெல்லாம் அப்பா என் பேச்சை கேட்பாங்க. போடா” என்று கூறிவிட்டு இவள் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.

என்ன தான் இவர்கள் முன்பு சிரிப்பது போல் காட்டிக் கொண்டாலும் தனிமையில் அவளின் ஞாபகம் வாட்டியது அபிக்கு.

ஆயிரம் முறையேனும் அவனின் போனை எடுத்து ரியாவுக்கு கால் செய்வதற்கு முயற்சி செய்தான். எடுப்பதும் வைப்பதுமாக இருந்தவனை தோளில் தட்டி அவனை உள்ளே அழைத்து சென்றான்.

நிவான் தோளில் தட்டியவுடன் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்து நிவானின் முகம் பார்க்காமல் உள்ளே சென்றான். அதை கண்டு கொண்டும் ஒன்றும் கூறாமல், அறைக்கு செல்பவனை பிடித்து சாப்பாட்டு மேஜையில் அமர வைத்து பிடிவாதமாக சாப்பிட வைத்தான். பின்பும் , விடாமல் சமையலறையில் சுத்தம் செய்வதற்கு அழைத்து சென்றான்.

“ஏன்டா, அது தான் அழுகுறேனு தெரியுதுல? ஏன்டா  , விடாமா பிடிச்சு வச்சிருக்க? “என்று அழுகாக குறையாக  கேட்டான் அபி.

நிவான்” அதே தான் டா, நீ அழுகுற . அதோட ஃபீல் பண்ணுறேனு ரூம்க்குள்ள போய்ட்டா நான் மட்டும் மொத்தமா வேலை செய்யனும். நியாயப்படி பார்த்தா இன்னிக்கு நான் குக்கிங், நீ கிளினிங். ஏதோ ஃபீல் பண்ணுறேனு பெரிய மனசு பண்ணி உதவி செய்றேன் “

“ரொம்ப பெரிய மனசு தான்டா உனக்கு ” என்று கூறி நீலிக் கண்ணீரை துடைத்து கொண்டே பாத்திரங்களை கழுவினான்.

பின்பு, அங்கே சிரிப்பலைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. நிவானின் முயற்சி புரிந்து அபியும் தன் மனநிலையை மாற்றிக் கொண்டு இருவரும் அரட்டையடித்து விட்டு துயில் கொண்டனர்.

🏡பிருந்தாவனம்

வசுதேவரையும், கேசவரையும் தக்க ஆதாரத்துடன் நிருப்பித்ததால் அவர்களை வெளியில் விட்டனர்.

இரவு பதினொன்று மணியளவில் அர்ஜூன், ஈஸ்வரி, லெனின், வசுதேவர், கேசவர் ஐவரும்  உள்ளே நுழைந்தனர்.

அங்கு ஏற்கனவே அசோக், ஆதிரா, ஆகாஷ் மற்றும் தாஸ் இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

வகதேவரும், கேசவரும் உள்ளே நுழைந்தவுடன் லஷ்மி தான் கண்கள் கலங்க முன்னே நடந்து வந்தார். வந்தவர் கேசவரின் தாடையை பற்றி கொஞ்சி விட்டு வசுதேவரிடம் ஒரு அர்த்தப் பார்வை வீசினார்.

பின்பு, பாமா தான் அனைவரின் நலன் கருதி “ஹக்கும்….அத்தை மாமாவும், இவங்களும் சாப்பிடாங்களானு தெரியல? ஃபிரஷ் ஆகிட்டு வரட்டும். சாப்பிட்டு மத்த விஷயம் பேசிக்கலாம் ” என்று அவர் கூறியவுடன் லஷ்மி அம்மாவும் புரிந்து அவர்களை ஃபிரஷ் ஆகி வரச் சொன்னார்.

அவரவர் அறைக்குள் நுழைந்தவுடன் ஆருஷி உள்ளே வந்தாள். இவ்வளவு நேரம் அறையில் இருந்தே பார்த்து கொண்டிருந்தார் மீரா.

எங்கோ நம் தப்பு செய்து விட்டோம். நாம் வளர்ந்த விதமும் தப்பாகி விட்டது. தன் மகளின் குணமும் சரியில்லை என்று நினைத்து உருக்குலைந்து விட்டார். ஆனாலும் அதை அனைவர் முன்பும் ஒப்புக்கொள்வதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் , அவரவர் அறைக்கு செல்லும் வரை இவர் வெளியில் வராமல் அறையின் உள்ளேயே இருந்தார்.

இப்பொழுது ஆருஷி வந்தவுடன் வேகமாக வெளியில் வந்தார். “ஏய் நில்லுடி, எங்க போய்ட்டு வர? “என்று கேட்டுக் கொண்டே படியிலிருந்து இறங்கி வந்தார்.

“போச்சு, ஏற்கனவே பதினொன்னு ஆச்சு, நமக்கு சோறு கிடைச்ச மாதிரி தான் “என்று ஆதிரா புலம்ப, ஆகாஷும் ஆமோதித்தான்.

ஆருஷியும் , மீராவும் எதிரெதிரே நிற்க, அமைதியாக ஆதிரா சமையலறைக்கு சென்று பழங்கள் எடுத்து கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டாள்.

அனைவர் முன்பும் கேட்டதே ஆத்திரமாக வந்தது, இதில் ஆதிராவின் செய்கை இன்னும் கோபத்தை கிளப்பியது. அதனை மீராவிடம் காட்ட முற்பட்டாள்.

அடுத்த ரவுண்ட் ஆரம்பம்!

கீர்த்தி☘️

 

 

                

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்