எனதழகா – 25❤️
ஆருஷி”இப்ப எதுக்கு ஏதோ சிஐடி மாதிரி கேக்குறீங்க ? “
மீரா “இல்லையே, நான் எதார்த்தமா அதே சமயம் பொறுமையாவும்,அமைதியாவும் தான் கேட்டேன். நீதான் இப்போ கத்துற !” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டார்.
“லிசன் மா , நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை. நான் அதோட வேலைக்கும் போறேன். அதனால், இப்படி கேள்வி கேட்காதீங்க !” என்று சலிப்பாகக் கூறினாள்.
மீரா ” நான் ஏன் கேட்கக் கூடாது? “
ஆருஷி “ஏன்னா உங்களுக்கு அது புரியாது! உங்களால புரிஞ்சுக்கவும் முடியாது. இந்த நாலு செவத்துக்குள்ள எத்தனை வருஷமா இருக்கிங்க .அதுக்குள்ள உலகமே மாறிடிச்சு. சோ , லீவ் மீ அலோன் ” என்று கடுப்பாகக் கூறினாள்.
“இப்போ நான் ஒன்னும் தப்பா கேட்கலையே……”மீரா அடுத்து சொல்வதற்குள் லஷ்மி அம்மா ” மீரா , அவள் இப்போ தான் வந்திருக்கா. முதல ஃபிரஷ் ஆகட்டும். சாப்பிடட்டும். அப்புறம் ரூமுக்கு போனதுக்கு அப்புறம் பேசு . நீயும் சாப்பிட வா” .
“பார்த்துக்கோங்க , இது தான் மேனரிஸம். ஏதாச்சும் படிச்சா தானத் தெரியும் “என்று முணுமுணுத்து கொண்டே படியில் ஏற போனவளை கையை பிடித்து “அவளுக்கு படிப்பு தான் இல்லை. அவள் திறமைக்கு நீயெல்லாம் கால் தூசிக்கு சமம்.”
“அப்படி பட்ட மகளை ஏன் இப்படி வைக்கனும்? “ஆருஷி பொங்கி கொண்டு கேட்க ” இவ்வளவு நாள் அம்மா அம்மானு அவள் மேலே உசிரையே வச்சிருந்த. இப்போ மட்டும் ஏன் கேள்வி கேட்குற ? ” என்று லஷ்மி அம்மா நக்கலாக கேட்டார்.
“இப்பவும் அம்மாக்காக தான் பேசுறேன். அது அவங்களுக்கு தான் புரியல. நீங்க ஏத்தி விடாதீங்க.” மீரா கை நீட்டி கூறினாள்.
இங்கு இவ்வாறு காரசாரமாக பேச்சு நடந்து கொண்டிருக்க அசோக். ஆதிரா, ஆகாஷ் மூவரும் தீவிரமாக அவர்களை பார்த்து கமெண்ட் கொடுத்து கொண்டிருந்தனர்.
ஆருஷி மீரா அவர்களை சிஐடி மாதிரி கேள்வி கேட்காதீர்கள் என்றதற்கு
ஆகாஷ் “எஸ் சீனா தானா மிஸஸ் மீரா 007”.
மீரா ஏன் கத்துகிறாய் என்று கேட்டதற்கு
ஆதிரா ” ஏன் ஏன் கத்துற? ” என்று வடிவேலு தோனியில் கேட்டாள்.
ஆருஷி நான் சின்ன குழந்தை இல்லை என்று சொன்னதற்கு
ஆதிரா “சின்ன பாப்பா, பெரிய பாப்பா ” என்று பாடினாள்.
ஆருஷி நான் அதோட வேலைக்கும் போறேன் என்று சொன்னதற்கு
ஆகாஷ் “நான் வேலைக்கு போறேன், வேலைக்கு போறேன், வேலைக்கு போறேன் “
மீரா நான் ஏன் கேட்க கூடாது என்று கேட்டதற்கு
ஆகாஷின் தாடையை திருப்பி “ஏன் ஏன் ஏன் ஏன் ? “
ஆதிரா “எதுக்கு இத்தனை ஏன்?”
ஆகாஷ் “சரி, ஏன்?”
ஆதிரா “தெரில, பாப்போம் “
ஆருஷி உங்களுக்கு அது புரியாது என்று கூறியதற்கு
ஆதிராவும் ,ஆகாஷும் ஒரு சேர”ஏன்னா நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டா ” என்று கூறியவுடன் தண்ணீர் எடுத்த வந்த வேலைக்காரப் பெண் “கிளுக் ” என்று சிரிப்பை அடக்க மாட்டாமல் சிரித்து விட்டாள்.
அசோக் தான் அவள் பக்கம் திரும்பி வாயில் கை வைத்து “உஷ்” என்று கூறியவுடன் , அவளும் அதே போல் செய்து சிரித்து கொண்டே தலையை அசைத்து விட்டு சென்றாள்.
இப்போ நான் ஒன்னும் தப்பா கேட்கலையே என்று மீரா கூறியதற்கு
ஆகாஷ் “கோப்படாதீங்க சார். எங்கிட்டலாம் கோபப்படுறனால பத்து பைசாக்கு பிரோயஜனம் இல்லை “
லஷ்மி அம்மா இவர்களின் நடுவில் புகுந்து சாப்பிட அழைக்க ஆதிரா சிரித்து கொண்டே கையை டம்ளர் போல் வைத்து “ஃபஸ்டு ஜூஸ்ஸு”
இதுக்கு தான் கொஞ்சம் படிச்சிருக்கனும் என்று ஆருஷி முணுமுணுத்தற்கு
ஆகாஷ்”சார், நான் சிலுக்குவார்பட்டில இருந்து போஸ்பாண்டி எம்.ஏ., எம்.பில் பேசுறேன்”
அவள் திறமைக்கு கால் தூசிக்கு சமம் என்று லஷ்மி அம்மா சொன்னதற்கு
ஆதிரா ” ஒரு கோடிப்பூ ஒரு கோடி”
ஆருஷி அப்புறம் ஏன் இப்படி வச்சுருக்கீங்க என்று கேட்டதற்கு
ஆகாஷ்”காலத்துக்கும் நீயே தலைவரா இருப்பா. நாங்களாம் தலைவராவே ஆகவே கூடாது. கடைசி வரைக்கும் செயலாளரா இருந்து செத்து போய்டனும் “
உன் அம்மா மேல உசுரா இருப்பா. இப்ப மட்டும் ஏன் கேள்வியா கேக்குறா? என்று லஷ்மி அம்மா கேட்டதற்கு
ஆதிரா தலையில் கை வைத்து” இப்போ உனக்கு என்னடா வேணும்? “
நீங்க ஏத்தி விடாதீங்க என்று ஆருஷி கூறியதற்கு
ஆகாஷ் சைகையுடன்” நீ கீ கொடுக்குற, அவ ஆடுறா!”
அசோக்கால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதை விட சாப்பிட அழைக்க வந்த பாமாவிற்கும் கண்களில் கண்ணீரே வந்து விட்டது. கடினபட்டு சிரிப்பை அடக்கினார்.
எங்கு அவர்கள் காதில் விழுந்தால்
இம்மூவரையும் திட்டிவிடுவார்களோ என்று பயந்து ஆகாஷின் பின்னந்தலையில் அடித்து மூவரையும் சாப்பிட அழைத்து சென்றார்.
அவர்களை அதட்டி உள்ளிருக்கும் டைனிங் டேபிளில் அமர வைத்து சாப்பாடு பரிமாறினார். சிரித்துக் கொண்டே அனைவரும் சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில் அர்ஜூன், வசுதேவர், கேசவர் மூவரும் கீழ் இறங்க வந்தனர்.
ஹாலில் மீரா , லஷ்மி அம்மா மற்றும் ஆருஷி நிற்பதை உணர்ந்து எதுவும் தகராறாக இருக்கும் என்னு நினைத்து அமைதியாக அர்ஜூன் நண்பர்கள் குழுவுடன் கலந்து கொண்டான்.
வசுதேவர் அமைதியாக நிற்க, கேசவர் தான் கேட்டார் என்ன விஷயம் என்று. மீரா அதற்கு பதில் அளித்தவுடன், கேசவர் ஆருஷியின் தலையை தடவி “ஆருஷி பொறுப்பான பொண்ணு. ரொம்ப திறமையும் கூட .அவளுக்கே தெரியும் எது சரி எது தப்புனு. இப்படி கேள்வி கேட்காதே ? “என்று கூறும் பொழுது ,
வெங்கடேஷனும் உள்ளே நுழைந்து “நல்லா சொல்லுங்க மச்சான் உங்க தங்கச்சிட்ட. தப்பா நினைக்காதீங்க எனக்கு ஆருஷியை திட்டினா மட்டும் கோபம் அவ்ளோ வருது ” என்று கூறி அவர் உள்ளே நுழைந்தார்.
“மாப்பிள்ளை நீங்க தப்பா நினைக்காதிங்க. எல்லா அம்மாக்கு உள்ள பயந்தான். சரி ஆகிடும். நீங்க சாப்பிட வாங்க ” என்று வசுதேவர் தன் மகளுக்கு ஆதரவு கொடுத்தார்.
வெங்கடேஷன்”நான் சாப்பிட்டு தான் வரேன்.நீங்க போய் சாப்பிடுங்க. சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு பாக்கலாம் “
வசுதேவர் தலை அசைத்து விட்டு நகர, கேசவர் ஆருஷியிடம் “ஃபிரஷ் ஆகிட்டு சாப்பிட வா ” என்று கூறினார்.
ஆருஷி”சாப்பிட்டேன் மாமா. நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க “
கேசவர் “சரிடா, குட் நைட்”
மீராவிடம் ” போய், மாப்பிள்ளைக்கிட்ட பேசு, போ சாப்பாடு ரூமுக்கு அனுப்பி வைக்கிறேன் ” என்று கூறி லஷ்மி அம்மா மீராவை அவரின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
இங்கு டைனிங் டேபிளில் பாண்டவர்கள் குழுவோ ஒரு கலாட்டாவையே நடத்தி கொண்டிருந்தனர்.
அதில் வசுதேவரும், கேசவரும், லஷ்மி அம்மாவும் சேர , கடலில் உள்ள சிப்பிகள் போல் அங்கு சிரிப்பலைகள் கொட்டி கிடந்தது.
வருத்தத்தில் இருந்த வசுதேவர், கேசவர் கூட காலையில் நடந்ததை மறந்து , ஏன் தன்னையே மறந்து சிரித்தனர்.
அர்ஜுன் தான் மனதினிலேயே தன் நண்பர்களுக்கு நன்றி கூறினான்.
அனைவரும் சென்ற பின், அர்ஜுன் அவனின் அறைக்குள் நுழைந்த பின் அழையா விருந்தாளியாக அவள் நினைப்பு ஆக்கிரமித்தது .
ஆக்கிரமித்தவளோ நிம்மதியாக அவளது அறையில் துயில் கொண்டிருந்தாள் அவளின் அறையில்.
எனதழகா – 26 ❤️
அர்ஜூனுக்கு அமைதி கொன்றது. ஆனால், அதற்கு எதிர்மாறாக மீரா உள்ளே நுழைந்ததில் இருந்து வெங்கடேஷனை பார்ப்பதும், பின்பு ஏதோ பேச போவதும், பின்பு தயங்குவதுமாக இருந்தார்.
இதை கவனித்தும் வெங்கடேஷன் அமைதியாக அவர் ஃபிரஷ் ஆக சென்று விட்டார்.
ஈகோ என்ற உணர்வு மீராவைத் தடுப்பதால், அவரால் வெங்கடேஷனிடம் கல்யாண ஆன காலத்திலிருந்தே சரிசமமாக பழக முடியவில்லை. அதிலும் அவரின் குடும்பதாரின் செயலால் சுத்தமாக வெறுத்து விட்டார்.
கணவர் என்ற உறவு மட்டுமே வெங்கடேஷன். தன்னுடைய சுக ,துக்கங்களை மட்டுமே இதுவரை மீரா வெங்கடேஷனிடம் பகிர்ந்து உள்ளார். அவருக்கு ஒரு மனது உண்டு என்றோ , அவரும் மனிதர், அவருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று இதுவரை நினைத்ததில்லை .
ஆனால், இன்று ஆருஷியை அடித்ததற்கு இவ்வளவு கோபம் கொள்கிறார் என்பது ஆச்சரியம் தான் அவருக்கு. தன் அப்பா முன்பே இவ்வளவு பேசுகிறார். இது நாள் வரை தான் கண்டதில்லையே . அதோடு, தன் அப்பாவும், அண்ணாவும் தன் மேலும், தன் குடும்பத்தின் மேலும் கொண்டதன் பாசமும் , அக்கறையும் வியக்கத்தக்கதாத இருந்தது.
இவ்வாறு மீரா யோசித்து கொண்டிருக்கும் நேரம், வெங்கடேஷன் ஃபிரஷ் அப் ஆகி வெளியில் வந்தார். அவரை பார்த்து கொண்டே மீரா இருந்தும், வெங்கடேஷன் கண்டுக்காமல் லேப்டாப் மற்றும் போனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு போய் அமர்ந்து விட்டார்.
ஏதோ வேலை என்று நினைத்து காத்து கொண்டே இருந்தார். நேரம் செல்ல செல்ல கண் அயர்ந்து விட்டது. வேறு வழியில்லாமல் உறங்கி விட்டார். இதை பால்கனியில் இருந்து கண்ணாடி கதவின் மூலம் போன் பேசிக் கொண்டே பார்த்தார்.
🏔️ஊட்டி
அதே நேரம், நன்றாக துயில் கொண்டிருந்த அனுவிற்கு திடீரென்று ஒரு மணி அளவில் போன் அடித்தது.
கையை துலாவி எடுத்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி இந்நேரத்தில் இவர் ஏன் அழைத்தார் என்று . சொதப்பி விட்டனரா என்ற குழப்பத்தோடு அவ்வழைப்பை ஏற்றாள்.
அனு”என்னாச்சு ? “
” சொதப்பிடுச்சு ! தப்பிச்சுட்டாங்க.”
அனு”என்ன? தப்பிச்சுட்டாங்களா? இவ்வளவு அசால்ட்டா சொல்லுற ? சே….”
“மிஸ் ஆயிடுச்சு அனு .அடுத்த தடவை பார்த்துக்கலாம் “
“என்ன பாப்பீங்க ? வேடிக்கை தான் பாப்பீங்க ? சே….. எவ்வளவு அசால்ட்டான பதில். வைங்க போனை . உங்களை நம்பி பொறுப்ப கொடுத்தேன் அண்ணா, இப்படி பண்ணீட்ங்களே !”என்று நொந்து கூறி போனை வைத்து விட்டாள்.
🏠சென்னை மாநகராட்சி
“என்னடா மா அண்ணண இப்படி திட்டுற ?என்ன பண்ண சொல்ற அண்ணனுக்கும் வயது ஆகிட்டுச்சு! அடுத்த தடவை கண்டிப்பா ! ” என்று அசோக் கெஞ்சி கொண்டிருந்தான் .
எதிர் பக்கம் என்ன கூறினார்களோ
“தாங்கஸ் டா குட்டி மா !பாய்” என்று கூறி போனை அணைத்து விட்டு மகிழ்ச்சியாக தூங்க சென்று விட்டான்.
பனிக்காலம் ஆரம்பித்து விட்டது என்பதற்கு சான்றாக அதிகாலை ஆறு மணி ஆகியும் சூரியன் வெளியில் வர சோம்பல் கொண்டது. ஆனாலும், சூரியன் தனது காதல் ஆன பனித்துளிகளை பார்க்க சிறிது சிறிதாக வெளியில் வந்தது. இவ்வாறு வரும் சூரியனைப் பார்த்து வெட்கம் கொண்டு பூக்களின் உள்ளே உருகி கொண்டிருந்தது அந்த அதிகாலை பொழுதில்.
இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் பிருந்தாவனத்தில் குளிருக்கு இதமாக கம்பளி போர்வையால் சுற்றிக் கொண்டு அனைவரும் துயில் கொண்டிருந்தனர்.
பாமா மட்டும் எழுந்து தனது கோட்டையான சமையலறையில் புகுந்து பால் காய்ச்சி வைத்து விட்டு, தனக்கான தேநீரை பருகி விட்டு, பூஜையறையை சுத்தம் செய்வதற்கு சென்று விட்டார்.
பாமா கல்யாணம் செய்து இவ்வீட்டிற்கு வந்த பொழுதில் இருந்து காலையில் எழுந்து பூஜையறையை சுத்தம் செய்து விடுவார்.
அதே போல் இன்றும் செய்து கொண்டிருந்தார் . கடவுளை நின்று நிதானமாக கும்பிடும் நேரம் அவருக்கு இதமாக இருக்கும். அவ்வாறு கும்பிட நேரம் கிடைப்பது இப்பொழுதினில் மட்டுமே.
சுத்தம் செய்து முடித்து , கையெடுத்து கும்பிடும் நேரம் , அமைதியான சூழல் நிறைந்த வீட்டில் ஒரு அலறல் சத்தம். பதறிக் கொண்டு பூஜையறையினில் இருந்து வெளியில் வந்தார்.
எங்கிருந்து இச் சத்தம் வந்தது என்று பார்த்த பொழுது மாடிப் படியினிலிருந்து ஒடி வந்தான் ஒரு வேலையாள்.
“அம்மா, மீரா அம்மா ரூம்ல இருந்து தான் சத்தம் வருது. என்னன்னு தெரில. துடைச்சுக்கிட்டு இருந்தேன். ஆருஷி மேடம் உள்ள போனாங்க. சத்தம் வந்துச்சு ” என்று அவன் படபடவெனக் கூறினான்.
வேகமாக பாமா படி ஏறி சென்ற பொழுது , அனைவரும் அவரவர் அறையில் இருந்து வெளியில் வந்தனர். அர்ஜூன் தான் வேகமாக ஓடி வந்து கதவை திறந்தான்.
திறந்தவுடன் அதிர்ந்தான் அர்ஜூன்.அவனுக்கு பின்னால் நின்றிருந்த பாமாவும் அதிர்ந்து மயங்கி சரிந்தார்.
வந்து கொண்டிருந்த கேசவர் தான் “பாமா!!!!!!! அர்ஜூன் அம்மாவை பிடி “என்று கூறி வேக எட்டுகளுடன் நடந்து வந்தார்.
அதில் சுதாரித்த அர்ஜீன் பாமாவைப் பிடித்து சுவர் ஓரமாக சாய வைத்து அருகில் நின்று கொண்டிருந்த வேலையாளைப் பார்த்தான்.
கற்பூரம் போல் பிடித்துக் கொண்டவன் எள் என்றவுடன் எண்ணெயாக மாறி தண்ணீர் எடுத்து வரச் சென்றான்.
“மீரா ராராரா!” என்று கத்தி விட்டார் லஷ்மி அம்மா. அதனை கண்டு ஓடி வந்து வேகமாக கை அறுந்து, ரத்தம் வழிந்து மெத்தையில் கிடந்த மீராவை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல முற்பட்டனர்.
வசுதேவருக்கு தன் மகளின் இக்கோலம் நெஞ்சை கூறுப் போட்டது. “உன் பிள்ளையா இருந்தா இப்படி காசக் கொடுத்த தப்பை சரிக் கட்டுனா ஒத்துக்குவியா ? “என்றோ யாரோ சொன்னது காதில் ஒலித்தது. அதோடு நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்தார்.
துரிதமாக செயல்பட்டு வேலையாட்களை வைத்து அர்ஜுனும், கேசவரும் மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல காரில் அமர்த்தினர்.
இதற்கிடையில் ஒரு வேலையாள் மீராவிற்கு முதலுதவி செய்து கொண்டே ரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றார். மீரா அவர்கள் இருக்கும் காரில் அர்ஜுன் ஓட்டுநராகவும் , உதவிக்கு ஒரு வேலையாளும் இருந்தனர்.
வசுதேவரையும், லஷ்மி அம்மாவையும் ஒரு காரில் அமர்த்தி நம்பிக்கையான வேலையாளோடு, ஓட்டுநரின் உதவியோடும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கேசவர் தான் ஆருஷியின் நிலை கருதி அவளை அழைக்க மீராவின் அறைக்கு சென்றார். மீராவின் இத்தகைய நிலையைக் கண்டு அதே இடத்தில் அதிர்ந்து நின்று கொண்டிருந்தாள்.
உள்ளே நுழைந்து ஆருஷியை தொடும் பொழுது தான் கேசவருக்கு வெங்கடேஷன் ஞாபகம் வந்தது. பின்பு, வேகமாக சுதாரித்து அவரைத் தேடினார்.
அவர் மேல் சந்தேகம் கொண்டு தேடிய பொழுது , பால்கனியில் உறங்கி கொண்டிருந்தவரைக் யோசனையுடன் கண்டார். வேகமாக திறந்தார் கேசவர்.
அச்சத்தத்தில் விழித்த வெங்கடேஷன், கேசவர் தன்றையில் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது.
“என்ன மச்சான் ?” வெங்கடேஷன் பதற்றத்தோடு கேட்க கேசவர் பொறுமையாக கூறினர்.
சட்டையை பிடித்து “என் குடும்பம் மேல உள்ள கோபத்துல அவளை இப்படி செஞ்சியா? “
கீர்த்தி ☘️