Loading

சஜீவ் தன் நண்பர்களுக்கு நித்யாவை அறிமுகம் செய்து வைக்க அவளை காஃபி ஷாப் ஒன்றிற்கு வரக் கூறி இருந்தான்.

 

நித்ய யுவனி ஜனனியையும் அழைத்துக்கொண்டு சஜீவ்வையும் அவன் நண்பர்களையும் சந்திக்க சென்றாள்.

 

அனைவரும் காஃபி ஷாப்பில் கூடியிருக்க சஜீவ் தன் நெருங்கிய நண்பர்களான பிரேம், ஆரவ் மற்றும் ஆரவ்வின் காதலி பிரியாவுக்கும் நித்ய யுவனியை அறிமுகப்படுத்தினான்.

 

நித்ய யுவனியும் இருவருடனும் அண்ணா என்று பேசி பழக அவர்களுக்கும் அவளைப் பிடித்து விட்டது.

 

பிரியாவை ரியா அக்கா ரியா அக்கா என வார்த்தைக்கு வார்த்தை அழைத்து அவளையும் தனது கேங்கில் சேர்த்துக் கொண்டாள்.

 

ஜனனியையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க அனைவருக்கும் இடையில் அழகிய உறவொன்று உருவாகின.

 

பின் அனைவரும் காப்பச்சீனோ ஆர்டர் செய்து பருகிக் கொண்டிருக்க,

 

பிரேமின் பார்வையோ ஜனனியிடமே இருந்தது.

 

ஜனனி தன் மனதிலே பிரேமை வசை பாடிக் கொண்டிருந்தாள். 

 

“பாக்குறான் பாரு பார்வை… இதுவரைக்கும் பொண்ணுங்களையே பாக்காதது போல… இவன் கண்ண நோண்டி காக்காய்க்கு போடனும்…” என்க,

 

சரியாக பிரேமிற்கு புறையேறியது.

 

நித்யா, “என்ன பிரேம்ணா… யாரோ உங்களயே நினைக்கிறாங்க போல…” என கேலி செய்ய,

 

பிரேம், “அடப்போம்மா… நீ வேற… யாரோ என்ன பாசமா திட்டுறாங்க… என்ன நெனக்க யாரு இருக்காங்க… அதான் நானும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்..” என முன் பாதியை சத்தமாகக் கூறியவன் பின் பாதியை மெதுவாக முனங்கினான்.

 

ஜனனி பிரேமை முறைக்க அவனோ அவளைப் பார்த்து இளித்து வைத்தான்.

 

சிறிது நேரத்தில் ஜனனியும் நித்யாவும் அனைவரிடமும் விடை பெற்று காஃபி ஷாப்பிலிருந்து வெளியே வர,

 

நித்யா, “ஜெனி நீ இங்கயே வெய்ட் பண்ணு… என்னோட மொபைல நான்‌ உள்ளயே வெச்சிட்டு வந்துட்டேன் போல… எடுத்துட்டு வரேன்…” என மீண்டும் உள்ளே சென்றாள்.

 

செல்லும் வழியில் பிரேமுடன் மோத, 

 

நித்யா, “என்ன அண்ணா நீங்க… இப்படி ரோட்டுல நின்னுட்டு இருக்கீங்க..” என்க,

 

பிரேம், “யுவனிம்மா…” என இழுத்தான்.

 

நித்யா அவனைக் கேள்வியாகப் பார்க்க,

 

“உன் ஃப்ரெண்ட நான் லவ் பண்ணுறேன்னு நெனக்கிறேன்… அண்ணனுக்காக கொஞ்சம் அவ கிட்ட பேசும்மா…” என்றான்.

 

நித்யா, “என்ன சொல்றீங்க அண்ணா… பார்த்ததும் ஒருத்தங்க மேல லவ் வருமா…” எனக் கேட்க,

 

“அதெல்லாம் தாராளமா வரும்… ஜனனிய பாத்ததுமே என் மனசு இவ தான் உனக்கானவன்னு சொல்லிச்சு…” என்றான் பிரேம்.

 

“பட் அவளுக்கு காதல்னு சொன்னாலே பிடிக்காதே அண்ணா… நான் லவ் பண்ணுறன்னு சொன்னதுக்கே ரொம்ப பிரச்சினை பண்ணினா… அவக்கிட்ட போய் நான் எப்படி…” என நித்யா கூறும் போதே பிரேமின் முகம் வாடுவதைக் கண்டவள்,

 

“சரி நான் பேசி பார்க்குறேன்… பட் நீங்க அவ கூட இத பத்தி பேசுறத விட ஜெனியோட பேரன்ட்ஸ் கிட்ட பேசி சம்மதம் வாங்குங்க… அவள் நிச்சயம் மறுக்க மாட்டாள்… எப்படியும் இன்னும் ஃபோர் ஃபைவ் யேர்ஸ் கழிச்சி தான் கல்யாணம் பண்ண போறீங்க… சோ அந்த கெப்ல அவ மனசுல இடம் பிடிக்க ட்ரை பண்ணுங்க… இதெல்லாம் நான் தான் சொன்னேன்னு மட்டும் அவ கிட்ட சொல்லிற வேணாம்… என்ன கொன்னுடுவா…” என்க மகிழ்ச்சியடைந்த பிரேம் அவளிடம் நன்றி கூறினான்.

 

அதன் பின் நித்யா செல்ல ஜனனியின் பெற்றோரிடம் எப்படி சம்மதம் வாங்குவது என்ற யோசனையில் மூழ்கினான் பிரேம்.

 

சஜீவ் சர்வேஷ், நித்ய யுவனி இருவருக்குமே நாட்கள் மகிழ்ச்சியுடன் கடக்க சஜீவ் மீண்டும் யூ.எஸ் செல்ல வேண்டிய நாளும் வந்தது.

 

அதற்கு முந்தைய நாள் இருவரும் வழமையாக சந்திக்கும் பார்க்கில் சந்தித்தனர்.

 

சஜீவ் வந்ததுமே அவனை அணைத்துக் கொண்ட நித்யா,

 

“நீங்க போயே ஆகனுமா சஜு… எனக்கு என்னமோ தப்பா நடக்க போறது போலவே ஃபீல் ஆகுது…” எனக் கூறி அழ,

 

சஜீவ், “என்ன யுவி இது… நீ தேவையில்லாம எதையும் கற்பனை பண்ணிக்காதே… போய் கொஞ்ச நாள்ள ஃபுல்லா ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு வர போறேன்… அதுக்கெதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ணுற… எங்க போனாலும் உன் கூட பேசிட்டு தான் இருக்க போறேன்… நீ இப்படி எல்லாம் சொன்னா என்னால எப்படி அங்க போய் நிம்மதியா இருக்க முடியும்..” என அவளை சமாதானப்படுத்தினான்.

 

அவனை விட்டு விலகிய நித்ய யுவனி அவசரமாக தன் கண்களைத் துடைத்துக் கொண்டு,

 

“நான் ஒரு பைத்தியம்.. சும்மா ஏதாவது ஒலரிட்டு இருக்கேன்… நீ கவலைப்படாதே சஜு.. நான் ஓக்கே ஆகிறுவேன்…” என தனக்குள் இருந்த கலக்கத்தை தன்னவனுக்காக மறைத்துக் கூறினாள்.

 

பின், “சரி எங்க நான் கேட்டது… இன்னைக்கும் மறந்துட்டீங்களா..” என இடுப்பில் கையூன்றி நித்யா சஜீவ்வை முறைக்க அவளைப் பார்த்து சிரித்த சஜீவ் அவ்வளவு நேரமும் மறைத்து வைத்திருந்த சிறிய பையொன்றை அவளிடம் கொடுத்தான்.

 

அதனைப் பிரித்துப் பார்த்த நித்யா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்.

 

அதில் சஜீவ் அதிகமாக அணியும் ஒரு டீ ஷர்ட்டும் இன்னும் சில பரிசுகளும் இருந்தன.

 

ஆனால் நித்யாவோ அப் பரிசுகளை விடுத்து அவனின் டீ ஷர்ட்டைக் கண்டே அவ்வளவு சந்தோஷப்பட்டாள்.

 

அந்த டீ ஷர்ட்டை தன் முகத்தினருகில் கொண்டு சென்றவள் கண்களை மூடி அதனை நுகர்ந்தாள்.

 

பின் அதனை தன் நெஞ்சோடு சேர்த்து கட்டிக் கொண்டாள்.

 

நித்யாவின் செயல்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த சஜீவ்,

 

“என்ன பண்ணிட்டு இருக்க யுவி..” என்க,

 

நித்யா, “சஜு… நான் இந்த டீ ஷர்ட் ஏன் கேட்டேன் தெரியுமா… நீங்க என் கூட இல்லன்னாலும் என்ன விட்டு எவ்வளவு தூரமா இருந்தாலும் இந்த டீ ஷர்ட் என் கிட்ட இருக்கும் போது நீங்களே என் பக்கத்துல இருக்குறது போல எனக்கு தோணும்… இதுல இருந்து வய உங்க வாசம் உங்களையே எனக்கு நினைவு படுத்திட்டு இருக்கும்… சப்போஸ் நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ணி உங்கள பாக்கணும் ஆர் உங்கள கட்டிப்பிடிக்கனும்னு தோணிச்சுனா இந்த டீ ஷர்ட்ட அப்படியே என் நெஞ்சோட சேர்த்து கட்டி பிடிச்சிப்பேன்… சோ எப்பவும் நீங்க என் கூடவே இருப்பீங்க…” எனக் கூறி அந்த டீ ஷர்ட்டை தன் நெஞ்சோடு அணைத்தாள்.

 

அவளைப் பொய்யாக முறைத்த சஜீவ், “அதான் நான் இப்போ பக்கத்துல இருக்கேனே… என்ன கட்டிப் பிடிச்சிக்கிட்டா என்னவாம்..” எனக் கூற அவனை இறுக அணைத்துக் கொண்டாள் நித்யா.

 

சஜீவ்வும் அவளை அணைத்துக் கொண்டவன் மெதுவாக அவளை விலக்கி நித்ய யுவனியின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி அவள் கண்களைப் பார்த்து, “ப்ளீஸ்…” என்க தன் கண்களை மூடிக் கொண்டாள் நித்யா.

 

சஜீவ் மெதுவாக அவள் இதழ்களை சிறை பிடிக்க அவ் இதழ் முத்தம் எவ்வளவு நேரம் நீண்டதோ தெரியவில்லை.

 

நித்ய யுவனி மூச்சு விட சிரமப்பட அவளை மனமேயின்றி தன்னிடமிருந்து பிரிக்க நித்யாவின் கண்கள் கலங்கி இருந்தன. 

 

சஜீவ் அவள் நெற்றியில் அழுத்த முத்தமிட்டுவிட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

 

இந்தக் காட்சி சரியாக அந்த வழியாக வந்த ஈஷ்வரியின் கண்களில் பட்டுவிட்டது.

 

சில நொடி நின்று அவர்களையே பார்த்தவர் பின் அங்கிருந்து சென்றார்.

 

அதன் பின் இருவரும் விடைபெற்றுச் செல்ல விதி தன் வேலையை ஆரம்பித்தது.

 

அது தான் அவர்கள் இருவரும் இறுதியாக சந்தித்துக் கொண்டது.

 

வீட்டுக்கு வந்த சஜீவ்விற்கு நித்யா கூறியதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

 

அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன் பின் ஒரு முடிவெடுத்தவனாக கீழே சென்றான்.

 

பிரபு, ஈஷ்வரி, ஜீவிகா மூவருமே ஹாலில் அமர்ந்திருந்தனர்.

 

சஜீவ், “அப்பா, அம்மா… நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..” என பீடிகையுடன் ஆரம்பிக்க,

 

ஈஷ்வரி இதை ஏற்கனவே எதிர்ப்பார்த்து இருந்தது போல ஒரு சிரிப்பு சிரித்தார்.

 

ஆனால் யார் கண்ணிலும் அது தென்படவில்லை.

 

பிரபு, “சொல்லு சர்வா… என்ன விஷயம்… மார்னிங் ஃப்ளைட் இருக்கே… இன்னும் நீ தூங்கலயா..” என்க,

 

“அது வந்துப்பா… நான்… நான் ஒரு பொண்ண விரும்புறேன்… அவள தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்…” என்றவன் நித்யாவைப் பற்றி அனைத்தையும் கூறினான்.

 

ஈஷ்வரி, “நல்ல விஷயம் தானேப்பா… பொண்ணு கூட நல்ல படிக்கிற பொண்ணா இருக்கா… எங்களுக்கு சம்மதம் தான் கண்ணா… அத சொல்ல ஏன் இவ்வளவு தயங்குற…” என்கவும் பிரபுவோ அவரை சந்தேகமாக பார்க்க,

 

இதை அறியாத சஜீவ்வோ மிகவும் சந்தோஷமடைந்தான்.

 

சஜீவ், “நிஜமாவா சொல்றீங்கமா… நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு தான் நான் யோசிச்சிட்டே இருந்தேன்…” என்க,

 

“என் பையனுக்கு பிடிச்சது எனக்கு பிடிக்காம போகுமா… அந்த பொண்ணு இன்னும் படிச்சிட்டு இருக்கான்னு சொன்னியே… நீ எதைப் பத்தியும் கவலைப்படாம நாளைக்கு கிளம்புற வேலையைப் பாருப்பா… அந்த பொண்ணு படிச்சி முடிச்சதும் நாங்க உனக்கு பொண்ணு கேட்டு போறோம்…” என்கவும்,

 

“தேங்க்ஸ் மா… லவ் யூ…” என அவரை அணைத்துக் கொண்டவன் நித்யாவிடம் இதைப் பற்றிக் கூற சந்தோஷமாக அறைக்கு விரைந்தான்.

 

ஜீவிகாவும் அவனைத் தொடர்ந்து சஜீவ்வின் அறைக்கு சென்றாள்.

 

பிரபுவோ இன்னும் மனைவியை சந்தேகமாக பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

 

சஜீவ் சென்றதும் பிரபுவின் பக்கம் திரும்பிய ஈஷ்வரி,

 

“என்ன என்னையே பாத்துட்டு இருக்கீங்க… போய் தூங்குங்க..” என்று விட்டு அவரும் சென்றார்.

 

சஜீவ் நித்யாவிடம் அனைத்தையும் கூற அவளும் மகிழ்ச்சி அடைந்தாள்.

 

சஜீவ்விடமிருந்து மொபைலைப் பறித்த ஜீவிகா நித்யாவுடன் அண்ணி அண்ணி என நட்பாக உரையாட,

 

தன்னை விட ஒரு வருடம் மூத்தவளாக இருந்தும் தன்னிடம் அண்ணி என அன்பாகப் பேசுவதால் நித்யாவும் ஜீவிகாவுடன் எந்தத் தயக்கமுமின்றி பேசினாள்.

 

அதன் பின் இருவரும் அலைபேசி எண்களையும் பகிர்ந்து கொண்டனர்.

 

மறுநாள் காலை சஜீவ் யூ.எஸ் செல்ல அதன் பின் வந்த நாட்கள் இருவருக்கும் குறுஞ்செய்திகள், அழைப்புகளுடன் கடக்க,

 

நித்யா சஜீவ்வின் டீ ஷர்ட்டை எப்போதும் தன்னுடனே வைத்திருப்பாள்.

 

ஜீவிகாவுடனும் நித்யா நன்கு நெருக்கமாக அவள் காதலன் வீராஜை நித்ய யுவனிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்‌ ஜீவிகா.

 

சஜீவ்விடம் இதைப் பற்றி கூற வேண்டாம் எனக் கூறியது மட்டும் நித்யாவுக்கு சங்கடமாக இருக்க,

 

ஜீவிகாவே இன்னும் சில நாட்களில் இதனைப் பற்றி சஜீவ்விடம் கூறுவதாகக் கூறவும் நித்யா அமைதியானாள்.

 

வீராஜ் நித்யாவை தன் சொந்தத் தங்கையாக நினைத்து நடத்த,

 

நித்யாவும் அவனை ராஜு என பாசமாக அழைப்பாள்.

 

இவ்வாறே மகிழ்ச்சியாக நாட்கள் செல்ல நித்ய யுவனி மற்றும் ஜனனியின் பரீட்சைகள் முடிந்து முடிவுகளும் வெளியாகி இருந்தன.

 

நித்ய யுவனி மாவட்ட மட்டத்தில் முதலிடம் எடுக்க ஜனனியும் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றாள்‌.

 

இருவருமே மருத்துவம் படிக்க முடிவெடுத்தனர்.

 

திவ்யா, அஞ்சலி இருவரும் பள்ளியிலிருந்தே இவர்களின் நல்ல தோழிகளாக இருந்தும் நித்யாவின் காதல் பற்றி ஜனனி மட்டுமே அறிந்திருந்தாள்.

 

அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஜனனியின் வீட்டில் அனைவருமே இருந்தனர்.

 

ஜனனி தன் தோழிகளை சந்திக்க தயாராகிக் கெண்டிருக்க வாசலில் வாகனம் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

 

தன் அறை ஜன்னலினூடாக யாரெனப் பார்த்தவள் அங்கு சத்தியமாக பிரேமை எதிர்ப்பார்க்கவில்லை.

 

தன் குடும்பத்துடன் பிரேம் வந்திருக்க ஜனனியின் தந்தை சங்கரனும் அண்ணன் விக்ரமும் அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்தனர்.

 

ஜனனியோ பதட்டமாக கீழே ஓடி வந்து மறைவாக நின்று கொண்டு அவர்கள் பேசுவதைச் செவிமடுத்தாள்‌.

 

ஜனனியைக் கண்ட பிரேம் அவளைப் பார்த்து புன்னகைக்க,

 

ஜனனியோ இவர்கள் எதற்கு தன் வீட்டிற்கு வந்துள்ளனர் என புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சங்கரன், “மன்னிச்சிடுங்க… நீங்க யாருன்னு இன்னும் சொல்லலயே..” என்க,

 

பிரேமின் தந்தை அன்பரசன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர்,

 

“எங்க பையன் பிரேம் உங்க பொண்ண எங்கயோ பார்த்திருக்கான் போல… அவனுக்கு பிடிச்சு போய் எங்க கிட்ட வந்து சொன்னான்.. அதான் உங்க பொண்ண எங்க பையனுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கோம்…” என்க அனைவரும் அதிர்ந்தனர்.

 

சங்கரன், “எங்க பொண்ணு இப்போ தான் படிப்ப முடிச்சிருக்கா… இன்னும் படிக்கனும்னு பொண்ணு ஆசைப்படுறா… இப்பவே அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் எங்களுக்கு இல்ல..” என்க,

 

இருக்கைமிலிருந்து எழுந்து நின்ற பிரேம், “மன்னிச்சிடுங்க அங்கிள்… பெரியவங்க பேசும் போது இடைல பேசுறேன்னு தப்பா எடுத்துக்க வேணாம்… ஜனனிய நான் ஒரு காஃபி ஷாப்ல தான் பார்த்தேன்… பார்த்ததும் இவ தான் எனக்கானவன்னு என் மனசு சொல்லிச்சு… அவளோட அமைதியான குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது… ஜனனி கிட்ட கேட்டு சம்மதம் வாங்க முன்னாடி எனக்கு உங்க எல்லோரோடையும் சம்மதத்தோட அவ கூட பேசணும்னு நினைச்சேன்.. அதனால தான் வீட்டுல பேசி அவ படிப்ப முடிச்சதும் பொண்ணு கேட்டு வந்தோம்… நான் Volkswagen கம்பனில மேனேஜரா வேலை பாக்குறேன்… மாசம் ஒன்றரை லட்சம் கிட்ட சம்பாதிக்கிறேன்… நிச்சயமா உங்க பொண்ண நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்கை இருக்கு அங்கிள்… உங்க வீட்டுல வேணா ஜனனி இளவரசியா இருக்கலாம்.. ஆனா எங்க வீட்டுல அவ ராணி மாதிரி இருப்பா… அவ தாராளமா படிக்கட்டும்… அவ படிப்பு முடிஞ்சே கல்யாணம் பண்ணிக்கிறோம்… இப்போதைக்கு உங்க சம்மதத்த மட்டும் குடுங்க அங்கிள்…” என்றான்.

 

பிரேமின் பேச்சினால் ஜனனியின் பெற்றோர், சகோதரன் அனைவரும் கவரப்பட சம்பந்தப்பட்ட ஜனனி மட்டும் விதிவிலக்கா என்ன?

 

நல்ல வசதியான குடும்பம் அதுவும் தங்கள் மகள் மேல் உயிரையே வைத்திருக்கும் மாப்பிள்ளை கிடைத்திருக்கும் போது அவர்கள் எவ்வாறு மறுப்பர்?

 

சாருமதி, சங்கரன் இருவருக்குமே பிரேமைப் பிடித்திருக்க ஜனனி என்ன கூறுவாள் என அவர்கள் யோசித்தனர்.

 

சங்கரன் திரும்பி ஜனனியைப் பார்க்க அவள் அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

 

அதுவே அவருக்கு போதுமாக இருந்தது.

 

சங்கரன், “எங்க பொண்ணே சரின்னு சொல்லிட்டா… எங்களுக்கு இந்த சம்பந்தத்துல பரிபூரண சம்மதம்…” என்க பிரேம் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தான்.

 

அவசரமாக ஜனனியைப் பார்க்க அவளோ அவனைத் தான் பொய்யாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

பிரேம் அவளைப் பார்த்து கண்ணடிக்க ஜனனியை வெட்கம் பிடுங்கித் தின்றது.

 

பிரேமின் தாய் ஜானகி, “எல்லாருக்கும் சம்மதம் தானே… வந்தது வந்துட்டோம்… ஒரு சம்பிரதாயத்துக்கு பொண்ணுக்கு பூ வெச்சிட்டு போறோம்…” என்க,

 

சாருமதி ஜனனியை அழைத்தார்.

 

அவள் வந்ததும் அவள் தலையில் மல்லிகைச் சரத்தை சூடிய ஜானகி,

 

“அப்படியே மகாலக்ஷ்மி போல இருக்காய்… சீக்கிரம் படிப்ப முடிச்சிட்டு எங்க வீட்டுக்கு வந்துடு… இந்த அத்தை உனக்காக காத்துட்டு இருப்பேன்…” எனக் கூறி அவள் நெற்றி வழித்து முத்தமிட்டார்.

 

அவர்கள் சென்ற பின் ஜனனி நித்யாவிடம் கூற அவளும் தோழிக்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

 

உடனே பிரேமுக்கு அழைத்து வாழ்த்தும் தெரிவித்தாள்.

 

ஒருநாள் உறவினர் ஒருவர் வீட்டுத் திருமணத்துக்கு ராஜாராமும் வசந்தியும் சென்றிருந்தனர்.

 

நித்ய யுவனி மாத்திரமே வீட்டில் இருந்தாள்.

 

காலிங்பெல் சத்தம் கேட்கவும் நித்யா சென்று யாரென்று பார்க்க வாசலில் ஈஷ்வரியும் அவருடன் மாடர்ன் ட்ரஸ் அணிந்த யுவதியொன்றும் நின்றிருந்தனர்.

 

சஜீவ் ஏற்கனவே தன் குடும்பத்திலுள்ளவர்களின் புகைப்படத்தை அவளுக்கு காட்டியுள்ளதால் ஈஷ்வரியை அடையாளம் கண்டு கொண்ட நித்ய யுவனி,

 

“வாங்க ஆன்ட்டி… உள்ள வாங்க… நீங்க வரதா சஜு சொல்லவே இல்லயே…” என்க, 

 

ஈஷ்வரியுடன் நின்றிருந்த பெண் நித்யா சஜீவ்வை சஜு என்றதும் மேலிருந்து கீழ் வரை அவளை நோட்டமிட்டாள்.

 

வீட்டிற்குள் நுழைந்த ஈஷ்வரியோ வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் கண்களால் அலசினார்.

 

அந்த சந்தர்ப்பத்தில் நித்யா சஜீவ்வுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க முயற்சித்துக்கொண்டிருக்க அவனுக்கு அழைப்பு செல்லவே இல்லை.

 

மொபைலிலே இருந்தால் ஈஷ்வரி தன்னை தவறாக எண்ணுவார் என எண்ணியவள் இருவருக்கு ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க இருவரும் எடுத்துக் கொண்டனர்.

 

பின் நித்யா, “அம்மா அப்பா ரெண்டு பேரும் ரிலேடிவ் ஒருத்தரோட வீட்டு கல்யாணத்துக்கு போய் இருக்காங்க… வர லேட் ஆகும்…” என்க,

 

ஈஷ்வரி, “எனக்கு உன் கூடத் தான் பேசணும்…” என்றார்.

 

நித்யா அவரைக் கேள்வியாக நோக்க,

 

ஈஷ்வரி, “நான் நேரா விஷயத்துக்கே வரேன்… உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ சொல்லு… நான் தரேன்… வாங்கிக்கிட்டு என் பையன் வாழ்க்கைய விட்டு மொத்தமா போயிடு…” என்க நித்யா அதிர்ந்தாள்.

 

அவருடன் வந்த பெண்ணோ நித்யாவை நக்கலாகப் பார்க்க,

 

நித்யா, “என்ன ஆன்ட்டி சொல்றீங்க… நான் எதுக்கு சஜு வாழ்க்கைய விட்டு போகனும்… நாங்க ரெண்டு பேருமே ஒருத்தொருக்கொருத்தர் விரும்புறோம் ஆன்ட்டி…” என்றாள்.

 

ஈஷ்வரி, “ஒரு தடவ சொன்னா மரியாதையா கேட்டுக்கோ… நீ பணத்துக்கு ஆசப்பட்டு தானே என் பையன் பின்னாடி சுத்துறாய்… என் வீட்டு மருமகளா வர தகுதி உனக்கு இல்ல… இது என் அண்ணன் பொண்ணு சுச்சி… இவளைத் தான் என் பையன் கல்யாணம் பண்ணிக்க போறான்…” என்கவும் அப்போது தான் நித்யாவுக்கு அவர் கூட வந்த மார்டன் ட்ரஸ் போட்ட யுவதி சுசித்ரா எனப் புரிந்தது.

 

நித்யா சுசித்ராவைக் காட்டி, “இந்த பொண்ணு தானே சஜுவ வேணான்னு சொல்லிட்டு வேற ஒரு பையன் கூட போனா… இவ தான் சொத்துக்கு ஆசப்பட்டு சஜுவ காதலிச்சு ஏமாத்தினா… நீங்க என்னனா இவளையே சஜுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறதா சொல்லுறீங்க…” என கோவமாகக் கேட்டாள்.

 

சஜீவ்வை விட்டு சென்ற பின் அவள் ஏற்கனவே பிடித்திருந்த பணக்கார ஆடவனிடம் நன்றாக பணம் கறந்தாள்.

 

அவனும் இவள் மேல் உள்ள ஆசையில் இவள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுத்தான்.

 

ஆனால் அவனோ தந்தையின் பணத்தில் காலத்தை ஓட்டுபவன்.

 

இதை அறிந்த அவன் தந்தை அவனுக்கு செலவுக்கு கொடுக்கும் பணத்தை நிறுத்த அவனால் சுசித்ரா கேட்பவற்றை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

 

அவன் தந்தை அவனுக்கு பணம் கொடுப்பதை நிறுத்தியதை அறிந்த சுசித்ரா அவனையும் கழட்டி விட்டாள்.

 

பின் இந்தியா வந்தவள் ஈஷ்வரியிடம் நீலிக் கண்ணீர் வடித்து தான் இன்னும் சஜீவ்வை விரும்புவதாகவும் ஆனால் சஜீவ் தான் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை எனக் கூற அவளை நம்பிய ஈஷ்வரி இங்கு அவளுடன் வந்து நின்றுள்ளார்.

 

சுசிச்ரா, “அச்சச்சோ… ரொம்ப பாவம்மா நீ… இன்னுமா நீ சர்வா உன்ன காதலிக்கிறான்னு நம்பிட்டு இருக்காய்…” என்க,

 

“இல்ல… எனக்கு தெரியும்… என் சஜு என்ன மட்டும் தான் காதலிக்கிறான்…” என்றாள் நித்யா.

 

“என்ன பொண்ணுமா நீ… சஜீவோட முதல் காதல் நான்… எங்க ரெண்டு பேருக்கும் இடைல சின்ன மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்… அந்த கோவத்துல தான் எனக்கு அவன் மேல பொசசிவ்னஸ்ஸ உண்டு பண்ணனும்னு உன்ன காதலிக்கிற மாதிரி நடிச்சான்… உன்ன ஏமாத்த தான் அவன் உன்ன காதலிச்சான்… அவன் இப்பவும் என்ன மட்டும் தான் காதலிக்கிறான்… நீ வேணும்னா சர்வா கிட்ட கேளு உன்ன ஏமாத்த தான் லவ் பண்ணான்னு…” என சுசித்ரா கூற நித்யாவின் இதயத்துடிப்பே நின்றது போல் இருந்தது.

 

குரல் கரகரக்க, “இல்ல… நீங்க பொய் சொல்லுறீங்க… சஜு என்ன உண்மையா தான் காதலிச்சான்… ஏமாத்துறதுக்கு இல்ல… நான் இப்பதே சஜு கிட்ட கால் பண்ணி சொல்றேன்…” எனக் கூறிய நித்யா சஜீவ்விற்கு அழைக்க அதுவோ லைன் பிஸி என்றே காட்டிக் கொண்டிருந்தது.

 

பலமுறை அழைத்தும் இவ்வாறே இருக்க நித்யா அப்படியே கீழே மடிந்து அமர்ந்து விட்டாள்.

 

அவளிடம் வந்த ஈஷ்வரி, “எங்க கால் தூசுக்கு கூட நீங்க சமமாக மாட்டீங்க… வீணா என் பையன் பின்னாடி சுத்தி உன் வாழ்க்கைய அழிச்சிக்க வேணாம்..” என்றவர் அங்கிருந்து செல்ல,

 

“அவன் என் சர்வா… எனக்கு மட்டும் சொந்தமானவன்… இன்னும் கொஞ்ச நாள்ல எங்க கல்யாணம் நடக்கும்… குடும்பத்தோட‌ வந்து அர்ச்சதை தூவிட்டுப் போ…” என்ற சுசித்ரா ஈஷ்வரியுடன் சென்றார்.

 

நித்யாவோ அவர்கள் சென்றது கூட தலையில் ஏறாது கீழே வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

 

பின் மீண்டும் சஜீவ்விற்கு பல முறை அழைக்க கடைசியில் அழைப்பு ஏற்கப்பட்டது.

 

நித்யா, “ஹஹ… ஹலோ…. சஜு….” என்க அந்தப் பக்கம் அமைதி.

 

“ப்ளீஸ் ஏதாவது பேசுங்க…” என நித்யா உடைந்த குரலில் கூற,

 

“ஹ்ம்ம்..” என்று மட்டும் சத்தம் வந்தது.

 

நித்யா, “உங்க அம்மாவும் அந்த சுசித்ராவும் வந்து என்னென்னவோ சொல்லிட்டு போறாங்க சஜு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு… அவங்க சொன்னது எல்லாமே பொய்னு எனக்கு தெரியும்…. எனக்கு என் சஜு மேல நம்பிக்கை இருக்கு…” என அழுது கொண்டே கூற சஜீவ்விடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

 

“ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க…. ஏதாவது பேசுங்க…” எனக் கத்த,

 

சஜீவ், “நித்யா அவங்க சொன்னதெல்லாம் உண்மை தான்…” என்றான் அமைதியாக.

 

சஜீவ் தன் பெயரைக் கூறி அழைத்ததுமே நித்யாவுக்கு ஒரு நிமிடம் உலகமே இருண்டது.

 

நித்யா, “இல்ல… இல்ல… இல்ல… நீ பொய் சொல்ற… எனக்கு தெரியும் நீ என்ன உண்மையா தான் லவ் பண்ணாய்…” என அழுதாள்.

 

சஜீவ், “நித்யா…” என்றான்.

 

“நித்யா இல்ல…… யுவி…. யுவி…. உன்னோட யுவி…” எனக் கதறினாள்.

 

சில நொடிகள் அமைதி காத்த சஜீவ் பின், “இங்க பாரு நித்யா… தயவு செஞ்சி அமைதியா நான் சொல்றத கேளு…” என்க,

 

நித்யா, “முடியாது… முடியாது…. முடியாது… நான் எதையும் கேக்க மாட்டேன்…. நீங்க பொய் சொல்லுறீங்க…” என அழுதாள்.

 

“நிறுத்து நித்யா…. அதான் சொல்றேன்ல…. அவங்க சொல்றது தான் உண்மை…. நீ நம்பினோ நம்பல்லயோ எதுவும் மாறிடாது… இங்க பாரு நித்யா… எனக்கும் உனக்கும் எப்போதுமே செட் ஆகல… இப்படி ஒரு லைஃப் எனக்கு வேணாம்.. என்னோட அம்மாவோட பேச்சை என்னால தட்ட முடியாது.. அவங்களை கஷ்டப்படுத்தி கிடைக்கிற எதுவும் எனக்கு அவசியமில்லை.. இத்தோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்.. இனி நமக்குள்ள எதுவும் இல்ல.. எந்த நிலைமையிலும் இனி என்னோட பேச முயற்சி பண்ணாதே… ஸ்டே அவே ஃப்ரம் மை லைஃப் மிஸ். நித்ய யுவனி.. பாய்…” எனக் கத்தினான்.

 

சஜீவ் கூறியதைக் கேட்ட நித்யாவுக்கு எதுவுமே புரியவில்லை.

 

பின் நித்யா அமைதியாக, “சரி… நான் நம்புறேன்… ஒரு விஷயம் மட்டும் சொல்லு… அந்த சுசித்ரா உன்ன விட்டு போனதுனால தான் அவளுக்காக என்னை ஏமாத்த லவ் பண்ணுறது போல நடிச்சியா…” என்க,

 

அவள் கேட்ட கேள்வியை ஒழுங்காக விளங்கிக்கொள்ளாதவன், “ஆமா..” என்றான்.

 

அத்தோடு எதுவும் கூறாமல் நித்யா அழைப்பை துண்டிக்க,

 

இங்கு சஜீவ்வோ அழைப்பு துண்டிக்கப்பட்டதும் மொபைலையே வெறித்தவன் கோவத்தில் அதைத் தூக்கி சுவற்றில் அடிக்க அவன் மனம் போலவே அந்த மொபைலும் துண்டு துண்டாக சிதறியது.

 

❤️❤️❤️❤️❤️

 

சாரி மக்களே… இன்னெக்கி யூடி ரொம்ப லேட் ஆகிடுச்சு… ஃபிளாஷ்பேக்க இன்னைக்கே முடிக்க ட்ரை பண்ணேன்… அதனால தான் லேட் ஆகிடுச்சு… பட் இன்னும் சின்ன பார்ட் ஒன்ன எழுதனும்… நான் அதையும் சீக்கிரமா போட ட்ரை பண்ணுறேன்… பெரிய யூடியா போட்டு இருக்கேன்… படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க… நன்றி… ☺️☺️☺️

 

– Nuha Maryam –

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்