Loading

சஜீவ் வருவது பற்றி அவன் வீட்டில் யாரிடமும் தெரிவிக்கவில்லை.

 

திடீரென வாசலில் மகன் வந்து நிற்கவும் ஈஷ்வரி,

 

“சர்வா கண்ணா… எப்படிப்பா இருக்காய்… சொல்லாம கொள்ளாம வந்திருக்காய்… என் மருமகளும் உன் கூட வந்தாளா… எங்க நேரா வீட்டுக்கு போய்ட்டாளா…” என வந்ததும் சுசித்ரா பற்றி கேட்க,

 

சஜீவ், “ஏன்… நான் வந்தது பிடிக்கலயா… அவளை பத்தியே பேசிட்டு இருக்கீங்க… ” என கோவமாக கேட்கவும் பதறிய ஈஷ்வரி,

 

“ஏன்ப்பா இப்படி பேசுறாய்… நீ வந்தது அம்மாக்கு பிடிக்காம போகுமா…” என்றவர்,

 

“என்னங்க…. ஜீவி…. சர்வா வந்திருக்கான்… சீக்கிரம் வாங்க… ” என மகளையும் கணவனையும் அழைத்தார்.

 

ஜீவிகாவும் பிரபுவும் வந்து அவனை நலம் விசாரிக்க அவர்களுக்கு பதிலளித்தவன்,

 

“மா… ட்ராவல் பண்ணது டயர்டா இருக்கு… நான் என் ரூமுக்கு போறேன்… யாரும் என்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்..” என்று விட்டு தன் அறைக்கு சென்றான்.

 

செல்லும் மகனையே யோசனையுடன் பார்த்தார் பிரபு.

 

அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டவன் நேராக கட்டிலில் விழுந்தான்.

 

மனதில் ஆயிரம் குழப்பங்கள்.

 

கண்ணை மூடினாலே நித்ய யுவனியின் முகம் தான் தெரிந்தது.

 

அவள் கண்களில் தெரிந்த அளவுக்கதிகமான காதல்‌ அவனுக்கு குழப்பத்தைத் தந்தது.

 

தன்னை ஏமாற்ற நினைத்தால் அவள் கண்களில் எனக்காகத் தெரியும் காதலுக்கு அர்த்தம் என்ன என தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ள சரியாக அவன் மனசாட்சி விழித்துக் கொண்டது.

 

மனசாட்சி – அவ உன்ன ஏமாத்துறான்னு உனக்கு எப்படி தெரியும்?

 

சஜீவ் – சுச்சியும் இப்படி தானே அவளா வந்து லவ்வ சொன்னா… கடைசில சொத்துக்கு ஆசைப்பட்டு எல்லாமே பண்ணினதா ஒத்துக்கிட்டா… அவ்வளவு நாளும் பேசாம இருந்துட்டு திடீரென யுவி வந்து லவ் பண்றன்னு சொன்னா வேற என்ன அர்த்தம் இருக்க போகுது…. நிச்சயமா அவளும் சொத்துக்காக தான் என்ன லவ் பண்ணுறாளா இருக்கும்….

 

மனசாட்சி – சொத்து மேட்டர் உனக்கு எப்போ யாரு மூலமா தெரிய வந்தது?

 

சஜீவ் – இப்போ தான் சுச்சி சொல்லி தெரிஞ்சுச்சி… அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்…

 

மனசாட்சி – நீ யுவி கிட்ட அதுக்கு முன்னாடி உன் ஃபேமிலி டீட்டைல்ஸ் சொல்லி இருக்கியா?

 

சஜீவ் – இல்ல… ஆனா…

 

மனசாட்சி – ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல… உனக்கே இப்போ தான் தெரிஞ்ச விஷயம் உன் ஃபேமிலிய பத்தி கூட எதுவும் தெரியாத அந்த பொண்ணுக்கு எப்படி தெரிய வரும்..‌

 

என மனசாட்சி அவனைக் மாற்றி மாற்றி கேள்வி கேட்க அப்போது தான் அவனுக்கு நித்யாவிடம் அவன் குடும்பத்தைப் பற்றி எதுவுமே கூறாதது நினைவு வந்தது.

 

சஜீவ், “நான் அப்போ யுவிய தப்பா புரிஞ்சிக்கிட்டு அவ லைஃப்ல விளையாடுறேனா…” என நினைக்க அவனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது.

 

“ஆரம்பத்துலயே உனக்கு‌ அவள பிடிச்சி போய் எங்க அவள லவ் பண்ணிருவியோன்னு தானே அவ கூட பேசாம இருக்க முடிவு பண்ணாய்…” என மனசாட்சி மீண்டும் கேள்வி கேட்க,

 

“அப்போ நான் யுவிய லவ் பண்ணுறேனா… ஆனா அவளும் என்ன ஏமாத்திட்டான்னா என்ன பண்ண..” என சஜீவ் குழம்ப,

 

மனசாட்சி, “அவள் உன்னோட யுவி… உன்ன பத்தி எல்லாம் தெரிய முன்னாடியே உன்ன காதலிக்க ஆரம்பிச்சவ… நிச்சயமா யுவியால உன்ன ஏமாத்த முடியாது…” என்க,

 

சஜீவ், “ஆனா நான் அவள ஏமாத்த தானே காதலிக்க ஆரம்பிச்சேன்… இது தெரிஞ்சா யுவி என்ன வெறுத்துடுவாளே…” என வேதனைப்பட்டான்.

 

பின், “இல்ல என்னால யுவி கிட்ட இந்த உண்மைய சொல்ல முடியாது… நான் இப்போ யுவிய நிஜமாலுமே காதலிக்கிறேன்… அவள் என்ன வெறுத்துட்டா என்னால தாங்கிக்க முடியாது… ” என்றவன் அப்படியே உறங்கிப் போனான்.

 

நித்யாவோ வீட்டிற்கு வந்ததிலிருந்தே சஜீவ் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.

 

இரவு உணவைக் கூட ஒதுக்கி விட்டு அறையிலேயே அடைந்து கொண்டு இன்று சஜீவ்வுடன் இருந்த பொழுதுகளையே நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

 

மறுநாள் காலை சஜீவ் எழுந்து கீழே வர பிரபு பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

 

சஜீவ் வந்து அவர் பக்கத்தில் அமரவும் பிரபு, “என்ன சர்வா… நல்லா தூங்கினியா… நைட் சாப்ட கூட இல்லன்னு அம்மா சொன்னாங்க… ஏதாவது பிரச்சினையாப்பா… வந்ததுல இருந்து ஒரு மாதிரியா இருக்காய்…” என்க, 

 

அவன் பதிலளிக்க முன்னே அங்கு வந்த ஈஷ்வரி, 

 

“என்னங்க நீங்க சும்மா பையன போட்டு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க… அவனுக்கு என்ன பிரச்சினை இருக்க போகுது… நம்ம மருமகள விட்டுட்டு வந்ததுனால தான் அவன் சோகமா இருக்கானா இருக்கும்… இல்லையாப்பா..” என்கவும் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்த சஜீவ்,

 

“என்ன நானும் பாத்துட்டே இருக்கேன்… வந்த நேரத்துல இருந்து அந்த ஏமாத்துக்காரிய மருமக மருமகன்னு சொல்லிட்டு இருக்கீங்க…. நல்லா கேட்டுக்கோங்கமா… அவ ஒன்னும் இந்த வீட்டு மருமக கிடையாது..” என ஆவேசமாக கூறினான்.

 

ஈஷ்வரி, “என்னடா சொல்லுறாய்… உன் கிட்ட சொல்லிட்டு தானே நானும் அண்ணனும் உங்க கல்யாணத்த முடிவு பண்ணோம்..” என்க,

 

அவரைப் பார்த்து நக்கலாக சிரித்த சஜீவ்,

 

“ஆமா… அந்த நேரம் எல்லாம் உன் பையன் முட்டாளா இருந்து இருக்கேனே… ஒருத்தி சொத்துக்கு ஆசப்பட்டு நம்மள ஏமாத்திக்கிட்டு இருக்கான்னு கூட புரிஞ்சிக்காம இருந்திருக்கேன்…” என்கவும் பிரபு, ஈஷ்வரி இருவரும் அதிர்ந்தனர்.

 

பின் சஜீவ் சுசித்ரா கூறியவைகளை கூற இருவரும் அதிர்ந்து நிற்க தன்னிலை அடைந்த ஈஷ்வரி,

 

“நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்காய் சர்வா… சுச்சி அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது… எப்படி இருந்தாலும் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் சொத்துல அவளுக்கும் உரிமை இருக்கும் தானே… அதைத்தான் சுச்சி அப்படி சொல்லிருப்பா…” என்க,

 

சஜீவ், “இப்போ கூட உங்களுக்கு பெத்த பையன விட அண்ணன் பொண்ணு தான் பெரிசா போய்ட்டால்ல… ஆனா என்ன நடந்தாலும் அவள என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது…” என்றவன் அங்கிருந்து சென்றான்.

 

ஏற்கனவே அங்கு வந்த ஜீவிகாவும் அவன் கூறியதைக் கேட்டு இருந்தாள்.

 

ஈஷ்வரியோ தன் அண்ணனுடனும் சுசித்ராவுடனும் பேச வேண்டும் என நினைக்க பிரபு அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தார்.

 

அவர் தான் மனைவிக்கு அடங்கிய கணவன் ஆயிற்றே.

 

அடுத்து அவன் செய்த முதல் காரியமே நித்யாவுக்கு அழைத்து நேற்று சந்தித்த அதே பார்க்கிற்கு வரக் கூறியது தான்.

 

இங்கு நித்ய யுவனியின் வீட்டில் ராஜாராம் சாப்பிட்டுக் கொண்டிருக்க வசந்தி அவருக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.

 

அப்போது சஜீவ்வைக் காணச் செல்ல தயாராகி ஓடி வந்த நித்ய யுவனி,

 

“அம்மா, அப்பா.. நான் ஃப்ரென்டொன்ன பாத்துட்டு வரேன்…” எனக் கூறியவள் வேகமாக செல்ல எத்தனிக்க அவளைத் தடுத்தார் ராஜாராம்.

 

“சாப்டு போம்மா… என்ன அவ்வளவு அவசரம்..” என்க,

 

நித்யா, “நான் வந்து சாப்பிட்றேன்ப்பா… லேட் ஆகிடுச்சி… பாய்ப்பா…” என்றவள் ராஜாராம் மீண்டும் ஏதாவது கேட்கும் முன் அவசரமாக சென்றாள்.

 

வசந்தி, “இந்த பொண்ணு கொஞ்சம் நாளாவே இப்படித்தாங்க நடந்துக்குறா… ஏதாவது வம்ப விலைக்கு வாங்கிட்டு வராம இருக்கனும்…” என்க ராஜாராமும் அதைப் பற்றித் தான் எண்ணினார்.

 

நித்ய யுவனி பார்க்கை அடைய அங்கு ஏற்கனவே சஜீவ் அவளுக்காக காத்துக்கொண்டு இருந்தான்.

 

சஜீவ் ஏதோ யோசனையிலிருக்க அவனிடம் சென்றவள், “சஜு…” என அழைத்து அவன் தோள் தொட வேகமாக அவள் பக்கம் திரும்பினான் சஜீவ்.

 

அவன் கண்கள் லேசாகக் கலங்கி இருக்கக் கண்டவள்,

 

“ஹேய்… என்னாச்சு சஜு… வர்க்ல ஏதாவது ப்ராப்ளமா… ஏன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு…” எனக் கேட்க தன் கண்ணைத் துடைத்துக் கொண்ட சஜீவ்,

 

“யுவி… நான் உன் கிட்ட ஒரு உண்மைய சொல்லனும்… அதக் கேட்டு நீ என்ன வெறுத்துட மாட்டீல்ல…” என்கவும் நித்யாவுக்கு லேசாக பயம் தொற்றிக் கொண்டது.

 

ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது,

 

“நான் எதுக்கு சஜு உன்ன வெறுக்க போறேன்… நான் தான் உன்ன ரொம்ப லவ் பண்ணுறேன்ல…” என்க,

 

அவள் முகத்தையே சற்று நேரம் உற்று நோக்கியவன் அவள் கரத்தை எடுத்து தன் கரத்தின் மீது வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

 

சஜீவ், “நான் யூ.எஸ். போய் உன் கூட பேசாம இருந்த நாட்கள்ள வேற ஒரு பொண்ண காதலிச்சேன்…” என கீழே பார்த்தவாறு அமைதியாகக் கூற நித்ய யுவனியின் கரம் தானாக அவன் கரத்திலிருந்து விடுபட்டது.

 

அவள் கரத்தை எடுத்ததும் ஏதோ தன் உயிரே தன்னை விட்டுப் பிரிந்தது போல் ஒரு வலி சஜீவ்வின் மனதில் ஏற்பட்டது.

 

ஆனால் இதற்கு மேலும் அவளிடம் மறைக்க விரும்பாது சுசித்ரா பொக்கே அனுப்பியது முதல் அவள் கடைசியாக பேசி விட்டு சென்றது வரை அனைத்தையும் கூறியவன் தான் நித்யாவை ஏமாற்றவே காதலிக்க ஆரம்பித்ததை மாத்திரம் அவளிடம் மறைத்தான்.

 

ஆனால் அதுவே அவர்கள் நிரந்தரமாகப் பிரிய காரணம் ஆகும் என அவன் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டான்.

 

சஜீவ் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தவள் அவனிடம் எதுவும் கூறாது பார்க்கின் மறுபக்கம் சென்று விட்டாள்.

 

நித்யா எதுவும் கூறாது செல்லவும் அவள் தன்னை வெறுத்து விட்டாள் என முடிவு செய்த சஜீவ் அப்படியே மடிந்து அமர்ந்தான்.

 

அவனுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது.

 

அங்கிருந்து வேகமாக வந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

 

“என் சஜு இன்னொரு பொண்ண காதலிச்சானா…” என நினைக்கவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

 

மனதிலுள்ள கவலை குறையும் வரை கண்ணீர் விட்டவள் பின் கண்களை துடைத்துக் கொண்டு,

 

“நீ எதுக்கு நித்து அழுற… அவன் இப்பவும் உன்னோட சஜு தான்… உன்ன காதலிக்க முன்னாடி தானே அவன் இன்னொரு பொண்ண காதலிச்சான்… அதுவும் அந்த பொண்ணு தான் அவன ஏமாத்திட்டு போனாள்… உன் சஜு யாரையும் ஏமாத்தலயே… சஜு மனசுல இப்போ நீ மட்டும் தான் இருக்காய்…” என தனக்கே கூறிக் கொண்டவள் சஜீவ்வை தேடிச் சென்றாள்.

 

ஏற்கனவே இருந்த இடத்திலேயே மடிந்து அமர்ந்திருந்தான் சஜீவ்.

 

நித்யா சஜீவ்வின் முன்னால் வந்து நிற்க,

 

தன்‌ முன்னால் நிழலாட தலையைத் தூக்கிப் பார்த்த சஜீவ் நித்யாவைக் கண்டதும் அவசரமாக எழுந்து நின்று,

 

“யுவி… ப்ளீஸ் யுவி… என்ன வெறுத்துடாதே… என் மனசுல இப்போ நீ மட்டும் தான் இருக்காய்… என்னால நீ இல்லாம இருக்க முடியாது யுவி…” எனக் கூறி கண்ணீர் வடித்தான் சஜீவ்.

 

அவனை நெருங்கி அவன் கண்களைத் துடைத்து விட்ட நித்ய யுவனி சஜீவ்வின் கன்னத்தில் கை வைத்து,

 

“நான் எப்படி சஜு உன்ன வெறுப்பேன்… நீ இன்னொரு பொண்ண காதலிச்சன்னு சொன்னதும் எனக்கு கஷ்டமா இருந்தது உண்மை தான்… அதுக்கப்புறம் யோசிச்சி பாக்கவும் தான் புரிஞ்சிது இப்போ உன் மனசுல நான் மட்டும் தானே இருக்கேன்…” என நிறுத்தியவள் அவனைப் பார்த்து புன்னகைத்தவாறு,

 

“அதுவுமில்லாம உனக்கு ஒரு விஷயம் தெரியுமா சஜு… ஒரு பையனோட கடைசிக் காதலா இருக்குற பொண்ணும் ஒரு பொண்ணோட முதல் காதலா இருக்குற பையனும் ரொம்ப அதிஷ்டமானவங்க… நாமளும் அப்படி தான்… எனக்கு உன்னோட முதல் காதலா இருக்கனும்னு ஆசையில்ல சஜு.. எப்போதும் உன் கூடவே இருக்கும் உன்னோட கடைசி காதலா இருக்கத் தான் நான் ஆசைப்படுறேன்…” என்க சஜீவ்வின் விழிகள் இப்போது ஆனந்தத்தில் கலங்கின.

 

நித்யா அவ்வாறு கூறியதும் அவளை இறுக அணைத்தக் கொண்ட சஜீவ், 

 

“லவ் யூ யுவி…. லவ் யூ சோ மச்…” என்க,

 

தானும் அவனைத் திருப்பி அணைத்துக் கொண்ட நித்ய யுவனி, 

 

“லவ் யூ டூ சஜு…. லவ் யூ சோ மச் மோர் தென் எவ்ரித்திங்… என்ன விட உன்ன தான் நான் அதிகமா விரும்புறேன் சஜு… என்ன பிரச்சினை வந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிப்போம்…. என்ன விட்டு போக மட்டும் நினைக்க வேணாம்… நிச்சயமா என்னால நீ இல்லாம இருக்க முடியாது சஜு..” என அழுத வண்ணம் கூற சஜீவ்வின் அணைப்பு மேலும் இறுகியது.

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்