Loading

சுசித்ரா திடீரென பேக்குடன் வந்து வாசலில் நிற்கவும் ஈஷ்வரியையும் நித்ய யுவனியையும் தவிர மற்ற அனைவரும் அதிர்ந்தனர்.

சுசித்ராவைக் கண்டதும் ஈஷ்வரியின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியைக் கண்டதுமே இருவரும் சேர்ந்து ஏதோ திட்டம் தீட்டி இருப்பது நித்ய யுவனிக்கு புரிந்தது.

நித்ய யுவனி என்ன நடக்கிறது என கை கட்டி வேடிக்கை பார்க்க,

ஜீவிகா, “மா… இவ எதுக்கு பெட்டி படுக்கை எல்லாம் தூக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்திருக்கா…” என்றாள் கோவமாக.

ஈஷ்வரியும் பதிலுக்கு கோவமாக, “என்ன ஜீவி.. சுச்சிய பார்த்து அவ இவன்னு பேசுற… மரியாதையா பேசு… இவ இந்த வீட்டுக்கு மருமகளா வரப் போறவ…” என்றார்.

அதைக் கேட்டதும் நித்ய யுவனிக்கு பக்கென சிரிப்பு வர ஈஷ்வரி, சுசித்ரா இருவருமே அவளைப் பார்த்து முறைத்தனர்.

சஜீவ், “என்ன பேசிட்டு இருக்கமா நீ… யுவி தான் என் பொண்டாட்டி… எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு… ” என்கவும்,

“ஒரு மஞ்சள் கயித்த அவ கழுத்துல கட்டிட்டா அவ உனக்கு பொண்டாட்டி ஆகிடுவாளா…” எனக் கேட்டார் ஈஷ்வரி.

பெருமூச்சு விட்ட நித்ய யுவனி யார் பேசுவதையும் கண்டு கொள்ளாமல் தன் அறைக்குச் சென்றாள்.

பிரபு, “நீ எதுக்கு இப்போ இப்படி பேசிட்டு இருக்க ஈஷ்வரி… நித்யா தான் இனி இந்த வீட்டுக்கு மருமகள்… சுசித்ரா நம்ம வீட்டுல தங்க என்ன அவசியம் இருக்கு…” என்றார்.

ஈஷ்வரி, “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா…. சுச்சி என் அண்ணன் பொண்ணு… அவளுக்கு இந்த வீட்டுல தங்க எல்லா உரிமையும் இருக்கு… கண்ட கண்டவளே வந்து தங்கும் போது என் மருமகளுக்கு இல்லாத உரிமையா…” என்க,

“ஓஹ்… அப்படின்னா உங்களுக்கு உங்க அண்ணன் பொண்ணு தான் முக்கியம்… சரி அவளே இந்த வீட்டுல இருக்கட்டும்… நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு இந்த நிமிஷமே வீட்ட விட்டு போறேன்…” என்றவன் ஜீவிகா, பிரபு, வீர் மூவரும் கூப்பிடக் கூப்பிட கேட்காமல் தன்னறைக்கு விரைந்தான்.

நித்ய யுவனி காதில் ஹெட்செட் அடித்து பாட்டு கேட்டுக் கொண்டிருக்க அறைக்கு வந்த சஜீவ் இருவரின் உடைமைகளையும் எடுத்து பேக் செய்தான்.

பின் நித்ய யுவனியிடம் சென்றவன், “யுவி கிளம்பு…” என்றான்.

நித்ய யுவனியின் கவனமோ மொபைலில் இருக்க,

“உன்ன தான் யுவி… கிளம்புன்னு சொல்றேன்…” எனக் கத்தினான் சஜீவ்.

நித்ய யுவனியோ ஹெட்செட்டைக் காதிலிருந்து எடுத்தவள் சஜீவ்வை நேராகப் பார்த்து, “எங்க வரனும்…” என்றாள் அழுத்தமாக.

சஜீவ், “இனிமே நாம இந்த வீட்டுல இருக்க அவசியம் இல்ல… போலாம்..” என்க,

“சரி… போ…” என்றாள் நித்ய யுவனி.

“என் கோவத்த கிளப்பாதே யுவி… சொல்றத கேட்டு கிளம்பு..” என பல்லைக் கடித்தபடி கூறினான்.

நித்ய யுவனி, “அது தான் நானும் சொல்லிட்டு இருக்கேன்… நீ வான்னு சொன்னா வரதுக்கும் போன்னு சொன்னா போறதுக்கும் நான் ஒன்னும் உன்னோட அடிமை இல்ல… நான் இங்க தான் இருப்பேன்…” என்றாள் அழுத்தமாக.

தலையில் கை வைத்த சஜீவ், “ஏன் யுவி இப்படி பண்ற… உனக்கு என் கூட சண்ட போடனும்னா எப்ப வேணாலும் போட்டுக்கோ.. தயவு செஞ்சு இப்ப நான் சொல்றத கேட்டு கிளம்பி வா… சுச்சி உன்ன கஷ்டப்படுத்தனும்னு தான் இங்க வந்திருக்கா… ” என்று கெஞ்சினான்.

“நேத்து சுச்சி கிட்ட சொன்னது தான் இப்ப உன் கிட்டயும் சொல்றேன்… நான் ஒன்னும் அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி இருந்த நித்யா இல்ல… வாழ்க்கையோட நிறைய பாடத்த கத்து இந்த இடத்துல நிற்கிறேன்… என் கிட்ட யாரு எப்படி நடந்துக்குறாங்களோ அத விட பல மடங்கா நான் திருப்பி கொடுப்பேன்… அதனால நான் இந்த வீட்டுல தான் இருக்க போறேன்…” என நித்ய யுவனி அழுத்தம் திருத்தமாக கூறவும்,

இதற்கு மேல் அவள் எதையும் கேட்க போவதில்லை என சஜீவ் சோர்வாகக் கட்டிலில் அமர்ந்தான்‌.

அப்போது பிரபு, ஜீவிகா, வீர் மூவரும் அறைக்குள் நுழைய நித்ய யுவனி அவர்களை கேள்வியாய் நோக்கினாள்.

பிரபு, ” இங்க பாரு கண்ணா… அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதே… உங்க ரெண்டு பேரு கூடவும் நாங்க எல்லாரும் இருக்கோம்… அதனால எங்கயும் போக வேணாம்…” என சஜீவ்விடம் கூற,

ஜீவிகாவும் நித்ய யுவனியிடம், “ஆமா அண்ணி.. அண்ணன் தான் கோவத்துல ஏதோ சொல்றாரு… நீங்களாவது அவர் கிட்ட சொல்லுங்க..” என்றாள்.

நித்ய யுவனி, “நாங்க எங்கயும் போகல ஜீவிகா…” என்கவும் தான் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.

அவர்கள் சென்று விட நித்ய யுவனியும் அறையிலிருந்து வெளியேறினாள்.

ஈஷ்வரியும் சுசித்ராவும் ஏதோ பேசிக் கொண்டிருக்க அவர்களிடம் சென்ற நித்ய யுவனி,

“என்ன மாமியாரே… அத்தையும் மருமகளுமா சேர்ந்து என்ன வீட்ட விட்டு தொரத்த ப்ளேன் பண்ணுறீங்களா…” எனக் கேட்டு சிரித்தவள்,

“அச்சச்சோ… பாவம் நீங்க…  அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி கூட இப்படி தான் எங்கள ஏதோ பண்ணி பிரிச்சு விட்டீங்க…ஆனாலும் பாருங்க… கடைசில உங்க பையனே என்ன தேடி வந்து என் கழுத்துல தாலி கட்டிட்டான்… அதனால நீங்க என்ன ப்ளேன் பண்ணினாலும் உங்களால என்னை உங்க பையன்… அதான் என் புருஷன் கிட்ட இருந்து பிரிக்கவே முடியாது… முடிஞ்சா ட்ரை பண்ணி பாருங்க.. எனக்கும் டைம் பாஸா இருக்கும்…” என நக்கலாக கூறி விட்டு சென்றாள்.

நித்ய யுவனி செல்லும் திசையை வெறித்தவாறு சுசித்ரா கோவத்தில் பல்லைக் கடிக்க,

ஈஷ்வரி, “அவ கெடக்குறா விடு சுச்சி… இவளுக்கும் என் பையனுக்கும் இடைல இன்னும் எதுவும் சரியாகல… அத வெச்சே கூடிய சீக்கிரம் இந்த நித்யாவ வீட்ட விட்டு கழுத்த பிடிச்சு வெளிய தள்ளலாம்… சர்வாவோட ரூமுக்கு பக்கத்து ரூம நான் உனக்காக அரேன்ஜ் பண்ணி இருக்கேன்… நீ போய் ரெஸ்ட் எடு..” என்க,

சுசித்ரா, “சீக்கிரமே இவளோட ஆட்டத்த அடக்குறேன் அத்த… நான் பண்ண போற வேலைல இவளே சர்வாவயும் இந்த வீட்ட விட்டும் நிரந்தரமா போயிருவா…” எனக் கூறி சிரித்தாள்.

கைகளில் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்த சஜீவ் நித்யா மீண்டும் உள்ளே வரவும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே சென்றான்.

புயலுக்கு முந்திய அமைதி போல அன்றைய நாள் எந்த பிரச்சினையும் இன்றி அமைதியாகக் கழிந்தது.

நன்றாக இருட்டி விட்ட பின் தான் சஜீவ் வீட்டிற்கே வந்தான்.

சஜீவ் வந்ததைக் கண்ட நித்ய யுவனி சமையலறைக்குச் சென்று பால் காய்த்து இரண்டு க்ளாஸில் ஊற்றியவள் சுற்றும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்து விட்டு தன் கையிலிருந்த மாத்திரையொன்றை எடுத்து ஒரு க்ளாஸில் மட்டும் கலந்தாள்.

பின் ட்ரேயில் வைத்து எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று பார்க்க சஜீவ் குளியலறையில் இருத்தான்.

மாத்திரை கலந்த பாலை மூடி வைத்தவள் மற்றையதை எடுத்து பருகினாள்.

குளியலறையிலிருந்து வந்த சஜீவ் நித்ய யுவனியைக் கண்டும் எதுவும் பேசாதிருக்க,

மாத்திரை கலந்த பால் க்ளாஸை எடுத்து சஜீவ்வின் முன் நீட்டினாள் நித்ய யுவனி.

அதனைக் கையில் வாங்கிய சஜீவ் ஒற்றைப் புருவம் உயர்த்தி நித்ய யுவனியைப் பார்த்தவன், 

“என்ன புதுசா என் மேல அக்கறை…” என்க,

“அக்கறையும் இல்ல ஒரு மண்ணும் இல்ல… காலைல போனவன் நைட்டு தான் வீட்டுக்கு வந்திருக்க.. சாப்டியா இல்லையான்னு கூட தெரியல… அது தான் ஒரு மனிதாபிமானத்துல தந்தேன்… வேணாட்டிப் போ..” என்ற நித்ய யுவனி அவனிடமிருந்து மீண்டும் க்ளாஸை வாங்கப் பார்க்க,

அவசரமாக பாலைக் குடித்தான் சஜீவ்.

குடிக்கும் போதே சுவை சற்று மாற்றமாயிருக்க அதைக் கண்டு கொள்ளாமல் குடித்தான்.

சஜீவ் பாலைக் குடித்து முடிக்கும் வரையுமே ஓரக் கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த நித்ய யுவனி அவன் குடித்து முடித்ததும் சென்று படுத்துக் கொண்டாள்.

அதனைக் கண்டு புன்னகைத்த சஜீவ், “எனக்கு தெரியும் யுவி.. வெளிய என்னை வெறுக்குறது போல நடிச்சாலும் உனக்கும் இன்னும் என் மேல காதல் இருக்கு… சீக்கிரமா உன்ன பழைய யுவியா மாத்தி காட்டுறேன்…” என மனதில் எண்ணியவன் அதே நினைப்பில் கீழே போர்வையை விரித்து படுத்துக் கொண்டான்.

தன்னவள் தன் மீது காட்டிய அக்கறையினாலோ என்னவோ காலையிலிருந்து இருந்த எரிச்சல் மறைந்து நிம்மதியாக உறங்கினான் சஜீவ்.

_______________________________________________

மறுநாள் காலையில் சஜீவ் கண் விழிக்கும் போது நித்ய யுவனி அறையில் இருக்கவில்லை.

எங்கே எனத் தேட குளியலறையில் சத்தம் கேட்டது.

சஜீவ் சோம்பல் முறித்தபடி அறையை விட்டு வெளியேற சரியாக அவன் முன் வந்து நின்றாள் சுசித்ரா.

முகத்தை சுழித்தபடி சுசித்ராவைப் பார்த்த சஜீவ் அவளைக் கடந்து செல்லப் பார்க்க அவன் கைப் பிடித்து தடுத்த சுசித்ரா சஜீவ்வை நெருங்கி நின்றவாறு,

“என்ன பேபி… எங்களுக்குள்ள நடந்ததெல்லாம் மறந்துட்டியா… ஓஹ்.. ஒரு வேளை அந்த நித்யா முன்னாடி என் மேல லவ் இல்லாதது போல நடிக்கிறியா…” என கேட்க,

அவளின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்த சஜீவ், “என்ன ஒலரிட்டு இருக்க… ச்சீ.. முதல்ல தள்ளி நில்லு..” என்றான் கோவமாக.

சுசித்ரா இன்னும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்க அவளைப் புரியாமல் பார்த்த சஜீவ் தன் பின்னே  நிழலாடவும் திரும்பிப் பார்க்க அவர்கள இருவரையும் வெறித்தவாறு நித்ய யுவனி நின்று கொண்டிருந்தாள்.

சுசித்ரா நித்யாவைக் கண்ட பின் தான் வேண்டுமென்றே சஜீவ்விடம் அவ்வாறு கூறினாள்.

தன்னவள் தன்னைத் தவறாக எண்ணி விடுவாளோ எனப் பயந்த சஜீவ் அவளிடம் விளக்கம் சொல்ல வாயெடுக்க,

அதற்குள் புன்னகையுடன் இருவரையும் நெருங்கிய நித்ய யுவனி சுசித்ராவை ஒரு பார்வை பார்த்தவள்,

சஜீவ்வின் கரத்தோடு தன் கரம் கோர்த்து அவன் தோளில் சாய்ந்து சஜீவ்வின் முகம் நோக்கியவள்,

“என்ன சஜு எழுந்ததும் வெளிய வந்துட்ட… முதல்ல குளிக்கனும்னு தெரியாதா… நைட்டு வேற என்ன சரியா தூங்க விடவேயில்ல…” என வெட்கப்பட்டபடி கூறினாள்.

சஜீவ்வின் நிலை தான் பரிதாபம்.

நீண்ட நாட்களுக்குப் பின் தன்னவளின் நெருக்கமும் அவளின் கண்களில் தெரிந்த காதலும் அவனை மயக்கி வாயடைக்கச் செய்தது.

அதனால் சஜீவ்விற்கு நித்ய யுவனி கூறியவை ஒழுங்காகக் காதில் ஏறவில்லை.

பாவம் நித்ய யுவனியை வெறுப்பேற்ற நினைத்து வந்தவளே இறுதியில் வெறுப்பாகினாள்.

சுசித்ரா இருவரின் நெருக்கத்தையும் கண்டு அவர்களை முறைத்தவள் கோவமாக கீழே இறங்கி சென்றாள்.

அவள் சென்றதும் அது வரை புன்னகை முகமாக இருந்த நித்ய யுவனி சஜீவ்விடமிருந்து விலகி இறுக்கமான முகத்துடன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

நித்ய யுவனி விலகியதும் தன்னிலை அடைந்த சஜீவ் அதன் பின் தான் அவளின் வார்த்தைகள் மண்டையில் ஏறின.

தலையில் அடித்துக் கொண்டவன், “அதானே பார்த்தேன்… இவளாவது என் கிட்ட இப்படி பேசுறதாவது… அந்த சுச்சிய வெறுப்பேத்த தான் இவ்வளவும் பண்ணி இருக்கா… சர்வா… இனி உன் பாடு திண்டாட்டம் தான்… இந்த சுச்சியோட பேச்ச கேட்டு இவ வேற இப்போ என்ன நெனச்சிட்டு இருக்காளோ…” எனப் புலம்பியவன் நித்ய யுவனியை சமாதானப்படுத்த அறைக்குள் நுழைந்தான்.

நித்ய யுவனி எங்கோ கிளம்பத் தயாராகிக் கெண்டிருக்க,

சஜீவ், “யுவி அவ வேணும்னே…” என ஏதோ சொல்ல வரவும் அவன் முன் கை நீட்டி தடுத்த நித்ய யுவனி,

“எனக்கு உன்னோட விளக்கம் எதுவும் அவசியமில்ல… நீயும் உன் எக்ஸ் லவ்வரும்… சாரி சாரி எக்ஸ் லவ்வரோ, லவ்வரோ… எப்படி வேணா இருந்துக்கோங்க… எனக்கு கவலையே இல்ல… ஆனா என் கிட்ட அவளோட ஆட்டத்த வெச்சிக்க வேணான்னு சொல்லி வை… ” என்றவள் தன் ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

நித்ய யுவனியின் பேச்சில் சஜீவ்விற்கு அவ்வளவு நேரம் இருந்த இதம் மறந்து எரிச்சல் பொங்கியது.

கோவத்தில் ஓங்கி ஒன்று சுவற்றில் குத்தினான்.

கீழே சென்ற நித்ய யுவனி ஹாலில் சுசித்ராவையும் ஈஷ்வரியையும் தவிர யாரும் இருக்காததால் நேரே டைனிங் டேபிளில் அமர வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சாப்பாடு எடுத்து வைக்கவும் தன் பாட்டுக்கு போட்டு சாப்பிட்டாள்.

அதைக் கண்ட ஈஷ்வரி வேலைக்காரியிடம், “உனக்கு அறிவிருக்கா என்ன… நாம என்ன அம்பலம் தானே நடத்திட்டு இருக்கோம் கண்டவளும் வந்து திண்னுட்டு போக…” எனத் திட்ட,

நித்ய யுவனி அதனை காதுக்கும் எடுக்காமல் சாப்பிட்டாள்.

ஈஷ்வரி திட்டவும் வேலைக்காரி முழித்தபடி நிற்க,

அதற்குள் சாப்பிட்டு முடித்து கை கழுவிய நித்ய யுவனி வேலைக்காரியிடம்,

“சாரிக்கா… நான் அர்ஜன்ட்டா ஹாஸ்பிடல் கிளம்பனும்… அதனால இத கொஞ்சம் எடுத்து வைங்க…” என்றவள் அவர் உண்ட பாத்திரங்களை எடுத்து சென்றதும் ஈஷ்வரியிடம் வந்த நித்ய யுவனி,

“மாமியாரே… நீங்க சொல்றதும் சரி தான்… கண்டவங்களும் வந்து சாப்பிட்டு போக இது ஒன்னும் அம்பலம் இல்ல தான்…” என்றவள் திரும்பி சுசித்ராவைப் பார்க்க,

நித்ய யுவனி தனக்குத் தான் சொல்கிறாள் எனப் புரிந்த சுசித்ரா அவளை முறைத்தாள்.

அதைக் கண்டு கொள்ளாத நித்ய யுவனி மீண்டும் ஈஷ்வரியிடம், “ஆனா…. நான் இந்த வீட்டு மருமக… சர்வேஷோட பொண்டாட்டி… எனக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு… அதுவுமில்லாம என் புருஷன் காசுல தான் நான் சாப்பிட்றேன்…” என்றவள் சற்று நிறுத்தி விட்டு,

“ஒரு வேளை உங்களுக்கு தான் என் புருஷன் காசுல சாப்பிட இஷ்டமில்லன்னா உங்க அருமை அண்ணன் பொண்ண கூட்டிக்கிட்டு தாராளமா வெளிய போகலாம்… புரிஞ்சிதா…” என்று விட்டு கிளம்பினாள்.

நித்ய யுவனி சென்றதும், “பாருங்க அத்த… அந்த நித்யாவுக்கு என்ன தைரியம் இருந்தா உங்களையே வீட்ட விட்டு போக சொல்லுவா…” என்றாள் சுசித்ரா.

அதற்குள் அங்கு வந்த ஜீவிகா, “உங்களுக்கு தேவை தான்மா இது… அண்ணி சொல்லிட்டு போறதும் சரி தான்…‌ உங்களுக்கு இந்த வீட்டுல இருக்கனும்னா அண்ணி கிட்ட சும்மா வாய குடுக்காம இருங்க முதல்ல… நாங்க கிளம்புறோம்…” என்று விட்டு வீருடன் தன் வீட்டுக்கு கிளம்பினாள்.

_______________________________________________

அன்று காலையே நித்ய யுவனிக்கு சென்னை க்ளவுட்னைன் மெட்டர்னிட்டி ஹாஸ்பிடலில் இருந்து அப்பாய்ன்மன்ட்‌ ஆர்டர் வந்திருந்தது.

அதனால் தான் காலையிலேயே கிளம்பி வந்திருந்தாள்.

பரிசோதனைக்கு வந்திருந்தவர்களை பரிசோதித்து விட்டு அடுத்து யாரும் வராததால் இருக்கையில் சாய்ந்து லேசாக கண் மூடினாள் நித்ய யுவனி.

அப்போது சரியாக கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, “யேஸ்… கம் இன்…” என்கவும் கதவைத் திறந்து கொண்டு சித்தார்த் உள்ளே நுழைந்தான்.

நித்ய யுவனி, “என்ன சித் திடீர்னு வந்திருக்க…‌நீ வரதா சொல்லவே இல்லையே…” என்க,

சித்தார்த், “இங்க பக்கத்துல டாக்டர்.மெஹ்தாஸ் ஹாஸ்பிடல்ல தான் எனக்கு அப்பாய்ன்மன்ட் கிடைச்சிருக்கு நிது… அதான் அப்படியே உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன்… சரி சொல்லு.. சர்வா வீட்டுல உனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே…” எனக் கேட்டான்.

நித்ய யுவனி, “அதெப்படி பிரச்சினை இல்லாம போகும்… அதான் ஒன்னுக்கு ரெண்டு வில்லி சேர்ந்து இருக்காங்களே… அங்க இருக்கவே பிடிக்கல சித்… ஒரே வெறுப்பா இருக்கு…” என்றாள் சலித்தபடி.

பின் சஜீவ்வின் வீட்டுக்குச் சென்றதிலிருந்து நடந்தவற்றை நித்யா கூற அதனை ஒரு தலையசைப்புடன் கேட்ட சித்தார்த்,

“யாரு எப்படி வேணாலும் இருந்துட்டு போகட்டும் நிது… பட் சஜீவ் எல்லா விஷயத்துலையும் உனக்கு சப்போர்ட்டா இருந்திருக்காரு… பாவம் அவர பத்தி மட்டுமாவது கொஞ்சம் யோசி…” என்க,

“ப்ச்… சும்மா அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காதே சித்… அவனால தான் நான் இதெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு… பேரன்ட்ஸ பிரிஞ்சி வந்து இந்த கொடுமையால பார்க்கனும்னு தலையெழுத்து… ஆமா நீ என்ன ரொம்ப ஓவரா தான் சர்வேஷுக்கு சப்போர்ட் பண்ற… உறக்கு தான் அவன பிடிக்காதே…” என சந்தேகமாகக் கேட்டாள் நித்ய யுவனி.

நித்ய யுவனியின் கேள்வியில் திக் என்றான சித்தார்த், “ச்சேச்சே… அவனுக்கு யாரு சப்போர்ட் பண்ணுவான்… எனக்கும் சஜீவ்வுக்கும் சுத்தமா ஆகாது… பட் உண்மைய சொல்லித்தானே ஆகனும்… அதான்… சரி லீவ் இட் பா… எவ்ரிதிங் வில் பீ ஓக்கே… ஆஹ் சொல்ல மறந்துட்டேன்… அங்கிள் கால் பண்ணி இருந்தாரு… நீ சஜீவ் வீட்டுக்கு போனத்துக்கு அப்புறம் அவங்க கூட பேசவே இல்லையாம்.. அதான் நீ அவங்க முடிவால கோவமா இருக்கியோன்னு நினைச்சி ஃபீல் பண்ணிட்டு இருந்தாரு…” என்க,

நித்ய யுவனி, “அட.. ஆமா… அப்பா அம்மா கூட பேசி ரெண்டு நாளுக்கு மேல ஆகுது… இருந்த பிரச்சினைல எதுவும் ஞாபகம் வரல… டியுட்டி முடிஞ்சு போக கிட்ட போய் அவங்கள பார்த்துட்டு போறேன்…” என்றாள்.

பின் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு விடை பெற்றான் சித்தார்த்.

_______________________________________________

“ஆமா தியா… நீ மட்டும் சர்வாக்கும் யுவனிக்கும் இடைல நடந்ததெல்லாம் சொல்லலனா அவங்க கல்யாண விஷயம் கேட்டு எனக்கு ஹார்ட் அட்டேக்கே வந்திருக்கும்..” என்க,

“நீங்க வேற ரிஷி… எனக்கும் அஞ்சலிக்கும் பல வருஷத்துக்கு முன்னாடியே இவங்களால ஹார்ட் அட்டேக் வந்திடுச்சு… நித்தி பேங்களூர் போனதுக்கு அப்புறம் தான் ஜனனி எங்க ரெண்டு பேரு கிட்டயும் இவ்வளவு விஷயம் நடந்து இருக்கிறதே சொன்னா… எங்களால நம்பவே முடியல… ரொம்ப கோவம் வேற.. அதுக்கப்புறம் தான் நித்தியோட இடத்துல இருந்து யோசிச்சு பார்க்கவும் புரிஞ்சது… எப்படியோ இனியாவது நித்தியும் சஜீவ் அண்ணாவும் சந்தோஷமா இருந்தா சரி..” என்றாள்.

கல்லூரியில் மதிய இடைவேளையின் போது ஸ்டாஃப் ரூமிலிருந்து தான் ஹரிஷுடன் பேசிக் கொண்டிருந்தாள் திவ்யா.

ஹரிஷ், “ஆமா.. நமக்கு எப்போ கல்யாணம்..” என திடீரெனக் கேட்கவும் அப்போது தான் தாகம் வந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் வைத்த திவ்யா ஹரிஷின் கேள்வியில் புரையேறி தண்ணீர் முழுவதையும் துப்பினாள்.

மறுபக்கம் ஹரிஷ், “ஹேய் ஹேய்… பாத்து…” என்று அவசரமாக கூற,

“என்ன கேட்டீங்க இப்போ…” என கண்களை அகல விரித்தபடி கேட்டாள் திவ்யா.

ஹரிஷ், “ஆரவ்வுக்கும் பிரியாவுக்கும் எப்போ கல்யாணம்னு கேட்டேன்…” என்றான் கூலாக.

“நிஜமா அப்படியா கேட்டீங்க…” என நம்பாது திவ்யா கேட்க,

“ஆமா தியா… ஏன் கேக்குற… உனக்கு எப்படி கேட்டுச்சு..” என்றான் ஹரிஷ் சிரிப்பை அடக்கியபடி.

திவ்யா, “லூஸு… லூஸு… எப்பவும் அந்த யோசனைல தான் இருக்கியா… இவன் வேற நம்மள பத்தி என்ன நெனச்சானோ தெரியலயே… சரி சமாளிப்போம்…” என மனதிலே தன்னைக் கடிந்து கொண்டவள் ஹரிஷிடம்,

“இல்ல இல்ல… எனக்கும் அப்படி தான் கேட்டுச்சு… சரி ப்ரேக் முடிஞ்சிடுச்சு… நான் அப்புறம் பேசுறேன் ரிஷி…” என அவசரமாக அழைப்பைத் துண்டித்தாள்.

தனது கேள்விக்கு திவ்யாவின் எதிர்வினையை நினைத்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் ஹரிஷ்.

இங்கு திவ்யா அழைப்பைத் துண்டித்தவள் பெருமூச்சு விட்டபடி,

“நல்ல வேளை.. ரிஷி வேறெதுவும் கேக்க முன்னாடி கட் பண்ணிட்டோம்… ஆனாலும் எனக்கு அப்படி தானே கேட்டுச்சு… ச்சே இருக்காது… எனக்கு கேட்ட மாதிரியா இருக்கும்..” என மனதில் பட்டிமன்றம் நடத்தியவள் அப்போது தான் தனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து மொபைலைப் பார்த்து சிரித்த வண்ணம் இருந்த அஞ்சலியைக் கண்டாள்.

திவ்யா, “ஹேய் அஞ்சலி… என்ன மொபைல பார்த்து தனியா சிரிச்சிட்டு இருக்க… அப்படி என்ன இருக்கு அதுல… குடு பாக்கலாம்..” என அஞ்சலியின் கையில் இருந்த மொபைலைப் பறிக்கப் பார்க்க,

அவசரமாக கையைப் பின்னால் இழுத்த அஞ்சலி சிரித்து சமாளித்தபடி, “பெரிசா ஒன்னுமில்ல திவி… சும்மா காமெடி வீடியோ ஒன்னு பார்த்தேன்… சரி வா க்ளாஸுக்கு டைம் ஆச்சு… போலாம்…” என திவ்யா அடுத்து ஏதாவது கேட்கும் முன் அவளை இழுத்துச் சென்றாள்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.

    2. Archana

      சூப்பர் எபி😍😍😍சிஸ் அஞ்சலி தனியா சிரிக்குது, திவி மாங்கு மாங்கு முழிக்குது, யுவி சடக்கு க
      சடக்கு கோப படுது ப்பா ஒரே ரகளையா தான் இருக்கு.

      1. Nuha Maryam
        Author

        இது ஜஸ்ட் ட்ரெய்லர் மட்டும் தான்… மெய்ன் பிச்சர் இனிமேல் தான் இருக்கு… 🤪🤪🤪

    3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    4. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.