13-உயிர் வாங்கிடும் மோகினி நீயடி

Loading

அத்தியாயம் 13

திருமண சடங்குகள் அனைத்தும் முடித்து, கணவனோடு அவன் வீட்டு வாசல் வந்து இறங்கினாள் வசந்தரா.
சரியாக மதியம் நேரம் இரண்டறையை நெருங்கிக் கொண்டிருந்தது. இவள் காரிலிருந்து இறங்கும்போது தனிச்சையாகத் தான் எப்போதும் வந்து செல்லும் மழலையர் பள்ளியை நிமிர்ந்து பார்க்க. அதே நேரம் இவளோடு வேலை செய்தவர்களும் வண்டி வந்து நிற்கும் ஓசையில் ஆவலோடு பால்கனியில் வந்து நின்ற எட்டி பார்த்தார்கள். அதில் ஒரு சிலர் திருமணத்திற்கும் வந்திருந்தார்கள்.
அப்படி எட்டிப் பார்த்த ஒரு தோழியின் இடுப்பில் ஒய்யாரமாக உட்கார்ந்து இருந்தான் வசுந்தரா அதிகமாகப் பார்த்துக் கொள்ளும் பாலகன் முதல் முதலில் சஞ்சய் இவளைப் பார்க்கும்போது அவன்தான் இவள் இடுப்பிலும் அமர்ந்திருந்தான்.

வசுந்தராவை பார்த்ததும் சந்தோஷ மிகுதியில் கைத்தட்டி
“வசு.” என்று தன் மழலை குரலில் அழைத்தான் முகம் முழுவதும் புன்னகையுடன். பின், அவளைச் சில நாட்கள் காணாமல் இருந்ததில் தன்னை தூக்க சொல்லி இரு கைகளையும் அவளை நோக்கி நீட்டியபடி வா என்று தலையசைத்து  அழைத்தவனின் முகம் அழுகைக்கு தயாரானது.

குழந்தையின் குரல் மனதை பிசைய, புன்னகைத்தபடி அவனைப் பார்த்துக் கை அசைத்தவள்,
“அப்புறம் வரேன்.” என்று அவனுக்குச் செய்கையில் கூறிவிட்டு. கணவனோடு அவன் வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள் வசுந்தரா. குழந்தையின் செயலையும்  மனைவியின் பதில் மொழியையும் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்,
‘நல்ல மயக்கி வச்சிருக்கா எல்லாரையும். மோகினி’ என்று மனதிற்குள்ளாகவே நினைத்துப் புன்னகைத்து  கொண்டு மனைவியின் கரம்பற்றித் தன் வீட்டிற்குள் நுழைந்தான்.

மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள் நுழைந்ததும் சிறிது நேரம் சோபாவில் அமர வைத்துப் பால் பழம் கொடுத்து. பின், மருமகளை அழைத்துச் சென்று பூஜை அறையில் விளக்கேற்ற வைத்தார் அனுபமா. இவர்களுடனேயே ஒட்டிக்கொண்டிருந்தாள் வசுமதி. பூஜை அறையிலிருந்து வெளியில் வந்த மகனைப் பார்த்த அனுபமா
“நீ உன்னோட ரூம்ல போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு சஞ்சய்.” என்று கூறிவிட்டு வசந்தியை பார்த்தவள்
“நீ அந்த ரூமுக்கு வசுந்தராவை கூட்டிட்டு போ மா. அவளும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று கூறியபடி வந்திருந்த முக்கியமான சொந்த பந்தங்களை கவனிக்க சென்று விட்டார்.

வசுந்தராவுடன் அவர்களின் வீட்டார் அனைவருமே சஞ்சயின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். பிரபுவின் அழைப்பின் பேரில். ரகுபதியும், பிரபுவும மட்டும் திருமண மண்டபத்தில் இருந்த மற்ற வேலைகளைப் பார்த்துவிட்டுப் பின்னர் வருவதாகக் கூறி இவர்கள் அனைவரையும் ஒன்றாக அனுப்பி வைத்திருந்தார்கள் உறவினர்களுடன்.

அறைக்குள் வசுந்தரா உடன் வந்த வசுமதிக்கு அந்த அறையை ஏற்கெனவே பார்த்திருந்தால் எந்தப் பிரமிப்பும் தோன்றவில்லை. ஆனால் முதல் முறையாக வந்த வசுந்தராவிற்கு அனைத்துமே ஆடம்பரமாகவும், பெரிதாகவும் இருக்க. வயிற்றில் ஒரு பயப்பந்து உருண்டது. உடன் வந்த தமக்கையிடம்  எதையும் காட்டிக் கொள்ளாமல் அறைக்குள் வந்தவள் சுற்றி பார்க்க, கபோர்டுடன் சேர்ந்து இருந்த கதவுகளில் எந்தக் கதவைத் திறந்தால் குளியல் அறை வரும் என்று தெரியாமல் சில நிமிடங்கள் நின்றவள், பின்பு குத்துமதிப்பாக ஒரு கதவைச் சென்று திறக்க.நல்ல வேலையாக அதுவே குளியலறையாக இருந்தது. வேகமாக உள் நுழைந்தவள் இயற்கை அழைப்பை முடித்துவிட்டு வெளிவந்தவளுக்கு பயத்துடன் சோர்வும் சேர்ந்து கொண்டது. தலை வலிப்பது போலவும், வயிறு வலிப்பது போலவும், காய்ச்சல் அடிப்பது போலவும் தோன்ற, சிறிது நேரம் படுத்து எழுந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தவள் அங்கிருந்த கட்டிலில் சென்று அமர. ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்த வசுமதி.

“ஹ்ம்ம்.! உனக்கு வந்த வாழ்வை பாத்தியா.? இப்படியொரு பணக்கார வீட்ல உன்னைக் கட்டியிருக்காங்கன்னா அதுக்கு என்ன காரணங்கிறது தான் தெரியல. அப்பாவும் சரியா விசாரிக்காம, அடிச்சது டா லாக்,கிடைச்சது பெரிய இடம் அப்படின்னு உன்னைக் கட்டி வச்சுட்டாரு. கேட்டா அவங்களே  விரும்பிக் கேட்டாங்கன்னு சொல்றாரு. எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ. யாருக்கு தெரியும்.? எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருந்துக்கோ.?” என்று ஏற்கனவே பயந்திருந்த பெண் மனதில் மேலும் பயத்தை ஏற்படுத்தினாள். தான் கொண்ட பொறாமையால்.

வசுமதிக்கு எந்தப் பதிலும் கொடுக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தவளை  மேலும் சோர்வடையச் செய்ய வந்தார்கள் கோகிலாவும், வசந்தியும். அன்னையை கண்டதும் அமர்ந்திருந்தவள் எழுந்து நிற்கப் பரவாயில்லை இன்னும் தன் மேல் பயமும் மரியாதையும் தன் மகளுக்குத் தன் மேல் இருக்கிறது என்று பெருமை கொண்டவராக.
“உட்காரு, உட்காரு..” என்ற படியே கட்டிலில் அமர்ந்து அவளையும் அமரச் சொன்னார். அங்கிருந்த ஒற்றை சோபாவில் இவர்களைப் பார்க்குமாறு அமர்ந்து கொண்டாள் வசந்தி.

“அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க எல்லாம் கிளம்பனும். நான் இருந்து இவளை இரவுக்கு  ரெடி பண்ணி அவ ரூம்ல விட்டுட்டு தான் வருவேன். அன்னைக்கே அந்த ரூம் உள்ள போக முடியல.”
“போக முடியல இல்லக்கா. போக விடல. மாமா நம்மல.” என்று கூறி சிரித்தாள் வசந்தி.
“இன்னைக்கு என்னைத் தடுக்க முடியாது. இவளை உள்ளே விட்டுட்டு தான் நான் வருவேன். பாத்துரலாம்.? நானா அவரான்னு…?” என்று சண்டைக்கு மல்லு கட்டுவது போலக் கூறிய தமக்கையை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் வசுந்தரா.

மகளையே பார்த்துக் கொண்டிருந்த கோகிலா தொண்டையை கனைத்தவாறு
“இங்க பாரு உன்ன உங்க அப்பா பெரிய இடத்துல கட்டி குடுத்துட்டாரு. இனி நீதான் சூதனமா நடந்துக்கணும்.உன் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும். அதுக்கு வேண்டிய பணத்தை நீ தான் கொஞ்சம் கொஞ்சமா  கொண்டு வந்து கொடுக்கணும். உன் புருஷனுக்கு தெரிந்து கொண்டு வருவியோ தெரியாம கொண்டு வருவியோ. அது உன் பாடு. நீ மட்டும் பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டு சந்தோஷமா இருந்தா பத்தாது. உன் கூடப் பொறந்தவங்களும் சந்தோஷமா இருக்கணும் என்ற நினைப்பு கொஞ்சமாவது உனக்கு இருக்கணும்…” என்றவரின் கூற்றில் அதிர்ந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.

“என்ன நான் சொல்றது புரியுதா.?” எனக் கேட்ட தாயிடம் ஏற்கனவே பயத்தில் இருந்தவள் புரிந்தது என்பதாக வேகமாகத் தலையாட்டிச் சம்மதித்தாள். இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரியாமல்.

மேலும் ஏதோ சொல்ல வந்தவர் கதவு தட்டும் ஓசையில் சற்றே நிதானிக்க இவர்களுக்கான சூடான பானத்துடன் உள்ளே நுழைந்தார் அனுபமா, வேலை செய்யும் பெண்ணுடன். “எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா.?” எனக் கேட்டபடி உள்ளே வந்தவரைப் பார்த்த வசுந்தரா எழுந்து நிற்க.
“நீ ஏன்மா எழுந்து நின்னுட்டு இருக்க..? டீச்சரை பார்த்து ஸ்டுடென்ட் மாதிரி. உட்காரு. நான் டீச்சர் இல்ல டாக்டர்.” எனச் சிரித்தபடி கூறிவிட்டு லேசாக அவள் கன்னத்தைக் கட்டியவர்.

“கொஞ்ச நேரம் தூங்கலாம் இல்ல…?” என்று கேட்டப்படியே
“காபி குடிப்பல்ல.?” எனக் கேட்டுக்கொண்டு அவளுக்கான பணத்தை அவர் எடுத்து அவள் கைகளில் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்குக் கொடுக்கும்படி அந்தப் பெண்ணைப் பணிக்க. அவளும் அனைவருக்கும் கொடுத்து விட்டு வெளியேறிச் சென்றாள். இப்படி முதல் நாளிலேயே மாமியாரே தங்கைக்குச் சேவகம் செய்வதை பார்த்துவிட்டுத் தனக்கு நடந்தவைகளை நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது வசுமதியால்.

சிறிது நேரத்தில் தந்தை வந்து அழைக்க அனைவரும் கிளம்பி சென்றார்கள். மகளின் அருகில் வந்த ரகுபதி அவள் தலையைத் தடவி “சந்தோஷமா இருக்கணும்.” என்று கூறியபடியே கலங்கும் கண்களை மறைத்துக் கொண்டு மகளிடம் விடை பெற. அவளுக்கும் இதுவரை தன்னை பாரமாக நினைக்காத தந்தையின் பாசத்திலும், பிரிவிலும் மனம் கணக்கவே செய்தது. பின் அவளின் அருகில் வந்த கோகிலா. “சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். சூதானமா நடந்துக்கோ.” என்ற படியே வசந்தியுடன் கணவரைப் பின்பற்றிச் சென்றார். வந்திருந்த உறவினர்களும் விடைபெற்றுச் சென்றிருக்க வீட்டு ஆட்களோடு வசுமதியும் அவளின் கணவன் மட்டுமே இருந்தார்கள்.

“நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடும்மா.” என்று மருமகளிடம் கூறிய அனுபமா அவள் பின்னே செல்ல இருந்த வசுமதியை
“நீ என் கூடக் கொஞ்சம் வாம்மா.” என்று அழைத்துக் கொண்டு அவரின் அறைக்குள் சென்று மறைந்தார். வசுமதி சென்றதில் சற்று நிம்மதி அடைந்த வசுந்தரா கட்டிலில் சென்று அமைதியாகப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்திலேயே வயிற்றில் ஏற்பட்ட உபாதையால் கழிவறைக்கு சென்றவள் இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து வரவேண்டிய மாதவிடாய் இன்று வந்திருக்க பெரும் குழப்பத்துடன். என்ன சொல்வார்களோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது. அதற்குத் தேவையான பொருட்கள் தன்னிடம் இல்லாமல் என்ன செய்வது என்பது புரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு அமர்ந்து கொண்டிருந்தவளை பார்த்தபடியே உள்ளே வந்தார்கள் அனுபமாவும் வசந்தியும்.

“என்னம்மா.? ஏன் இப்படி அரண்டு போய் உட்கார்ந்து இருக்க.? ஃப்ரீயா இரு. இனிமே இது உன் வீடு.”என்றவரை பார்த்தவள் “பீரியட்ஸ் ஆயிட்டேன் அத்தை.” என்றாள் மெதுவான குரலில். “அய்யய்யோ.! என்னடி சொல்ற…? உனக்குத் தான் அதுக்கு இன்னும் நாள் இருக்கே. ” என்றவள். பின் மெதுவாக
“அச்சச்சோ.; இப்போ இப்படி அபசகுணம் ஆயிடுச்சே.” என்றாள் ஓர கண்ணால் அனுபமாவை பார்த்தபடி.

“சே. வசுமதி என்ன பேசற நீ.? அபசகுணம். அது, இதுன்னு. இதெல்லாம் இயற்கை. இதுக்கு யாரும் காரணமாக முடியாது. அவளுக்குக் கல்யாணம்ங்கிற படபடப்பிலேயே ஹார்மோனல் இம்பாலன்ஸ் ஆகியிருக்கும். அதுதான் இப்படி முன்னாடி வரப் பீரியட்ஸ்க்கு காரணம்.”
“நீங்க டாக்டர் உங்களுக்குத் தெரியாததா அத்தை.” என்று சமாளித்தாள் அவளும். பின், சிறிது யோசித்தவளாக,
“இப்ப என்ன அத்தை பண்றது.” என்று அவரிடமே கேட்க.
“ஒன்னும் பண்ண வேண்டாம். அவ குளிச்சிட்டு இலகுவான உடைய உடுத்திகட்டும். நீ சாப்பிட்டு கிளம்புறதா இருந்தா கிளம்பு. இல்லனா இங்கேயே தங்கிக்கோ.” என்றவரிடம்.

“இல்லத்த. எங்க மாமியார் சீக்கிரமா வரச் சொல்லிட்டாங்க. அதனால நாங்க இப்பவே கிளம்புறோம். அதான், எனக்கு வேற எந்த வேலையும் இல்லையே.” என்றவள் தங்கையிடம் தலையசைத்துவிட்டு தன் கணவனை நோக்கிச் சென்றாள். “சே. இன்னைக்கும் அந்த ரூம்ம பார்க்க முடியல.” என்று மனதில் புலம்பிக்கொண்டே. “கிளம்பலாம்ங்க.” என்றாள் அதுவரை சஞ்சயிடம் பேசிக் கொண்டிருந்த கணவனின் அருகில் சென்று.

“ஓஹ்.! எல்லாம் முடிஞ்சுதா.? எனக் கேட்ட கணவனிடம்
“ஆமா, ஆமா.” என்ற படியே அனைவரிடமும் விடை பெற்றுச் சென்றார்கள் இருவரும். கண்களைச் சுழற்றி மனைவியைத் தேடிய சஞ்சய்க்கு அவள் கண்களிலேயே அகப்படவில்லை. சிறிது நேரம் சோபாவில் அமர்ந்திருந்தவனை அனுப்பமாவின் குரல் இரவு உணவு உண்ண அழைக்க எழுந்து சென்றான் உணவு மேஜைக்கு. இவன் சென்று அமர்ந்ததும் அவன் அருகில் வசுந்தரா வும் அமர, அவளை நிமிர்ந்து பார்த்து லேசாகப் புன்னகைத்தான். அவளும் பதிலுக்குப் புன்னகைக்க அதில் பயமே மிகுந்திருந்தது. வேகமாக உண்டு எழுந்தவளை பார்த்த அனுபமா

 “நீ மேல போ, மா. இவன் கொஞ்ச நேரத்துல வருவான்.” எனக் கூற சம்மதமாகத் தலையசைத்தவள் மாடி ஏறிச் சென்றாள் வேகமாக. செல்லும் மனைவியைப் பார்த்தவன். “வசந்தரா.” என அழைக்கத் திரும்பிப் பார்த்தவளிடம்,

“ரைட் சைடு. ஃபர்ஸ்ட் ரூம்.” என்றவனுக்கு, தலை அசைப்பையே பதிலாகத் தந்தவள். மின்னல் என ஓடி மறைந்தாள்.
“டேய் அவளுக்குத் தெரியும். நான் சொல்லிட்டேன்.” என்ற மாமியாரின் குரல் பின் தொடர.
“அதனால் என்ன நான் ஒரு தடவை சொல்லிக்கிறேன்.” என்றான் லேசான சிரிப்புடன்.
“நீ சொல்றது இருக்கட்டும். நான் முதல்ல உன் கிட்ட ஒன்னு சொல்லணும்.” என்றவர். பெண்ணவளுக்கு ஏற்பட்ட உடல் உபாதையைக் கூற. புரிந்ததாகத் தலையசைத்தவன் மேலே ஏறிச் சென்றான் தன் அறையை நோக்கி.

 அறையின் உள் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தவளுக்கு பெரும் சிந்தனை ‘தன் புத்தம் புது கணவன் ஏதேனும் சொல்லுவானோ என்று. மருத்துவரான மாமியாருக்கு புரிந்தது. இன்ஜினியரான அவரின் மகனுக்குப் புரியுமா.’ என்பதில் பெரிய சந்தேகம் பெண்ணவளுக்கு. அவளின் சிந்தனையைக் கலைக்கும விதமாக லேசான கனைப்புடன் அவளை நெருங்கியவன்.
“என்ன அப்படியொரு சிந்தனை இந்தக் குட்டி மூளைக்குள்ள.?” என்று லேசாக அவள் தலையை ஆட்டியபடியே கேட்க. திடீரெனக் கேட்ட அவன் குரலில் அரண்டு எழுந்தவளை பார்த்தவன்.

 “ஹேய்.! ஈஸி, ஈஸி எதுக்கு இவ்ளோ பதட்டம்.? அம்மா சொன்னாங்க. ஒன்னும் பிரச்சனை இல்ல. நம்ம காலம் நீண்டு இருக்கு. டேக் குட் ரெஸ்ட்.” என்றவன் மெத்தையில் அவளை அமர வைத்து விட்டு இரண்டு அடி எடுத்து வைத்தவன். பின்பு வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கி.
“இது மட்டும்.” என்று கண்களைச் சுருக்கி சொன்னவன், அவள் என்ன என்று உணர்வதற்கு முன்பாகவே லேசாகத் தன் வயிற்றோடு அவளை அணைத்தவன். குனிந்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டு.

“குட் நைட்.” என்றவன் அவள் வலது கன்னத்தை லேசாக நிமிண்டி விட்டு, மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டான் புன்னகை மாறாமல். அவன் செய்கையில் உடல் சிலிர்த்த பெண்ணவளும் சற்று இடம் விட்டு அவன் அருகில் படுத்துக் கொண்டவள், சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றாள் மனதின் அலைக்கழிப்பு நீங்கி. நிம்மதியான மனநிலையுடன்.

தொடரும்,..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்