
அத்தியாயம் 19
இன்றோடு அவர்கள் சிம்லாவிற்கு வந்து ஆறு நாட்கள் முடிந்து இருந்தது. இன்று மதிய உணவை முடித்துவிட்டு அவர்கள் சிம்லா மலையை விட்டுக் கீழே இறங்க வேண்டும். குளிருக்கு இதமாகப் பெரிய பிளாங்கெட்டின் உள் கணவனின் அணைப்பில் சுகமாக ஆழ்ந்திருந்தவள் விழிப்பு வர, எழுந்தவள். குளித்து முடித்து அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துப் பேக் செய்து கொண்டு இருந்தாள்.
பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவள்
“இந்த நாலு டிரஸ் போடவே இல்லை. வேஸ்டா தூக்கிட்டு வந்திருக்கோம். தேவையில்லாத சுமை.” என்று தன் போல் பேசியபடி துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவளை, “நான்தான் அப்பவே சொன்னேனே. நிறைய துணி தேவைப்படாதுன்னு. நீ தான் என் பேச்சு கேக்காம எல்லாத்தையும் தூக்கிட்டு வந்து இருக்க.” என்றான் விழித்தெழுந்து ஒரு கைக்கொண்டு தலையைத் தாங்கியபடி அரங்கநாதர் போஸ்ஸில் படுத்து, அவள் செய்வதையும் புலம்புவதையும் பார்த்து ரசித்தபடி இருந்த சஞ்சய்.
திடீரென்று கேட்ட அவனின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவனின் கள்ள புன்னகையை பார்த்து, பெட்டியை அடுக்கும் சாக்கில் குனிந்து கொண்டு வெட்கத்தில் சிவக்கும் முகத்தை மறைத்துக் கொண்டாள். அவளை மேலும் சிவக்க வைக்கும் முயற்சியில்
“பாரு, நாலு நாளா நமக்கு எந்தத் துணியும் தேவைப்படல்லை. டவலும் பெட்ஷீட்டும் மட்டுமே நமக்கு உடையாக இருந்தது. அத கூட ஹோட்டல்காரனே கொடுத்துட்டான். ஆளுக்கு ரெண்டு டிரஸ் உன்னுடைய ஹேண்ட் பேக்லையே வச்சு எடுத்துட்டு வந்து இருக்கலாம் தேவை இல்லாம இவ்வளவு பெரிய ட்ராலி உன்னால தான்.” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டே.
அவனுக்கு முகம் காட்டாமல் மேலும் மறைத்தவள் பின்
“நீங்கப் போய்க் குளிச்சிட்டு வாங்க நான் காபி போடுறேன்.” என்று கூறியபடியே பெட்டியை அடுக்கி மூடியவள் அவன் செய்வதை முதல் நாள் பார்த்துக் கற்றுக் கொண்ட படி கெட்டிலில் தண்ணீரை சுட வைத்துக் காபி போட ஆரம்பித்தாள். இதற்கு மேல் அவளைச் சீண்ட வேண்டாமென நினைத்தவனும் சமர்த்தாக எழுந்து சென்றான் குளிப்பதற்கு. அவன் குளித்து வர இருவருக்கும் சூடான காபி தயாராக இருந்தது. குளித்து வந்தவன் உடையை அணிய அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன்,
“என்ன இன்னைக்கும் டவலோட இருப்பேன்னு நினைச்சியா.? அப்படி இருக்க எனக்கும் ஆசை தான். ஆனா இன்னைக்கு நம்ம கிளம்புறோம் இல்லையா.? அதான், வீட்ல இருக்குறவங்களுக்கும் உனக்கும் ஏதாவது வாங்குவோம். சின்னதா ஒரு ஷாப்பிங்.” எனக் கண்ணடித்து கூறியவன் அவள் அப்படியே நிற்பதை பார்த்துவிட்டு
“என்ன போக வேண்டாமா.!” எனக் கேட்க
“போலாம், போலாம்.” என்றாள் வேகமாக.
“என்ன இவ்வளவு வேகமா பதில் வருது. அவ்வளவா படுத்தி வச்சுட்டேனா உன்ன.?” என்று மெதுவாக அவளின் அருகே வந்து, அவளை அணைத்தவாறு கேட்க, இல்லையெனத் தலையசைத்தாள் அவன் தோள் சாய்ந்த படி. அவள் நாடி பிடித்துத் தன்னை நோக்குமாறு உயர்த்தியவன் அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு.
“போலாமா.?” எனக் கேட்கச் சரியெனத் தலையசைத்து அவனோடு கிளம்பி சென்றாள் மகிழ்வுடன். கணவனின் காதலும் அன்பும் அவளுக்கு அவ்வளவு மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது.
ரெசார்ட்டிலேயே இருந்த உணவகத்தில் காலை உணவை முடித்துவிட்டு அவன் கைப்பிடியில் ரோட்டோர கடைகளை முதலில் சுற்றி வந்தார்கள் இருவரும். அவளுக்கும் அவளின் இரு சகோதரிகளுக்கும் தன் மாமியாருக்கும் என அழகான கைப்பைகளை வாங்கிக் கொண்டாள்.
பின் மால் ரோடு என அழைக்கப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றான் அவளை. பெரும்பாலான டூரிஸ்ட் கள் கூடும் இடம் இது. அதிகபட்சமான ஷாப்பிங் இங்கேயே நடைபெறும். அங்கு அழைத்துச் சென்றவன் சில உடைகளையும் கைவினைப் பொருட்களையும் வாங்கி கொடுத்தான். தந்தையைத் தவிர முதல் முதலாகத் தனக்கென ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து வாங்கித் தரும் கணவனின் மீது காதல் பெருகியது. இயற்கை கொஞ்சும் சூழலை அனுபவித்தபடியே அந்த வீதி முழுவதும் உலா வந்தார்கள் இருவரும். அங்கேயே உணவை முடித்துக் கொள்ள எண்ணி அருகில் இருந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றவன்.
அங்கிருந்து மெனு கார்டை அவள் கையில் கொடுத்து அவளையே ஆர்டர் பண்ண சொல்ல, இருவருக்கும் வேண்டியதை கூறிக் கொண்டவள் கடைசி பக்கத்தில் இருந்த மில்க் ஷேக் வெரைட்டிகளை பார்த்தபடி அமர்ந்திருக்க,
“மில்க்ஷேக் வேணும்னா சொல்லு. குடிக்கலாம்.” எனக் கூறியவனை பார்த்தவள், கண்கள் மின்ன வேகமாகத் தலையசைத்து
“எனக்குப் பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக்.” என்றாள் குதுகல குரலில்.
“ஹ்ம்ம். எனக்கும் அதே சொல்லு.” என்றவன். காத்திருந்த வெயிட்டரிடம் உணவு வகைகளைக் கூறி அவர் சென்றபின் மனைவியை ஏறிட்டு பார்த்தவன்.
“அவ்வளவு பிடிக்குமா பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக்.” எனக் கேட்க. ஆம் என்று வேகமாகத் தலையசைத்தாள். “எப்பவுமே அது மட்டும் தான் ஆர்டர் பண்ணுவியா.?” எனச் சிரித்தபடி கேட்டவனிடம்,
“எப்பவுமே வா. ஒரே ஒரு முறை தான் குடிச்சிருக்கேன்.” என்றவளை கேள்வியாகப் பார்க்க.
“ஸ்கூல் படிக்கும்போது ஃபேர்வெல்க்கு கிப்ட் வாங்க எங்க டீச்சர் என்னைத் தான் கூட்டிட்டு போனாங்க. அப்ப அவங்க வாங்கி கொடுத்தது தான். எனக்கு அந்த டேஸ்ட் ரொம்ப ரொம்ப பிடிச்சது.”என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தவன்
“ஸ்கூல் படிக்கும் போதா.? அதுக்கப்புறம் காலேஜ் படிச்ச இல்லையா.? அதுக்கப்புறம் கொஞ்ச நாள் வேலை பார்த்து இருக்கே. அப்ப எல்லாம் கூட உனக்கு வேண்டியதை நீ செஞ்சுக்கலயா.?”
இல்லையெனத் தலையசைத்தவள், “அப்படி நானா முடிவெடுத்து எங்கேயும் போகவும் முடியாது. எதையும் வாங்கவும் முடியாது.” என்றாள் மெதுவான குரலில். அவள் கைப் பிடித்து மெதுவாக அழுத்தியவன்.
“இனி அப்படி இல்லை. உனக்கு எங்க போகணும்னாலும் போகலாம்? என்ன வேணும்னாலும் வாங்கலாம்.” என்றான் ஆழ்ந்த குரலில்.
பின் அவள் ஆசைப்பட்ட மில்க் ஷேக்கை ரசித்துக் குடிப்பதை வேடிக்கை பார்த்தவன் அவளைச் சந்தோஷமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என உறுதி எடுத்தவனாக உணவை முடித்துவிட்டு அவளோடு கிளம்பியவன். அறையையும் காலி செய்து மலையிலிருந்து கீழ் இறங்குவதற்கு ஒரு டாக்ஸியை பிடித்து அதில் பயணப்பட்டார்கள் இருவரும். முதலில் கால்கா அங்கிருந்து டெல்லி அங்கிருந்து சென்னையென அவர்களின் ஹனிமூன் பயணம் இனிமையான நினைவுகளுடன் இனிதே முடிவுப்பெற்றது.
ஊரிலிருந்து வந்த மறுநாளே வசுந்தராவை அழைத்துக் கொண்டு அவளின் தாய் வீட்டிற்கு சென்றான் சஞ்சய். அவர்களுக்கென வாங்கிக் வந்திருந்த பரிசு பொருட்களைக் கொடுக்கும் நோக்கத்துடன்.
வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே அங்கிருந்து வாங்கி வந்தவற்றை அனுபமாவிடம் கொடுக்க அனைத்தையும் பார்த்தவர் “ரொம்ப அழகா இருக்கு எல்லாமே.” என்றார் மகிழ்வுடன்.
இவர்கள் வீட்டுக்கு வரும் செய்தியை முன்பே ரகுபதியிடம் கூறியிருக்க. அவரும் இவர்களுக்காகக் காத்திருந்தார். எப்பொழுதும் போல வீட்டில் நடக்கும் செய்தி வசுமதியை சேர்வது போல இன்றும் சேர அவளும் தாய் வீட்டுக்கு வந்திருந்தாள்.
மாலை ஆறு மணிபோல் வந்தவர்களுக்கு ஆர்ப்பாட்டமான வரவேற்பு கிடைத்தது வசுந்தராவின் தந்தையிடமிருந்து. கோகிலா வந்தவர்களை “வாங்க.” என அழைத்துவிட்டு மகளை மட்டுமே ஆராயும் பார்வை பார்த்துக்கொண்டிருந்தார். வசுந்தராவின் முகத்திலிருந்து பூரிப்பையும் மகிழ்ச்சியையும் கண்டு மகள் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்கிறாள் என்பதை தெரிந்து கொண்ட ரகுபதிக்கு மிகுந்த மகிழ்வாக இருந்தது. தங்கையின் முகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட புன்னகையிலேயே அவள் கணவனோடு வாழ ஆரம்பித்து விட்டாள் என்பதை புரிந்து கொண்ட வசுமதி.
“என்னடி கல்யாணம் ஆகிப்போன ரெண்டு வாரத்திலேயே ஒரு சுத்து பெருத்துட்ட. மாமியார் வீட்டு சாப்பாடா.? முகம் எல்லாம் கூட மினு மினுன்னு டால் அடிக்குது.” எனச் சிறிது கேலியும் சிறிது பொறாமையுமாகக் கூறினாள்.
கணவன் முன்பே இப்படி பேசும் தமக்கையை சங்கடமாகப் பார்த்தவள் எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள். அவர்களுக்குச் சிற்றுண்டியும் காபியும் கொடுத்துப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார் ரகுபதி. கோகிலாவும் வந்ததிலிருந்து மகளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவளின் பூரிப்பு அவரின் கண்களுக்கும் தப்பவில்லை. மகள் சந்தோஷமாக வாழ்கிறாள் என்பதில் சிறு நிம்மதியே அவருக்கு.
கணவனின் பக்கத்திலேயே அமர்ந்திருந்தவளுக்கு ஜாடை காட்டி உள்ளே வருமாறு அழைக்க.
“இதோ வந்துடறேன்.” எனக் கணவனிடம் கூறிவிட்டு முன்பு அவள் உபயோகித்த அறைக்குள் சென்றாள் தாயை பின்பற்றி.
உள்ளே சென்றவுடன்,
“எப்படி இருக்க.?”என்று கேட்ட தாயிருக்கு
“நல்லா இருக்கேம்மா.” என்றாள் இவளும்.
“அதுதான் உன்ன பார்த்தாலே தெரியுதே. செம கவனிப்பு போல மாமியார் வீட்டுல.”என்று கேட்ட வசுமதிக்கு இப்போதும் எதுவும் பதில் கூறாமல் அமைதியாக நின்று கொண்டாள் வசந்தரா.
“நான் சொன்னது என்ன ஆச்சு.? ஏதாவது ஏற்பாடு பண்ணியா.?”என்ற அன்னையின் கேள்வியில் அன்று காலைத் தங்கள் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தாள் வசுந்தரா.
காலையில் இருவரும் ஒன்றாகக் காபி அருந்திக் கொண்டிருக்க, ஞாபகம் வந்தவனாக
“கேக்கணும் நினைச்சுக்கிட்டே இருந்தேன். உன்னோட அக்கௌன்ட் டீடைல் சொல்லு.”எனக் கேட்டவன், தன் அலைபேசியையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டான். அவன் கேட்டதை கூறியவள் ‘அவளின் அக்கவுண்ட் டீடைல்ஸ் இப்போது எதற்கு.?’ என நினைத்தபடி பார்த்துக் கொண்டிருக்க. அவளின் வங்கி கணக்கில் இருபதாயிரம் வந்ததற்கான நோட்டிபிகேஷன் காட்டியது. இவ்வளவு பெரிய தொகை எதற்கு என அவள் யோசிக்கும் போதே,
“நான் தான் அனுப்புனேன். உன்னோட செலவுக்கு.” என்றான் சஞ்சய்.
“எனக்கு என்ன செலவு இருக்க போகுது.?”
“எவ்வளவோ இருக்கும். ஒன்னு ஒண்ணுக்கும் நீ என்கிட்ட கேட்டுட்டு இருக்க முடியுமா.? அதனால, அது உனக்குத் தான். உனக்கு என்ன வேணுமோ நீ வாங்கிக்கலாம். நீ ஆசைப்பட்டதை செஞ்சுக்கலாம்.”என்றான் மென் புன்னகையுடன்.
காலையில் தனக்கெனக் கணவன் கொடுத்த பணம் பற்றி இவர்களுக்குத் தெரிந்தால் என்ன சொல்வார்களோ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே இவர்களைத் தேடி வந்திருந்தார் ரகுபதி.
*இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க எல்லாரும்.? அங்க மாப்பிள்ளை மட்டும் தனியா உட்கார்ந்து இருக்காரு.” என்ற ரகுபதியின் கேள்வியில்.
“ஏன் நீங்க அங்க தானே உட்கார்ந்து இருந்தீங்க.” என்றார் கோகிலா சற்று சிடுசிடுப்புடன்.
“நான் அங்க தான் இருந்தேன். நீங்க இங்க என்ன மாநாடு போட்டுட்டு இருக்கீங்க தனியா.?” என்றவரின் சந்தேகமான கேள்வியில்,
“அப்பா, பெண்கள் நாங்க பேசிக்கிறதுக்கு நிறைய விஷயம் இருக்கும். உங்க பொண்ண அப்படி யாரும் இங்க கடிச்சு தின்னுட மாட்டோம். புதுசா கல்யாணம் ஆகி போனவ, புது இடம், அவ மாமியார் வீடு எப்படி இருக்குன்னு பொதுவா தான் பேசிட்டு இருந்தோம். பேசிட்டு நாங்களே வந்துடுவோம் கொஞ்ச நேரத்துல. நீங்கப் போய் மாப்பிள்ளை கூட உட்காருங்கள்.” என்ற வசுமதியின் கூற்றில்
“சீக்கிரம் வாங்க.” என்ற படி வெளியேறிச் சென்றார் ரகுபதி.
தந்தையின் தலை மறையும் வரை அமைதியாக நின்று இருந்த வசுமதி.
“என்ன அம்மா சொல்றது புரியாத மாதிரி நின்னுட்டு இருக்க.? அவங்க என்ன சொல்ல வராங்கன்னு உனக்குப் புரியலையா.? உனக்குக் கல்யாணம் ஆகும்போது சொன்னாங்கல்ல கல்யாணம் ஆகி போனாலும் இந்த வீட்டு செலவை நீயும் கொஞ்சம் பாத்துக்கணும்னு அதுக்கு தான் பணம் ஏதாவது ஏற்பாடு பண்ணியான்னு கேக்குறாங்க.?’ என்றவளை கூர்ந்து பார்த்த வசுந்தராவின் பார்வையை படித்தவள்,
“என்னை மட்டும் கேட்கிறீங்களே, நீ இந்த வீட்டுக்கு, கல்யாணம் பண்ணிக்கிட்டு போய், எவ்வளவு பணம் கொடுத்தங்கிற மாதிரி தானே பாக்குற. நான் உன்னை மாதிரி வசதியான வீட்டுல கல்யாணம் பண்ணிட்டு போகலை. என்னைச் சாதாரண ஒரு வீட்டில் தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க. உன்ன மாதிரி வசதியான வீட்டுல கல்யாணம் பண்ணி கொடுத்து இருந்தா, இப்படி கேக்குற அளவுக்கு நான் வச்சுக்க மாட்டேன். பணத்தை கொண்டு வந்து அம்மா கைல கொட்டி இருப்பேன்.” என்றவளுக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்த வசுந்தராவின் அருகில் வந்த கோகிலா,
“அவ சொல்றது புரிஞ்சுதா.? இதெல்லாம் நம்ம வீடு நம்ம குடும்பம்னு உனக்கா தோனி இருக்கணும். எங்க.”என்று இழுத்தவர் மேலும் அவளை நெருங்கி
“இப்ப ஏதாவது பணம் எடுத்துட்டு வந்து இருக்கியா.? இல்லையா.? என ரகசிய குரலில் கேட்க.
‘என்னை எப்போ இது என் வீடு, என் குடும்பம்னு நினைக்க வச்சிருக்கீங்க.?” என யோசித்தபடி நின்றிருந்தவளை
“உன்ன தான் கேட்கிறேன்.” என்று அவள் கைப்பிடித்து உலுக்கும் போதே உள்ளறைக்கு வந்திருந்தார் ரகுபதி.
“இன்னும் பேசி முடியலையா நீங்க. இதுக்கு மேல என்ன பேசுறதா இருந்தாலும் அப்புறமா பேசுங்க. இப்ப மாப்பிள்ளை கிளம்பிட்டாரு. உன்ன கூப்பிடுறாரு. வா வசந்தரா.” எனக் கையோடு மகளை அழைத்துக் கொண்டு சென்றார்.
‘அப்பாடி.” என நிம்மதி பெருமூச்சு விட்டபடி அவரின் பின்னே சென்றாள் வசுந்தரா.
இவர்கள் வெளியே வரும்போது கிளம்பி செல்வதற்கு தயாராக எழுந்து நின்றிருந்தான் சஞ்சய்.
“சாப்பிட்டு போலாமே மாப்பிள.” என்ற கோகிலாவின் விருந்தோம்பலில்.
“இருக்கட்டும் அத்த.” என்றபடி அவர்களுக்கு வாங்கி வந்திருந்த பரிசுப் பொருட்களை மனைவியின் மூலம் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு அனைவரிடமும் விடை பெற்று சென்றார்கள் இருவரும்.
தாய் வீட்டிற்கு வந்ததற்கு புதிதாக ஒரு பேக் கிடைத்தது என்று சந்தோஷத்தில், அவள் வாங்கி வந்திருந்த பொருளின் தரம் பார்த்தே அவள் எப்படிப்பட்ட செல்வ நிலையில் இருக்கும் வீட்டில் வாழச் சென்று இருக்கிறாள் என்பதை புரிந்தவள், நீண்ட பெருமூச்சை விட்டு. தானும் அவ்வப்போது வேண்டியதை தங்கையிடம் கேட்டுப் பெற வேண்டும். என்ற முடிவுடன் தன் வீட்டை நோக்கிச் சென்றாள் வசுமதி.
தொடரும்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கு.. வசுந்தரா கணவனிடம் எல்லா விஷயமும் மனம் திறந்து சொல்லி விட வேண்டும்.. பல பிரச்சினைகள் தவிர்க்கலாம்..