Loading

நித்யா, அஞ்சனாவை அவளின் அறையில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். அஞ்சனா தன் அறைக்குள் எரிச்சலுடன் நுழைந்தாள். அங்கு ப்ரித்வி கட்டிலில் அவன் கைப்பேசியுடன் உட்கார்ந்திருந்தான். வேகமாக உள்ளே வந்தவள் சொம்பை மேஜை மேல் வைத்து விட்டு அங்கு இருந்த பீம்பேக்கில் உட்கார்ந்தாள். ப்ரித்வி அவளின் எரிச்சலான முகத்தைப் பார்த்து,”இங்க பார் எனக்கும் இந்த சடங்கு சம்பிரதாயத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் பெரியவங்க பேச்சைத் தட்ட முடியலை…”இன்னும் என்ன சொல்லிருப்பானோ!!! அதற்குள் அஞ்சனா அவனைப் பார்த்து,”ஹலோ ஹலோ, ஒரு நிமிஷம். இப்ப நீ எதுக்கு இதலாம் சொல்ற??”

“அதான் உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுதே!! உனக்கு எப்படி இது எரிச்சலா இருக்கோ அதே மாதிரி தான் எனக்கும்.”

“அய்யோ!!! நான் இதைப் பத்திலாம் எதுவும் யோசிக்கலை. நீ லூசு மாதிரி பேசி என் எரிச்சலை ஏத்தாத” மேலும் எரிச்சலுடன் சொன்னாள்.

“என்னது லூசா?? உனக்காக வருத்தப் பட்டேன் பார் என்னை சொல்லனும்.” என்று கூறிவிட்டு ப்ரித்வி அமைதியாகி விட்டான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு,”பின்னே எதுக்கு எரிச்சலா இருந்த?? அத்தை எதுவும் சொன்னாங்களா??” என்று கேட்டான்.

“சை எல்லாம் அவங்களால தான்.” என்று கூறி, சற்று நேரத்துக்கு முன் நடந்ததைக் கூறினாள்.

கீதா பாலில் பாதம், பிஸ்தா, முந்திரி எல்லாம் போட்டுச் சுண்ட காய்ச்சி சொம்பில் ஊற்றினார். அதை எடுத்துக் கொண்டு அஞ்சனாவிடம் சென்றார்.

“இங்க பார் அஞ்சு, உனக்கு நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. இருந்தாலும் அம்மாவா சொல்றது என்னோட கடமை. மாப்பிள்ளையோட மனசு நோகாமா நடந்துக்க.” என்று நாசுக்காகக் கூறிவிட்டு அவளது அலங்காரத்தைச் சரி செய்தார். பின் பால் சொம்பை அவள் கையில் கொடுத்தார்.

“நித்யா நீ அஞ்சுவை அவளோட ரூமுக்கு கூப்பிட்டு போறியாமா??” ஒரு வித தயக்கத்துடன் கேட்டார்.

“சித்தி நீங்க தயங்க வேண்டும். நான் அஞ்சுவ கூப்பிட்டு போறேன்.” என்று கூறினாள்.

சிறிது தூரம் சென்ற அஞ்சு,”அம்மா” என்று அழைத்தாள்.

முதலிரவு அறைக்குச் செல்ல மகள் பயப்படுகிறாள் என்று நினைத்துக் கொண்டு,”என்னடாமா??” என்று பாசமாகக் கேட்க, அவளோ முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு,”அது என்னோட ரூம்ல பழம், ஸ்வீட்ஸ்லாம் வச்சுருக்கீங்களா??” என்று கேட்க, நித்யாவும் கீதாவும் எதுக்கு இதைக் கேட்கிறாள் என்ற யோசனையுடன்,”இருக்குடா. எதுக்கு அதை நீ கேட்குற??”

“ஒரு நிமிஷம் இருங்க வரேன்.” என்று கூறிவிட்டு சொம்பை அங்குள்ள மேஜை மீது வைத்துவிட்டு வெளியே சென்றாள். திரும்பி வரும் போது கையைப் பின்னால் மறைத்து வைத்து,”ம் இப்ப போகலாம். குடு மா.” என்று ஒற்றைக் கையில் சொம்பை வாங்கிக் கொண்டாள்.

“அந்தக் கையில் என்ன வச்சுருக்க??” என்று கீதா கேட்க,

“ப்ச் அது எதுக்கு மா உனக்கு??”

“காட்டு டி.” என்று அவள் கையை இழுக்க, அதிலிருந்த சிப்ஸ் பாக்கெட் கீழே விழுந்தது. அதைப் பார்த்ததும் கீதா அவளைத் தீயாக முறைத்தார். அவளின் தலையில் ஒரு கொட்டு வைத்து,”எனக்குத் தெரியும் டி உன்னைப் பத்தி. இப்போ உனக்கு கல்யாணம் ஆகிருச்சு. இன்னைக்கி என்ன நாள்?? என்னை கடுப்பேத்தாமா ஒழுங்கா போ டி.” என்று கையிலிருந்த சிப்ஸ் பாக்கெட்டை பிடிங்கி அவளை அனுப்பினார். அஞ்சனாவும் அந்த சிப்ஸ் பாக்கெட்டை ஏக்கமாய் பார்த்துக் கொண்டே போனாள். நித்யாவும் சிரித்துக் கொண்டே அவளை அழைத்துக் கொண்டு போனாள்.

இதை எல்லாம் கேட்ட ப்ரித்வி விழுந்து விழுந்து சிரித்தான்.

“ஏய் சிரிக்காத!!”

“சரி சிரிக்கலை. சொல்லு எதுக்கு ஃப்ர்ஸ்ட் நைட்க்கு சிப்ஸ் பாக்கெட் கொண்டு வந்த??”

“இங்க பார் எவ்ளோ ஸ்வீட்ஸ் இருக்கு. எனக்கு ஸ்வீட்ஸோட காரம் சாப்பிடனும். அதான் கொண்டு வரலாம்னு பார்த்தேன். ஆனால் அந்த கீதா கொண்டு வர விடலை. அது மட்டுமில்லாம நித்யா அக்கா முன்னாடி என்னை கொட்டிட்டாங்க. சை!!!” என்று சின்ன குழந்தை போலக் கூற, ப்ரித்விக்கு இப்பொழுது சிரிப்பை நிறுத்த முடியவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments