
அத்தியாயம் – 21
“மித்து கோயிலுக்கு போகும் போது சுத்த பத்தமா போகணும், நாம இதை வந்து வச்சுக்கலாமா?” கணவன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதை கண்டு அவசரமாக கூறினாள் நித்யா….
அவளை விட்டு கொஞ்சமாய் விலகி, அவள் முகம் பார்த்தவன், அவள் வெளியே போக ஆசையாய் இருக்கிறாள் என்பதை அறிந்து, தன் உணர்வுகளை அடக்கி கொண்டு,… “ஓகே நித்து,… நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்” என அவள் நெற்றியில் அழுத்தமாக காதல் முத்திரையை பதித்து விட்டு, முதலில் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள குளியலறைக்குள் நுழைந்தான்,…
கணவனுக்காக ஏற்கனவே அவள் உடை எடுத்து வைத்திருக்க, குளியலறையிலிருந்து வெளி வந்தவன், அவள் நீட்டிய சட்டையை பார்த்து விட்டு,… “இது வேணாம் நித்து” என்றுவிட்டு, வேறொரு சட்டையை கையில் எடுத்தான்,…
அவள் புடவைக்கு மேட்சான நிறத்தில் இருந்தது அந்த சட்டை,… “மேட்சிங் மேட்சிங்” என கண்சிமிட்டி கூறியவன், அதனை அணிந்து கொண்டான்,… தானும் அவள் கணவனும் ஒரே கலர் உடையில் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது அவளுக்கு, என்றோ ஒருநாள் ஒரு புதுமண தம்பதிகளை ஒரே நிற உடையில் கண்ட போது, தனக்கும் திருமணமானாள் இது போல் ஒரு முறையாவது ஒரே நிறத்தில் உடையணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தாள், தற்போது அவளுக்கு அது நியாபகம் வந்தது, முகம் பூரித்து போனது,….
“கிளம்பலாமா நித்து” என்றான் சட்டைக்கு மேட்சாக பேண்ட்டும் அணிந்து, கேசத்தை அழகாக வாரி, கையில் வாட்ச்சுடன் ஆணழகனாக தயாராகி நின்றவன்,…. வழக்கத்தை விட இன்று அதிக ஹேண்ட்சமாக தெரிந்தான் அவள் கண்களிற்க்கு, முழுக்கை சட்டையை அவன் முழங்கை வரைக்கும் மடித்துவிட்டிக்கும் அழகே தனியாக தெரிந்தது, வெளிப்படையாக சைட் அடித்தாள் அவனை,….
“நித்து…. நிஜமா எனக்கு வெட்கமா இருக்கு நீ இப்படியெல்லாம் பார்க்கிறத பார்த்து” அவன் இதழ் விரிந்த புன்னகையுடன் கூற, அவளது இதழிலும் புன்னகை மலர்ந்தது, இன்னும் கொஞ்ச நேரம் நின்றாலும் பிளானை மாற்றி விடுவான் என்று,.. “கிளம்புவோமா” என்று தானே அவனது கரத்துடன் தன் கரம் கோர்த்து அறையை விட்டு வெளியேறினாள்,… பாட்டி தாத்தாதவிடம் இருவரும் சொல்லிவிட்டு புறப்பட தயாராக, தன் பேரன் மற்றும் பேத்தியின் ஜோடி பொறுத்தத்தை கண்டு வாய்பிளந்து நின்றவர்களும், வெளியே யார் கண்ணும் பட்டுவிட கூடாது என்பதற்காக அவர்களுக்கு திருஷ்டி கழித்து தான் அனுப்பி வைத்தார் செவ்வந்தி…
“ஏன் செவ்வந்தி, வெளியே போயிட்டு வீட்டுக்குள்ள வரும் போது தானே திருஷ்டி கழிப்பாங்க” என்ற கணவனிடம்,… “அதுகென்ன, போயிட்டு வந்த பிறகும் நான் திருஷ்டி கழிப்பேன்” என்று திருஷ்டி கழித்த பிறகே சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தார் இருவரையும்….
“எந்த கோயிலுக்கு போலாம் நித்து, ரெகுலராக போற கோயிலுக்கு தானே” என கேட்டான் காரை ஓட்டிக் கொண்டிருந்த ரிஷி,…
“இல்ல,… அங்கே இல்ல, குகை கோயிலுக்கு போங்க” நித்யா கூற,… “குகை கோயிலா? அது எங்கே இருக்கு” என்றான் புரியாதவனாய்,…
“நீங்க போங்க, நான் வழி சொல்றேன், ரொம்ப தூரம் எல்லாம் இல்ல கொஞ்சம் பக்கத்துல தான்” என்றவள், அவனுக்கு வழி கூற தயாரானாள்,…..
“அந்த கோயில்ல அப்படி என்ன ஸ்பெஷல், ஏன் அங்கே போலாம்னு சொல்ற?” ரிஷி சும்மா தெரிந்து கொள்ளும் நோக்கில் கேட்க,… “ஸ்பெஷல்னு எதுவும் இல்ல, சும்மா போகணும்னு தோணுச்சு, கல்யாணத்துக்கு முன்ன தோழிங்களோட அங்கே போவேன் அடிக்கடி, இப்போ உங்க கூட போகணும்னு சின்ன ஆசை” என்றாள்,…
அவள் சொன்ன கோயில் காட்டுப்பகுதி போலிருந்த திசையில் இருந்தது, வழி கூறிக்கொண்டே வந்தவளிடம்,… “ஏன் நித்து இந்த காட்டுப்பகுதில கோயில் இருக்கா என்ன” என ஆச்சரியமாக கேட்டான் அவன்…
“ஆமா மித்து, சக்தி வாய்ந்த அம்மன் கோயில் அது, நாம என்ன வேண்டிக்கிட்டாலும் நடக்கும், அவ்ளோ மகத்துவம் இருக்கு அந்த அம்மனுக்கு” என்றவளிடம் “ஓஹ்” என்பதோடு அவன் நிறுத்திக் கொள்ள,… அவளோ “நிறுத்துங்க நிறுத்துங்க” என வேகமாக நிறுத்த சொன்னாள்,…
“இதுக்கு மேல ரோடு இல்ல நித்து, நிறுத்தி தான் ஆகணும்” என்றவன்,… “எங்கே கோயிலயும் காணோம், சாமியையும் காணோம்” என்றான் சுற்றி ஆராய்ந்தபடியே,…
“கொஞ்ச தூரம் நடந்தா வந்துடும், வாங்க இறங்கலாம்” என்றவள், அவனுடன் இறங்கி நடந்தாள், பெரிய பயங்கரமான காட்டுப்பகுதியெல்லாம் அல்ல அவ்விடம், சுற்றிலும் மரங்கள் படர்திருந்தது, பார்ப்பதற்கு சிறியகாடு போல் காட்சியளித்தது, பறவைகளின் கீச்சிடும் சத்தம், இயற்கையான காற்று என மனதிற்கு இதத்தை அளிக்கும் விதமாக இருந்தது, கணவனுடன் கைகோர்த்தபடி சின்ன சின்ன பேச்சுகளுடன் நடத்தவள் குகை போல் இருந்த அவ்விடத்திற்குள் நுழைந்தாள், அம்மன் சிலை முன்பு நின்று வணங்கினர் இருவரும், அவ்விடத்திற்கு வந்த நித்யாவின் முகத்தில் ஏனோ இன்று ஒரு வித பரவசத்தை பார்க்க முடிந்தது, அதை கவனித்த ரிஷியும் “என்ன நித்து, ரொம்ப உற்சாகமா இருக்க, என்ன மேட்டர்” என்றான்
“அதெல்லாம் எதுவும் இல்ல மித்து, எப்போ இங்க வந்தாலும் இப்படி தான், என்னமோ தெரியல, இந்த கோயில், இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும், இங்க வந்தா மனசுக்கு புத்துணர்ச்சி கிடைச்ச மாதிரி இருக்கும்” என்றவள், “நீங்க எப்படி ஃபீல் பண்ணுறீங்க, உங்களுக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா?” என்றாள் ஆர்வமாய்
சுற்றி இடத்தை ஆராய்ந்துவிட்டு… “ம்ம்… பிடிச்சிருக்கு” என்றவன், அவள் அமர்ந்து கொண்டிருந்த பெரிய கல்லின் அருகில் தானும் அமர்ந்து, அவளுடன் சின்ன சின்ன கதைகள் பேசினான்,….
“கிளம்புவோமா மித்து, இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும், இங்க லைட் எல்லாம் கிடையாது” அவள் கூற,… “சரி வா” என்றவன் அவளது கரத்தை பற்றி அழைத்து சென்ற நேரம் திடீர் சலசலப்பு, யாரோ நடப்பது போல் இருந்தது அந்த சத்தம்,…
“என்ன சத்தம் அது” ரிஷிக்கு மட்டும் கேட்கவில்லை, நித்யாவின் காதிற்கு கேட்டுவிடவே, அவனிடம் வினவினாள்…
அவளுக்கு பதில் கூறாமல் தன் கூர்விழிகளால் சுற்றி ஆராய்ந்தவனின் கழுகு விழிகளில் விழுந்து விட்டது தங்களை சுற்றி மறைந்து நின்ற நபர்கள்…. அவர்கள் தங்களுக்கு தெரியாமல் மறைந்து இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் கெட்ட எண்ணமாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டவன், மனைவியை தான் பார்த்தான், அவன் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் அவள் அவனை ‘என்ன’ என்பது போல் பார்க்க,.. அவளது கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவன்…. “நித்து ஓட ரெடியா இரு” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,…
“என்ன” அவள் புரியாமல் நெற்றி சுருக்க,… “ஓடு” என்றவன், அவளை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான், நித்யாவிற்கு அவன் செயல் எதுவும் புரியவில்லை, அவன் இழுத்த இழுப்பிற்கு ஓடிக் கொண்டிருந்தவள், தங்களது பின்னால் யாரோ ஓடி வரும் சத்தம் கேட்கவே, திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள், ஐந்தாறு பேர் கையில் ஆயுதத்துடன் அவர்களை தான் துரத்திக் கொண்டு வந்தனர், பார்த்ததும் மனம் படபடத்தது, சேலையை ஒரு கையால் பிடித்து தூக்கிக் கொண்டு இந்த முறை பயத்தில் அவனுடன் ஓடினாள்,….
தங்கள் காரை நெருங்கியதும் அவளுக்கு மூச்சு வந்தது போல் இருக்க, அவள் கணவனோ காரையும் தாண்டி ஓடினான், “மி.. மி..த்து” மூச்சு வாங்க அவனை அழைக்க முயன்றாள், முடியவில்லை, அவனோ முகத்தில் இறுக்கம் குடிகொள்ள, முன்னால் தெரியும் வழியில் ஓடிக்கொண்டிருந்தான் தீவிரமாக,…
கொஞ்ச நேரத்திலேயே மெயின் ரோடு வந்து விட்டது, அந்த வழியாக தான் அவர்களும் வந்தார்கள், தெரிந்து தானே அவன் அவளை அழைத்துக் கொண்டு ஓடி வந்தது, சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றை நிறுத்திவிட்டு, மனைவியை ஏற சொன்னவன், அவனும் ஏறுவான் என்று பார்த்தால் ஆட்டோ ஓட்டுனரிடம் தான் யார் என்பதையும், அட்ரஸையும் கூறி அந்த அட்ரஸில் நித்யாவை பத்திரமாக விட்டுவிடும்படி கூறினான்,…..
“நீங்க வரலையா? தயவு செஞ்சு என்கூட வந்துடுங்க” ஓடி வந்ததில் மூச்சு இன்னமும் வாங்க, அவன் கரத்தை பற்றிக் கொண்டு கூறினாள் நித்யா,…..
“நான் வருவேன் நித்து, நீ போ, ஜாக்கிரதை” என்றவன், அவள் சொல்ல சொல்ல கேட்காமல் ஓட்டுனரை வண்டியை எடுக்க சொன்னான், ஆட்டோ புறப்பட்டு விட, நித்யா கண்ணீர் வழிந்தோட அவனை ஆட்டோவிலிருந்து பார்த்துக் கொண்டே சென்றாள்,….
இத்தனை நேரம் இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சோடு ஓடி வந்தவன், மனைவியை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்ட நிம்மதியில் ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டு சாவகாசமாக திரும்பினான், அவனையும் அவன் மனைவியையும் துரத்திக் கொண்டு வந்தவர்கள் அப்போது தான் அவ்விடம் வந்து சேர்ந்தனர் மூச்சு பலமாக வாங்க, அவன் இவ்வளவு நேரம் பயந்து ஓடி வருகிறான் என்ற எண்ணத்தில் அவனை துரத்திக் கொண்டு வந்தவர்கள், தற்போது தங்கள் முன்னே துணிச்சலாக விழிகளில் ஒருவித கொடூரத்துடன் நின்றவனை பார்த்து கொஞ்சம் ஜர்க் ஆக, அவனை நெருங்காமல் அப்படியே நின்று விட்டனர்,…
அவனோ விழிகளில் அனலை தேக்கி அவர்களை முறைத்தவன், அவர்களை நோக்கி காலடி எடுத்து வைக்க, மிரண்ட விழிகளுடன் நின்றவர்கள், அவனது விழிகளில் தெரிந்த ரௌத்திரத்தை கண்டு, வந்த வழியில் ஓடினர், இப்போது துரத்திக் கொண்டு ஓடுவது ரிஷியின் முறையாயிற்று, ஓட ஓட அவர்களை வெளுத்து கட்டினான், தன்னை தாக்க வந்தவர்களை தன் ஆளுமை கொண்டு சுலபமாக தாக்கி வீழ்த்தினான், தன் போலீஸ் டிப்பார்மென்டிற்கு அழைத்து அவர்களை வர சொன்னவன், அந்த ஆறுபேரையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, சிலவற்றை அவர்களிடம் உரைத்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டான்….
இங்கு நித்யா அழுகையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவள், அழுகையை நின்றபாடில்லை, தன் கணவனுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று பூஜை அறையிலேயே விழிகளை மூடி பிராத்தனை செய்தபடி அமர்ந்து விட்டாள், அவள் கண்ணெதிர்க்கவே அவர்களை தாக்க ஆறுபேர் துரத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள், அவர்கள் கையில் ஆயுதம் வேறு, சொல்ல சொல்ல கேட்காமல் தன்னுடன் வராமல் இருந்துவிட்டாரே ஆதங்கத்தோடு சேர்ந்து பயமும் வேதனையும் அவளை ஆட்டி படைக்க, இறைவனின் காலடியில் விழுந்து விட்டாள், பாட்டி தாத்தா கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை, அவர்களை பயமுறுத்த வேண்டாம் என்றே வாயை கம் போட்டது போல் மூடிக் கொண்டாள், ஆனால் அழுகையை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை, ரிஷி இல்லாமல் நித்யா மட்டும் வந்திருப்பது வேறு அந்த மூத்தவர்கள் இருவரின் வயிற்றிலும் புளியை கரைத்தது, தன் பேரனுக்கு எதுவும் ஆகாது என்று உள்ளுணர்வு கூறினாலும் நித்யாவின் அழுகை அவர்களை பயத்தோடு வேதனையையும் அடைய செய்ய, அவளோடு சேர்ந்து அவர்களும் பிராத்தனையில் ஈடுபட்டனர், அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி ஆறுதல் அளித்தனர், ஒன்றரை மணிநேரம் நித்யா அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை,…
கண்டிப்பாக மனைவி பயந்து போயிருப்பாள் என்பதாலேயே ஸ்டேஷனுக்கு கூட செல்லாமல் வீடு வந்து சேர்ந்தான் ரிஷி, ரிஷியை முழுதாக கண்ட பிறகு தான் பிரிந்த உயிர் தன் உடலில் வந்து சேர்ந்ததை போல் உணர்ந்தாள் நித்யா, இடம் பொருள் என எதையும் உணரவில்லை, அவனை கண்ட நொடி ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டவள் வெடித்து அழுதாள், மனைவியின் அழுகை முதலில் அவள் தனக்காக தவிக்கிறாள் என்று சந்தோசத்தை தந்தாலும், கூடிக் கொண்டே போன அழுகையால் மனம் பதற, அவளை சமாதானம் செய்ய ஆரம்பித்திருந்தான், அப்போதும் அவள் அழுகையை நிறுத்தவில்லை, பெரியவர்களிடம் சொல்லிவிட்டு அவளை கையோடு அறைக்கு அழைத்து சென்றான், பெரியவர்களும் தங்கள் பேரனை கண்டுவிட்ட நிம்மதியில், அவன் மனைவியை அவனால் தான் சமாதானம் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் அனுப்பி வைத்தனர், அறைக்கு வந்த பிறகும் அவள் அழுகை நிற்கவில்லை, “ஏய் நித்து, இப்போ நடந்து போச்சுன்னு இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க, நான் என்ன செத்தா போயிட்டேன்” அவனது சொல்லில் அழுகையை கூட்டியவள்,… “தயவு செஞ்சு இப்படியெல்லாம் பேசாதீங்க” என்று அவனை கட்டி அணைத்துக் கொண்டவள்.. “உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சு அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்றாள்,…
“என்ன கார்த்திக், ஏதாச்சும் சொன்னானுங்களா” என்றான் ரிஷி, நேற்று அவனை தாக்க துரத்திக் கொண்டு வந்த ஆறுபேரும் லாக்கப்பில் அவனது முன்னிலையில் பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தனர், அவர்களை பார்வையிட்டவாறே தான் காரத்திக்கிடம் வினவினான் மிடுக்கான தோரணையில்….
“எஸ் சார்,.. அமைச்சர் சந்தன பெருமாளோட ஆளுங்க தான் இவனுங்க ஆறு பேறும், அவர் சொல்லி தான் உங்களை போட்டுதள்ள வந்திருக்கானுங்க, ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கியாச்சு சார்” என்றான் கார்த்திக்,…
“எக்ஸ்பெக்ட் பண்ணேன்” என்று தாடையை தடவி கூறியவன்,… “சரி ஓகே, இவனுங்களை விட்டுடு” என்றான்,…
கொஞ்சம் அதிர்ந்தவன்,… “என்ன சார் விட்டுடுன்னு சொல்லிட்டீங்க, இவனுங்க உங்களையே கொலை பண்ண வந்திருக்காங்க, அவ்வளவு அசால்டா இவங்கள விடுறது நல்லதில்லைன்னு தோணுது சார்” என்றான் கார்த்திக்,…
“அந்த அமைச்சர் சொல்லி தான் இவனுங்க என்னை அட்டாக் பண்ண
வந்திருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு, இனியும் இவங்கள வச்சு நாம என்ன பண்ணுறது, அனுப்பி விடு” என்றவன் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு தனதறை நோக்கி நடந்து விட்டான்,….
சற்று நிமிடத்திற்கு பிறகு,…
“சார் நீங்க சொன்ன மாதிரி அவனுங்களை அனுப்பிட்டேன், ஆனாலும் உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கு சார் அவனுங்களை விட்டிருக்க கூடாதோனு தோணுது” என்றான் ரிஷியின் முன்பு நின்ற கார்த்திக்,…
“ஏன்” ரிஷி கார்த்திகை அளவிட்டபடியே வினவ,… “என்ன சார் ஏன்னு கேட்கிறீங்க, மறுபடியும் அவனுங்க உங்களை அட்டாக் பண்ண மாட்டாங்கனு என்ன நிச்சயம்” என்றான்,…
“என்கிட்ட வாங்கிய உதைக்கு மறுபடியும் என்கிட்ட நெருங்க கூட முயற்சி பண்ண மாட்டாங்க” என்றவன்,… “அமைச்சர்க்கு இருக்க பதவி பலத்துக்கு ஆயிரம் அடியாளுங்களை கூட விலைக்கு வாங்க முடியும், இவனுங்க எங்கிட்ட வாங்கி கட்டிகிட்டதால மறுபடியும் இவனுங்களைகேயே ஏவி விட மாட்டாரு, வேறு ஏதாச்சும் பிளான் பண்ணுவாரு” என்றான்,….
“சார் அப்டினா உங்க உயிருக்கு ஆபத்து, கமிஷனர் கிட்ட சொல்லி உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லலாமா” என்றான் அவன் மீது அதீத அக்கறை இருப்பவன் போல,…
புருவங்கள் உயர அவனை ஏற இறங்க பார்த்தவன்,…. “பாதுகாப்பு எனக்கு தேவை இல்லை, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும், அதையும் விட அதான் நீ இருக்கியே கார்த்தி, எந்த நேரமும் என்கூடவே இருக்க, எனக்கு ஒன்னுன்னா நீ உதவிக்கு வரமாட்டியா?”என்றான் கூரிய விழிகளுடன்…..
“கண்டிப்பா சார், என் உயிரை கொடுத்தாவது நான் உங்களை பாதுகாப்பேன்” அவன் விறைப்பாக நின்று கூற,… “குட், தேங்க்ஸ் கார்த்தி” என்றவனின் பார்வை சில நிமிடங்கள் அவனை தான் அலசி ஆராய்ந்தது….
*********
“எப்படி? எப்படி? எப்படி அவன் தப்பிச்சான், யூஸ்லஸ் ஃபெல்லோஸ், ஒருத்தனை போட முடியாம, அவன் கிட்ட அடி வாங்கி ஸ்டேஷன்ல போய் உட்கார்ந்துட்டு இருக்காணுங்க, இவனுங்கள்லாம் ஒரு ஆளுன்னு இறக்கி விட்டிருக்க” தன் முன்னே நின்ற காரியதரசனை வசை பாடி கொண்டிருந்தார் சந்தனபெருமாள்,…
“எனக்கும் புரியல சார், பெரிய பெரிய வேலைகளை எல்லாம் அசால்டா செய்ற ஆளுங்க தான், இப்போ என்னாச்சுன்னு தெரியல, அடி வாங்கிட்டு வந்திருக்கானுங்க, டென்ஷன் ஆகாதீங்க சார், வெளியூர்ல இருந்து ஆளுங்களை வர சொல்லிருக்கு, கண்டிப்பா அந்த போலீஸ்காரனை இந்த வாரத்துக்குள்ளேயே முடிச்சிடலாம்” என்றான் அவரின் காரியதரசன்,….
“சும்மா பேசாத, செயல்ல காட்டு, என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது, அந்த ரிஷி மித்ரன், அவன் எனக்கு உயிரோட வேணும், அவனை நானே என் கையால துடிக்க துடிக்க கொல்லணும், என் பையன் அனுபவிச்சதை விட ஆயிரம் மடங்கு சித்ரவதை பட்டு அவன் சாகனும்” என்றார் முகத்தில் தெரிந்த அளவுக்கதிகமான வன்மத்தோடு,…
**************
“மித்து அவங்க யார்னு தெரிஞ்சதா? எதுக்காக நம்மள தாக்க வந்தாங்களாம்” என்றாள் நித்யா, நேற்று நடந்த சம்பவத்தால் கதிகலங்கி போயிருந்தவள் கணவனின் அக்கறையான வார்த்தையிலும் அரவணைப்பிலும் சமாதானமாகி உறங்கி போனாள், காலையில் எழுந்ததும் பயம் கொஞ்சம் விட்டு போயிருக்க, இப்போது கேட்ட கேள்வியை அப்போதும் கேட்டாள், அவனோ “தெரியல நித்து ஸ்டேஷன் போனா தான் தெரியும், நான் பார்த்துகிறேன், நீ அதை பத்தி யோசிக்காம இரு” என கூறிவிட்டு சென்றிருந்தான்,..
இப்போது கணவன் வேலை முடிந்து வரவும், அவள் முதல் முதலாக அந்த கேள்வியை தான் முன் வைத்தாள், ஏதாவது பெரிய பிரட்சனையாக இருக்க கூடுமோ என்று அவள் மனம் படபடத்துக் கொண்டே இருந்தது, அவன் வாய் மொழியாக பெரிய பிரட்சனை எதுவும் இல்லை என்று கூறினால் தான் அவள் மனம் அமைதிபடும் எனும் நிலையில் இருந்தவள் அவனிடம் அதை பற்றி மீண்டும் வினவினாள்,…
“உன்கிட்ட மார்னிங்கே நான் சொல்லிட்டு போனதா நியாபகம் நித்து, நேத்து நடந்ததை பத்தி எதுவும் யோசிக்க கூடாதுனு” என்றான் கண்டிப்பான பார்வையில்,….
“இல்ல அது,… என்னால முடியல மித்து, நேத்து நடந்ததை மறக்க முடியல, தயவு செஞ்சு சொல்லுங்களேன், பிரட்சனை எல்லாம் எதுவும் இல்லையே, யார் அவங்க, ஏன் நம்மள துரத்திட்டு வந்தாங்க” என்றாள் அப்பாவியாய்,…
அவளருகில் வந்து அவளது இரு தோள்களையும் பற்றியவன்,… “நித்து நேத்து நைட்டே சொன்னேன், எனக்கு பல பிரட்சனைகள் இருக்க தான் செய்யும், என் வேலை அப்படி, நீ அதை பத்தி யோசிக்க வேணாம், ம்ம்” அவன் பொறுமையாக கூற,… “அப்படினா போலீஸா இருக்குறவங்களோட உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாதுன்னு சொல்றீங்களா?” என்றாள் உதடுகள் துடிக்க….
“நான் எப்போ அப்படி சொன்னேன், சரி நீ ஏன் இப்போ அழறதுக்கு ரெடியாகுற, எப்போ பார்த்தாலும் அழுமூஞ்சியாவே இருக்காதே நித்து, ஏற்கனவே நைட் என்னை பட்டினி போட்டுட்ட, அவசர அவசரமா என் பொண்டாட்டி கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு கிளம்பி வந்தா, நீ ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க, டூ பேட்” அவன் முகத்தை சுழித்து கூற,… அவன் சொல்லின் பாவனையில் மற்றதை மறந்து, கொஞ்சம் வெட்கம் கலந்த பார்வை பார்த்தவள், அவனது மார்பில் சாய்ந்து கொண்டு,… “மித்து” என்றாள் முணங்களாக…
அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்பது அறிந்தவன்,… “என்ன நித்து, எனகிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?” என்றான் சிலவற்றை எதிர்பார்த்து,…
“ம்ம்” அவள் முணங்க,… “என்ன” என்றான் ஆவலோடு,…
“அது” அவள் இழுக்க,… “நித்து ப்ளீஸ் ரொம்ப இழுக்காம சொல்லிடேன்” என்றான்,… “ம்ம்” என்றவள்,.. “அது வந்து நான்” அவள் ஆர்வமாக ஏதோ சொல்ல வந்த நேரம் சரியாக அவனது போல் அலறியது,…
“ப்ச்… அது கிடக்கு நீ சொல்லு” அவன் அவளை ஊக்க,.. போன் கத்திக் கொண்டே இருந்த காரணத்தினால் அவளால் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போயிற்று, அதனால் “நீங்க போன்ல யார்னு பாருங்க, ஏதாச்சும் முக்கியமான காலா இருக்க போகுது” என்றாள்…
“உன்னை விட எனக்கு வேறு எதுவும் முக்கியம் இல்ல, நீ சொல்லு” அவன் ஆழ்ந்த பார்வையுடன் கூற,… முதல் முறை அவனை காதலாக பார்த்தவள்,…. “இந்த போன் எனக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கு, ப்ளீஸ் நீங்க முதல்ல அது யாருன்னு பார்த்துட்டு வந்துடுங்களேன்” என்றாள்,…
அவள் விழிகளில் தெரிந்த அந்த பார்வை அவனை மயக்க முயல, தலையை சிலுப்பிக் கொண்டு, தன்னை சமன்படுத்திக் கொண்டவன், போனை ஏற்று காதிற்கு கொடுத்தான்,… அந்த பக்கம் உள்ளவர்கள் என்ன கூறினார்களோ அவன் முகத்தில் ஒரு வித மாற்றம், அது எதனால் வந்த மாற்றம் என்ன வகையான மாற்றம் அவனை கண்காணித்து கொண்டிருந்த அவளால் கணிக்க முடியவில்லை,…
சில நிமிடத்தில் பேசிமுடித்து விட்டு போனை வைத்தவன், மனைவியை நோக்கி,… “நித்து ஒரு குட்நியூஸ்” என்றான்,…
அவள் என்ன என்பது போல் பார்க்க,.. “கருணாக்கு இந்த வீக்லயே சர்ஜரி, சர்ஜரி முடிந்த சில நாட்கள்லயே அவன் முழுசா கியூர் ஆகிடுவான்னு டாக்ர் கேரண்டி கொடுத்துட்டாரு, எண்ணி இன்னும் சில நாட்களிலேயே கருணா கண்முழிச்சிடுவான், ஓரிரு நாட்கள் ரெஸ்ட்ல இருந்தா போதும், அப்புறம் சகஜமா அவன் நடமாட ஆரம்பிச்சுடலாம்னு டாக்டர் சொன்னாரு” அவன் கூற, அவளால் அதை எண்ணி சந்தோசம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை,… “நிஜமாவா மித்து” என்றாள் முக முழுக்க சந்தோசமாய்,…
அவள் முகத்தில் தெரிந்த சிரிப்பையும் சந்தோஷத்தையும் அவனால் ரசிக்க முடியவில்லை, உள்ளுக்குள் ஒருமாதிரி வலித்தது அவள் கருணாவிற்காக சந்தோஷப்படுவதை கண்டு, அவள் கேட்டதற்கு “ம்ம்” என்ற முணங்களோடு நிறுத்திக் கொண்டவன்,… “நான் ஃபிரஷ்அப் ஆகிட்டு வரேன்” என உள் அறைக்குள் நுழைந்து கொண்டான்,…
தன் சந்தோசத்தினால் ரிஷியின் முகம் மாறிவிட்டதை அவளும் கண்டுகொண்டாள், அவர் முன்னிலையில் சந்தோசப்பட்டிருக்க கூடாதோ என்று கூட வருந்தினாள், ஆனால் கருணா குணமாகி சீக்கிரமே எழுந்து வர போகிறான் என்ற செய்தியை கேட்டதும் அவளால் சந்தோசம் கொள்ளாமல் இருக்க முடியவில்லையே! அவள் என்றோ முடிவு செய்து விட்டாள் தன் வாழ்க்கை தன் கணவனோடு தான் என்று, கருணா வந்த பிறகு அவனுக்கு தன் நிலையை புரிய வைத்து, அவனுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்தால் தான் அவள் மனம் நிம்மதி கொள்ளும், அவளும் முழு மனதோடு கணவனுடன் சந்தோசமாக வாழ முடியும்,…
அவள் இப்படி ஒரு சிந்தனையில் இருக்க, அதை அறியாத அவள் கணவனோ, கருணாவினால் அவளுக்குள் உண்டான சந்தோசத்தை கண்டு முகம் இறுகி போய் நின்றான், ஷவரிலிருந்து விழுந்த குளிர்ந்த நீரில் நின்ற போதும் மனதும் சரி உடலும் சரி கொஞ்சமும் குளிர்ந்து போகவில்லை, ஒரு மாதிரி அனலாய் எரிவது போலிருந்தது, தன் மனைவியை அவன் விட்டுகொடுக்க விரும்பவில்லை, அவளுக்கு வாக்கு கொடுத்ததை எண்ணி அவசரப்பட்டுவிட்டோமோ என்று கூட தோன்றியது, நேற்று அவள் தனக்காக தவித்த தவிப்பு கண்முன் தோன்றி மறைந்தது,..
‘உங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்’ என்று அவள் கூறிய வார்த்தைகள் அவன் உயிரின் ஆழம் வரை சென்று தித்தித்தது, இரவு சந்தோசத்தில் தூக்கம் கூட வரவில்லை, விடிய விடிய தூங்கும் மனைவியை தான் அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான், தற்போது கருணாவின் செய்தி வரவும் எவ்வளவு முயன்றும் மனம் அமைதி படவில்லை, அதே சமயம் சட்டென்று மூளை வேறொன்றை பற்றியும் யோசிக்க,.. ‘அவள் முடிவு அவள் கையில், தான் கண்டிப்பாக தலையிட கூடாது’ என மனதை வலுக்காட்டயமாய் சமாதானபடுத்திக் கொண்டவன், குளியலறையிலிருந்தது வெளிவந்தான்,…

