Loading

பூவிலாங்குடியிலுள்ள ஆண், பெண், பெரியவர், சிறியவர், குழந்தைகள் முதற்கொண்டு அனைவரும் அங்கே கூடி இருந்தனர். நின்றிருந்த அனைவரும் தங்களுக்குள் பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட….. இவை அனைத்தும் காதில் விழுந்தாலும் விழாதது போல… அமர்ந்திருந்தார் பரசுராமன். 
 
பரசுராமருக்கு நேராக… கட்டபொம்மனும், சுகுமாரனும் முகங்களில் ஆங்காங்கே சிறு சிறு காயங்களுடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிடுருந்தனர். பொழுது புலர ஆரம்பித்ததும்… இரவு நடந்த சம்பவத்தை அப்படியே ஊர் மக்களுக்கு தெரிவித்து ஊரையே ஒன்று கூட்டி இருந்தனர் மகியும் தூரனும். முதலில் நம்ப மறுத்த ஊர்மக்கள்… மரத்தில் கட்டி வைத்திருக்கும் இருவரையும் பார்த்து உண்மையெது பொய்யெது என தெரியாத மனநிலையில் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க… அன்று தாவணியில் பதமாக நிலத்தை பார்த்து நடந்த மங்கையா இவள் என நம்ப மறுக்கும் அளவிற்கு
.. நேற்றிரவு இருந்த அதே வெள்ளை உடையில் சில ரத்தக் கறைகளை சுமந்துகொண்டு, நடையில் தன்னம்பிக்கையை கூட்டி, மிடுக்காக ஊர் மக்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்  ஆரதி. அவளுக்குப் பின்னாலேயே சில பத்திரிகை நபர்களும் கூடி இருக்க… அந்த இடமே கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பிற்கு ஆளாகி கொண்டிருந்தது. 
 
நேராக பரசுராம் முன் நின்று. “என்னோட பெயர் ஆரதி. நிழல் கரம் பத்திரிகையில நிருபரா வேலை பாத்துட்டு இருக்கேன். இதோ இங்க நிற்கிறாளே கயல்விழி… அவ மூலமா இந்த ஊரைப் பத்தின செய்தி என் காதுக்கு எட்டுச்சி. அதை விசாரிக்க தான் இந்த ஊருகுள்ள முத்துவேல் அப்பா உதவியோடு வந்தேன். நான் வந்த வேலையும் ரொம்ப சீக்கிரமாவே முடிஞ்சுது. இவனுங்க ரெண்டு பேர் தான் இந்த ஊர்ல இத்தன வருஷமா நடந்த கொலைகளுக்கு காரணம். இத இந்த ஊருக்கே தெரியப்படுத்த தான் இப்படி மரத்துல கட்டி வைச்சிருக்கேன். போலீஸுக்கு தகவல் சொல்லியாச்சு. ஆனா அதுக்கு முன்னாடி… இந்த ஊர்ல இருக்க அத்தனை பேருக்கும் உண்மை என்ன’ன்னு தெரியனும். இல்லைன்னா  திரும்பவும் ஒரு கதையை சொல்லி… உங்களை நீங்களே ஏமாத்திக்கிட்டு வாழ்விங்க……” என்ற ஆரதி பேசிக்கொண்டே நேராக‌ இருவரிடமும் சென்று.  “சொல்லுங்க இத்தனை கொலைகளை நீங்க பண்ண என்ன காரணம்?” என கேள்வியை முன்வைக்க… இருவரிடமும் அமைதி மட்டுமே பதிலாக வந்தது. 
 
“அக்கா இவனுங்க கிட்ட எதுக்கு கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. நம்ம கிட்ட தான் ஆதாரம் இருக்குல நேரா… போலீஸ் கிட்ட ஒப்படைக்கலாம். இந்த ஆதாரமே போதும் இவங்களுக்கு தண்டனை வாங்கி தர…” என ஆவேசமாக பேசிய தூரனுக்கு, “நம்மகிட்ட இருக்க ஆதாரம் கண்டிப்பா போதும் தூரன். ஆனா அதுக்கு பின்னாடி இருக்க காரணம் தெரிய வேணாமா? போலீஸ் கிட்ட ஒப்படைச்சா நிச்சயம் இவங்க பதில் சொல்லு வாங்க. ஆனா அதுக்கு முன்னாடி இந்த ஊரே தெரிஞ்சுக்கணும். கூடவே இன்னொரு ஆளை பத்தியும் தெரிஞ்சுக்கனும். இப்ப என்ன கெட்டு போச்சு…. இவனுங்க ரெண்டு பேரும் வாய திறக்காம இருந்தா உண்மை என்னன்னு தெரியாதா………!” என ஒவ்வொரு அடியாக கால்களை எடுத்து வைத்து நேராக பரசுராமிடம் நின்ற ஆரதி, 
 
 
 
“சொல்லுங்க பஞ்சாயத்து தலைவரே பரசுராம்… இவனுங்க ரெண்டு பேரும் இந்த கொலைகளை பண்ண காரணம் என்ன? ..என்றதும் ஆரதியைத் தவிர அங்கிருந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிர்ச்சியோ அதிர்ச்சி.மற்ற மூவருக்குமே ஆரதியின் இந்தக் கேள்வி பெரும் அதிர்ச்சி தான்.”
 
பயத்தில் ஏற்கனவே வேர்த்திருந்த  முகம் இப்பொழுது மேலும் வேர்க்க….
 
“நா..நான் எ..என்ன பண்ண..?
..  இந்த இரண்டு பேருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதுக்காக என்கிட்ட கேக்குறீங்க?  நான் இதுல சம்பந்தப்பட்டு இருக்கன்னு எதை வச்சி சொல்ற. ஆதாரம் உங்ககிட்ட இருக்கா? என்றவர் திரும்பி ஊர் மக்களைப் பார்த்து… என்னய்யா எல்லாரும் பார்த்துகிட்டு இருக்கிங்க. இந்த பொண்ணு என்னென்னமோ சொல்லுது. ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா? நான் அப்படிப்பட்ட ஆளா…. இந்த ஊருக்காக நான் எவ்வளவு பண்ணியிருப்ப…. யாரோ ஒருத்தி வந்து இப்படி பேசிக்கிட்டு இருக்கா நீங்களும் சும்மா இருக்கீங்க”
….. என்றதும் ,  கேள்வி கேட்ட ஆரதியை சிலபேர் வார்த்தைகளால் தாக்க, பரசுராமரின் சொந்தங்களோ சண்டையிட, பரசுராம்  எதுவும் பேசாமல் அமைதி காத்தார். 
 
தூரனுக்கும் மகிக்கும் இது புதியதாகவே… இருந்தாலும் ஆரதி சொன்ன விஷயங்களை முழுதாக நம்பி… ஊர் மக்களை அடக்கும் வழியில் ஈடுபட்டிருந்தனர். 
 
சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருந்த கூட்டத்தின் சத்தம் பட்டென நின்றது…… முத்துவேல் பரசுராமனை அடித்த அடியில். 
 
“அந்தப் பொண்ணு காரணம் என்ன என்று தானே கேட்டுச்சு. நீ ஏன் இதெல்லாம் பண்ணனு கேட்டுச்சா. அதுக்குள்ள என்னென்னமோ பேச ஆரம்பிக்கிற. இதிலிருந்து தெரியல நீ அவனுங்க ரெண்டு பேரோட கூட்டாளி’னு. சொல்லுடா என் பிள்ளையே எதுக்கு கொன்ன. என் மக உனக்கு என்ன பாவம் பண்ணினா. இவனுங்க ரெண்டு பேராது பரவால்ல வெளியூர்க்காரங்க. நீ  ஊரையே காவல் காக்குறதா  சொல்லிட்டு இந்த ஊரிலேயே ஒவ்வொரு உயிரா பலிகொடுத்து இருக்கியே மனுசனா நீயேல்லாம். இந்த பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு…. இவ்வளவு தைரியமா இத்தனை பேருக்கு முன்னாடி உன்பேரை சொல்லுதுன்னா நீ இதுல கண்டிப்பா சம்பந்தப்பட்டு இருக்க. சொல்லுலுலுலூலூ…. என் பொண்ண எதுக்காக கொன்ன…?  ஏன்டா கொன்ன…?  என் பொண்ணு உனக்கு என்ன பாவம் பண்ணினா??????” என்று வெறிகொண்டு பரசுராமனை மாற்றி மாற்றி இரு கன்னத்திலும் அறைய அங்கிருந்த அனைவரும்… அமைதியாக பார்த்திருந்தனர்.
 
“அப்பா நிறுத்துங்க! நீங்க எவ்வளவு கேட்டாலும் இவர் வாயிலிருந்து பதில் வராது. தன்னோட  மகளையே கொன்ன யோக்கியர் இவரு. உங்க வார்த்தை அவர் காதுல நிச்சயம் விழாது. என்ன கேட்டீங்க பரசுராம்! நான் என்ன தப்பு பண்ணேன்னா…. அதற்கான ஆதாரம் இருக்கான்னு தான கேட்டீங்க? இதோ இந்த ஆதாரம் போதுமானு பாருங்க…”
 
 
 
6 நாட்களுக்கு முன்பு……..
 
 
ஹா ஹா ஹா ஹா ஹா…… ஹய்யோ முடியல… ஹா ஹா ஹா ஹி ஹி ஹி……………….
இவனுங்க வந்தது நம்ம இத்தனை நாள் கஸ்டப்பட்டு கட்டிய கோட்டையை கலைக்கன்னு  தப்பா  நெனச்சிட்டேன் டா. ஆனா இப்போ தான் தெரியுது நம்ம கோட்டைக்கு இனி பலத்த பாதுகாப்பு தர தான் இந்த பைத்தியக்காரனுங்க வந்தாங்கன்னு. அது எப்படிடா இவனுங்க இவ்வளவு பயந்தாங்கோலியா இருந்துட்டு உண்மையை கண்டுபிடிக்கிறன்னு தைரியமா பேசினாங்க. ஆனாலும் இவனுங்க சரியான பைத்தியக்காரனுங்க தாண்டா. நம்ம ரெண்டு பேர் இருந்தும் அடிச்சது ஒரு ஆளுன்னு நம்பிக்கிட்டு இருக்கானுங்க. இதுக்கு தான் சின்ன பசங்கள நம்பி களத்துல இறங்க கூடாதுன்னு சொல்றது. இப்ப நினைச்சாலும் ஒரே சிரிப்பா வருது டா எனக்கு. நான் என்னமோ இவனுங்க ரெண்டு பேரையும் தீர்த்துக்கட்ற அளவுக்கு யோசிச்சு வெச்சா ..எனக்கு வேலை வைக்காம இவனுங்களை அலறியடிச்சிட்டு ஓடுறாஙகளே. இதுல அந்த கயல்விழி பைத்தியம் வேற… இந்த ரெண்டு பயந்தாங்கோலிய வைத்துட்டு ஊர் ஊரா விசாரணை பண்ண போறாங்க. ஐய்யோ ஐய்யோ நான் என்னமோ ஏதோன்னு நினைச்சி பல நாள் தூங்காம இருந்துட்டேன். அது அந்த செந்தூரன் இருக்கானே வந்த வேகத்திலேயே ஊர விட்டு ஓடிட்டா… ஹா ஹா ஹா…. ஹய்யோ முடியல.
 
அன்றொரு நாள்…. இனி எந்தப் பிரச்சனையும் இல்லை என இருவரும் ஆனந்தமாக பேசிக்கொண்டிருக்க…..
 
 
“ரெண்டு பேரும் என்ன…. சந்தோஷமா பேசிட்டு இருக்கீங்க…” என்றபடி பரசுராம் அங்கே வர….. வாங்க வாங்க உங்கள தான் ரெண்டு பேருமே எதிர்பார்த்து இருந்தோம். அந்த இடத்துக்கு வேலி எல்லாம் சரியா போட்டீங்களா. யாருக்கும் எந்த சந்தேகமும் வரலையே!.”
 
“என்னை எதிர்த்து கேள்வி கேட்க அந்த ஊர்ல எவனுக்கு தைரியம் இருக்கு கட்டபொம்மன். அப்படிக் கேட்டிருந்தா…. நம்ம இன்னைக்கு இப்படி சந்தோசமா இருக்க முடியுமா? முட்டாப் பசங்க நான் என்ன சொன்னாலும் அப்படியே நம்புறாங்க. இதே நம்பிக்கையை என் பொண்டாட்டியும், பொண்ணும் வச்சிருந்தா பாவம்  நம்ம கையால செத்திருக்க மாட்டாங்களே…” 
 
“அது என்னவோ உண்மைதான்…. உன் பொண்ணு தான் உன்னோட நடத்தையில சந்தேகப்பட்டு எதையோ கண்டுபிடிக்கிறேன்னு வந்து… தேவை இல்லாம நம்ம பலி கொடுக்கிற லிஸ்ட்ல வந்துட்டா. சரி அதோட போய்டும்னு நெனச்சா… உன் பொண்டாட்டியோட கெட்ட நேரம்… நம்ம மூணு பேரும் பேசுறத கேட்டுடாங்க. வேற வழியே இல்லாம அவங்களையும் கொல்ல வேண்டியதா போச்சு…” என்று சுகுமாறன் பேசி முடிக்க, 
 
“ஆனாலும், பரசுராம் நீங்க செம கில்லாடி. நீங்க கொன்னுட்டு… என்னமோ அவங்களே தற்கொலை பண்ணிக்கிட்ட மாதிரி வீட்டில இருந்த அத்தனை சொந்தக்காரங்களையும்  நம்ப வைச்சிட்டிங்களே. அந்த அறிவில்லாத பைத்தியங்களும் இவரு சொல்றதை நம்பி அப்படியே… நான் வந்து விசாரிக்கும் பொழுது என்னமோ நேருல பார்த்த மாதிரி சொல்லுதுங்க. ” கட்டபொம்மன்.
 
“ஹா!  ஹா !  ஹா…!  நீ சொல்றது சரி தான் கட்டபொம்மன். இந்த கேஸ்ச  நீ விசாரிக்க வருவன்னு எதிர்பார்க்கவே இல்லை. திடீர்னு வந்ததும் ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது எல்லாமே அந்த வெளியூர்க்கார பையன் பண்ண வேலைன்னு. ஆனாலும் தப்பு பண்ற உன் கிட்டயே வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தான் பாரு முட்டாப்பையன்..” பரசுராம்.
 
“நானே எதிர்பார்க்கல முதல்ல. திடீர்னு இந்த கொலையை விசாரிக்க சொல்லி போன் வந்ததும் ஆடிப்போயிட்டேன். இதை இப்படியே விட்டா வேறு யார் காதுலயாது போய்ட போகுதுன்னு தான் நானே வர வேண்டியதா போச்சு. அப்படியே ஒரு நேர்மையான அதிகாரி மாதிரி ஊருக்குள்ள வந்து வசனம் பேசும்போது எனக்கு ஒரே சிரிப்பு தான். என்ன பண்ண நடிக்க வேண்டிய இடத்துல நம்ம இருக்கோம். நம்ப வேண்டிய இடத்துல இந்த ஊர் முட்டாளுங்க இருக்காங்க. சரி உங்களை கூட்டிட்டு போயிட்டு தேவிகா இறந்த இடத்தை பார்த்துட்டு வரலாம்னு ப்ளான் பண்ணினா… திடீர்னு அந்த மகேஷ் வரன்னு சொல்றான். அதுக்கும் நல்லவன் மாதிரி தலையை ஆட்டிகிட்டு தேவிகா இறந்த இடத்திற்கு போனா நீங்க ரெண்டு பேரும் எனக்கு முன்னாடி போய் நிக்கிறீங்க. அதுவும் உங்க வாயை பொத்தியபடி வேற சுகுமாறன் நின்னுட்டு இருந்தான். எனக்கு….. அன்னைக்கு செம கோபம் உங்க மேல. அவனுக ரெண்டு பேரும் பார்த்திருந்தா என்ன ஆகுறதுன்னு. நல்லவேளையா நீங்க அவனுங்க கண்ணுல சிக்கல. அப்பாடா தப்பிச்சோம் ன்னு போனா அங்க உன் பொண்ணோட வளையலை கண்டுபிடிச்சுட்டானுங்க. அவனுங்களோட பெரிய இம்சையாக போச்சு அன்னைக்கு எனக்கு.
 
ஒருபக்கம் எனக்கு பின்னாடி நீங்க இருக்கீங்க… இன்னொரு பக்கம் இவனுங்க ஒரு ஆதாரத்தை கண்டுபிடித்து நிக்கிறாங்க. அதான் அன்னைக்கு இருந்த கோபத்துக்கு நேரா உங்க ரெண்டு பேரையும் பாக்கலாம்னு உன் வீட்டுக்கு வந்தேன். பைத்தியக்கார வேஷம் போட்டுட்டு இருக்கானே நடிகர் திலகம்  இவனையும் வர சொல்லி இருந்தேன். ஆனா அங்க வந்ததும் இன்னொரு அதிர்ச்சி… தேவையே இல்லாம நம்ம மூணு பேரும் பேசுறதையும் உங்க பொண்டாட்டி கேட்டு நம்ம அடிச்சி கொன்னு… அதை வீட்டில இருக்க அத்தனை பேரையும் நம்ப வச்சு…. நானும் அங்கிருந்து தப்பிச்சி…. ஒண்ணுமே தெரியாத மாதிரி திரும்ப வந்து…. சொந்தக்காரங்க எல்லாரும் மகேஷ் கிட்ட சண்டை போட்டு… அதை நான் பார்த்து சிரிச்சி…. மயக்கத்துல இருக்க மாதிரி ரூம் குள்ள வந்த உன்ன பார்த்து… அன்னைக்குலாம் படாதபாடு சாமி .
 
நல்லவேளையா நான் போலீசா இருந்ததால… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மாத்தி வாங்க முடிஞ்சது. இல்லன்னா அந்த போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டே போதும் நம்மை மாட்டிக்க. இத்தோட பிரச்சினை முடிஞ்சதுன்னு பாத்தா… அந்த கயல்விழி திடீர்னு வந்து நிற்கிறா. வந்ததும் இல்லாம அந்த ரெண்டு பொடி பசங்க கிட்ட விஷயத்தை சொல்லி… சுகுமாறன் வரைக்கும் வந்துட்டா. இதுல பெரிய காமெடி என்ன தெரியுமா… கயல்விழி பேசின ஆடியோவை அப்படியே எடுத்து வந்து என்கிட்ட தரான்..அந்த செந்தூரன்.” என்ற கட்டபொம்மனின் பேச்சுக்கு…..
 
” ஹ்ம்!  நானும் நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கிறத பார்த்தேன் கட்டபொம்மன். அந்த கயல்விழியை சும்மாவே விட்டிருக்கக்கூடாது. அன்னைக்கு அந்த ராத்திரியில அவளை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டதுக்கு பதிலா… ஆதி கூடவே சேர்த்து கொன்னு இருக்கணும். சரி குமரேசன் பொண்ணா போனதால… மனசுல ஒரு இரக்கம் காட்டி அங்க இருந்து அனுப்பி வைச்சா…. நமக்கே பெரிய ஆபத்தா வந்துட்டா. ஆனா இப்ப வரைக்கும் என் மேல ஒரு சந்தேகம் கூட கயல்விழிக்கு வரல அதான் ஆச்சரியம். இல்லனா ஆதி இறந்த அன்னைக்கு நான் எதுக்கு அங்க வந்தேன்னு…. முதல் ஆளா என்ன பிடிச்சு விசாரிச்சி இருப்பா…” என பரசுராம் பதிலளித்தார்.
 
“நானும் அன்னைக்கு அந்த கயல்விழி வந்து நிற்பான்னு எதிர்பார்க்கல. ஆதி விஷயத்தில்தான் நான் பெரிய தப்பு பண்ணிட்டதா இப்ப வரைக்கும் வருத்தப்படுறேன். ஆரம்பத்துல உண்மையாத்தான் காதலிச்சேன். அவ என்னமோ உலக அழகி மாதிரி என்ன வேண்டாம்னு சொல்லிட்டா. அந்தக் கோபம்தான் வெறியா மாறிடுச்சு. அதனாலதான் இந்த பலி கொடுக்கிற …. ஆட்டத்துல அவளை சேர்க்க வேண்டியதா போயிடுச்சு. ஒழுங்கா என்னை அப்பவே காதலிச்சு இருந்தா… இதோ இங்க நிற்கிறானே கட்டபொம்மன் இவன் கையால அன்னைக்கு அநியாயமா செத்திருக்க மாட்டா. அவ விதி கட்டபொம்மன் கையாள போயிடுச்சு….” சுகுமாறன்.
 
ஆமா சுகுமாறன்… ஆனாலும் ஆதி கூட புத்திசாலிதான். ஒரே ஒரு தடவைதான் உன்ன என் கூட கடை வீதியில பார்த்திருக்கா.. 
அன்னைக்கு சாகும்போது கரெக்ட்டா நீ அந்த கடையில பார்த்த பையன் தான’ ன்னு  கேட்டா. புத்திசாலியா இருந்து என்ன பண்ண . அநியாயமா செத்துப் போயிட்டாளே…” கட்டபொம்மன்.
 
“சரி நடந்தது நடந்துடுச்சி. நமக்கு தொல்லையா வந்தவங்க பாதிலேயே போயிட்டாங்க. இனிமே நடக்க வேண்டியதை பாருங்க. எப்பவுமே நம்ம கொல்ற பொண்ணுங்கள கரெக்ட்டா 30வது நாள்தான் எரிப்போம். என் பொண்ணும் இறந்து … கிட்டத்தட்ட 30 நாள் ஆகப்போகுது. சீக்கிரமா அதற்கான வேலையை பாருங்க. இன்னும் மூணு பொண்ணுங்க தான்… அவங்களையும் முடிச்சுட்டு. சொன்ன மாதிரி… அந்த புதையலை எடுக்கணும்.” என்றதோடு அந்த ஒளிப்பதிவு நிறுத்தப்பட்டது.
 
இதைக் கேட்டு இருந்த ஊர் மக்களில் சிலர் பரசுராமை அடிக்க வர…. அவர்களை தடுத்து நிறுத்திய ஆரதி ஆக்ரோஷமாக ஊர் மக்களிடம் திரும்பி, 
 
“இப்ப எதுக்கு இவர அடிக்க வரிங்க. இவர அடிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இவங்க பண்ண தப்புக்கு இத்தனை நாளா துணை போனதே நீங்கதான். இவங்க பண்ற தப்ப வளர்த்து விட்டுட்டு இப்ப அடிக்க வரது நியாயமா? இந்த வாய் தான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இவருக்கு சாதகமாக பேசுச்சு. நேரத்துக்கு தகுந்த மாதிரி எப்படி உங்களால மாற முடியுது. இத்தனை வருஷமா இந்த ஊருக்குள்ளே நடக்கிற தப்பை பார்த்து சின்னதா சந்தேகம் கூடவா வராம இருந்திருக்கும்? கண்டிப்பா ஒரு சிலருக்காவது வந்திருக்கும். அந்த சந்தேகத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி விசாரிச்சு இருந்தாக்கூட இந்த தப்பு எப்பவோ  நிறுத்தப்பட்டிருக்கும். பயம்.. எல்லாமே பயம் . தனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயம். கடவுள் இருக்காருன்னு சொல்றீங்க சரி. அதேநேரம் பேயும் பிசாசும் இருக்கறதா சொல்றாங்க அதுவும் சரி. தெரியாம தான் கேட்குற இந்த ஊருகுள்ள இருக்க தெய்வம்…. உங்களுக்காக தானே இருக்காங்க. அப்படியிருக்க இத்தனை உயிரை பலி வாங்குற பேயே சும்மாவா விட்டு வச்சிருப்பாங்க. இதைக் கூடவா புரிஞ்சுக்காம இத்தனை வருஷமா பேய் பேய் னு பயந்துட்டு இருக்கீங்க. உங்களுடைய அறியாமை தான் இந்த தப்புக்கு முழுக்க முழுக்க காரணம்….” என்றவள் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள் குரலில் வேதனையை கூட்டி…
 
“கொஞ்சம் யோசிச்சு பாருங்க இந்த உலகத்துல பெண்கள் மேலேயும் குழந்தைகள் மேலேயும் தொடர்ந்து நடக்கிற குற்றங்கள் அத்தனையும்…. இந்த மாதிரி பேய் பிசாசு ன்னு சொல்ற இடமும், ஊருக்கு ஒதுக்குப்புறமும், ஆளில்லாத இடமும் தான். நம்மலாம்  எதை நினைச்சி பயந்து ஒதுங்கி நிற்கிறோமே அதுதான் தப்பு பண்றவங்களுக்கு கோட்டையா இருக்கு. அங்க அங்க விவசாயம் பண்ற நிலத்தையே அழிச்சி வீடு கட்டுறாங்க. நீங்க என்னடான்னா இப்படி ஒரு கிராமத்தில் இருந்துட்டு செல்வ செழிப்பா இருக்க நிலத்தை பேய் பேரை சொல்லி ஒதுக்கி வைக்கிறீங்க.  இன்னமும் நிறைய கிராமங்கள் பக்கம் இந்த மாதிரி ஒதுக்குப்புறமான இடம் இருக்கு. அத்தனையும் தப்பு பண்றவங்களுக்கான இடமா தான் இருக்கு. அறியாமையை ஒதுக்கிவைச்சிட்டு கொஞ்சம் நம்ம அறிவு உபயோகப்படுத்தினாலே போதும் நடக்கிற தப்பு நிச்சயம் கண்ணுல படும். தொடர்ந்து பெண்கள் மேல இந்த மாதிரி ஒரு குற்றம் நடக்க …இங்கே இருக்க ஆண்கள் எப்படி அமைதியா இருக்கீங்க. இங்க இருக்க ஆண்கள் ல  யாராவது ஒருத்தர் ஆரம்பத்திலேயே இதை தட்டிக்கேட்க முன் வந்து இருந்தா இன்னைக்கு இந்த மூன்று ஆண்களும் இருந்திருக்க மாட்டாங்க. ஆறு மணிக்கு மேல பெண்களை வீட்டை விட்டு வெளியே வராம பார்த்துக்குற உங்களால அவங்களோட மரணத்தை தடுக்க முடியாதா என்ன? இனிமேலாது என்ன நடந்தாலும் பயத்தை ஒதுக்கி வச்சுட்டு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்தும் இன்னமும் பின்தங்கிய கிராமங்கள் இருக்க தான் செய்யுது….” என்றவள் பரசுராம் இடம் திரும்பி, “என்ன பரசுராம் நீங்களே அவங்க பக்கத்துல போய் நிற்கிறீங்களா. இல்ல நானே அடிச்சு மூணாவது ஆளா மரத்துல கட்டி வைக்கவா?” என்றவளுக்கு பதில் ஏதும் கூறாமல் அமைதியாக நடந்து இருவர் பக்கத்திலும் நின்று கொண்டார் பரசுராம். 
 
 
“சொல்லுங்க உங்க மூணு பேருக்கும் எப்படி அறிமுகமாச்சு? உங்க பின்னாடி இருக்க முழு ரகசியத்தையும் சொல்லுங்க.”
 
 
 
“சுகுமாறனோட அப்பாவும் நானும் நண்பர்கள். அவன் பேரு காளி. குறி சொல்றது மாந்திரீகம் இந்த மாதிரி நிறைய வேலைகள் அவன் பண்ணுவான். அவன் சொன்ன மாதிரி எனக்கு ஒரு சில விஷயங்களும் நடந்திருக்கு. என்னுடைய மனைவியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்னதும் அவன் தான். அவனுடைய பேச்சை நம்பி நானும் என்னோட மனைவியை பல போராட்டங்களுக்கு நடுவுல கல்யாணம் பண்ணேன். பண்ணதுல இருந்து எல்லாமே அவன் சொன்ன மாதிரிதான் நல்லபடியா நடந்துச்சு. அடுத்து எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் னு சொன்னான். அதே மாதிரி தேவிகா பிறந்தா. காளி கூடவே சுகுமாறனும் அடிக்கடி இருக்கறதால இதுல அவனுக்கும் அதிக ஈடுபாடு வர ஆரம்பிச்சது. சுகுமாறன் நண்பன்தான் கட்டபொம்மன் ரெண்டுபேரும் பள்ளிக்கூடம் ஒண்ணா படிச்சாங்க. கட்டபொம்மனுக்கு காவல்துறையில சேரணும்னு ரொம்ப ஆசை. அது சம்பந்தமா சுகுமாறன் அப்பாவை பார்க்க வந்திருந்தான். அப்போ அவர் சொன்ன பூஜையை பண்ணா நிச்சயம் பதவி கிடைக்கும் 
னு சொல்ல…. கட்டபொம்மனும் அந்த பூஜையை பண்ணான். கொஞ்ச நாள்ல அதே மாதிரி அவனுக்கு போலீஸ் வேலையும் கிடைச்சது. இதனால எனக்கும் கட்டபொம்மனுக்கும் காளி மேல நிறைய நம்பிக்கை வந்துச்சு. திடீர்னு ஒருநாள் என்னை கூப்பிட்டு உங்க ஊர் வடக்கு பகுதியில் ஒரு புதையல் இருக்குன்னு எனக்கு தியானம் பண்ணும்போது தெரிஞ்சதா சொன்னான். அவன் சொன்னது நிறைய நடந்ததால நானும் உடனே அதை நம்பினேன். நாங்க நாலு பேரும் ப்ளான் பண்ணி…. அந்த ஒதுக்குப்புறமான இடத்துக்கு போனோம். அது ஏற்கனவே பல வருஷமா பேய் பிசாசு இருக்க இடம் னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். பயம் இருந்தாலும் காளி மேல் இருந்த நம்பிக்கையில அவன் சொன்ன இடத்துல தோண்ட ஆரம்பிச்சோம். அது கொஞ்ச தூரம் நீண்டு போய் அந்தக் கிணத்துல முடிஞ்சுது. ஆரம்பத்துல காளிக்கும் ஒன்னும் புரியல. அங்கேயே உட்கார்ந்து ஏதேதோ பண்ண ஆரம்பிச்சான் கொஞ்ச நேரத்துல எழுந்த காளி….”
 
“இங்கே புதையல் இருக்கிறது நிஜம். ஆனால் இந்த கிணறுல இருக்க நீர் தான் புதையலை எடுக்க விடாம தடுக்குதுன்னு சொன்னான்.” அதுக்கு என்ன தான் தீர்வுன்னு கேட்டதுக்கு,
 
“நான் இந்த நீர்ல ஜல சமாதி அடையப் போறேன். ஆனா நான் சொல்ற மாதிரி நீங்க மூணு பேரும் பண்ணிங்கன்னா திரும்ப உயிரோட வருவேன். அப்படி திரும்ப வரும் பொழுது எனக்கு அதிக சக்தியோட இந்த புதையல எடுக்க வழியும் கிடைக்கும்னு சொன்னான்.
 
நான் இறந்ததுக்கு அப்புறம் நான் சொல்ற மாதிரி என்னோட  உடலை பதப்படுத்தி இங்கேயே வைங்க. அதற்கான எல்லா ஏற்பாட்டையும் நானே பண்ணித் தரேன். அது மட்டுமில்லாம ஒவ்வொரு தடவையும் என்னை பூஜிக்கும் போது நான் தர மருந்த உடம்பு முழுக்க பூசிக்கோங்க. அது உங்களை பூச்சிக்கொல்லி ஆபத்திலிருந்து காப்பாத்தும். அதே நேரம் உங்ககிட்ட வேற எந்த தோஷத்தையும், தூர் சக்தியையும் நெருங்காம பார்த்துக்கும். அதோட வாசனை ரொம்ப அசுத்தமா இருக்கும். மொத்தம் இருபத்தி ஒர் பொண்ணுங்கள… நான் ஜலசமாதி அடைகிற இந்த கிணத்திலேயே ஜல சமாதி அடைய வைக்கனும். அவங்க உடலை அடக்கம் பண்ணி கரெக்டா 30வது நாள் ஏறிச்சு…. அந்த சாம்பலை மூணா பிரிச்சி ஒன்ன கிணத்துல பூஜை பண்ணி போடுங்க. அடுத்த பாகத்தை என்னோட பதப்படுத்தப்பட்ட உடல்ல போடுங்க. மூணாவதா மிச்சமிருக்கிறத சுகுமாறன் நீ வீட்டுல பத்திரமா வச்சுக்கோ. ஒவ்வொரு தடவையும் அடுத்த பெண்ணை எரிக்கும் பொழுது இத உடம்பு முழுக்க நீ பூசிக்கன்னு சொல்லிட்டு அதற்கான அத்தனை ஏற்பாட்டையும் காளியே பண்ணான். காளி இப்படி பண்றது எங்களுக்கு அதிர்ச்சியா இருந்தாலும்… புதையல் மேலே இருக்கிற ஆசையிலே… சரின்னு சொன்னோம். “
 
அடுத்த ஒரு ரெண்டு மூணு நாளிலேயே காளி ஜலசமாதி அடைய… அவன் சொன்ன மாதிரியே உடலை பதப்படுத்தி வைச்சோம். அதுக்கப்புறம் சுகுமாறன் கட்டபொம்மன் ரெண்டு பேருமே சேர்ந்து பெண்களை பலி கொடுக்க வேண்டிய வேலையை பார்த்தாங்க. நான் அவங்க இந்த ஊருக்கு வரதும் போறதும் யாருக்கும் தெரியாம பார்த்துகிட்டேன். கட்டபொம்மன் போலீசா இருக்கறதால…. அப்பா அம்மா இல்லாத பெண்களை சுகுமாறனுக்கு காட்டி விடுவான். சுகுமாறனும் கொஞ்ச நாள்ல அவங்க கிட்ட பேசி காதலிக்கிறதா பொய் சொல்லி இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்து பலி கொடுப்பான். இந்த ஊர்லயும்…. சில பொண்ணுங்கள காதலிக்கிற பேர்ல பலி கொடுத்து இருக்கோம். அதுல ஒருத்தி தான் ஆதி. ஆதிய பலிகொடுக்க முடிவு பண்ணது சுகுமாறன் தான். ஆனா கூட கயல் வருவான்னு எதிர்பார்க்கல. எப்படி அவளை அனுப்புறதுன்னு தெரியாம தான் நானே திடீர்னு அவளை பார்க்கிற மாதிரி பார்த்து வீட்டுக்கு அனுப்பி வைச்சேன். என்னோட பொண்ணுக்கு எப்படி என் மேல சந்தேகம் வந்துச்சுன்னு தெரியல… என்கிட்ட ஒரு நாள் இத பத்தி கேள்வி கேட்க ஆரம்பிச்சா. என்ன பண்றதுன்னு தெரியாம இவங்க ரெண்டு பேரு கிட்டயும் சொன்னேன். இவங்கதான் என் பொண்ணையும் பலிகொடுக்க சொன்னாங்க. எனக்கும் அவ கண்டுபிடிச்சா பிரச்சனை ஆகிடும்னு பலி கொடுக்க முடிவு பண்ண. அந்தப் பிரச்சினையில தான் என் மனைவியும்  கொன்னேன். புதையல் மேலே இருக்க ஆசையில தான் இது அத்தனையும் பண்ணேன்… என்று பரசுராம் மொத்த உண்மையும் போட்டு உடைக்க…. அதேநேரம் காவல்துறையும் சரியாக வந்தது. வந்த காவல்துறையினரிடம் மூவரையும் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டாள் ஆரதி.
 
 
 
அடுத்த பதிவோடு மர்மம் முடியும்…
 
 
 
அம்மு இளையாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்