
மரம் தேடும் மழைத்துளி 21
அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகனை, அங்கிருந்து திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அவர்கள் முழுமையாக ஆராய்ச்சி செய்து பார்த்துவிட்டு. மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால், வலது புறம் செயல் இழந்து விட்டது. என்று தெரிவித்தார்கள்.
சரவணனும் கிருஷ்ணனும் மருத்துவர்கள் எதிரில் நின்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள், அதிர்ந்து போனார்கள்.
சரவணன், “சார் எதனால இந்த ரத்த அடைப்பு ஏற்பட்டிருக்கும்?”
“தலையில பலமான அடிபட்டதால் இருக்கலாம். அதிகமா போதை வஸ்துக்களை உபயோகப் படுத்துறவங்களுக்கு ரத்த நாள அடைப்பு ஏற்படும் அதனாலும் இருக்கலாம். பரம்பரையா சிலருக்கு ரத்த அணுக்கள் கட்டி கட்டியா உறையும் வியாதி வரும் அந்த வகையிலும் வரலாம்”. என்று மருத்துவர் விளக்கம் தந்தார் .
கிருஷ்ணன், “ஐயா குணமாயிருங்களா?”
“குணம் ஆயிடும். சிலருக்கு குணமாகமலே போகலாம். இவருக்கு சின்ன வயசுங்கறதால குணமா ஆயிடும்னு நம்புவோம்.”
கிருஷ்ணனுக்கு மனதெல்லாம் வருத்தம். குணமாகாது என்று புரிகிறது. இருந்தாலும் ஆற்றாமையால் “எப்ப குணமாகும்னு சொல்ல முடியுமா ஐயா?” என்று கேட்க.
“இன்னைக்கு தான் குணமாகும்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது சார்… அவரோட லக்கை பொறுத்தது.”
திருநெல்வேலி மருத்துவமனையில் ஒரு வார காலம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்து. பிறகு அனைவரும் ஒன்றாக வீடு திரும்பினார்கள்.
முருகனுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டதால், சுயமாக படுக்கையில் இருந்துகூட எழுந்து கொள்ள முடியாது.. சிறுநீர், மலம் போன்ற உபத்திரங்களுக்கும், ஒருவர் துணையை நாட வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் தனக்கு இது தேவை. இது தேவையில்லை. உடலில் இந்த உணர்வு இருக்கிறது. இங்கே வலிக்கிறது. என்று எடுத்துச் சொல்ல வாயும் வரவில்லை.
முருகனுக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று, விரைவில் குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள். என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். இனி முருகனுக்கு பக்குவம் பார்ப்பதற்கும், அவனால் வந்து கொண்டிருந்த வருமானத்தை ஈடு கட்டுவதற்கும் யாது வழி என்று அறியாமல் முடங்கி விட்டார்கள்.
ருக்மணியின் தாயார், தனக்கு சொந்தமான வீட்டை விற்றுவிட்டு. அதில் வரும் பணத்தை மகளின் குடும்ப செலவிற்கும், பாதுகாப்பிற்குமாக கொடுத்துவிட திட்டமிட்டு இருப்பதாக பார்வதியிடம் தெரிவித்தார்.
பார்வதி, வீட்டை வித்துட்டு தெருவுல நிக்க போறயா? ஒன்னும் வேண்டாம். முன்னாடி பொட்ட புள்ள இருந்துச்சு. அதை கரையேத்தனும்னு கஷ்டப்பட்டோம். இப்ப அந்த சுமை இல்ல. நானும் என் மருமகளும் பாடுபட்டு பார்த்துக்கிடுவோம்.” என்று மாரியம்மாளிடம் தைரியமாக சொல்லிவிட்டு.
முருகனோடு ஒருவர் இருந்து உணவு புகட்ட, மருந்து மாத்திரை கொடுக்க வேண்டும். அதற்காக இருவரில் ஒருவர் அவனோடு எப்போதும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இருவரும் ஒரே மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பயன்படுத்தி, ஒருவருக்கு பகல் நேர வேலையும். ஒருவருக்கு இரவு நேர வேலையுமாக மாற்றி மாற்றி பார்த்துக் கொள்வதாக கேட்டார்கள். மில் நிர்வாகமும் அதற்கு சம்மதம் தெரிவித்தது. முதல் வாரம் ருக்மணி பகல் வேலை என்றால், இரண்டாம் வாரம் ருக்மணி இரவு வேலை என்று மாற்றிக் கொடுத்தார்கள்.
சரவணன், தினமும் முருகனுக்கு காலைக்கடனை முடிக்க வேண்டி. அவனை தூக்கி கழிவறை அழைத்துச் செல்ல. உடைமாற்ற என்று தினசரி கடமையாக அவன் செய்து கொண்டு இருந்தான்.
முருகன், சித்திரை மாதம் முழுவதும் குணமாகி விடுவோம் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தான்.
வைகாசி மாதம் பிறந்து விட்டது. குணமாவதற்கு உண்டான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
பார்வதி, வார விடுமுறையில் ருக்மணியோடு வீட்டிலிருந்தார். சென்ற முறை திருநெல்வேலி மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது என்னென்ன நடந்தது என்பதை பற்றி கூறிக் கொண்டிருந்தார்.
அப்போது முதல் முறையாக திருநெல்வேலி மருத்துவமனைக்கு சென்று வந்த போது, ருக்மணி கரு உண்டாகியபடி வந்திருந்ததை நினைவு படுத்தினார். அந்த கரு தானாகவே கலைந்து விட்டதால் முருகன் மீண்டும் குணமாகி வீடு திரும்பியதை பற்றி சொன்னவர்.
திடீரென்று ஞானம் பெற்றவரை போல, “இப்போ நீ மசக்கையா இருக்கியா ருக்கு?” என்று கேட்க.
ருக்மணி, “ஆமாம்” என்று பதில் உரை கொடுத்தாள்.
பார்வதி, ஆவேசம் கொண்டவராக, “நீ பிள்ளை பெத்துக்கனும்ங்கறதுக்காக என் பிள்ளையை பாடையில அனுப்பி வச்சிருவே போல இருக்கே… முதல்ல அதை கலைப்பதற்கு வழிய பாரு.” என்றதும்.
படுக்கையில் படுத்திருந்த முருகனால் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் ஆவேசம் கொண்டு, முனகல் சத்தமிட்டான். இயக்கத்தில் இருக்கும் கையைக் கொண்டு, படுக்கையை ஓங்கி ஓங்கி அடித்து. அவனது குழந்தையை கலைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தான்.
பார்வதி, முருகனிடம் “இப்ப உங்க புள்ள பிறந்ததும் நாட்டை ஆள போகுது பாரு. இதை கலைச்சிட்டு இதுக்கு அடுத்து உடம்பு சௌகரியமாயிருச்சுன்னா… இதோட இவளை தலைமுழுகிட்டு. வேறொரு பெண்ணை கட்டி வைக்கிறேன். அவளோட சேர்ந்து பிள்ளை பெத்துக்க பாரு.” என்றார்.
முருகன், தனது தலையின் அருகில் வைத்திருந்த தலையணையை தூக்கி எறிந்து தள்ளிவிட்டு. அவனது எதிர்ப்பை தெரிவித்தான்.
ருக்மணி, எதுவும் பேச முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
முருகன் உடல்நிலை சரியில்லாமல் விழுந்து போனதில் இருந்தே… பக்கத்து வீட்டில் இருக்கும் அனைவரும், முருகன் வீட்டில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். பார்வதியின் பலமான குரல், பக்கத்து வீட்டில் கேட்க. விரைந்து ஓடி வந்தான் சரவணன்.
பார்வதியின் ஆவேச பேச்சைக் கேட்டு, “பெரியம்மா… என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்துறீங்க? கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அவனே உடம்புக்கு முடியாதவன். அவன்கிட்ட எதுக்கு இப்படி வந்து பேசுறீங்க?” என்று பார்வதி அடக்க முயற்சித்து பார்த்தான்.
அருகில் நின்று அழுது கொண்டிருந்த ருக்மணியை பார்த்து, “எதுக்கு ருக்கு நீங்க அழுகுறீங்க?” என்று கேட்க. அவள் வாய் திறக்கவில்லை.
மீண்டும் பார்வதியிடம், “பெரியம்மா என்னதான் உங்க பிரச்சனை?” என்று கேட்க.
“எந்த நேரம் இவள் புள்ள உண்டானாளோ… இவன் சாக கிடக்கிறான். அந்தப் பிள்ளையை கலைக்க சொன்னால், கலைக்க கூடாதுன்னு என்கிட்ட சண்டை போடுறான். அவள், ஒன்னும் தெரியாதவள் மாதிரி நின்னு அழுது காமிச்சுக்கிட்டு இருக்கா.”
சரவணன், “பெரியம்மா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. வாங்க அப்பா கிட்ட பேசலாம் பெரியம்மா. என்று அவர் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவனது வீட்டுக்கு சென்று விட்டான்.
ருக்மணி, அவர்கள் சென்ற பிறகு, முருகன் தலைக்கு தலையணையை எடுத்து வைத்து. அவனது இடது கையை பிடித்து தனது நெஞ்சுக்கூட்டுக்குள் வைத்துக்கொண்டு, “கோபப்படாதீங்க மாமா… நீங்க குணமான போதாதா? அத்தை சொல்றதும் உங்க நல்லதுக்காக தானே.” எனும் போது அவள் நெஞ்சுக்கூட்டிலிருந்த கையை வெடிக்கென்று பிடுங்கிக் கொண்டான் முருகன்.
அவன் கண்கள் அவளிடத்தில், கருவை கலைக்க கூடாது என்று கட்டளை இட்டது. கெஞ்சிப் பார்த்தது. மன்றாடியது. முறையிட்டு அழுதது. முடிவு தெரியாமல் விழித்தது.
ருக்மணி, “சரி மாமா… பிள்ளையை நல்லபடியா பெத்து, உங்க கையில கொடுக்கிறேன் போதுமா?” என்றதும் கோணியிருந்த முருகனது வாய், புன்னகையை உதிர்த்தது.
பார்வதியை அழைத்துச் சென்ற சரவணன், அவனது தாய் தந்தையோடு பார்வதியிடம்,” பெரிம்மா… அவனோட பொண்டாட்டி, கூட இருந்தே பீயி மாேத்திரம் அள்ளிக்கிட்டு இருக்கா. இந்த நேரத்துல அவள் கிட்ட சண்டை இழுத்து, விரட்டி விட்டுடாதீங்க. கோவப்பட்டு போயிடப் போறாள்.”
பார்வதி, “போனல் போறாள். நான் அள்ள மாட்டேன்?”
கிருஷ்ணன், நீங்க அள்ளுவீங்க. அவளும் கூட இருந்தால் ஆளும் பேருமா சேர்ந்து பாத்துக்கலாம். அவ இல்லாம ஒத்தையில பாக்குறது எப்படி? ஒண்ணா சேர்ந்து பார்ப்பது எப்படி? அதையேன் நீங்க யோசிக்காமல் பேசுறீங்க? உங்ககிட்ட யாராவது அந்த புள்ளதான் இந்த நிலைமைக்கு காரணம்னு சொன்னாங்களா?” என்று கேட்க.
இல்லை என்று தலையசைத்தார் பார்வதி.
“பிறகு எதுக்கு பிள்ளையை கலைக்கணும்னு சொல்லுவீங்க? என்ன நடக்கனுமோ… அதுதான் நடக்கும். அதை முன்னாடியே தீர்மானிச்சுட்டு வந்திருக்கிறோம் எல்லாருமே. அதுக்கு பிள்ளைதான் காரணம். குட்டிதான் காரணம்னு, காரணத்தை தேடி அலையாமல். காரியத்துல கண்ணா இருக்கு பாருங்க.” என்று சொல்ல பார்வதி அமைதியானார்.
அதே மாதத்தில், சரவணனுக்கும் சுபத்ராவுக்கும் நிச்சயதார்த்தம் இனிமையாக நடைபெற்று முடிந்தது.
தினமும் முருகன், காலை கடன் கழிப்பதற்கு, சரவணன், முருகனை படுக்கையில் இருந்து தூக்கி பிடித்துக் கொள்ள. ருக்மணி ஒரு புறம் தோள்கொடுத்து தூக்கி, மெல்ல இருவருமாக இழுத்துச் சென்று,கழிவறையில் நிறுத்தி. இருவரும் பிடித்துக்கொள்ள. ருக்மணி, அவனது மனைவி என்பதால் முருகனது ஆடைகளை களைந்து அவனுக்கு உதவி புரிவாள். அதேபோல கடமை முடிந்தவுடன் அவனை தூய்மைப் படுத்துவதும் அவளது வேலை. மீண்டும் ஆடையை அணிவித்து, பிறகு இருவரும் கூடி இழுத்துக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்துவார்கள்.
முருகனுக்கு ஒவ்வொரு முறையும் காலைக்கடன் கழிப்பதற்கு, இருவரும் பெருத்த சிரமத்தை சந்திக்கிறார்கள் என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தாலும். தம்பியும் மனைவியும் ஒன்றாக நிற்கும் இடத்தில் தான் மட்டும் நிர்வாணமாக நின்று கொண்டு இருப்பதென்பது உயிர் போய் உயிர் வரும் நிலைக்கு நிகரானது. அந்த பெருந்துயரை அனுபவிக்கும் போது, கூச்சமும், அருவருப்பும் தன்னை பிடுங்கி தின்பது போல உணர்வான். அதனால் இருவரது முகத்தையும் அந்த சில நொடிகளுக்கு பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்வான்.
ஆனால் ருக்மணியும் சரவணனும் முருகனை தாங்கள் பெற்ற பிள்ளையை கவனிப்பது போல முகம் சுளிக்காமல் கவனித்துக் கொண்டார்கள்.
அந்த மாதத்தில் வந்த வைகாசி விசாக திருநாளில், கடவுள் முருகனிடம் தன் மகனை மீட்டுக் கொடுக்கும் படி வேண்டிக் கொண்ட பார்வதி, முருகன் சன்னிதானத்தில் கொடுத்த விபூதி பிரசாதத்தை கொண்டு வந்து. மகன் முருகனுக்கு நெற்றியில் இட்டு விட்டார்.
முருகன் இயலாமையால் எண்ணுவதை வெளியில் சொல்ல முடியாமல், மனதுக்குள்ளே கடவுளிடம் உரையாடினான்.
“அம்மா தாயே நான் இப்படி கெடக்கிறது என் பொண்டாட்டிக்கு செஞ்ச கொடுமைக்காக, எனக்கு கிடைச்ச தண்டனையாத்தான் நினைக்கிறேன். உன்னை நாள் தவறாமல் நினைச்சி, உன் கோவிலுக்கு வந்து கும்பிட்டு வந்தாளே என் பொண்டாட்டி, அவளுக்கு நீ செஞ்ச கருணை இதுதானா? எனக்கு நீ கொடுத்த தண்டனையாலே கஷ்டப்படுறது அவதானே. அது உனக்கு தெரியலையா அம்மா? அதுக்காக அவ மேல இரக்க பட்டு, என்னை இந்த வியாதியில் இருந்து காப்பாற்றி விட்டுடுனு கேட்க மாட்டேன். என்னை கக்கூஸ் வரைக்குமாவது நடக்கவச்சால் போதும். நான் இந்த வியாதியோட ஆயுள் முழுக்க வாழ்ந்துட்டு போய்க்கிறேன். அந்த வரத்தை தயவுசெய்து கொடும்மா. ஆனா உனக்கு வரம் கொடுக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். நீயும் என்னை போல சுயமா எழுந்து நடக்க முடியாத கல்லு தானே. உன்னையும் இன்னொருத்தர் குளிப்பாட்டி புதுசா உடை மாத்தி. பாராட்டி சீராட்டி பாத்துக்க வேணும். ஆனாலும் நீ குத்து கல்லாதானே இருக்கிறே. குறைஞ்சபட்சம் அவங்களுக்காக, நீயே உன்னை செம்மைபடுத்திக்க முடியுதா? உங்கிட்ட போயி நானும் வரம் கேட்டுட்டேன்.” என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.

