
மரம் தேடும் மழைத்துளி 17
ருக்மணியின் தாயார் மாரியம்மாள். தனது மருமகனுக்கு நேர்ந்த விபத்தை அறிந்து. கோமதி புறப்பட்டு வரும் நாளில், உடன் சேர்ந்து திருநெல்வேலிக்கு வர எண்ணியிருந்தார். ஆனால் கோமதி தனது கணவனோடு சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்டாள்.
கோமதி திருநெல்வேலிக்கு சென்றதை அறிந்த பிறகே. மாரியம்மாள் தனியாக திருநெல்வேலிக்கு புறப்பட்டு வந்தார். கோமதி இரவு 8 மணி வரை திருநெல்வேலியில் இருந்து விட்டு சேத்தூருக்கு கிளம்பி சென்றாள்.
மாரியம்மாள் இரவு 9 மணிக்கு திருநெல்வேலி மருத்துவமனையில், இவர்கள் இருக்கும் இடத்தை விசாரித்து ஒருவாராகா வந்து சேர்ந்தார்.
அதுவரையில் கலக்கம் கொள்ளாமல் இருந்த ருக்மணி, தாயை பார்த்தவுடன், தன்னை தானே கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டாள். மாரியம்மாள் ருக்மணியை கட்டி அணைத்து அழுது தீர்த்தார்.
அதன் பிறகு மாரியம்மாள், ருக்மணியோடு ருக்மணிக்கு துணையாக. திருநெல்வேலியிலேயே தங்கி கொண்டார்.
அடுத்த நாள் காலையில் முருகனுக்கு கழுத்தெழும்பு சீர்படுத்தி கட்டு போடப்பட்டது. நீர்த்த ஆகாரங்களை உணவாக கொடுக்க பரிந்துரை செய்தார்கள் மருத்துவர்கள்.
அன்றே முருகன் தனக்கு எங்கெங்கு வலி எடுத்துக் கொண்டிருக்கிறது? தன்னால் என்ன செய்ய முடிகிறது? என்று மருத்துவருக்கு விளக்கம் கொடுத்தான்.
அனைத்து வலிகளுக்கும் மருந்து மாத்திரை என்று பரிந்துரை தாளில் எழுதி கொடுத்து. நார்மல் வார்டுக்கு மாற்றம் செய்தார்கள்.
முருகன் நார்மல் வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டதை கேள்விப்பட்ட கிருஷ்ணன், லட்சுமி தம்பதிகள் சுந்தரியின் மாமனார் மாமியாரையும். சுந்தரியையும் அழைத்துக் கொண்டு முருகனை காண திருநெல்வேலிக்கு வந்து சென்றார்கள்.
முருகனின் நண்பர்களான கதிர் கணேசன் கருப்பு ஆகியோர் அவரவர் குடும்பத்தோடு ஆளுக்கு ஒரு நாளாக வந்து பார்த்துவிட்டு. நலம் விசாரித்து விட்டு சென்றார்கள்.
முருகன், ஒருவரது துணையோடு மெல்ல எழுந்து, நடந்து சென்று பாத்ரூம் போகும் அளவுக்கு நான்காவது நாளே தேறி இருந்தான்.
சரவணன், அந்த வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல், சேத்தூர்க்கு சென்று மறுநாள் புதிய வேலைக்கு செல்ல இருப்பதால், பெரியம்மா, மற்றும் அண்ணனிடம் விசயத்தைச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான்.
ருக்மணி, மற்றும் பார்வதியின் அதீத கவனிப்பில் முருகன் உடல் நலம் தேறிக் கொண்டு வந்தான்.
அதே நேரத்தில், தனியாகவே மாடிக்கும் தரை தளத்துக்குமாக அலைந்து திரிந்த ருக்மணி. உறுதி செய்யப்படாமல் இருந்த கருவை பறிகொடுத்தாள்.
ருக்மணி மாரியம்மாளிடம், “எம்மா… தலைக்கு ஊத்திட்டேன். இதுக்காக எதுவும் எடுத்துட்டு வராம போயிட்டேன். மெடிக்கல் சாப்ல சொல்லி கேளு. அவங்க ஒன்னு கொடுப்பாங்க. அதோட இதையும் சேர்த்து வாங்கிட்டு வந்துரும்மா.” என்று தன்னுடைய தேவையை ரகசியமாக சொல்லி மாரியம்மாளை அனுப்பி வைத்தாள்.
விவரம் அறிந்த பார்வதி, முடிஞ்சது சனியன். என்று எண்ணிக் கொண்டு அவரது வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
முருகன் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்துவிட்டு. வீடு திரும்பிய பிறகு ஒரு மாத காலம் ஓய்வில் இருந்து விட்டு. மீண்டும் வேலைக்கு சென்றான்.
அவனுக்கு வேலை தந்து கொண்டிருக்கும் பெரிய கொத்தனார் இலகுவான வேலையாகவும் நிழலில் இருந்து பார்க்கும் வேலையாகவும் கொடுத்து பார்த்துக் கொண்டார்.
சரவணன், மில்லில் புதிய எலக்ட்ரிசியன் பணியில் சேர்ந்து. ஒரு மாத காலத்தை நிறைவு செய்துவிட்டு. முதல் மாத சம்பளத்தை வாங்கி தனது தாயாரின் கையில் கொடுத்து ஆசி பெற்றான்.
லட்சுமி, இந்த சம்பளம் நிறைவான சம்பளமாக இருக்கிறது. அதனால் இந்த வேலையை தொடர்ந்து செய்துகொண்டு. வீட்டிலேயே இருந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். சரவணனும் ஒப்புக்கொண்டான்.
கிருஷ்ணரும் லட்சுமியும் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சுந்தரிக்கு வரன் பார்த்துக் கொடுத்த தரகர் வந்தார்.
கிருஷ்ணன், “தரகர் அய்யா வாங்க.” என்று அமர்ந்திருந்தபடியே வரவேற்றார். கொஞ்சம் சாப்பிடுங்க.”
தரகர், “நான் இப்போதான் சாப்பிட்டு வாரேன். நீங்க சாப்பிடுங்க” என்றார்
புதிய ஆண்கள் முன்னிலையில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கக் கூடாது என்றும், பெண்ணும் ஆணும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கக் கூடாது பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணம் உடைய காலம் அது. அதனால்…
லட்சுமி சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை எடுத்துக் கொண்டு போய், சமையல் கட்டி வைத்துவிட்டு. கையை கழுவிக்கொண்டு தரகருக்கு குடிக்க சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
“நீங்க சாப்பிட வேண்டியதுதானே ம்மா. எனக்காக சாப்பாட்டை எடுத்து வச்சுட்டீங்க. என்று சொன்னபடி சொம்பை கையில் வாங்கிக் கொண்டார் தரகர்.
“நான் காலையிலேயே காப்பி குடிச்சிட்டேன்யா… பசி எடுக்கல. இவக நேரத்துக்கு சாப்பிடணும்னு சொன்னாங்களேனு சாப்பாட்ட வச்சு உட்கார்ந்தேன். நீங்க ஒன்னும் நினைக்காதீங்க.” என்று பெருந்தன்மையாகச் சொன்னார் லட்சுமி.
கிருஷ்ணன், “தரகர் ஐயா வந்தா… ஏதாவது நல்ல செய்தியாத்தான் இருக்கும்.”
தரகர், “அது என்னவோ நிஜம்தான். நம்ம செங்கமலபுரத்தில ஒரு பொண்ணு ஜாதகம் வந்திருக்கு. உங்க வீட்ல மாப்பிள்ளை இருக்கு. சாதகத்தை கொடுக்கிறேன் பாருங்க. பொருத்தம் இருந்தால் பொண்ணை போய் பார்த்துட்டு வருவோம்.”
லட்சுமி, “மெட்ராஸ்ல நல்ல வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போதே சொன்னாலும் கல்யாணம் முடிச்சு வச்சிருக்கலாம். இப்ப உள்ளூர்க்குள்ள வேலை பார்க்கிறானே பொண்ணு கொடுக்க சம்மதிப்பாகளா?”
“ஒத்த பொண்ண பெத்தவங்க. மாப்பிள்ளை உள்ளுக்குள்ள இருந்தா நல்லதுன்னு யோசிப்பாக. இதை பத்தி எல்லாம் நினைக்க மாட்டாங்க ம்மா.”
கிருஷ்ணன் “அப்ப சந்தோஷம் தரகர் ஐயா. பொண்ணு போட்டோ கொடுத்து இருக்காங்களா?”
“பொருத்தம் இருந்தா பொண்ணை நேரிலேயே பார்த்திடலாம்.” என்று சொல்லி சிரித்தார் தரகர்.
லட்சுமி, “நேர்ல பார்க்கும்போது பொண்ணு நல்லா இல்லாட்டி?”
“அப்படி நினைக்காதீங்க ம்மா… பொண்ணு லட்சுமி கடாட்சமா இருக்கும்.” என்று மறுப்பு தெரிவித்தார்.
லட்சுமி, “அப்ப சரி. நீங்க பார்த்து இருக்கீங்களா? அது போதும். சரி இருங்க காபி கொண்டாரேன்” என்று சொல்லி சமையல் கட்டுக்குள் சென்று காபி தயாரித்துக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணன், சாப்பிட்டு முடித்து. கையை கழுவிக்கொண்டு எழுந்தார். தரகர் கொடுத்த ஜாதகத்தை வாங்கி புரட்டி பார்த்தார்.
தரகர், “நமக்கு ஜோசியமும் தெரியுமோ?” என்று ஆர்வமாய் கேட்டார்.
கிருஷ்ணன், ஜாதகத்தை பிரட்டி பார்த்தது ஒரு குத்தமா ய்யா? ஜோசியம் தெரியாது. பொண்ணோட பேரு என்னன்னு பாக்குறதுக்கு புரட்டி பார்த்தேன்.”
“ஓ…. சரி சரி” என்று தலையாட்டி விட்டார்.
கிருஷ்ணன், ஜாதகத்தில் இருந்த பெண்ணின் பெயரை, மனைவி காதுகளுக்கு கேட்கும் படி சத்தமாக வாசித்தார். “பொண்ணு பேரு சுபத்ரா” என்றார்.
லட்சுமி காப்பியை இரண்டு டம்ளர்களில் எடுத்துக்கொண்டு சிரித்த படியே வந்தார். “எங்க ஊரு பக்கம் மேனாமினுக்கிகளை சிமித்திரைனு சொல்லுவாக. செங்கமலபுரத்திலே சிமித்திரைனு பெரே வச்சிருக்காங்க.” என்றார்.
“பொண்ணுக்கு பேரு சிமித்திரை இல்லம்மா. சுபத்ரா.” என்று தரகர் விளக்கம் அளித்தார்
கிருஷ்ணன், “பொண்ணோட அப்பாவுக்கு டி.ராஜேந்தர் படம்னா ரொம்ப இஷ்டம் போல. அதனால கதாநாயகி பேரையே பொண்ணுக்கு வச்சிட்டாரு.”
லட்சுமி, “அது என்ன படம்ங்க?”
கிருஷ்ணன், “ஒரு தலை ராகம் படத்துல அவளோட பேரு சுபத்ரா.”
லட்சுமி, செல்லக் கோபத்தோடு, “நீங்களும் வாலிபத்திலே, சினிமா கொட்டகை தவராமல் அலைஞ்சிருக்கீக போலவே.”
தரகர், “சந்தோசமா இருந்தாலும், வருத்தமா இருந்தாலும், சினிமாக்கு போயிடுவோம். எங்களுக்கு வேற என்ன உண்டு?”
லட்சுமி, “சரி சரி நாங்க சாதகத்தை பார்த்துட்டு. தாக்கல் சொல்றோம்” என்று சொல்லி தரகரை அனுப்பி வைத்த பிறகு.
மாலையில், சரவணன் வீட்டுக்கு வந்தவுடன். கல்யாணத்திற்கு பெண் பார்க்க போவதாக தகவல் தெரிவித்தார்கள். சரவணனும் மறுப்பு சொல்லாமலும் சம்மதமும் தெரிவிக்காமலும் இருந்து கொண்டான்.
கிருஷ்ணன், சரவணனின் மவுனத்தை சம்மதத்திற்கான அறிகுறியாக எடுத்துக்கொண்டு. மேற்படி வேலைகளை தொடர்ந்தார்.
கிருஷ்ணன் லட்சுமி தம்பதியினர். மறுநாள், சரவணன் மற்றும் சுபத்ராவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிட நிலையத்திற்கு சென்றிருந்தார்கள்.
சரவணனுக்கும் சுபத்ராவிற்கும, பத்துக்கு ஏழு பொருத்தம் நன்றாக இருந்தது. திருமணம் செய்யலாம் என்று ஜோதிடர் தெரிவித்தார்.
திருமண தரகருக்கு ஜோதிட நிலையத்திலிருந்து, போன் மூலம் தகவலை தெரிவித்தார் கிருஷ்ணன். “நாளை மறுநாள் பெண் பார்க்க வருவதாக, பெண் வீட்டில் சொல்லச் சொன்னார்.”
அதேபோல சரவணன் இடமும, நாளை மறுநாள் பெண் பார்க்க செல்ல இருப்பதால், விடுமுறை எடுத்துக் கொள்ளும்படியும் தகவல் தெரிவித்தார்கள்.
சுந்தரிக்கு போன் மூலம் தகவல் சொல்லப்பட்டது சுந்தரி நாளை மாலையில், தனது மாமியாருடன் ஊருக்கு வருவதாக தெரிவித்தாள்.
அதேபோல கோமதிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோமதியும் நாளை மறுநாள் காலையில் வந்து விடுவதாக தெரிவித்தாள்.
பக்கத்து வீட்டில் இருக்கும் பார்வதியிடம் நாளை மறுநாள் பெண் பார்க்க போக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதேபோல முருகன் ருக்மணிக்கும் பெண் பார்க்க போகும் விஷயத்தை தெரிவித்தார்கள்.
அனைத்து சொந்தங்களும் ஒன்று கூடி சரவணனுக்கு பெண் பார்க்க சுபத்ராவின் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள்.
சுபத்ராவின் வீட்டில் சுபத்ராவின் தோழிகள் மீனா மற்றும் உமா, உடன் இருந்து சுபத்ராவுக்கு புடவை கட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சுபத்ராவின் தாயார் அன்னம், “ சட்டுனு நாலு மடிப்பை வச்சு கட்டி விடுங்கடி. மிச்சத்தை மாமியார் வீட்டில் போய் அவ கத்துக்கட்டும்.”
மீனா, “நாங்க சொல்லிக் கொடுக்கிற மாதிரி அங்கே பொறுமையா சொல்லிக் கொடுப்பாங்களா?”
அன்னம், “நீங்க பொறுமையா சொல்லிக் கொடுத்ததும் கத்துக்கிட்டாளா? மாமியார் நாலு போடு போட்டு சொல்லி கொடுத்தால் உடனே கத்துக்க போறாள்.”
சுபத்ரா, “அம்மா… செத்த சும்மா இருக்கியா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ரதுக்கு இன்னும் நிறைய நேரம் கிடக்கு. அதுக்கு முந்தி நீயேன் இப்படி படுத்துறியோ?”
அன்னம், இன்னும் நிறைய நேரம் கிடக்கு. அதுக்காக சேலையை மட்டுமே கட்டிக்கிட்டு இருப்பியா? இவளுக சேலை கட்ட சொல்லி கொடுக்கிறாளுகளா? இல்ல உன்ன வச்சு பழகிட்டு இருக்கிறாளுகளானு தெரியல. தள்ளுங்கடி என்று இருவரையும் புறம் தள்ளிவிட்டு. சேலையின் தலைப்பை வாங்கி மடிப்பை வைத்து. இதை சொருகடி என்று கையில் கொடுத்துவிட்டு. முந்தியை எடுத்து மாராப்பு போட்டுவிட்டு. மத்தத சரி பண்ணி விடுங்கடி என்று உமாவிடம் சொல்லிவிட்டு. சீக்கிரம் ரெடியாகு.” என்று சுபத்ராவுக்கு கட்டளையிட்டு விட்டு வெளியேறினார்.
உமா, இந்த மாதிரி ஈஸியா கட்டிவிட எங்களுக்கு தெரியாதா? பார்டரை இடுப்புல வர்ற மாதிரி வைக்கிறதுக்கு, உனக்கு சொல்லிக் கொடுக்கலாம்னு பார்த்தோம். உங்க அம்மா விட மாட்டேங்கிறாங்களே.” என்றபடி மற்ற அலங்காரங்களை செய்து கொண்டு இருந்தாள்.
மீனா, “இந்த தொல்லையே வேண்டாம்டி. எப்போதும் போல சுடிதாரே போட்டுக்க. மெட்ராஸ், மதுரையில் எல்லாம் பொம்பளைங்க சுடிதார் போட்டுக்கிட்டு சுத்துராளுக. நம்ம ஊரு மாேசம் எங்கேயும் இல்லை.”

