Loading

    நெஞ்சத்தில் தஞ்சமானவளே -08

 

திருவிழா  கெடாவெட்டு சிறப்பாக நடைபெற….  தீரு. கடைவீதியை சுற்றி விட்டு களைத்து போய் வந்தாள்.

ஆரண்யா வேகமாக அவளை இழுத்து வந்தவள்  .,”தீரு… தங்கம் நான் முகில் கிட்ட பேசனும் டி ஏதாவது பண்ணி ஹெல்ப் பண்ணு….  எனக்கு என்னவோ இங்க இருக்கிறவங்க என் கல்யாணத்தை முடிச்சுட்டு தான் மத்த வேலை பார்ப்பாங்க போல…..”  கண் கலங்க கூறிய ஆருவை அணைத்தபடி” அப்புறம் நான் எதுக்கு இருக்கேன் அதெல்லாம் நடக்க விட்டுடுவேனா … அழாத டி… சரி வா கடைவீதிக்கு போறோம் னு சொல்லிட்டு போய் ஃபோன் பண்ணலாம்…..  நம்பர் நினைவு இருக்கு தானே??”

“ம்ம்ம்ஹ்ம் இருக்கு….  வா போகலாம் “

“ஆரு குட்டி போறது தான் போறோம்…. சாப்பிட்டு முடித்ததும் போகலாம்…. மட்டன் பிரியாணி வாசனை மூக்கை துளைக்க கண்கள் மின்ன கூறினாள். 

“சரி ஆனா சீக்கிரம் சாப்பிடனும்….  “

“ரொம்ப சாரி டார்லிங் நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் பட் சாப்பாட்டை குருட்டு கோழி தவுட்ட முழுங்குன மாதிரி சாப்பிட முடியாது….  ரசிச்சு ருசித்து தான் சாப்பிடனும்…  அப்புறம் இந்த நேத்ரன் பையன் பார்வையில் இருந்து கொஞ்சம் தள்ளியே இரு….  அவன் முழியே சரி இல்லை….  டப்ஸா கண்ணன்….  சைட் அடிக்கவும் கடலை போடவும் நாமளாம்… கட்டிக்க மட்டும்…  அவன் மாமா மகளாம்…. நாம தான் கலர் இல்லைன்னு அவன் அம்மா சொல்லுமே அப்புறம் ஏன் டி நம்மளை முழுங்கிற மாதிரி பார்க்கிறான் …. இன்னொரு தடவை அவன் பார்க்கட்டும்….  கண்ணு காக்காய்க்கு தான் போகும்…. “

“அவரை வறுத்தது போதும் வா வறுவல் தீர்ந்துட போகுது….” இருவரும் சாப்பிட சென்றனர்.

சாப்பிட்டு முடித்ததும் வேகமாக கிளம்பினர் இருவரும் முகிலுக்கு அழைப்பதற்காக

முகிலின் எண் ஆஃப் செய்து இருப்பதாக வர ஆரண்யா கலங்கினாள்.

திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது . அரங்கநாதன் எதற்கும்  ஜோசியரிடம் கேட்டு விட்டு பெண் பார்க்க வர சொல்லலாம் என்று சொல்லிட  ஜோதிடம் பார்க்க கும்பகோணம் சென்றிருந்தனர் வரதராஜனும் அரங்கநாதனும்.

“மாப்பிள்ளை பையன் ஜாதகத்தையும் கொண்டு வந்திருந்தா பொருத்தமும் பார்த்து இருப்பேன்…  சரி குடுங்க” என்று ஆரண்யாவின் ஜாதகத்தை பார்த்து விட்டு  ஒரு வருடம் கழித்து தான் திருமண யோகம் கூடி வருவதாக கூறியவர் அத்துடன் தீர்த்தன்யா இளம்பரிதி ஜாதகத்தையும் பார்த்து விட்டு  பெண் எடுத்து பெண் கொடுத்தால் இளம்பரிதிக்கு வாழ்வு சிறப்பாக அமையும் என்றார்.  ஆனால் ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்றிட அவர்களும் சரி என்று சம்மதித்தனர்.

அகிலாண்டத்திடம்  ஜோதிடர் கூறியதை சொல்ல ., 

“அது ஒண்ணும் பிரச்சினை இல்லை அண்ணே….  அவங்க வீட்ல  இப்ப ஒண்ணும் அவசரப்படலை….  பொறுமையா நிதானமாக பண்ணலாம்….  இப்ப வயசு இருவத்தி ஒண்ணு தானே ஆகுது “

“அம்மா இருவத்தி ரெண்டு ஆவுது….  பரிதிக்கு இருவத்தி நாலு வயசு ஆகுது…  அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்… “என கனகம் சொல்ல எல்லோரும் சரி என்றனர்.

பெண் பார்க்கும் படலம் தள்ளிப் போனது.

அப்பாடா என்றிருந்தது சகோதரிகளுக்கு….  பரிதியோ இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இருந்தான்.

திருவிழா முடிந்ததும் திருச்சி கிளம்பிட அகிலாண்டத்திற்கு மனமே வரவில்லை பேரப்பிள்ளைகளை அனுப்ப…. 

“நீ பேசாம எங்க கூட வந்து இரு அம்மாச்சி….  ஏன் இவ்வளவு கஷ்டப்படுற??” என ஆரண்யா சொல்ல

“பொண்ணை கட்டி கொடுத்த இடத்தில் போய் தங்கினா நல்லாவா இருக்கும்….  படுத்துகிட்டேன்னா  கஞ்சி ஊத்துங்க அது போதும்…”  என வழி அனுப்பி வைத்தார்.

ராகவும் சென்னை கிளம்பினான்.  முகிலுக்கு அழைத்து களைத்து போனான் ….  அவனது கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

தீர்த்தன்யாவை பார்த்ததை முகிலிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டான் ராகவ்.   ஆனால் அதை மறந்து போவான் என்று அவனே நினைக்கவில்லை. 

சென்னை வந்ததும் முகிலை ஒரு வழி ஆக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு பயணம் செய்ய…  சென்னையும் வந்தாயிற்று.  முகில் ராகவ் வந்த ஒரு வாரம் கழித்து தான்  சென்னை வந்தான். 

“வாங்க சார் என்னை ஞாபகம் இருக்கா… நான் தான் ராகவ்…. “என அறிமுகம் செய்ய  சிரித்துக் கொண்டே  .,”சாரி டா….  ஃபோன் ரிப்பேர் அதனால தான் காண்டாக்ட் பண்ண முடியலை….   ரொம்ப சாரிப்பா…  அப்புறம் உனக்கு ஒரு குட் நியூஸ் கொண்டு வந்திருக்கேன்…  என்னனு சொல்லு பார்ப்போம்….  “

“தெரியலை சஸ்பென்ஸ் வைக்காமல் நீயே சொல்லிடு….” 

“உனக்கு வெளிநாட்டு ல வேலை வாங்கி இருக்கேன்….  என் ப்ரெண்டோட அண்ணா மூலமா ஆனால் ஒரு வருஷம் மட்டும் தான்….  அதுக்கு அப்புறம் மறுபடியும் இங்கே வேலைக்கு வரலாம்….  நான் நீ கண்டிப்பாக வருவன்னு சொல்லிட்டேன்….  அடுத்த வாரத்திலேயே போகனும்….  வீட்டில் பேசிடு…  “

“இல்லடா அது வந்து எப்படி நான் போக….” என இழுத்தவனை முறைத்து விட்டு .,”நீ போற அவ்வளவு தான்….  பாஸ்போர்ட்  இருக்குல்ல…..  விசா டிக்கெட் எல்லாம் அவங்க ஏற்பாடு அதற்கான. பணத்தை அவங்க உன் சம்பளத்தில் இருந்து பிடிச்சுப்பாங்க….  உன் மொத்த கடனும் அடைஞ்சிடும்….  சரியா” என்க “ம்ம்ம்ஹ்ம் சரி “என சம்மதித்தான் ராகவ்.

வீட்டில் பேசி சம்மதிக்க வைத்து அடுத்த வாரமே மலேசியாவிற்கு கிளப்பினான் ராகவை….

நண்பனை கட்டிக் கொண்டு கண் கலங்கியபடி விடை பெற்றான் ராகவ். 

“ராகவ் ஏர்போர்ட்டிற்கு வரலைனு கோவிச்சுக்காத டா வீட்டில் வர சொல்லி இருக்காங்க நான் போயாகனும் நீ அங்க போனதும் உன்னை பிக் அப் பண்ண வினித் அண்ணா வருவாங்க ரூம் எல்லாம் அலாட் பண்ணிடுவாங்களாம் மிச்சத்தை நீ அவங்க கிட்ட பேசிக்க…   திரும்பி நீ வரும் போது உனக்கு நிறைய சர்ப்ரைஸ் காத்திருக்கு… “என வழி அனுப்பி வைத்தான் …. முகில்.

நண்பன் இல்லாத அறை வெறுமையாக இருந்தது முகிலுக்கு.  வேறு வழியின்றி தங்கினான் முகில்.

“ஆரு நான் முகில்” என ஆரண்யாவிடம் பேச எதிர் முனையில் விசும்பல் சத்தம் கேட்க

“ஆரு ப்ளீஸ் அழாத டி….  வேலை இருந்தது டா ஃபோன் வேற ரிப்பேர் அதான் மா…. ப்ப்ச் அவளை  அழாதன்னு சொல்றேன் இல்ல “

“போங்க நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா….  அப்படி என்ன தான் வேலை ஒரு கால் பண்ணி பேச முடியாத அளவுக்கு….  “

“சரி சாரி….  ரொம்ப சாரிம்மா …. இனி தினமும் பேசுறேன் போதுமா !!”

“ம்ம்ம்ஹ்ம்…  “

“சாப்டியா…. ??”

“ம்ம்ம்ஹ்ம்…”

“எனக்கு கிஸ் பண்ணியா ??”

“ம்ம்ஹ்ம்… ஹான்  என்ன…?? ” பெரிதாய் அதிர்ந்தாள். 

“ஹாஹாஹா” என பெரிதாக சிரித்தவன் .,”சும்மா  எல்லாத்துக்கும் ம்ம்ம்ஹ்ம் னு சொல்லிட்டு இருந்தியா அதான்…  என்ன பண்றா உன் வாயாடி சிஸ்டர் “

“அவ யாராவது வர்றாங்களான்னு பார்த்துட்டு இருக்கா …. சரி நான் வச்சிடுறேன் அம்மா வந்திடுவாங்க…. ” என்றதும் “ஹே நாளைக்கு நான் திருச்சி வரேன்…  சங்கீதாஸ் வந்திடு…. “

“நாளைக்கு சன்டே கண்டிப்பாக வர முடியாது முகி…  வீட்டில் கண்டிப்பாக சந்தேகம் வந்திடும்… “

“நீ  போனை தீரு கிட்ட தா நான் சொல்றேன் “என்றிட தீருவிடம் ஃபோனை கொடுத்தாள்.

“சொல்லுங்க முகில் சார்… “

“தீரு ப்ளீஸ் ஏதாவது பண்ணி உன் சிஸ்டரை வெளியே அழைச்சுட்டு வந்திடு…. ” கெஞ்சினான் முகில்.

“சரி சரி கூட்டிட்டு வரேன்…” என  வீட்டில் பொய் சொல்லி அழைத்து வந்து விட்டாள்.

சங்கீதா உணவகத்தில் முகில் ஆரண்யாவை தனியே விட்டு விட்டு  .,”ஆரு நான் அரை மணி நேரத்தில் வந்திடுவேன் பேசுறதை சீக்கிரம் பேசி முடிச்சிடுங்க “என்றவள் திரும்ப.,” தீர்த்தன்யா அரை மணி நேரம் பத்தாது “என்றான் பாவமாக

“ஹலோ சார்….  அரை மணி நேரத்தில் பேசிடுங்க இல்லை…  அடுத்த முறை பார்க்க சான்ஸ் கிடைக்காது எப்படி வசதி ??”

“அம்மா தாயே தெரியாமல் கேட்டுட்டேன்….  ஹாஃப் அன்ட் ஹவர் தானே அனுப்பி வைக்கிறேன் ஓகே… ” 

“அதெல்லாம் சரி….  எனக்கு ஒரு  ஃபலூடா ஆர்டர் பண்ணிடுங்க…. ” 

“ஒண்ணு போதுமா….  ??”

“ஃபேமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தா கூட நோ அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்…. !!” 

“தீரு சும்மா இரு டி….  முகி அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்…  ஏய் நீ கிளம்பு அரை மணி நேரத்தில் நானே வரேன்… “

“யப்பா ஆத்துக்காரர் காசை ஷேவ் பண்றிங்களோ….  போடி…  முகி மாமா நீங்க வாங்கி தாங்க!! “

“எது மாமாவா ??”

“அப்புறம் அக்காவை கட்டிக்க போறவர் மாமா தானே என்ன முகில் சார் ??”

“அடி வாங்குவ டி….  “சொன்னவள் நாணத்தில் சிவந்தாள். 

“ஆரு செல்லம் வெட்கம் எல்லாம் படுறாளே…!!”  சிரித்தவள் .,”இதிலேயே கால் மணி நேரம் ஆகிடுச்சே சரி பேசுங்க வெளியே இருக்கேன்..”

“சரி ஒரு வெணிலா ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிடு போதும் “என்றாள் ஆரண்யா.

“ப்ப்ச்…. ஆரு விடு….  தீரா நீ போய் சாப்பிடு நான் ஆர்டர் பண்றேன் “என அனுப்பி வைத்தான்.

“நீங்க ரொம்ப செல்லம் தராதீங்க முகி அவ ஓவரா ஆடுவா…” 

“அடடா அவ இல்லைனா நம்ம இப்படி மீட் பண்ண முடியுமா…  ” 

“ம்ம்ம்ஹ்ம்…  “

“ஆரு….  இங்கே பாரு “

“சொல்லுங்க…”

“ப்ப்ச் நிமிர்ந்து பாருமா …!!”

“இனிமேல் அடிக்கடி பார்க்க வர முடியாது டா….  ஏதாவது மீட்டிங் அது போல பார்த்தா தான் உண்டு…  நான் உனக்கு தனியா ஃபோன் வாங்கி தரவா…. ??”

“அதெல்லாம் வேண்டாம் முகி வீட்ல தெரிஞ்சுது அவ்வளவு தான்…  உங்க வீட்டில் சீக்கிரம் நம்ம விஷயத்தை பத்தி பேசுங்க முகி….  ஏற்கனவே மாப்ள பார்க்கிறேன் னு தாத்தா வேற ஆரம்பிச்சுட்டார்…. ஏதோ அந்த ஜோசியர் ஒரு வருஷம் கழிச்சு தான் நல்ல நேரம் வருதுன்னு சொன்னதால எந்த ஸ்டெப்பும் எடுக்காமல் இருக்கார் இல்லாட்டி இந்நேரம் எல்லா வேலையும் பண்ணி கல்யாணம் வரை வந்து இருக்கும்…  “அவளது பேச்சில் பயம் தெரிந்தது.

“வீட்டில் பேசனும் ஆரு….  ஆனால் இப்ப முடியாது டா….  உனக்கு என்னை பத்தி நிறைய சொல்லனும்….ஆனால்   இப்ப என்னால எதுவும் சொல்ல முடியாது புரிஞ்சுக்க…. இன்னும் ஒரு வருஷம் இருக்குல்ல அது முடிந்ததும் நம்ப விஷயம் பத்தி பேசலாம்…. ” 

“சரி சரி எதுவும் கேட்கலை ஆனால் பொய் சொல்லி இருந்தீங்கனு தெரிஞ்சது அவ்வளவு தான் முகி நிஜமா அப்புறம் யார் சொன்னாலும் உங்களை ஏத்துக்க மாட்டேன் நினைவு இருக்கட்டும்….” என தீவிரமாக சொன்னவளை கலவரமாக பார்த்தான் முகில்.

“ஆரு….  நான் பொய் சொல்லி இருந்தா கண்டிப்பாக அதுக்கு ஒரு காரணம் இருக்கும்…..  அதை நீ ஏத்துக்கனும் “சற்று பயத்துடனேயே கூறினான்.

“முயற்சி செய்கிறேன்” என்று சாதாரணமாக கூற முகிலுக்கு தான் உள்ளே பயம் பரவியது.

இங்கே வெளியே ஃபலூடாவை வெளுத்து வாங்கி கொண்டிருந்தாள் தீர்த்தன்யா.

  வாசலில் இருந்து இளம்பரிதி தன் நண்பனுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான்.

……. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்