
இந்த அரசியல் மனிதனை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்பது அருணாசலத்திற்கு தெரிந்த நொடிகள் இது. இரண்டு நாட்கள் உயிர் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக கண்விழித்தாள் சாதுர்யா. அவள் உடல் நிலை மிகவும் சிக்கலாக இருந்தது. ஆனால் அவள் அடிமனதில் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. ஸ்கந்தன் குரல் அருகில் கேட்காமல் சற்று தவித்துப் போனாள்.
சமீபகாலங்களில் மனதிற்கு ஆறுதலாக இருப்பவன் அவன் மட்டும்தான். அவனுக்கும் அவளுக்குமான பந்தம் உமாவுக்கு அவள் மகனுக்குமான பந்தத்தை போன்று இறுக்கமாக தான் இருக்கிறது. அவன் இப்பொழுது குழந்தை இல்லை தான், பதினெட்டு வயது வாலிபன். ஆனால் அவள் கண்களுக்கு அவன் குழந்தையாக தான் தெரிகிறான். தான் அவனை விட எட்டு வயது தான் பெரியவள் என்பதை கூட மறந்து விட்டிருந்தாள்.
அவள் உயிர்த்தெழுந்து வருவதற்கு அவனும் ஒரு காரணம். அவ்வளவு உடல் தேறி வருவதற்குள் தேர்தல் நடந்து முடிந்து விடும். சற்று உட்கார முடியும் நிலையில் அருணாச்சலம் சிவனும் வெளியில் நடந்தவற்றைச் சொல்ல பெண்ணின் முகத்தில் அதிருப்தி. கேவலம் எனது உயிருக்காக இத்தனை மோசமாக நடந்து கொண்டார்களா கட்சி தொண்டர்கள் என்று அவளுக்கு சலிப்பு வந்துவிட்டது. தனக்கு இத்தனை பெரிய வரவேற்பு இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை ஆனால், நாட்டின் நல்ல குடிமக்களாக தன் கட்சி தொண்டர்கள் ஒருவர் ஒருவரும் இருக்கவேண்டும் என்று அவள் மிகவும் எதிர்பார்க்கிறாள்.’ ராணுவக் கட்டுப்பாடு தனது கட்சியில் அவசியம்’ என்று அவள் உணர்ந்த தருணம்.
சாதுர்யா விழித்த பிறகு ஸ்கந்தன் அவளை விட்டு நகரவேயில்லை. அவள் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று ஒரே புலம்பல். எப்படி அவனை சமாளிப்பது என்று அவளுக்கு புரியவில்லை. மெல்ல மெல்ல தனது எண்ணங்களை அழுத்தமாக புரிய வைத்தாள் அவனுக்கு. நாட்டின் நலனுக்கு இளைஞர்களின் தேவை,எவ்வளவு முக்கியம் என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். மருத்துவமனையில் இருந்த நாட்களில் தன் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டிருந்தாள். அவளின் சிறுவயது, படிப்பு கல்லூரி,லட்சியம் ஒன்றுவிடாமல் ஒரு நல்ல தோழனிடம் பகிர்ந்து கொள்வது போல். அவளது வார்த்தைகள் எல்லாவற்றிலும் விரவி வந்திருந்தது ரங்கனின் பெயர். அவள் பேச்சில் இருந்து ஸ்கந்தன் புரிந்துகொண்டது ரங்கனுக்கும் அவளுக்கும் இருந்த நேசத்தை. இப்பொழுது முழுமையான ஆண்மகனாக இருக்கும் ஸ்கந்தனுக்கு அவள் பேச்சுகள் புரியாமல் இருக்க சாத்தியமில்லை. அவனுக்கு தன் அப்பா மேல் கோவம் கூடிக்கொண்டே போனது.
‘ஒருவேளை சாதுர்யாஅம்மா ரங்கன் சாரை திருமணம் செய்து கொண்டிருந்தால் அவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை எல்லாம் வரப்போகிறது’ என்ற துக்கம் பொங்கியது. சாதுர்யா ஏன் தன் அப்பாவை திருமணம் செய்துகொண்டு இங்கு வந்து இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியாமல் இல்லை. புரிந்தும் புரியாமலும் இருந்த விடலை பருவ சமாச்சாரங்கள் முழுமையாக புரிந்து பொழுது அவன் தன்னுள் நொறுங்கிதான் போனான். தன் மகள் வயதில் இருப்பவளை எப்படி இவ்வாறெல்லாம் செய்ய முடியும் என்று அவன் யோசிக்காத நாள் இல்லை. பதினாறு வயதில் ஒருவிதமாக புரியும் விஷயங்கள் இருபது வயதில் தெளிவாக தெரிந்து விடும். பெண்ணவளை பார்க்கும் போதெல்லாம் ஸ்கந்தனின் மனதில் குற்ற உணர்ச்சிதான். அவளுக்கு என்ன பரிகாரம் செய்வது என்பதுதான் அவனுக்கு புரியவில்லை.
ஒரு மாதம் கழித்து மீண்டு வந்தவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டான் ஸ்கந்தன். மாலதி வெங்கடேசன் இருவரும் கிளம்பி தில்லிக்கு சென்றார்கள். மாலதிக்கு தன் மகளை விட்டு செல்வதற்கு மனமில்லை. அருணாச்சலம் தைரியம் சொன்னதால் லக்ஷ்மி -தாமு கூட கிளம்பி ஆயிற்று . ஸ்பெயினில் இருக்கும் ரங்கனுக்கு தன் மனைவியை எப்படியாவது சந்தித்தாக வேண்டும் என்று வெறியே வந்துவிட்டது. மனதில் இருப்பதை சாதிக்காமல் விடுவதற்கு அவன் பழைய ரங்கன் இல்லையே! ஸ்பெயினில் இருந்து இந்தியாவிற்கு பல கோடி ரூபாய்கள் சம்பாதித்துக் கொடுக்கும் தொழில் வல்லான் அவன். அவன் கோட்டை விட்ட ஒரே விஷயம் அவன் மனைவி மீதான அவனது உரிமை.
சாதுர்யாவை ரேணுகாவும் அவள் கணவரும் அடிக்கடி வந்து பார்த்து விட்டு சென்றார்கள். அவர்களிடம் ரங்கனை பற்றி பேசுவதற்கு பெண்ணுக்குள் தயக்கம் உண்டு. ஆனால் அவர்கள் கடைசியாக வந்திருந்தபோது, “அத்தானுக்கு எப்படியாவது ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்து விடுங்கள். அப்போது தான் நான் நிம்மதியாக இருக்க முடியும்” என்று கதறி விட்டாள் சாதுர்யா அவள். தனது கணவனை இன்னொருத்திக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்கும் மனைவியின் நிலை வார்த்தைகளால் வடிப்பதற்கு இல்லை இதே துன்பத்தை தான் அவனும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பது பெண்ணுக்கு புரியாமல் இல்லை. ஆனால் இவளோ சாதிக்கப் பிறந்தவள். திருமண வாழ்க்கை சரியாக அமைய கூடாது என்பது அவள் தலைவிதி. அதை மாற்றுவதற்கு அவளுக்கு இஷ்டமில்லை. அதோடு அத்தானை திருமணம் செய்துகொண்டு அவனுக்கு தண்டனை கொடுப்பதற்கு இவள் யார்?
ரேணுகாவுடன் சாதுர்யா பேசிக்கொண்டு இருப்பவற்றை கேட்டுக்கொண்டு வந்துவிட்டான் ஸ்கந்தன். அவள் அறையில் நுழைவதற்கு அவனுக்கு என்றுமே அனுமதி தேவைப்படவில்லை.
அவன் கேட்டதில் சாதுர்யா ரங்கன் இடையே நடந்த திருமணமும் அடக்கம். ஸ்தம்பித்து நின்று விட்டான் அவளது பெறா மகன்.இவ்வளவு நடந்த பிறகும் கூட பெண்ணை கைவிடாமல் திருமணம் செய்துகொண்ட ரங்கன் மீது ஸ்கந்தனுக்கு கோவில் கட்டும் அளவுக்கு மரியாதை வந்து விட்டது.
பாண்டிச்சேரியின் பிரபல மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவம் பயிலும் மாணவன் ஸ்கந்தன். ஆனால்,சாதுர்யாவை விட்டு விட்டு செல்வதற்கு அவனுக்கு மனமில்லை. சென்னைக்கு வந்து விடுகிறேன் என்று அவன் சொன்னால் அவனம்மா அவனை அவ்வாறு அனுமதிப்பதற்கு இல்லை. ஒருவாறாக எனது உடல் நிலையை காரணம் காண்பித்து இதற்கு மேலும் நீ விடுப்பு எடுக்கக் கூடாது என்று வற்புறுத்தி அவனை அனுப்பி வைத்தாள் சாதுர்யா.
கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. அதனால் அவனுக்கு ஒன்றும் பெரிதாக பாதிப்பு இல்லை. மனமே இல்லாமல் கிளம்பிச் சென்றான் ஸ்கந்தன். அவன் மனதிற்குள் எப்படியாவது தான் ஒரு ஐ பி எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவு அடி ஆழத்தில் உண்டு. ஆனால் தன் அம்மாவின் ஆசைக்காக தான் மருத்துவம் சேர்ந்தான். சாதுர்யா மருத்துவமனையில் இருந்த பொழுது மருத்துவத்தின் அவசியம் அவனுக்கு புரிந்தது. ஆனால் தனது கனவை நோக்கி எப்படி பயணம் செய்வது என்பது தான் புரியவில்லை. சில சமயங்களில் இப்படித்தான்… வீட்டில் இருப்போரின் கனவுகளுக்கும் தனது லட்சியம்களுக்கும் இடையே இளைஞர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். தனது லட்சியம் பற்றி அவன் சாதுர்யாவிடம் வாயைத் திறந்து சொல்லியிருந்தால் அவளும் புரிந்துகொண்டு அவனுக்கு உதவி இருப்பாள். ஆனால் அவனுக்கு ஏனோ வாயைத்திறந்து சொல்வதற்கு தயக்கம். சொல்லாத வார்த்தைகள் எப்படி புரியும்?

