Loading

குமரி – 4

செழியன் சண்டை ஆரம்பித்ததும் வெளியில் சென்றவன் நேராக அவன் கால்கள் நின்றது ஒயின் ஷாப்.

வீட்டில் நடக்கும் பிரச்சனையை கண்டு ஒன்றும் கூற முடியாமல் அமைதியாக
இருக்கும் தன் அவ நிலையைக் கண்டு தன் மேலேயே கோபம் வந்தது.

இவனும், இவனின் அப்பா சங்கரன் இருவரும் ஒரே ரகம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்கள்.  அதே போல் எதையும் முயற்சி செய்து பார்க்காதவர்கள். தனக்கு இடைத்தே போதும் என்று நினைப்பவர். ஏனென்றால், இவர்கள் வெகுளி.மிக சுலபமாக இவர்களை ஏமாற்றி விடுவார்கள் .

நாச்சியார் சூட்டிகை ஆனவர். அவருக்கு பொறுமையும் ஜாஸ்தி. கல்யாணம் ஆனதும் கணவன் சொல்வதே மந்திரம் என்று நினைத்து தன்னையும் அவரை போல் மாற்றி கொண்டார்.

சென்மொழியும் நாச்சியாரை போல் தான். ஆனால், இக்காலத்திற்கு ஏற்ப,பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று நினைப்பவள். அதனால் சிறு வயதிலிருந்தே துடுக்குதனமாக பேசுவாள் .செழியனின் கல்யாணத்திற்கு முன்பே அவளை அடக்கி வைத்தனர்.

பள்ளியில் ஏதோ பையன் வம்பிழுத்தற்காக அவன் மண்டையை உடைத்ததும் இல்லாமல் அவனின் தந்தையின் மண்டையையும் உடைத்து விட்டாள்.
அதிலிருந்தே அவளை பெண் பிள்ளை என்று அதட்டி உருட்டி அடக்கி வைத்து விட்டார் நாச்சியார் .

முல்லையோ இருவரின் சுபாவங்களை கலந்து பிறந்தவள். நாச்சியாரின் பொறுமையும் சூட்டிகையும், சங்கரனின் வெகுளியும்  நிறைந்து பிறந்தவள். அதனாலேயே முல்லையை அனைவருக்கும் பிடிக்கும்.

மஞ்சுளா ஒரே பெண்ணாக வளர்ந்தவள். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவளும் கூட. கல்லூரியில் படிக்கும் பொழுது செழியனின் அமைதியை கண்டு அவனை விரும்பினாள். பெற்றோர்கள் எவ்வளோ கூறியும் மீறி இவனை கல்யாணம் செய்து கொண்டாள். பின்பே, நிதர்சனம் புரிந்தது அவளுக்கு . அவள் அன்னையும் ஏற்றி விட, செழியனை பிரித்தாள்.

என்ன தான் அன்னை பாசம் காண்பித்தாலும், வசதியாக ஒரே பெண்ணாக வளர்ந்தவள் தனக்காக சண்டை போட்டு  வந்த மனைவி ஒரு படி  மேலே தெரிந்தது. அதோடு, இயல்பிலேயே எந்த வம்புதும்புக்கும் போகாதவன் இப்பொழுது நடக்கும் மாமியார் மருமகள் சண்டையிலும் நுழைய மாட்டான்.

ஆனால், அவனுக்கே தெரியும் மஞ்சுளா நடந்து கொள்வது தவறு என்று. அதுவும் சென்மொழியை சீண்டுவது ஒரு நாள் இவளுக்கே வினையாகும் என்று. மஞ்சுளா செய்வதற்கு மஞ்சுளாவே அனுபவிக்கட்டும் என்று நினைத்து அமைதியாகவே இருந்து விட்டான்.

இவ்வாறு வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கும் கடவுள் இன்னல்களை கொடுத்து விட்டார். ஆனால், சமாளிக்கும் தைரியம் தான் இல்லாமல் இருக்கிறான் செழியன்.

அதை மஞ்சுளாவிடம்  எப்படி சொல்வது என்று யோசித்து கொண்டே பானங்களை இறக்கி கொண்டே இருந்தான்.

பேங்கில் ஒருவருக்கு உதவி செய்வதற்கு லஞ்சம் வாங்கினான். ஆனால், அவனால் அந்த உதவியை செய்ய முடியவில்லை. அதனால் வீட்டில் வைத்திருக்கும் ஐந்து லட்சம் ரூபாயை எடுக்க சென்றான்.

ஆனால், அவனுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. வீட்டினுள் நுழையும் போதே  புதிதாக வாங்கிய டிவியும், வாசிங் மெசினும், மஞ்சுளாவிற்காக வாங்கிய தங்க தாலி சரடும், சேலையையும் பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.

வாசலிலேயே நின்றவனை அழைத்து நிகழ்வுக்கு கொண்டு வந்தார் மஞ்சளாவின் அப்பா முருகேசன். “மாப்பிள்ளை , என்ன அங்கேயே நிக்கிறீங்க? உள்ளே வாங்க !” என்று சிரித்து கொண்டே அழைத்தார்.

“என்ன மாப்பிள்ளை அப்படி பாக்குறீங்க? ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு அப்பாவாக என் மகள் சந்தோஷமா இருக்காளா இல்லையானு ஒரு பயம் இருக்கும்ல? நானும் சாதாரண மனுஷன் தான் மாப்பிள்ளை. அதனால் தான் உங்கிட்ட கொஞ்சம் சத்தமா பேசிட்டேன் . தப்பா நினைச்சுக்காதீங்க ” என்று அவனை ஒரு சேரில் அமர வைத்து தானும் அவன் அருகில் அமர்ந்தார்.

“டேய், என்னடா பண்ணுற? என் மகள கொஞ்சமாச்சும் சந்தோஷமா வச்சு இருக்கீயா? எப்போ வீட்டுக்கு வந்தாலும் என் மகள் லிஸ்ட் சொல்லுறா . அதில்லை , இதில்லைனு . வாங்கி கொடுக்குறதுல எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா, புருஷனு நீ எதுக்கு இருக்க ? “என்று இதே வாசலில் நின்று இவர் கத்தியது நினைவலைகளாக தோன்றியது.

நினைத்து கொண்டிருக்கும் பொழுதே மஞ்சுளாவின் அம்மா சுந்தரி “மாப்பிள்ளை
இந்தாங்க குடிங்க ” என்று கூறி ஒரு டம்ளரை நீட்ட, டம்ளரின் உள்ளே எட்டி பார்த்தான். உடனே, “மாப்பிள்ளை, எலும்பு சூப்பு தான். குடிங்க” என்று அவர் சிரித்துக் கொண்டே டம்ளரை நீட்ட,

“இதுக்கு தான் தலப்பாடா அடிக்கக்கிட்டேன் அவன் வேணாம், அவன் வேணாமுன்னு. கேட்டீயா ? இப்ப பாரு நீயும் சிரமம்படுறதும் இல்லாமல் என்னையும் சிரமம்படுத்துற. இதெல்லாம் பாக்கணும் எனக்கு என்ன தலைவிதியா ” என்று கூறி முந்தானையால் கண்ணீரை துடைத்து மகளை கட்டியணைத்து அழுதார்.

பின்பு செழியனிடம் திரும்பி ” ஒழுங்கா வச்சுக்க முடியலைனா எதுக்கு கல்யாணம் அதுவும் எதுக்கு லவ் பண்ணி கல்யாணம்
பண்ணணும்? பொண்டாட்டி ஆச படுறத எல்லாமே வாங்க வேணாம். ஒன்னு இரண்டாச்சும் வாங்க வேணாம். இப்படியா பண்ணுறது ” என்று அவர் புலம்பி கொண்டிருக்க மஞ்சுளா தண்ணீர் எடுத்து அவனுக்கு கொடுக்க சென்ற பொழுது ” “ஆமா, இப்படி கவனிச்சுக்கிட்டே இருந்தா இப்படி தான் இருக்கும் ” என்று முணுமுணுத்து விட்டு சென்றார்.

அதன் நினைவுகள் வந்து போன போது செழியனுக்கு சிரிக்க மட்டுமே முடிந்தது. கையில் டம்ளரை வாங்க, இம்மாதிரியான மரியாதை இன்று வரை கிடைக்கவில்லையே! ஆனால் , இதுவும் நன்றாக இருக்கிறதே ! என்று டம்ளரை பார்த்துக் கொண்டே நினைத்தான்.

ஆனால், இவன் கடவுளுக்கு  பிடிக்காத பிள்ளைச் செல்வம் போல, அப்படி அவன் சந்தோஷப்படும் நேரம்  திடீரென்று டி.வி ஒலி எழுப்பியவுடன் தான் நினைவுக்கு வந்தது அவனிடம் பணம் கொடுக்க வேண்டுமென்று.

அந்நேரம், மஞ்சுளா சிரித்த முகமாக வந்து “ஏங்க, சாப்பிட வாங்க ” என்று கூறிய நொடி மஞ்சளாவின் அப்பாவும், அன்னையும் “வாங்க மாப்பிள்ளை சாப்பிட ” என்று அழைத்தனர்.

மறுப்பு கூறாமல் சென்றவனுக்கு அங்கு விருந்தே தயாராகி இருந்தது. இப்படி பட்ட உணவு வகைகள் அவர் அப்பா இருந்த காலம் சாப்பிட நினைவு அவனுக்கு. வயிறார உண்டு மகிழ்ந்தான். பின்பு, சிறிது நேரம் ஓய்வு எடுங்கள் என்று கூறி அவனை அறைக்கு அனுப்ப , படுத்துக் கொண்டே சிந்தித்தான்.

பின்பு, தான் எடுத்த முடிவு சரி  தான் என்று நினைத்து கதவை திறந்து வெளியில் வந்தான்.அங்கு மஞ்சளாவும், மஞ்சுளாவின் பெற்றோர்கள் உறங்கி கொண்டிருந்தனர். அவர்களை தொந்தரவு செய்யாது சமையலறைக்கு சென்று மதிய சாப்பிட்ட உணவு எதுவும் இருக்கிறதா என்று பார்த்தான்.

அனைத்து பதார்த்தங்களுமே இருந்தது. அதில் சிக்கன் 65 யும், கொஞ்சம் மீன்  குழம்பும் எடுத்து கொண்டு அவன் சென்றது அவன் அன்னையின்  வீட்டிற்கு.

கதவைத் தட்ட காத்திருக்க வைக்காமல் நாச்சியார் வெளியில் வந்தார். என்றாவது மனதிற்கு தோன்றினால் , இப்படித்தான் அம்மாவுக்கு எதுவாகு உதவுவதற்கு இந்நேரம் வருவான்

ஏனென்றால், கடைக்கு செல்பவர் வயதின் காரணமாக களைப்புத் தீர மதிய பொழுது ஒய்வு எடுக்க வீட்டுக்கு வருவார் மதியப் பொழுதில் . முல்லை கடையில் இருப்பாள், சென்மொழி கல்லூரியில் இருப்பாள். அதேபோல், மஞ்சளா அன்னை வீட்டிற்கு சென்று விடுவாள் இல்லையென்றால் வீட்டில உறங்கி கொண்டிருப்பாள்.

செழியன் அவன் அன்னைக்கு செய்வது இம்மூன்று பிராட்டியாருக்குமே பிடிக்காது. அதனாலேயே , யாருக்கும் தெரியாமல் செய்வான். அதே போல் தான், இன்றும் வந்துள்ளான் என்று நினைத்து  அமைதியாக கதவை திறந்து விட்டு படுக்கையில் அமர்ந்தார்.

வந்தவன், நேராக சமையலறைக்கு சென்று குழம்பையும், சாதத்தையும்  சூடு பண்ணி தட்டில் சிக்கன் 65 – யும் சேர்த்து வைத்து அன்னையின் கையில் கொடுத்தான்.

“என்னடா இது, என்ன விசேஷம்? எதுக்கு இதுலாம்? “என்று கேட்டாலும் சாப்பிடுவதை நிறுத்தவில்லை.

அன்னையைப் பற்றி தெரியும் என்பதால் அமைதியாக வேடிக்கை பார்த்தான்.

“உண்டு முடித்து, பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு அவர் வந்தபொழுது இன்னும் இவன் ஏன் இருக்கிறான் என்று யோசித்து விட்டு “என்னடா யோசனை பலமா இருக்கு ? ” என்று கேட்டுக்கொண்டே வந்தமர்ந்தார்.

செழியன்”ஒன்னுமில்லை மா! ஆபிஸில் ஒரு பஞ்சாயத்து ஆயிடுச்சு “

நாச்சியார் “என்ன பர்சாயத்து, நீ தான் பெரிய பதவில இருக்கேனு சொன்ன.உன்னால சமாளிக்க முடியாதா ? “

செழியன்” அம்மா, அதான் மா ! பெரிய பதவில் இருக்கேனு தெரியும்ல. அதனால், வேண்டப்பட்டவர் ஒருத்தவர் ஒரு உதவி கேட்டார். நான் செஞ்சு தரேனு சொன்னேன். ஆனால், என்னோட மேல் அதிகாரி லஞ்சம் கேட்டார்.சரின்னு அவன்ட்ட சொல்லி லஞ்சம் வாங்கி கொடுத்தேன்.”

நாச்சியார் “நீ ஏன்டா இந்த வேலைலாம் பாக்குற.ச்சை…. லஞ்சம் அது இதுன்னு “

செழியன் உடனே “அம்மா, அவன் எனக்கு வேண்டப்பட்டவன். ஒரு அவசரத்துக்கு கேட்டானு என் சீனியர்ட்ட கேட்டேன். ஆனா, அந்தாளு சரியான ஃப்ராடு  மா! ரூபாயை வாங்கிட்டு வேலையும் பண்ணாம
டிரான்ஸ்வர்  வாங்கிட்டு போய்ட்டான் “

நாச்சியார் ” ஆத்தாடி ” என்று கூறி நெஞ்சில் கை வைத்தார்.

செழியன் தன் அம்மாவின் கைகளைப் பிடித்து கண்கள் கலங்க ” அம்மா, இப்போ என்ன பிடிக்கிறான் மா! காசு எங்கனு கேக்கிறான் மா!”

நாச்சியார் “என்னால உங்களுக்கு பணம், காசு தான் சேர்க்க முடியல. ஆனா, படிப்பத் தான்  உங்க அப்பாவும், நானும் கொடுத்த சொத்து. அதை நீங்க மூணு பேரும் எடுத்துகிட்டீங்க . அதுல எங்க ரெண்டு பேருக்கு அவ்ளோ சந்தோசம். ஆனா, உங்களை வெள்ளந்தியாவும் , ஏமாளியாவும் வேலை செய்ய சொல்லயே பா !”என்று கூறி முந்தானையால் கண்ணீரைத் துடைத்தார்.

செழியன் “பாருமா, என் நிலைமையை! நான் உண்டு என் வேலையுண்டுனு இருக்கேன். என்னை வம்பிழுக்கிறாங்க என்னைய என்ன பண்ண சொல்லுற ” என்று அழுது வடிந்தான்.

நாச்சியார் “உன் மாமனார்ட்ட கேளேன் !

செழியனுக்கு முழி பிதுங்கி விட்டது. அதை வேறு கோணமாக நினைத்து நாச்சியாரே ” சும்மாவே ஏதாச்சும் சொல்லுவாரு. இதுல நீ ரூபாய் கூட தூக்கிப் போட்டு மிதிக்கக் கூட செய்வாரு” என்று அவரே சமாதானமாக கூறினார்.

செழியனும் அதற்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டான். மனதினில் அப்பாடா என்று நினைத்துக் கொண்டான்.

பின்பு , இருவரும் அமைதியாக செழியனே தொடங்கினான் ” அம்மா, எனக்கு ஒரு உதவி செய்றீயா?”

நாச்சியார் ” சொல்லுப்பா, என்னால முடிஞ்சதப் பண்ணுறேன் “

செழியன் ” அம்மா, நீ உன் நகையை குடேன். நான் அடமானம் வச்சு கொடுத்துட்டு அப்புறம் உனக்கு மீட்டுத் தரேன் “

நாச்சியார் ஒன்றும் கூறாமல் அமைதியாக அவனைப் பார்த்தார்.பின்பு, எழுந்து அறைக்கு சென்று விட்டார்.

இவனுக்கு தான் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கையாலாகதவன் போல் இருந்தது. தலை சுற்றுவது போல் இருந்தது. உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது.

அந்நேரம் தென்றல் வீசுவது போல் அறைக்கு சென்ற நாச்சியார் திரும்ப வந்தார் கையில் பையுடன்.

வந்தவர் “என் நகை வெறும் அஞ்ச பவுன் தான். அதை வைச்சால் பாதி காசுதான் கிடைக்கும். இதுல அடமானம்னா எவ்வளவு வரப் போகுது” என்று கேட்டார்.

செழியன்” இல்லம்மா , மீதியை வெளியில் தான் வாங்கனும். மொத்தமாக வாங்கினா மலைப்பா இருக்கும். அதான் “

நாச்சியரர் “சரிப்பா, இதுல இருப்பத்து அஞ்சு பவுன் இருக்கு “

செழியன் “என்ன? “

நாச்சியார் “ஆமாம்ப்பா, பொண்ணுக்கு சேக்கனும்ல. அதான் ஆளாக்கு பத்து பவுன் நானும் உங்க அப்பாவும் சேத்து வச்சிருக்கோம். உன் தம்பியும், அப்பாவும் அடுத்தடுத்து நம்மள விட்டு போய்ட்டாங்க ” என்று கூறி அவன் கையில் ஒப்படைத்தார்.

அதை வாங்கி பார்த்தவன் அதிர்ந்த விட்டான். அதையே வெறித்து கொண்டிருந்தவனை நாச்சியார் தான் நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தார்.

நாச்சியார்”ஏப்பா, திருப்பி தந்துருவல”

செழியன் “கண்டிப்பா மா ” என்று கூறி சந்தோஷமாக சென்றான்.

அதன் பிறகு, அன்றைய நாள் பொழுது சுமூகமாக முடிந்தது. அடுத்த நாள்  விடிந்த பொழுது வீட்டின் வெளியே ஒரே சலசலப்பு .

அச்சத்ததில் தான் நாச்சியார் குடும்பம் விழித்தது. வெளியில் வந்து பார்த்தார் நெஞ்சில் கை வைத்து நிற்கும் கருணாகரனை .

அரண்டு விட்டனர் நாச்சியார் , முல்லை மற்றும் சென்மொழி.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்