Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!

அத்தியாயம் – 6 ( 6.2 )

அமுதனையும் , வல்லி பாட்டியையும் கட்டியணைத்து கொண்ட பத்மா , தன் இத்தனை வருட மன குமுறல்களையெல்லாம் ஒற்றை வரியில் கூறி முடித்தார்.

ஆம் தன்னுடைய மூன்று  வயதிலேயே தன் பெற்றோரை ஓர் விபத்தில் இழந்தவர்தான்  இந்த பத்மா என்னும் பத்மாவதி. 

 தன் பெற்றோர்கள் இறந்தததை கூட உணர திராணியற்று ” அப்பா ஆ … , அம்மா ஆ ..ஆ…, அப்பா ஆ … எங்க ? ” என்று தன் பிஞ்சு கைகளை நீட்டி சுற்றியிருந்த உறவினர்களிடம் கேட்டுக்கொண்டிருந்த குழந்தை பத்மாவை காண்கையில் சுற்றியிருந்த அனைவரது கண்களும் பனித்துதான் போயின. 

பின் அழுது கொண்டிருந்த குழந்தையை சமாளித்து , உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பத்மாவின் பெற்றோர் உடல்களை தகனம் செய்தனர். இதற்கே சில பேர் ” நமக்கு எதுக்கு இந்த வீண் சிலவு ” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு ஒதுங்கிக்கொள்ள , மீதம் இருந்தவர்களும் எங்கே இன்னும் சற்று நேரம் இங்கே இருந்தால் குழந்தையின் பொறுப்பை தங்கள் தலையில் கட்டிவிடுவார்களோ ,  அதுவும் பெண் பிள்ளையை வளர்ப்பதென்றால் சாதாரண காரியமா ? என்றெண்ணி தாங்களும் கழண்டுகொள்ள , மூன்று வயது குழந்தை பத்மா அன்பு அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டாள்.

மணிக்கு ஒரு முறை ” அப்பா , அம்மா வேணும் ” என்று தேம்பி தேம்பி அழுது அடம்பிடிக்கும் பத்மாவை சமாளிப்பதற்குள் அங்கே வேலை செய்யும் ஆயாக்களுக்கு தான் உயிர் போய் உயிர் வரும். அதே நேரம் குழந்தை அழுவதை காணவும் மிகவும் கஷ்டமாக இருக்கும்.

பின் நாட்கள் செல்ல செல்ல , வயதுக்கேற்ற பக்குவம் வந்த பின் , பத்மா தன் தனிமையை போக்கிக்கொள்ள தன் கவனத்தை முழுவதுமாக படிப்பில் செலுத்த துவங்கினார். அதன் விளைவாக பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். 

அதிக மதிப்பெண்கள் பெற்றதால் நிச்சயம் தனக்கு ஒரு நல்ல கவர்மென்ட் இன்ஜினியரிங் கல்லூரியில் சீட் கிடைத்து விடும் என்று ஆசையாய் இருந்தார். ஆனால் அவர் நேரம் , அந்த வருடம் தீடீரென்று இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர அகில இந்திய அளவில் போட்டி தேர்வு கட்டாயமாக்க பட , டம்மி பள்ளிகளில் படித்துக்கொண்டு ( பள்ளிக்கு சென்று படிக்க தேவையில்லை , அட்டெண்டன்ஸ்கு காசு குடுத்து , நேராக பொது தேர்வு எழுதிக்கொள்ளலாம் )   பிரபல போட்டி தேர்வு நிறுவனங்களில் பல லட்சங்களை கொட்டி சேர்ந்து ராவும் பகலும் கடம் அடித்து, அதனூடே பரிட்சைக்கு முந்தைய தினம் சில கேள்விகளையும் பல வழிகளில் பணத்தை இறைத்து வாங்கி , குறுக்கு வழிகளில் தேர்ச்சி பெரும் மாணவர்களிடம் ,  சிறு வயதிலிருந்தே அரசு பள்ளியில் படித்த பத்மாவால் போட்டியிட முடியாமல் போனது.

அதன் விளைவாக நன்கு படித்திருந்தும்  போட்டி தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றார் நம் பத்மா. 

 தான் ஆசைப்பட்டது எதுவும் நிறைவேறாத ஓர் சாமானியனின் மனம் புதை குழியை விட மிகவும் ஆபத்தானது. 

பத்மாவும் இப்போது அதே நிலையில் தான் இருந்தாள். அப்புதை குழியின் பேச்சை கேட்க துவங்கிய மறுநொடி அவள் கை அவளையும் மீறி காப்பகத்தின் சமையலறையில் வைத்திருந்த கத்தியை எடுத்து தன் இடது கரத்தின் ரெடியல்  ஆர்டேரியை அறுத்துக் கொள்ள போக , சரியாக அந்நேரம் அங்கே வந்த ஆதிகேசவன் பத்மா கையிலிருந்த கத்தியை பிடுங்கி அவள் கன்னத்திலே ஓங்கி பளாரென்று ஓர் அரை விட்டார்.

ஆதி கேசவன் அடித்த வேகத்தில் கீழே விழுந்த பத்மா அப்போது தான் ஏதோ கனவுலகிலிருந்து விழித்தவர் போல்  தன் எதிரில் கோவத்தில் கண்கள் சிவக்க தெலுங்கு பட வில்லனை போல் நின்றிருந்த ஆதி கேசவனை பார்த்து மலங்க மலங்க முழித்தார். ஆதி கேசவன் தன் கோவத்தை அடக்க பெரும்பாடு பட்டும் அது முடியாமல் போக , அதுக்கும் சேர்த்து பத்மாவின் கையை வலிக்கும் படி அழுந்த பற்றி தரையிலிருந்து மேலே எழுப்பி விட்டார்.

அதே நேரம் சமையலறையில் பாத்திரம் விழுந்த சத்தம் கேட்டு , அங்கே ஓடி வந்த ஆதி கேசவனின் பெற்றோரும் அக்காப்பகத்தின் உரிமையாளர்களுமான தேவன்- தேவகி தம்பதியினர், அங்கே கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

பின் தங்களுக்குள்ளே ஏதோ பேசிக்கொண்ட தேவன்- தேவகி தம்பதியினர் , ஆதியையும் பத்மாவையும் பார்த்து ஓர் மர்ம சிரிப்பை உதிர்க்க , பத்மா அச்சிரிப்பின் அர்த்தம் புரியாமல் விழிக்க ,  தன் பெற்றோரை பற்றி நன்கறிந்த  ஆதியோ அவர்களின் அச்சிரிப்பின் உள்ளர்த்தம் அறிந்தவன் தன் தலையை இடது புறமாக ஆட்டினான்.

ஆனால் அதற்குள் நம் தேவகி தான் , ” ஐயோ , ஐயயோ இப்படி தனியா இருக்க வயசு புள்ள கைய பிடிச்சு இழுத்துட்டானே இந்த பைய. ஐயோ யாராச்சும் வாங்களேன். ” என்று காத்து கத்து கத்த , அவர் போட்ட சத்தத்தில் காப்பகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த தெரு நாய் முதற்கொண்டு அலறி அடித்துக்கொண்டு ஓடி வர , அப்புறம் என்ன நடக்கும்னு உங்களுக்கு தெரியாத பா….

நம்ம ஆதி கேசவனுக்கும் , பத்மாவதிக்கும் ” டும் டும் டும் ” நடந்து முடிந்து விட்டது….

சிறு வயதிலிருந்தே தான் பார்த்து வளர்ந்த பாத்மாவதியை தேவன்- தேவகி தம்பதியினருக்கு மிகவும் பிடிக்கும். எப்படியாவது அவளை தங்கள் மகனுக்கு மனம் முடித்து வைத்துவிட வேண்டும் என்று போராடி கொண்டிருக்க , காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாய் , ஆதி பத்மாவதி தற்கொலை செய்ய போவதை தடுக்க செல்ல , அவர்கள் இருவரும் தனியே இருக்கும் நேரத்தை பயன்படுத்தி தங்கள் ராஜதந்திரத்தை பயன் படுத்தி ஆதிக்கும் பத்மாவிற்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

ஆதிக்கும் பத்மாவதியென்றால் கொள்ளை பிரியம் தான் , இருந்தும் தான் ஓர் கல்லூரியில் பேராசிரியராய் பணியாற்றி கொண்டு தன் மாணவர்கள் வயதில் இருக்கும் பத்மாவை திருமணம் செய்ய சற்று சங்கடமாக உணர்ந்தான்.

ஆனால் தன் பெற்றோரின் கேடி வேலையால் அவளையே கல்யாணம் செய்து கொள்வது போல் ஆனதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தவன் , இனி அவளின் கனவுகள் அனைத்தையும் நினைவாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து அவளுக்கு என்றும் துணையாய் இருப்பேன் என்று உறுதி எடுத்தான்.

அதன் விளைவாய் பத்மா ஆசை பட்டது போலவே அவளுக்கு  ஒரு வருடம் பயிற்சி கொடுத்து நுழைவு தேர்வு எழுத வைத்தான். பத்மாவும் தன்னவனின் அன்பில் ஈர்க்க பட்டவர் , தானும் முடிந்த அளவு நன்றாக படித்து பரிட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று அவர் ஆசை பட்டது போலவே ஓர் நல்ல அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து  பையோடெக்னாலஜி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர் . அவர் ஆசை பட்டது போலவே ஓர் ரிசெர்ச் லேபில் சேர்ந்து தன் கடின உழைப்பிற்கு பயனாய் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். 

தன் கனவு நினைவாக தன்னை விட அதிகம் உழைத்த தன்  கணவரை பத்மாவும் மெல்ல மெல்ல காதலிக்க துவங்க , அவர்களின் காதலுக்கு சாட்சியாய் வந்திதாவும், கௌரியும் பிறந்தனர். 

என்ன தான் தன் மாமனார் , மாமியார் மற்றும் தன் கணவர் தன் மேல் இத்தனை அன்பாக நடந்து கொண்டாலும் , பத்மாவின் ஆழ் மனதிற்குள் , அந்த அன்பு தன் மேல் அவர்கள் கொண்ட பரிதாபத்தினாலோ என்ற ஓர் தாழ்வு மனப்பான்மை ஆழ பதிந்து இருந்தது.  அது தான் இன்று தன்னை போன்ற அனாதையான  அமுதனை கண்டவுடன் வெடித்து சிதற காரணமாக இருந்தது. 

 

பத்மாவதியின் கடந்த காலம் அமுதன் வந்திதாவின் நிகழ் காலத்தை மாற்றுமா ? ….

தொடரும் …

உங்கள் கமெண்ட்ஸை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      பத்துமா பின்னாடி இப்படி ஒரு பிளேஷ்பேக்கா🤧🤧🤧 இப்படி ஒரு அம்மா பின்னாடி கதை இருந்தும் ஏன் கௌரி இப்படி பேசினா.