Loading

At the same time

அந்த இருட்டறையில் சோஃபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு வாயிலிருந்த சிகரெட் மூலம் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான் அவன்.

பின் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த அலைபேசியை எடுத்து சில எண்களைத் தட்டியவன் மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் டீபாய் மீதிருந்த ஏஷ்ட்ரேயில் சிகரெட்டின் புகையை அணைத்தான்.

அவன் ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க,

மறுபக்கம் அழைப்பை ஏற்றவருக்கு இவனின் கோவம் புரிந்தோ என்னவோ,

“சாரி பாஸ்… பக்காவா ப்ளேன் போட்டு தான் பண்ணினோம்… பட் கடைசி நேரத்துல அந்த பொண்ண கட்டிக்க போறவன் குறுக்கால வந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான்…” என்க,

“குடுத்த வேலைய ஒழுங்கா முடிக்க துப்பில்ல… இப்போ வந்து காரணம் சொல்றியா… டாமிட்….” எனக் குரலில் கடுமையை தேக்கி வைத்து கேட்டான்.

மறுபக்கம், “அடுத்த தடவ ஒழுங்கா முடிச்சிடுவோம் பாஸ்…” என்க,

“வேணாம்… இப்போ நிச்சயம் அந்த ஆர்யான் ஃபுல்லா செக்கியுரிட்டி டைட் பண்ணி இருப்பான்… கொஞ்சம் நாள் போகட்டும்… இனிமே நானே இத பாத்துக்குறேன்… உனக்கு பேசின பணம் உன் அக்கவுன்ட்டுக்கு வந்து சேரும்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பின் எழுந்தவன் அறையின் விளக்கை ஒளிர விட,

அவனைச் சுற்றியிருந்த சுவர் முழுவதும் சிதாராவின் புகைப்படங்கள் நிறைந்து இருந்தன.

அவனுக்கு நேரெதிரே இருந்த சிதாராவின் ஆளுயர புகைப்படத்தை நெருங்கியவன்,

அதனை வருடி விட்டபடி, “பேப்…..” என்றான் கிறக்கமாக.

_______________________________________________

மறுநாள் காலை அழகாக விடிய கண்களை மூடியபடியே எழுந்து சோம்பல் முறித்து விட்டு மெதுவாகக் கண் திறந்த சிதாரா,

“ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்…..” என்று கத்தினாள்.

அவள் கண் விழிக்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆர்யானும் சிதாரா கத்தவும்,

“ஆஹ்ஹ்ஹ்…. அம்மா பேய்…..” என்று கத்தினான்.

இருவரின் கத்தல் சத்தம் கேட்டு ஓடி வந்த அகிலா,

“என்னாச்சு ஆரு… என்னாச்சு சித்துமா… ஏன் கத்தினீங்க ரெண்டு பேரும்….” என பதறிக் கேட்க அப்போது தான் அமைதியாகினர் இருவரும்.

சிதாரா அவசரமாய், “ஒன்னுமில்ல அத்த… ஏதோ கெட்ட கனவு… கனவுல கொரில்லாக் குரங்கு ஒன்னு வந்துச்சி… அதான்..” என ஆர்யானை முறைத்த வண்ணம் கூற,

அகிலாவின் பார்வை ஆர்யானின் பக்கம் திரும்பியது.

ஆர்யானும், “ஆமா மாம்…‌ எனக்கும் கெட்ட கனவு தான்… கனவுல மோகினி பிசாசொன்னு வந்து கத்துச்சி…” என்றான் சிதாராவை முறைத்துக் கொண்டு.

அகிலாவோ இருவரின் பதிலில் தலையிலடித்துக் கொண்டவர்,

“என்னப் பசங்களோ… கல்யாணமே ஆகிடுச்சி… இன்னும் சின்ன குழந்தைங்கன்னு நெனப்பு போல…” என்று விட்டு சென்றார்.

அவர் சென்றதும் ஆர்யானின் மீது தலையணையை எறிந்தவள்,

“ஏன்டா தடி மாடே… இப்படி தான் உன்னோட மூஞ்ச காட்டி பச்ச புள்ளய காலைலயே பயப்புடுத்துறியா….” என்றாள்.

ஆர்யானும் பதிலுக்கு அவளை நோக்கி தலையைணையை வீசியவன்,

“யாரு… நீயா பச்ச புள்ள… முடிய வேற விரிச்சி போட்டுட்டு பேய் மாதிரி கத்தினா மனுஷன் பயப்படாம இருப்பானா..” எனக் கோவமாகக் கேட்டான்.

கட்டிலிலிருந்து வேகமாக இறங்கிய சிதாரா ஆர்யானின் தலை முடியை இழுத்து,

“என்ன பாத்தா உனக்கு மோகினி பிசாசு மாதிரி இருக்கா ஜிராஃபி…” என அவனை முறைத்துக் கொண்டு கேட்டாள்.

அவள் கையிலிருந்த தன் தலை முடியை விடுவித்தவன்,

“அப்போ உனக்கு மட்டும் என்ன பாத்தா கொரில்லா மாதிரி இருக்கா…” என்றான் பதிலுக்கு.

ஆர்யானைப் பார்த்து உதட்டை ஒருபக்கம் வளைத்துக் காட்டிய சிதாரா குளியலறைக்கு செல்லும் போது கட்டிலில் கால் தடுக்கி கீழே விழப் பார்க்க அவளை அவசரமாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் ஆர்யான்.

சிதாரா அவன் கண்களைப் பார்க்க,

ஆர்யான், “தம் தன நம் தன தம் தன நம் தன னன னான னனா…” என ராகம் பாடினான்.

அவன் காலில் ஓங்கி ஒன்று மிதித்த சிதாரா குளியலறைலக்குள் புகுந்து கொண்டாள்.

ஆர்யான் வலியில் காலைப் பிடித்துக் கொண்டு, “அம்மா……” எனக் கத்தினான்.

ஆர்யானின் சத்தத்தில் அகிலா கீழே இருந்து,

“இப்போ என்னடா….” எனக் கோவமாகக் கேட்க,

வலியில், “புல்டோசர் ஒன்னு கால்ல ஏறிடுச்சுமா….” என்றான்.

ஆர்யானின் பேச்சில் கோவமடைந்த அகிலா,

“திரும்ப கத்திட்டு இப்படி ஏதாவது ஒலரிட்டு இருந்தன்னா வந்து துடப்பக்கட்டையாலே அடிப்பேன்…” என்க,

அவசரமாக வாயை மூடிக் கொண்டான் ஆர்யான்.

சற்று நேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு கீழே வர,

ரஞ்சித், “சாப்பிட வாங்க ரெண்டு பேரும்…” என்றவர் ஆர்யானைப் பார்த்து,

“ஆரு… இன்னைக்கு மறுவீட்டுக்கு போகனும்… இன்னும் கொஞ்ச நேரத்துல சம்பந்தி வருவாரு உங்கள கூட்டிட்டு போக… சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகுங்க…” என்க சிதாராவின் முகம் மலர்ந்தது.

சாப்பிட்டு முடித்ததும் சங்கர் வர அவருடன் சிதாராவின் வீட்டுக்கு சென்றனர் இருவரும்.

லாவண்யா, அக்ஷரா, ஆதர்ஷ், அபினவ் மாத்திரமே இருந்தனர்.

மற்ற அனைவரும் அன்று காலையிலேயே ஊருக்கு சென்றிருந்தனர்.

நண்பர்கள் சிதாராவையும் ஆர்யானையும் கிண்டல் செய்து கொண்டிருக்க அபினவ்விற்கு அழைப்பொன்று வந்தது.

பேசி விட்டு வருவதாகக் கூறி வெளியே சென்றான் அபினவ்.

பிரணவ் தான் அழைத்திருந்தான்.

பிரணவ், “என்னடா பண்ற இன்னும்… என்கேஜ்மன்டுக்கு போய்ட்டு வரேன் சொல்லிட்டு போன… இன்னுமே திரும்ப வரல…” என்க,

“நீ ஏன்டா ரெண்டு நாளா கால் ஆன்சர் பண்ணல… என்கேஜ்மன்டுக்கு தான் வந்தேன்… பட் சடன்னா மேரேஜ் எடுக்க வேண்டிய நிலமை… அதான் வர முடியல..” என்றான் அபினவ்.

“ஓஹ்….” என்று விட்டு சற்று நேரம் அமைதியாக இருந்த பிரணவ்,

“சரி மச்சான்… சின்ன வேலை ஒன்னு… நான் அப்புறம் பேசுறேன்…” என்று விட்டு அபினவ்வின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அழைப்பைத் துண்டித்து விட்டான்.

பிரணவ்விடம் பேசி விட்டு திரும்ப ஆர்யான் நின்றிருந்தான்.

அபினவ் அவனைக் கேள்வியாகப் பார்க்க,

“ஜூஸ்…” என்று கையிலிருந்த பழச்சாற்றை நீட்டினான் ஆர்யான்.

அபினவ் நன்றி கூறி பெற்றுக் கொள்ள,

“ஆமா யாரு ஃபோன்ல… பிரணவ்வா…” எனக் கேட்டான் ஆர்யான்.

அபினவ், “ஆமா ப்ரோ… உங்க என்கேஜ்மன்டுக்கு ரெண்டு நாள் முன்னாடி ஏதோ வேலை விஷயமா வெளியூர் போனான்… அதுக்கப்புறம் கால் பண்ணேன்.. எடுக்கவும் இல்ல… இன்னைக்கு தான் வீட்டுக்கு வந்திருக்கான் போல… அதான் நான் ஏன் இன்னும் வரலன்னு கேட்டான்…” என்றான்.

ஆர்யான், “ஆஹ்… ஓக்கே.. ஆமா கேக்கனும்னே இருந்தேன் ப்ரோ… நீங்க எப்போ அக்ஷரா கிட்ட உங்க லவ்வ சொல்லி கல்யாணம் பண்ணிக்க போறீங்க…” என்க,

வெட்கப்பட்ட அபினவ், “சீக்கிரமா சொல்லனும் ப்ரோ… இப்போ தான் உங்க கல்யாணம் முடிஞ்சிருக்கு.. அடுத்து ஆதர்ஷ், லாவண்யா கல்யாணம் முடியட்டும்… அப்புறம் டேரக்ட்டா எங்களோடது தான்…” என்றான்.

அபினவ்வின் பதிலில் புன்னகைத்த ஆர்யான்,

“சரி நீங்க உள்ள போங்க ப்ரோ… நான் முக்கியமான கால் ஒன்னு பேசிட்டு வரேன்….” என்க சரி எனத் தலையசைத்து விட்டு சென்றான் அபினவ்.

ஆர்யான் யாருக்கோ அழைப்பு விடுத்து,

“என்ன ஆச்சுடா… ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடச்சுதா…” எனக் கேட்டான்.

மறுபக்கம், “தேடிட்டு தான் மச்சான் இருக்கோம்… ஆனா அன்னைக்கு தங்கச்ச கடத்த ட்ரை பண்ணவன் அதுக்கப்புறம் எங்கயோ தலை மறைவாகிட்டான்… சீக்கிரம் கண்டு பிடிச்சிட்டு சொல்றேன்டா…” என்க,

“சரி… எதுக்கும் பிரணவ் மேல ஒரு கண்ணு வெச்சிட்டே இரு… எனக்கு என்னவோ அவன் மேல தான் டவுட்டா இருக்கு…” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.

_______________________________________________

“சார்… ஒரு முக்கியமான விஷயம்….” என்க,

அமர்ந்து இருந்த சுழல் நாற்காலியை சுற்றி அவன் பக்கம் திரும்பியவன் கேள்வியாய் அவனை நோக்க,

“அந்த ஆர்யான் நம்ம ஏற்பாடு பண்ணி இருந்த ஆள பத்தின டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு இருக்கான்… அவன் அவங்க கைல மாட்டிட்டான்னா உங்கள பத்தி வெளிய சொல்லிருவான் சார்..” என்றான்.

மர்மச் சிரிப்பொன்றை அவனை நோக்கி உதிர்த்தவன்,

“ஆர்யானால நிச்சயம் அவனயோ, அவன் மூலமோ என்னையோ கண்டுபிடிக்க முடியாது… நான் குடுத்த வேலைய ஒழுங்கா முடிக்காதவன் இந்த உலகத்துல இருக்குறதுலே அர்த்தம் இல்ல…” என்றவன் தன் முன்னாலிருந்தவன் கையில் மதுக் கோப்பையொன்றைத் திணித்து விட்டு, “சியர்ஸ்…” என்றான்.

தன் எஜமானின் பேச்சுக்கு மறு பேச்சின்றி அவனும், “சியர்ஸ் சார்…” என்றான்.

_______________________________________________

இங்கு சமையலறையில் சிதாரா தன் தாய் தேவிக்கு உதவியாக இருக்க,

தேவி, “என்ன சித்து… உனக்கு எல்லாம் சொல்லி தந்துட்டு இருக்கனுமா… நேத்து தான் கல்யாணம் ஆச்சு… அழகா சேலை கட்டிக்கலாம்ல… சுடிதார் போட்டுட்டு இருக்க..” என்க,

“என்னம்மா நீ…‌ இன்னும் அந்தக் காலத்துலயே இருக்க… அதுவும் நான் இன்னைக்கு சேலை தான் கட்டினேன்… அத்த தான் உனக்கு கம்ஃபர்டபிளா இருக்குறத போட்டுக்க சொன்னாங்க…” என்ற சிதாரா சற்று நிறுத்தி விட்டு,

“அதுவும் என்னோட அத்த ஒன்னும் உங்கள மாதிரி இல்ல…. ரொம்ப ஸ்வீட்… எனக்கு பிடிச்ச மாதிரி இருக்க சொன்னாங்க… நீ தான் எப்ப பாரு என்னை ஏதாவது குறை சொல்லிட்டே இருப்ப…” என தேவியைக் கேலி செய்ய,

“என்னடி சொன்ன..” எனப் பொய்யாக முறைத்த வண்ணம் அவளை அடிக்கத் திரும்ப அதற்குள் அங்கிருந்து ஓடி விட்டாள் சிதாரா.

அவள் சென்றதும் சிரித்துக் கொண்ட தேவி,

“கடவுளே என் பொண்ணு இப்படியே எந்த கஷ்டமும் இல்லாம சந்தோஷமா இருக்கனும்…” என வேண்டிக் கொண்டார்.

ஆனால் அவரது வேண்டுதலை கடவுள் செவி சாய்த்தாரா இல்லையா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதன் பின் வந்த நாட்களில் சிதாரா, ஆர்யான் இருவரின் வாழ்வும் எந்தவொரு பிரச்சினையும் இன்றி சென்றது.

ஏதாவது ஒரு காரணம் கொண்டு இருவரும் பொய்யாக சண்டை பிடித்துக் கொண்டு திரிய,

அகிலாவுக்கும் ரஞ்சித்துக்கும் இவர்களை என்ன பண்ணினால் தகும் என்ற யோசனை தான்.

_______________________________________________

அன்று இரவு ஆர்யானின் வீட்டில் அனைவரும் உறங்கியிருந்த சமயம் ஆர்யானின் மொபைல் ஒலி எழுப்பியது.

தூக்கக் கலக்கத்துலே கொட்டாவி விட்டபடி, “இந்த நேரத்துல யாரா இருக்கும்..” என ஆர்யான் மொபைலை எடுத்துப் பார்க்க,

திரையில் காட்டிய எண்ணைக் கண்டதும் அவசரமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

ஆர்யான், “என்னடா இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க…” என்க,

மறுபக்கம், “நம்ம தேடிட்டு இருக்குறவன் செத்துட்டான்..” என்க,

முழுத் தூக்கமும் ஆர்யானை விட்டு ஓடியது.

“என்னடா சொல்ற… எப்படி..” என ஆர்யான் கேட்கவும்,

மறுபக்கம் அழைப்பில் இருந்தவன்,

“இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பீச் பக்கத்துல ஏதோ டெட் பாடி இருக்குறதா கால் வந்தது… போய் பார்த்தப்போ யாரோ அவன ரொம்ப கொடூரமா கொன்னு போட்டுட்டு போய் இருக்காங்க… பாடி பத்தின டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணினப்போ தான் அவன் தான் அன்னைக்கு தங்கச்ச கடத்த ட்ரை பண்ணவன்னு தெரிய வந்தது…” என்றான்.

தன் நெற்றியை நீவி விட்ட ஆர்யான்,

“இப்போ எப்படிடா அவன அனுப்பினது யார்னு கண்டுபிடிக்கிறது…” எனக் கவலையாகக் கேட்க,

“இவன கொன்னது யாருன்னு முதல்ல கண்டுபிடிச்சா தான் அத பத்தி தெரிஞ்சிக்க முடியும்.. போஸ்ட் மார்டம் பண்ண குடுத்திருக்கோம்… அதோட ரிப்போர்ட் வந்ததும் தான் மத்த விஷயங்கள பத்தி பார்க்க முடியும்… நீ கவலைப்படாதே.. ஏதாவது வழி கிடைக்கும்…‌எதுக்கும் தங்கச்ச பத்திரமா பார்த்துக்கோ…” என்று விட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்யான் கேட்ட செய்தியில் அன்று இரவு முழுவதுமே தூங்காமல் முழித்திருந்தான்.

_______________________________________________

நாட்கள் வாரங்களாகக் கடக்க ஆர்யான், சிதாரா இருவரும் நியுயார்க் செல்லும் நாளும் வந்தது.

ஆர்யானின் வீட்டில் சிதாராவின் பெற்றோர், நண்பர்கள் என அனைவரும் அவர்களை வழி அனுப்ப கூடி இருந்தனர்.

அகிலா, “சித்துமா… ஆரு… உங்க ரெண்டு பேருக்கும் சொல்ல தேவையில்ல.. ஆனா இதுக்கு முன்னாடி நீங்க ஃப்ரன்ட்ஸா இருந்தீங்க… இப்போ அப்படி இல்ல… புருஷன் பொண்டாட்டி ஆகிட்டீங்க… இங்க இருக்கும் வர சும்மா மாறி மாறி சண்டை போட்டுக்கிட்டே இருந்தீங்க… அங்க நாங்க இல்ல.. நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்க போறீங்க… அதனால ஒருத்தொருக்கொருத்தர் துணையா இருங்க…” என்க,

ரஞ்சித், “இதெல்லாம் நீ அவங்களுக்கு சொல்லனுமா அகி… நம்ம முன்னாடி ரெண்டு பேரும் சும்மா ஜாலியா சண்டை போட்டுட்டு இருந்தாங்க… நம்ம புள்ள ரொம்ப பொறுப்பானவன்.. அதெல்லாம் ஒழுங்கா தான் இருப்பான்…” என்றவர் ஆர்யானைப் பார்த்து கண்களை அசைத்தார்.

ஆர்யானும் அதனைப் புரிந்து கொண்டது போல் தலையாட்டினான்.

ஆர்யான், “மாம்.. நீங்க எதுக்கும் கவலைப்பட வேணாம்… ஜஸ்ட் வன் இயர் தானே… மினியோட ஸ்டடீஸ் முடிஞ்சதும் இங்கயே வந்துட போறோம்…” என்றான்.

பின் இரவு நேர விமானம் என்பதால் நண்பர்கள் மாத்திரம் அவர்களுடன் கோயம்புத்தூர் விமான நிலையம் கிளம்பினர்.

ஃப்ளைட் கிளம்பியதும் ஆதர்ஷ் லாவண்யாவுடன் பேசியபடி முன்னே செல்ல,

அவர்கள் பின் செல்ல இருந்த அக்ஷராவின் கைப் பிடித்து தடுத்தான் அபினவ்.

அக்ஷரா அவனைக் கேள்வியாகப் பார்க்க,

“மேடம் ரொம்பத் தான் பிஸி போல… எங்க கூட எல்லாம் பேச டைம் இருக்காதா என்ன…” என்றான் அபினவ்.

அவனைக் குறும்பாகப் பார்த்த அக்ஷரா,

“அது ஒன்னுமில்ல சீனியர்… என்னோட க்ரஷ்ஷோட ஞாபகமாவே இருக்கு… அதான் வேற யாரு கூடவும் பேச டைம் இல்ல…” என்றாள்.

அக்ஷரா க்ரஷ் பற்றி கூறவும் கடுப்பான அபினவ் பட்டென அவள் கையை உதறி விட்டு முன்னே செல்லப் பார்க்க,

அவன் கரத்தைப் பற்றிய அக்ஷரா, “என்னோட க்ரஷ்ஷ பத்தி கேக்காமலே போறீங்களே சீனியர்…” என புன்னகைத்தவாறு கேட்டாள்.

அபினவ் அவள் பக்கம் திரும்பாமலே,

“எனக்கு யார பத்தியும் தெரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்ல… நீ உன் க்ரஷ் பத்தி யோசிச்சிட்டே இரு…” என்க,

அவன் கையை விட்ட அக்ஷரா பெருமூச்சு விட்டபடி,

“ஹ்ம்ம்.. ஓக்கே… உங்களுக்கு தான் அப்போ நஷ்டம் சீனியர்…” என்றாள்.

அபினவ் ஏதும் பேசாமல் இருக்கவும்,

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா சீனியர்… எனக்கு அந்த நேரம் அவர் மேல க்ரஷ் மட்டும் தான் இருந்தது… ஆனா அவருக்கு அந்த நேரமே என் மேல டீப் லவ்… நான் எங்க போனாலும் அவர் இருப்பாரு… எனக்கொன்னுன்னா என்ன வேணாலும் பண்ணுவாரு… ஒரு தடவ நான் மார்னிங் சாப்டாம மயக்கம் போட்டு விழுந்தப்போ அவர் தான் முதல்ல வந்து என்ன கேர் பாத்துக்கிட்டாரு.. ரொம்ப பதறிட்டாரு… என்ன ரேக்கிங் பண்ண பசங்கள கூட அவரு விட்டு வெச்சதில்ல… அதனால எனக்கும் இப்போ அவர் மேல லவ் வந்திடுச்சு…” என்ற அக்ஷரா,

“ஹேய் வனி… எங்க போற என்ன விட்டு… இரு நானும் வரேன்…” எனக் கத்தியவள் லாவண்யாவிடம் ஓடினாள்.

அக்ஷரா கூறியதைக் கேட்டு கடுப்பாக இருந்த அபினவ் அவள் கூறிய சம்பவங்களைக் கேட்டு முகம் மலர்ந்தவன்,

“அப்போ நான் தான் உன் க்ரஷ்ஷா…” என நினைத்தவன் சந்தோஷமாக அக்ஷராவைப் பார்க்க அவளோ ஏற்கனவே அங்கிருந்து சென்றிருந்தாள்.

“ஹுஹூ……. என் சாரா என்ன லவ் பண்ணுறா…” என நின்ற இடத்திலே துள்ளிக் குதித்து கத்திய அபினவ் சுற்றி இருந்தவர்கள் தன்னை ஒரு மாதிரி பார்ப்பதைக் கண்டு அவசரமாக அங்கிருந்து சென்றான்.

_______________________________________________

அன்று போல இன்றும் அதே அறையில் இருட்டில் அமர்ந்திருந்தான் அவன்.

“ஹஹஹஹா…” எனப் பேய் சிரிப்பு சிரித்தவன் வாயிலிருந்த சிகரெட் மூலம் புகையை வெளியிட்டு விட்டு,

“ஆர்யான்….. ஆர்யான்…. பெரிய தப்பு பண்ணிட்ட…. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட… என்னோட பேபிய பாதுகாக்குறேன்ற பேர்ல அவள நான் இருக்குற இடத்துக்கே கூட்டிட்டு வராய்…. இனிமே என்ன யாராலையும் தடுக்க முடியாது….. ஹஹஹா… ஹஹஹஹஹஹா….” எனக் கூறிச் சிரித்தான்.

அவன் இருந்த அறைக்கு வெளியே இருந்த இருவரும்,

“இவருக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா…” என்ற ரீதியில் பார்த்துக் கொண்டனர்.

_______________________________________________

முழுதாக ஒரு நாள் கடக்க ஆர்யான், சிதாரா இருவரும் நியுயார்க்கை அடைந்தனர்.

நியுயார்க்கில் அப்போது பகல் நேரம்.

முதலில் சிதாரா தங்கியிருந்த அறைக்குச் சென்றவர்கள் அதனை வெகேட் செய்து விட்டு அங்கிருந்த அவளது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஆர்யான் தங்கியிருந்த வீட்டை அடைந்தனர்.

ஆர்யான் மட்டும் தான் தங்கி இருப்பதால் ஓரளவு சிறிய வீடே எடுத்திருந்தான்.

ஆர்யான், “மார்னிங் வேலைக்கு போனா அப்புறம் நைட் தூங்க மட்டும் தான் இங்க வரதால சின்ன வீடொன்னு தான் வாங்கி இருந்தேன் மினி… இன்னும் வன் வீக்ல போல ரெண்டு பேருக்கும் கம்ஃபர்டபிலான நல்ல வீடொன்னா பாத்து ஷிஃப்ட் ஆகலாம்… ” என்க,

“இல்ல ஜிராஃபி… இந்த வீடே ஓக்கே… எனக்கு இப்படி சின்னதா அழகா இருக்குற வீடு தான் பிடிக்கும்… வேற வீடு ஷிஃப்ட் பண்ணவெல்லாம் அவசியமில்ல…” என வீட்டை ரசித்தபடி கூறினாள் சிதாரா.

“பட் மினி… இந்த வீட்டுல ஒரு பெட் ரூம் தான் இருக்கு….” என ஆர்யான் இழுக்க,

அமைதியானவள் சற்று நேரத்தில், “அதுக்கென்ன ஜிராஃபி… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்… இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அதுவுமில்லாம எனக்காக நீ தரைல படுக்க மாட்டியா ஜிராஃபி…” என பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

ஆர்யான், “அடிங்கு…. நீ வேணா தரைல படுத்துக்கோ… என்னால எல்லாம் முடியாது… நான் வெளிய போய் கொஞ்சம் திங்க்ஸ் வாங்கிட்டு வரேன்… நல்ல பொண்டாட்டி போல புருஷன் வர முன்னாடி வீட்ட க்ளீன் பண்ணி வை…” என்றவன் அவசரமாக வெளியே ஓடினான்.

இல்லாவிட்டால் பொண்டாட்டி எனக் கூறியதற்கு யார் சிதாராவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது.

“பொண்டாட்டின்னு சொன்ன வாய்க்கு சாப்பாடு கிடையாதுடா…” எனக் கத்திய சிதாரா ஆர்யான் கண்ணை விட்டு மறைந்ததும் சிரித்துக் கொண்டு வீட்டை க்ளீன் செய்ய ஆரம்பித்தாள்.

ஆர்யான் வரும் போது சிதாரா வீட்டை ஒழுங்கு படுத்தி விட்டு சமைத்தும் முடித்திருந்தாள்‌.

“என்ன மினி… நீயே சமைச்சி முடிச்சிட்ட போல… சமைக்க தேவையான ஐடம்ஸ் எடுக்க தான் நான் போய் இருந்தேன்… அப்படியே வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் கொஞ்சமும் வாங்கிட்டு வந்தேன்… அதான் லேட் ஆகிடுச்சு…” என வீட்டினுள் நுழைந்தபடி ஆர்யான் கூற,

“பெரிசா எதுவுமில்ல ஜிராஃபி.. கிச்சன்ல மேகி பேக்கட் இருந்துச்சு.. அதை தான் குக் பண்ணேன்…” என்றவள் சமைத்த நூடுல்ஸை இருவருக்கும் தட்டில் போட்டு எடுத்து வந்தாள்.

கை கழுவி விட்டு வந்த ஆர்யான் அதனை சாப்பிட்டுக் கொண்டு,

“உனக்கு எப்போ மினி யுனிவர்சிட்டி அகைன் ஸ்டார்ட் ஆகும்..” என்க,

அவன் தலையில் குட்டிய சிதாரா,

“எத்தன தடவ சொல்றது சாப்பிட்டுக்கிட்டு பேசாதேன்னு…” என்றாள்.

ஆர்யான் தலையில் கை வைத்து சிதாராவைப் பாவமாகப் பார்க்க,

“என்ன லுக்கு… சாப்டு… டே ஆஃப்டர் டுமோரோ தான் ஸ்டார்ட்… நாளைக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடுக்கனும்.. ஃபுல் டே ட்ராவல் பண்ணது செம்ம டயர்டா இருக்குப்பா…” என்றாள் சிதாரா.

“எல்லாரும் சொல்றது சரி தான்… கல்யாணத்துக்கு அப்புறம் எல்லா பசங்களுக்கும் இந்த பொண்டாட்டி கொடுமை இருக்கு போல…” என முணுமுணுத்தான் ஆர்யான்.

சிதாரா, “ஏதாவது சொன்னியா ஜிராஃபி…” என ஆர்யானைப் பார்த்து புருவம் உயர்த்திக் கேட்க,

அவளைப் பார்த்து இளித்த ஆர்யான்,

“இ.. இல்ல மினி.. நான் சாப்டு முடிச்சிட்டேன்னு சொன்னேன்…” என்றவன் தட்டை எடுத்துக் கொண்டு அவசரமாக சமையலறைக்குள் நுழைந்தான்.

சிதாராவுக்கு ஆர்யானைப் பார்த்து சிரிப்பாக வந்தது.

ஆனாலும் அவனை அடிக்கடி சீண்டிக் கொண்டிருப்பதும் அவளுக்கு பிடித்திருந்தது.

இரவானதும் இருவரும் உறங்கத் தயாராக,

ஆர்யான், “நீ பெட்ல படுத்துக்கோ மினி… நான் ஹால்ல படுத்துக்குறேன்…” என்க,

“ச்சேச்சே.. அதெல்லாம் வேணா ஜிராஃபி… இவ்வளவு பெரிய பெட் இருக்கு தானே… நீயும் ஒரு ஓரமா தூங்கு… நான் ஒன்னும் அவ்வளவு கொடுமைக்காரி எல்லாம் இல்ல…” என்றாள் சிதாரா.

ஆர்யான் அவளை சந்தேகமாகப் பார்க்க,

சிதாரா, “என்னடா பாக்குற… ஏன் உனக்கு தூங்கக் கிட்ட உருண்டு போற இல்லன்னா கை கால தூக்கி போடுற பழக்கம் இருக்கா என்ன..” என்க,

அவளைப் பார்த்து முறைத்த ஆர்யான்,

“நான் எல்லாம் நைட்டு தூங்கினா மார்னிங் வரையும் அசையாம அப்படியே படுத்திருப்போம்… கேக்குறா பாரு கேள்வி…லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து தூங்கு.. டயர்டா இருக்கு..” என்று விட்டு சென்று கட்டிலில் ஒரு பக்கம் படுத்துக் கொண்டான்.

ஆர்யான் கண்களை மூடவும் சிதாரா அவசரமாக தனது லக்கேஜ் அனைத்தையும் இழுத்து ஏதோ தேட,

ஆனால் அவள் தேடியது தான் கிடைக்கவில்லை.

சிதாரா மனதில், “ஹையோ… என் ஹக்கி பிலோவ காணமே… ஒரு வேளை வீட்டுலயே வெச்சிட்டு வந்துட்டேனா… அது இல்லாம எனக்கு தூக்கம் போகாதே… ” என்றவள் ஆர்யானைப் பார்க்க அவனோ ஏற்கனவே நல்ல உறக்கத்தில் இருந்தான்.

தயங்கித் தயங்கி கட்டிலின் அருகே சென்றவள் ஒரு ஓரமாக படுத்துக் கண்ணை மூடினாள்.

சிதாரா கட்டிலில் வந்து படுத்துக் கொள்ள அவ்வளவு நேரம் தூங்கி விட்டது போல் நடித்த ஆர்யான் அவள் பக்கம் திரும்பி மெதுவாக ஒற்றைக் கண் திறந்து பார்க்க,

சிதாரா முடிந்த வரை கட்டிலின் ஓரமாக சென்று படுத்திருப்பதைக் கண்டு புன்னகைத்தான்.

❤️❤️❤️❤️❤️

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்