Loading

காதல் 10

 

 

சஞ்சய் அவன் அறையிலுள்ள ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தான். அவர்களின் வீட்டை சுற்றி,  ஓங்கி உயர்ந்த மரங்கள் நிரம்பியிருப்பதால், அந்த இடத்தின் தட்பவெப்பநிலை எப்போதுமே மிதமாகவே இருக்கும்.

 

தொழிலுலகில் காலடி எடுத்து வைத்ததிலிருந்து, இப்போது தான் இப்படி ஆற அமர்ந்து இயற்கையை ரசிக்குமளவிற்கு சஞ்சய்க்கு நேரமிருக்கிறது. இல்லையென்றால், எப்போதும் காலில் சக்கரம் கட்டிவிட்டது போல, அவர்களின் ஒவ்வொரு தொழிலையும் கவனிக்கவே அவனிற்கு நேரம் போதாது.

 

இப்படி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தவனின் கண்கள் அந்த காட்சியில் நிலைத்தது. அந்த ஜன்னலுக்கு வெகு அருகிலிருந்த மரத்தின் கிளைகளில் இருந்த அந்த குருவிக் கூட்டில் தாய் குருவி தன் குட்டிகளுக்கு உணவை ஊட்டும் காட்சியே அது.

 

அதைக் கண்டவனின் நினைவுகள் தனது சிறு வயதை நோக்கி பயணிக்கத் துவங்கியது. தந்தை வெளியே செல்லும் நேரத்தில், தாயிடம் செல்லம் கொஞ்சி உணவுண்ணும் காட்சிகள் கண் முன்னே விரிந்து, அவர்கள் (சஞ்சய் மற்றும் சஞ்சீவ்) இழந்ததை பூதாகரமாகக் சுட்டிக் காட்டியது.

 

அவனைக் கடந்த காலத்தில் மூழ்க விடாமல் காக்கவே அறைக் கதவு தட்டப்பட்டது. அந்த சத்தத்திலேயே வந்தது கோகுல் என்று அறிந்து கொண்டான் சஞ்சய்.

 

உள்ளே வந்தவனின் முகத்திலிருந்த பதட்டைக் கவனித்தவன் புருவம் சுருங்க அவனைப் பார்க்க, கோகுலோ கையிலிருந்த அலைபேசியை சஞ்சயிடம் நீட்டினான்.

 

மறுமுனையில் என்ன தகவல் கிடைத்ததோ, இத்தனை நேரமிருந்த இளக்கம் மறைந்து வழக்கம் போல கடுமை அதனிடத்தில் குடிக்கொண்டது.

 

அலைபேசியை அணைத்தவன், “***** யாரு மேல கைய வைக்க பாக்குறாங்க… ******” என்று திட்டியவாறே வேகவேகமாக படிகளில் இறங்க, கோகுலோ அதே பதட்டத்துடன் அவனைத் தொடர்ந்தான்.

 

சஞ்சய் வேகமாக மகிழுந்தை இயக்க, “பாஸ், ட்ரைவர்…” என்று கோகுல் இழுத்தான்.

 

“இப்போ அதுக்கெல்லாம் நேரமில்ல. லோகேஷுக்கு கால் பண்ணி ஸ்பீக்கர்ல போடு. அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு லைவ்வா தெரியணும்.” என்றவாறே மகிழுந்தை செலுத்திக் கொண்டிருந்தான்.

 

இவ்வாறு தான், சஞ்சீவ் – அருணாச்சலத்தின் சந்திப்பின் நேரலைக் காட்சிகள் சஞ்சயின் கவனத்திற்கு வந்தது.

 

‘எங்களை என்னன்னு நினைச்சீங்க? நாங்க ரெண்டு பேரும் எப்படி வேணா அடிச்சுக்குவோம். அதுக்குன்னு மத்தவங்களை அடிக்கவிட்டு வேடிக்கை பார்ப்போம்னு இல்ல. புரிஞ்சுதா?’ என்று சஞ்சீவின் குரலில் ஒலித்த உறுதியில் சஞ்சயின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

 

பல ஆண்டுகள் கழித்து தம்பியின் குறும்புப் பேச்சுக்களை ரசித்தபடியே மகிழுந்தை செலுத்தினான்.

 

ஆனால், அந்த மகிழ்ச்சியை நீண்ட நேரம் நீடிக்கவிடாது, ‘அந்த’ குரல் அவனிற்கும் கேட்டது. சரியாக அந்த சமயம் தான் அருணாச்சலத்தின் இடத்திற்கு வந்தவன், மகிழுந்தை விட்டு கீழே இறங்கியிருந்தான்.

 

என்ன தான் அலைபேசி வழியாகக் கேட்டாலும், அந்த குரல், அதிலிருந்த உணர்வுகள்… அனைத்தும் மறக்கக்கூடியவையா?

 

சற்று அதிர்ச்சியுடன் உள்ளே சென்றவனிற்கு அடுத்த அதிர்ச்சியாக, சஞ்சீவின் தலையில் யாரோ ஒருவன் கம்பியால் அடிக்க, அவன் மயங்கி சரியும் நிகழ்வு சஞ்சயின் கண்முன்னே நிகழ்ந்தது.

 

ஒரு நொடியில் சுதாரித்தவன், கீழே விழும்முன் அவனைத் தாங்கிக் கொண்டு, அருகில் இன்னமும் அதிர்ச்சி குறையாமல் நின்றிருந்த கோகுலைக் கண்டு, “ஸ்டார்ட் தி கார்.” என்று கத்தினான்.

 

அப்போது அவர்கள் அருகில் வேகமாக வந்த லோகேஷ், “சாரி சார், இப்படி நடக்கும்னு எக்ஸ்பெக்ட் பண்ணல. சார் நல்லா தான் ஃபைட் பண்ணிட்டு இருந்தாரு. அதான் நான் தள்ளியே நின்னுட்டேன். திடீர்னு இப்படி…” என்று சொல்லிக் கொண்டிருந்தவனை முறைத்தான் சஞ்சய்.

 

“இப்படி வெட்டியா ரீசன் சொல்றதுக்கு தான் உங்களை ஹையர் பண்ணேனா?” என்று அடிக்குரலில் சீறினான் சஞ்சய்.

 

அவன் சீறலின் காரணத்தினாலோ, முழுவதுமாக மயங்கிடாத சஞ்சீவ், “அவனை எதுக்கு திட்டுற ப்ரோ?” என்று முணுமுணுத்தான்.

 

அரை மயக்கத்தில் இருந்தவன், இயல்பாய் ‘ப்ரோ’ என்று அழைத்ததை உணராமல் இருக்கலாம். ஆனால், அவனின் இந்த அழைப்பிற்காக காத்திருந்தவனின் விழிகளோ பணிக்க ஆரம்பிக்க, அதை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைக்க, சஞ்சீவை தூக்கிக் கொண்டு அவர்கள் வந்த மகிழுந்தை நோக்கிச் சென்றான்.

 

அப்போது அங்கு வந்த காவல்துறையினரை சமாளிக்க லோகேஷை அங்கே விட்டுவிட்டு மற்ற மூவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

 

*****

 

“ஜீவ், உன்னை பார்த்து எவ்ளோ நாளாச்சு?” என்ற குரல் மீண்டும் கேட்க மயக்கத்திலிருந்து சட்டென்று விழித்தான் சஞ்சீவ்.

 

அது கனவென்று கிரகிக்கவே சில நேரம் எடுத்தது சஞ்சீவிற்கு. அதற்குள் அவன் பதட்ட முகத்தைக் கண்ட சஞ்சயும் கோகுலும் அவனருகே வந்தனர்.

 

“என்னாச்சு சஞ்சு? ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸா இருக்க?” என்று சஞ்சய் வினவ, இருவரிடையே இருக்கும் பிணக்கு எல்லாம் பின்தங்கி போக, சஞ்ஜயை பதட்டத்துடனே நோக்கினான் சஞ்சீவ்.

 

அவனின் பார்வையில் தன்னிடம் தனியாக ஏதோ கூற விழைகிறான் என்பதை புரிந்து கொண்ட சஞ்சய், “கோகுல், டாக்டரை பார்த்து சஞ்சு முழிச்சுட்டான்னு சொல்லி கையோட கூட்டிட்டு வா.” என்றான்.

 

“ஓகே பாஸ்.” என்று வெளியே வந்த கோகுல், ‘ஹ்ம்ம், அண்ணனும் தம்பியும் ஏதாவது பேசணும்னா மட்டும் என்ன கழட்டி விட்டுடுவாங்க.’ என்று புலம்பியவன் அந்த மருத்துவமனை கேன்டீனிற்கு சென்றான்.

 

*****

 

“இப்போ சொல்லு என்னாச்சு சஞ்சு?” என்று அவன் கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டு சஞ்சய் வினவ, “ஷி இஸ் ஹியர்!” என்றான்.

 

அந்த ‘ஷி’ யாரைக் குறிக்கிறது என்பதை நன்கறிந்த சஞ்சய், “எனக்கும் தெரியும் சஞ்சு.” என்றான் அந்த அறையின் மூலையை வெறித்தப்படி.

 

சிறிது நேரம் அங்கு எந்த பேச்சும் இல்லை. இருவரின் முகமும் கசங்க, அந்த நொடி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவே தயங்கினர்.

 

பின் அந்த அமைதியைக் கலைத்தவனாக, “உன்னோட பிசினஸ்ல குளறுபடி பண்ணிட்டு இருக்குறவனுக்கு அவ ஹெல்ப் பண்றா. ஆனா, அந்த மெயின் ஆளு யாருன்னு என்னால கண்டுபிடிக்க முடியல.” என்றான் சஞ்சீவ்.

 

“ப்ச், இதை கண்டுபிடிக்க தான் இப்படி யாருகிட்டயும் சொல்லாம தனியா போனியா? கொஞ்ச பேர் இருந்ததால இதோட முடிஞ்சுது. இதுவே நிறைய பேர் இருந்துருந்தா? நீ இப்பவும் கேர்லெஸா தான் இருக்க சஞ்சு.” என்று கோபமாக ஆரம்பித்து சோர்வாக முடித்தான்.

 

“எவனோ ஒருத்தன் போன் பண்ணி, உன் அண்ணனுக்கு எதிரா பிளான் போடலாம் வான்னு கூப்பிட்டான். அதான் யாரு அந்த புதுசா முளைச்ச வில்லன்னு பார்க்க போனேன்.  எப்படியும் என்னை கண்காணிக்க ஆளு வச்சுருப்பன்னு தெரியும். நான் கிளம்புன கொஞ்ச நேரத்துலேயே உனக்கு தகவல் வந்துருக்கும்னும் எனக்கு தெரியும்.” என்று கூறிய சஞ்சீவை, இதழில் மலர்ந்த புன்னகையுடன் கண்டான் சஞ்சய்.

 

இது தான் சஞ்சீவ். அவனிற்கு கோபப்படவே தெரியாது. அப்படியே கோபம் வந்தாலும் சில மணி நேரங்களுக்கு மேல் நிலைக்காது. இத்தனை நாட்கள் அவன் இயல்பிலிருந்து விலகியிருந்ததற்கு கூட, ஒரு வகையில் தன் அண்ணனையும் நண்பனையும் விட்டு தனியே இங்கு வரவேண்டிய சூழலினால் தான். எப்போது இருவரும் சஞ்சீவைத் தேடி இங்கு வந்தனரோ, அப்போதே அவனின் கோபமும் சிறிது சிறிதாக தளர ஆரம்பித்தது.

 

சஞ்சீவ், சஞ்சயிடம் கோபப்பட்டு இந்தியா வந்திருந்தாலும், அவன் மனமோ சஞ்சயை சுற்றியே இருக்கும். சஞ்சயைப் பற்றிய விபரங்களை எப்போதுமே விரல்நுனியில் வைத்திருப்பான். இந்த விஷயத்தில் அண்ணனும் தம்பியும் மற்றவருக்கு சளைத்தவர்கள் அல்ல.

 

மீண்டும் சஞ்சீவே ஆரம்பித்தான். “திரும்பவும் அவ நம்ம வாழ்க்கைல குறுக்க வருவான்னு நான் எதிர்பார்க்கல.” என்று சஞ்சீவ் கூற, “ஹ்ம்ம், ஆமா சஞ்சு. நானும் இத்தனை நாளா அவளை தேடிட்டு தான் இருந்தேன். நம்ம லைஃப்ல விளையாடினவளை சும்மா விடுறதா? ஆனா, இப்போ வரைக்கும் அவளைப் பத்தின எந்த தகவலும் கிடைக்கல.” என்றான் யோசனையுடன்.

 

“அதுவும் உன் பிசினஸுக்கு எதிரா…” என்று கூறத் துவங்கிய சஞ்சீவின் பேச்சில் குறுக்கிட்ட சஞ்சய், “அது ‘நம்ம பிசினஸ்’ சஞ்சு!” என்றான் அழுத்தமாக.

 

“ப்ச் ப்ரோ, இப்போ திரும்பவும் ஆரம்பிக்காத.” என்றான் சஞ்சீவ் சலிப்புடன்.

 

“அப்போ நம்ம பிசினஸ் பிடிக்காம தான் இந்தியாக்கு ஓடி வந்தியா சஞ்சு?” என்று அவனையே கூர்மையாக பார்த்துக் கொண்டு கேட்டான் சஞ்சய்.

 

“க்கும், பதில தெரிஞ்சுக்கிட்டே கேள்வி கேட்குறியா ஜெய்?” என்ற சஞ்சீவிற்கு அப்போது தான் ரஞ்சுவின் நினைவு வந்தது.

 

“ஜெய்… ரஞ்சு… நாம ஹாஸ்பிடல் வர வழில அவளை பார்த்தோம்ல. மயக்கத்துல இருந்ததால எனக்கு சரியா தெரியல. ஆனா, எதுக்கு அவ ஊருக்கு போயிருக்கா?” என்று பேசிக் கொண்டிருந்த சஞ்சீவை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சய்.

 

அவனின் பார்வையை உணர்ந்த சஞ்சீவ், “ஜெய் நீ நினைக்கிற மாதிரி ரஞ்சு தப்பான பொண்ணு இல்ல.” என்று மெல்லிய குரலில் கூறினான்.

 

“அப்போ நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு தெரியுதா சஞ்சு?” என்றான் சஞ்சய்.

 

சஞ்சீவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “உன் அமைதியே நீ என்ன செஞ்சுட்டு இருக்கன்னு உனக்கு சொல்லலையா சஞ்சு? இப்போ இருக்க சிஷுவேஷன்ல அந்த பொண்ணையும் இழுத்து விட்டுருக்க.” என்றான் கடுமையான குரலில்.

 

“இந்த மாதிரி ஆகும்னு நான் யோசிக்கல.” என்று சஞ்சீவ் முணுமுணுக்க, “யூ ஷுட் ஹாவ் தாட் அபௌட் இட் சஞ்சு!” என்று சஞ்சய் கடினமான குரலில் கூற, அதை ஆமோதிப்பது போல தலையசைத்துக் கொண்டான் சஞ்ஜீவ்.

 

“ஆனா, இப்போ ரஞ்சு எப்படி இருக்கான்னு பார்க்கணும் ஜெய். அவ ஏன் தனியா போயிருக்கான்னு தெரிஞ்சுக்கணும்.” என்று எழப் பார்த்த சஞ்ஜீவிடம், “ஆர் யூ கிட்டிங் சஞ்சு? உனக்கு அடி பட்டுருக்குன்னு மறந்துட்டியா?” என்றான் சஞ்சய் கண்டிப்பான குரலில்.

 

“ப்ச், ப்ரோ நீ சொன்ன மாதிரி நான் தான் ரஞ்சுவை தேவையில்லாம நம்ம பிரச்சனைக்குள்ள இழுத்து விட்டுருக்கேன். சோ அவ பாதுகாப்பு என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி.” என்றான்.

 

“ப்ச், சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா சஞ்சு?” என்றவன் சிறிது நேர யோசனைக்குப் பிறகு, “சரி, உனக்கு சரியானதும் நீ பார்த்துக்கோ. பட் அதுவரைக்கும் ரெஸ்ட்ல தான் இருக்கணும்.” என்று திட்டவட்டமாக கூறி விட்டான் சஞ்சய்.

 

“அப்போ அதுவரைக்கும்…” என்று இழுத்த சஞ்சீவை முறைத்த சஞ்சய், “நான் பார்த்துட்டு வரேன்.” என்றான் கோபமாக.

 

சஞ்சீவிற்கும் வேறு வழியில்லாததால் சஞ்சயின் முடிவிற்கு சம்மதித்தான். இருவரின் மனதும் ரஞ்சுவின் பாதுகாப்பிற்காக என்னென்ன செய்யலாம் என்று திட்டம் தீட்ட, விதியோ வேறு திட்டத்தை தீட்டியது. யாரின் திட்டம் பலிக்குமோ?

 

*****

 

கோகுல் வந்ததும், அவனிடம் சஞ்சீவைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, சஞ்சய் ரஞ்சுவைக் காண கிளம்பினான்.

 

அப்போது தான் சஞ்சீவ் கோகுலின் முகத்தைக் கண்டான். அவன் முகத்திலிருந்த குழப்பத்தைக் கண்ட சஞ்சீவ், “ஹே கோகி என்னாச்சு?” என்று வினவ, நண்பனின் வெகு நாட்களுக்கு பின்னான ‘கோகி’ என்ற அழைப்பில் மனம் நெகிழ்ந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அடேய், ஏன் டா ஏன்? இப்படி ஒரு பேரை வச்சுட்டு, ஓயாம ‘கோகி’ ‘கோகி’ன்னு கூப்பிடுற?” என்று புலம்பினான்.

 

“இதெல்லாம் உனக்கு புதுசா என்ன?” என்று அந்த சூழலிலும் நண்பனை கலாட்டா செய்த சஞ்சீவ், “உன் மூஞ்சில ஏதோ ஒளிவட்டம் தெரியுதே!” என்று வினவ, “ஹும், ஒருத்தன் அசிங்கப்பட்டா போதுமே, என்ன ஏதுன்னு கேட்க கிளம்பிடுவீங்களே.” என்று முணுமுணுத்தவனும், சற்று முன்னர் நடந்த நிகழ்வை நினைத்து பார்த்தான்.

 

*****

 

கால் மணி நேரத்திற்கு முன்பு…

 

“இந்தியா வந்ததும் பொண்ணு பார்த்து, அம்மாவுக்கு வேலையை குறைக்கலாம்னு பார்த்தா இந்த அண்ணனும் தம்பியும் அதை நடக்கவே விட மாட்டாங்க போலயே! கடைசி வரைக்கும் சிங்கிலாவே இந்த ‘சஞ்சு ப்ரோஸ்’ கூட சுத்துவேனோ?” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தவாறே அந்த மருத்துவமனை கேண்டீனை நோக்கி நடந்தான் கோகுல்.

 

கோகுல், சஞ்சய் மற்றும் சஞ்சீவின் குடும்ப நண்பர் அமர்நாத்தின் ஒரே மகன். இவர்களின் பாட்டனார் காலத்திலிருந்தே இரு குடும்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. தொழிலில் கூட, கடந்த சில வருடங்களுக்கு முன்வரை பங்குதாரர்களாக இருந்தனர்.

 

ஏனோ, சத்ய பிரசாத்திற்கு இந்த நட்பில் அவ்வளவு நாட்டம் இல்லை. மனிதர் அமர்நாத்திடம் முகம் கொடுத்து பேசுவது கூட, அவரும் தொழிலில் பங்குதாரராக இருந்த காரணத்தினால் தான்.

 

ஆனால், இவர்களின் அடுத்த தலைமுறை இவர்களைப் போலில்லாமல், நட்பில் இணைந்திருந்தனர். அதுவும் சஞ்சீவ் – கோகுல் இருவரும் இணைந்திருக்கும் நேரமெல்லாம், அந்த இடம் கலகலப்பாகவே இருக்கும். சஞ்சய் இவர்களுடன் இனைந்து ரகளை செய்யவில்லை என்றாலும் இவர்கள் செய்யும் கூத்துகளையெல்லாம் ரசித்துக் கொண்டிருப்பான்.

 

அமர்நாத் மற்றும் அவரின் மனைவி ஹெலன், அந்த குடும்பத்தில்  சத்யாவைத் தவிர மற்ற மூவரிடமும் நன்றாக பழகுவர்.

 

கோகுலின் அன்னை ஹெலன், ஆஸ்திரேலியாவை சார்ந்தவர். அவருக்கு இந்தியா கலாச்சாரம் மிகவும் பிடித்துப் போனதால் தான் அமர்நாத்தை திருமணம் செய்து கொண்டார். மேலும், கோகுலிற்கு கூட இந்திய பெண்ணைத் தான் திருமணம் செய்து வைக்கப் போவதாக முன்பே கூறிவிட்டார்.

 

அந்த காரணத்திற்காக தான் கோகுல் இன்று வரை புலம்பிக் கொண்டிருக்கிறான்.

 

“மம்மி, அங்க ஆஸ்திரேலியால, லிண்டா, லீசான்னு எத்தனையோ பொண்ணுங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணாங்க. ஆனா, உனக்காக எல்லாத்தையும் ரிஜெக்ட் பண்ணேன். இப்போ பாரு இவனுங்க கூட குப்பை கொட்டிட்டு இருக்கேன்!” என்று புலம்பியவனை, அந்த பணியாளர் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே அவனிற்கான தேநீரை வழங்கினார்.

 

அந்த கேன்டீனை சுற்றிப் பார்த்துக் கொண்டே (!!!) தேநீரை அருந்திக் கொண்டிருந்தான். வெகு நிதானமாக அருந்தியவன் மணியைப் பார்த்து, ‘இந்நேரம் அண்ணனும் தம்பியும் பேசி முடிச்சுருப்பாங்க. எதுக்கும் பாஸ் சொன்ன மாதிரி டாக்டரை பார்த்துட்டே போலாம்.’ என்று நினைத்தவன் நிமிர, அதே நேரம் அவனைக் கடந்து சென்றனர் இரு பெண்கள்.

 

முதலில் நடந்தவள் நிமிர்ந்து நடந்ததால் அவளின் முகத்தைக் கண்டவனால், அடுத்து சென்றவளின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

 

மூளையின் உந்துதலால், “எக்ஸ்க்யூஸ் மீ.” என்று அவளை அழைத்து விட்டான். ஆனால், அழைத்த பின்பு தான் அதை அவனே உணர்ந்தான்.

 

அந்த பெண்ணோ திரும்பி கேள்வியாக கோகுலைப் பார்க்க, அவளிடம் என்ன சொல்வதென்று ஒரு நொடி முழித்தான்.

 

அந்த ஒரு நொடியிலேயே எதிர்பக்கம் நின்றிருந்தவளின் பொறுமை குறைய, அது சுருங்கிய அவளின் புருவங்களில் தெரிந்தது.

 

அதைக் கண்டவன், ஏதாவது சொல்லியாக வேண்டும் என்பதால் வாய்க்கு வந்ததை கூற, அவளோ “இடியட்!” என்று திட்டிவிட்டு சென்றாள்.

 

‘நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி திட்டுறா?’ என்று மீண்டும் புலம்பியவாறே சஞ்சீவின் அறைக்கு வந்து சேர்ந்திருந்தான் கோகுல்.

 

*****

 

தான் திட்டு வாங்கிய கதையை சஞ்சீவிடம் கோகுல் கூற, அதில் சிரித்தவன், “அப்படி என்னத்த டா சொல்லி தொலைஞ்ச?” என்றான் சஞ்சீவ்.

 

“ஹ்ம்ம், ‘நீ குனிஞ்சுட்டே போனதால, உன் முகத்தை சரியா பார்க்க முடியல. அதான் நிதானமா பார்க்கலாம்னு கூப்பிட்டேன்’னு சொன்னேன்.” என்றான் பாவமாக.

 

“அந்த பொண்ணு ஏதோ நல்ல மூட்ல இருந்துருப்பா போல, அதான் திட்டுறதோட விட்டா.” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறினான் சஞ்சீவ்.

 

“ஹும், எப்போ உங்க அண்ணா கூட வேலை பார்க்க ஆரம்பிச்சேனோ, அப்பயிருந்து எல்லாருக்கிட்டயும் பல்ப் வாங்கிட்டு இருக்கேன் டா. நல்லா கோர்த்து விட்டுருக்காரு டா எங்க அப்பா!” என்று கோகுல் கூற அவனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.

 

ரஞ்சுவின் தற்போதைய பாதுகாப்பை அண்ணனிடம் ஒப்படைத்ததால் உண்டான நிம்மதி தான் சஞ்சீவின் சிரிப்பிற்கான காரணமோ!

 

*****

 

ரஞ்சுவின் ஊருக்கு மகிழுந்தில் வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருந்த சஞ்சயின் மனமோ அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆனால், அலைபாய்தலின் காரணம் தான் சரிவர விளங்கவில்லை அவனிற்கு.

 

முகமறியா எதிரியின் திட்டங்கள், அதில் சஞ்சீவ் தாக்கப்பட்டது, வெகு நாட்கள் கழித்து சஞ்சீவுடன் இயல்பாக உரையாடியது, முக்கியமாக இத்தனை நாட்களில் அவன் தேடிய அந்த குரலுக்கு சொந்தக்காரி தன் எதிரியுடன் கைகோர்த்து தன்னை எதிர்க்க நினைப்பது என்று அன்றைய நாளின் நிகழ்வுகள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் யோசித்து மூளை சோர்வடைய, இப்போது ரஞ்சுவிற்காக மேற்கொள்ளும் அந்த பயணத்தினால் சிறிது எரிச்சலும் உண்டானது.

 

‘ப்ச், இந்த சஞ்சு தேவையில்லாம அந்த பொண்ணை இதுல இழுத்து விட்டுருக்கான். இது அவங்களுக்கு தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு தான் ஆபத்து!’ என்று யோசித்தவனிற்கு தெரியவில்லை, ஏற்கனவே அந்த ஆபத்து ரஞ்சுவை கட்டம் கட்டிவிட்டது என்பதை!

 

‘கூகிள் மேப்’பின் உதவியுடன் அவள் வீடிருக்கும் தெரு வரை வந்தவன், அதற்கு மேல் செல்லும் வழி தெரியாமல், அங்கிருந்தவர்களிடம் வினவினான்.

 

அவர்கள் அவனை மேலும் கீழும் பார்க்க, அந்த பார்வையையெல்லாம் உதாசீனப்படுத்தியவன், அவள் வீட்டை நோக்கி மகிழுந்தை செலுத்தினான்.

 

இவ்வளவு தூரம் வந்தவன், அந்த வீட்டிற்குள் செல்ல முதலில் தயங்கினான். ஆனால், சூழ்நிலையை உணர்ந்து கொண்டவன் அவளின் பாதுகாப்பை மனதில் கொண்டு, வீட்டிற்குள் செல்ல முடிவெடுத்து அழைப்பு மணியை அழுத்தினான்.

 

கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களாக முயற்சித்தும் பதிலில்லாமல் போக, இவன் வெகு நேரமாக அழைப்பு மணியை அழுத்திய சத்தத்தில், அருகிலிருந்த வீடுகளிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தனர்.

 

அதைக் கண்டவனின் பொறுமை சிறிது சிறிதாக மறைய, அடுத்த முயற்சியாக கதவைத் தட்ட ஆரம்பித்தான். அப்போதும் எதிர்பக்கமிருந்து எந்த எதிர்வினையும் இல்லாது போனதால், ‘வெளிய தான அவளை பார்த்தேன். இன்னும் வீட்டுக்கு வரலையோ?’ என்ற குழப்பத்துடன், எதற்கும் முயற்சித்து பார்க்கலாம் என்று கதவின் கைப்பிடியில் கைவைத்து அழுத்த, இதை முதலிலேயே செய்திருக்கலாம் என்பது போல, அது சுலபமாக திறந்து கொண்டது.

 

அதைக் கண்டவனின் மனதில் பொறுமை தொலைந்த கோபத்துடன் இதுவும் சேர்ந்து கொள்ள, அன்றைய நாளில் பொறுப்பற்ற தன்மைக்காக சஞ்சுவைத் தொடர்ந்து ரஞ்சுவையும் திட்டிக் கொண்டிருந்தான் சஞ்சய்.

 

வீட்டிற்குள் சென்றவன், கீழேயிருக்கும் அறைகளில் அவள் அரவம் உணராத காரணத்தினால், மேலே சென்றான். அப்போதே அவன் கண்கள் வீடிருக்கும் நிலையை ஆராய்ந்து குறிப்பெடுத்துக் கொண்டது. அங்கு இரு அறைகள் இருக்க, முதல் அறையைத் திறந்தவன், அதில் எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருக்க, புருவ முடிச்சுடன் இரண்டாவது அறைக்குச் சென்றான்.

 

அங்கு அவன் கண்ட காட்சியில் பதறியவன், ரஞ்சுவைத் தூக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தான்.

 

காதல் கொள்வோம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்