உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -13

Loading

அத்தியாயம் -13

நிரஞ்சன் மற்ற மூவரையும் பார்த்தான்.அவர்கள் மெதுவாக பெருவிரலைத்  தூக்கி சரியென்பது ஒத்துக் கொள்ள அவனும் “எங்களுக்கு ஓகே சார் நீங்க உங்களுக்காகவும்,எங்களுக்காகவும் செய்றீங்க நாங்க ஏன் வேண்டாம்னு சொல்லப் போறோம்” என்று அருகில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தபடியே சொன்னான்.

சபரி “ஓகே சந்தோஷம் இன்னைக்கே அவங்களை வேலைல சேரச் சொல்லியாச்சு” என்றார்.

பக்கத்தில் அமர்ந்திருந்தவர் எழுந்து வெளியே சென்றார்.நால்வரும் புரியாமல் சபரியைப் பார்க்க அவரோ “அவங்க வெளியே இருக்காங்க அதான் அவன் கூப்பிட போய் இருக்கான்” என்று சொன்னார்.

நால்வரும் அருகில் இருப்பவர் தான் அந்த நபர் என்று நினைத்து இருந்தனர்.தங்களுக்குள் பார்வையை பரிமாறிய படி  வாசலைப் பார்த்தனர்.முன்னால் அந்த நபரும் அவருக்கு பின்னால்  அவரை விட குள்ளமாக இருக்க வேண்டும் அதனால்  வருபவரை சரியாக அவர்களால் பார்க்க முடியவில்லை.

சபரி எழுந்து “முன்னால் வாம்மா” என்றவர் அவர்களைப் பார்த்து “சிற்பி இவங்க கூடத் தான் இனிமேல் நீ வேலைச் செய்யப் போறே” என்று  அவளையும் நால்வரையும் அறிமுகப்படுத்தினார்.

நால்வருக்கும் அவள் பெண் என்பதே பெருத்த அதிர்ச்சியாக இருந்தது என்றால் அவளும் அதே நிலைமையில் தான் அவர்களை அதிர்ச்சி விலகாமல் பார்த்தாள்.

அவர்கள் ஐவரும் அதிர்ச்சியாய் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர்.

சிற்பியோ  மனதினுள் ‘மாமா வேலை வேலைன்னு கடைசில என்னை பேஜ்லர்ஸ் வீட்டுக்குள்ள தள்ளி விட்டுட்டீங்களே! ஐய்யய்யோஓஓ… இப்போ நான் செய்யவேன் ஓடிக் கூட போக முடியாதே! ஒரு வருஷம் கட்டாயமா  வேலைப் பார்ப்பேன்னு சைன் போட்டுட்டேனே அம்மே இவனுங்களை பார்த்தாலே பயமா இருக்கே அதிலேயும் நெட்டையாக உம்மென்று நிற்கிற அவனைப் பார்த்தாலே எனக்கு வவுறே கலக்குது அவ்வ்வ்…’ என்று அவள் மனதில் எண்ணிக் கொண்டிருந்தாள்.

சபரி நால்வரையும் தனித்தனியாக பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தினார்.

நால்வரும் அவளை ஒவ்வொரு விதமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.நிரஞ்சன் ‘சரியான பட்டிக்காடை அழைச்சுட்டு வந்து இருக்காங்க’ என்று எண்ணினான்.

காந்தனோ ‘ஆள் பார்க்க பேக்கு மாதிரி இருக்கு இல்லைன்னா பயங்கரமான  உஷாரான ஆளா இருப்பாளோ?’ அவன் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தான்.

பார்த்தியும் சஹாவும் ‘நமக்கு புதுசா நேரம் போக ஆள் கிடைச்சிருச்சு’என்று இருவரும் ஒருவரைப் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

சிற்பி எல்லோரையும் பார்த்து பொதுவாக “வணக்கம்” என்றாள்.

நிரஞ்சன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.காந்தன் சிநேகமாய் ஒரு புன்னகை ஒன்றை தந்தான்.பதிலுக்கு சிற்பியும் சிரித்து வைத்தாள்.

சிற்பியிடம் இரண்டு நாட்களில் அவர்களுக்கு உள்ள ஆடிசன் பற்றிய விளக்கத்தைச் சொல்லி விட்டு இருவரும் சென்றனர்.

அவர்கள் சென்றதும் சிற்பியோ நால்வரையும் திருதிருவென்று பார்த்து முழித்தபடி  கையில் கோப்புகளை இறுக பிடித்தபடியே நின்றாள்.

நிரஞ்சன் அவளை பார்த்து முறைத்து விட்டு ஒன்றும் சொல்லாமல் வெடுக்கென்று வேகமாய் சென்றான்.

அவன் செல்வதைப் பார்த்த சிற்பி மனதினுள் ‘இப்போ எதுக்கு இவன் இப்படி சிணுங்கிட்டு கோபமா போறான் உங்களை எல்லாம் பார்த்து பொண்ணாக  டேய் இந்த ரியாக்ஷனை நான் செய்யனும் நீ செஞ்சுட்டு போறே’ என்று அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மூவரும் அவன் பின்னால் சென்று கதவை மூடிவிட்டு உள்ளே சென்றனர்.

அவர்கள் உள்ளே சென்றதும் இவளோ அங்கே தனியாக இருந்த  நாற்காலியில் உட்கார்ந்தாள்.எங்கே பெரிய இருக்கையில் இருந்தால் யாராவது  அருகில் அமர்ந்து விடுவார்களோ? என்று எண்ணி அதில் அமர்ந்துக் கொண்டாள்.

உள்ளே சென்றதில் காந்தன் நிரஞ்சனிடம் “ஏன் இப்போ இவ்வளவு கோபமா உள்ளே வந்தே?”

நிரஞ்சன் “வேற என்னச் செய்யச் சொல்லுறே? எனக்கு அந்தப் பொண்ணைப் பார்த்தாலே பிடிக்கலை”

“ஏன்டா?”

“அவளும் அவ டிரெஸ்ஸிங் செஞ்சதும் பார்த்தல்ல சரியான பட்டிக்காடு” என்று  கோபமாகச் சொன்னான்.

காந்தன் புரியாமல் “என்னச் சொல்லுற நிரஞ்சா? அவ எப்படி இருந்தால் நமக்கென்ன?” என்று கேட்டான்.

இப்படிச் சொன்ன காந்தனைப் பார்த்து முறைத்தான்.உடனே பார்த்தி “காந்தா அவனுக்கு அது பொண்ணு அப்படிங்கிறதுனால பிடிக்கலை சரியா?” என்றதும் நிரஞ்சன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

சஹா சிரித்துக் கொண்டே “இந்த வி…விஷயத்துல நான் நிரஞ்சன் ப..பக்கம் தான் ஏன்னா இந்த காலத்துல எந்த பொண்ணுங்கடா இப்படி டிரெஸ் செய்வாங்க அவ போட்டு இருக்கிற டிரெஸ் அவளை மாதிரி இ…இன்னொரு ஆளையும் உள்ளே வைக்கலாம் அவ்வளவு பெரிசா லூசா போட்டு இருக்கிறா அதோட கிராமத்துகாரங்க மாதிரி ஹேர் ஸ்டைல் லுக்காவே இல்லை” என்றதும் மூவரும் அவனை முறைக்கும் முறையாயிற்று.

நிரஞ்சன் “சின்ன பையன்னு பார்த்தால் நம்மள விட இவன் தான் நல்லா கவனிச்சு இருக்கான்” என்று சிரித்தபடியே சொன்னான்.

“இ..இல்லை நீங்க ஒவ்வொருத்தரும் கொஞ்சம் கொ…கொஞ்சமா சொன்னீங்க நான் மொத்தமா சொன்னேன் அவ்வளவுதான்” என்று சஹா தலையை லேசாக தடவி சிரித்தபடியே சொன்னான்.

காந்தன் நிரஞ்சனிடம் “நிரஞ்சா இப்போ அந்தப் பொண்ணு அவ பேரு” என்று அவன் யோசிக்கும் போது பார்த்தி “சிற்பி” என்றான்.

அதைக் கேட்ட சஹா “பேரு இ..ராமாயி,மங்கம்மா இருக்கும்னு பார்த்தால் அது மட்டும் நல்லா இருக்கே சிற்பி” என்றதும் மூன்று பேரும் அவன் தோளில் கைப்போட்டு நெருக்கியபடி “இதோட நிறுத்து இல்லைன்னு வைச்சுக்கோ அவளை தொரத்துறக்கு பதிலா உன்னை துரத்தி விடுவேன்’ என்றார்கள்.

காந்தன் இப்பொழுது கவனமாக “நிரஞ்சா அந்த சிற்பியைப் பற்றி யோசிக்கிறதை விடு,அவளும் ஒரு எம்ளாயி என்கிற எண்ணத்தோடு பாரு” என்றான்.

ஆனால் அவளைப் பார்த்ததும் இன்னொருத்தியின் நினைவல்லவா அவன் மனதில் வருகிறது.அதே கிராமத்து சாயலில் அதை எப்படி அவனால் மறந்து விட முடியும்? ‘என்ற யோசனையோடு நிரஞ்சன்  நிற்கும் போது அவர்கள் இருக்கும் அறைக் கதவை தட்டும் சத்தம் கேட்டது.

பார்த்தி கதவை திறக்கப் போகும் போது நிரஞ்சன் “இருடா நானே போய் பார்க்கிறேன்,அந்தப் பொண்ணாகத் தான் இருக்கனும் கொஞ்சம் வெயிட் பண்ண முடியாதோ? அவளோ அவசரமாக என்னவாம்?” என்று கோபப்பட்டு கதவை திறக்கவும் அவள் தலையை திருப்பிய படி கதவை தட்ட போகும் பொழுது அவன் கதவை திறக்கவும் நேராக அவன் முகத்தில் மேல் தட்டினாள்.

சட்டென்று பதறியபடி கையை எடுத்துக் கொண்டாள்.நிரஞ்சனோ முறைத்துக் கொண்டு “கதவு எங்கே இருக்குன்னு கூட உனக்கு தெரியாதா?”

அவளோ “கதவு இருந்த இடத்துல நீங்க தான் சார் உங்க முகத்தை கொண்டு வந்தீங்க அப்போ அது என் தப்பு இல்லையே” என்று  பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு  சொன்னாள்.

அவள் சொன்ன பதிலைக் கேட்டு மூவரும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றனர்.அவனோ இன்னும் எரிச்சலாகி “இப்போ எதுக்கு அவசரமா கதவை தட்டுனே?”

“அ…து நீங்க உள்ளே போகவும் சாப்பாடு ஆர்டர் செய்து இருக்கீங்க வந்துச்சு வாங்கி வைச்சுட்டேன் வெளியே வருவீங்கன்னு பார்த்தேன் வரலை அதான் கதவை தட்டுனேன்” என்று பேசி முடிக்கும் முன்னரே அவன் பேசத் தொடங்கினான்.

“இதுக்காக தான் அவசரமா நாங்க பேசிட்டு இருக்கும் போது தொந்தரவு செய்தியா?”

“அ..து  சாப்பிட நேரம் ஆகுதுல்ல அதான் கூப்பிட்டேன்” என்றதும் அவனோ “ஏன் உனக்கு பசிக்குதா?” என்றவுடன் அவளும் ஆமாம் என்று தலையாட்டினாள். இன்னும் கோபமானவனாக “என்ன வந்த உடனே எல்லோரையும் கண்ட்ரோல்  செய்யனும் பார்க்கிறியா?” என்று அவன் கோபமாக கத்தவும் சிற்பியின் கைப்பேசி அழைக்க ஆரம்பித்தது.

இன்னைக்கு வந்த பொண்ணை இவன்  உடனே துரத்தி விட்டால் என்னச் செய்வதென்று மூவரும் நிரஞ்சன் அருகில் வரவும் சிற்பி கைப்பேசியின் அழைப்பை எடுத்தவள் “எஸ் மேம் இதோ இருக்காங்க நான் கொடுக்கிறேன்” என்று அவன் கையில் தன் கைப்பேசியை திணித்தாள்.

அவனோ புரியாமல் பார்த்தாள்.அவளோ கண்களாலேயே அவனை கைப்பேசியை காட்டி சைகையால் பேசு என்பது போல் காட்டினாள்.அவளின் அந்த அதட்டுதலில் ஒரு நொடி தடுமாறி நின்றவன் காதில் கைப்பேசியை வைத்தான்.

மறுமுனையில் “ஹலோ நிரஞ்சன் சாம்பவி பேசுறேன்” என்று நலம் விசாரித்தவள் “திடீரென்று ஒரு சின்ன மீட்டிங் இருக்கு அதனால ஈவ்னிங் ஆபிஸ்க்கு வந்துடுங்க அது சொல்லத் தான் கால் செய்தேன் நீங்க ஏதோ டிஸ்கஸன்ல இருந்தீங்களாம் சிற்பி சொன்னா ஆனா நான்  கொஞ்சம் பிஸி அதான் உடனே பேசலாம்னு இனிமேல் எல்லா விஷயமும் சிற்பி மூலமாகத் தான் சொல்வேன் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதற்குத்  தான் அவ ரொம்ப நல்லப் பொண்ணு” என்றதும் சிற்பியை நிமிர்ந்து பார்த்தான்.அவளோ அந்த பெரிய நாற்காலியில் உட்கார்ந்து இருந்தாள்.

எல்லாவற்றிற்கும் ஒரு “ம்ம்…” என்று பதிலுரைத்து கைப்பேசியை வைத்தான்.நால்வரும் அவளைப் பார்த்தனர். அவளோ கையில் இருந்த கோப்புகளை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆனால் சிற்பியோ லேசாக பார்வையை மேலே தூக்கிப் பார்த்தவள் அவர்கள் நால்வரும் அவளை முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டவள் மனதினுள் ‘அடேய் மக்கா  நான் என்ன செஞ்சுட்டேன்னு இப்படி என்னை முறைக்கிறீங்க? மீ பாவம் நானும் எவ்வளவு நேரம் வலிக்காதா மாதிரி எப்படி தான் நடிப்பேனோ!’ என்று அவர்களை பார்க்காத மாதிரி ஏதோ முக்கியமானதை படிப்பது போல் பாவனைச் செய்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டுபிடித்த நிரஞ்சன் “ஏய் பட்டிக்காடு  பட்டிக்காடு” என்று சத்தமாய் அழைத்ததும் நிமிர்ந்து பார்த்தாள் சிற்பி.

நானா என்பது போல் சைகைச் செய்ய அவனோ ஆமாம் என்று தலையசைக்கவும் கோபமாக முறைத்தவள் “ஹ…லோ சார் என் பேரு பட்டிக்காடு இல்ல சிற்பி”

“ஓ… அப்புறம்”

“என்ன அப்புறம்? சிற்பின்னு அழைச்சால் தான் என்னன்னே கேட்பேன்”

“டேய் பார்டா இந்த சுண்டைக்காய்க்கு என்கிட்டவே எவ்வளவு தைரியமா பேசுது”

“ஹலோ சார் என்ன இது? சுண்டைக்காய் அது இதுன்னு பேசுனீங்க  அவ்வளவு தான்” என்று மிரட்டினாள்.

“என்ன செய்வே?”

“நானும் நீங்க என்னை  எப்படி அழைச்சீங்களோ நானும் அப்படியே கூப்பிடுவேன்” என்று தைரியமாகச் சொன்னாள்.

“எங்கே சொல்லு பார்ப்போம்”

“நான் என்ன உங்களை உம்முனா மூஞ்சுன்னு சொன்னேனா? இல்லை நெட்டையன்னு சொன்னேனா?”என்று அவனைப் பார்த்து கேட்டாள்.

 நிரஞ்சன் கோபமாகி அவன் அருகில் செல்லவும் அதுவரை விளையாட்டாய்  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மூவரும் முன்னால் வந்து காந்தன் “ஹேய் நிறுத்துங்க என்னது இது? சின்னப் பசங்க மாதிரி ரெண்டுபேரும் சண்டைப் போட்டுட்டு இருக்கீங்க?”

நிரஞ்சன் “காந்தா நான் இல்லைடா   இந்தப் பொண்ணு தான் ஆரம்பித்தாள்”

சிற்பியோ “நான் இல்லை சாரு தான்” என்றதும் சஹா இடையினில் வந்து “நா…நான் சொல்றேன் நீங்க இரண்டுபேரும் இல்லை நாங்க தான் சண்டைக்கு காரணம் நீ…ங்க ரெண்டுபேரும் பேசுறதை அமைதியா கேட்கிறோம் பத்தியா அது தான் தப்பு” என்று அவன் பேசினான்.

பார்த்தி “நிரஞ்சா முதல்ல போன்ல என்னச் சொன்னாங்கன்னு சொல்லு”

அவன் சாம்பவி சொன்ன விஷயங்களைச் சொன்னான்.உடனே காந்தன் “சரி இப்போ நம்ம சாப்பிட்டு ஒரு தடவை ப்ராக்டீஸ் செய்யத் தான் நேரமிருக்கும் அதனால நம்ம வேலையைப் பார்க்கலாம்” என்றான்.

உடனே சிற்பி “சார் நீங்க கரெக்ட்டா சொல்லீட்டீங்க வாங்க  முதல்ல நம்ம வேலையைப் பார்க்கலாம்” என்றாள்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சூப்பரு சிற்பி வெளில தைரியமா இருக்குதே … தைரியமா இருக்கிற மாதிரியாச்சும் நடிக்குதே … இவங்க ரெண்டு பேருக்கும் இடையில தான் ஏதோ பழைய கதை இருக்கும் போலயே …

  2. ஓ! அப்படின்னா முன்னரே சிறிபியைத் தெரியுமா நிரஞ்சனுக்கு? அருமையான பதிவு 👏👏