Loading

32

 

நாட்கள் இருபது மெல்ல கடந்திருந்தது.

 

தோழிகள் நால்வரின் வேலையும் பறிபோயிருந்தது. சுடரொளிவானனுக்கு அவனது திறமையினாலும் கடந்த நான்கு வருடங்களாக அவன் பணிபுரியும் நிறுவனத்திற்குத் தேடித் தந்த நற்பெயர்களாலும், வேலை தக்கவைத்துக் கொள்ளப்பட்டது.

 

பிரம்மவதனி, ப்ரீத்தி மற்றும் சுபிக்ஷா, வேலை தேடி ஒரு நிறுவனம் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்க, சிவப்ரியா மனதளவிலும் கொஞ்சம் திடமான பின்பு, வேலை தேடிச் செல்லும் அனுமதியை தருவதாக, ராமராஜன் கூறியிருந்தார்.

 

காலை விரைவாக எழுந்து, குளித்து முடித்து, தயார் நிலையில் வந்த பிரம்மவதனி, காலை உணவையும் ப்ரீத்தி வீட்டில் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அங்கு வந்து சேர்ந்தாள்.

 

ப்ரீத்தி அறையில் தயாராகிக் கொண்டிருக்க, பிரம்மா தனது அலைபேசியில் என்னவோ தீவிரமாக தட்டச்சு செய்துக் கொண்டிருந்தாள்.

 

தயாராகி வந்த ப்ரீத்தி, அவளது தீவிரமும், புன்னகையும் கலந்த முகத்தை சற்று குறுகுறுப்போடு பார்த்தபடி வந்து அமர, அதைகூட உணராமல் என்னவோ தட்டச்சு செய்துக் கொண்டிருந்தாள்.

 

“சாப்பிட வாங்க பிள்ளைகளா..” என்று பிரபா அழைக்க, அதையும் அவள் காதில் எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

 

தோழியைக் குழப்பத்துடன் பார்த்த ப்ரீத்தி, “பிரம்மா” என்று மெல்ல அழைக்க,

 

அதையும் கவனிக்கத் தவறினாள்.

 

“பிரம்மா” என்று மீண்டும் ப்ரீத்தி சத்தமாக அழைக்க,

 

“அ..ஆங்.. சொல்லு ப்ரீத்தி” என்று தடுமாறி நிமிர்ந்தாள்.

 

“என்ன பண்ற? எவ்ளோ நேரமா கூப்பிடுறேன்? நான் வந்து உக்காந்தப்பவும் பாக்கலை, அம்மா கூப்பிட்டவும் நிமிரல, நான் ரெண்டு தடவைக் கூப்பிட்டும் ஏன்னு கேட்கலை” என்று ப்ரீத்தி கூறிக் கொண்டிருக்கும் நேரம்,

 

சுபிக்ஷா காலை உணவை முடித்துக் கொண்டு அவ்விடம் தயார் நிலையில் வந்தாள்.

 

அலைபேசியில் கருப்பசாமி, “நல்லபடியா பண்ணிட்டு வாங்க சுபி. அதெல்லாம் வேலை கண்டிப்பா கிடைக்கும்” என்று கூற,

 

சிறு நாணப் புன்னகையுடன், தலையசைத்தவள், “தேங்க்ஸ் ப்பா” என்று கூறினாள்.

 

இருவரும் அவளைத் திரும்பிப் பார்க்க,

 

டன் டன்னாகப் புன்னகையும் வெட்கமும் அவள் முகத்தில்.

 

“மேடம் லவ் பண்ண ஆரம்பிச்சாலும் தான் ஆரம்பிச்சாங்க.. ஒரே வெக்கம்ஸ் தான்” என்று பிரம்மா கூற,

 

அது அட்சரம் பிசகாமல் கருப்புக்கும் கேட்டது.

 

“வெட்கப் படுறீங்களா? அப்படியென்ன சொல்லிட்டேன் நான்?” என்று கருப்பும் கேலியில் இறங்க,

 

“ஆமா ஆமா.. நீங்க அப்படியே எதுவும் சொல்லிட்டாலும்” என்று முனங்கினாள்.

 

“சொல்லிடுவேன் தான்.. பாவம் சின்னப் பொண்ணேனு பாக்குறேன்” என்று கருப்பசாமி நக்கலாகக் கூற,

 

அவள் முகம் செம்மை பூசியது.

 

“ஏய்.. இவ ப்ளஷ் ஆவுறாடி” என்று ப்ரீத்தியும் கேலியில் இறங்க,

 

கருப்பசாமி அட்டகாசமாய் சிரித்தான்.

 

“ப்ச்.. நான் அப்பறம் கூப்பிடுறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவள், “என்னடி? ரொம்ப தான் ஓட்டுறீங்க? பிச்சுடுவேன். கிளம்புங்க போவோம்” என கூற,

 

“இருடி சாப்பிட்டுட்டு வரோம்” என்றபடி சென்றனர்.

 

உண்டுமுடித்து பேருந்தில் அவர்கள் புறப்பட, சுபிக்ஷா ப்ரீத்தி ஒரு இருக்கையிலும், முன்னிருக்கையில் பிரம்மாவும் அமர்ந்தனர்.

 

மீண்டும் பிரம்மா எதையோ தட்டச்சு செய்ய,

 

சுபியின் தோளிடித்த ப்ரீத்தி, “இவ சரியில்லடி.. என்னமோ ரொம்ப நேரமா தட்டிக்கிட்டு இருக்கா. சுத்தி சரௌன்டிங்ல கவனமே இல்ல.. சம்திங் ஃபிஷி” என்று கூறினாள்.

 

தானும் அதை கவனித்த சுபிக்ஷா, நேரடியாக, “என்ன டைப் பண்ற பிரம்மா” என்று அவள் தோள் தட்டிக் கேட்க,

 

அவள் திடீர் அழைப்பில் திடுக்கிட்டவள், “சும்மாடி.. குட்டியா ஒரு பக்கக் கதை போல டைப் பண்றேன்” என்றாள்.

 

“கதையா? நீ எப்பருந்து ரைட்டர் அவதாரமெல்லாம் எடுத்த? என்ன கதை? குடு படிச்சுப் பார்க்குறோம்” என்று ப்ரீத்தி கூற,

 

“இன்னும் முடிக்கலை. முடிச்சா சொல்றேன்” என்று திரும்பிக் கொண்டாள்.

 

ஆனாலும் என்னவோ அவர்களுக்கு வித்தியாசமாகப் பட்டது.

 

நிறுவனம் சென்று நேர்காணல் முடியும் வரை அமைதியாக இருந்தவள் மீண்டும் தட்டச்சு செய்யத் துவங்கியிருந்தாள்.

 

வீட்டை அடைந்தவள், “பை டி” என்று தன் இல்லம் நோக்கி நடைபோட,

 

“இவ என்னமோ தில்லு முள்ளு பண்றாடி..” என்று சுபிக்ஷா தீவிரக் குரலில் கூறினாள்.

 

அறைக்குள் சென்று கட்டிலில் பொத்தென்று விழுந்தவள், அலைபேசியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

காரணம் வேறொன்றும் இல்லை…

 

ராஜசிம்மனைப் பற்றி அவள் தெரிந்துகொள்ள நினைத்தபோது, அவளுக்குத் தோன்றிய யோசனை, இணையம் தான். இன்ஸ்டாகிராமில் ஒரு போலி கணக்கை உருவாக்கிக் கொண்டு, அவனது இணைய பக்கத்தைத் தொடரத் துவங்கினாள்.

 

சின்னச் சின்னதாக, அவன் மனநிலையை யூகித்து, அதற்கு ஏற்றவாறு, காதல் தோல்வி கவிதைகளைப் போட்டு அவன் கவனம் பெறத் துவங்கினாள்.

 

அங்கு தில்லியில் வேலை வேலையென்று ஓடித் திரிந்த ராஜசிம்மனுக்கு இதையெல்லாம் பார்வையிட அத்தனை நேரம் இருக்கவில்லை.

 

இரவு உறக்கம் தழுவ வந்து கட்டிலில் விழுந்தால், தூக்கம் வெகு தொலைவு சென்று அவனை இம்சித்தது.. அப்போது வேறு வழியின்றி அலைபேசியை எடுத்துப் பார்வையிடத் துவங்கினான்.

 

அப்படித்தான் தன்னைப் புதிதாகத் தொடரும் புது கணக்கையும், அதிலிருந்து பதிவிடப்படும் கவிதைகளையும் பார்வையிட்டான்.

 

அவனை உண்மையில் அவை நெகிழ வைத்தது.

 

முதலிரண்டு நாட்கள் அமைதியாக பார்க்க மட்டும் செய்தான்.

 

மூன்றாம் நாள், ‘எல்லாமே முடிந்து போவதற்குத்தான் என்றால்,

 

ஏன் துவங்க வேண்டும்?

 

துவக்கமேயில்லாமல் போனால்,

 

முடிவதற்கென்ற எச்சம் இல்லாமல் போய்விடுமே!

 

அதற்குத்தான்…

 

அதற்கு மட்டும்தான்’ என்ற கவிதையைப் பார்த்து மொத்தமாகக் கலங்கிப் போனான்.

 

அதனால் அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கத் துவங்கினான்.

 

பத்து நாட்களுக்கு மேல், அவன் மனம் கொஞ்சம் அந்த கவிதைகளால் ஆசுவாசம் பெறுவதைப் போல் உணர்ந்தான்.

 

‘வலிக்க வலிக்க சில நினைவுகளைப் பிரட்டிப் பார்த்து

 

இன்னும் வலி சுமப்பதில்

 

இந்த இதயத்துக்கு அப்படியென்ன ஆர்வமோ?’ என்ற கவிதையை வாசித்தவனுக்கு, ‘எனக்கு உணர்வுகளை வெளிக்காட்டாத உங்கமேல உடன்பாடு’ என்ற பிரம்மாவின் வரி நினைவு வந்தது.

 

தன் மன உணர்வுகளைத் தான் பூட்டி ஏன் வைக்க வேண்டும்? பழைய நினைவுகளால் தன்னைத் தான் கட்டிப்போட்டு தனக்கும் பிறருக்கும் துன்பம் தேடித் தந்ததை உடைத்து வந்தே ஆக வேண்டும் என்றும், அபூர்வன் பேசியவற்றையும் நினைத்துக் கொண்டு, அதன் முதல் படியாக, அந்த கவிதைக்கு, கட்டிடப்பட்ட இதயத்தினை கருத்தாகத் தெரிவித்தான்.

 

அதை பயன்படுத்திக் கொண்ட பிரம்மா, அவனுக்குத் தனியாக, ‘எனக்கு வந்த முதல் கமென்ட் சார். ரொம்ப நன்றி’ என்று குறுஞ்செய்தி அனுப்ப, வெறும் கட்டைவிரல் தூக்கி பதில் அனுப்பினான்.

 

அடுத்தடுத்த நாட்களில் சின்னச் சின்னதாக, நூறு வார்த்தைகளில் கதைகளும் பதிவிடத் துவங்கினாள்.

 

வாழ்க்கையில் நடந்த பழைய சம்பவங்களுக்காக சம்மந்தமில்லாதவர்களிடம் எடுத்தெறிந்து பேசுவதை மையப்படுத்தியும், திருந்த நினைக்கும் ஒருவனுக்கு வாழ்வு கொடுக்கும் வலி மற்றும் இன்னல்கள் பற்றியும் சின்னச் சின்னக் கதைகள் போட்டாள்.

 

அதற்கும் அவனிடமிருந்து சின்னச் சின்ன கருத்துக்கள் வந்தது.

 

தனியாக சென்று அவள் பேச்சுக் கொடுக்க, அது ஒரு ஆணின் கணக்கென்று நினைத்தவனும் ஓரிரு வார்த்தைகளில் பதில் போட்டு முடித்துக் கொண்டான்.

 

அவனொரு காவலன் என்பதால், இணையதள நண்பர்கள் மீது அவனுக்கு அத்தனை நம்பிக்கை இருக்கவில்லை. ஒரு அழுத்தமான எல்லைக்கோட்டை நிலையாக வைத்துக் கொண்டான்.

 

அந்த எல்லைக் கோட்டிலிருந்து வெகுதூரம் தள்ளி இருந்தவன் அதன் அருகே சில அடிகள் எடுத்து வைக்கும் விதமாக, ‘உங்க கதையும் கவிதையும் எனக்கு என் லைஃபோட ரிலேட் பண்ற ஃபீல் கொடுக்குது’ என்ற குறுஞ்செய்தி இன்று அவனிடமிருந்து வந்தது.

 

‘ஏன் ப்ரோ என்னாச்சு?’ என்று அவள் செய்தி அனுப்ப,

 

‘கொஞ்சம் பர்ஸனல் ஃபெயிலியர்ஸ்’ என்பதோடு முடித்துக் கொண்டான்.

 

“இந்தாளைப் பத்தி இவர் மூலமாவே தெரிஞ்சுக்குறது கொஞ்சம் கஷ்டம் தான் போல. போலீஸுங்குறதால ரொம்ப உஷாரா இருக்கார்” என்று யோசித்தவளுக்கு மனதில் வேறொரு யோசனை எழுந்தது…

 

அங்கு சுடரொளி வானன், ஆராய்ச்சி கூடம் ஒன்றில் நுண்ணோக்கியில் தீவிரமாகத் தன் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தான்.

 

“என்ன பண்ணலாம் சார்?” என்று அவனது முதன்மை ஆராய்ச்சியாளர்களிடம் சுடர் பேச,

 

“டிஃபிகல்ட் பிராஸஸ். இது செயல்பட மாசங்கள் ஆகலாம் வருடங்கள் ஆகலாம். முதல்ல அந்த ஜீன ஐடென்டிபை பண்ணி கிரிஸ்பர் மூலமா ரிமூவ் பண்ணனும். மெலனின் என்கோடிங் ஜீன ஸ்டிமுலேட் பண்ணனும். பட் இதனால அவர் ரொம்ப கருப்பாகவும் வாய்ப்பு இருக்கு. இதை இரண்டையும் செய்தா, புது செல்ஸ் ரீ-ஜெனரேட் ஆகி, எக்ஸ்பிரஷன்ஸ் நடந்து அவரோட நிறம் பழையபடி மாற வாய்ப்புண்டு. ஆனா இதெல்லாம் நடக்க நிறைய காலம் எடுக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், ஜெர்ம்லைன் செல்ஸ்லயும் நாம அதை ரிமூவ் பண்ணலைனா அவனோட அடுத்த ஜெனரேஷனுக்கு இது கேரி ஃபார்வர்ட் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு” அனைத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

 

ஆம்! சுடரொளிவானன், ஒரு மரபணு ஆராய்ச்சியாளன். தன் தந்தை செய்த பிழைக்கான மருந்தாய், தானே அபூர்வனை மீண்டும் நிலை மாற்ற அவன் எடுக்கும் முயற்சிதான் இவை.

 

ஆய்வுக்கூடத்தில் படுத்திருந்த அபூர்வனை கண்ணாடி கதவு வழியாகப் பார்வையிட்ட சுடரொளி வானன், “என்ன ஆனாலும் சரி சார். இதை நான் கைவிடுறதா இல்ல. அவருக்கு என்னால முடிஞ்ச ஒரு உதவியா இதை செய்தே தீருவேன்” என்று தீவிரக் குரலில் கூறினான்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்