Loading

இன்னார்க்கு இன்னார்ன்னு கடவுள் எப்பவோ முடிவு பண்ணிருப்பாரு டா என் கேசவா , எனக்கு எப்பவுமே நீ தான் டா ஜோடி !! எங்க அக்கா கல்யாணம் நாளைக்கு இந்நேரம் நல்லபடியா முடிஞ்சிருக்கும், அதுகப்ரம் நம்மள பத்தி சொல்ல வேண்டியது மட்டும் தான் பாக்கிடா என் கேசவா !! என்றாள் வினுமதி.

 

“எனக்கு தான் பயமா இருக்கு வினு “

 

“ஏன்? எங்க வீட்ல நம்ம லவ்வ அக்சப்ட் பண்ண மாட்டாங்கனு பயபடறியா குமாரு?”

 

” இல்ல உனக்கு படிக்க படிக்கவே வேலை கிடைச்சிருச்சு, ஆனா எனக்கு இன்னும் கிடைக்கல அதான் பயமா இருக்கு”

 

“அத பத்தி எல்லாம் நீ ஏன் கவலை படற, உனக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் பயப்படாத, நல்லா படி, வர எக்சாம் ல எல்லாம் அரியரையும் கம்ப்ளீட் பண்ணிடு , அது வரைக்கும் உன் ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஊர சுத்தாத சரியா ” என அவள் சொல்லி முடிக்கும் முன்னே அவனின் கைபேசிக்கு அழைப்பு வந்தது. யாரென எடுத்து பார்த்தவன் பட்டென சைலண்ட் மோடில் போட்டு விட்டு உள்ளே தள்ளினான். வினு முறைத்து பார்த்து விட்டு “யார்? ” என்பது போல் சைகையாலேயே கேட்க, யாருமில்லை என்பது போல் இவனும் சைகையாலேயே பதில் அளித்தான்.

 

இவள் தொடர்ந்து முறைக்க அவன் உண்மையை உதிர்த்தான். 

 

“அது ஒண்ணுமில்ல வினு , ப்ரெண்ட்ஸ் எல்லாம் ட்ரீட் கேட்டாங்க”

 

“எதுக்கு ? “

 

” உன் லவ் தான் இப்போ வீட்லயும் ஓகே ஆக போகுதுல, ட்ரீட் கொடு டான்னு எல்லாரும் கேட்டாங்க அதான் போன் பண்றாங்க”

 

“ட்ரீட் ன்னா? “

 

” ஐயோ ! நீ நினைக்கிற மாதிரி எல்லாம் வினு, ஜஸ்ட் ஹோட்டல்ல லஞ்ச் தான்”

 

“அந்த பயம் இருக்கணும்”

இந்த உரையாடல் அனைத்தும் கோவை பேருந்து நிலையத்தில் தான் இவ்வளவு நேரம் நடந்து கொண்டிருந்தது. இப்பொழுது கொடைக்கானல் செல்ல வேண்டிய கிளம்ப ஆயத்தமானது. 

 

” சரி டா , பஸ் ஸ்டார்ட் பண்ண போறாங்க நான் கிளம்பறேன், சொன்னதெல்லாம் ஞாபகம் வெச்சுகோ என்ன”

 

“ஹான், ஒரு நிமிஷம் வினு”

 

“சீக்கிரம் சொல்லு டைம் ஆகுது”

 

“டிரீட்க்கு காசு கொஞ்சம் பத்தல”

 

“அதுக்கு ?”

 

“ஒரு 500 குடேன்”

 

“நான் அவங்க கூடவே சேரகூடாதுனு சொல்றேன் , நீ என்னடான்னா அவங்களுக்கு ட்ரீட் கொடுக்க என்கிற காசு கேக்கற”

 

” பிளீஸ் வினு”

 

“சரி இந்தா , நல்லா படி நான் ஒரு வாரத்திலயே வந்துருவேன்”

 

“ஹான் சரி , பாத்து போ”

 

“சரிங்க கேசவன்” என பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள் .

 

பைக்கில் அமர்ந்திருந்தவனுக்கு பாய் சொல்ல அவனும் பதிலுக்கு பாய் சொன்னான். பேருந்து மெல்ல நகர்ந்து சென்றது.

 

அன்று அவர்களுக்கு தெரியாது , இதுவே அவர்கள் இருவரும் கடைசியாக காதலர்களாக பார்த்துக்கொள்ளும் சந்திப்பு என.

 

மனதில் பல எண்ண அலையோட்டதுடன் பயணித்தாள் நம் கதையின் நாயகி வினு.

விதி யாரை விடும் நடப்பவை தானே நடக்கும். இப்போ நம்ம வினுமதிய பத்தி பாக்கலாம் வாங்க. 

 

வினுமதியோட குடும்பம் சின்ன குடும்பம் தான். அப்பா,அம்மா , அக்கா , அப்றம் நம்ம வினு. அப்பா ஒரு பிஸ்னஸ் மேன் பிஸ்னஸ் நல்லா போனாலும் அவருக்கு ஒரு பழக்கம் இருக்கு லாட்டரி சீட்டு. பிஸ்னஸ் ல வர காச கொஞ்சம் கொஞ்சமா இதுல போட்டு லாஸ் ஆகிட்டுதா இருக்கு , இருந்தாலும் பழக்கத்தை விட முடியாம தொடர்ந்து செஞ்சுகிட்டே இருக்காரு வினுமதியின் அப்பா ராமசாமி .

 

அம்மா பேர் சாந்தா பேருக்கு ஏத்த மாதிரியே ரொம்ப சாந்தமான குணம். இவங்க ஹவுஸ் வைஃப்.அவங்கள பாத்தா ஊர் உலகமே தெரியாத மாதிரி இருப்பாங்க ஆனா நல்ல அறிவாளி . எப்போ ஆலோசனை தேவை பட்டாலும் ராமசாமி முதல வந்து நிக்கறது அவரோட பொஞ்சாதி சாந்தா முன்னாடி தான். எல்லாம் விசயமும் கேட்டாலும் இந்த லாட்டரி சீட்டு பழக்கத்தை மட்டும் விடல நம்ம ராமசாமி.

 

அடுத்து வினுவோட அக்கா. ஒரு டிகிரி படிச்சிட்டு இப்போ வீட்ல தான் இருக்காங்க சிம்பிளா சொல்லனும்னா கல்யாணத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.நல்லா அழகா தான் இருப்பாங்க ஆனா கொஞ்சம் பிடிவாதம் அதிகம்.தனக்கு பிடிச்சத மட்டும் தான் பண்ணனும்னு நினைப்பாங்க. தனக்கு ஒன்னு பிடிக்கலனா பண்ணவே மாட்டாங்க. யாரை பத்தியும் கவலை படாம வேணாம்ன்னு உதறி தள்ளிடுவாங்க. தங்கச்சி மேல பாசம் தான் இருந்தாலும் அவங்க பிடிவாத குணத்துல தங்கச்சியையும் பாக்க மாட்டாங்க.நம்ம முடிவு பண்ணது மட்டும் தான் வாழ்க்கைல நடக்கணும்னா யாருக்குமே வாழ்க்கைய பிடிக்காம போய்டும். அப்படி யாருக்கும் நடக்கவும் நடக்காது. அப்படி தனக்கு நடக்கும்னு நினைக்கறவங்க தான் பிரியா. எதையும் யோசிச்சு பண்ணனும்ங்கற பழக்கம் இல்லாதவங்க. அப்படியே அவங்க அப்பா மாதிரி நம்ம வினுவோட அக்கா பிரியா.

 

இப்போ நம்ம வினுமதி பத்தி பாக்கலாம் . நிறத்தில அவங்க அக்காவை விட கம்மினாலும் நல்ல லக்ஷணம் பொருந்திய முகம். அழகு மட்டும் இருந்தா போதாது அறிவு வேணும்னு சொல்ற மாதிரி நல்லா அறிவாளி கூட. அப்படியே அவங்க அம்மா மாதிரி .

இப்போ அவங்க அக்கா கல்யாணத்துக்காக தான் போயிட்டு இருக்கா . என்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிக்கறா வேலையும் கிடைச்சிருக்கு . இன்னும் ஆறு மாசம் படிப்பு முடிச்சிட்டா வேலைல போய் ஜாயின் பண்ணிடலாம். காலேஜ் ல கூட படிக்கற பையன் கூட பழக்கம் ஏற்பட்டு அது அப்படியே காதலாகிடுச்சு . அக்கா கல்யாணத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா அக்கா கல்யாணம் முடிஞ்சா தான் வீட்ல சொல்லனும்னு ஒரு முடிவில் இருந்தா இப்போ அதுக்கான நேரம் வந்துருச்சு.

 

அக்கா கல்யாணத்துக்காக ஒரு வாரம் முன்னாடி ஊருக்கு கிளம்பறான்னு நினைக்க வேண்டாம்.அடுத்த நாள் காலை கல்யாணத்துக்கு முதல் நாள் சாயங்காலம் தான் பஸ்ல போறா வினு. அதுக்கு காரணம் அவளோட எக்ஸாம் இன்னிக்கு கூட எக்சாம் எழுதி முடிச்சிட்டு தான் கிளம்பறா. எப்படியும் அவ ஊருக்கு போய் சேரும்போது நடுராத்திரி இரண்டு மணி ஆகிடும். அக்கா கூட தான் இருக்க முடியல , கல்யணமாச்சும் பாக்க முடிஞ்சதுன்னு மனச தேத்திகிட்டா.

 

மணி இரவு பத்தை நெருங்கி கொண்டிருந்தது. அவ மனசுல இப்போ அவங்க அக்காவோட கல்யாணம் பத்தி தான் ஓடிட்டு இருந்துச்சு. மண்டபம் முழுக்க எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு போடுவாங்க , ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு,சாப்பிட்டு வெறுத்து போய் இன்னிக்கு ஒரு புடின்னு நினைச்சுட்டு இருந்தா . மாப்பிள்ளை போட்டோவை அன்னிக்கு எக்சாம் டென்ஷன் ல சரியா கூட பாக்கவே இல்லையே . இப்போ வாச்சும் பாப்போம் என அக்கா அனுப்பிய போட்டோவை ஆசை ஆசையாய் பார்க்க போனில் உள்ள கேலரியை ஓபன் செய்தாள். ஆனால் போட்டோவை காணவில்லை. அப்போ தான் அவளுக்கு ஞாபகம் வந்துச்சு எக்ஸாம் முடிஞ்ச உடனே அப்பாடா இன்னையோட தலைவலி முடிஞ்சதுன்னு புக்ஸ் போட்டோவை டெலீட் செய்யும்போது இதையும் டெலீட் பண்ணிட்டோம் அப்டிங்கறது. சரி இன்னும் கொஞ்ச நேரத்துல எப்படியும் மாப்பிள்ளைய நேர்லயே பாக்க போறோம் அது மட்டும் இல்லாம அக்கா எங்கிட்ட போன்ல பேசும் போது மாப்பிள்ளை போட்டோ ரொம்ப பிடிச்சிருக்குன்னு தான சொன்னா, நம்ம பாக்கனும்னு என்ன அவசியம் அக்காவுக்கு பிடிச்சிருக்கே அதுவே போதும், என்ன நேர்ல தான் பாக்கலைன்னு சொல்லிட்டே இருந்தா பிரியா ஆனா அப்பாவும் அவருக்கு தெரிஞ்சவங்க பையன் தான சொன்னாரு அப்போ கண்டிப்பா நல்லா பையனா தான் இருப்பாங்க இது வரைக்கும் அத்தான் என்னையும் பாத்ததில்லை, நானும் அவரை பாக்கல நாளைக்கு போய் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்போம், நான் தான் உங்க மச்சினிச்சின்னு என உதட்டில் சிறு புன்னகையுடன் போனை ஆஃப் செய்து விட்டு ஜன்னல் வழியா வந்த காற்றில் மெய் மறந்து கண்களை மூட அவளை நித்திரை பிடித்துவிட்டது. என்னதான் தூக்கம் அவளை ஆட்கொண்டாலும் எண்ணங்கள் அனைத்தும் அங்கே இந்நேரம் கல்யாண கலை கட்டியிருக்கும் என்பதை பற்றியே இருந்தது. ஆனால் அங்கே நடக்கவிருப்பதை அறியாமல் நன்கு உறங்கி போனாள் வினு, வினுமதி.

 

இப்போ நம்ம கதாநாயகன் சந்திரன் பத்தி சொல்லனும்னா ரொம்ப பிராக்டிகல் ஆன பையன். சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை அட்ஜஸ்ட் பண்ணிப்பான். பணக்கார வீட்டு பையன் அப்டின்னாலும் அந்த திமிர் கொஞ்சம் கூட கிடையாது . அப்பாவோட பிஸ்னஸ் அ இவன் தான் பாத்துகிட்டு இருக்கான். அப்பாவ விட நல்ல படியா பிஸ்னஸ் ரன் பண்றான். கொடைக்கானல் ல சாக்லேட் ஃபேக்டரி ரன் பண்றாங்க. இவங்க அப்பாவும் வினுவோட அப்பாவுக்கும் ரொம்ப நெருங்கிய பழக்கம் இல்லாம இருந்தாலும் கொஞ்சம் பழக்கம்.அந்த பழக்கதோட விளைவா தான் இப்போ இந்த கல்யாணம் நடக்குது. சந்திரனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்குன்னு சொல்ல முடியாது, இல்லனும் சொல்ல முடியாது. வாழ்க்கை எப்போ எப்படி மாறும்னு தெரியாத ஒன்னு அதனால அதோட வழியிலேயே போலாம்னு போறவன் தான் சந்திரன்.

 

இப்பொழுது மணி இரவு ஒன்றை நெருங்கியது. அங்கே மண்டபத்திலோ மணமகன் அறை, அவர்கள் சொந்தம் தங்கியிருந்த அறை என அனைத்திலும் அமைதி நிலவியது. 

 

ஆனால் இங்கோ மணமகள் அறை தொடங்கி அவர்கள் சொந்தம் தங்கியிருந்த அறை வரை ஏதோ ஒரு முணுமுணுப்பு , பதற்றம் , பரபரப்பு என ஏதோ ஒன்று அங்கே தவறு நடந்துவிட்டதை சுட்டி காட்டியது. இங்கு நடப்பது எதுவும் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரியாததால் அங்கு அமைதி நிலவியது. இங்கே நடந்தது மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்தால் அங்கும் இதே நிலைமை தான்.

ஆனால் இதையெல்லாம் அறிந்தாலும் துளியும் இதற்கு ரியாக்ட் செய்ய மாட்டான் நம் கதையின் கதாநாயகன் மாப்பிள்ளை சந்திரன். அதற்கு காரணம் இந்த கல்யாணம் எதனால் முடிவானது என்பதை அறிந்திருந்தான். இன்னார்க்கு இன்னார்ன்னு கடவுள் முடிச்சு போட்டிருந்தா யாரலையும் மாத்த முடியாது.

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Indhu Mathy

      Nice start 💜

      அக்கா ஓடிப் போய்ட்டாளா…. அப்போ தங்கச்சி தான் கல்யாணப் பொண்ணு….. 🙂

      கேசவன் சரியில்லை… அரியர்ஸ் வச்சுட்டு ட்ரீட்ன்னு இவகிட்டயே பணம் புடுங்குறான்….