என் உயிர் – 10 🧬
ஒரு பெரிய கேட்டினை திறந்து இவர்களின் வண்டிகள் உள்ளே போக, பத்து உயர் கட்டிடங்கள் ஒவ்வொரு திசையிலும் உயர்ந்து நின்றது. ஒவ்வொரு கட்டிடத்திலும் குறைந்தது பத்து மாடிகளாவது இருக்கும். அதனை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டே வர, வனஜா தான் புலம்பி கொண்டே வந்தாள்.
“டேய் திருமலை, இவ்வளவு நாளுல இவன் சொந்தமா ஒரு வீடு கூட வாங்காம இருக்கான் பா ! டார்லிங் டார்லிங்னு சொல்லி இவனும் என்னை ஏமாத்திட்டான் பா ! நம்ம தான் ஏமாந்துட்டோமோனு தோணுது “என்று வனஜா தீரனையும் நிலவனையும் வசைபாடி கொண்டே வந்தார்.
கண்மணி முதன் முறையாக “அத்தை…. இதுவும் அவங்க சொந்த வீடு தான். அதோட இந்த வீடு முழுக்க முழுக்க நிலவன் சம்பாத்தியத்தில் வாங்கினது . தீரா தனியா வீடு வாங்கியிருக்கு ” என்று வாய் மொழிந்தார்.
திரும்பி கண்மணியை ஏற இறங்க பார்த்தவர், ” நான் சொந்த வீடு இல்லைனு சொன்னது…. இப்படி ஏதோ ஒரு மூளைல வீடு வாங்கிருக்கான். அதுவும் லட்சக்கணக்கான பேர் வாங்கிருக்காங்க. சொந்த வீடுங்கிறுது நிலம் வாங்கி வாஸ்து பாத்து நம்மளே கட்டுறது. இப்படி கட்டுன வீட்டை ரூபாவ கொடுத்து வாங்கிறது இல்லை . புரியுதா ? க்கும் …… ” என்று கூறி திரும்பி கொண்டார்.
அதில் அனைவருக்கும் சிரிப்பு தான் வந்தது திருமலை உட்பட .
“அடக்கடவுளே ! எப்படி பாட்டி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்க? கிழவிக்கு கல்வி தான் இல்லை…. மத்தபடி நீ படிக்காத மேதை தான் “என்று பெருமையாக செல்வி கூற, வனஜா திரும்பி முறைக்க, சிரித்துக் கொண்டே திரும்பினாள்.
“ரொம்ப சிரிக்காதடி….. உன் பரிட்சை ரிசல்ட் அடுத்த வாரம் வருதாம். ஊர்ல இருந்திருந்தா உங்க அம்மா உன்னை வகுந்துருப்பா …..பாவமேனு கூட்டிட்டு வந்தேன். பாத்து பதனமா இரு…. இல்லை பார்சல் பண்ணி விட்டுறுவேன் “
“கிழவிக்கு கொழுப்ப பாரு ……. ஏதோ ரிசல்ட் வரதுனால ஆடுது. வேறு வழியில்லாம நம்மளும் வாயை மூட வேண்டியதா இருக்கு ….. எல்லாம் நேரம் ” என்று வாய்க்குள் முனுமுணுத்து கொண்டிருந்தாள்.
அவளின் முனுங்கல் நன்றாகவே அருகில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த சஞ்சய்க்கு நன்றாகவே கேட்டது.
ஆம், சஞ்சய் இவர்களை அழைக்க விமான நிலையத்திற்கே வந்து விட்டான். அதோடு இன்னோவையும் எடுத்துக் கொண்டு வந்ததால் அனைவரும் ஒரே காரில் ஏறி அமர்ந்து விட்டனர். அதனால், ஒருவர் பேச்சு அனைவருக்கும் கேட்பதற்கு ஏதுவாக இருந்தது.
ஒரு வழியாக அனைவரையும் வாசலில் இறக்கி லிப்டில் திருமலை, கண்மணி, தீரன், நிலவன் மற்றும் கவி முதலில் ஏறி விட்டனர். காரை விட்டுவிட்டு வந்தவனை அழைத்தது இவர்கள் இருவரின் வாக்குவாதங்களே !
அவர்களின் பேச்சை சுவராஸ்யத்துடன் கேட்டுக் கொண்டே அருகில் நின்று மேலே செல்வதற்கு பட்டனை அழுத்தினான் சஞ்சய்.
“ஏண்டி! உன்னை எப்படி ரெண்டு ஆம்பள பிள்ளைங்ககிட்ட விடுறது …. என்ன தான் பேரனா இருந்தாலும் “
“சரி சரி விடு விடு. நானும் பெண் தானே….. அதான் அப்படி நினைக்கிற . ஆனா, நான் அயன் லேடி”
“என்னடி லேடி பாடினு….. நான் உன்னை நினைச்சு பயந்தது உண்மை தான். உனக்கு ஆபத்து வரும்னு இல்லை. உன்னால ஆபத்துனு தான் “
சஞ்சய் கிலுக்கென்று சிரித்துக் கொண்டே அப்பொழுது தான் அவர்களின் அருகில் வந்தான். அவன் சிரித்தது வஜைாவின் வயோதிக்கத்தால் காதில் விழவில்லை. ஆனால், செல்வியின் காதில் நன்றாகவே விழுந்தது. அதனால், பின்னால் திரும்பி தோள்பட்டையோடு தனது குமடை வைத்து கொணட்டி கொண்டு லிப்டினுள் நுழைய பின்னாலேயே வனஜாவும் சஞ்சய்யும் ஐந்தாம் தளத்திற்கு ஏறினார்.
ஐந்தாம் தளத்தில் நுழைந்தவுடன், வரிசையாக வீடு இல்லாமல், ஒவ்வொரு வீட்டிற்கும் இடைவெளியில் இன்டோர் கார்டன் (Indoor garden) போல் அமைத்திருந்தனர். அந்த தளத்தின் ஒரு ஓரத்தில் பெரிய நீச்சல் குளமும், மறு ஓரத்தில் குட்டியாக சீரமைக்கப்பட்ட பூங்கா அமைத்திருந்தனர்.
நீச்சல் குளத்தின் அருகில் சின்ன ஜிம் போன்று அமைத்திருந்தனர். அதில் பெண்கள் ஆண்கள் அனைவரும் உபயோகிக்கும் கருவிகள் இருந்தது. அதோடு, ஸ்டீம் பாத், ஸ்பா, மசாஜ் என்று சகல வசதிகளுடன் இருந்தது அத்தளத்திற்கு மட்டும்.
பூங்காவின் அருகில் சிறிதா ஆண்களுக்குரிய சலூன், பெண்களுக்கான பார்லர் என்று சகல வசதிகளும் இருந்தது.
அனைத்தையும் ஆவென்று பார்த்த வண்ணம் வனஜாவும், செல்வியும் வர , சஞ்சய் தான் நிலவனின் அப்பாட்மென்டிற்கு அழைத்து சென்றான்.
ஸ்டார் வடிவத்தில் இருக்கும் அத்தளம், 506 என்று பதிக்கப்பட்ட வீட்டில் நிலாவின் படத்தை பதித்திருந்தது.
அங்கே அனைவரும் வாசலில் நிற்க, கதவைத் திறந்தவுடன் கண்மணியை அழைத்து கொண்டு உள்ளே சென்ற வனஜா, தீரனின் உதவியுடன் ஆரத்தி கரைத்து அதனை காண்பித்தே உள்ளே அழைத்து சென்றனர்.
கவி நிலவனின் சுண்டு விரலை வருடிக் கொண்டே தான் வலது காலை வைத்து உள்ளே சென்றாள். அதில் சில்லிட்டு நின்றது என்னவோ நிலவன் தான். அவனின் தோள் தட்டி சஞ்சய் அழைத்து உள்ளே சென்றான்.
உள்ளே நுழைந்தவுடன் கவி நேராக தனது அன்னை , பாட்டியுடன் ஐக்கியமாக, செல்வியும் கூடவே சென்று விட , தீரன், திருமலையை அழைத்து கொண்டு வீட்டை சுற்றி காண்பிக்க சென்று விட, நிலவனும் சஞ்சய்யும் தனித்துவிட இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.
போய் அமரும் நேரத்தில் சஞ்சய்யை “ஹலோ மிஸ்டர் பனமரம்! போய் பால் வாங்கிட்டு வாங்க ” என்று கூறி கையில் சில்லரையை பொறுக்கிக் கொண்டிருந்தாள்.
அவளின் செயலையையும் பேச்சையும் கண்டு நிலவன் சிரிக்க, சஞ்சய் வியக்க, ஒன்றும் அறியா பிள்ளை போல் “தம்பி….. மிச்ச ரூபாவா கொடுத்துடு…. இல்லை கிழவி கொன்னுடும் என்ன …… ” என்று கூறி கையில் 50 ரூபாயை நீட்ட வந்தவள் , அவள் வாங்குகிறானா இல்லையா என்று பார்க்காமல் “இல்லை இல்லை…… எவ்ளோ ரூபா சொல்லு….. நான் சேஞ்சாவே தரேன் உங்களுக்கு “என்று கூறி, சில்லரையை கண்டு கொண்டே அவள் பாட்டிற்கு கூறினாள்.
இப்பொழுது நிலவன் வாய்விட்டு சிரிக்க, அச்சத்தத்தில் தான் நிமிர்ந்து சஞ்சய்யைக் காண , அவன் கை கட்டிக் கொண்டு அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவள் ஒரு புருவத்தை உயர்த்தி “நீ ஒன்னும் ஹீரோலாம் இல்லை. அதனால, இதுலாம் வேறு யாருகிட்டயாவது காமி போ …..போய் பாலை வாங்கிட்டு வா….. போஸ்ஸை பாரு…….. ” என்று செல்வி வறுத்தி கொண்டிருக்கும் நேரம் வனஜா சத்தம் போட , சஞ்சய் பறந்து விட்டான்.
ஒருவழியாக அனைவரும் காபியை அருந்தி விட்டு, உடலை சுத்தம் செய்து கொண்டு ஆண் பிள்ளைகள் சாப்பிட அமர, டைனிங் டேபிளில் இட்லி சாம்பார் சட்னியுடன் உளுந்த வடையும் வைத்திருந்தனர்.
அரை மணி நேரத்தில் இவ்வளவு செய்ய முடியுமா என்ற ஆச்சர்யத்திலும் , நிலவன் இவ்வளவு பாத்திரம் எங்கிருந்து தேடி எடுத்தனர் என்ற யோசனையிலும், தீரன் வீட்டு சாப்பாடு கிடைத்த சந்தோஷத்திலும் மகிழ்வுடன் உண்டு மகிழ்ந்தனர்.
வனஜாவும் கண்மணியும் எடுத்து வைக்கும் நேரத்தில் மூன்று படுக்கையறை கொண்ட வீட்டில், பெரிய விலாசமான அறையில் நிலவன் தங்கியிருந்தான் .
அவ்வறைக்குள் நுழைந்தவுடன் அவனின் பிரத்யேகமான நறுமணம் நாசியை துளைத்தது. அதோடு அவனின் அழகிய ஆழுயரப் புகைப்படம் அவனை அன்பாக சிரித்து வரவேற்றது. தன்னையறியாமல் அவனின் படத்தை கை கொண்டு வருடி கண் மூடி ரசித்த நொடி, மகிலன் தாலி கட்டிய நொடி கண்ணில் தென்பட்டது.
சட்டென்று தீ சுட்டாற் போல் கண் கலங்கி பின்னால் நகர, பரந்த மார்பில் மோதி நின்றாள். திரும்பாமலேயே வந்தது நிலவன் தான் என்று புரிந்து விட்டது. அதனால், திரும்பாமலேயே”பாத்ரூம் எங்க இருக்கு ? ” என்று கேட்டாள்.
“இந்தப் பக்கம் ” என்று வலப் பக்கம் கை காண்பித்து வழி விட, இவள் நிமிராமல் நகர்ந்து செல்ல ” எனக்கு உன் நடவடிக்கை ரொம்ப கொழப்பது இனி “
அவனின் பேச்சில் சோர்வு தெரிந்தது. அதனால் நின்று அவனை அவளும் சோர்வுடன் கண்டு விட்டு ” எனக்கே புரியலயே ” .
இருவரும் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வாயால் கூற முடியாததை கண்ணால் இருவரும் இருவருக்கும் ஆறுதல் கூறிக் கொண்டனர்.
பின்னர், நிலவன் என்ன நினைத்தானோ, ஒன்றும் கூறாமல் வெளியில் சென்று விட்டான். ஏக்க பெருமூச்சு விட்டு இவளும் குளித்து முடித்து விட்டு வெளியில் வந்தவள் அதிர்ந்து விட்டாள்.
நிலவன் தலையைப்பிடித்து கொண்டு நிற்க, சஞ்சய் விழி பிதுங்கி நின்றான். கண்மணி நெஞ்சை நீவி தண்ணீர் குடித்து அதிர்ச்சியை சாந்தமாக்கினார். தீரனும் திருமலையும் முன்னரே சாப்பிட்டு வெளியில் சென்று விட்டனர்.
❤️❤️❤️❤️❤️
“அம்மா, எதுக்கு அம்மா இப்படி கத்திகிட்டு இருக்கீங்க? “
“நான் பேசுறது உனக்கு கத்துற மாதிரி இருக்கா? நான் எப்படியாச்சும் உன்னை செட்டில் பண்ணனும்னு நினைக்கிறேன். நீயே உன் மேல மண் அள்ளி போட்டுட்டு இருக்க “
“அம்மா …. அதுலாம் ஒன்னும் ஆகாதும்மா …… பூஜா பாத்துப்பா “
கரண்டி பறந்து வந்து சீமாவின் நெற்றியில் பதம் பார்த்தது. “அய்யோ அம்மாமாமா……….”
“மூச்…. சத்தம் வரக் கூடாது. இனிமே அவக் கூட சேருறத பாத்தேன் . கொன்னுடுவேன் ” என்று கூறி பாலை காய வைத்திருந்தவருக்கு நினைவுகள் சீமாவும் , பூஜாவும் சஞ்சய்யின் அறையில் சஞ்சய்யின் அலைபேசியை உபயோகப்படுத்தியது தான் ஞாபகம் வந்தது.
இவர்கள் இருவரும் நிலவனை குழப்பிக் கொண்டிருந்தனர். அந்நேரம் சஞ்சய்யின் அம்மா உள்ளே நுழைந்து விட்டார் . இவர்கள் இருவரையும் அந்நேரத்தில் அதுவும் சஞ்சய்யின் அறையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து விட்டார்.
“இங்க என்னம்மா செய்யுறீங்க ? ” என்று அவர்களிடம் கேட்டு விட்டு, வெளியில் திரும்பி “சஞ்சய்…… “என்று அழைத்தார்.
சஞ்சய் வருவதற்குள் பரமேஸ்வரி வந்து “இல்லை அண்ணி! பூஜா பெரிய இடத்து பிள்ளை இல்லையா …. அதான் ஏசி வேணும்னு சொன்னுச்சு . அதான் நான் தான் அவங்களை அங்க உட்கார சொன்னேன். சொல்லக் கூடாதா அண்ணி “
இவ்வாறு கேட்பவரிடம் என்ன சொல்வது என்று நினைத்து சஞ்சய்யையும் பார்வையால் அடக்கி விட்டு நகர்ந்து விட்டார். அதற்குள் இவர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை அழித்து விட்டனர்.
சஞ்சய் எதுவும் செய்தார்களா என்று அலசி ஆராய்வதற்குள் பரமேஸ்வரி இருவரையும் அழைத்து கொண்டு சென்று விட்டார். தீரனிடம் அழைப்பு வந்ததால் அவனும் அதை மறந்து சென்று விட்டான்.
ஆனால், நிலவனின் மனம் குழம்பிய குட்டையாக தான் உள்ளது ?
❤️❤️❤️❤️❤️
“ஆ ஆ ஆ………. ” மகிலன் அறை அதிர கத்திக் கொண்டிருந்தான் .
கீர்த்தி ☘️