அத்தியாயம் – 4
மதிய வேளையில் பொறுமையாக சாலையில் நான்கு நபர்களைத் தாங்கியபடி வந்து நிறுத்தியது அந்த வாடகை ஓலா மகிழுந்து.
“ கொஞ்சம் பொறுமையா வெளிய இறங்குங்க ப்…ய்யா…”
சட்டென அப்பா என அழைக்க இயலாமல் தடுமாறியவள் ஐயா என்றழைத்திட, ஜான்போஸிற்கு மகள் தன்னிடம் பேசுவதே மகிழ்வாக இருந்தது.
இன்றோடு மருத்துவமனை வாசம் ஒரு வாரம் கடந்திருந்தது. இந்த நாட்களில் விதுராவை விட, பப்பு தந்தையுடன் நன்கு ஒன்றி விட்டான். விதுரா செய்யாத சேட்டைகளை அவன் ஒன்றொன்றாய் செய்து அவரை கொஞ்சம் நிலைப்படுத்தியிருந்தான். ஆனால் அதற்கு மாறாக விதுரா பேசப்பயிலும் மழலையென அவரிடம் வார்த்தைகளில் எண்ணி விளையாடுகிறாள்.
“ அதுலா எங்கப்பா கரெக்டா வருவாரு. நீ போடி குடுகுடுப்புக்காரி…” என்று வம்பிழுக்க, கடுப்பாகி நின்றாள் விதுரா. கடுப்பாக இருப்பதாக எண்ணி முகம் சுருக்கி உதட்டைச் சுழித்து கண்களை விரித்து அவள் பேச, தந்தையவரும் மகளை அள்ளிக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. எத்தனை வயது சென்றாலும் தாய்க்கும் தந்தைக்கும் தன் பிள்ளை குழந்தை தானே…
பப்புவே தந்தைக்கு ஒரு அறையைக் காட்டி அதனை பயன்படுத்திக்கொள்ள கூறியவன், தந்தையின் காரியதரிசியை தனது அறையில் தங்கும்படி செய்துகொண்டான்.
அடுத்து வந்த நாட்களில் பப்புவும் விதுராவும் தந்தையை நல்ல விதமாக பார்த்துக் கொண்டனர். அதற்கு ஏற்றவாறு தங்களின் பணிமனை நேரங்களை மாற்றி அமைத்துக் கொண்டனர்.
****
“ வாட்ஸ் திஸ் வளவன்… வர வர லீவ் டேஸ் அதிகமா இருக்கு… அடிக்கடி டே ஆஃப் எடுக்குறீங்க… என்ன நினைச்சுட்டு இருக்கீங்க…
கேள்வி கேட்டவருக்கு எதிரில் நின்றிருந்த வளவன் எனும் நம் பப்பு எதுவும் பேசினானில்லை.
“யோவ் உன்னத்தான்யா மலமாடு போல நிக்குற… மரியாதை தேய தேய கத்துறேனே… எதனா பதில் சொல்றியா… சூடு சுரணை இருக்காயா உனக்கு…ஹ்ம்ம்” கத்திவிட்டு பெருமூச்சு விட்டவன் பின் பொறுமையாக, “ சரி போ… இரண்டு மணிக்கு ஷிஃப்ட் முடிஞ்சு என்ன மீட் பண்ணு “ என்றான்.
“சாரி கோபால்… இன்னைக்கு இரண்டு மணிநேரம் பெர்மிஷன் போட்ருக்கேன்… பன்னிரண்டு மணிக்கே கிளம்பிடுவேன் கோ…பாஆஆஆஆல்” என்று ராகம் இழுத்த வளவன் ஓடியே விட்டான்.
கோபால்… இல்லை அவனது தாய் தந்தையர் வைத்த பெயர் அன்பு. வேலைக்குச் சேர்ந்த காலத்தில் அதிகம் வேலைக்கு டிமிக்கி கொடுத்து அடுத்தவர் தலையில் வேலையைக் கட்டி விட்டு ‘உங்களுக்கா இந்த நிலைமை கோபால்’ என்று நடிகர் விவேக்கின் குரலில் கூறி கிண்டல் செய்து ஓடி விடுவான்.
ஆனால் இப்பொழுது அவன் வேலை செய்யும் இடத்தில் அவனையும் வளவனையும் தவிர மற்றோர் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. திருமணமான தம்பதிகள் தங்களின் இணையோடு சஞ்சரிக்க விடுப்பு எடுக்கும் காலத்தில் அன்பிற்கு வேலை குவியும். மற்றோரை கோபால் கோபால் என கிண்டல் செய்த காலம் போய் அவனை யாவரும் கோபால் கோபால் என்றழைக்கின்றனர். கிண்டலாகத் தொடங்கியது இன்று அன்பு என்ற பெயரை விட கோபால் என்றால் தான் பலரும் அறிவர் என்ற நிலைக்கு வந்துவிட்டான்.
இதோ நம் பப்பு எடுக்கும் இரு மணிநேர விடுப்பிற்கு கூட வேலைகள் கோபாலிடத்திலேயே ஒப்புவிக்கப்பட உள்ளது.
பன்னிரண்டு மணியளவில் தன்னுடைய மொத்த வேலையையும் முடித்து கோபாலிடம் கொடுக்க, “ ஒரு அஞ்சு நிமிஷம் பொறுடா… நான் வர முன்னாடி பறந்துடாத” என்றவன், பப்பு கொடுத்த கோப்புகளை உரிய இடத்தில் வைத்து விட்டு வந்தான். சில நாட்களாக பப்புவிடம் காணப்படும் மாற்றம் அவனிடம் பேசியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணியிருந்தது.
திரும்பி வந்து பார்க்க, பப்பு இடைப்பட்ட வேளையில் கிளம்பியிருந்தான்.
“இன்றைக்கும் ஓடிட்டானா…” என்று வாய் விட்டு புலம்பியவனுக்கு ஒரு பக்கம் பப்புவைக் குறித்து வருத்தமாக இருந்தது.
பப்புவின் மனம் வேண்டுமானால் காதலுக்காகக் காத்திருக்கலாம். ஆனால் வயது காத்திருக்காதே… சில இன்பங்களோடு வலிகளையும் இணைந்தே வாழ்வை கடக்க வேண்டியுள்ளது.
வண்டலூர் செங்கல்பட்டு செல்லும் நேர்கோடு போன்றதான அந்த நெடுஞ்சாலையில் காட்டான்குளத்தூரில் இருந்து வேலை முடிந்து பப்பு அவனது இரு சக்கர வாகனத்தில் பயணத்தைத் துவக்கினான்.
ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தபின்பாக என்னவோ கண்கள் சற்று மங்கலாக இருந்தது. தலையை உலுக்கி உலுக்கி பார்க்க, எதோ வித்தியாசமாக இருந்தது. கைகள் இரண்டும் பெரும் வலியெடுக்க , வலதுகை வித்தியாசமாக இழுத்துப் பிடிக்க, அதற்குமேல் வண்டியை இயக்க முடியும் என்று தோன்றவில்லை. வண்டியை இழுத்து ஓரம்கட்ட முயலும்முன்பாக அவனுக்கு எதிரில் வந்த வாகனத்தில் வந்த வண்டி சற்றே இடித்திட நிலை தடுமாறி விழுந்தான் பப்பு.
கடகடவென்று மக்கள் கூட்டம் கூட, எதிரில் வந்த வண்டிக்காரன் சற்று நிலை தடுமாறினாலும் தன்னை சமன் செய்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினான்.
“ப்ரோ ஆர் யூ ஓகே… ப்ரோ… “ என்று அழைக்க, கூட்டத்தில் இருந்தவர்களோ என்ன நடந்தது என்றே அறியாமல் வண்டிக்காரனை திட்ட ஆரம்பித்தனர்.
பப்பு தன்னை மீட்டுக்கொள்ள முனைய, “ ப்ரோ நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா…” என்ற வண்டிக்காரனின் கேள்விக்கு, ஆம் என்பதாக தலையசைத்தாலும் கைவலி பிய்த்துத் தின்றது. கைவிரல்கள் உட்பக்கமாக சுருண்டு இழுக்க, பப்புவினால் வலியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. கண்களும் மங்கலாக இருப்பது மாறவில்லை.
பப்புவின் கைகளில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்த வண்டிக்காரன், “ப்ரோ கை என்ன பண்ணுது…” என்றவன், தடகடவென பப்புவைத் தலை முதல் கால் வரை எதேனும் வீக்கமோ எலும்பு முறிவோ உள்ளதா என்று ஆராய்ந்ததில், பப்பு மிதமான வேகத்தில் வண்டியை நிறுத்த எத்தனிக்கையில் விபத்து நிகழ்ந்ததால் சிறு சிறு சிராய்ப்புகளே அன்றி வேறு எந்த பிரச்சனையும் இல்லை.
இவ்வளவு நேரமும் அவசர சிகிச்சை வண்டி வராமலிருக்க, சுற்றியிருந்த மக்கள் கூடத்தைப் பார்த்து, “ யோவ் என்னய்ய திட்டுனது போதும், ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணுங்கயா…”
என்றிட , அதன்பின்னரே வேடிக்கை பார்த்துக் குறை கூறிய கூட்டம் ஆம்புலன்ஸிற்கு அழைத்தது.
அந்த சமயத்தில் பப்புவின் அலைபேசி தன்னிருப்பைக் காட்ட, திரையில் “விதுமா” என்று சேமிக்கப்பட்ட பெயர் காட்டியது. அழைப்பை ஏற்றவன், “ஹலோ மேம்… இந்த ஃபோன் யூஸ் பண்றவருக்கு சின்ன ஆக்ஸிடன்ட். காயம் எதும் இல்லை… ஆனால் கொஞ்சம் எலக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் போல தெரியுது. ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி இருக்குறோம். சீக்கிரம் வர்றீங்களா…” என்று நிலையைச் சுருக்கமாக உரைத்தான் வண்டிக்காரன்.
“ஐயோ சார்… எந்த இடத்துக்கு வரணும்… எதும் சீரியஸ் இல்லையே… கான்ஷியஸா இருக்காரா…” என்று விதுரா அந்தப்பக்கம் தனது தவிப்பை அடக்கிக் கொண்டு கேட்க,
“கை வலி அதிகமா இருக்குபோல… வலில துடிக்குறாரு… அவரோட மெடிக்கல் ஃபைல்ஸ் இருந்தா எடுத்துட்டு எஸ்.ஆர்.எம் ஹாஸ்பிடல் வாங்க மேம்… அதுதான் ஒன் கிலோ மீட்டர்ல இருக்கு. ஆக்ஸிடென்ட் ல சின்ன சின்ன சிராய்ப்புதான். வீக்கம் கூட கிடையாது… நீங்க பேனிக் ஆகவேண்டாம். நான் ஒரு நர்ஸ் தான். அஸெஸ் பண்ணுனவரை கால்சியம் டிவிசிட் அ தான் இருக்கும்” என்று நிலையை உணர்ந்து அலைபேசிக்கு அந்தப் பக்கம் பேசும் விதுராவை சமாதானம் செய்தான்.
“ஓகே சார். அவன் 6 மந்த்ஸ் பேக் கேல்சியம் டெஃபிசிட் இருக்குனு மெடிசின் எடுத்தான். எஸ்.ஆர்.எம் ல என் கோவொர்கர்ஸ் இருக்காங்க. நான் இர்ஃபார்ம் பண்ணுறேன். நீங்க அட்மிட் பண்ணிட்டு கிளம்புங்க சார். நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றி சார் “ என்று பயம் நீங்கி நன்றி தெரிவித்தவள், விரைவாக மருத்துவமனைக்கு பப்புவின் மருத்துவ கோப்புகளோடு கிளம்பினாள்.
இந்தப் பக்கமோ அவசர மருத்துவ ஊர்தி வந்திட, அதில் பப்புவை ஏற்றிய வண்டிக்காரன், தனது வாகனத்தில் அவசர ஊர்தியைப் பின்தொடர்ந்தான்.
காலம் தன் கோலத்தைக் காட்டும் எண்ணத்தில் சிலரை மருத்துவமனையில் சந்திக்க வைத்தது.
அந்த சந்திப்பு, பின்வரும் காலங்களில் எத்தகைய காரியங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை இறைவனே அறிவான்.
தொடரும்…
அடப்பாவி பப்புவை என்ன பண்ணி வெச்சுருக்க.. போற போக்கை பார்த்தா வேந்தன் விதுரா தான் ஜோடியோனு தோணுது.. அப்ப பப்புவோட நிலைமை.? அவனை கொலை பண்ண பார்க்கறீயா..