
பூகம்பம் – 25
முதலில் அவர்கள் வந்து மகளை பார்த்து விட்டு பேசட்டும் என்ற அன்னையின் கூற்றை ஏற்றுக் கொண்டவன் தமக்கையிடமும் இதை கூறியதில் மறுப்பேதும் கூறாமல் சரியென்றிருந்தாள்.
இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டாரும் வரவிருக்கின்றனர்.. தமக்கைக்கு துணையாக இருப்பதற்கு காவ்யாவையும் ஆதிராவையும் அழைத்திருந்தான் அசோக்.
இப்போது தான் அசோக்கின் பெரிய அக்கா குடும்பத்துடன் வர, “இப்பதான் வரணும்னு தோணுச்சா.? கொஞ்ச முன்னாடியே வந்த என்ன.?” என்று குறைப்பட்டு கொண்ட அன்னையிடம் “இப்பவாவது வந்தோம்னு சந்தோசப்பட்டுக்கோ” என்றாள் பட்டென்று.
இவர்கள் வந்ததை அறிந்து “வாங்க மாமா.. வா அக்கா..” என்று அசோக்கும் வரவேற்க, ஏன்டா என் நாத்தனாருக்கு ஒரு வார்த்தை சொல்லுனு சொன்னப்ப இப்பவே எதுக்கு கேட்டே.? ஆனா யாரு யாரையோ கூட்டிட்டு வந்து வெச்சிருக்க.?” என்று ரூபனை ஜாடையால் சுட்டிக் காட்டி வினவினாள்.
இக்கேள்வியால் சங்கடத்தில் நெளிந்தான் ரூபன். இச்சூழ்நிலை வந்து விட கூடாது என்பதற்காக தான் அவன் வேறிடத்தில் தங்கி கொள்வதாக அன்றே கூறினான்.. ஆனால் அசோக் தான் விடாமல் வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்.
“அக்கா அவன் என் ப்ரெண்டு.. உன் நாத்தனாரு கிட்ட சொல்லவே வேணாம்னு நான் சொல்லலயே..” என்றவன் அவளின் கணவர் இருப்பதால் வேறெதுவும் பேசாமல் முறைத்து விட்டு அகன்றான் இவளிடம் பேசி பயனில்லை என்று.!!
கோவத்தில் “அம்மா அவன் எப்படி பேசிட்டு போறான் பாரு” என்று அன்னையிடம எகிற, “ப்ச் நடுவீட்டுல நின்னு கத்தாம உள்ள வாடி.. அவங்க வந்தற போறாங்க” என்று கடிந்து மகளை இழுத்து கொண்டு உள்ளே சென்றார் அவளின் அன்னை.
அவர் ரூபனை பார்த்ததற்கே இப்படி கேட்டவர் இன்னும் ஆதிராவும் காவ்யாவும் வந்திருப்பதை அறிந்தால் அவர்களை ஏதாவது கூறி விடுவார் என்று பயந்தே ரூபனையும் அழைத்து கொண்டு அவர்களுடன் அமர்ந்து விட்டான்.
இவன் நினைத்ததை போலவே தங்கையை காண வந்ததும் உடனிருந்தவர்களை கண்டு தம்பியை கடுங்கோவமாக முறைத்து “என் குடும்பத்தை கூப்பிட மட்டும் உனக்கு கசக்குதாடா.?” என்று எரிந்து விழுந்தார்.
“முதல்ல உன்னையவே கூப்பிட வேணாம்னு தான் இருந்தேன்.. போனபோகுதுனு அம்மா சொன்னதுக்கு தான் உனக்கு போன் பண்ணுனேன்..”
“ஓஓஓஓ இவ உனக்கு மட்டும் தான் அக்காவோ.? என் தங்கச்சிக்கு ஒண்ணுனா நானும் என் குடும்பமும் வந்து தான் ஆகணும்..”
“வாங்க யாரு வர வேணாம்னு சொன்னா.? வந்தா ஆதரவா இருக்கணுமே தவிர குத்திக்காட்டி பேசிட்டு இருக்க கூடாது..”
“நான் என்ன குத்திக்காட்டி பேசுனேன்..”
“நீ என்ன பேசலனு நான் கேட்கறேன்.. வந்தோமா இருந்தோமானு கிளம்புனோமானு இருக்கணும் அதிகாரம் பண்ணிட்டு இருந்தேனா நான் பொறுமையா இருக்க மாட்டேன்..” என்று கடுமையாகவே உரைத்தான்.
இத்தனைக்கும் அவனின் சின்ன அக்கா வாயை திறக்கவே இல்லை.. ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்து விட்டு வேணாம் என்று மறுத்தால் போதும் இவளை வார்த்தையால் குத்திக்கிளறி காயப்பட்ட மனதை இன்னும் காயப்படுத்தி விட்டப்பின்பு தான் அவளின் பெரிய அக்காவிற்கும் அவளின் மாமியாருக்கும் மனதே அடங்கும்.
மாமியாரும் மருமகளும் வேறு விசயத்தில் எப்படியோ.? ஆனால் இதில் மட்டும் ஒன்றாகவே இருக்க, அவனின் பெரிய அக்காவின் வாழ்விற்காக அசோக்கும் வாயை மூடியே நிற்க வேண்டிய நிலைமை.!!
ஆனால் அதன் பின்பு சிறுதமக்கை வடிக்கும் கண்ணீரை கண்டு இவனும் கலஙகி ஆறுதல் கூட உரைக்க முடியாத நிலையில் கல்லாக சமைந்து நின்றிருப்பான்.. அதனால் தான் இப்போது யாரையும் அழைக்க வேண்டாம் என்று அசோக் கூற, ஆனால் அவனின் அன்னையோ அது சரிப்பட்டு வராது என்று பெரிய மகளையும் அழைத்திருந்தார்.
மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டதற்கு அறிகுறியாக வாசலில் சலசலப்பு சத்தம் கேட்க, வெளியில் விரைந்தான் அசோக். அவனின் பின்னே ரூபனும் வந்து விட்டான். பெண்கள் மட்டும் இருக்கும் இடத்தில் தான் நிற்பது சரியில்லை என்று.!!
தம்பி அகன்றதும் “இந்த சம்பந்தமாவது கை கூடணும்னு வேண்டிட்டு வெளில வா.. உன்னால தம்பி வாழ்க்கையும் இப்படியே போய்ரும் போல..” என்று தேள் கொடுக்காய் வார்த்தையை கொட்டி விட்டு நகர்ந்தாள் பெரிய அக்கா.
இதில் சிறியவளின் இமைகள் கலங்கி போனது. “அவங்க கெடக்கறாங்க.. உங்களுக்கு பிடிச்சா மட்டும் சரினு சொல்லுங்க” என்று காவ்யா அவளை சமாதானப்படுத்தினாள்.
ஆனாலும் முகம் சுருங்கி வாடி இருக்க, “உன் அக்கா இப்படித்தானு தெரியும்ல.? அப்பறம் ஏன் வருத்தப்படறீங்க.? அசோக் அண்ணா பார்த்தா ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க..” என்று ஆதிரா கூறியதும் தம்பிக்காகவே தன் முகப்பாவனையை மாற்றி கொண்டாள் அந்த பாசமிகு தமக்கை.
பெண்ணை அழைத்து வர கூறியதும் ஆதிராவுடன் அவளும் வந்தாள்.. வெளியில் வந்ததும் ஆதிரா ஒதுங்கி நின்று கொள்ள, படபடக்கும் நிலை அனைத்தும் மாறி உணர்ச்சிகளற்ற பொம்மையாக அனைவரையும் வணங்கினாள். அவளும் எத்தனை பேரின் முன்பு தான் இப்படி அலங்கரித்து கொண்டு நிற்பது.!
ஓரமாக கையை கட்டி வேடிக்கை பார்த்திருந்த தன்னவனை ஆதிரா பார்க்க, அந்நேரம் சரியாக ரூபனும் அவளை பார்த்திட, இருவிழிகளும் ஒன்றையொன்று தழுவி கொண்டது.
புருவத்தை உயர்த்தி என்னவென்று ஆதிரா வினவிட, இதழுக்குள் அடக்கிய புன்னகையுடன் நடப்பதை சுட்டிக்காட்டிய ரூபன் ‘சம்மதமா.?’ என்று கண்ணை சுருக்கி கேட்டான்.
வெளிவர துடித்த வெக்கச்சிரிப்பை அடக்கிட கையால் முகத்தை மூடி விரல் இடுக்கில் ஆண்மகனின் பார்வை இன்னும் தன்னை மொய்கிறதா.? என்று பார்த்திட, இன்னும் அவனின் விழிகள் தன்மீது நிலைக்குத்தி நிற்பதை அறிந்ததும் உடலெங்கும் உணர்வுக்கலவைகள் தான் பரவியது.
சரியாக அந்நேரம் அசோக்கின் பெரிய தமக்கை இவளை பார்த்திட, எதுவும் நடவாதது போல் அமைதியாக நின்றாள். யாரும் அறியாதவாறு மீண்டும் தன்னவனை காண, அப்போதும் சம்மதமா.? என்றே ரூபன் கண்சிமிட்டி வினவ, கன்னம் சிவக்கும் விரிந்த புன்னகையில் தன் விருப்பத்தை பெண்ணவள் இசைந்து காட்டியதும் ஆடவனை தொத்தி கொண்டது கன்னங்குழி சிரிப்பொன்று.!!
அழகே அழகே
உன்னுடன்
உறவாடும்
நிமிடங்களும்
பேரழகே.!!
அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மாப்பிள்ளையின் கால் ஊனம் இருக்கவில்லை.. அதில் அசோக்கிற்கு சந்தோசம். இருவரையும் தனியாக பேச கூறிட, அவர்களின் பின்னே செல்ல முயன்ற பெரிய அக்காளை அடக்கி “ஆதிரா நீ போமா” என்றான் அசோக்.
ஏதோ பேச வந்த தமக்கையிடம் “அமைதியா நின்னுரு இல்ல ஏதாவது சொல்லி விட போறேன்..” என்ற தம்பியின் கூற்றில் ஏதோ முணுமுணுத்து அமைதியாகி விட்டார்.
பொண்ணையும் மாப்பிள்ளையும் பொதுவாக பேசிட, அவர்களை கண்டும் காணாததுமாக காவ்யாவுடன் நின்றிருந்தாள் ஆதிரா.. “இவங்க பேசறதை பார்த்தா நல்ல குடும்பமா தான் தெரியுது காவு.. எப்படியாவது அக்காக்கு செட்டாகிருச்சுனா ரொம்ப சந்தோசம்..” என்று கூறிய ஆதிராவின் கூற்றை காவ்யாவும் ஆமோதித்தாள்.
மாப்பிள்ளையும் பிடித்திருப்பதாக கூறிட, அப்போதே சம்மதம் கூற வந்த அன்னையை தடுத்து “தப்பா நினைச்சுக்காதீங்க அக்கா கிட்ட பேசிட்டு சொல்றோம்..” என்று அவர்கள் மனது நோகாதவாறு கூறி வழியனுப்பினான் அசோக்.
அவர்கள் சென்றதும் “ஏன்டா இப்பவே சம்மதம் சொல்ல என்ன.?” என்ற அன்னையிடம் “நீயா கல்யாணம் பண்ணி வாழ போற.? முதல்ல அக்காக்கு சம்மதமானு கேட்கணும்..” என்றான் அழுத்தமாக.
அப்போதும் விடாமல் “இவங்களே சம்மதம் சொல்லிட்டு…” என்று மறுத்து பேசிய அன்னையை கடுங்கோவமாக முறைத்து “அக்காக்கு சம்மதம் இல்லனா இந்த கல்யாணம் நடக்காது..” என்று முடிவாக உரைத்து விட்டு தமக்கையை தேடி சென்றான்.
தம்பியின் கூற்றை கேட்டு கண்கலங்கியவள் அவனின் வருகையை அறிந்து இமையை துடைத்து கொண்டு “எனக்கு சம்மதம்டா” என்று அவன் கேட்கும் முன்பே தன் விருப்பத்தை உரைத்தாள்.
“உனக்கு பிடிக்கலனா வேணாம்..”
“ஹூம் உண்மையாவே எனக்கு பிடிச்சு தான் சம்மதம் சொல்றேன்..”
“மத்தவங்க பேசறதுக்காக சொல்லலயே.?”
“அவங்க சொல்றதும் சரிதான்டா.. என்னால உன் வாழ்க்கையும் கெட்டு போறது தான் எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு..”
“ப்ச் அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா.. உனக்கு பிடிக்கலனா சொல்லிரு.. வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம்..”
“இல்லடா அவங்ககூட பேசுனதை வெச்சு பார்க்கறப்ப அவங்க உடம்புல வேணா குறை இருக்கு மனசுல எந்த குறையும் இல்லடா..”
“உண்மையா உனக்கு பிடிச்சுருக்குல.?”
“சத்தியமா பிடிச்சுருக்கு.. நீ மனசை போட்டு குழப்பிக்காத..” என்றவள் தம்பியின் தலையை வருடினாள். இதன் பிறகே அசோக்கிற்கு நிம்மதியாக இருந்தது.. மறுபடியும் மற்றவர்களின் கேலி பேச்சிற்கு தமக்கை ஆளாகி விடுவாளோ.? என்று பயந்திருந்தவன் இப்போது தான் சீராகவே மூச்சு விட்டான்.
மற்றவர்களிடமும் விசயத்தை பகிர, “நான் தான் சொன்னேன்ல.?” என்ற ரூபனை அணைத்து கொண்ட அசோக் “ரொம்ப சந்தோஷமா இருக்குடா.. கூட பிறந்தவளே சின்ன அக்கா மனசை புரிஞ்சுக்காம பேசிட்டு திரியறா.. ஆனா எனக்காக என் பேச்சுக்காக இவ்ளோ தூரம் வந்து எனக்கு ஆறுதலா நின்ன.. எனக்கு என்ன சொல்றதுனு தெரில..” என்று உணர்ச்சி பொங்க உரைத்தான்.
இதற்கு என்ன பதில் மொழி தருவது என்று புரியாமல் ரூபனோ “எல்லாம் சரியாகும்டா” என்றான் ஆறுதலாக. வேலை இருப்பதால் காவ்யாவும் ஆதிராவும் கிளம்பிட, ரூபனும் சிறிது நேரம் வெளியில் சென்று வருவதாக கூறி அகன்றான்.
அசோக்கிற்கும் காரணம் புரிந்தது மறுபடியும் அவனின் பெரிய அக்கா ஏதோ கூறி விடுவார்களோ.? என்று நினைத்து தான் அவன் நகர்ந்தது. இதுவும் நல்லதே என்று நினைத்து கொண்டான்.
திடீரென்று வந்த ரூபனின் வருகை எதற்கென்று புரியாமல் வேலுச்சாமி இருக்க, ஊரின் முக்கிய நபர்களுடன் வீரச்சாமி வந்ததை கண்டு விசயம் என்னவென்று ஊகித்து விட்டார்.
அவரின் செயல் தவறென்று மற்றவர்கள் எடுத்துரைக்க, “அந்த நிலம் என் பேருல தான் இருக்கு.. எனக்கு அப்பறம் என் மகன்களுக்கு தான் அந்த நிலம் சேரும்.. என்னோட நிலத்தை விற்க கூடாதுனு சொல்ல இங்க யாருக்கும் உரிமை இல்லை.. முதல்ல இடத்தை விட்டு கிளம்புங்க.. கூட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா பயந்துருவோமா.?” என்று எவரின் பேச்சையும் மதிக்காமல் கத்தினார் வேலுச்சாமி.
“நீ பண்றது சரியில்லை..”
“ஊர்த்தலைவர்னா உன் இஷ்டத்துக்கு பண்ணுவீயோ.?”
“ஊருக்கு ஒரு நியாயம் உன் வீட்டுக்கு ஒரு நியாயமா.?” என்று பலவித கூச்சல்கள் எழுந்ததும் அதனை அடக்கி விட்டு கம்பீரமாக எழுந்தார் வீரச்
சாமி.
அவரின் அழுத்தமான பார்வையில் வேலுச்சாமியின் தலையும் தானாக குனிந்தது.
அழகிய பூகம்பம் தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
+1
1

