Loading

அத்தியாயம்-29

 

 

“ஆர்..” என்று யஷ்வந்த் ஆரம்பிக்கும் முன்,

 

“ஆஹாங்.. இப்ப நீ முகத்தை சீரியஸா வச்சுக்கக்கூடாது வை.கே.. கூடாது. சீ உன் லைஃப நான் பிடிச்சு வச்சுருக்கேன்.. அடக்கி வாசி” என்று ரக்ஷன் கூறினான்.

 

பேசிக்கொண்டே ரக்ஷன் தன் அடியாட்களுக்கு கண் காட்ட, மூன்று தடியர்கள் வந்து அவனை சுற்றி நின்று பிடித்துக் கொண்டனர். அதில் சுருசுருவென கோபம் எழுந்தபோதும் அமைதியாய் கண்கள் சிவக்க யஷ்வந்த் அவனை நோக்க, உள்ளறை ஒன்றிலிருந்து அஞ்சனாவை இழுத்து வந்தான்.

 

கண்களில் கண்ணீருடன் முகம் சுருக்கி சோர்வாய் அவன் இழுத்த இழுப்பிற்கு இழுபட்டு வந்த மனையாளைக் கண்டவன் இதயம் ஒரு நொடி தன் துடிப்பை நிறுத்திவிட்டு தான் மீண்டும் துடித்திருக்க வேண்டும். 

 

அவன் முன்னே இழுத்துவந்தவளை ரக்ஷன் விட, பொத்தென தரையில் விழுந்தவள் தன் நெஞ்சைப் பற்றிக் கொண்டு வேக மூச்சுக்களை இழுத்து விட்டாள். தொண்டை வரண்டு போனதில் வரட்டு இருமல் வேறு வந்து அவளது சுவாசத்தை தடை செய்ய,

 

“ம்ம்..” என்று எரிச்சலாய் முணங்கியவள் “மாமா..” என ஈனஸ்வரத்தில் குரல் கொடுத்தாள்.

 

“சனா..” என்று அவனிதழ்கள் அவன் அனுமதியின்றி அவள் பெயரை உச்சரிக்க, மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் அப்படியொரு வலி. அதில் தான் பிடிபட்டிருப்போரிடமிருந்து திமிறி விலக முயற்சித்தவனால் அந்த மூவரை அத்தனை எளிதில் நகர்த்திவிட முடியவில்லை.. இது ஒன்றும் திரைப்படமும் இல்லை,மூவர் பிடித்திருந்தாலும் ஒரே உதறலில் விலக்கிவிட்டு அவளை அடைய அவன் திரைப்பட நாயகனும் இல்லை!

 

வேகப்பெருமூச்சு விட்டவள் மார்பு வலியில் வருத்தவே, தட்டுத்தடுமாறி எழ முற்பட்டவள் அங்கு வீசியெறியப்பட்டு சுவரோரம் கிடக்கும் தனது கல்லூரி பையை எடுத்தாள். வேகவேகமாக அதில் துழாவி அவள் தனது மாத்திரையை எடுக்க,

 

“ப்ச்.. இந்த பக்கம் பேசிட்டு வர்றதுக்குள்ள என்ன வேலை பார்க்குறா பாரு உன் பொண்டாட்டி?” என்றபடி இரண்டே எட்டில் அவளை அடைந்த ரக்ஷன் அவள் கரத்தை இறுகப் பற்றினான்.

 

தன் மாத்திரையை உள்ளங்கைக்குள் அழுத்திக் கொண்டவள், “வி..விடு” என்றாள். 

 

தன்னை தற்காத்துக்கொள்ள தன்னால் இயன்ற அளவு அவள் முயற்சி எடுப்பதை கண்டு மகிழ முடியாமல் யஷ்வந்த் தவிப்பாய் திமிர, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவளையும் அவனையும் சேர்த்து துடிக்க வைத்தான்.

 

தன் கன்னம் பொத்தி வலியை பொறுக்கமாட்டாது அவள் கத்த, 

 

“ஆர்‌.கே” என்று யஷ்வந்த் கர்ஜித்தான். 

 

நிச்சயம் ஒரு நொடியேனும் அவன் அந்த கர்ஜனையில் பதறியிருக்க வேண்டும். அந்த ஒரு நொடியை பயன்படுத்தி மாத்திரையை விழுங்கிய பெண், அவனை தன் பலம் கொண்டு தள்ளிவிட்டாள்.

 

அதை சுதாரிக்காமல் அவன் தடுமாறி விழ,

 

“மா..மாமா.. ப..பயமா இருக்கு போயிடலாம்” என்று திக்கித் திணறி பேசினாள்.

 

கீழே விழுந்த ஆத்திரத்துடன் எழுந்த ரக்ஷன், “என் தங்கச்சி இருக்க வேண்டிய இடத்துல இருக்கும் உன்னை பார்க்க பார்க்க ஆத்திரமா வருது. நீ என்னை தள்ளி விடுறியா?” என்று கத்த, 

 

யஷ்வந்த் புரியாத பார்வையோடு “உன் தங்கச்சியா?” என்றான்.

 

ஆவேசமாய் திரும்பிய ரக்ஷன், “ரேஷ்மா.. என் ரேஷ்மாடா.. எனக்குனு இருந்த ஒரே உயிர்..” என்று கத்த, யஷ்வந்திற்கு அவன் கூறுவது ஒன்றும் புரியவில்லை. 

 

ரேஷ்மா என்று அவனுக்கு ஒரு தங்கை இருந்தாள், சமீபமாக சில வருடங்கள் முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டாள் என்ற வரை மட்டுமே நினைவிருந்ததில் யஷ்வந்த் புரியாது விழிக்க, 

 

“உன்னை விரும்பினாடா.. உன்னை பைத்தியமா விரும்பினா.. எனக்கு உன்னை பிடிக்காது, நீ தான் எனக்கு பிஸ்னஸ்ல பெரிய எதிரினு தெரிஞ்சும் உன்னை விரும்பினா..” என்று ஆவேசமாய் கத்தினான்.

 

இப்போதும் யஷ்வந்திற்கு ஒன்றும் புரியவில்லை. ‘ரேஷ்மா என்னை லவ் பண்ணாளா?’ என்று புரியாது அவன் விழிக்க,

 

“அவ அவ்வளவு ஆசையா அன்னிக்கு காலைல கிளம்பிப் போனாடா.. என்னனு கேட்டப்போ கூட ஈவ்னிங் சொல்றேன் அண்ணானு போனா. ஆனா ஈவ்னிங் அவகிட்டிருந்து கால் தான் வந்தது” என்றவனுக்கு

 

‘அ..அண்ணா.. நான் ரொம்ப ஆசையா காதலிச்சேன் அண்ணா அவரை.. உனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சும், உன் பிஸ்னஸ் எதிரினு தெரிஞ்சும் எனக்காக நீ ஏத்துப்பனு நம்பி அவ்வளவு அவ்வளவு காதலிச்சேன் அவரை.. ஆனா என்னை பிடிக்கலைனு சொல்லிட்டாரே.. என்னை வேணாம்னு சொல்லிட்டாரே அண்ணா’ என்று தங்கையவள் கதறியது இன்னும் அவன் காதுகளில் ஒலித்தது.

 

‘யாருடா?’ என்று தவிப்பாய் ரக்ஷன் கேட்க, 

 

“யஷ்வா, அண்ணா..” என்று கதறலோடு அவள் கூறியது தான் அவளது கடைசி வாக்கியமாக இருக்கும்.. 

 

அதன் பிறகு விபத்தில் இறந்த தங்கையின் சடலம் தான் ரக்ஷனுக்குக் கிட்டயது. நிஜத்தில் அது விபத்து தான் என்றபோதும் தங்கையவள் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் ரக்ஷன் நம்பினான்.

 

“ஏ மேட்.. எனக்கு நீ சொல்றது ஒன்னும் புரியலை” என்று ஆத்திரம் பொறுக்காமல் யஷ்வந்த் கத்த, 

 

“உனக்கு தான்டா தெரியும்.. அவ உன்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ணிருக்கா.. உன்னை பார்க்க வந்துட்டு போனப்பிறகு தான் நீ வேண்டாம்னு சொன்ன வேதனைல செத்துட்டா.. அப்போதிருந்து தான் உன்மேல என்னோட எதிரியென்ற உணர்வையும் மீறி வெறியோட எதிர்த்தேன். உன்னை தொழில் ரீதியா கீழ தள்ள நான் செஞ்ச எந்த தகிடிதத்தமும் வேலைக்காகலை.. கடைசியா குடௌன எரிச்சதையும் நீ சாதாரணமா சரிகட்டிட்ட. அப்பறம் தான் உன் பொண்டாட்டிய டார்கெட் பண்ணேன். என் தங்கிச்சியவிட அழகு, அறிவு, பணம், பதவினு எதுலயுமே இவ உசத்தி இல்லையே? அதை ஆள் வச்சு இவகிட்ட பேச வச்சு இவளை பைத்தியம்னு இவளயே உணர வச்சேன்..” என்று வன்மத்துடன் ரக்ஷன் பேசினான்.

 

உண்மை தான்.. அன்று ரேஷ்மா காதலைக் கூற வந்தாள் தான்.. கூறியும் இருந்தாள்.. ஆனால் நடந்தது வேறாயிற்றே!

 

அவள் காதலை காகிதமாக அல்லவா எழுதி கொடுத்திருந்தாள். அது அவனுக்கு வரும் பல காதல் கடிதங்களில் பத்தோடு பதினொன்றாய் மறைந்தே போயிருந்தது. யஷ்வந்த் தொழில்துறையில் கொடிகட்டி பறக்கத்துவங்கிய காலமது. அப்போது ஆடை கலைத்துறையில் அவனை அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். அவனுக்கு பெண்கள் மத்தியில் ‘சார்மிங் மேன்’ என்று பெயரிடப்பட்டு ரகசிய ரசனைப் பார்வைகளும் இருந்தது. 

 

அடிக்கடி காதல் என்ற பெயரில் வரும் மொட்டை கடிதாசிகளுடன் ஒன்றாகத்தான் அதையும் நினைத்தான். தனக்கு வந்திருந்த கடிதங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவன் ரேஷ்மாவிடம் கடிதத்தைப் பிரித்து அது காதல் கடிதம் என்று தெரிந்த நொடியே, அது யாருடையது என்றுகூட பார்க்காமல் அதை மூடி வைத்திருந்தான். கல்யாணத்தின் மீதே நாட்டமில்லாதவனுக்கு அந்த கடிதமெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை.

 

கடிதம் அனுப்பிய சில நாட்கள் கழித்து அவள் அவன் நிறுவனம் வந்திருந்தாள். 

 

‘நான் யஷ்வாக்கு ஒரு ப்ரபோசல் அனுப்பிருந்தேன்..’ என்று அவள் கூற, 

 

‘யஷ்வாவா?’ என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்ட வினோத் யஷ்வந்திடம் அவள் கூறியதைப் போலவே கூறினான்.

 

சரியாக இரண்டு நாள் முன்பு தான் ரக்ஷனின் நிறுவனத்திலிருந்து ஒரு டீலிங் குறித்த மின்னஞ்சல் வந்திருந்தது. யஷ்வந்தை தனது தொழில்துறை எதிரியாக நினைத்திருந்தவன் அவனை வீழ்த்துவதற்கான யுக்தியாகத்தான் அதை பயன்படுத்தியிருந்தான்.

 

அதுகுறித்து ரேஷ்மா வினவுவதாக நினைத்தவன், “எனக்கு அது சுத்தமா பிடிக்கலை வினோத். ஜஸ்ட் ஐம் இக்னோரிங் இட். எனக்கு அந்த ப்ரோபசல்ல சுத்தமா விருப்பமில்லைனு சொல்லிடுங்க” என்று கூறிட அதே பதிலை ரேஷ்மாவிடம் கூறியிருந்தான்.

 

பல வருட காதலில் முதற்கட்ட அதிர்ச்சி விலகாமல் அவ்விடம் விட்டு சென்றவள் அழுகையும், அலைபேசியில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்ததும் என கவனம் சிதற சாலையில் எதிரே வந்துகொண்டிருந்த லாரியை கவனியாமல் விட்டாள். விளைவு வண்டி தடம் புரண்டு, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரையும் விட்டிருந்தாள்.

 

ஆனால் உண்மையில் நடந்தவை யாருமே அறிந்திராததால் ரக்ஷனின் பேச்சு யஷ்வந்திற்கு சற்றும் விளங்கவில்லை. 

 

“ஆர்.கே ஜஸ்ட் ஷட் அப் அன்ட் லீவ் மீ” என்று யஷ்வந்த் கத்த,

 

“உனக்கு புரியணும்டா.. புரியணும். எனக்குனு இருந்த ஒரே உயிரான என் தங்கச்சிய பிரிஞ்சு நான் படுற வேதனை உனக்கு புரியணும். காதலோட வலி என்னனு புரியணும்ம். அதுக்குத்தான் உன் வைஃப டார்கெட் பண்ணேன்” என்று கர்ஜித்தான்.

 

தவிப்பாய் தன் நெஞ்சை அழுத்திக் கொண்டு மண்டியிட்டு அமர்ந்தபடி மூச்சுவிட சிரமப்படுபவளை ஒரு பார்வை பார்த்த ரக்ஷன், “என் தங்கிச்சய வேணாம்னு சொல்லிட்டியே. அவளவிட இவ எந்த விஷயத்துல உனக்கு உயர்ந்து போயிருக்கா யூ ஃபூல்?” என்று கத்த, அஞ்சனா சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

“என் தங்கச்சி எவ்வளவு போல்ட் தெரியுமா? இவளை போல பயந்தாரி இல்லை. அவ அழகுல இவ கால் தூசும் பெறமாட்டா. படிப்பு, அவ இருக்கும் பொசிஷன்னு எல்லாத்துலயுமே இதோ இங்க இருக்கும் இந்த ஃபூலவிட அவ உயர்ந்தவ. ஹவ் குட் யூ ரீப்லேஸ் திஸ் மென்டலி அன்ஸ்டேபில் (மனநல கோளாறு) ஃபூல் வித் மை சிஸ்டர்?” என்று ரக்ஷன் பொறிய, 

 

“ஜஸ்ட் ஷட் அப்” என்று தரையை தன் இரு கரங்களாலும் தட்டியபடி கத்தினாள், அஞ்சனா.

 

அதில் அங்குள்ள அனைவருமே அவளை அதிர்ந்து நோக்க, மூச்சுவிட சிரமப்பட்டு நெஞ்சுக்கூட்டு ஏறி இறங்குவதை பொறுப்படுத்தாமல் ஆவேசமாய் எழுந்தவள், “ஹவ் டேர் யூ டு கம்பேர் மீ வித் அனதர் கேர்ள்?” என்று கத்த,

 

“பேபி காம் டௌன்..” என்று யஷ்வந்த் கூறினான்.

 

“எ..என்னை யாரோ ஒருத்திகூட கம்பேர் பண்ண நீங்க யா..யாரு? நான் எப்படி என்னோட வர்த் என்னனு எனக்கு மட்டும் தான் தெரியும். என்னை வேற ஒருத்தரோட ஒப்பிட்ட பேச உங்களுக்கு அருகதை இல்லை” என்று உச்சகட்ட கோபத்தில் கத்தியவள்,

 

“தைரியமான எந்த பொண்ணும் சூசைட் பண்ணிக்கமாட்டாங்க” என்று அழுத்தமாய் மொழிந்தாள்.

 

அவள் தனக்கான உரிமையையும் மதிப்பையும் நிலைநாட்ட அத்தனை ஆவேசமாய் பேசுவதில் உள்ளம் மகிழ்ந்தாலும் அவளது நிலை அவனை அச்சுறுத்தியது.

 

“சனா.. காம் டௌன்டா” என்று யஷ்வந்த் கூற, 

 

“என்னை எப்படி இவர் மென்டல்னு சொல்லலாம் மாமா? அதுக்கான ரைட்ஸ் யார் குடுத்தது? நான் எப்படிபட்டவனு எனக்கு தான் தெரியும்” என்று சிங்கமென கர்ஜித்தாள்.

 

மேலும் அவளுக்கு மூச்சு வாங்கியது. வாய்வழியே மூச்சை இழுத்து சிரமப்பட்டவள் “யூ இடியட்..” என்று தன்னை நோக்கி அடி வைத்தவன் கன்னத்தில் “நோ..” என்ற கர்ஜனையுடன் ஒரு அறை வைத்தாள்.

 

அறை வாங்கிய அவமானத்துடன் முகம் கன்றி சிவக்க கன்னம் தாங்கியபடி ரக்ஷன் அவளை சிவந்த விழிகளால் அதிர்ந்து நோக்க, தனது கோபத்தின் வீரியத்தை தானே தாங்கிக் கொள்ளவும் கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடியாமல் செய்த செயலில் உடல் நடுங்கி நின்றாள்.

 

படம் பார்ப்பதைப் போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தடியர்களின் பிடி தளர்ந்திருப்பதை உணர்ந்த யஷ்வந்த் அவர்களிடமிருந்து துரிதமாய் விலக, அதில் மிரண்டு அவனை பிடிக்க முன் வந்தவன் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

 

நடுநடுங்க நிற்பவள் கழுத்தை இறுக பற்றிய ரக்ஷன், “என்னையா அடிக்குற?” என்க, அவன் கரத்தை விலக்க முடியாமல் அவள் திமிருவதற்கும், அந்த தடியர்களை தள்ளிக் கொண்டு தப்ப யஷ்வந்த் முயல்வதற்கும், 

 

“ரக்ஷன்.. யூ ஆர் அன்டர் அரெஸ்ட்” என்ற காவலரின் குரல் கேட்பதற்கும் சரியாக இருந்தது.

 

யாவரும் அவரவர் அதிர்ச்சியில் சூழ்ந்திருக்க, ரக்ஷன் பிடியிலிருந்து இறுமியபடி விலகிய அஞ்சனா வலுவிழந்த நிலையில் பொத்தென கீழே விழுந்தாள்.

 

“சனா..” என்று யஷ்வந்த் அவளிடம் விரைய, தப்பி ஓட திசைக்கொன்றாய் ஓடிய தடியர்களை காவலர்கள் சென்று பிடித்தனர்.

 

தலைமை காவலாளி வெற்றி ரக்ஷனின் கைகளில் விலங்கிட, ஆத்திரமும் ஆவேசமும் பொங்க யஷ்வந்தையும் அஞ்சனாவையும் ஏறிட்டான். அவன் கண்களிலிருந்த பழிவெறி அப்பட்டமாய் தெரிய, மனதில் அத்தனை கோபத்தை அடக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கும் மனைவியை மடிதாங்கியவன் மனம் சற்றுமுன் ரக்ஷனிடமிருந்து அழைப்பு வந்த தருணத்தை எண்ணியது.

 

அழைப்பு துண்டிக்கப்பட்டதும் பதற்றமாய் அமர்ந்தவன் தன்னை நிலைபடுத்திக் கொள்ள, சட்டென மனதில் ஒரு யோசனை மூண்டது. வீட்டில் தற்போது யாருமில்லை.. யமுனா, யாதவன், அக்ஷரா, மதுமஹதி மற்றும் யதுநந்தன் ஊருக்கு சென்றுள்ளனர்.

 

இந்த தருணத்தை பயன்படுத்தித்தான் ரக்ஷன் காய் நகர்த்தியிருப்பது புரிந்தது. சட்டென ஒரு யோசனை தோன்ற, வீட்டிற்குள் சென்றவன் பொது தொலைப்பேசியைக் கண்டான். ‘தனது பேசியைத்தான் ரக்ஷன் ஹேக் செய்திருக்கின்றான். பொது தொலைப்பேசியை ஹேக் செய்ய இயலாது. ஆனால் ஒட்டுக் கேட்கலாம். இருந்தும் இப்படியொரு தொலைபேசி தங்கள் வீட்டில் இருப்பது பெரும்பான்மையானோருக்குத் தெரியாது மேலும் இதனை ரக்ஷன் யோசித்திருப்பான் என்று யஷ்வந்திற்கு தோன்றவில்லை. இருந்தும் மனதில் சிறு படபடப்பு எழுந்தது.

 

இதை விட்டால் வேறு வழியில்லை, அழைப்பு விடுத்துவிட்டு விரைந்து சென்றால் அஞ்சனாவை காத்துவிடலாம் என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டவன் தனது காவல் துறை நண்பனான வெற்றிக்கு அழைத்து தகவலைக் கூறிவிட்டு விரைந்து வந்திருந்தான். அவன் உள்ளுணர்வு கூறியதைப்போல் அந்த தொலேபேசியின் அழைப்புகளை ரக்ஷன் அறிந்திருக்கவில்லை.

 

அதை நினைத்த மாத்திரம் ஒரு பெருமூச்சு எழ, வெற்றியை நன்றியாய் ஒரு பார்வை பார்த்தான்.

 

அனைவரையும் கைது செய்த வெற்றி, யஷ்வந்திடம் வந்து நிற்க, “தேங்ஸ் வெற்றி” என்றான். 

 

“இட்ஸ் மை டியூட்டி யஷ்வந்த். சீக்கிரம் இவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ” என்று கூற,

 

சிறு தலையசைப்புடன் மனையாளை கரங்களில் ஏந்தியவன் அவளது கல்லூரி பையுடன் தனது வண்டியை அடைந்தான்.

 

வண்டியை இயக்கவிருந்தவன் கரம் பற்றி தடுத்தவள், “மாமா.. ப்ளீஸ்.. மூச்சுவிடணும்..” என்க, 

 

“ஹாஸ்பிடல் போகலாம் சனா..” என்றான். 

 

மறுப்பாய் தலையசைத்தவள், “வேணாம் மாமா.. எனக்கு மூச்சு விடணும்.. வண்டில மறுபடியும் அடைச்சு வைக்காதீங்க” என்றாள். 

 

கெஞ்சலாய் தெரிந்த அந்த குரலில் உண்மையில் அதிகாரமே ஓங்கி ஒலித்தது. அதில் மறுக்க தோன்றாது தலையசைத்தவன் வண்டி ஜன்னலை இறக்கிவிட்டு வாகனத்தை மிக மிக மெதுவாக செலுத்தினான்.

 

இருக்கையை இறுக பற்றிக் கொண்டு கண்களை அழுந்த முடியவள் மூச்சை நன்கு இழுத்து தன்னை சமன் செய்தாள். “சனா ரொம்ப வலிக்குதுனா ஸ்டிரெய்ன் பண்ணாதடி. ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவன் பதற்றமாய் கூற, 

 

“மாத்திரை போட்டிருக்கேன் மாமா.. அ..அரை மணி நேரம் பார்க்கலாம்” என்றவளுக்கு பேசமுடியாமல் சிரமமமாக இருக்க, அவளது வரண்ட தொண்டை அவன் கவனத்தில் பதிந்தது. சட்டென தெருவோரம் இருக்கும் இளநீர் கடையைத் தேடி நிறுத்தியவன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினான்.

 

அத்தனை உயர் ரக வாகனம் தன் தள்ளுவண்டி முன் நிற்பதில் அரண்டு போன இளநீர் கடைக்காரர், யஷ்வந்தை பயத்துடன் நோக்க, “ஒரு இளநீர்” என்றான்.

 

பரபரப்பாய் இளநீரை வெட்டி பவ்வியமாய் அவர் யஷ்வந்திடம் நீட்ட, அதை வாங்கி மறுபுறம் வந்து தன் மனையாளிடம் நீட்டினான்.

 

“ப்ச்.. வேணாம் மாமா” என்று அவள் கூற, 

 

“குடினு சொன்னேன்” என்று அதட்டி அவள் கையில் கொடுத்தான். அந்த கடைக்காரரிடம் திரும்பி அவன் விலையைக் கேட்க, 

 

“அம்பது ரூபாங்க சார்” என்று பவ்வியமாகக் கூறினார்.

 

தன்னிடம் ஐம்பது ரூபாய் சில்லறை இல்லாததால் ஐநூறு ரூபாயைக் கொடுத்து வைத்துக் கொள்ளக் கூறியவன் வண்டியின் மறுபுறம் வந்து அமர்ந்தான். அவள் இறுமி வெகு சிரமப்படுவதைக் கண்டு இளநீரை தாங்கிக் கொண்டவன் அவள் அதை குடித்து முடிக்க பொறுமை காத்தான்.

 

அவள் குடித்து முடித்ததும் மீண்டும் வண்டியை இயக்கியவன், “பீச் போகவா சனா?” என்று வினவ, “வீட்டுக்கு போங்க மாமா” என்றாள். “ஹாஸ்பிடல் போயிட்டு போவோமா?” என்று மீண்டும் அவன் துவங்க, “மாமா…” என்று பல்லைக் கடித்தாள்.

 

“ஓகே..ஓகே..” என்றவன் வரும்போது இருபது நிமிடங்களில் கடந்த நேரத்தை கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் கடத்தி வீட்டை அடைந்தான்.

 

வீட்டை அடைந்தவன் அலைபேசி சிணுங்கிட, அதை எடுத்துப் பார்த்தான். ‘ஆல்ரைட்?’ என்ற ஒற்றை வார்த்தை குறுஞ்செய்தியாய் வந்திருக்க, இதழில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது யஷ்வந்திற்கு.

 

‘யாழி?’ என்று அவன் அனுப்பியிருக்க, 

 

‘வந்துடுவா’ என்று பதிலனுப்பியது அர்ஷித் அல்லாது யாராக இருந்திட இயலும்? 

 

அலைபேசியை உள்ளே வைத்தவன் மறுபுறம் வந்து அவளைத் தாங்க, அவன் தோள் வளைவில் சாய்ந்தபடி மெல்ல நடையிட்டு உள்ளே நுழைந்தாள்.

 

“காலேஜ்ல தானே இருந்திருப்ப?” என்று யஷ்வந்த் கேள்வி எழுப்ப, 

 

“காலைலருந்து தலைவலியா இருந்ததுனு லீவ் சொல்லிட்டு வந்தேன் மாமா. அஜு கைல அடினால அவனாலுயும் கூட்டிட்டு போக முடியாது. நீங்க மீட்டிங்ல இருப்பீங்கனு கேப் சொல்லிருந்தேன். உங்களுக்கு மெசேஜ் பண்ண ஃபோன் எடுத்தேன் ஒ…ஒரு கார்.. வந்து..” என்கையில் அவள் உடல் மெலிதாய் நடுங்கியது.

 

அவளை அரவணைத்து அமர்ந்தவன், “இப்பவும் வலிக்குதா?” என்று வினவ,

 

மூச்சை நன்கு இழுத்துப் பார்த்துக் கொண்டவள், “லேசா தான் இருக்கு.. ஓகே ஆயிடும். மறுபடியும் ஹாஸ்பிடல்னு ஆரம்பிக்காதீங்க மாமா” என்று கெஞ்சலாகக் கேட்டு ஒரு இடைவெளி கொடுத்தவள் அவன் தோளில் செல்ல சாய்ந்து,

 

“ரூம்ல பூட்டிட்டாங்க மாமா.. முதல்ல ரொம்ப பயந்துட்டேன். ஆனா எனக்கு தோனிட்டே இருந்துச்சு என்னால தப்பிச்சுட முடியும்னு. அ..அந்த டாக்டர் சொல்லிருக்காங்க.. எப்பவும் நம்பிக்கைய விடாம யோசிக்கணும்னு”

 

“நான் பாசிடிவா தான் இருந்தேன்.. ஆனா கொஞ்சம் நேரத்துல முச்சுவிடவே முடியலை. ரூம் ஃபுல் க்ளோஸ்ட் ரூம். எனக்கு மூச்சுமுட்டவும் ரொம்ப ப்ரஷரா ஃபீல் ஆச்சு. அதுல ச்..செஸ்ட் பெயினிங்கா இருக்குற போல ஃபீல் அச்சு. முடிஞ்சளவு வாய்வழியாவே மூச்சை நல்லா இழுத்து இழுத்து விட்டேன். ஆனா எவ்வளவு நேரமாச்சோ தெரியலை என்னால சுத்தமா மூச்சுவிடமுடியாத போல இருந்தது மாமா. வலி தாங்க முடியாம கத்த ஆரம்பிச்சுட்டேன்” என்றாள்.

 

ஆடவன் மெல்ல அவள் தலை கோதிவிட, “ஆனா நீங்க வருவீங்கனு தெரியும்” என்று அவள் கூற,

 

“அவ்வளவு நம்பிக்கையா?” என்றான். 

 

மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், “இல்லை.. உங்க கிட்ட ஃபோன் பேசும்போது அவரு ரூமுக்குள்ள வந்தாரு” என்று அவள் கூற, 

 

பற்கள் தெரிய புன்னகைத்தவன் வலிக்காமல் அவள் கன்னம் தட்டி “கேடி” என்கவும் தானும் சிரித்துக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்தாள்.

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்