
சுழலி-19
வஞ்சனின் ஒரு துளி இரத்தம் வனக்காட்டில் சிதறிட, கொதித்தெழுந்தாள் வனதேவதை.
மரங்கள் வேரோடு பெயர்ந்து விழும் அளவிற்கு காற்று ஆங்காரமாக வீசியது.
அமைதியின் சொரூபமாய் திகழ்ந்த வனதேவதை உக்கிரகாளியாக காட்டையே உலுக்கி எடுத்தாள். மண்துகளும் சூறாவளியாய் மாறிட, கருவிழிகள் முழுதும் ஆக்கிரமித்து தோன்றினாள் வனக்காளியானவள்.
வஞ்சன் தனது இறுதி நொடிகளில் இருக்க, காளிங்கனோ அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றான்.
அவனின் அருகில் சூடான மூச்சுக்காற்று வீசிட, அதன் வெப்பம் தாளாது சுருண்டான் காளிங்கன் என்னும் கருநாகம்.
“இயற்கையே இறை என்றுக் கொண்டு, இயற்கையோடு இணைந்து இயைந்து வாழ்ந்துவரும் இந்த வனக்காட்டில் வேட்டைக்கு என்று கூட இதுவரை எந்த உயிர்களின் உதிரமும் சிந்தியது இல்லை. ஆனால், இப்போது ம்ம்ம்ம்…. ஆர்ர்ர்… மக்களின் நலன்கருதி அவர்களின் நலம் காக்க வந்த மாசற்ற மனிதனின் செங்குருதியை, தீய எண்ணம் கொண்ட நீ, தீண்டி மாபெரும் தவறிழைத்துவிட்டாய். ம்ம்ம்… காளிங்கா, இந்த வனத்தின் புனிதத்தை குழைத்துவிட்டாய். ஆஆஆஆ….”
“எந்த சாபத்திலிருந்து விமோச்சனம் பெற்று, உன் துணையோடு கூட நினைத்தாயோ, அது இனி வெறும் நினைவாகவே போகட்டும். காளிங்கா! இனி உன்னால் மனித உருவே எடுக்கவியலாது என்று சாபமளிக்கிறேன். இந்த நிமிடம் முதல், வனக்காட்டின் எல்லைக்குள் தீய எண்ணங்களோடு எவரும் நுழைய முடியாது. பின்வரும் காலத்தில் நின் காரியத்தை சாதித்திட என் எல்லைக்குள் வர நேரிடும். அந்த நொடி என் எல்லையில் கால் வைக்கும் அந்நொடி உன் தலை வெடித்து சிதறிடும் என்றும் சாபமளிக்கிறேன்.” சாபம் பெற்ற நொடி காளிங்கனால் வனக்காட்டில் இருக்க முடியவில்லை.
வனக்காளியின் சக்தியால் வனக்காட்டிலிருந்து தூக்கியெறியப்பட்டான்.
இன்னும் காற்றின் ஆங்காரம் குறையவில்லை. வஞ்சன் தன்னுடைய கடைசி நிமிடங்களில் இருந்தான்.
காளிங்கன் என்னதான் மனிதனாய் பிறந்து நாகமாய் மாறியவனானாலும் அவன் மாறிய நொடி தேவநாகவேடர் குலத்தின் சக்திகளையும் நாகத்திற்கே உரிய நஞ்சையும் பெற்றேயிருந்தான். ஆகவே, அவன் தீண்டிய கணமே கருநாகத்தின் நஞ்சு வஞ்சனின் உதிரத்தில் கலந்துவிட்டது.
உடல் நீலமாய் மாறிக்கொண்டிருந்தது.
அவனின் நிலைக்கண்ட காளியும் தன் உக்கிரத்தைக் குறைத்தாள். காளியே ஆனாலும் தாய்மை நெஞ்சம் கொண்ட அன்னைத் தெய்வமவள். வனத்தில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும் தாயாய் விளங்கும் சக்தி ரூபணி, வஞ்சனை சேயாய் தாங்கினாள்.
“கவலைக்கொள்ளாதே வஞ்சா! உன் புண்ணிய பலனால் இப்போது உன் உயிர் பிரியும் நேரம் இதுவல்ல.” என்றவள் அவனின் தலையைக் கோதிவிட, இத்தனை நேரம் ஆர்ப்பாட்டமாய் துடித்த அவனின் இதயம் அமைதியடைந்தது. அலைபாய்ந்த அவனின் கருவிழிகள் மெதுவாய் மூடின.
பிறந்து ஐந்தே நாளான ஒரு சிம்ம யாளி நஞ்சு முறிவு மூலிகையை எடுத்துக் கொண்டு வந்தது. கருவுற்றிருந்த மலைப்பாம்பு வனதேவதையின் தூதிற்காக வரவைக்கப்பட்டது.
“உன் விதி முடிய இன்னும் நேரமிருக்கிறது மகனே! கரம் பிடித்தும் சுகம் காணாது நாட்டு மக்களின் நிலையே முக்கியம் என்று இத்தனை தூரம் நீ துடித்துக் கொண்டிருக்கிறாய். கவலைக் கொள்ளாதே! உன் பணிகளை தன் பணிகளாய் மாற்றிட வருவான் உன் ஆருயிர் தோழன். அவனே உன் இறுதி நொடிக்கும் வழியாய் அமைவான். உன் மனைவி கருவுற்று இருக்கிறாள். உன் மகனே பிற்காலத்தில் உன்னை வழிநடத்தி இங்கு அழைத்து வருவான்.” என்று பேசிக்கொண்டே சிம்ம யாளி கொணர்ந்து வந்த நஞ்சு முறிவை வஞ்சனுக்கு உட்செலுத்தினான். ஆனாலும், நேரம் கடந்தமையால் முறிவு வேலை செய்யவில்லை. அதனை அறிந்த வனதேவதையோ துடித்துப் போனாள்.
“மலைவாணியே! உடனே தேவனாகவேடர் குலத்தலைவனிடம் நிகழ்ந்தவைகளை கூறி அழைத்து வா… என்றவள், அந்தோ, வேலவா! என் பூமிதனில் இதுவரை எந்த உயிரையும் நான் மடிய விட்டது இல்லையே! புண்ணியபலன்கள் இருந்தும் இவனின் உயிரை காப்பாற்ற முடியா பாவியாகி போனேனே. இன்னும் இவனின் விதி முடியவில்லை. பிறகு ஏன், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பதில் கூறுங்கள் இறைவா!” வனதேவதையின் ஆங்காரக் கதறல் காட்டையே அதிர வைத்தது.
பஞ்சபூதங்களின் வசத்தையும் தன்னுள்ளே கொண்டிருந்தாலும் தவமிருக்க இவ்வனக்காட்டிற்கு வந்த சாதாரண மனிதிதான் இந்த வனதேவதை. இயற்கையின் அருளால் இங்கேயே ஜீவசமாதி அடைந்தவள், இதுவரை எந்த உயிரையும் அவளிருப்பிடத்தில் நீங்கவிட்டதில்லை. ஆனால், தற்போது அவளின் கையறுநிலையை என்னவென்று உரைப்பாள் பாவையவள்.
அப்போதுதான் ஒரு அசீரிரி ஒலித்தது. “உயிருள்ள ஒவ்வொரு பிறப்பும், மரணம் எய்தும் நிலை வரத்தான் செய்யும். அனைத்து உயிர்களின்மீதும் அன்பை கருணையின் தாயாய் அரவணைக்கும் நீ அறியாதது ஒன்றுமில்லை. வஞ்சன் உயிர் இங்கு பிரியாது. அவனை வனக்காட்டின் எல்லையை ஒட்டிய குன்றிற்கு அருகில் அழைத்து செல். செல்வங்கள் மக்களிடம் சேர்ப்பிக்கவும், இவனின் கடைசி நிமிடத்தை சாந்தமாக்கவும் அவன் வருவான். அதுவரை இவனின் உயிர் பிரியாது. என்னிடம் நீ பெற்ற வரத்தின்படி இனி எந்த உதிரமும் வனக்காட்டில் உதிராது. தூய்மையின் மறு இடமாய் இந்த வனக்காடு விளங்கட்டும்” என்றது.
கண்ணீர்மல்க கைதொழுதவள், வனக்காட்டின் எல்லை குன்றில் படுக்க வைத்தாள் வஞ்சனை. அப்போது அவன்வசம் இருந்த சிவன்காப்பு கழன்று அங்கிருந்த ஓடைநீரோடு மறைந்தும் போனது.
….
மாரிவெண்கோ ஏவிய படைகள் பொதிய மலைக்கும் கல்வராயன் மலைக்கும் செல்ல ஆயுத்தமாகிக் கொண்டிருந்தது. அவர்களின் பயணத்தை தாமதம் செய்ய, யட்சினி மலைவாசி மற்றும் வனவாசி மக்கள்களின் பிம்பத்தை உண்டாக்கினாள். ஒரு ஐநூறு சனங்கள் ஒட்டுமொத்தமாய் அரண்மனை வாயிலை மறைத்தபடி நின்றனர்.
அவர்களை வழிமறித்த வாயிற்காவலர்கள், “யாரப்பா நீங்கள்? இந்த நேரத்தில் இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்.?”
“இன்னும் சிறிது நேரத்தில் முழுநிலவு உச்சம் அடைந்துவிடும். அதற்குள் விரைந்து வீரர்கள் பயணம் செய்ய வேண்டும் என்பது முதன்மையமைச்சரின் உத்தரவு. இப்போது இத்தனை மக்கள் வந்திருப்பதன் நோக்கம் என்னவோ?” இரு வீரர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, ஒயிலாய், நளினமாய் அந்த கூட்டத்தை விலக்கி தன் மேனி பளபளப்பில் பார்ப்பவர்களை மயக்கியவண்ணம் வந்து நின்றாள் யட்சினி.
“கும்புடுறேனுங்க ஐயா! மஞ்சரியம்மா சேதி அனுப்பியிருந்தாங்க. ஊரு எல்ல முழுக்க காவச்சாமிங்கள ஆவகானம் செஞ்சிப்புட்டோமுங்க. அத சொல்லிப்போட்டு ராவுக்கு ஆரம்பிக்குற ஆலய பூசைல கலந்துக்குலாமுன்னு மலவாசி சனங்களும் வனவாசி சனங்களும் வந்துருக்கோமுங்க ஐயா! என்னங்க ஐயா சரிதானுங்களே” என்று அவளின் கொஞ்சும் கொங்கு தமிழை வீரர்கள் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருக்க, மலைவாசி மற்றும் வனவாசி மக்களின் தலைவர்கள் இருவரும் முன்னே வந்து நின்று தலையை அசைத்தனர்.
அவளின் அழகில் மயங்கியவர்கள், ஏதும் பேசாது உள்ளே செல்ல அனுமதியளிக்க, மண்டபத்து வீரர்கள் அவர்களை அங்கே தங்க வைத்தனர். அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள் யட்சினி. இன்னும் சிறிது நேரம் அனைவரையும் சமாளிக்கலாம். முழுநிலவு உச்சம் அடையும்வேளை வேள்வியின் தாக்கம் அதிகரிக்கும். அப்போது மந்திரங்களின் எதிரொலி அவளை நிலையாக இருக்கவிடாது. அதற்குள் செந்தூரன் இங்கு வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
….
ஆலயத்தில், வேள்விக்கான ஏற்பாடுகள் துவங்கிட செவ்வேலன் அவனின் மனைவிகளோடு அங்கு வந்தான்.
மஞ்சரியை வணங்கியவன், “பணிவான வணக்கங்கள் தேவி. இவர்கள் இருவரும் என் மனைவிகள். இவள் செங்கொடி, இவள் மணிக்கொடி. செங்கொடி தற்போது கருவைத்தாங்கி இருக்கிறாள் தேவி.”
“அடடே! நல்ல சேதி செவ்வேலன் அவர்களே! மூவருமாய் வேள்வியில் அமர்ந்து வேள்வியை துவக்கி வையுங்கள்” என்றாள்.
ஒருகணம் சிலையாகிப் போனான் செவ்வேலன். “தேவி, நான் எப்படி?” அவன் தடுமாற,
“செவ்வேலன் அவர்களே! எது நடந்தாலும் நீலா என் தோழியல்லவா! அவளின் சகோதரன் எனக்கும் சகோதரன் அல்லவா? இச்சமயத்தில் என்னாலும் அரசியாராலும் எங்களின் துணைவர்கள் இல்லாமல் வேள்வியில் அமர இயலாது. என்னைப் பொறுத்தவரை நம் நாட்டின் நலனை கருத்தில்கொண்டு நம்பும் மனிதராய் என் கண்முன்னே இருக்கும் ஒரே நபர் நீங்கள் ஒருவரே. சகோதரியாய் தங்களிடம் வேண்டுகிறேன், நாட்டின் நிலைக்காகவும் நலனிற்காகவும் மூவரும் இணைந்து வேள்வியைத் துவக்கி வையுங்கள்” என்றாள் மஞ்சரிதேவி.
செவ்வேலனையும் சேர்த்து, மற்ற அனைவரின் முகத்திலும் பெரும் அதிர்ச்சி. பல சிற்றரசர்கள் இருக்கையில், ஒரு வீரனை, சேடிப்பெண்ணின் சகோதரனை எப்படி தம்பதிசமேதராய் வேள்வியில் நிறுத்தலாம்? என்ற கேள்வி எழாமல் இல்லை.
“இந்த வேள்வி மற்றும் குடமுழுக்கிற்கான பணியின் பொறுப்பை மன்னர் என்னிடம் ஒப்படைத்துள்ளார். ஆகவே, முடிவெடுக்கும் உரிமையும் என்னிடம் உள்ளது என்று எண்ணுகிறேன். செவ்வேலன் அவர்கள் சாதாரண வீரர் மட்டுமல்ல, என் மெய்க்காப்பளரும் கூட. எனவே, இந்த வேள்வியை அவரே துவக்கி வைக்க வேண்டும் என்பதில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து உண்டோ?” மங்கையவளின் கேள்விக்கு யாருக்கும் பதில் கூற துணிவு எழவில்லை.
செவ்வேலன் தன் இரு மனைவிகளோடு அமர்ந்து வேள்வியை தொடங்கினான்.
தன்னிடம் பெரிய பொறுப்பு ஒப்படைத்துள்ளதாக அவனின் மனம் புளாங்காகிதம் கொண்டது.
வேள்விகள் துவங்க, மங்கல வாத்தியங்களின் சப்தங்கள் விண்ணைப் பிளந்தது.
ஒவ்வொரு முறை ஒலிக்கும் பறைச்சத்தம் காதை கிழிக்க, எல்லைக் காவல் தெய்வங்கள் உக்கிரமெடுத்து சிலிர்த்து நின்றன.
பெரிய மீசையும், கையில் வீற்றிருக்கும் வானுயர்ந்த வீச்சருவாளும் எதிரிகளை காவு வாங்க காத்திருப்பது போல்தான் தோன்றியது.
இனி எல்லாம் அவனின் செயல் என ஈசனை நோக்கி வணங்கினாள் செந்தூரனின் மஞ்சரி தேவி.
….
பொதிய மலைச்சரிவிலிருந்து வந்துக் கொண்டிருந்தனர் செந்தூரனும் நீலாவும் உடன் சிறையிலடைப்பட்ட கேசரும். மிச்சமிருந்த வீரர்கள் என்னவானார்கள் என்பது பற்றி செந்தூரனிற்கு கவலை இல்லை. கமண்டல நீரோடு எப்படியாவது அரண்மனைக்கு சென்றிட வேண்டும் என்பது மட்டுமே அவனின் எண்ணமாக இருந்தது.
வானம் இருட்டிக்கொண்டு வந்தது. இன்னும் சற்று நேரத்தில் மழை வரவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த நீலா அதனை செந்தூரனிடம் சொன்னாள்.
“இன்னும் சற்று நேரத்தில் மாரி பெய்யும். விரைந்து அரண்மனை செல்ல வேண்டும்”
அவனும் அதை அறிந்தே இருந்தான். வானம் இருட்டும் சமயம் மனத்தின் உந்துலால் தாமாகவே தலை வானை நோக்கும். நோக்கிவிட்டான் செந்தூரன்.
காத்திருந்த ஏவல், சமயத்தை பயன்படுத்திக்கொண்டு அவனின் விழி வழியாக வலியோடு மெய்யை அடைந்தது.
செந்தூரனின் ஆன்மா ஆட்டம் கண்டது இங்கே!
கேசரின் கண்களில் வெறியே மிஞ்சியிருந்தது. “செந்தூரா! இனி நீ உன் கட்டுப்பாட்டை இழப்பாய். கமண்டல நீரை என்னிடம் கொடு” ஒரு செவி அவனின் சொல்லை ஏற்க, மறு செவியோ அதனை மறுத்தது. ஒரு கை நீரை கொடுக்க முனைய, மறுகை அவனை தடுத்தது. தன் கையே தன் கண்ணை குத்தும் என்பதற்கு ஏற்ப அவனின் புலன்கள் அடங்கியும் அடங்க மறுத்தும் போராடிக் கொண்டிருந்தது.
இதனையெல்லாம் கண்ணுற பார்த்த நீலா, பாய்ந்து சென்று செந்தூரனின் உடலை இறுக்கினாள். அவளின் இறுக்கத்தால் செந்தூரனின் ஆன்மாவும் ஏவலும் மாறி மாறி கூவலுற்று வலியல் தவித்தன. கிடைத்த சந்தர்ப்பத்தை வீணாக்க தவறவில்லை செந்தூரன்.
“நீலா! அரண்மனை செல்லும் வரை, என் உடலிலும் மனத்திலும் எந்த மாற்றமும் நிகழக் கூடாது. ஏவல் என்னை ஆக்கிரமித்திட விடாதே. உடனே கேசரை கொன்றுவிடு. விரைந்து என்னை அரண்மனைக்கு அழைத்து செல்” என்று உத்தரவிட்டான்.
செந்தூரனின் உடல் இரு சக்திகளை தாங்க முடியாமல் அவதியுற்றது. அவனின் சொல்லுக்கேற்ப, கேசரை தீண்டிக் கொன்றாள் நீலா. மனித உருவெடுத்து புரவியில் அமர்ந்தவள், வேகம் கொண்டு அரண்மனை நோக்கி விரைந்தாள் புயலாக.
……
யட்சினி ஏற்படுத்திய மாயை உண்மையென்று நம்பிய காவலர்கள், முதன்மையமைச்சரை அங்கு அழைத்துவர சென்றனர்.
நேரம் செல்லச் செல்ல, வேள்வியின் நெடியை யட்சினியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவளின் சக்திகள் குறைய ஆரம்பித்தது. கூட்டமாக இருந்த இடத்தில் இப்போது யட்சினி மட்டுமே தனித்து நின்றாள். அதே நேரம், நீலா செந்தூரனோடு கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
மாரிவெண்கோவும் செம்பியனும் வீரர்களோடு வர, அங்கு தனித்து நின்றிருந்த ஒரு பெண்ணை மட்டும் கண்டு குழம்பி நின்றனர்.
“வீரர்களே! மலைவாசி மக்களும், வனவாசி மக்களும் திரண்டு வந்துள்ளனர் என்றுதானே கூறினீர்கள்? ஆனால், தற்போது ஒரேயொரு பெண்மட்டும் தனித்து நிற்கிறாள். எம்மைக் கண்டால் வேலையற்றுத் திரிபவர்கள்போல் தெரிகிறதா?” படைகள் இன்னும் புறப்படாமல் இருப்பதைக் கண்டு இன்னும் கோபமடைந்தார் மாரிவெண்கோ.
ஆனால், செம்பியனோ யட்சினியின் அழகில் மெய்மறந்து சுற்றம் மறந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
முதன்மையமைச்சரின் கூற்றில் பதறிய தலைமைக்காவலன், “பொறுத்தருள வேண்டும் ஐயா! நாங்கள் அனைவரும் அத்தனை பேரையும் இங்குதான் காத்திருக்குமாறு சொன்னோம். ஆனால், அதற்குள் எப்படி மாயமானார்கள் என்று எனக்கு தெரியவில்லை.”
“ஆமாம், மாயமாகித்தான் போனார்கள். இந்த அழகிய பெண்ணின் எழில் அனைவரும் மாயமாகித்தான் போனார்கள்” தனியாகப் பேசினார் செம்பியன்.
செம்பியனின் தெளிவில்லாத கூற்றில் திரும்பிய அமைச்சர், “செம்பியா! செம்பியா! அங்கு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்? செம்பியா! நமக்கு தலைக்குமேல் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கிறது. உன்னைத்தான் அழைக்கிறேன், செவியில் விழவில்லையா?” வார்த்தைகளை கடித்து துப்பினார்.
“ஆயிரெத்தெட்டு வேலைகளில் ஆயிரத்தொன்பதாவது வேலையாக இந்த பெண்ணை என் மஞ்சம் சேர்க்கலாம் என்றுள்ளேன் அமைச்சரே!”
“என்ன? என்ன பிதற்றல் இது? அங்கு வேள்வி துவங்கியது. அதற்குள் வஞ்சனைத் தேடி வீரர்களை அனுப்ப வேண்டும். நீ என்ன பெண் பித்து பிடித்து திரிகிறாயா?”
மாரிவெண்கோ பேசுவது எதுவும் செம்பியனின் செவியில் விழத்தான் இல்லை. அவர்தான் எப்போதோ யட்சினியின் மாயப்பார்வையில் சுயமிழந்துவிட்டாரே.
“நீங்கள் வீரர்களை அனுப்பும் பணியில் ஈடுபடுங்கள். நான் இந்த பெண்ணிடம் சிறு விசாரணை நிகழ்த்திவிட்டு வருகிறேன்” என்றபடி யட்சினியை அழைத்துச்சென்றவரின் வாயெல்லாம் முத்துப்பற்கள் இளித்தவண்ணம் இருந்தது.
யட்சினி ஏதும் பேசாமல் அழகுப்பதுமையாக அவரோடு சென்றாள்.
தலையில் அடித்துக் கொண்ட அமைச்சர், “இவனை…. அனைவரும் அங்கு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். விரைந்து புறப்படுங்கள். கல்வராயன்மலையில் நம் மன்னர் தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவிக்கரம் நீட்ட உடனே புறப்படுங்கள். காணாததைக் கண்டதுபோல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அற்ப பதருகளே!” சுயம் மீண்ட காவலர்கள் புறப்பட தயாராகினர்.
வேள்வியின் தாக்கத்தால், யட்சினியின் மந்திரங்கள் ஏதும் முழுமையான பலனை அளிக்கவில்லை. ஆகவே, இன்னும் சற்று நேரத்தில் செந்தூரன் வந்ததும் அடுத்த திட்டத்தை மேம்படுத்தலாம் என்று எண்ணியே செம்பியனோடு சென்றாள் யட்சினி.
வீரர்கள் பயணத்தைத் துவங்க, மாரிவெண்கோ ஆலயத்திற்கு புறப்பட்டார். எப்படியாவது மஞ்சரியை தாமதப்படுத்தி, கோதையின் கருவை அழித்தாக வேண்டும் என்பதே அவரின் தற்போதைய எண்ணமாக இருந்தது.
….
செம்பியன் அறையில்.
“கண்ணே! நீ மலைவாசி பெண்ணா?”
“ம்ம்… என்னோடு வந்தவர்கள் எங்க போனாங்க ஐயா. அவங்கள காணோமுங்களே”
“பயம் கொள்ளாதே! அவர்களைத் தேடி அழைத்து வர வீரர்களை பணித்திருக்கிறேன். அருகே வா, இப்படி வந்து அமர்ந்துக் கொள்”
மெல்ல நடந்து வந்தவள், செம்பியனின் அருகில் அமர்ந்தாள். பொதுவாக, யட்சினியின் கண்களை கவனித்துவிட்டால், அதன்பின் குறைந்தபட்சம் ஒரு நாழிகையாவது அவளின் வசியத்தில் சிக்கித்தான் போவார்கள். இதில், செந்தூரன் மட்டுமே விதிவிலக்கு. ஆனால், செம்பியனோ தற்போது இந்த மோனநிலையில் சிக்கித்தான் போனார்.
“இதனை அருந்து பெண்ணே!”
“இல்லங்க ஐயா, வேண்டாம்”
“இது பழச்சாறுதான். வெகுதொலைவில் இருந்து வந்துள்ளாய், களைப்பாக இருக்கும். நீ பாதி அருந்து, நான் பாதி அருந்துகிறேன்” என்று கொஞ்சினார் அந்த கிழவன்.
சந்தர்ப்பத்தை நழுவவிடாதவள், தான் தயாராக வைத்திருந்த மயக்கப் பொடியை அதில் தூவி அதனை செம்பியனுக்கு கொடுத்தாள். மயங்கிவிட்டான் செம்பியன். அவனை அப்படியே படுக்கவைத்தவள், தூரத்தில் கேட்ட சத்தத்தில் காற்றாய் மாறி எல்லைக்கு விரைந்தாள்.
…
செந்தூரனும் நீலாவும் அரண்மனையின் எல்லையை வந்தடைந்தனர்.
“நீலா, நீ சென்று மஞ்சரியை அழைத்து வா.” என்றவன், “யட்சினி! செந்தூரன் அழைக்கிறேன். விரைந்து வா” என்று சப்தமிட்டான்.
அந்த சப்தத்தைக் கேட்டுத்தான் யட்சினி காற்றாய் விரைந்தாள்.
நீலா அந்தப்பக்கம் மறைந்ததும், இங்குத் தோன்றினாள் யட்சினி. தோன்றியகணம் கண்டுக்கொண்டாள். எது நடக்கக் கூடாது என்று அவள் எண்ணியிருந்தாளோ, அது நடந்துவிட்டது.
“செந்தூரா! என்னவாயிற்று?”
எல்லையில் வீற்றிருக்கும் காவல் தெய்வங்களின் சக்தியாலும் ஆலயத்தில் நடக்கும் வேள்வியாலும், செந்தூரனால் உள்ளே நுழைய முடியவில்லை. அவனின் உடலில் இருக்கும் ஏவல் அவனை நுழைய விடவில்லை.
“அனைத்தும் அறிந்த நீயே என்னவாயிற்று என்று கேட்கிறாயே யட்சினி. அனைத்தும் கைமீறி சென்றுவிட்டது. மஞ்சரி… மஞ்சரி எப்படி இருக்கிறாள்?”
“நலம்! கோதையும் கருவுற்று இருக்கிறார்கள். மஞ்சரி இரட்டைக் கருவைத் தாங்கியிருக்கிறாள்.”
அகலப் புன்னகை சிந்தினான் செந்தூரன். யட்சினியால் அவனின் அருகில் செல்ல முடியாது. அவள், கோட்டையைத் தாண்டினால் மீண்டும் உள்ளே வர இயலாது என்பதை அறிந்ததனால் எல்லைக்குள் நின்றே உரையாடிக் கொண்டிருந்தாள்.
“மகிழ்ச்சி. இந்த ஒற்றைச் சொல்லே என் அத்தனை பிறவிகளுக்கும் நான் முழுமைப்பெற்றிட போதும். இச்சமயம், நான் உன்னை விடுவிக்கிறேன். என்னுள் இருக்கும் இந்த ஏவல் எந்த நேரமும் முழுமையடையலாம். அதற்குள், நான் சொல்வதை செய்துவிடு.” என்றவன், சிறிது நேரம் கண்கள் மூடி அமர்ந்தான்.
யட்சினியின் உள்ளமோ பதைபதைத்தது. இனி நடக்கப் போகும் அனைத்தும் பெரும் போர்க்களமாய் வெடிக்கும். நடக்கும் நிகழ்வுகள் அவளின் கண்முன்னே காட்சியாய் விரிந்தது. முடிந்து மனதை திடப்படுத்திக்கொண்டாள்.
கண்ணைத் திறந்தான் செந்தூரன். “இன்னும் சற்று நேரத்தில் ஏவல் என் எண்ணவலைகளையும் மெய்யையும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிடும். அதற்குள் நான் சொல்வதை கவனத்தில் கொள். மீண்டுமொரு ஜனனம் எனக்கு கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஒருவேளை கிட்டினால் என் இறுதி மூச்சு வரை மஞ்சரிக்காக மட்டுமே. என்னை ஏவல் முழுவதுமாக ஆக்கிரமித்தவுடன் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. இந்நொடி என் உயிர் பிரிந்திடாதா என்றே நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை ஏவலின் ஆக்கிரமிப்பால் நான் என்ன செய்தாலும் அது என் பாவக்கணக்கில்தான் சேரும். அப்போது என்னை அழிக்க முடியா நிலை வந்தால் யோசியாமல் மஞ்சரியின் கைகளால் என்னை அடைத்து வையுங்கள்.
இதே முழுநிலவு நாள் அன்று, என்றாவது ஒரு நாள் நான் பிரேதாத்மாவாக மாறி வெளிவந்தால், என்னுடைய சக்திகளின் குறிப்புகளை கொண்டு என்னை அழிக்க முயற்சி செய்யுங்கள். அனைத்தும் ஓலைகளில் குறித்து செவ்வேலன் தந்தையிடம் கொடுத்திருக்கிறேன். அதனை எப்படியாவது பாதுகாத்து வையுங்கள். என் அழிவு என் மகளின் குருதியாலும் மகனின் பாதங்களாலும் நிகழ வேண்டும். நான் மஞ்சரிக்கு பூட்டிய மரகதமாலையே என் கழுத்தில் இறுதி மாலையாக விழ வேண்டும்.
வனக்காட்டிலிருந்து ஒரு கல் தொலைவில் யாராலும் அடக்க இயலாத அகோர சக்தியாக நான் வெளிப்படுவேன். இதுவே என் விதி. அப்போது என் தீய எண்ணங்கள் மட்டுமே உயர்ந்து நிற்கும். என் ஓலைப்படி கிடைக்கும் அனைத்து பொருட்களையும் பத்திரமாக பாதுகாத்து என்மேல் பிரயோகியுங்கள். நான் அழிந்தால் மட்டுமே மஞ்சரிக்கு பூரண வாழ்வு கிட்டும். எந்நாளும் அவள்மேல் நான் கொண்ட காதல் என்றும் பொய்த்து போகாது. என் ஆத்மாவை புண்ணிய பலன்களோடு பதினைந்து பொருட்களில் மறைத்து வைத்துள்ளேன். அதற்கான குறிப்பும் சுவடியில் உள்ளது. வஞ்சனின் மகன் அந்த குறிப்பை அறிந்துக் கொள்வான். தந்தையை மிஞ்சிய தனயனாக வருவான். அவனுக்கு என் மகளை மணமுடித்து வையுங்கள். வஞ்சனும் கோதையும் மீண்டுமொரு பிறப்பில் இணைந்து வாழ்வாங்கு வாழ்வார்கள். அவர்களுக்குத் துணையாக என் மகனும் மகளும் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் அரணாக செவ்வேலனின் மகனும் மகளும் விளங்குவார்கள்.
மீண்டும் இதுபோன்ற ஒரு முழுநிலவு நாளில் நவமனிதர்கள் பிறப்பார்கள். அவர்கள் இணைந்தே என்னை அழிப்பார்கள். இது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் மரண சாசனம். நான் முழுவதுமாக மரணித்த அந்த நொடி மஞ்சரி அமைதியாவாள். அதன்பின், அவளுக்கு உண்மைகள் புலப்படும். எங்களின் காதல் உண்மையானால், எங்களின் பந்தம் புனிதமானால் இத்தனை இன்னல்களுக்குப் பிறகும் மீண்டும் நாங்கள் மண்ணில் மொட்டாகி பூவாக மலர்வோம்.
இத்தனை நாட்கள் என்னோடு துணையாக இருந்த யட்சிணியே இறுதியாக எனக்கொரு உதவியும் செய்ய வேண்டும். இந்த கமண்டல நீரை எப்படியாவது கோதையிடம் சேர்த்துவிடு. நிச்சயம் அவள் கருவானது நல்வளர்ச்சி பெற்று இந்த கொங்கு நாட்டிற்கு வாரிசாய் மாறட்டும். அனைத்தும் அவன் செயல்” என்று மயங்கிய நொடி அவனின் ஆத்மா அமுக்கப்பட்டு பாதியாக நுழைந்த ஏவல் தற்போது முழுவதுமாக உள்ளே புகுந்தது.
கண்களிரண்டும் இரத்தமென சிவக்க எழுந்து அமர்ந்தான் செந்தூரன். சட்டென அவன் கொடுத்த கமண்டல நீரோடு எல்லைக்குள் நுழைந்துவிட்டாள் யட்சினி. காவல் முழுக்க வீச்சறுவாளைத் தாங்கிக் கொண்டு கருப்பசாமியும் அய்யனாரும் நிற்க செந்தூரனால் உள்ளே நுழைய முடியவில்லை. இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட யட்சினி, கமண்டல நீரை சிறிது பருகினாள். அவளுக்கான வேள்வியும் இதில் இணைந்தே நடக்கிறது என்பதை அப்போதுதான் உணர்ந்தான் செந்தூரன்.
அதனைக் கண்டு ஆத்திரமுற்றான் செந்தூரன். “யட்சினி… நீயும் என்னை ஏமாற்றுவாய் என்று நான் என் கனவிலும் எண்ணவில்லை. கமண்டல நீரை என்னிடமிருந்து பறித்து உன் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது எத்தனை பெருங்குற்றம் என அறியாது போனாய். சுயநலம் என்னும் பேய் அனைவர் மனத்திலும் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. இப்போதே உனக்கு சாபமளிக்கிறேன், நீ விமோச்சனம் பெற்று விண்ணகம் அடைந்தாலும், மீண்டுமொரு பிறப்பெடுப்பாயாக. அப்பிறப்பில் நாடோடியாய் அலைந்து திரிந்து என் காலடியில் விழுந்து எனக்கு மரணத்தைக் கொடு என்று மடியேந்தி நிற்பாய். அப்போது நான் கேட்கும் நிபந்தனையை நீ நிறைவேற்றாவிட்டால் மரணம் தேடி ஓடும் நாடோடியாய் வாழ்வாய்.
அடியே சுழலி! என் காதல் சுழலி! வாடி வெளியே! எல்லைத் தெய்வங்களை நிறுவிவிட்டால் என்னால் உள்ளே வராது என்ற மிதப்பில் திரிகிறாயோ? இங்கிருந்தே உன் உதிர வாடையை நான் அறிவேன் மஞ்சரி. நாம் ஒன்றிணைந்து இந்த உலகத்தையே ஆளலாம் வா! நீ என் மடி சேர்ந்து மஞ்சம் பகிர்ந்து மாமனவன் மடியினில் அமர்ந்து காணும் ஒற்றைப் பார்வைக்கு இந்த அகிலத்தையும் உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன் வா! கருத்தாங்கி நிற்கும் என் மங்கையே! பிறக்கும் குழந்தைகள் நமக்கு வேண்டாம். அவைகளை அழித்து விடு. நம் சல்லாபத்திற்கு அவைகள் என்றும் தடையே. இன்னொரு நாளில் திகதி குறித்து உன் அண்டத்தில் என் விந்தணுவை செலுத்துகிறேன். அப்போது பிறக்கும் நம் மகன் என்னையும் மிஞ்சி அகோர சக்திகளின் தலைவனாய் அனைவருக்கும் சொப்பனமாய் திகழ்வான். அவனை பெற்றெடுத்து வம்சம் வளர்க்கலாம் வா! மஞ்சரி! விரைந்து வா! வெளியே வா!” இவனின் இத்தனைக் கத்தலுக்கும் நாட்டின் இலைகூட அசையவில்லை. பெரும் அமைதி, பேரமைதி. அந்த நள்ளிரவை இன்னும் அச்சம் கொள்ளும் மயான அமைதி.
பொறுமையிழந்தவன், இத்தனை நாட்கள் காதலில் திளைத்து, கந்தர்வ மணம் புரிந்த தன் மனத்திற்கினியாளுக்கு, எந்த வாயால் அவளை கண்ணே மணியே அன்பே அமுதே என்று கொஞ்சினானோ அதே வாயால் அவளுக்கு சாபமளிக்க முன்வந்தான். “எத்தனை பிறவி கொண்டாலும் அவள் ஒருவளைத் தவிர வேறுயாரையும் மனதிலும் நினையேன் என்று பிரமாணம் எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னை காணக் கூட அவள் மறுக்கிறாள். காதல் என்னும் சுழலில் என்னை சிக்கவைத்து சுழலியாகிப் போனவளை எத்தனை பிறப்பு எடுத்தேனும் பழிவாங்காமல் விடமாட்டேன். அவள் எடுக்கும் அனைத்து பிறவிகளிலும் சந்தேகம் என்னும் கண்கொண்டே மற்றவர்களால் மாண்டுபோவாள். அவளின் கருவில் தாங்கி நிற்கும் உயிர்கள் பிண்டங்களாக போகட்டும். என்று என்னை நீ முழு மனதாக ஏற்கிறாயோ அன்றே உனக்கு நிம்மதியான உறக்கம் கிட்டும்” என்றவன், சட்டென மறைந்து போனான். யட்சினித் தவிப்புடன் ஆலயம் நோக்கி சென்றாள்.
….
நீலா மஞ்சரியை நோக்கி விரைய, வேள்வியில் நின்றுக் கொண்டிருந்தவளின் உதரத்தில் இருந்த இரட்டைக் கரு, கரைந்து உதிரமாய் வெளியேறியது.
“அம்மாஆஆஆஆ” என்ற அலறலோடு மயங்கினாள் மஞ்சரி.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1

