Loading

சமுத்திரா – 23:

ஒற்றை காலை பாய்மரக்கட்டையின் மேல்  வைத்தவள் மற்றொரு காலை தரையில் ஊன்றியபடி நின்று கடலை வெறித்த கடற்கொள்ளைக்காரியான ஆரலியின் சிந்தனை இங்கில்லை!

அவளின் தந்தை சமீப காலமாக அவளை திருமணம் செய்யும்படி வற்புறுத்தி கொண்டிருக்கிறார். ஆனால் அவளுக்கு அதில் சிறிதும் நாட்டமில்லை. உண்மையியில் திருமணம் என்னும் எண்ணத்தில் அவள் யாரையும் இதுவரை பார்த்ததில்லை.

“எனக்கு பிறகு நாம் உருவாக்கிய சாம்ராஜ்யத்தை உன்னால் தன்னிச்சையாக ஆட்சி செய்ய முடியாது ஆரலி. யார் எப்பொழுது நமக்கெதிராக செயல் படுவார்கள் என்று நம்மால் அறிய இயலாது. எனவே, நான் இருக்கும் பொழுதே உன்னையும் நம் ராஜ்யத்தையும் அறிவும் ஆற்றலும் உடையவனிடம் ஒப்படைத்தால், எனக்கும் சற்று நிம்மதி கிட்டும். என்ன சொல்கிறாய் மகளே? திருமணம் செய்துக் கொள்கிறாயா?” என்ற கேள்வியுடன் அவளை வலியுறுத்தி கொண்டிருக்கிறார் அவளின் தந்தை.

அமரனை பார்த்தவுடன் தான் இனம் புரியாத உணர்வு அவளுக்குள் தோன்றியது. இதுவரை யாரிடமும் எழும்பாத ரகசிய உணர்வு அவளுக்குள் பிரவாகிக்க தொடங்கியது. அமரனின் ஆளுமை; ஷிவன்யாவிற்காக கொள்ளைக்காரர்களிடமே சண்டை பிடித்தது. அவனின் தீர்க்கமான பார்வை என அமரனிடம் கன்னியின் மனம் மையல் கொள்ள தொடங்கியது.

கைகள் கட்டப்பட்டு வரிசையாக அமர்ந்திருந்தவர்களை மெல்ல நெருங்கி வந்தாள் ஆரலி.

“டேய் கள்ளிராணி நம்மகிட்ட.. இல்ல அமர்கிட்ட வர்றா..” என ப்ரதீப் கூற, நண்பர்கள் அனைவரின் பார்வையும் அவளிடம் தான் இருந்தது. ஆனால் அவர்கள் அனைவரின் பார்வையையும் அலட்சியம் செய்தவள் நேராக அமரனை பார்த்தபடி அவனின் அருகில் சென்றாள்.

“அமர். நாங்க வேணும்னா எங்க கண்ணை முடிக்கட்டுமா டா? நான்லாம் கன்னி பையன் வேற..” என்ற ப்ரதீப் நக்கல் அடிக்க,

“காத்துல செருப்பால அடிக்க முடியாதுன்றதால தப்பிச்சிட்ட டா நாயே..” என்று கடுகடுத்தவன் கடுப்புடன் தன் முன்னே வந்து நின்ற ஆரலியை ஏறிட்டான்.

அமரனின் அருகில் ஒற்றை காலை மடக்கி அமர்ந்தவள், “என்னுடன் வருகிறாயா? இந்த பரந்து விரிந்த சமுத்திர சாம்ராஜ்யத்தையே நமது ஆளுமையின் கீழ் கொண்டு வருவோம். நாம் இருவரும் சேர்ந்து இந்த உலகத்தில் உள்ள செல்வங்களை கொள்ளையிட்டு அனைத்தையும் நமது காலின் கீழ் கொண்டு வருவோம்.” என அவனின் கண்பார்த்து கேட்டவள் அவனின் கரத்தை பிடித்தாள்.

“டேய் நம்மூர் பொண்ணுங்களாம் உன்கூட நூறு வருஷம் வாழனும்னு தான உருட்டுவாங்க. இவ என்னடா வித்தியாசமா உருட்டுறா? கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்க கூப்பிட்டா  கூட பரவால்ல. திருடுறதுக்கு ஆள் சேர்க்குறா?” என்ற ப்ரதீப் தானாகவே பேசிக் கொண்டிருந்தான்.

அனைவரும் அமரனின் முகத்தை தான் பார்த்தனர். அவன் அமைதியாக ஆரலியின் பிடியில் சிக்கியிருந்த அவனின் கரத்தை விலக்கிக் கொண்டான். அதில் அவளுக்கு அவமானமும் கோபமும் அதிகரித்தது. அமரனை தீவிழி விழித்தவள் சற்று தூரம் சென்று நின்றுக் கொண்டாள்.

ப்ரதீப் மேலும் அமரனை கிண்டலடித்துக் கொண்டிருக்க, கால் வலியில் நடுங்கத் தொடங்கினாள் விலோ. அவளால் காலை மடக்கி உட்காரவே முடியவில்லை.

“நீ எதுக்கு டி. டான்ஸ் ஆடிட்டி இருக்க? ஒழுங்கா உட்காரு.” என ஷிவன்யா விலோவை அதட்ட, “கை கால் எல்லாமே ரொம்ப வலிக்குது.. என்னால கலை மடக்கி உட்கார முடியல..” என கண்ணீருடன் விலோ சொன்னாள்.

“என்னாச்சு விலோ? எதுக்கு அழுவுற?” என்ற ப்ரதீப்பின் குரல் காற்றில் மிதந்து வர அப்பொழுது தான் அவளின் அழுகை மற்ற ஆடவர்களுக்கு தெரிய வந்தது.

அவர்களிடம் விலோவின் நிலையை கூறிய ஷிவன்யா, “ஒருவேளை இவ அந்த கேமை ஏமாத்த ட்ரை பண்ணானு தான் இப்படி நடக்குதா..” என யோசனையாக கேட்டாள். ‘ஒருவேளை அப்படி இருக்குமோ?’ என அறுவரும் யோசிக்க தொடங்கினர்.

“சீக்கிரம். கப்பலின் உள்ளே என்ன இருக்கின்றது என சோதனையிடுங்கள்.” என கொள்ளைக்கார கூட்டத்தின் தலைவன் கட்டளையிட, அதன்படி உள்ளே செல்லும் கதவை திறக்க மூவர் சென்றனர்.

அவர்கள் அந்த கதவை திறக்க, உள்ளிருந்து படபடவென சிறகுகளை அடித்துக்கொண்டு வௌவால்கள் தொடர்ந்து வெளியே வந்தன.

அதில் அவர்கள் பதறியபடியே ஓடி வர, “கைசிறகி(வௌவால்) தானே வருகிறது? இதற்கெல்லாமா அச்சம் கொள்வீர்கள்?” என சிடுசிடுத்த தலைவன், “யாரேனும் அந்த கதை அடைத்து வையுங்கள்.” என்றுரைத்தார்.

அந்நேரம், ஆரலியிடம் வந்த இரு தடியன்கள் அவளின் காதில் ஏதோ சொல்ல, ஒரு நொடி குரூரமான புன்னகை அவளின் முகத்தில் தோன்றி மறைந்தது.

“ம்ம்ம். சீக்கிரம் இங்கு மேல் தளத்தில் இருக்கும் அனைத்து மது குடுவைகளையும் நம் படகிற்கு மாற்றிவிட்டு வாருங்கள்..” என சொல்லியபடி அமரனின் முன்னே மீண்டும் சென்றாள் ஆரலி.

“நீ என்னை நிராகரித்தாய் அல்லவா? நிச்சயமாக நீயே என்னை தேடி வரும் சூழல் விரைவிலே உனக்கு வரும்.” என உதட்டை சுழித்து ஆணித்தரமாக சொன்னவள் அவர்களின் படகை நோக்கி நடை போட்டாள்.

செல்லும் அவளை தான் அனைவரும் பார்த்தனர். எப்படி வந்தனரோ அப்படியே கயிற்று பாலத்தின் வழியே கொள்ளைக்காரர்கள் அனைவரும் அவர்களின் கப்பலிற்கு சென்றனர். பின் அந்த கயிரையும் அறுத்தவிட்டு அவர்களின் கப்பலை சீறியப்படி கிளப்பிக்கொண்டு சென்றனர்.

“கேமை முடிச்சிட்டு நாம ஊரை பார்த்து போக போறோம். இதுல இவளை வேற நாம தேடி போகணுமா..” என்று சொன்ன விலோ, “என்னோட உடம்பு ரொம்ப வலிக்குது. சீக்கிரமா அடுத்த ஆள் போடுங்க ப்பா.” என்றிட,

“முதல்ல கையை கட்டிவெச்சிருக்க கயிறை அறுக்கனும்..” என ஷிவன்யா சொன்னாள்.

அங்கு ஒரு ஓரத்தில், வௌவாலை பார்த்த அதிர்ச்சியில் ஒரு கொள்ளைக்காரன் விட்டு சென்ற வாள் பளபளத்து அதனின் இருப்பை உணர்த்தியது.

அதனை கையில் எடுத்த ரங்கா அமரனின் கைகட்டை அவிழ்த்தான். பின் அமரனின் உதவியால் அனைவரின் காரங்களுக்கும் விடுதலை கிடைக்க, உடனே விலோ சுருண்டு படுத்துவிட்டாள்.

“ரொம்ப முடியலையா விலோ..” என ரங்கா அவளின் அருகில் அமர, “ஆமா..” என்றவள் கண்ணை மூடிக்கொண்டாள்.

“சக்தி அடுத்து நீ தான போடணும். ஒழிச்சு வெச்ச கேம் போர்ட்டை எடு.” என்றான் அமரன்.

“சரி டா” என்ற சக்தி அவன் வைத்த இடத்தினில் தேட, அது அவனுக்கு கிடைக்கவில்லை. இருந்தால் தானே கிடைக்கும்!

“இங்க தான் வெச்சேன். இப்ப காணோம்.” என நீச்சல் குளத்தின் அருகில் இருந்த ஒரு டேபிளை காட்டினான்.

“அடிக்கடி இந்த கேம் போர்டு எங்கயாவது போய்டுது. போங்க எல்லாரும் தேடுங்க..” என ப்ரதீப் காற்றிலே அவர்களை விரட்டினான்.

“அதை தான் அந்த ஆரலி களவாடி சென்றுவிட்டாளே.. நீங்கள் அனைவரும் எதை தேட போகிறீர்கள்?” என்று கடற்கன்னியின் குரல் கேட்டது.

“வந்துட்டியா..? இவ்ளோ நேரம் எங்க போன..” என்ற ப்ரதீப் குரல் காற்றில் வர,

“அந்த கொள்ளைக்காரங்க தான் எடுத்துட்டு போனாங்களா?” என்எ உறுதிபடுத்த அமரன் கேட்டான்.

“ஆமாம். உங்களுக்கு தான் காப்பற்றிக்கொள் என்று குறிப்பு வந்ததே! உங்களது கவன குறைவால் தான் அது களவாட பட்டது.” என்ற கடற்கன்னி தண்ணீரில் மூழ்கி இருந்த பாதி உடலை சுழட்டியபடி விளையாடினாள்.

“இதை திருட தான் வராங்கன்னு சொல்லிருந்தா முன்னெச்சரிகையா இருந்திருக்கலாம்..” என்ற சக்தி நெற்றியை தேய்க்க,

“இப்ப என்னடா பண்ணுறது. அந்த கள்ளிராணி நம்ம பெட்டியை திருடிட்டு போய்ட்டாளே. இந்த அமர் ஓகே சொல்லிருந்தா நல்லார்ந்திருக்கும். அவளும் நம்ம கேம் போர்டை தூக்கிட்டு போயிருக்க மாட்டா..” – ப்ரதீப்.

“லூசு மாதிரி ஒளராத ப்ரதீப். எந்த ஒரு உணர்வுக்கும் இடம் கொடுக்க கூடாதுன்னு அந்த கடற்கன்னி சொன்னதை மறந்துட்டியா?” என்று அமரன் சொன்னதும் அவனை மெச்சும் பார்வை பார்த்தாள் கடற்கன்னி.

“இப்ப நா அவ பின்னாடியே போயிருந்தா நாம எப்படி கேமை முடிக்கிறது?” என மேலும் எரிச்சலுடன் அமரன் கத்தினான்.

“சரி டா. சரி டா. டென்ஷன் ஆகாத..” என அமரனை அமைதி படுத்திய ப்ரதீப்,

“அப்படின்னா ஏஞ்சல் சொன்னதை எல்லாத்தையும் நாம ஃபாலோ பண்ணணுமா?”

“ஆமா. டைம் வேஸ்ட் பண்ண கூடாது. எந்த ஒரு உணர்வுக்கும் இடம் கொடுக்க கூடாது. எப்படி பட்ட சூழ்நிலை வந்தாலும் இந்த கேமை முடிக்கிறதுல மட்டும் தான் நம்ம கவனம் இருக்கனும்.” என ஷிவன்யா முடிக்க,

“அப்போ பேசி டைம் வேஸ்ட் பண்ணாத ஷிவ். அந்த கேமை எப்படி எடுக்குறதுனு யோசிங்க..” என ப்ரதீப் சொல்ல,

“கொஞ்ச நேரம் வாய மூடு டா..” என்ற ரங்கா, “அவங்களை எப்படி கண்டுபிடிக்குறது அமர். அவங்க கிட்ட இருக்க நம்ம கேமை வேற எடுக்கணும்.” என யோசித்தான்.

“நம்ம கப்பல் வேற நகரவே மாட்டிங்குது..” என்ற அமரன், “நம்ம கப்பல்ல ரெஸ்க்யூ போட் (மீட்பு படகு) இருக்கா மார்ட்டின்?” என அவரிடம் வினவினான்.

எல்லா கப்பலிலும் ஆபத்து காலத்தில் பயன்படுத்த மீட்பு படகு கண்டிப்பாக இருக்கும். அமரனின் கேள்விக்கு மார்ட்டினும் மீட்பு படகு இருப்பதாக உரைத்தவர், “ஆனால், அதற்கு நாம் தான் துடுப்பு போட வேண்டும்.” என்றார்.

“ஓகே அதை பார்த்துக்கலாம். ஆனா இப்ப அவங்க எங்க போவாங்கன்னு உனக்கு தெரியுமா?” என்று கடற்கன்னியிடம் கேட்டான்.

“தெரியுமே..” என அழகாய் மிழிற்றினாள் கடற்கன்னி.

“அப்படினா எங்க கூட வா. எங்களுக்கு அவங்க இடத்தை காட்டு.” என அவளையும் உடன் அழைத்தான்.

“என்னால் உங்களுடன் வர இயலாது. என்னுடைய காரியம் முடியும்வரை எனக்கு இந்த கப்பலில் இருந்து வெளியேற அனுமதி இல்லை..” என்று சொன்ன கடற்கன்னியின் கண்ணில் ஒரு நொடி மாறியதை அனைவரும் கவனிக்க தவறினர்.

அவளிடம் வழியை கேட்டுக் கொண்டவர்கள் இறுதியாக மார்ட்டின், விக்டர், அமரன் மற்றும் ரங்கா போவதாக திட்டமிட்டனர்.

“நானும் உங்க கூட வரேன் டா. அவங்க வேற கைல கத்தி, வாள்லாம் வெச்சிருந்தாங்க. உங்கள எதாவது பண்ண போறாங்க..” என்ற சக்தியை தடுத்த ரங்கா,

“அடுத்து நீ தான் சக்தி போடணும். எப்படியாவது அந்த பெட்டியை எடுத்துட்டு வந்துடுறோம். அவங்க எங்களை ஏதாவது பண்ணா கூட எங்க கூட வர மார்ட்டின் இல்ல விக்டர் கிட்ட அந்த கேமை கொடுத்து உங்க கிட்ட கொடுக்க சொல்லிடுறோம் டா..” என்ற ரங்காவை முறைத்த சக்தி ஏதோ சொல்ல முன் வர,

“முழுசா சொல்லி முடிச்சிடுறேன் டா. நீ, ஷிவ், விலோ உங்க மூணு பேர்ல யார் ஆறு போட்டாலும் ப்ரதீப் வந்துடுவான். ப்ரதீப் மூணு போட்டா நம்ம கேமே முடிஞ்சு நாம நம்ம உலகத்துக்கு போய்டலாம். சோ, இப்போதைக்கு நமக்கு அந்த பெட்டியும், அடுத்து போட போற நீங்களும் தான் ரொம்ப முக்கியம். இந்த வாய்ப்பை விட கூடாது சக்தி” என்று ராங்க முடித்தவுடன்,

“டேய் நீங்களும் தான் டா எங்களுக்கு முக்கியம்.” என சக்தி சொல்ல, “சரி டா நல்லவனே..” என ரங்கா கிண்டலுடன் சொல்ல, அமரனையும் அவனையும் தான் அனைவரும் பார்த்தப்படி இருந்தனர்.

அந்நேரம் மின்னல் வேகத்தில் விலோவின் இடுப்பில் வலி வந்து போக, பெண்ணவள் துடித்துவிட்டாள். ஆனால், அதனை வெளிப்படுத்தாமல் முகத்தை சீராக வைத்துக்கொள்ள, அவளின் கையை பிடித்த ரங்கா, “பத்திரமா இரு விலோ, தனியா எங்கேயும் போகாத..” என கலக்கத்துடன் சொன்னான்.

ஏனோ நண்பர்கள் அனைவரின் மனமுனே கனமாக தான் இருந்தது. இதுவரை வந்த இன்னல்கள் அனைத்தையும் ஒன்றாய் ஒரே குழுவாக இருந்து கடந்து வந்தவர்கள் தற்பொழுது இரண்டாக பிரிந்து பயணப்பட வேண்டிய கட்டயத்தில் இருக்க, அதனால் பெரிதும் கலக்கம் அடைந்தனர்.

அந்த நீலவிழி கடற்கன்னியை ஷிவன்யா பார்க்க, அவளின் முழுக்கவனமும் அமரனிடம் தான் இருந்தது. ஷிவன்யாவிற்கு திக்கென்று இருந்தது. முதலில் அந்த கடற்கன்னி சக்தியையும் ரங்காவையும் தான் பார்த்தாள். புயலின் பொழுது சக்தியை அவள் தான் காப்பாற்றியது. அதே போல் ரங்காவையும் அந்த புதைகுழியில் இருந்து அவள் தான் காப்பாற்றினாள். அடுத்து டேனியலை அவள் பார்க்க, அவன் இப்பொழுது உயிருடனே இல்லை. இப்பொழுது அவளின் பார்வை அமரனை தீண்ட, “அமருக்கு எதுவும் ஆக கூடாது” என மனதோடு வேண்டிக்கொண்டாள்.

சக்தி, ஷிவன்யா, விலோ மற்றும் ரிச்சார்டுக்கு பத்திரம் சொல்லிவிட்டு அமரன், ரங்கா, மார்ட்டின் மற்றும் விக்டர் விடைபெற்றனர். அவர்களுடனே காற்றில் ப்ரதீப்பும் சென்றான்.

செல்லும் அவர்களையே சக்தியின் இருபுறமும் நின்றிருந்த ஷிவன்யா மற்றும் விலோ பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் அருகில் ரிச்சர்டும் நின்றிருந்தான். கொண்டிருந்தார்.

கண்ணைவிட்டு மறையும்வரை அவர்களை பார்த்தவர்கள் திரும்பி கடற்கன்னியை பார்க்க, அவர்களை பார்த்தபடியே மீண்டும் நீச்சல் குளத்திற்குள் குதித்து மறைந்தாள்.

“இவளுக்கு வேற வேலை இல்லை போல. உத்து உத்து பார்ப்பா. அப்புறம் இப்படி உள்ள போய் மறைஞ்சிடுவா..” என கடுப்புடன் சொன்ன விலோவிற்கு மீண்டும் முதுகில் இருந்து இடுப்புவரை வலித்தது.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்