Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 16

 

(I)

 

அவள் யாரென்று தெரிந்ததும்,தன் மனதின் தேடல் அடங்கிப் போய் விடும் என்று நினைத்திருந்த பையனுக்கு,இப்பொழுதெல்லாம் அவளைக் காண வேண்டும் என்கின்ற தவிப்பு மேலெழுவது பெரும் இம்சையாய்.

 

அன்று மழை நாளின் பின்னர்,மறுபடியும் அவள் விம்பம் அவன் விழிகளில் பொதிந்திடவில்லை என்றிருக்க,நான்கு நாட்கள் கடந்த நிலையில் அவனுக்குள் ஏதோ சிறு தவிப்பு,அவள் விம்பம் வேண்டி.

 

போதாதற்கு அடிக்கடி அவளின் நினைவுகள் வேறு,மனதுக்குள் புகுந்து அவனை பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தன.

 

அதுவும் அவளின் முகபாவங்கள்!

அதை என்னவென்று சொல்வதாம் அவனும்..?

அத்தனையும் பிசிர் தட்டாமல் அச்சொட்டாய் அவன் அகத்தில் ஓவியமாய் கீறப்பட்டு கிடக்க,அவை வேறு பாரபட்சமின்றி அவன் விழிகளுக்குள் அடைக்கலம் கேட்டிடும்.

 

சில தருணங்களில் அவன் இதயம் தாளம் தவறி வேகமெடுத்திடவும் செய்திட,கை வைத்து அடக்க முயல்வான்.ஏன் அத்தனை ஊன்றி அதைக் கவனித்துத் தொலைத்தோம் என்று லட்சமாவது முறை நொந்து கொள்வான்,பையன்.

 

இயல்பாய் மற்றவர்கள் முன் காட்டிக் கொண்டாலும்,அவன் இயல்பாகவே இல்லை;இயல்பின்றி இருப்பது அவன் இயல்புமே இல்லை.

 

குரலோசை அவனுக்குள் தோற்றுவித்த இம்சைகள் எல்லாம் இவற்றுடன் ஒப்பிடுகையில் எதுவும் இல்லையென்று தோன்றிற்று,அத்தனை தவிப்புக்களை உள்ளிறங்க வைத்து தவிர்க்க முடியாது செய்து விட்டாளே,பாவிமகள்.

 

ஆரி அவனின் ஆழத்தில்,யாழவளின் ஆர்ப்புக்கள் ஆத்மார்த்தமாகிடும் நாள் என்றோ..?

 

நெற்றியில் புரண்ட அடர் கேசத்தை ஒத்துகி தலை சரித்து கழுத்த வருடி,நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தவனோ கல்லூரிக்குச் செல்ல கிளம்ப தயாராகி வந்திட,அங்கு ஆறுதலாய் சோபாவில் அமர்ந்து இருந்தார்,வேல்முருகன்.

 

பையனின் நச்சரிப்பு தாளாமல் அந்த வேலையை விட்டவருக்கு புதிதாக மலிகைக் கடை ஒன்று திறந்திடும் எண்ணம் தான்.அன்று சீக்கிரமாக காலையில் கிளம்பிச் சென்றதும் இதற்காகத் தான்.

 

பையனுக்கு அத்தனை நிம்மதியும் மகிழ்வும்,தாயுமானவர். தன் வேலையை விட்டதை எண்ணி.அவன் தான் சேமிப்பில் இருக்கும் பணத்தை கொண்டு அதைச் செய்திடலாம் என்கின்ற யோசனயை அவருக்கு தந்ததே.தெரிந்த ஒருவர் மூலம் அனைத்தையும் தீர விசாரித்து இருந்தான்.

 

“ஆரி..”

 

“என்னப்பா..?” சாக்ஸை காலில் மாட்டிக் கொண்டிருந்தவன்,விழி நிமிர்த்தாது கேட்டான்.

 

“சாப்டு போடா..”

 

“பசிக்கலப்பா..”

 

“அப்டியே போட்டேன்னா..சாப்டு போ அப்பு..” என்றவரோ,அவன் மறுக்க மறுக்க உணவை ஊட்டி விட,விழுங்கியவனோ வண்டியில் கிளம்பி இருந்தான்,கல்லூரிக்கு.

 

போகும் வழியில் தோழனையும் ஏற்றிக் கொள்ள,இருவரும் நுழைவாயிலைக் கடக்கையில் எதிர்ப்பட்டாள்,யாழவள்.

 

புத்தகக் கட்டை நெஞ்சோடு அணைத்தவாறு,வாயிற் காவலர்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறு கட்டிடத்தின் அருகில் நின்றிருக்க,விழிகளோ அடிக்கடி சுழன்று பாதையை அலசித் தீர்த்தன.

 

விழிகளில் படபடப்பு தெரிய,அவள் வதனத்தில் பதட்டத்தின் ரேகைகளும்.அவளைக் கண்டதும் பையனின் இதயம் தாளம் தப்பிட,விழிகளோ அவனைக் கேளாமலே அவள் பக்கம் சுழன்று அவள் விம்பத்தை உரசி மீண்டிட,வண்டியின் வேகம் அவனைக் கேளாமல் கொஞ்சம் தேய்ந்தது.

 

ஒரு நொடி.ஒரே ஒரு நொடி தான் அந்த வேகத் தேய்வும்.சட்டென வண்டியை முறுக்கி உயர் வேகத்தில் கிளப்பிட,அதில் தடுமாறி பையனின் தோளைப் பற்றிக் கொண்டான்,தோழன்.

 

“எதுக்குடா திடீர்னு ஸ்பீட் பண்ண..? மெதுவாப் போக வேண்டியது தான..?” தோழன் திட்டியது எல்லாம் எங்கே,அவன் காதில் விழுந்தது.

 

இதயமும் இமைகளினோரமும் அவனின் இசைவுகளுடன் இணைந்து போக மறுக்கும் காரணம் புரியாது குழம்பிப் போனான்,பையன்.ஆராய்ந்து கண்டறிந்தாலும்,அவன் ஒத்துக் கொள்ளும் ரகமும் இல்லையே.

 

மதிய நேரம் கடந்து இருக்க,அன்று விரிவுரை நேரத்திற்கு முன்பாகவே நிறைவுற்று இருந்தது.தோழனின் நச்சரிப்பு தாளாமல் சிற்றுண்டிச் சாலைக்கு வந்திருந்தான்,பையன்.

 

“வாடா கேரம் விளயாடலாம்..வெளயாடி ரொம்ப நாள் ஆச்சுல..” தோழர்கள் அழைத்திட,மறுக்கவில்லை,பையன்.

 

சிற்றுண்டிச் சாலையை ஒட்டி உள்ளக விளையாட்டுக்களென அங்கு சிறு இடம் அமைக்கப்பட்டிருந்தன.மன அழுத்தங்களை சரிவரக் கையாளவும் ஓய்வு நேரங்களுக்கெனவும் பொதுவாக கல்லூரிகளில் இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்படுவதுண்டு.

 

இருவர் கேரம் போர்ட்டைத் தூக்கிட,மற்றையவர்களும் வந்து சேர்ந்து கொண்டனர்.பையனும் சத்யாவும் ஒரு அணியில் இருக்க,வேறிருவர் அடுத்த அணியாய் அவர்களுடன் போட்டிக்கு அமர்ந்து இருந்தனர்.

 

அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திலும்,சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்திட வாயிற்கதவொன்று உண்டு.அதிதி பையனை அவனறியாமல் காண அந்த கண்ணாடிக் கதவின் பின்னே தான் நின்று கொள்வது வழக்கம்.

 

நால்வர் மட்டுமே விளையாட நினைத்திருக்க,ஆட்களும் சேர்ந்து கொண்டதில் அவ்விடம் களை கட்டியது.அதுவும் ஆடவர் கூட்டத்துடன் பெண் மாணாக்கரும் சேர்ந்து கொண்டால் கேட்கவும் வேண்டுமா..?

 

கேரம் விளையாட அமர்ந்து இருந்த நால்லரை சுற்றியும் ஆட்கள் நின்றிருக்க,பையனுக்கு நேரெதிரே அமர்ந்து இருந்தவனின் பின்னே தான் அதிதி தரித்திருந்தாள்,வாயிலுக்கு சரி நேராக சில அடிகள் முன்பு.

 

அப்பொழுது தானே,பையன் சரிவர கண்டிட முடியும்,எந்த வித தடங்கலுமின்றி.ஸ்பாட் லைட் இருந்ததால் ஒளி பரவிட இடையூறுகள் இருந்திடவில்லை.

 

அதிதியின் பார்வை தன் மீது நிலைத்திருப்பதைக் கண்ட பையனுக்கு சுர்ரென்று எகிறியது,கோபம்.அனைவரின் முன்னிலையிலும் அவளை திட்டக் கூடாது என்பதால் வாயைக் கட்டுபட்டுத்திக் கொண்டான்.

 

பையனின் விழிகள் நிமிராததையும்,அவள் விழிகள் அவனை விட்டு நகராததையும் சுற்றியிருந்தவர்கள் கவனித்திட,அவர்களே தலையில் அடித்துக் கொண்டனர்.

 

அதிதி அவனின் பின்னால் சுற்றுவதும் அவளை அனலுடன் பையன் துரத்தி விடுவதும்,இருவருக்குமிடையில் நிகழும் மோதலும் அனைவரும் அறிந்ததே.

 

விளையாட்டை துவக்கி வைத்த பையன் தொடராய் காய்ன்களை போட,சத்யாவோ அவன் விளையாடும் வேகத்தில் புன் முறுவற் பூத்தான்.அதிதியின் விழிகள் அவனில் இருந்து அகலவில்லை.

 

“செம்மயா வெளயாட்றான் ல ஆரி..அவன் வெளயாட தொடங்குனா கண்ண எடுக்க முடியாதுல..” தோழியொருத்தி அதிதியின் காதில் கிசுகிசுத்திட,அவள் விழிகள் இன்னும் அழுத்தமாய் பையனைத் தொட்டது.

 

“ஸ்டேட் சேம்பியன்னா சும்மாவா..” காதரோம் சொன்ன போதும் விழிகள் அசையவில்லை.

 

அசையா அவள் பார்வை அலட்சியமாய் புறந்தள்ளி விட்டு,விளையாட்டில் கவனமாக இறுதிக் கட்டமும் நெருங்கியது.

 

“ஆரி குயின தட்டிட்டு நம்ம காய்ன தட்றா..கேம் ஓவர்” சத்யா பதட்டத்துடன் சொல்லிட,சாவகாசமாய் நிமிர்ந்து அமர்ந்தான்,பையன்.

 

முதலில் ரெட் காய்னை தட்டி விட,விளையாட்டு சூடு பிடித்தது.அனைவரின் பார்வையும் பையனின் விரல்கள் மீது நிலைத்திருக்க,பதட்டத்தில் நகத்தை கடித்தவாறு வேண்டுதலும் வைத்தாள்,சத்தமாகவே.

 

“டென்ஷன் ஆகாதீங்கபா..ஆரியோட குறி மிஸ் ஆகாது..” தோழனொருவன் கத்திட,அவனை பார்வையால் அடக்கியவனின் விழிகளோ,காய்னை தட்டி விட சரியாய் குறி பார்த்தது.

 

அதிதியோ,தொடர்ந்து சத்தமாக வேண்டி வைத்திட,பையனுக்கு எரிச்சல்.”அதிதி தள்ளிப் போ..வெளிச்சம் வர்ல..” எறிந்து விழ தொங்கிப் போன முகத்துடன் தள்ளிப் போனாள்,அவள்.

 

வேண்டுமென்று அவன் உரைத்தது,அனைவருக்கும் தெரியும்.யார் பதில் கேள்வி கேட்டிட..?

 

அவள் அகன்றதும் குறி வைத்து காய்னைத் தட்டும் முனைப்புடன் விரலசைத்தவனின் விழிகள்,மறுமுறை விழுந்த நிழலில் நிமிர,அவ்வளவு தான்.

 

இமைகள் நிமிர்ந்து தாழ,இதயம் துடித்து மீள,அவன் சிதறிட,அவன் கவனமும் கை கோர்த்துக் கொண்டது.

 

தட்டிய காய்னோ,குழிக்குள் விழாமல் முனையில் நின்று கொள்ள,”ஐயோஓஓஓஓஓ!” என்ற கூச்சல் அவ்விடத்தை நிறைக்கவும் தான் சுயமே மீண்டது,பையனுக்கு.

 

அவள் தான்.அவளைத் தவிர வேறு யாரால் அவனின் கவனத்தை களவாட முடியுமாம்..?

களவாடி அவனை சிதறடித்திட இயலுமாம்..?

 

நிழலில் இமை நிமிர்த்திட,அவள் விம்பம் விழி நிறைத்திட,அவனுக்குள் சிறு தள்ளாட்டம் புகுந்து அல்லாட வைத்தது,உயிரை;திண்டாட வைத்தது,உணர்வுகளை.

 

நிழலில் நிமிர,நிஜமது திணற,இயல்புகள் இடற,தவிப்பொன்று படர,அவன் குறியது தவறியது.

 

அவள் நிழலால்,அவன் நிஜமாகேவே,சிதறித் தவிக்க,ஆழமான சுவாசம்,ஒரு நொடிக்கு.

 

சிற்றுண்டிச்சாலைக்கு அவ்வழியில் வந்தவளோ,அலைபேசியில் கதைத்துக் கொண்டே அவ்விடத்தை கடந்து செல்ல,அது வரை டிஸ்கை கையில் தான் வைத்துக் கொண்டிருந்தான்,பையன்.

 

அத்தனை பேர் சுற்றி இருந்தும் ஓர விழிகள் அவளை மட்டுமே ஸ்பரிசித்தது.தலை தாழ்த்தி இருந்தாலும் அவள் நகரும் வரை அவன் பார்வை அவள் மீதே.

 

“ஆரி..” என்க,தன் தடுமாறி நின்றதை காட்டிக் கொள்ளாமல் சமாளித்திட,ஜெயித்தது அவனும் தோழனும் தான்.

 

ஆயினும்,மனமோ மட்டுப்பட மறுத்தது.அதே யோசனையில் அவன் வெளியே வர,வழி மறுத்த அதிதியைக் கண்டதும் அப்பட்டமான எரிச்சல் அவன் முகத்தில்.

 

“என்ன உனக்கு சொன்னா புரியாதா உனக்கு..இனிமே என்ன டிஸ்டர்ப் பண்ண செவுள பேத்துருவேன்..” எகிறிவில்லை,ஆயினும் குரலில் அப்படியொரு அழுத்தம்.

 

“ஆரி சும்மா வெளயாடாத..அப்டி உனக்கு என் மேல எதுவும் இல்லன்னா எதுக்கு நா குட கொடுத்து விட்டதும் பேசாம வாங்கி கிட்ட..?”

 

அன்று அவள் குடை தந்ததை அவன் வாங்கியதை வைத்து,அவள் ஏதேதோ கற்பனை செய்திருக்க,அவள் கேட்டதும் தான் பையனுக்கு அது அவள் தந்தது என்பது நினைவிலேயே வந்தது.

 

அவள் கேட்ட கேள்விக்கு மனம் சொன்ன பதிலில் அவனிதயம் ரிதம் பிறழ்ந்திட,அதை சாதுர்யமாய் மறைத்து விழிகளால் எரித்தான்,அவன்.

 

“நீ தந்ததுன்னு தெரிஞ்சு இருந்தா வாங்கியிருக்கவே மாட்டேன்..”

 

“பொய் சொல்லதா ஆரி..யாழ் உன் கிட்ட நா தந்ததுன்னு சொல்லித் தான இருக்கா..அது தெரிஞ்சு தான நீ வாங்குன..” அவள் சிணுங்க,அவனுக்கு அவ்வளவு கோபம்.

 

“இவளுக்கு யார் போய் எல்லாத்தயும் ஒளறி வக்க சொன்னாங்களோ..இம்த புடிச்சவ..”மனதுக்குள் வைதான்,அவளை.

 

“ஆமா தெரியும் தான்..அன்னிக்கி தவறி வாங்கி கிட்டேன் சாமி..உனக்கு இப்போ அதான ப்ரச்சன..? ஒடச்சி போட்டுட்டா சரி தான..வந்துட்டா டார்ச்சர் பண்ண..உன்ன பாத்தாலே தலவலி தான் வருது..இங்க பாரு உன்ன நா என்ன நடந்தாலும் லவ் பண்ண மாட்டேன்..புரியுமா மூடிட்டு கெளம்பு..” அவன் சீறிட,தொங்கிய முகத்துடன் நகர்ந்து போனாள்,அவள்.

 

பையனுக்குள்ளோ,அவளின் வார்த்தைகள் சுழன்றன.அவன் அன்று அவள் முன் தன்னிலை மறந்து மீளவும் அவளால் நினைவூட்டப்பட,இதயமோ வேகமெடுத்துத் தொலைத்தது.

 

அதுவும் அவளின் பார்வை!ஐயோ..

அது இப்போதா நினைவில் நிழலாய் வந்து அவனை மென்று விழுங்க வேண்டும் என்று எண்ணிட முன்னமே,இடக்கரம் அழுத்தமாய் நெஞ்சின் மீது பதிந்து இரு தடவை மெதுவாய் தட்டி மீண்டது.

 

“ஈஸி ஈஸி ஈஸி ஆர்யா..” தனக்குத் தானே கூறி தேற்றிக் கொள்ள முயன்றான்,வெகு சிரமத்துடன்.

 

●●●●●●●

 

“அப்பா நா இன்னிக்கி வர லேட் ஆகும்..மத்யம் சாப்டாம வெயிட் பண்ணாத..” அறிவிப்பாய் உரைத்து விட்டு நகர்கையில் காலுக்கு ஏதோ தட்டுப்பட்டது.

 

குனிந்து பார்த்தால்,கீழே கிடந்தது அவனின் தாயுமானவரின் பர்ஸ்.

 

அத்தனை எளிதில் கீழே விழ விட மாட்டாரோ,என்கின்ற சிந்தனையுடன் கையில் எடுத்திட,அதில் அழகான மென் புன்னகையொன்றுடன் பையனின் புகைப்படம்.

 

அவனை வம்படியாக அழைத்துச் சென்று புன்னகைக்கச் செய்து,படம் பிடித்தது.அதன் போதான அவரின் அலப்பறைகள் பையனின் மனதை விட்டும் காலத்துக்கும் மறைந்திடாது.

 

“வாழ்க்கைலயே பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ எடுக்க நா இவ்ளோ அலப்பற பாத்தது இல்ல..” புகைப்படக்காரர்,புன்னகையுடன் கூறிடவும் செய்தார்.

 

அந்த நினைவில் புன்னகைத்தவனின் இதழ்களில் இருந்த மென்னகை,அவனருகே இருந்த புகைப்படத்தை கண்டதும் இன்னும் விரிந்தாலும்,மனதில் சிறு வலியும்.

 

“அப்பாவுக்காகவாச்சும் நீங்க இன்னும் கொஞ்ச நாள் உசுரோட இருந்து இருக்கலாம் மாதும்மா..” மானசீகமாய் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபருடன் பேசியவன் எத்தனை பிரயத்தனங்கள் மேற் கொண்டாலும்,சில நேரங்களில் ஆற்றாமை வெளிப்படும்,அவனை மீறி.

 

அவர் மாதங்கி.வேல் முருகனின் மனைவி.அத்தனை காதல் அவர் மீது இன்றும் உண்டு வேல் முருகனுக்கு.அதனால் தானே,மறுமணம் செய்திடாமல் இத்தனை நாள் ஜீவனை தள்ளிக் கொண்டு நகர்வது.

 

“நானும் வீட்ல சொன்னாங்கன்னு அவங்கள சமாளிக்க முடியாம இன்னொரு கல்யாணம் பண்ணிக்க பொண்ணு பாக்கவெல்லாம் போனேன்..தற்செயலா அந்த பொண்ண பாக்கறப்போ எனக்கு மாது தான் மொதல்ல தெரிஞ்சா..அப்பவோ புரிஞ்சிருச்சு என்னால இன்னொரு பொண்ண ஏத்துக்க முடியாதுன்னு..”

 

“யாரப்பாத்தாலும் எனக்கு அவ சாயல் தான் தெர்யும்னாலும் பரவால..அவ சாயலாத் தான் எல்லாரும் தெரிவாங்க..அப்டி அவ சாயலாத் தெரியாத யாரும் இதுவர என் கண்ணுக்கு தெரிஞ்சது இல்ல..” நெகிழ்வுடன் அவர் சொல்கையில் பையனுக்கே ஒரு மாதிரியாகும்,கண்ணீரும் புன்னகையும் ததும்பும் தாயுமானவரின் வதனத்தை பார்த்திடுகையில்.

 

மற்றைய பெண்களில் எல்லோரிலும்,அவள் சாயலைக் காண்பதென்பது வேறு.

அவள் சாயலாக மற்றைய பெண்கள் எல்லோரையும் காண்பதென்பது வேறு.

 

மாதங்கியின் இறப்புக்கு பின்னர்,அவர் வாழ்வதற்கு இருந்த ஒற்றை ஆதாரம்,அக்காளின் மகனான பையன் தான்.அவன் இல்லையென்றாலும்,வேல் முருகன் என்று ஒருத்தர் இருந்திப்பது இந்நேரத்துக்கு சாத்தியம் இல்லை தான்.

 

பர்ஸில் இருந்த இருவரின் புகைப்படங்களையும் நெகிழ்வுடன் அவன் விழிகள் தீண்ட,அதற்குள் முன்னே வந்து நின்றார்,வேல்முருகன்.

 

“என்னடா எப்போ உன் பரஸ்ல என் ஃபோட்டோவோட சேத்து என் பொண்ணு ஃபோட்டவுயும் போடப் போற..?”அவன் நீட்டிய பர்ஸை வாங்கியவாறு அவர் கேட்டிட,அழுத்தமாய் பார்த்தவனோ,”நோ சான்ஸ் இந்த ஜென்மதுக்கு..” என்றவாறு கடந்திட,தாயுமானவரின் இதழ்கள் இரகசிய சிரிப்பில் விரிந்தன.

 

கல்லூரிக்கு பையன் வந்ததாயிற்று.

 

நூலகத்தில் அமர்ந்து புத்தகத்தில் ஆழ்ந்து,கால் நீட்டி அமர்ந்திருந்தவனின் பாதத்தை நிழல் நிறைத்திட ஏறிட்டவனின் இதயம் எம்பிக்குதித்தது.

 

●●●●●●●

 

(II)

 

அவள் சொன்ன பதிலில் அவன் விழிகளில் மெல்லிய அதிர்வலைகள் தோன்றி மறைந்திட,முறைத்தவனைக் கண்டு அசரவில்லை,அவள்.

 

“என்ன சொன்ன நீ..?”

 

“எனக்கு ஒரு தடவ அவர பாக்கனும்..அப்றம் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்த கண்டிப்பா நா என் வாழ்க்கய பாத்துப்பேன்..”

 

“அப்போ அவன மறந்துரு இன்னொருத்தன ஏத்துப்பியா..?”

 

“இன்னொருத்தன ஏத்துப்பேனா இல்லயான்னு எனக்கு தெரில..ஆனா கண்டிப்பா இன்னொருத்தியோட புருஷன நெனச்சி கிட்டு இருக்க மாட்டேன்..” அழுத்தமாகத் தான் உரைத்தாள்,அவள்.

 

அவள் பதிலில் அவனுக்கு மெச்சுதலான உணர்வொன்று எழுந்தாலும்,அதைக் காட்டிக் கொள்ளாமல் அவளை கிளப்பித் தான் விட்டான்,டாக்டர்.

 

●●●●●●●

 

இரவு வானத்தை வெறித்த டாக்டரின் மனதில் தென்றலின் வார்த்தைகளே மின்னி மறைந்து கொண்டிருந்தன.

 

அவள் கூறிய எந்தவொன்றும் அவனுக்கு தவறாகத் தோன்றவில்லை.அவள் இடத்தில் இருந்து பார்த்தால் எந்தத் தவறையும் காண முடியாது.

 

அவள் நடத்தை ஒரு புறமிருக்க,டாக்டருக்கு தன் நடத்தை மீது தான் கோபமே.ஏன் அவளுடன் மட்டும் முரணாக நடந்து கொள்கிறோம் என்று புரியவில்லை.

 

அவளுடன் கடினத்தன்மையுடன் தான் நடந்து கொள்ளும் ஒவ்வொரு தடவையும் அது நடந்தேறிய பின்னர் வருந்தினாலும்,மறுமுறையும் அப்படியே நடப்பது அவனுக்கும் ஏதோ போல்.

 

அன்று அவள் திருமணத்தை நிறுத்தக் கேட்டதற்கு ஒப்புக் கொண்டாலும்,அதன் பின்னர் அவளில் தன் முன்னால் காதலியின் நடத்தையின் சாயலைக் காணவே,கடுப்பாகி இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் வைத்திட நாள் பார்த்திடச் சொன்னதே.

 

அவன் தென்றலை மணந்திடச் சம்மதம் சொன்னதே,இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கக் கூடும் என்பதற்கிணங்கத் தான்.

 

ஆனால்,இப்போது அவனே அவளைப் புரிந்து கொள்ள மறுப்பது அவனின் மனதை நெருடியது.

 

அவன் காதலின் காயம் அவன் மனதில் எஞ்சியிருக்க,அவளுக்கோ அதன் மாயங்கள் மட்டுமே மனதை நிரப்பி இருப்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடியுமாகத் தான் இருக்கிறது.அப்படி இருந்தும்,யாரோ ஒருத்தி மீதிருக்கும் கோபத்தை அவள் மீது அவன் கொட்டுவதை தடுக்க அவனால் முடியவில்லை.

 

அது ஒன்றிருக்க,வீட்டினருக்கு தம்மிருவருக்கும் இடையில் ஏதோ முரண்பாடு ஓடிக் கொண்டிருப்பது புரிய அவர்கள் மருகுவதும் டாக்டருக்கு வருத்தத்தை தந்தது.இனி அவர்களின் முன்னே நடிக்கவாவவது வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

 

அன்பரசனின் கழுகுப் பார்வை டாக்டரையும் தென்றலையும் சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தது,சமீப நாட்களாய்.

 

நாளை அவளுடன் பேசி,அவள் கேட்டதற்கு ஒப்புதல் அளித்திட வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் உறங்கச் சென்றான்,டாக்டர்.திருமணத்தை நிறுத்திட,ஏதோ ஒரு வீம்பு தடையாய்.

 

மறுநாள்,

 

குளித்து தயாராகி வேலைக்குக் கிளம்ப வெளியே வந்த மகளை ஆராய்ச்சியாய் பார்த்தார்,பார்வதி.

 

அழுது வீங்கியிருந்த அவளின் முகம் அவருக்கு கேள்வி கேட்கத் தூண்டினாலும், கேட்டாலும் பதில் சொல்லப் போவதில்லை என்று அவர் வாய் திறந்திடவில்லை.

 

ஏதோ மறந்து வைத்து விட்டு வந்து அவள் அறைக்குள் நுழைந்து சில நிமிடங்கள் கழித்து, திரும்புகையில் வாயில் கதவின் அருகில் நின்று அலைபேசியை துழாவிக் கொண்டிருந்தான்,டாக்டர்.

 

“இன்னிக்கு என்ன சொல்லுவாரோ..”நினைக்கையிலயே தலைவலி வருவது போல் இருக்க,ஆயாசமாய் அவனைப் பார்த்திட,அவள் அரவம் உணர்ந்தாற் போல் அவளை ஏறிட்டவனோ அவளைப் பார்த்து புன்னகைத்திட நெஞ்சு வலிக்காத குறை அவளுக்கு.

 

அதிலும்,அவளைப் பார்த்து ஒற்றை கண் அடித்திட,அழுது விடுவது போலானாள்,தென்றல்.

 

பின்னே வந்த பார்வதியின் இதழ்களில் வெட்கச்சிரிப்பு.

 

காதல் தேடும்.

 

2025.04.18

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பார்வதி அம்மா நீங்க வெட்கப்பட்டு என்ன பண்ண தென்றல் தானே வெட்கப்படனும் …

    ஆர்யாவோட காதல் அவஸ்தைகளை வார்த்தைகளால் சொல்லியிருப்பது மிக அருமை … நான் ஆர்யா அம்மா பத்தி வேற கதை இருக்கும்னு நினைச்சேன்… ட்விஸ்ட் பயங்கரம் …

    இந்த ரெண்டு கதைகளும் எங்க போய் சந்திக்குமோ அப்படின்னு ஆவலா இருக்கு …