Loading

சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 16

சித்தார்த் வீட்டின் வாசலிலேயே அமர்ந்திருந்தார் ஆனந்தி. இவர்களைப் பார்க்கவும் எழுந்து முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகி, தலைமுடியை கொண்டை போட்டுச் சண்டைக்குத் தயாரானார். சும்மாவே இவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தால் கோபம் வரும், இன்னைக்கு நிலைமைக்கு ஆத்திரம் அதீதமாக இருந்தது.

அவர்கள் அருகில் வரவும் “உங்களுக்கு எல்லாம் சொரணையே இருக்காதா? என்வூட்டு வாசல் வராதீங்கனு நேத்தீக்கு தான விரட்டிவுட்டேன். மறுக்கா மறுக்கா வந்து நிக்கிறீங்க. உங்களை எல்லாம் என்வூட்டுக்கு வெத்தலை பாக்கு வச்சா அழச்சேன்?” என அதீத சத்தமாகப் பேச, அடுக்களையில் நின்ற மதுவுக்கு புரிந்து போனது வந்தது அவர்கள் வீட்டினர் என்று.

அவள் அடுக்களையிலிருந்து வெளியே வர, இளங்கோ வாசலுக்குச் சென்று, ஆனந்தியை “இப்போ வாய மூடுறியா இன்னா? பஜாரி மாதிரி கத்திகினிருக்க.. ஓவரா பேசுன போடி உங்கொப்பன் வூட்டுக்குனு விரட்டி விட்டுருவேன். அப்ப எந்தாண்ட போவனு யோசிச்சுக்கோ” எனக்கூற அதிர்ந்து நின்றுவிட்டார் ஆனந்தி. வாய் பேசாத மனுஷன், தான் என்ன சொன்னாலும் அது அவருக்குப் பிடிக்காவிட்டாலும் கூடத் தலையாட்டும் மனுஷன் இப்படி பேசினால் அதிர்ச்சியாகத் தான இருக்கும்.

“வாங்கப்பா இரண்டு பேரும். உள்ள வாங்க” என வாசலை மறைத்து நின்ற ஆனந்தியை நகர்த்திவிட்டு, இருவரையும் வீட்டிற்குள் அழைத்து வந்தார். இதற்கிடையில் எதுவும் சண்டை ஆகிடுமோ எனப் பயந்த மது சித்தார்த்தை அழைக்க அறைக்குச் சென்றிருந்தாள்.

“சித்தத்து.. சித்தத்து”

“இப்படி கூப்பிடாதனு சொல்றேன்ல”

“அத விடுங்க. வெளியே அண்ணா, அண்ணி வந்திருக்காங்க”

“அதுக்கு நான் என்ன பண்ண? போய் ஆராத்தி எடுக்கனுமா?”

“அத்தை உள்ள விடாம சண்டை பிடிக்கிறாங்க”

“நல்லது”

“என்ன இப்படி பேசுறீங்க. அவங்கள உள்ள கூப்பிடுங்க”

“உன்னை இந்த வீட்டுக்குள்ள வரும்போது என்ன சொல்லி உள்ள விட்டேனு மறந்துட்டியா?” எனக் கேட்க, அதிர்ந்து நின்றாள்.

“அந்த வீட்டுல இருந்து இனி யாரும் இங்க வரக் கூடாது. நீயும் அங்க போகக் கூடாது. நான் போய்ப் பேச வேண்டியத பேசிக்கிறேன். நான் கூப்பிடாம நீ ரூம்மவிட்டு வெளிய வரக் கூடாது” என அவளை உள்ளேயே விட்டு, கதவடைத்துவிட்டு சித்தார்த் அறையிலிருந்து வெளியே வரவும், அஸ்வந்த், அகிலா வீட்டிற்குள் வரவும் சரியாக இருந்தது.

“நில்லுங்க” எனச் சித்தார்த் கூற, இருவரும் அவனைப் பார்த்த படி ஒரு அடிகூட முன்னேறாமல் அப்படியே நின்றனர்.

“என்னை வேணாம்னு நினைச்ச உங்க யார் உறவும் எனக்குத் தேவையில்லனு சொல்லிட்டு தான வந்தேன். பின்ன எதுக்கு என் வீட்டுக்கு வரீங்க?” என மூஞ்சில் அடித்தார் போலக் கேட்டான். அவர்கள் அவமானத்தால் கூனிகுறுகி நிற்க, உள்ளிருந்த மதுவுக்கு தாரைத் தாரையாகக் கண்ணீர் ஊற்றியது.

“சித்தார்த்து இன்னா பேசுற நீயி?” என இளங்கோ கத்த,

“சரியா தான் பேசுறேன். நீங்க அவங்ககூட சேர்ந்து இதுவரை எனக்குப் பண்ணின நல்லகாரியம் எல்லாம் போதும். இனி இந்த விஷயத்துல தலையிடாதீங்கப்பா. அதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது” எனக்கூற,

அஸ்வந்த் “மாமா நான் பேசிக்கிறேன்” என்றவன் சித்தார்த்திடம் “மச்சான் நாங்க பண்ணினது தப்பு தான். ஆனா நம்ம எல்லார் நல்லதுக்காகவும் தான் அப்படி பண்ணினோம்”

“எல்லார் நல்லது.. ஓ.கே ஓ.கே உங்க எல்லாருக்கும் நல்லது. சரி. அப்புறம்” என நக்கலாகக் கூற, இப்படி பேசுபவனிடம் அடுத்து என்ன பேசுவது என்றே அஸ்வந்த்க்கு புரியவில்லை.

“பழச எல்லாம் மறந்திடு மச்சான். மதுவ கூட்டிட்டு வீட்டுக்கு வா”

“வீட்டுல தான இருக்கேன்”

“நம்ம வீட்டுக்கு வாடா”

“திருத்தம் உங்க வீடு. என்னை வேணாம்னு தள்ளிவச்ச வீடு என்னைக்கும் எனக்கு வேணாம். இனி இந்தச் சித்தார்த்தின் இ..து கூட அங்க வராது” எனத் தன் தலைமுடி பிடித்துக்காட்டினான்.

“உன்ன தள்ளி எல்லாம் வைக்கலடா.. என்னடா இப்படி எல்லாம் பேசுற?”

“மரியாதை.. மரியாதை கொடுத்தா திருப்பிக் கிடைக்கும்.. வாடா போடானு கூப்பிடுறதெல்லாம் இங்க வேண்டாம்”

“சரி இனி கூப்பிடல மச்சான். பழச விடுங்க. மதுவ கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க”

“நான் எங்கயும் வரதா இல்ல. உங்க தங்கச்சி வந்தா கூட்டிட்டு போங்க மொத்தமா. அப்புறம் அவ இங்க வரக் கூடாது”

“என்ன பேசுற மச்சான்? அப்பா, அம்மா எல்லாம் ரொம்ப வருத்தப்படுறாங்க”

“யார பத்தியும் எனக்குக் கவலை இல்லை. எல்லாம் புரிய மாதிரி சொல்லிட்டேன்ல. இனி யாரும் அங்க இருந்து இங்க வரக் கூடாது. அவ்ளோ தான் புரியுதா? திரும்பத் திரும்ப வந்தா நான் மனுஷனா இருக்க மாட்டேன். மது..” எனக் கத்தினான்.

அவன் சத்தத்தில் அடித்துப் பிடித்து வெளியே வந்தாள் மது.

“தாலிய தவிற மத்த நகை எல்லாம் கழட்டி, நேத்து கட்டிட்டு வந்த புடவையில இருந்து போன் வரைக்கும் அத்தனையையும் கொண்டுவா. போ” எனக்கூற, தயங்கி நின்றாள்.

“போக மாட்டல.. அப்போ உன் அண்ணன் கூடவே போய்டு. என் வீட்டுல இருக்காத” எனக்கூற அழுதுகொண்டே அறைக்குள் சென்றுவிட்டாள். அஸ்வந்தின் கண் முழுக்க மதுவின் தலையில் உள்ள காயத்தில் தான் இருந்தது.

மது வெளியே வந்ததிலிருந்து அவன் அதை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருந்தான். சித்தார்த் பேசிய அனைத்தும் அவன் காதில் விழுந்தாலும், கருத்தில் பதியவில்லை. அவள் அறைக்குள் செல்லவும், கோபத்துடன் சித்தார்த்தின் சட்டை காலரை ஏற்றிப் பிடித்தான் அஸ்வந்த். அகிலா அவன தடுக்க பார்க்க முடியவில்லை.

“என் தங்கச்சிய எதுக்குடா அடிச்ச. அவ தலையில இவ்ளோ அடி படுற அளவுக்கு என்னடா பண்ணின அவள? உன்னை நம்பி தானடா அவள இங்க விட்டுட்டு போனோம். என்னடா பண்ணின?” எனச் சட்டைக் காலரை பற்றியபடி கத்திக்கொண்டிருக்க, அறையிலிருந்து அறக்க, பறக்க ஓடி வந்தாள் மது.

“அண்ணா! அண்ணா.. சித்தத்து ஒன்னும் பண்ணல. நான் தான் கட்டில இடிச்சுக்கிட்டேன். விடுண்ணா” என அவன் கையைப் பிடித்து எடுத்து விட, அஸ்வந்தோ அவள் காயத்தைத் தொட வந்தான்.

அஸ்வந்தின் கை மது மீது படும்முன் அவளைப் பிடித்து இழுத்து தன்னருகில் நிற்க வைத்திருந்தான் சித்தார்த். அதில் கோபமாக அஸ்வந்த் சித்தார்த்தைப் பார்க்க,

“அவ என் பொண்டாட்டி. இனி அவ எனக்கு மட்டும் தான். உனக்கு வேணும்னா கூப்பிட்டு பாரு.. வந்தா கூட்டிட்டுப் போ” எனக்கூற தலைகவிழ்ந்து நின்றாள் மது. அவள் தான் நேற்றே தன் குடும்பத்தை விட்டுக்கொடுத்து விட்டளே அவனுக்காக.

மதுவின் கையிலிருந்த பையை வாங்கி, அஸ்வந்த் முன் வைத்தான். “எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க” என்றவன் தன் சட்டை பையிலிருந்து கொஞ்சம் பணத்தையும் சேர்த்து வைத்தான்.

“தாலிக்கான பணம். இனி உறவுனு சொல்லிட்டு இங்க யாரும் வரக் கூடாது. அப்படி வந்தா இனி இவ இங்க இருக்க மாட்டா. கூடவே கூட்டிட்டுப் போயிடுங்க. என்ன கிளம்புறியா?” என மதுவைப் பார்த்துக் கேட்க, அவளோ இருகரம் கூப்பி தன் அண்ணனிடம் “இனி யாரும் என்னைத் தேடி வராதீங்க அண்ணா. ப்ளீஸ் போயிடுங்க” எனக் கூறிவிட்டு அழுது கொண்டே சென்றுவிட்டாள்.

“உனக்குக் கோபம் எங்க மேல தான. எங்களுக்கு என்ன தண்டனை வேணுன்னாலும் கொடு. ஆனா அவள காயப்படுத்தாத. உடம்பு முடியாதவ.. தாங்க மாட்டா” எனக் கண்களில் கண்ணீருடன் கிளம்பிவிட்டனர்.

கிளம்பியவர்களை சொடக்கிட்டு அழைத்து “இது எல்லாத்தையும் எடுத்துட்டு போயிடுங்க” எனக் கீழே இருந்த மதுவின் பொருட்களை எல்லாம் கண்ணால் காட்ட, அத்தனையையும் எடுத்துக்கொண்டு வேதனையுடன் வெளியேறினர்.

என் தாயி ஒரு தாய பெத்தெடுத்தாளே..
புது வாழ்வு அவ வாழ தத்து விட்டேனே..

கருவீட்டில் பூத்துபுட்டோம்..
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்..

அவதாரம் போல நீயும் அவதரித்தாயே..
மருதாணி போல என்ன வளத்து விட்டாயே..

செவந்த இடம் பொறந்த இடம்..
உதிர்ந்த இடம் புகுந்த இடம்..

என்ன தவம் செஞ்சிபுட்டோம்.. அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்.

பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா?

வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா?

மதுவோ கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருக்க, அறைக்குள் வந்தவன் எதுவுமே நடக்காதது போல நேற்று வாங்கிய நகைகளை அவளிடம் கொடுத்தான்.

“இத போட்டுக்கோ”

“ஒன்னும் தேவல. ஏன் சித்தத்து இப்படி ஆகிட்ட” என அழுதுகொண்டே கேட்க, பலமாகச் சிரித்தவன்,

“மாத்தினதே நீங்கத் தான. இப்போ இத போடுறீயா இல்லையா?”

“முடியாது. என்ன பண்ணுவ?”

“கிளம்புடி உன் வீட்டுக்கு” எனக்கத்த, “போட்டுத் தொலைக்கிறேன்” என அவன் வாங்கி வந்ததை கருப்பா, சிவப்பானு கூடப் பார்க்காமல் வேண்டா வெறுப்பாகப் போட்டாள்.

அங்கு அன்பழகன் வீட்டிலோ அத்தனை பேரும் இடி விழுந்தது போல அமர்ந்திருந்தனர். அவர்கள் வீட்டு செல்லக்குட்டி இனி அவர்களுக்கு இல்லையென நினைக்கவே வேதனையாக இருந்தது.

வைரம் “இதுக்குத்தேன் நான் வரேன்னேன்.. அந்த ஆடுகாலி தான் ஆட்டமா ஆடுவா.. அவ புருஷனும் இன்னும் அவளுக்கு அடங்கியே கிடப்பாருனு பார்த்தா.. இந்தப் பயல்ல ஆடிருக்கான்.

நான் மட்டும் வந்திருந்தேன் கொமட்டுல நாலு குத்து குத்திருப்பேன். அங்க போய் உட்கார்ந்துக்கிட்டு ஆத்தாளோட சேர்ந்து ஆடிக்கிட்டு இருக்கானா! ஆத்தா பெத்ததோட அவ கடமைய முடிச்சுப்புட்டு போய்ட்டா.. நல்லது கெட்டது பார்த்து வளர்த்ததெல்லாம் நாம.. இப்போ நம்மள பார்த்தா கசக்குதாம்மா.

நம்ம கசக்க நம்ம புள்ள மட்டும் இனிச்சு கிடந்தான்னா வம்மா தாலிய கட்டிட்டு போய் மண்டைய வீங்க வச்சிருக்கானே! இரு நான் போய் என்னனு கேட்டுட்டு வாரேன்” எனக்கிளம்ப,

அன்பு “அம்மா! நீ எதாவது சண்டை பிடிக்கப் போய் மதும்மாவுக்கு எதுவும் பிரச்சனையாகிட போகுதும்மா. வேணாம். நானே சித்தார்த் கிட்ட பேசுறேன்” என அவனுக்கு அழைக்க, அவன் எண்ணுக்கு அழைப்பு செல்லவே இல்லை. அவன் தான் அனைவரின் எண்ணையும் நிறுத்தி (ப்ளாக்) வைத்திருந்தானே.

அஸ்வந்த் “அவன் ப்ளாக் பண்ணிருக்கான்ப்பா. கால் போகல. நம்ம கடைக்குப் போய் மாமாக்கிட்ட முதல்ல பேசுவோம்”

அன்பு “சரிப்பா” எனக்கூறி தளர்ந்து அமர்ந்தார் ஏற்கனவே அவருக்கு இதயத்தில் கோளாரு. இப்போ இதுவும் சேர பத்து வயசு முதிர்ந்தது போல தொய்ந்து போய் அமர்ந்தார். இது அத்தனைக்கும் காரணமான ஆதவன் மேல் தான் கோபம் வந்தது அகிலாவுக்கு. எழுந்து கிளம்பிவிட்டாள் அவள் வீட்டுக்கு.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
15
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. இப்போதாவது இளங்கோ பா ஆனந்தியை அடக்கினாரே. நல்லது. ஆனால் ஆனந்திக்கும் சேர்த்து அவரது மகன் ஆடி தீர்த்துவிட்டான்.

    சித்தார்த்தின் கோபம் நியாயமானதே. சொல்லபோனால் அவனது மனவேதனையை ஒப்பிடும்போது குறைவு தான்.

    தன் மனதை பற்றி கவலைக்கொள்ளாமல் எல்லோருக்கும் நல்லது என்று எண்ணி அவனுக்கு கெட்டது செய்ய விழைந்தனரே. அவர்கள் உறவே வேண்டாம் என்று விலக்கி விட்டான். இனி காலம் தான் அவன் காயங்களை ஆற்ற வேண்டும்.

  2. அடேங்கப்பா சித்து ஆட்டம் பயங்கரமா இருக்கே … இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ …

    பாட்டு சூப்பர் …

  3. சித்து கொஞ்சம் கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்கபா… ஏண்மை தெரிய வர்றப்ப உம்மம்மி அன்ட் சிஸ்டரை வைச்சு செய்ய வேணும்.‌ அதவிட்டுட்டு ஆரம்பத்தில இருந்தே அழுதுட்டு இருக்கு பிள்ளையை இன்னும் அழவைக்கிறது…‌ ஆதவன் என்னென்ன களவாணித்தனம்லாம் பண்ணியிருக்கான்…
    நைஸ் கோயிங்

  4. சித்து கொஞ்சம் கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்கபா… உண்மை தெரிய வர்றப்ப உம்மம்மி அன்ட் சிஸ்டரை வைச்சு செய்ய வேணும்.‌ அதவிட்டுட்டு ஆரம்பத்தில இருந்தே அழுதுட்டு இருக்கு பிள்ளையை இன்னும் அழவைக்கிறது…‌ ஆதவன் என்னென்ன களவாணித்தனம்லாம் பண்ணியிருக்கான்…
    நைஸ் கோயிங்