Loading

விடியும் முன்..!

 

அத்தியாயம் 09

 

ப்ரித்வி சொன்னதை கேட்ட முத்துவின் முகம் யோசனையாய் மாறியது.அவனுக்கு செல்வி இறப்பில் ஏதோ மர்மம் இருப்பதாய் தோன்ற மேற் கொண்டு எதையும் துருவவில்லை,அவன்.

 

ப்ரித்வியிடம் தான் இன்னும் ஆழமாய் விசாரித்தால் அவனுக்கு தன் மீது சந்தேகம் வந்து விடும் என உள்ளூர பயந்தது தான் உண்மையான காரணமே.

 

பத்து நிமிடத்தில் தயாராகி கஜேந்திரனின் வீட்டை அடைய அந்த வீட்டில் ஆட்கள் நிரம்பிக் கிடந்தனர்.

 

சில வயதான மூதாட்டிகள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க அவனின் தாயார் முன் ஹாலில் ஒரு மூலையில் இருக்க அவர் மீது அழுத்தமாய் படிந்து மீண்டது,அவனின் பார்வை.

 

அவர் முகத்தில் வருத்தத்தின் சாயல் துளியும் தென்படாதிருக்க அதைக் கண்டவனின் இதழ்களில் இளநகை.

மகனின் வண்டவாளத்தை தாயிடம் எத்தி வைத்தது,அவன் அல்லவா..?

 

இடைக்கிடை முத்துவின் பார்வை வீட்டின் வெளிப்புறத்தை ஆராய உச்சகட்ட பதட்டத்துடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த தர்மேந்திரனைக் கண்டதும் அவன் மனதில் அத்தனை திருப்தி.

 

அது ஏனென்று தெரியவில்லை.சில சம்பவங்கள் அவனின் மொத்த இயல்பையும் புரட்டிப் போட்டிருந்ததே.

விளையாட்டுப் பையனாக அடுத்தவரின் விழிகளுக்கு அவன் தெரிந்தாலும் அவனுள் கனன்று கொண்டிருக்கும் கோபத்தீ பெரும்பான்மையினர் அறிந்திராதது.

 

ஒதுக்குப்புறமாக சென்ற தர்மேந்திரனின் விரல்கள் அலைபேசியில் யாருக்கோ அழைப்பெடுக்க நெற்றியில் வியர்வைத் துளிகளும் அரும்பி இருந்தன.

 

மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட இவர் குரலில் சிறிதே பதட்டத்துடன் பயமும் சேர்ந்து கொண்டதோ என்னவோ குரலில் மெல்லிய நடுக்கம்.

 

“ஹலோ என்ன வேல முடிஞ்சிடுச்சா..?”

 

“ம்ம்..ஆமா பெருசு..ஆனா நீ சொன்ன மாதிரி எதுவும் பட்டுன்னு முடியல..எக்ஸ்ட்ராவா இன்னொன்னு வேற பண்ண வேண்டியதா போச்சு..”

 

“எ..என்ன சொல்றீங்க..?”

 

“அண்ணன கொல பண்ண ஸ்கெட்ச் போட்ட் தம்பியும் வந்து நிக்கறான்..அதனால ரெண்டு பேரயும் தூக்கிட்டோம்..”

 

“எதே..போலீஸ்ல மாட்டப் போற நீ..”

 

“இல்லப்பா..ரெண்டு பேரும் உசுரோடத் தான் இருக்காங்க..அதனால நீ அப்சட் ஆகாத பெருசு..நா அப்றமா பேசறேன்..” என்றவாறு மறுமுனையில் அழைப்பை துண்டிக்க மறைவாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த முத்துவின் மனதில் தான் பெரும் யோசனையின் கோபுரம்.

 

●●●●●●●●●

 

நேரம் முற்பகல் பத்து மணி.

 

அறையில் இருந்த தமக்கையின் அலுமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்த சங்கீதாவுக்கு ஒரு மூலையில் கிடந்த வெண்ணிற கடதாசிப்பை கவனத்தை ஈர்க்க அதை அப்படியே தூக்கி எடுத்தாள்.

 

திறந்து பார்க்க அது ஒரு தினக்குறிப்பு.எடுத்துப் பார்த்தவளுக்கு அது யாரினுடையது என்பது தெரிய விழிகள் இலேசாக கலங்கின.

 

அடுத்தவருடைய பொருள் என்றாலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கிளர்ந்தெழ கதவை அடைத்து விட்டு அப்படியே கதவடியில் அமர்ந்து முதற்பக்கத்தை புரட்ட அதில் நேர்த்தியான கையெழுத்தில் ஓரிரு வசனங்கள் நிறைத்திருந்த சிறு கடதாசித் துண்டொன்று.

 

முதற்தாளுடன் இணைத்து வைக்கப்பட்டிருக்க அதில் புரிந்தது,தினக்குறிப்பு முடிந்ததும் தான் எழுதி இணைக்கப்பட்டுள்ளது என்பது.

 

” *சத்தியமா எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்..ஐ ஸ்வேர் ஐ அம் இன் லவ் வித் யூ..ஆனா அது வாயால சொல்ல என்னால முடியாது..உண்மய சொல்லப் போனா நா ரொமான்டிக் கேடகரிகுள்ள வர்ர ஆளு கெடயாது..உன் கண்ணுல லவ்வ நா பாத்துருக்கேன்..இவனும் இப்டி லவ்வ காட்ட மாட்டானாங்குற ஏக்கம் அதுல இருக்கும்..என்னால பொய்யா நடிக்க முடியாது சாந்தவி..இத வாசிச்சு பாரு..அப்றம் உனக்கு என்னோட காதல் புரியும்..”* நேர்த்தியாய் எழுதப்பட்டிருந்ததை பார்த்தவளின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

 

அவளும் பலமுறை யோசித்து தான் இருக்கிறாள்,தமக்கை காட்டும் அதே அளவு காதலை அவளின் காதலன் காட்ட மறுக்கின்றானோ என்று.அந்த எண்ணத்தை முற்றாக உடைத்து விட்டிருந்தது,இந்த வரிகள்.

 

முதற் பக்கத்தில் அவனைப் பற்றி எழுதியிருக்க அதைக் கண்டவளுக்கு சிரிப்பும் வந்தது.நான்கு தாள்கள் புரட்டியிருக்கத் அப்போது தான் துவங்கியிருந்தது,அவனின் காதல் அதிகாரம்.

 

புதிதாய் *”என் காதல் அதிகாரம்”* என அந்த பக்கத்தில் தலைப்பு இட்டிருப்பது புரிய அவனை நினைக்க சிரிப்பும் வந்தது.

 

” *ஐ பெல்ட் சம் டிபரன்ட் இன் தட் டச்..* *அவ என்னோட கைய புடிச்சி இழுத்ததும் சுர்ருன்னு கோபம் தான் வந்துச்சு..* *எப்பவுமே எனக்கு யாராச்சும் என்ன தொட்றதும் தொட்டு தொட்டுப் பேசறதும் புடிக்காது..* *சத்தியமா ஒன்னு பளார்னு கன்னத்துல விட தான் கைய ஓங்குனேன்..* *ஆனா அந்த கைல தெரிஞ்ச நடுக்கமும் கண்ணாடி வழியா அந்த கண்ணுல கொஞ்சமா தெரிஞ்ச பதட்டமும்..”*

 

*”நான் ஸ்டன் ஆகிட்டேன்..ஒரு நிமிஷத்துக்குள்ள நானே என்ன நிதானப்படுத்துகிட்டு அவள பாக்கும் போது தான் அவ என்ன வண்டி வர்ரத பாத்து புடிச்சு இழுத்து இருக்கான்னு தோணுச்சு..அப்றம் அவ யாருன்னு பாக்கறதுக்குள்ள அவ ஓடிட்டா..தட் மாஸ்க் கேர்ள்..என்னால அவ யாருன்னு பாக்க முடியல..துப்பட்டாவால பேஸ் முழுக்க கவர் பண்ணி கண்ணுக்கு கூலர் வேற..பட் ஷீ ஈஸ் டிபரன்ட்..ம்ஹும் ஐ பெல்ட் சம் டிபரன்ட் இன் மை செல்ப் இன் ப்ரன்ட் ஒப் ஹர்* ”

 

*”என்னமோ ஆச்சு..அது என்னன்னு எனக்கு சொல்லத் தெரியல..அவளோட அந்த பதட்டமும் நடுக்கமும்..வோஹ்..இப்ப நெனச்சு பாக்கும் போதே என்னமோ ஆகுது..முடியெல்லாம் எந்திரிச்சு நிக்கிது..அவள பொறுத்த வர அது ஹியூமானிட்டியா இருக்கலாம்..பட் நா எதுக்கு இப்டி இதுக்கு முன்ன இப்டி நடந்தே இல்லாத மாதிரி டயரில அவள பத்தி எழுதுறேன்னு தான் புரியல..”*

 

*”அவ யாருன்னும் எனக்கு தெரியாது..ஏன் அவ மொகத்த கூட ஒழுங்கா பாக்கல..இதுக்கு முன்ன அவள பாத்துருப்பேன்னு தோணுது..ஆனா எங்கன்னு தான் தெரியல..கண்டிப்பா இது லவ் இல்ல..சுத்தமா எனக்கு லவ் அட் பர்ஸ்ட் சைட்ல நம்பிக்கயும் இல்ல..பட் ஏதோ ஒரு டிஸ்டர்ப்ட் பீல் மனசு முழுக்க..என் வாழ்க்கைல பர்ஸ்ட் தடவயா ஒரு பொண்ண பத்தி நைட் யோசிச்சுகிட்டு இருக்கேன்..என்னாச்சு எனக்கு..ஐ டோன்ட் க்னோ..ஐ பீல் சம்திங் டிபரன்ட் இன் மை செல்ப்..அட பொண்ணே என்னடி பண்ணுன என்ன..?”*

 

உண்மையான உணர்வுகளை தான் எழுதியிருந்தான் என்பது அதை வாசிக்கும் போதோ அவளுக்குப் புரிந்திட இன்னுமே அவனின் காதல் அதிகாரத்தை படிக்க ஆர்வம் மேலெழும்பியது என்பது மறுப்பதற்கல்ல.

 

“என்னடா இது..அக்காவ பாத்தாலும் ரோபோ மாதிரி நடந்துக்குற மனுஷனுக்குள்ள இப்டி ஒரு வேர்ஷன்..நம்ப முடியலியே..” தனக்குள் முணுமுணுத்தவாறு அடுத்த பக்கத்தை புரட்டினாள்,சங்கீதா.

 

●●●●●●●●

 

அதிக நேரம் அமர்ந்து வருவது சத்யாவுக்கு பெரும் சலிப்பாய் இருந்தது.பின்னிருந்தவர்கள் எழுந்து ஆட்டமும் பாட்டமுமாய் அந்த நொடிகளை ரசித்தாலும் இவன் மனம் மட்டும் அதில் லயிக்கவில்லை.

 

அவனிடம் அல்லவா மொத்த பொறுப்புக்களும் ஒப்படைக்கப்ட்டு இருக்க அது தான் காரணமோ என்னவோ..?

 

யோசனையில் இருந்தவனுக்கு அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்க திரையில் மிளிர்ந்த எண்ணைக் கண்டதும் அவனிதழ்கள் முறுவலித்தன.

 

தாமாதியாது அழைப்பை ஏற்றவனுக்கு தோழன் தன்னை அழைத்தது ஒரு வித நிம்மதியை தந்தது,என்னவோ உண்மை தான்.

 

“ஹலோ சொல்லுடா..”

 

“சத்யா இப்பா எந்த எடத்துல இருக்கீங்க..?”

 

“இப்ப தான் டா..மெய்ன் ரோட் தாண்டி வர்ரோம்..கீழைச்செம்மலூர்ல இருக்கோம்..எப்டின்னாலும் இன்னுமொரு போர் அவர்ஸ் எடுக்கும் போல இருக்கும்டா..ட்ரெயின்ல எய்ட் அவர்ஸ்..பஸ்ல வந்தா சிக்ஸ் அவர்ஸ் தான..நாங்க வரும் போது எட்டு மணி இருக்கும்..”

 

“அப்டிங்குற..சத்யா..இங்க வர்ரதுக்கு ஒரு ஷாட் கட் இருக்கு..அதுல வந்தா பண்ணண்டு பண்ணண்டரிகுள்ள வந்துர்லாம்..நேத்தே உங்கிட்ட சொல்லத் தான் இருந்தேன்..அந்த ரோட் ஓகேவான்னு கேட்டுட்டு சொல்லலாம்னு இருந்தப்போ லேட் ஆயிருச்சு..நேத்து வீட்ல வேற கொஞ்சம் ப்ரச்சனயா அதான்..”

 

“அதுக்கு பரவால மச்சான்..இப்போ இருக்குற எடத்துல இருந்து அந்த ரோட்கு வர்லாமா..? இல்லன்னா வண்டிய திருப்பி வேற ரூட்கு வர்னுமா..?”

 

“இல்ல மச்சான்..இந்த ரூட்ல போய் இந்த ஊர் முடிர எடத்துல ஒரு முச்சந்தி வரும்..அதுல லெப்ட் சைட் போட்டா வரும்..நீ ட்ரைவர்ட கொடு நா அவர்கிட்ட ரூட் சொல்லிக்கிரேன்..ஆனா சத்யா..?”

 

“என்னடா ஏதாச்சும் ப்ராப்ளமா..?”

 

“ப்ராப்ளம்னு இல்ல..இப்போ நீங்க ஷார்ட் கட்ல வராம மத்த ரூட்ல வர்ரீங்கனா எங்க ஊருக்கு நார்த் சைட்ல இருந்து தான் என்டன் ஆவீங்க..ஆனா இப்போ நா சொல்ற ஷார்ட் கட்ல வர்ரீங்கன்னா ஊரோட சவுத் சைட்ல இருந்து தான் வருவீங்க..”

 

“அட மச்சான்..அதுல என்னடா ப்ரச்சன..எந்த சைடால வந்தாலும் ஊருக்குள்ள தான வரப்போறோம்..”

 

“இல்ல மச்சீ..வடக்குப் பக்கமா வர்ரதுல ரோடும் நல்லா இருக்கும்..ஆள் நடமாட்டமும் இருக்கும்..ஆனா தெற்குப் பக்கம் அப்டி இல்ல..பெருசா மனுஷங்க இருக்க மாட்டாங்க..சுத்தியும் காடு தான் இருக்கும்..”

 

“காட்ல மிருகங்க இருக்காடா..?”

 

“ச்சே அப்டிலாம் இல்ல..”

 

“அப்போ எதுக்கு பயபப்டற..ரோடும் ஓகே..பயப்பட்ற படி எதுவும் இல்லன்னா எதுக்கு தயக்கம்..நாங்க வேற லேட்டாயிடுச்சு கெளம்ப..நெறய வேல வேற இருக்கு..ஷார்ட் கட்ல வந்தா எங்களுக்கும் ஈசியா இருக்கும்..நாங்க அந்த ரூட்லயே வர்ரோம்..நீ ட்ரைவர் அண்ணா கிட்ட ரூட்ட சொல்லு..நா போன கொடுக்குறேன்…”

 

“ம்ம்ம்ம்ம்..”

 

“என்ன செழியா..?”

 

“சரி நீ கொடு..நா சொல்றேன்..” என்கவும் எழுந்து நின்றான்,சத்யா.

 

●●●●●●●●●

 

நேரம் முற்பகல் பத்து மணி பதினைந்து நிமிடம்.

 

அடிக்கடி அவளைப் பார்ப்பதும் வெளியில் பார்வையை அலைய விடுவதுமாய் இருந்த பையனின் செயல் அவளின் கருத்தைக் கவரவில்லை.

 

அவளுக்குள் பலவித எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருக்க அவனில் கவனம் பதிக்க தற்காலிகமாக மனமும் மறந்து தான் போனது.

 

அவன் விழிகள் அவளின் வதனத்தை விட்டு அகலவேயில்லை.மாறி மாறி வரும் உணர்வுகளை துல்லியமாய் உள்வாங்கி தனக்குள் பதித்துக் கொண்டவனுக்கு மனதின் ஓரம் சிறு வலி.

 

அதன் வெளிப்பாடாய் இதழ்கள் விரக்தியில் விரிய தன் உணர்வுகளை உள்ளிழுத்து தனக்குள் புதைத்துக் கொண்டான்,

பையனவன்.

 

“என்ன யோசன பண்ணிட்டு இருக்க மித்ரா..?”

 

“ஹான்ன்ன்ன்..”

 

“என்ன யோசனன்னு தான கேட்டேன்..அதுக்கு ஏன் இப்டி பேயறஞ்ச மாதிரி பாக்கற..? நா என்ன பூதம் மாதிரியா இருக்கேன்..”

 

“இல்ல..நீங்க இப்டி நார்மலா பேச மாட்டீங்கல்ல அதான்..”

 

“இட்ஸ் பைன்ன்..நா நார்மலா தான் பேசுவேன்..நீ தான் ஏதாச்சும் பண்ணி என்ன கடுப்பேத்தி விடுவ..அதனால தான் நா கடுப்பாகி கத்துவேன்..தட்ஸ் இட்..”

 

“ஆமா..அப்டியே நா தான் எல்லாத் தப்பயும் பண்றேன்..இவரு பெரிய பரமாத்மா..அப்டியே எல்லாத்தயும் தாங்கி கிட்டு இருக்க..நீங்களும் தான் பொறும இல்லாம கன்னா பின்னான்னு கத்துவீங்க..அதுக்குதான் பதிலா நா ஏதாச்சும் பண்ணுவேன்..”

 

“ஓஹ்ஹ்ஹ்ஹ்..அப்போ மேடம் ரொம்ப நல்லவங்கல..?” சற்றே சரிந்தமர்ந்து கொஞ்சமாய் தலை சரித்து பக்கமாய் சிகைக்குள் விரல் நுழைத்த படி அடங்காத சிகையை பின்னே தள்ளியவனாய் இருபுருவமுயர்த்தி அவன் கேட்ட பாவனையில் ஒரு கணம் அவளின் காதல் மனமும் உறைந்து தான் மீண்டது.

 

“ச்சே..மித்து இந்த கலவரத்துல சைட் அடிக்கிற வெக்கமா இல்ல உனக்கு..”

 

“என்ன மா..ஒரே யோசன போல இருக்கு..நா கேட்ட கேள்விக்கு பதில காணோம்..”

 

“ஆமா..நா நல்லவ தான்..அதுல என்ன சந்தேகம்..”நொடியில் மீட்டுக் கொண்டு பதிலுரைத்தவளை அழுத்தமாய் பார்த்தான்,பையனும்.

 

அவள் விழிகளில் தான் கரையக்காணும் விந்தையை அவன் உணர்ந்திருந்தாலும் அதற்கான அடித்தளத்தை ஆராய அவன் மனம் ஒருமுறையேனும் முன்வந்ததில்லை.

 

கோபக்காரன் தான்,

ஆனால் அவள் கண்ணசைவில் கட்டுப்பட்டு நிற்கும் மாயம் தான் என்ன..?

அழுத்தமானவன் தான்,

அவளின் அருகாமையில் தனைத் தொலைத்து தவிக்கும் விந்தை தான் என்ன..?

சத்தியமாய் புரியவில்லை,பையனுக்கு.

 

காதலாய் ஒரு பார்வை பார்த்திருக்கவும் மாட்டாள்.கனிவாய் ஒரு வார்த்தை அவனுடன் பேசியிருக்கவும் மாட்டாள்.

 

மன்னிப்புக் கேட்க வந்த தருணங்கள் கூட இருவரிடையே இன்னொரு சண்டைக்குத் தான் மூலமாய் அமைந்து விட்டிருந்தது.

 

சுருங்கச் சொல்லப் போனால் அவனறிந்து அவனிடம் சண்டைக்கோழியாய் சிலிர்த்து கொண்டு தான் நின்றிருக்கிறாள்.

ஆனாலும்,மனம் அவள் பால் சாய்வதை அவனால் தடுக்க முடியவில்லை.அகம் புகுந்து மனம் திறந்து அவள் உண்டாக்கிடும் மாற்றங்கள் ரசிக்கக் கூட அழகியலாய்த் தான் இருந்தது.

 

அவன் உணராவிடினும் முழுதாய் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவளிடம் மொத்தமாய் பையன் சரணடைந்து தொலைத்திருப்பது என்னவோ உண்மை தான்.அதனால் தானே அவன் அகத்தில் அழகாய் அரிதான அழகியல் மாற்றங்கள் அரங்கேறி அவஸ்தை அளிக்கிறது.

 

கருமணி அசைத்து இரு விழி நிமிர்த்தி தன் விழிகளை ஆழ்ந்து பார்த்த பையனின் செய்கையில் இவளுக்குள் தான் பெரும் தடுமாற்றம்.

 

“இவன் எதுக்கு இப்டி பாக்கறான்..சும்மாலே நாம கவுந்து இருக்குறது பத்தாதுன்னு இது வேற வச்ச கண்ணு வாங்காம பாக்குது..” தனக்குள் முணுமுணுத்தவாறு அவள் திரும்ப தவிப்புடன் நர்த்தனமாடிய கருமணிகளைக் கண்டு அவனிதழ்கடையில் சிறு புன்னகையின் தேக்கம்.

 

தொடரும்.

 

🖋️அதி..!

2024.03.12

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. தெரியாம அந்த பக்கம் போய் மொத்தமா மாட்டிப்பாங்களோ