Loading

9 – காற்றிலாடும் காதல்கள்

 

“என்ன விசாலம் சௌக்கியமா?”, என வெள்ளைச்சாமி தாத்தா கேட்டார். 

“சௌக்கியம் தான். நீங்க தான் வீட்டுப்பக்கம் வாரதே இல்ல. உங்கள காணாம இவருக்கு தான் பொழுது விடியறதும் இல்ல, சாயறதும் இல்ல. இதான் பேத்தியாவா?” என அவளை அருகே வந்துப் பார்த்தார். 

“ஆமாத்தா..  கண்ணு பாட்டிகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க.” என அவர் கூறியதும் அவரது காலைத்  தொட்டுக் கும்பிட்டாள். 

“ம்ம்.. புள்ள பட்டணத்துல வளர்ந்திருந்தாலும் மரியாதையெல்லாம் சொல்லிக்குடுத்து தான் என் மருமக வளத்திருக்கா. உள்ள வா கண்ணு.. கயலு அம்மாவ வரசொல்லிட்டு நீயும் தண்ணிய கொண்டு வா.” என வாசலில் இருந்தே சத்தம் கொடுத்தார். 

‘ப்பா.. என்னா சத்தம்..’மிருணாளினி மனதினில் நினைத்துக் கொண்டாள். 

சற்று நேரத்தில் மாலா அங்கே வந்தார். கணவன் இல்லாத கவலை ஒரு பக்கம் தெரிந்தாலும், அவர் முகத்தில் இருந்த தெளிவும், நடையில் இருந்த கம்பீரமும் அவரை மரியாதையுடன் பார்க்கவைத்தது. 

மிருணாளினி அவரின் காலைத் தொடும்முன், “இருக்கட்டும் ம்மா.. இங்க உக்காரு.. ஊர்ல அண்ணனும் அண்ணியும்  நல்லா இருக்காங்களா?”எனக் கேட்டு மேற்கொண்டு ஊர் விஷயங்களை சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். 

கயல்விழி தாவணி பாவாடையுடன், மஞ்சள் பூசிய முகமாகச் சிரித்தபடி இருவரையும் வரவேற்று மோர் கொடுத்தாள்.  

“நீங்க அழகா இருக்கீங்க கயல்.. வாழ்த்துகள்..”, என மிருணாளினி கைக்கொடுத்தாள். 

“இதென்ன மூணாவது மனுச கணக்கா கைய கொடுத்துட்டு, கயலு அண்ணிய கூட்டிட்டு போய் உன் உடுப்பு மத்த விஷயமெல்லாம் காட்டு.. சந்தேகம் கீது இருந்தா கேட்டுக்க.. புள்ள பெரிய படிப்பு படிச்சிருக்கு..” என விசாலாட்சி கூறியபடி இனிப்பைக் கொண்டு வந்தார். 

“என்ன டா படிச்சிருக்க?”, மாலா கேட்டார். 

“தமிழ்ல பி.ஹெச்.டி  பண்ணிருக்கேன் அத்த..” என அவள் கூறியதும் மாலா கண்கள் மெல்லக் கலங்கியது, நொடியில் அதையவர் உள்ளிழுத்துக் கொண்ட விதமும், முகத்தைச் சீராக்கியபடி,“அப்ப முனைவர் மிருணாளினியா நீ?” எனப் பெருமையாகக் கேட்டார். 

“ஆமாங்க அத்த..” என்றவள் பதிலில் சந்தோசமோ, பெருமையோ இல்லையென மாலா கண்டுக்கொண்டார். 

“சரி உள்ள போங்க. ஆசாரி வந்ததும் கூப்பிடறேன்” எனப் பெண்கள் இருவரையும் மாடிக்கு அனுப்பிவிட்டு பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். 

“இன்னும் மிருணா அதிர்ச்சில இருந்து வெளிய வரலியா பெரியப்பா?”

“இல்ல கண்ணு.. அதான் இங்க கூட்டி வந்தேன்.  நம்ம ஊருக்கு வர்ற சாமி அவள சரி பண்ணும்ன்னு நம்பறேன்.”

“ஒண்ணும் கவலப்படாதீங்க எல்லாம் சீக்கிரம் சரியாகிடும். கயலு கூட திரிஞ்சா மனசு தெச திரும்பும். அவக்கூட கடகன்னி எல்லாம் போயிட்டு வரட்டும். இங்கயும் வரப்போக இருக்கட்டும். அப்பதான் சொந்தம் தெரியும்.”

“அப்படியே பண்ணிடலாம் ஆத்தா. எங்க விஸ்வநாதன காணோம்?”

“வாழத்தோப்பு வரைக்கும் போயிருக்காரு.. இப்ப வந்துருவாரு“ எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே விஸ்வநாதனும் இல்லம் வந்துச் சேர்ந்தார். கீதன் தோப்பின் கணக்கு நோட்டை எடுத்துக் கொண்டு பின்னால் வந்துக் கொண்டிருந்தான். 

“என்னடா நீ மட்டும் வந்திருக்க என் பேத்தி எங்க?” எனக் கேட்டபடி உள்ளே வந்தார். 

“அவ கயலோட பேசிக்கிட்டு இருக்கா வேலையாச்சா?”

“எங்க? தோப்ப கட்டி காப்பாத்தி உருப்படியாக்கி இந்தான்னு குடுத்தா கூட அதுக்கு தக்கன வெலை குடுக்க அவளோ வலிக்குது அத்தன காவாலி பயலுகளுக்கும். கீதன் நேரா விக்கிற எடத்துல பேசிக்கலாம்னு சொல்லிட்டான். இப்ப எப்பவும் அனுப்பற ஆளுங்களுக்கு மட்டும்  அனுப்பியாச்சி” எனக் கூறியபடி மனைவியிடம் நீர் வாங்கியருந்தினார். 

“வாங்க தாத்தா.“ என வரவேற்றுவிட்டு தன்னறைக்குச் சென்றுக் குளித்துவிட்டு வெளியே வந்தான். 

அப்போது மிருணாளினியும் கயலுடன்  வெளியே வர, முகமனாக தலையசைத்து விட்டுக் கீழே சென்றான். 

“கண்ணு ஆசாரிய கூட்டி வரச்சொல்லி இந்திரன்கிட்ட சொல்லியிருந்தேன் இன்னும் காணோம் அவனுக்கு ஃபோன் அடி..” என விசாலாட்சி கூறினார். 

“வந்துட்டு இருக்கான் அம்மாச்சி. இப்ப வந்துருவான். எனக்கு கொத்தமல்லி காப்பி போட்டு குடு.“ எனக் கூறிவிட்டு தாயிடம் நோட்டில் எழுதியிருந்தக் கணக்குகளை விளக்கிக் கொண்டிருந்தான். 

“இந்தா பெருசு.. பாத்து.. பாத்து நட.. அந்த பொட்டிய இங்க குடு.. அதுல என்ன தங்கமா வச்சிருக்க?” என ஆசாரியிடம் சத்தமாகப் பேசியபடிக் கைத்தாங்கலாக அவரை உள்ளே அழைத்து வந்தான். 

“கம்முன்னு இருடா.. நானே வழுக்கி விடுதேன்னு மெல்ல கால எடுத்து வச்சிட்டு இருக்கேன். அந்த பொட்டில தங்கத்துக்கும் மேல மதிப்பான பல பொருள் இருக்கு. உன்ன நம்பியெல்லாம் குடுக்கமுடியாது. நீ இந்த பைய மட்டும் எடுத்துட்டு போ.” என அவனை முன்னே விரட்டினார். 

“என்னடா அவருகிட்ட சத்தம் போட்டுக்கிட்டு இருக்க?” விஸ்வநாதன் கேட்டார். 

“தள்ளாடுற வயசுல பொட்டிய என்கிட்ட குடுத்துட்டு தெம்பா நடந்து வர சொன்னா நான் காவாலி பயங்கற மாதிரி பேசிக்கிட்டு வாராரு. கம்முன்னு கடைக்கே போய் புள்ளைக்கு புடிச்சது எடுக்காம இன்னும் இந்த பெருச கூப்பிட்டு செய்ய சொல்லிட்டு இருக்கீங்க.”

“நம்ம சுத்து பத்து ஊர்ல இருக்கற கடைங்களுக்கு எல்லாமே இவரு தான் நகை செஞ்சி அனுப்பிட்டு இருக்காரு இந்திரா. அவர மரியாதயா பேசு” என மாலா கூறவும் கப்பென வாய்மூடி ஆசாரியை உள்ளே அழைத்துவந்து அமரவைத்தான். 

“என்னாச்சி ஐயா வாசல் எல்லாம் சகதியா இருக்கு?”

“இந்த பயலுங்க தான் ஏதோ கல்லு போடறேன்னு நேத்து ஆளுங்கள வரச்சொல்லி கொத்திவிட்டு இருக்கானுங்க. தண்ணிய வேற ஊத்திட்டாங்க. அதான் சகதி. ரெண்டு கல்லுக்கு நடுவுல சின்ன புல்லு வருமாம் சுத்திலும். என்னமோ பண்ணுங்கடான்னு விட்டுட்டேன். ரொம்ப சிரமம் ஆகிடிச்சா?”

 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.  ரெண்டு வருஷம் முன்ன கால் பிரச்சனை வந்தப்பறம் நடக்கற வேகம் கொறஞ்சிடிச்சி. சகதின்னா கொஞ்சம் பயம் வந்துடுது. சீக்கிரம் வேலைய முடிக்கச்சொல்லுங்க. நம்ம வீட்டு விசேஷம் வரப்ப இதெல்லாம் பண்ணா இன்னும் நல்லா பவுசா தானே இருக்கும்.”

“இந்தாங்க ஐயா கொத்தமல்லி காப்பி” என விசாலாட்சி கொண்டு வந்துக் கொடுத்தார். 

“ஆஹா… கமகமன்னு இங்க மட்டும் தான் இவ்ளோ வாசனை காப்பில வருது. நானும் வீட்டுக்காரிகிட்ட சொல்லி என்ன போட்டாலும் இந்த வாசனை வர்றதே  இல்ல.” எனக் கூறிச் சிலாகித்துக் குடித்தார். 

கயல்விழியும், மிருணாளினியும் அங்கே வந்துச் சேர்ந்தனர். 

“யாரது பொண்ணு புதுசா இருக்கு?”

“என் பேத்தி ஆசாரி. சின்ன புள்ளையா இருந்தப்ப பாத்திருப்பீங்க.” வெள்ளைச்சாமி கூறினார். 

“ஆமா.. இந்த பொண்ணோட ரெட்டை பொண்ணு எங்க? அவளும் வந்திருக்காளா? சின்னதுல ஒண்ணா பாத்தப்பவே பிரமிப்பா இருக்கும். இப்பவும் ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் இருக்காங்களா?“ என அவர் கேட்டதும் கீதன் ஆச்சரியமாக அவளைப் பார்க்க, மற்றவர்கள் இதை ஏனைய்யா கேட்கிறாய் என்ற பார்வைப் பார்த்தனர். 

“அவ இல்ல.. இறந்துட்டா..” எனக் கல்லாய் இறுகிய குரலில் கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட்டாள். 

“யோவ் ஆசாரி..  உன்ன யாரு இதெல்லாம் கேக்க சொன்னது? தம்பி கீதா கூட போப்பா. புள்ள தனியா போகுது.”, என அவனை விரட்டினார். 

“சரிங்க தாத்தா”  என அவளின் பின்னே ஓடினான். 

அவன் பின்னால் இந்திரனும் ஓடினான். “கீதா.. நில்லு டா.. நானும் வரேன்”

மிருணாளினி வேகவேகமாக திசைப் பாராமல் ஓடிக்கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க முடியாமல் நண்பர்கள் இருவரும் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தனர். 

முதல் நாள் இந்திரன் அழைத்துச் சென்ற ஏரிக்கு வந்து நின்றாள். 

“இந்தா புள்ள குதிச்சிராத.. நில்லு.. என்ன ஓட்டபந்தயத்துல ஒடுறவ கணக்கா ஓடற?” என இந்திரன் கத்திக்கொண்டே வந்தான். 

“டேய் கம்முன்னு இரு டா.. மிரு நில்லு..” எனக் கூறியபடி மேற்கொண்டு ஓட முயன்றவளைக் கையைப் பிடித்து நிறுத்தினான். 

“கைய விடு கீதன்..” திமிறிக்கொண்டு இருந்தாள். 

“விடு கீதன்…“

“நேத்து ஹோட்டல்ல உன்கிட்ட பேசினவன் உன்ன தேடிட்டு ஊருக்குள்ள வந்திருக்கான். என்ன விஷயம்?” என கீதன் கேட்டதும் அவள் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள். 

“எங்க பாத்த அவன? சொல்லு.. சொல்லு… இப்பவே அவன கொன்னுடறேன்..” என அங்கே இருந்த பரிசல் துடிப்பை எடுத்துக்கொண்டு, வெறிப் பிடித்தவள் போலக் கத்தினாள். 

“நில்லு புள்ள! எதுக்கு அவன கொல்லனும்ன்னு சொல்ற நீயி?” இந்திரன் அவள் கையில் இருந்த பரிசல் துடுப்பைப் பிடுங்கினான். 

“அவன் தான் என் அக்கா சாக காரணம். அவன கொன்னா தான் எனக்கு ஆத்திரம் அடங்கும்.“ எனச் சொன்னவள், சட்டென அமைதியாகி அந்த மூங்கில் கைப்பிடியில் அமர்ந்துத் தலையைப் பிடித்துக் கொண்டாள். 

“தண்ணி கொண்டு வா இந்து” என அவனை அனுப்பிவிட்டவன், அவள் அருகே அமர்ந்து தனது தோளைத் தந்தான். 

மிருணாளினி அவனைத் தள்ளிவிட்டு, தன் கையினால் தன் தலையினைத் தாங்கிக் கொண்டமர்ந்தாள். 

“எமோஷனலா இருந்தாலும் உஷாரா இருக்காளே.. இவள எப்புடி கரெக்ட் பண்றது?” என வேண்டுமென்றே சத்தமாகக் கூறினான். 

அவள் அவனை முறைத்துவிட்டு எழுந்து மெல்ல அந்த பாலத்தில் 15 நிமிடம் நடந்தாள். 

“அவன எங்க பாத்த கீதன்? அவன் தான்னு உனக்கு எப்டி தெரியும்? நேத்து அவன் என்கிட்ட பேசினத நீ பாத்தியா?” என நிதானமாகக் கேட்டாள். 

அவளின் நிதானமானப் பேச்சு அவனுக்குச் சற்றுத் திகிலை ஏற்படுத்தியது. 

 

“நேத்து இந்து நீங்க பேசினத பாத்திருக்கான். அதுக்கப்பறம் தான் நீ அமைதியாகிட்ட.. அதான் அங்கிருந்து வரப்ப இந்திரன அவன் தெரியிர மாறி செல்பீ எடுத்துட்டு வர சொன்னேன்.”

“ம்ம்… சரி அவன எங்க பாத்தீங்க?” என யோசித்தபடிக் கேட்டாள். 

“அவன பாக்கல..”

“அப்பறம்?”

“அவன் யாரையோ உன்ன ஃபாலோ பண்ண அனுப்பி இருக்கான்.. அவங்கிட்ட இவன் வீடியோ கால்ல பேசறப்ப இந்து கண்ல சிக்கியிருக்கான்.”

“அவன நான் பாக்கணும். கூட்டிட்டு போ..”

“உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சன? உன் அக்கா எப்டி இறந்தா? இதெல்லாம் சொல்லு.”

“அதுலாம் அப்பறம் சொல்றேன். இப்ப அவங்கிட்ட என்னைய கூட்டிட்டு போ..“ எனக் கூறி முன்னே நடந்தாள்.

கீதன் அங்கேயே உட்கார்ந்திருப்பதைக் கண்டு முறைத்ததும், அவன் உடனே எழுந்து முன்னே நடந்தான். 

“ப்பா.. கண்ணாலயே மெரட்றாளே.. கண்ணு பெருசா இருக்க பொண்ணுங்கள எல்லாம் படத்துல வர்ணிக்கறப்ப பாக்க நல்லா இருக்கு, முறைச்சா பத்ரகாளிய பாக்கறமாறியே  இருக்குன்னு எவனும் சொல்லலியே.” எனத் தனக்குத் தானே பேசியபடி முன்னே நடந்தான். 

மிருணாளினி காதில் விழுந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் மனதிற்குள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தாள். ஒரே கருவில் உயிர்பெற்று, உடலளவில் இரண்டாக உருப்பெற்று இருபத்தைந்து வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தத் தன் சரிபாதியை இழந்த வலியினை ஈடுகட்ட, அவள் முதல் வரைப்படத்தினைப் போட்டு, அதில் பயணிக்கவும் தொடங்கியிருந்தாள். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்